பாஜக. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாஜக. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 31 மார்ச், 2014

உழுகிற நாளில் ஊருக்குப் போய்விட்டு அறுக்கிற நாளில் அரிவாளோடு வருவதா?

 

 கட்டுரையாளர் :தோழர்.ஜி.ராமகிருஷ்ணன், 
               மாநிலச்செயலாளர்            
               மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி       

 
                 “நான் மின்சாரப் பிரச்சனையை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். மின்சாரத்தைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். விரைவில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழும்” மதுரையில் அஇஅதிமுக வேட்பாளருக்கு வாக்குகள் சேகரிக்கும் பிரச்சாரத்தின்  போது முதலமைச்சர் ஜெயலலிதா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
            தமிழகத்தில் கோடை வெயில் தனது உக்கிரத்தைக் காட்டத் துவங்கியுள்ள வேளையில், மக்களை மேலும் துயரத்தில் மின்வெட்டு தள்ளிவரும் நிலையில், கவலைப்படாதீர்கள் என்று ஆறுதல் வார்த்தைகளை சொல்லி வருகிறார் முதலமைச்சர். மேலும் “சில இடங்களில் மின் உற்பத்தி பிரச்சனையால், ஓரிரு நாட்கள் தமிழகத்தில் சில மணிநேரம் மின்வெட்டு இருந்தது. அந்த மின்வெட்டும் விரைந்து சரிசெய்யப்பட்டுள்ளது” என்று விளக்கம் அளித்திருக்கிறார். நான் மார்ச் 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கோவைத் தொகுதிக்கு தேர்தல் வேலையாக சென்றிருந்தேன்.
            அங்கு சுமார் நான்கு மணி நேரம் மின்வெட்டு இருந்தது. இந்த மின்வெட்டு சிறு, குறு தொழில்களைக் கூடுதலாக பாதிக்கிறது. கோவை மாநகரத்தில் மட்டுமல்ல, சென்னையைத் தவிர மாநிலம் முழுவதும் இதே நிலைமைதான். தற்போது மின்வெட்டால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. பொருளாதாரச் சுழற்சியில் ஒரு கண்ணி அறுந்தாலும் ஒட்டுமொத்த வளையமும் கழன்றுவிடும். உற்பத்தி பாதிப்பால், தொழிலாளர்களுக்கு வேலையின்மை, அதனால் அவர்களின் குடும்பங்கள் துயரில் ஆழ்தல் என்கிற துயரச் சுழற்சி அல்லவா உருவாகி வருகிறது. இந்த அவலநிலை கண்டு கவலைப்படாமல் இருக்க வேண்டும் என்று எப்படி கூறுகிறார் தமிழக முதலமைச்சர்? திருப்பூர், இந்தியாவிற்கு அதிகமான அளவில் அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் ஒன்றாகும். மின்வெட்டால் அங்கும் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
                இப்படி உற்பத்தி பாதிப்பதால், தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிப்புக்குள்ளாகிறது. மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெற்று வருகிறது. மின்வெட்டு அவர்களையும் பாதிக்கிறது. பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கவலைப்பட வேண்டாம் என்று எப்படி கூறுகிறார் தமிழக முதலமைச்சர்? 2001 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம்ஆண்டு வரையில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எந்தவித மின்திட்டங்களும் நடைமுறைக்கு வரவில்லை. இந்தப் பத்தாண்டு காலத்தில் அஇஅதிமுகவும், திமுகவும் தலா ஐந்தாண்டுகள் ஆட்சியில் அமர்ந்திருந்தன. தற்போது மாறி, மாறி ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டு இருவருமே தப்பித்துக் கொள்ளும் வழியைத் தேடுகிறார்கள்.
                    ஆனால்இல்லாத மின்சாரத்திற்கு மின்கட்டணத்தை ஏற்றுவதில் மட்டும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் இருந்தனர். தனது ஆட்சியின்போது ஆண்டுதோறும் மின்கட்டணத்தை திமுக உயர்த்தியது. 2009-10 ஆண்டில் 954 கோடி ரூபாய்க்கு மின்கட்டணம் உயர்ந்தது. மின்வெட்டு இல்லாத மாநிலமாக்குவோம் என்று ஆட்சிக்கு வந்த அஇஅதிமுக, 2011 ஆம் ஆண்டில் 42 சதவிகிதம் அளவுக்கு மின்கட்டணத்தை உயர்த்தியது. மக்கள் கடும் துயரத்துக்குள்ளாகினர். மின்வாரியத்தின் வருமானம் 35 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. தனியார் நிறுவனங்களிடம் ஒரு யூனிட் மின்சாரத்தை 12 ரூபாய் கொடுத்து வாங்குவது பற்றி ஆட்சியாளர்கள் வாய் திறக்க மாட்டேன் என்கிறார்கள். மின்வாரியத்திற்கு நட்டம் என்றால், எந்தக் கல்லாவிற்கு பணம் செல்கிறது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
            2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்குக் கிடைத்த தோல்விக்கு மின்வெட்டு ஒரு முக்கியமான காரணமாகும். மின்மிகை மாநிலமாக மாற்றுவோம் என்று அஇஅதிமுக தலைமை வாக்குறுதி அளித்தது. தற்போது மக்களைப் பார்த்து கவலைப்பட வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் தமிழக முதலமைச்சர்.தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அஇஅதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இந்த அவல நிலைக்குக் காரணம் என்பதோடு, மத்திய ஆட்சியாளர்களின் பங்கையும் குறைத்து மதிப்பிட முடியாது. காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் கடைப்பிடிக்கும் பொருளாதாரக் கொள்கைகள் மின்னுற்பத்தியைக் கடுமையாகப் பாதித்துள்ளது. அனைத்து மக்களுக்கும் மின்சாரம் வழங்க தனியார் மின்னுற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும் என்று அதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தனர். காங்கிரஸ், பாஜக, திமுக, அஇஅதிமுக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகளும் கைகளைத் தூக்கி ஆதரவளித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகள் மட்டுமே இதைக் கடுமையான எதிர்த்தன. தனியார்மயக் கொள்கை மக்களுக்குப் பலன் அளிக்கவில்லை. ஏற்கெனவே மின்னுற்பத்தி நடந்துவரும் மின்வாரிய மின்நிலையங்களின் ஆயுளும் முடிந்து கொண்டிருக்கிறது. தனியார் நிறுவனங்களுக்கு ஒரு யூனிட் மின்சாரத்திற்கு கூடுதலாக வாரி வழங்கத் தயாராக இருக்கும் அரசுகள் மின்வாரியத்திற்கு வழங்கினால், நட்டத்தில் ஓடுவதாக சொல்லப்படும் மின்வாரியம் அபாரமாக தனது பணியைச் செய்யத் துவங்கிவிடும். தனியார் நிறுவனங்களுக்கு அவசியமே இருக்காது.
                “உழுகிற நாளில் ஊருக்குப் போய்விட்டு, அறுக்கிற நாளில் அரிவாளோடு வந்து என்ன பயன்“ என்றொரு சொல்வடைதான் நினைவுக்கு வருகிறது. நீண்டகாலத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கையில் அதுபற்றித் திட்டமிடாமலேயே அஇஅதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இருந்துவிட்டு தற்போது அரசியல் லாவணி செய்வதில் கவனம் செலுத்துகின்றன. இந்த கடுமையான பாதிப்பு உருவாவதற்குக் காரணமான கொள்கைகளை நடைமுறைப்படுத்திய காங்கிரஸ் மற்றும் பாஜக, அதற்கு ஆதரவாக கை தூக்கிய மதிமுக, பாமக ஆகிய கட்சிகளும் மின்வெட்டிற்கான உண்மையான காரணத்தைச் சொல்லாமல் தட்டிக் கழிக்கின்றன.
              இந்த நாசகரக் கொள்கைகளைத்தான் பாஜகவும் பின்பற்றுகிறது. அதனுடன் அணி சேர்ந்துள்ள தேமுதிக தலைமை இதுபற்றி மூச்சுவிடுவதில்லை. வருகிற தேர்தலில் இந்த வெற்று லாவணிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து பிரச்சனைகளைத் தீர்க்க மாற்றுக் கொள்கைகளோடு வரும் இடதுசாரிக்கட்சி வேட்பாளர்களுக்கு மக்கள் ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

