சொத்துக்குவிப்பு வழக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சொத்துக்குவிப்பு வழக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 13 மே, 2015

நீதிமன்றம் மீதான நம்பிக்கை குலைந்துவிடும்...!

              
           நேற்று முன் தினத்திலிருந்து ஜெயலலிதாவும் அவரது கட்சிக்காரர்களும் நிம்மதியாக உறங்கியிருப்பார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போல் தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக எழுதப்பட்டுவிட்டது. அதற்காக அவர்கள் என்ன விலை கொடுத்திருப்பார்கள் என்றெல்லாம் மக்கள் யூகித்துப் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஏனென்றால் தேர்தலில் வெற்றிக்கே கோடிக்கணக்கில் பணத்தை இறைத்தவர்கள் தானே இவர்கள் என்ற அனுபவம் மக்களுக்கு இருக்கிறது. அதனால் அவர்கள் யூகிப்பது சரியாகத்தான் இருக்கும். அது ஒரு பக்கம் இருக்கட்டும். 
           தீர்ப்பின் நகல் வெளியானப்பிறகு இரண்டு விதமான சந்தேகங்கள் நமக்கு எழுகிறது. 
              ஒன்று... நீதிபதி அவர்கள் ஜெயலலிதா மற்றும் அவரது கூட்டாளிகளின் வரவு -செலவு கணக்குகளை போட்டு கடைசியில் என்ன சொல்கிறார் என்றால், ''வருமானத்தில் பத்து சதவீதம் வரையில் வருமானத்தை விட அதிகமாக சொத்து சேர்க்கலாம். அதை அனுமதிக்கலாம்'' என்ற வாதத்தையும் வைத்து, அதற்கான  இரண்டு ஆதாரங்களையும் சுட்டிக்காட்டி 919 பக்க தீர்ப்பின் மூலம் ஜெயலலிதாவை விடுதலை செய்திருக்கிறார். 
          நமக்கு என்ன கேள்வி எழுகிறது என்றால், வருமானமே இல்லாதவன் வறுமையின் காரணமாக, பசியின் காரணமாக பிக்பாக்கெட் அடித்தாலோ அல்லது  வீடு புகுந்து அண்டா திருடினாலோ அவனுக்கு தண்டனையளிக்கிற நீதிமன்றம், அதிகாரத்திலிருப்பவர்கள் - மக்களுக்கு சேவை செய்ய என்று வந்தவர்கள் தங்கள் வருமானத்தை விட அதிகமாக கோடிக்கணக்கில் சொத்து சேர்கிறார்கள் என்றால் அந்த கோடி என்பது பத்து சதவீதத்திற்கு குறைவாக இருந்தால் தவறில்லை. பாவம் அப்பாவி பிழைக்கத் தெரியவில்லை என்ற பொருளில் அவர்களை தண்டிக்காமல் விடுதலை செய்வது என்பது எந்தவகையில் நியாயம்...? அது நீதி ஆகுமா...? அனைவருக்கும் சமமான நீதி என்பது இது தானா...? சாமானியனுக்கு ஒரு நீதியும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு ஒரு நீதியும் வழங்கும் நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்...?
      ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என   ஏராளமான கணக்கு வழக்குகளை எல்லாம் போட்டுக்காட்டி, பாவம் அந்த அம்மா  சொத்து சேர்த்தது என்னவோ  8.12% தான். பத்து சதவீதம் வரை சேர்க்கலாமென்று சட்டம் சொல்லுது. அதனால அவங்கள விடுதலை செய்கிறேன். நான்கு ஆண்டுகள் தண்டனையும் கிடையாது. 100 கோடி தண்டமும் கட்டவேண்டாம். அதுமட்டுமல்ல அவர்களிடமிருந்து பறிமுதல் செய்த அத்தனை பொருட்களையும் அவர்களிடமே திரும்ப ஒப்படைக்கவேண்டும் என்றும் 919 பக்கத் தீர்ப்பில் ஜட்ஜ் அய்யா குறிப்பிட்டிருக்கிறார். 
         எனக்கு என்ன கேள்வி எழுகிறது என்றால் பத்து சதவீதம் வரையில் திருடினால் அது திருட்டு இல்லையா...? பத்து சதவீதம் என்பது குறைவாக தெரியலாம்,  ஆனால் அதன் மதிப்பு பல கோடிகள் ஆச்சே...! கோடிகளை திருடினால் அது பரவாயில்லையா...? இது  என்ன அளவுகோல்...? சாமானியர்களுக்கு ஒன்றும், அதிகாரத்திலிருப்பவர்களுக்கு வேறோன்றுமான அளவுகோல். நீதிமன்றத்தில் இருக்கும்  நீதி தேவதை இரண்டு விதமான தராசுகளையா வைத்திருக்கிறாள்...? இப்படிப்பட்ட தன்மை கொண்ட நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்...? 

             இரண்டு... கடந்த நான்கு மாதகாலமாக ஒரு நீதிபதி ஒரு நீண்ட நெடிய பக்கங்களை கொண்ட தீர்ப்பை எழுதுகிறார் என்றால் அதில் கவனக்குறைவாக இருக்கலாமா...? தவறான கணக்கைப் போட்டு அதைக்காட்டி விடுதலை செய்வது என்பது எந்தவகையில் தர்மமாகும். அப்படி செய்வது என்பது எதிர்காலத்தில்  தவறான முன்னுதாரணம் ஆகி விடாதா...?  அப்படியென்றால் நீதிபதி குற்றவாளியை விடுதலை செய்வதில் காட்டிய  வேகத்தில் கணக்கு போடுவதில் தவறு செய்துவிட்டார் என்று பொருள்கொள்ளலாமா...?  இப்படியான தீர்ப்பு என்பது வருங்கால தலைமுறைக்கு தவறான பாடமாக அமைந்துவிடக்கூடாது. எதிர்காலத்தில் இது தவறு செய்யும் ஆட்சியாளர்களும் தண்டனை இல்லாமல் தண்டனை இல்லாமல் தப்பிப்பதற்கு முன்னுதாரணமாக காட்டும் நிலை வரும். எனவே கர்நாடக அரசு தாமதிக்காமல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனையை பெற்றுத்தரவேண்டும் என்பது நடுநிலையான மக்களின் எதிர்பார்ப்பாகும். 

செவ்வாய், 12 மே, 2015

ஜெயலலிதா விடுதலை - நாணல் போல வளைவது தான் சட்டமாகுமா...?





                 இந்தியா விடுதலை அடைந்தபோது கூட தமிழகத்தில் இவ்வளவு கொண்டாட்டம் இருந்திருக்காது. அனால் இன்று காலை ஜெயலாலிதாவின் விடுதலை பற்றிய செய்தியை கேட்டதும் அதிமுகவினரின் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் எல்லாம் பட்டாசுகளோடு சேர்த்து வெடித்து சிதறியது. 
                நீதியரசர் குமாரசாமி இன்று அளித்த தீர்ப்பை  மட்டுமல்ல, அந்த தீர்ப்பை ஒட்டி அதிமுகவினரால் நடத்தப்பட்ட இந்த முட்டாள்தனமான கொண்டாட்டங்களையும் யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இந்த தீர்ப்புக்கு பிறகு தான் ''நீதிமன்றம் யாருக்கானது...?'' என்ற கேள்வி நம் மனதில் எழுகிறது. பசியின் காரணமாக வாழைப்பழத்தையோ, ரொட்டியையோ திருடிவிட்டால் அவனுக்கு கடுமையான  சிறை தண்டனை நீதிமன்றம்... தண்டனை முடிந்து அவன் சிறையிலிருந்து வெளியே வரும்போது திருந்துவதற்கு பதிலாக முன்பை விட பெரிய திருடனாக மாற்றப்பட்டு வெளியே வருகிறான். ஆனால் ஆட்சியிளிருப்பவர்களோ அல்லது அதிகாரிகளோ அதிகாரத்தில் இருக்கும் போது மக்கள் பணத்தை திருடினால், ''மொத்த வருமானத்தில் இத்தனை சதவீதம் திருடலாம்... அதற்கு சட்டம் அனுமதி அளிக்கிறது'' என்று சொல்லி விடுதலை அளிக்கிறது அதே நீதிமன்றம். சட்டமும், நீதியும் அனைவருக்கும் சமம் என்ற வாதம் பக்கவாதம் ஆனதா என்ற சந்தேகம் தான் நமக்கு எழுகிறது. 
        கடந்த பதினெட்டு ஆண்டு காலமாக  இழுத்தடிக்கப்பட்டு ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூருவில் உள்ள கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அண்மையில் தான் ஒரு நீதிபதி நீண்ட நெடிய பக்கங்களை கொண்ட தீர்ப்புகளை படித்து தண்டனைகளை வழங்கி ஜெயலலிதாவை சிறைக்குள் தள்ளினார். ஆனால் மேல்முறையீடு என்ற பெயரில் அதே வழக்கில்  வேறொரு  நீதிபதி  இன்னொரு  நீண்ட நெடிய பக்கங்களோடு புதிய தீர்ப்பை எழுதி  சென்ற நீதிபதி அளித்த தீர்ப்புகளையும், தண்டனைகளையும்   ரத்து செய்து ஜெயலலிதாவை விடுதலை செய்திருக்கிறார்.  ஒரே மாநிலம், ஒரே நீதிமன்றம், ஒரே வழக்கு, அனால் இரு மாதிரியான தீர்ப்பு. முன்பு தீர்ப்பு சொன்னவர் ஜெயலலிதா நடத்திய கொள்ளைகளை  எடைபோட்டு தீர்ப்பு சொன்னார். ஆனால் இப்போது தீர்ப்பு சொன்னவரோ கணக்கு போட்டு தீர்ப்பு சொல்லியிருக்கிறார். அவர் எழுதிய 919 பக்கத் தீர்ப்பின்படி, செய்கூலி, சேதாரம் போக 10 சதவீதம் வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கலாமா..! பாவம் இந்த அம்மாவோ 8.12 சதவீதம் தான் தன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து செர்த்திருக்காங்களாமா...! அதனால இதெல்லாம் பெரிய குற்றமா...? அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா... என்று  கணக்கு போட்டு விடையை கண்டுபிடிச்சி பழைய தீர்ப்பை மாத்தி எழுதி ஜெயலலிதாவை புனிதமாக்கிவிட்டார். 
           இந்த இரண்டு தீர்ப்புகளில் எது தான் ''சரியான'' தீர்ப்பு என்று புரியாமல் மக்கள் மாபெரும் குழப்பத்தில் கிடக்கிறார்கள். முன்னவர் சொன்ன தீர்ப்பு சரியானதா...? அல்லது நேற்று பின்னவர் சொன்ன தீர்ப்பு சரியானதா...? நேற்று சொன்னவரின் தீர்ப்பு தான் சரியானது  என்றால், முன்னவர் தவறான தீர்ப்பு சொன்னாரா...? என்ற கேள்வி எழுகிறது. அப்படி தவறான தீர்ப்பு வழங்கியிருந்தால் அவர் தண்டிக்கப்படவேண்டியவரா...? என்ற கேள்வியும் எழுகிறது. சட்ட வல்லுனர்கள் சட்டத்திலுள்ள ஓட்டையை கண்டுபிடித்துவிடுகிறார்கள், பணம் படைத்தவர்களுக்கும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் அவர்களுக்கு தகுந்தாற்போல் சட்டத்தை வளைத்துக் கொள்கிறார்கள். 
           அதிகாரத்திலிருப்பவர்கள் மக்கள் பணத்தை கொள்ளையடித்தால் தண்டனை இல்லை என்ற பாடத்தை தான் எதிர்கால தலைமுறைக்கு இன்றைய நீதிமன்றம் பாடம் சொல்லித்தருகிறது என்பது நமக்கு நன்றாக புரிகிறது.  

செவ்வாய், 21 அக்டோபர், 2014

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றது தியாகமா...?


 கட்டுரையாளர் : தோழர்.ஜி.ராமகிருஷ்ணன்,            
                                  மாநிலச்செயலாளர்,                                    
                                  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)           

           சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் சிறைத் தண்டனை பெற்று, உச்சநீதிமன்றத்தில் பெற்ற நிபந்தனை ஜாமீன் அடிப்படையில் தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ளார்.இதைத் தொடர்ந்து அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் “சோதனைகளைக் கண்டு கவலை இல்லை, தமிழக மக்களுக்காக எந்த தியாகமும் செய்வேன்“ என்றுகூறியுள்ளார். “பொது நலனுக்காக நம்மை அர்ப்பணித்து வாழ்வது எத்தகைய இடர்பாடுகளை உடையதாக இருக்கும் என்பதை அரசியல் வாழ்வில் நுழைந்த நாளிலிருந்து உணர்ந்திருக்கிறேன்“ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை முதல்வராக இருந்தபோது வருமானத்திற்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக தொடுக்கப்பட்ட வழக்கு 18 ஆண்டுகளாக நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
              சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பில் பல்வேறு விபரங்கள் இடம்பெற்றுள்ளன.3 ஆயிரம் ஏக்கர் நிலம் உட்பட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் ஜெயலலிதா முதல்வராக இருந்தகாலத்தில் குவிக்கப்பட்டுள்ளன. நிலத்தை வாங்குபவரின் பெயர்களை பூர்த்தி செய்யாமலே பதிவாளரை வீட்டிற்கு அழைத்து சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நால்வரின் பெயரிலும் சொத்துக்கள் இருந்தாலும் அது முதல்வர் பதவியை பயன்படுத்தி சேர்த்த சொத்துக்கள்தான் என்று தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும், அப்போது தொடங்கப்பட்டதாகக் கூறப்படும் நிறுவனங்கள் எதுவும் செயல்படவில்லை. வெறும் காகிதத்தில் மட்டுமே அந்த நிறுவனங்கள் இருந்துள்ளன என்பதும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்த வழக்கில் சட்டப்பூர்வமாக மேல்முறையீடு செய்வது உள்ளிட்ட உரிமைகள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு உண்டு.
                  ஆனால் அவர் தண்டனை பெற்றதும், சிறையில் அடைக்கப்பட்டதும் மிகப்பெரிய அநீதிஎன்று அதிமுகவினர் போஸ்டர் அடித்தனர். தெய்வத்திற்கு மனிதன் தண்டனை வழங்குவதா? என்று கேட்கும் அளவிற்கு சென்றனர். ஆனால், ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையிலும் கூட அதே தோனி இடம்பெற்றுள்ளது விசித்திரமாக உள்ளது. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி எந்த தியாகமும் செய்வேன் என்று கூறுவதுபொருத்தமற்றது.விடுதலைப்போராட்டக் காலத்திலும் அதன்பின்பும் மக்களுக்காக சிறை சென்ற தலைவர்கள் இப்போதும்கூட நம்முடன் உள்ளனர். குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் என்.சங்கரய்யா விடுதலைப்போராட்ட காலத்தில் பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டு சிறைத்தண்டனை பெற்றவர். நாடு விடுதலை அடைவதற்கு முதல்நாளான ஆகஸ்ட் 14-ம் தேதி மாலை தான் அவர் மதுரை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். நாடு விடுதலை அடைந்த பின்பும் கூட அவர் பலமுறை சிறை சென்றுள்ளார்.
                             ஆனால், இந்த வழக்குகள், தண்டனை அனைத்தும் அவருடைய சொந்த விவகாரத்திற்கானவை அல்ல. அனைத்தும் நாட்டு மக்களின் விடுதலைக்காக, நல்வாழ்விற்காக அவர் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டவை.அதேபோன்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணு விடுதலைப்போராட்ட காலத்திலும் அதன் பின்பும் பலமுறை சிறை சென்றவர். இதிலும் தனிப்பட்ட வழக்கு ஏதும் இல்லை. அனைத்தும் மக்களுக்காக நாட்டுக்காக நடத்திய போராட்டங்களுக்காக தொடுக்கப்பட்டவையே. இந்த இருபெரும் தலைவர்களும் சென்னையில் பங்கேற்க இருந்த ஊழல் எதிர்ப்பு கருத்தரங்கிற்கு கூட அதிமுக தலைமையிலான மாநில அரசு அனுமதி மறுக்கிறது. ஆனால், மாநிலம் முழுவதும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு (!) எந்தத் தடையும் இல்லை.“நான் என்றும் மக்கள் ஊழியனே” என்று முழக்கமிட்ட தோழர் ஏ.கே.கோபாலன் மக்களின் விடுதலைக்காக போராடியவர்.
                        அவரும் தன் வாழ்நாளில் பெரும்பகுதியை சிறையில் கழித்தவர். தமிழகம் தந்த மகத்தான தலைவர்களில் ஒருவரான தோழர் பி.ராமமூர்த்தி மாணவப் பருவத்திலேயே விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டவர். சிறை சென்றவர். ஆனால், அவர் மீது தனிப்பட்ட குற்றச்சாட்டு எதுவும் இல்லை. அவர், மதுரை சிறையில் இருந்துகொண்டே சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.விடுதலைப்போராட்ட வீரர்களாக திகழ்ந்து, சிறை சென்று அதன்பின் மக்கள் பணியின் ஒரு பகுதியாக முதல்வர் பொறுப்பை ஏற்ற தோழர்கள் இஎம்எஸ் நம்பூதிரிபாட், ஜோதிபாசு, நிருபன் சக்கரவர்த்தி, தசரத் தேவ், சி.அச்சுதமேனன், இ.கே.நாயனார் போன்ற தலைவர்கள் பொதுவாழ்வில் எதிரிகளால் கூட குற்றம்சாட்ட முடியாத தூய நிர்வாகத்தை தந்தவர்கள்.
                   கேரள முதல்வராக இருந்த தோழர். வி.எஸ்.அச்சுதானந்தனும் அப்படியே.திரிபுரா மாநில முதல்வராக தொடர்ந்து நான்காவது முறையாக பதவிவகிக்கும் தோழர் மாணிக் சர்க்கார் இந்தியாவின் ஏழை முதல்வர் என்றும், அவருக்கு சொந்தமாக வீடும் இல்லை. காரும் இல்லை என்று பத்திரிகைகள் எழுதின. இதுதான் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பாரம்பரியம். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதையே ஒரு மகத்தான தியாகமாக கூறிக்கொள்வதையும், அது தொடரும் என்று கூறுவதையும் மக்கள் புரிந்துகொள்வார்கள்.

நன்றி : தீக்கதிர்                      

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

தமிழகத்தில் முதல்முறையாக ஒப்பாரி வைத்து அமைச்சர்கள் பதவியேற்பு...!

              சென்ற சனிக்கிழமையன்று ''வருமானத்திற்கு அதிகமான சொத்துக்குவிப்பு'' வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை குற்றவாளி என்று அறிவித்து நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.100கோடி அபராதம் வழங்கி தீர்ப்பளித்து அன்றைய தினமே சிறைக்குள் தள்ளியது. ஜெயலலிதா சிறைக்கு சென்றது எதற்காக என்று அவரது அமைச்சர்களும், கட்சிக்காரர்களும் யோசிக்கவே இல்லை. என்ன ஆர்ப்பாட்டம்...? தமிழ்நாட்டையே கதிகலங்க வெச்சிட்டாங்க. பொது சொத்தான பஸ்களை எரிக்கிறது. திறந்திருக்கும் கடைகளை அடித்து நொறுக்கிறது. தனியார் வாகனங்களை தீயிட்டு கொளுத்துவது. சேதப்படுத்துவது. ஜெயலலிதாவின் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகள் என்னா.. அட்டகாசம் பண்றாங்க. பொது மக்கள் இவர்களுக்கு எதிராக திரும்பினால் என்னாகும். ஜெயலலிதா என்ன சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்றாரா...? அல்லது மக்கள் பிரச்சனைகளுக்காக போராடி சிறைக்கு சென்றாரா...? இல்லையே அரசு பதவியை தவறாக பயன்படுத்தி பொதுமக்களின் சொத்துக்களை அல்லவா கொள்ளையடித்து சிறைக்கு சென்றுக்கிறார். இதில் ஏன் உடன்பிறப்புகள் ஆத்திரப்படவேண்டும்... கோபப்படவேண்டும்...? இந்த கோபத்திலும், ஆத்திரத்திலும் கொஞ்சம் கூட நியாயமில்லையே. இதன் மூலம் மக்களிடம் அனுதாபத்தை பெற்றுவிடலாமென்று தப்புக்கணக்கு போடுகிறார்கள்.  அதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் அவர்களே ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு வாயசைத்திருக்கிறாரே. ''ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்'' - இந்தப்பாடல் கருணாநிதிக்கு மட்டுமல்ல. ஜெயலலிதாவிற்கு கூட பொருந்தும் தானே. ஒரு தவறை மறைப்பதற்கு இன்னொரு தவறு தீர்வாகாது என்பதை மறந்து விட்டு செய்கிறீர்கள். 
              தீர்ப்பின் காரணமாக ஜெயலலிதாவின் முதலமைச்சர் பதவி பறிபோனப் பிறகு, நேற்று அவரின் விசுவாசி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 30 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்றது. எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதா இல்லாத மூன்றாவது அதிமுக அமைச்சரவை இது. இந்த பதவியேற்பு விழா முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வித்தியாசமாக நடைபெற்றது. கவர்னர் மாளிகையை ஒரு இழவு வீடாகவே மாற்றிவிட்டார்கள் அதிமுகவினர். தங்கள் தலைவி சிறையலடைக்கப்பட்டு செக்கிழுத்துக் கொண்டிருக்கும் வேளையில் நமக்கு அமைச்சர் பதவி ஒரு கேடா என்பது போல்,  பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் பொறுப்பேற்ற பன்னீர்செல்வம் முதல் எல்லோருமே பதவியேற்கும் போது  ஒப்பாரி வெச்சி அழுதாங்க. இப்படி அழுவதன் மூலம் ஜெயலலிதாவிடம் தங்களின் விசுவாசத்தை காட்டுவதற்கும், தமிழக மக்களிடம் அனுதாப அலையை உயர்த்துவதற்கும் பெரும்  முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்கள் நினைத்தது போல் அந்த நிகழ்ச்சி அனுதாபத்தை உயர்த்தவில்லை. மாறாக எரிச்சலை தான் உண்டுபண்ணியது. அதை தொலைக்காட்சி நிகழ்ச்சி என்று நினைத்துக்கொண்டார்கள். தொலைக்காட்சியில் அழுதால் தான் அதன் ''ரேட்டிங் பாய்ன்ட்'' உயரும். அதே மாதிரி இங்கும் அழுவதால் என்ன பயன்...? ஜெயலலிதாவிற்கு கிடைத்த தண்டனையிலிருந்து எதிர் காலத்தில் தவறு செய்யாமல் ஆட்சி செய்யவேண்டும் என்ற  பாடத்தை  கற்றுக்கொள்ளுங்கள். மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுங்கள். இது தான் இன்றைய தேவை என்பதை மனதில் வைத்து ஆட்சி செய்யுங்கள். மக்களும் அதை தான் உங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கிறார்கள்.

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

நீதிக்கே ஜெயம்... மற்றவர்களுக்கு பாடம்....!

                              கடந்த 18 ஆண்டுகளாக நடந்துவந்த ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நேற்று மிகுந்த பரபரப்புகளுக்கிடையில் முடிவுக்கு வந்தது. 18 ஆண்டுகால இழுபறிக்குப் பின் நீதி வென்றது. இந்த தேசம் நீதியை பெறுவதற்கு 18 ஆண்டுகள் காத்திருக்கவேண்டியுள்ளது. மக்களின் ஆதரவை பெற்று ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறு செய்தால், அவர்களுக்கு எதிராக வழக்குகளும், விசாரணைக் கமிஷன்களும் போடப்பட்டு நேர்மையாக விசாரணைகளை நடத்தி தீர்ப்புகளை வழங்கி தவறு செய்தவர்கள் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டு தண்டிக்கப்பட்டதாக நம் நாட்டில் இதுவரை சரித்திரமே இல்லை. அப்படியாக முந்தைய காலங்களில் தவறுகள் செய்தவர்களை - இலஞ்ச - ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களை தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டவுடன் உடனுக்குடன் நேர்மையான முறையில் விசாரித்து தண்டனை அளித்திருந்தால் இன்றைக்கு  நாட்டில் இந்த அளவிற்கு இலஞ்ச-ஊழல் என்பது யாருக்கும் அஞ்சாமல் தைரியமாக தலைவிரித்து தாண்டவம் ஆடாது. இன்றைக்கு நாட்டில் இந்த இலஞ்ச-ஊழல் குற்றங்கள் என்பது  மக்களால் அங்கீகரிக்கப்பட்ட - சட்டங்களால் - நீதிமன்றங்களால் அங்கீகரிக்கப்பட்ட குற்றங்களாக தான் பார்க்கப்படுகிறது. இன்றைய தினம் அரசியல் என்பது இலஞ்ச-ஊழல் செய்து சொத்து சேர்க்கும் தொழிலாக மாறிவிட்டது.
             அப்படியாக தான் கடந்த 1991- 1996 ஆண்டுகளில் மாதம் ஒரு ரூபாய் சம்பளத்திற்கு செல்வி. ஜெயலலிதா தமிழக முதலமைச்சராக பணியாற்றிய போது செய்த பல்வேறு ஊழல்கள் சமாச்சாரங்கள் செய்து பதவியிழந்த பிறகு அத்தனை ஊழல்களும் வெளியே வர நீதிமன்றத்தில் குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்டு, குறிப்பாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு நீதிமன்றத்திற்கு வர,  1996 - ஆம் ஆண்டு முதல் நீதிமன்றங்களின் படிகளை ஏறி ஏறி தண்டனைகளிலிருந்து தப்பிப்பதற்காக பல்வேறு காரணங்களை காட்டி வழக்கை திசைத்திருப்பி நீர்க்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு  வந்தார். 1996-ம் ஆண்டு ஜூலையில் சென்னை மாநகர அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கிய சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணைக்காக   சிங்காரவேலர் சிறப்பு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்றம் என கடந்த 18 ஆண்டுகளில் 6 நீதிமன்றங்களின் படிகளை ஜெயலலிதா முன்னாள் முதல்வராக, இந்நாள் முதல்வராக ஏறி இறங்கி இருக்கிறார். . சென்னை நீதிமன்ற நீதிபதி சம்பந்தம் என்பவரில் ஆரம்பித்து கர்நாடக மாநில நீதிபதி