செவ்வாய், 7 ஜனவரி, 2014

ஜிஎஸ்எல்வி-டி5 - அறிவியலும் அரசியலும்...!

                      ''காற்றில் ஏறி விண்ணையும் சாடுவோம்'' என்ற மகாகவி பாரதியின் கனவுக்கேற்ப வான் வெளிப்பரப்பில் இந்தியத் திருநாடு தனது வெற்றிச்சாதனையை மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டிருக்கிறது. சந்திரயான், மங்கள்யான் என அடுத்தடுத்த சாதனைகளைத் தொடர்ந்து ஜிஎஸ்எல்வி-டி5 ராக்கெட்டை வெற்றிகரமாக இஸ்ரோ விஞ்ஞானிகள் ஏவியுள்ளனர். இதற்கு முன்பு ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்டுகளை மட்டுமே  இந்தியா வெற்றிகரமாக ஏவியிருந்த போதும், ஜிஎஸ்எல்வி-டி5 வெற்றியின் மூலம் புதியதொரு வரலாற்றை தேசபக்தி உள்ள இந்திய ''இஸ்ரோ'' விஞ்ஞானிகள் துவக்கியுள்ளனர்.            கிரையோஜெனிக் எந்திரத்தை இந்திய விஞ்ஞானிகள் தங்களது சொந்த உழைப்பு மற்றும் சொந்த தொழில்நுட்பத்தை இணைத்து இந்த ராக்கெட்டை ஏவியுள்ளனர். இதன் மூலம் கிரையோஜெனிக் தொழில் நுட்பத்தை பெற்றுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் மட்டுமே இந்தப் பட்டியலில் இதுவரை இடம்பெற்றிருந்தன. நமது விஞ்ஞானிகள் மேலும் மேலும் புதிய சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்பதே ஒட்டுமொத்த இந்திய மக்களின் விழைவாகும். இதில் அறிவியல் மட்டுமல்ல, அயல்துறை சார்ந்த அரசியலும் கலந்துள்ளது. கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா தொடர்ந்து மறுத்துவந்தது. நாம் சுயமாக விண்வெளித்துறையில் வளர்ந்துவிடக்கூடாது என்ற கெடுமதியே இதற்கு காரணம். ஆனால் அன்றைக்கு இருந்த சோவியத் யூனியன் இந்தியாவுக்கு கிரையோஜெனிக் எந்திரங்களையும் தொழில்நுட்பத்தையும் வழங்கியது.
           கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு தான் வழங்காதது மட்டுமல்ல, பிற நாடுகளும் வழங்கக்கூடாது என 1998ல் அமெரிக்கா தடைவிதித்தது. முந்தைய சோவியத்திடமிருந்து பெற்ற ஏழு கிரையோஜெனிக் எந்திரங்களைக் கொண்டே இதுவரை ராக்கெட்டுகள் ஏவப்பட்டு வந்தன. ஆனால் தற்போது இந்திய விஞ்ஞானிகள் சொந்த தொழில்நுட்ப அடிப்படையில் இந்த எந்திரத்தை உருவாக்கி, வெற்றிகரமாக செயற்கைக்கோளையும் சுமந்து சென்று புவிவட்டப்பாதையில் நிலை நிறுத்தச் செய்துள்ளனர். அண்மையில் பதவியிலிருந்து விடைபெறும் வகையில் பேட்டியளித்த பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்காவுடன் அணுசக்தி உடன்பாடு செய்துகொண்டதுதான் தமது பதவிக்காலத்தின் முக்கியமான தருணம் என்று உணர்ச்சி வசப்பட்டார்.
              ஆனால் இந்த உடன்பாடு என்பது அமெரிக்காவின் சதிவலையில் நம்முடைய நாட்டை சிக்கவைப்பதே ஆகும். விபத்துஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டை கூட அமெரிக்க முதலாளிகள் கொடுக்க இந்த உடன்பாடு வகைசெய்யவில்லை. மேலும் அணுசக்தி தொழில்நுட்பத்தையும் தரமாட்டார்களாம். ஆனால் காயலாங்கடைக்குப் போக வேண்டிய அணு உலைகளை மட்டும் நம்முடைய தலையில் கட்டுவார்களாம். சீறிப்பாய்ந்த ஜிஎஸ்எல்வி -டி5 சொல்லிச் செல்கிறது  இந்தியாவின் உண்மையான தோழன் யார் என்பதை...!
நன்றி :


கருத்துகள் இல்லை: