அன்னா அசாரே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அன்னா அசாரே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

அன்னா அசாரேவின் நாடகம் முடிவுக்கு வந்தது - இறுதியில் அசாரேவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது...!

                    தமிழ்நாட்டில் ஆடி மாதம் அம்மன் கோயில் திருவிழா மாதிரி கடந்த 13 நாட்களாக புதுடெல்லி ராம்லீலா மைதானம் விழாகோலம் கொண்டிருந்தது என்று தான் சொல்லவேண்டும். நாட்டில் பசியால் வாடிக்கொண்டிருக்கும் பல சாப்பிடுவதற்கு எவ்வளவு கோடி வேண்டுமென்றாலும் செலவு பண்ணலாம். ஆனால், ராம்லீலா மைதானத்தில் ஒருவர் சாப்பிடாமல் இருக்க கடந்த பதிமூன்று நாட்களாக பலகோடி ரூபாய்களை செலவு செய்திருக்கிறார்கள் என்பது தான் ஒரு கொடுமையான தகவலாகும். மேடையில் இருக்கும் அன்னா மட்டும் ஒன்றும் சாப்பிடாமல் உட்கார்ந்து கொண்டிருப்பார். அவரை சுற்றி இருப்பவர்களும், அவரை வேடிக்கை பார்க்க குழந்தைகளுடன் வந்தவர்களும் சாப்பிட்டுக்கொண்டிருப்பார்கள். அன்னாவுக்கு மட்டும் அவ்வப்போது எவர்சில்வர் டம்ளரில் தண்ணீர் கொடுப்பார்கள்.
                        சிறு சிறு வியாபாரிகள் அன்னாவுக்கு கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும். நம்ம ஊரு கோயில் திருவிழா போல் பல சாலையோரக் கடைகளும், பட்டாணி, மணிலா, பாணி பூரி, ஐஸ் கிரீம், குல்பி, பலூன், ஹசாரே தொப்பி, வெள்ளரி பிஞ்சு, குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள்  என சிறு சிறு கடைகளும்,  தள்ளுவண்டிக்கடைகளும், சிறிய உணவகங்களும் என கடந்த பதிமூன்று நாட்களாக ராம்லீலா மைதானமே கலை கட்டியது. இப்படி சாப்பிட்டு போடப்பட்ட குப்பைகள் எல்லாம் அந்த மைதானத்தில் மலை போல் குவிந்து கிடைக்கின்றதாம்.
          இன்னும்  அன்னா உண்ணாவிரதத்தை தொலைக்காட்சியில் தொடர்ந்து போட்டுக்காட்டி பலகோடி  ரூபாய்களை சுருட்டிய தொலைக்காட்சிகளும் உண்டு.   அதுமட்டுமல்ல, அன்னாவின் உண்ணாவிரதம்  இன்னும் சில நாட்கள் தொடர்ந்திருந்தால், ராட்டிணம் மற்றும் சிறுவர் ரயில் என அவைகளும் வந்திறங்கியிருக்கும்.
                     இப்படியான பதிமூன்று நாள் அன்னாவின் உண்ணாவிரத நாடகம் இன்று காலை முடிவுக்கு வந்தது. ஆனால் அதை முடிவுக்குக் கொண்டுவர அன்னாவும், அன்னாவின் குழுவினரும் படாத பாடுபட்டுவிட்டனர் என்று தான்
சொல்லவேண்டும். 
               நடப்பு பாராளுமன்றக் கூட்டத்தொடரிலேயே அன்னா அசாரே ''முன்மொழிந்த''  ''ஜன் லோக்பால்'' மசோதாவை நிறைவேற்றிட வேண்டும் என்கிற கோரிக்கையுடன் தான் அன்னாவின் உண்ணாவிரத நாடகம் அரங்கேறியது. ஆனால்  கழுதை தேய்ந்து  கட்டெறும்பு ஆனது போல் உப்புச்சப்பில்லாத மூன்று நிபந்தனைகளையாவது தீர்மானமாக நிறைவேற்றினால் போதும்  என்கிற  அளவுக்கு அன்னா இறங்கி வந்தார் என்பது தான் உண்மை. அந்த தீர்மானம் கூட பாராளுமன்றத்தில் கொண்டுவருவதற்கு  இன்னும்  நாள் பிடிக்கும் என்கிற சூழ்நிலையிலும், உண்ணாவிரதமும் ஏழு  நாட்களை தாண்டி  கடந்துவிட்ட சூழ்நிலையிலும் உண்ணாவிரதத்தை எப்படி முடிவுக்குக்கொண்டுவருவது என்ற குழப்பத்திற்கு அன்னாவும் அவரது குழுவினரும் வந்துவிட்டனர். அதனால் அனைத்துக் கட்சி தலைவர்களையும் சந்தித்தனர். இறுதியில் அன்னாவுக்கு நெருக்கமாய் இருக்கக்கூடிய ஆர். எஸ். எஸ் தூண்டுதலின் பேரில் பாரதீய ஜனதா கட்சி உதவிக்கரம் நீட்டியது. பா. ஜ. கட்சி தான்  தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் அழுத்தத்தைக் கொடுத்தது.
                                       அதன் காரணமாகத் தான், நேற்று சனிக்கிழமை ஒரு நாள்  சிறப்புக் கூட்டத்தை நடத்தி பாராளுமன்றத்தில் அன்னா சொன்ன நிபந்தனைகளை தீர்மானமாய் நிறைவேற்றப்பட்டது. அன்னா எதிர்பார்த்து - கோரிக்கை வைத்து உண்ணாவிரதம் தொடங்கியது போல் நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரிலேயே ''ஜன் லோக்பால்'' மசோதா நிறைவேற்றப் பாடாமல் அன்னா அசாரே ஏமாற்றமடைந்தார் என்பது  யாராலும் மறுக்கமுடியாத உண்மை. தான் கேட்டுக்கொண்டது போல் ''ஜன் லோக்பால்'' மசோதா நிறைவேற்றப்படாத சூழ்நிலையில் தீர்மானத்தை காரணம் காட்டி அன்னா அசாரே ஒருவழியாய்  உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். வேஷத்தை கலைத்துக் கொண்டார்.
                       இதன் மூலம், பாராளுமன்றமும், அரசியலமைப்புச் சட்டமும் தான் நம் தேசத்தில் உயர்ந்தது என்பது நிருபணமாகியுள்ளது என்பது நிம்மதியளிக்கிறது.

புதன், 24 ஆகஸ்ட், 2011

அன்னா அசாரே உண்ணாவிரதமும், இடதுசாரிகளின் போராட்டமும்...

2 ஜி - ஸ்பெக்ட்ரம் - 1,76,000 கோடி மெகா ஊழல் , காமன்வெல்த் விளையாட்டு ஊழல், அ. ராசா, கனிமொழி, ராசாத்தி அம்மாள், தயாளு அம்மாள், டாடா, நீரா ராடியா, சுரேஷ் கல்மாடி, ஷீலா தீட்சித் - இவர்களையெல்லாம் உங்களுக்கு நினைவிருக்கிறதா..? அநேகமாக இவர்களை நீங்கள் முற்றிலும் மறந்து போய் இருப்பீர்கள்.  இதற்காகத் தானே கார்பொரேட் முதலாளிகளும், என். ஜி. ஓ -க்களும் சேர்ந்து ஒரு அன்னா அசாரேவை உருவாக்கி உட்கார வைத்திருக்கிரார்கள். இது ஒருவகை மூளைச் சலவை என்பதை மறந்துவிடாதீர்கள். அன்னா அசாரேவின் உண்ணாவிரதம் என்கிற ஆயுதத்தைப் பயன்படுத்தி,  உங்கள் மூளையில்  ஆழமாக பதிவாகியிருந்த 2-ஜி, காமன்வெல்த் விளையாட்டு போன்ற மெகா ஊழல்களின் பதிவுகளை உங்களுக்குத் தெரியாமலேயே - அறுவை சிகிச்சை இல்லாமலேயே உங்கள் மூளையிலிருந்து அப்புறப்படுத்திவிட்டார்கள் என்பது தான் உண்மை. இப்போது அன்னா அசாரே மட்டும் தான் நம் நினைவுகளை ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்.  அதுமட்டுமல்லாமல், இயற்கையிலேயே இந்தியர்களுக்கு மறதி நோய்  என்பது உண்டு.  ஆகவே நடந்த மெகா ஊழல்களை இப்போது நாம்    மறந்து விட்டோம்,
             இதற்காகத் தான் ஆட்சியாளர்களும், பா.ஜ.க.-வும், கார்பொரேட் முதலாளிகளும், என். ஜி. ஒ.-க்களும் அன்னா அசாரேயை உண்ணாமல் உட்காரவைத்திருக்கிறார்கள். ஒருவன் சாப்பிடுவதற்கு - அவன் பசியை ஆற்றுவதற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்யலாம். அனால், ஒருத்தர் சாப்பிடாமல் இருப்பதற்கு எவ்வளவு  கோடியை செலவு செய்கிறார்கள் பாருங்கள். அசாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு என்ஜிஓ-க்களும், கார்பொரேட் முதலாளிகளும் சேர்ந்து கோடிக்கணக்கில் பணத்தை இரைக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது இவர்கள் எப்படி ஊழலை ஒழிக்கப் போகிறார்கள் என்கிற கேள்வி தான் எழுகிறது. 
                 சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று டில்லி நகரே குலுங்கியது. ''இந்தியா கேட்'' முதல் அசாரே உண்ணாவிரதம் இருக்கும் ராம் லீலா மைதானம் வரை  மக்கள் வெள்ளமென திரண்டு சென்றுகொண்டிருந்தனர். இவ்வளவு கூட்டமா..? 
அத்தனைக் கூட்டமும் ஊழலை எதிர்த்து எழுந்தக் கூட்டமா..? அல்லது உண்ணாவிரதமிருக்கும் அன்னாவை பார்க்கக் கூடியக் கூட்டமா..? ஊழலுக்கு எதிராகத் தான் கூடினார்கள் என்றால் இதே அன்னா  அசாரே ஊழலை   எதிர்த்து
மறியல் போராட்டம் செய்தாரென்றால் இப்படி கூடுவார்களா..? அப்படியென்றால் இந்தக் கூட்டத்தை ஈர்த்தது எது..? அன்னா அசாரேவா..? அல்லது அவரது உண்ணாவிரதமா..?

ஒரு உண்மையை நாம் புரிந்துகொள்ளவேண்டும்..!             


                        லோக்பால் மசோதா என்பது அன்னா அசாரே போராட்டத்தினால் உருவானதல்ல. நாற்பத்து மூன்று ஆண்டுகளாகவே கடந்த ஆட்சியாளர்களால், ஒருமித்தக் கருத்து ஏற்படவில்லை என்று காரணம் கூறி  கிடப்பில் போடப்பட்ட மசோதா என்பது நம் நாட்டு மக்களுக்கு - குறிப்பாக இளையத்தலைமுறையினற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கடந்த நாற்பத்துமூன்று ஆண்டுகளாகவே இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டுமென்று இடதுசாரிகள் பாராளுமன்றத்திலும், வெளியிலும் போராடிவந்திருக்கிறார்கள். 1948 - ஆம் ஆண்டிலிருந்தே ஆட்சியாளர்கள் செய்த ஊழல்களை வரிசையாக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த ஊழல்களை எதிர்த்த இடதுசாரிகளின் போராட்டங்களில் ஏன் இந்த மக்கள் கலந்துகொள்ளவில்லை. ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கு இந்த தேசத்தில் இவர்களுக்கு மட்டுமே அருகதை இருக்கிறது.                                      ஏனென்றால், பல ஆண்டுகளாக இடதுசாரிகள் ஆட்சியிலிருந்த  கேரளா, மேற்குவங்கம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் இடதுசாரி முதலமைச்சர்கள் மீதோ அல்லது அமைச்சர்கள் மீதோ அல்லது எம்.எல்.ஏ-க்கள் மீதோ அல்லது எம். பி -க்கள் மீதோ இதுவரை ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதா..? இலஞ்சம் வாங்கியதாகவோ அல்லது சொத்துச் சேர்த்ததாகவோ குற்றம் சாட்டமுடியுமா..? இப்படிப்பட்டவர்கள் தான் ஊழலை தடுக்க முடியும். ஊழலை ஒழிக்க முடியும். இவர்கள் மட்டுமே ஊழலை எதிர்த்தப் போராட்டத்தை நடத்த அருகதையுள்ளவர்கள்.

அன்னா அசாரே கேட்பது என்ன..?

                                   அன்னா மத்திய அரசை  ரொம்பத் தெளிவாகத் தான் கேட்கிறார். ஊழலை ஒழிப்பதற்கு ஜன் லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றவேண்டும். ஆனால் அதை நான் சொல்வது போல் இருக்கவேண்டும் என்று கேட்கிறார். ஒரு சட்டம் இயற்றுவது என்பது மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய பாராளுமன்றத்தின் பணியாகும். பாராளுமன்றம் தான் நாட்டின் மிக உயர்ந்த ஜனநாயக அமைப்பாகும். அந்த ஜனநாயக அமைப்பில் இடம் பெற்றிருக்கக் கூடிய அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் சேர்ந்து தான் மசோதாவை உருவாக்கவேண்டுமே ஒழிய, என். ஜி. ஓ -க்களின் பிரதிநிதியான அன்னா அசாரே தான் சொல்வதை தான் அரசு ஏற்றுக்கொள்ள  வேண்டும் என்று உண்ணாவிரதம் இருப்பது என்பது மக்களைத் திசைத் திருப்பும் செயலாகும்.
                         லோக்பால் மசோதாவில் அவரது தேவை என்னவென்றால், அந்த மசோதாவில் என். ஜி. ஓ-க்களையும் கார்பொரேட் கம்பெனிகளையும் சேர்க்கக்கூடாது என்பது தான் என்.ஜி.ஓ-க்கள் மற்றும் கார்பொரேட் கம்பெனிகளால் நடத்தப்படும் அன்னாவின் உண்ணாவிரதத்தின் பின்னணியாகும் என்பதை மக்கள்  புரிந்துகொள்ளவேண்டும்.

ஊழலை தடுப்பது எப்படி..?

                 இந்த தேசத்திலிருந்து  ஊழலை விரட்டியடிப்பதற்கு இப்போது நம்          
நாட்டில் இல்லாத - அரிதான விஷயங்கள் மூன்றுத் தேவைப்படுகிறது. அவைகள்  (1)  தனிமனித ஒழுக்கம்
                       (2)  பொது வாழ்க்கையில் தூய்மை 
                       (3)  அரசியலில் நேர்மை  
  இவை மூன்றும் இருந்து விட்டால் நம் நாட்டில் ஒழுக்கமான - தூய்மையான - நேர்மையான ஆட்சியை - ஊழலற்ற ஆட்சியை நம்மால் பார்க்கமுடியும். இப்படிப்பட்ட ஆட்சியைத் தான் கடந்த காலங்களில் மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும், திரிபுராவிலும் இடதுசாரிகள் மக்களுக்கு கொடுத்து வந்திருக்கிறார்கள். அவர்கள் மீது நம் சிந்தனைகளையும் எண்ணங்களையும் திருப்புவோம். நமக்கு மாற்று சிந்தனைத் தேவை. மேலே சொன்ன மூன்றும் கொண்ட ''மாற்று உலகம்'' நமக்காக காத்திருக்கிறது. ''மாற்று உலகம்'' சாத்தியமே.