ஜான் மைக்கேல் டி. குன்ஹா என்பவர் வரை சுமார் 90 நீதிபதிகள் இதுவரை இவ்வழக்கை விசாரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் பெங்களூரரு  சிபிஐ நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், பெங்களூரு  மாவட்ட நீதிமன்ற பதிவாளராகவும் பணியாற்றிய நீதிபதி ஜான் மைக்கேல் டி. குன்ஹா அவர்கள் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு தான் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதியாக பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்றதும் தான் நீண்ட காலமாக இழுத்துக்கொண்டிருந்த இந்த வழக்கின் திசைவழியை மாற்றினார். வழக்கம் போல் நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்காமல் வழக்கை தீர்ப்பை நோக்கி நகர்த்தி வந்தார். நீதிபதி குன்ஹா அவர்களுடைய கடினமான உழைப்பும், கண்டிப்பான அணுகு முறையும் தான் தீர்ப்பை நோக்கிய வழக்கின் வேகத்திற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட நீதிபதிக்கே ஜெயலலிதா தண்ணி காட்டினார். தீர்ப்பு தேதியை நீதிபதி அறிவித்தப்பின்னரும், நீதிபதி தீர்ப்பு எழுதாமலிருக்க என்னென்ன செய்யவேண்டுமோ எல்லா வழிமுறைகளையும் ஜெயலலிதா கடைசி நிமிடம் வரை முயற்சி செய்து பார்த்தார் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. கடைசியில் ஜெயலலிதா தோல்வியே அடைந்தார். வெற்றி பெறுவதற்காக தேர்தல் களத்தில் செய்வது போல் நீதிமன்றத்திலும்  ஜெயலலிதா செய்த எந்த முயற்சிகளும் பலிக்கவில்லை. இறுதியில் நீதி வென்றது. நீதிபதி குன்ஹா வென்றார். நீதிக்கே ஜெயம்...!
             தவறு செய்பவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் யார்க்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. அப்படியாகத்தான் இந்த தீர்ப்பை - தண்டனையை ஜெயலலிதாவும், அதிமுக கட்சியினரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால் இது போன்ற தவறுகள்  செய்பவர்களை தப்பிக்கவிடாமல் ஆரம்பத்திலேயே தண்டித்திருந்தால், அன்றைய தமிழக முதலமைச்சராக பணியாற்றிய மு.கருணாநிதி செய்த தவறுகளை விசாரித்த சர்க்காரியா கமிஷன் அறிக்கைகளை தீர்ப்புகளாக நீதிமன்றம் அறிவித்து தண்டனைக்கொடுத்திருந்தால், இன்றைக்கு நாட்டில் ஜெயலலிதா, சவுத்தாலா, லல்லு, மாயாவதி, மம்தா பானர்ஜி, எடியூரப்பா, ஆ.ராசா, கனிமொழி, கலாநிதிமாறன் போன்ற  ஊழல்வாதிகளும், மணல் முதல் கனிமங்கள் வரை கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் திருடர்களும் உருவாகியிருக்கமாட்டார்கள் என்பதையும் மக்கள் மனதில் கொள்ளவேண்டும்.  ஜெயலலிதாவின் இந்த தண்டனை என்பது இன்றைய இந்திய அரசியவாதிகளுக்கு ஒரு பாடமாக அமையும் என்பதில் மாற்று இருக்கமுடியாது.

ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் நீதிமன்ற நேரமும், மக்கள் வரிப்பணமும் விரயம்...!

                        பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தற்சமயம் நடைபெற்றுவரும், சொத்துக் குவிப்பு வழக்கு ஒருவழியாக வருகிற செப்டம்பர் 20 - ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. தீர்ப்பு எப்படியிருக்கும் என்பது பற்றி அரசியல் விமர்சகர்கள் பல்வேறு கருத்துகளை கூறிவருகிறார்கள். தீர்ப்பை வைத்து நாட்டில் மக்களிடையே சூதாட்டமே நடைபெறுகிறது. சொல்லப்போகிற  தீர்ப்பு என்பது சாலைகளில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி பட்டாசு வெடித்துக் கொண்டாடும் விதமாக இருக்குமா என்ற எதிர்ப்பார்ப்போடு அதிமுகவும், திமுகவும் காத்திருக்கிறார்கள். தீர்ப்பு என்பது ஜெயலலிதாவிற்கு சாதகமாக இருந்தால் அது அதிமுகவிற்கு கொண்டாட்டமாக இருக்கும். அதுவே பாதகமாக இருந்தால் திமுகவிற்கு கொண்டாட்டமாகவே இருக்கும். மொத்தத்தில் இவர்களுக்கு ஓட்டுப்போட்ட தமிழக மக்களுக்கு திண்டாட்டமாகவே இருக்கும்.
               கடந்த 2000 - ஆம் ஆண்டில் தருமபுரியில் நடைபெற்ற பஸ் எரிப்பும், பஸ்ஸில் இருந்த மூன்று வேளாண் கல்லூரி மாணவிகள் எரிந்து கருகிப்போன சம்பவத்தை இன்னும் தமிழக மக்கள் மறந்துவிடவில்லை. கொடைக்கானல் ப்லெசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதாவிற்கு சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியபோது நடைபெற்ற அதிமுகவினரால் நடத்தப்பட்ட கொடுமையான சம்பவம் தான் அது. இதுபோன்ற கொடுமையான சம்பவங்கள் இந்த நாட்டில் மீண்டும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இதை தலைவர்கள் தான் தங்கள் தொண்டர்களுக்கு அறிவுறுத்தவேண்டும். 
             இது ஒருபுறமிருக்க பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு முடிவுக்கு வருவதற்கு பதினொரு  ஆண்டுகள் தேவைப்பட்டது என்றால் எவ்வளவு பொன்னான நேரங்களை நீதிமன்றம் விரயம் செய்திருக்கிறது என்பதை நினைக்கும் போது உண்மையிலேயே வேதனையாக இருக்கிறது. அந்த அளவிற்கு இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்ட அனைவருமே நீதிமன்றத்தை உதாசினப்படுத்தி இருக்கிறார்கள் என்று  தான் அதற்கு பொருள் கொள்ளவேண்டும்.
              நீதிமன்ற நேரம் விரயம் ஆனது மட்டுமல்ல மக்களின் வரிப்பணமும் ஏராளமாக விரயமாக்கப்பட்டுள்ளது. இந்த பதினொரு ஆண்டுகால நீதிமன்ற விசாரணைக்கு மட்டும் இதுவரையில் கர்நாடக அரசு ரூ.2.86 கோடிசெலவு செய்திருக்கிறது என்ற அதிர்ச்சியான செய்தி வெளியே வந்திருக்கின்றது. இதில் ரூ.1.46 கோடியை தமிழக அரசு கர்நாடக அரசிடம் செலுத்திவிட்டதாம். இன்னும் ரூ.1.40 கோடி கர்நாடக அரசுக்கு தரவேண்டிய பாக்கியிருக்கிறதாம். மக்கள் பணத்தை சட்டவிரோதமாக குவித்த வழக்கிற்கு ஆகிற இத்தனைக் கோடி ரூபாய் செலவும் மக்களின் வரிப்பணம் தான் என்று என்னும் போது வேதனையாகத்தான் இருக்கிறது. 
                 இப்படியே தேர்தலுக்கு தேர்தல் மக்களின் வரிப்பணத்தை சட்டவிரோதமாக கொள்ளையடித்து குவித்து வைத்திருக்கும் ஜெயலலிதாவிற்கும், கருணாநிதிக்கும் மாறி மாறி ஓட்டுப்போடும் தமிழக மக்கள் அப்பாவிகளா... ஏமாளிகளா.... அல்லது முட்டாள்களா...?