சனி, 29 மார்ச், 2014

வாரணாசியில் மோடி - பின்னணி என்ன...?


  கட்டுரையாளர் :  பிரகாஷ் காரத்                    
                                பொதுச்செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி                                   
       மக்களவைத்தேர்தலில் நரேந்திர மோடி வாரணாசியிலிருந்து போட்டியிடுகிறார். அச்சுறுத்தலுடன் கூடிய அரசியல் செய்தியை தருவதாகவே இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. தீவிரமான இந்துத்துவா கொள்கையே தேர்தல் பிரச்சாரத்தின் உள்ளடக்கமாக இருக்கும் என்ற சமிக்ஞையை பாஜக-வும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் தருகின்றன. வாரணாசியிலிருந்து மோடி போட்டியிடுவதன் நோக்கம் பற்றி அதிகாரப்பூர்வமாக பாஜக எதுவும் கூறாத போதும், வாரணாசியிலிருந்து மோடி போட்டியிடுவதால் மக்களவைத்தேர்தல்களில் உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப்பகுதியிலும், அதனை ஒட்டியுள்ள பீகார் மாநிலத்தின் பகுதிகளிலும் அக்கட்சிக்கு பலன் கிடைத்திடும் என ஊடகத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், உண்மையான காரணம் மூடி மறைக்கப்படுகிறது.
                20 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி மதவாத இந்துத்துவாவின் அதிர்ஷ்ட நாயகனாக எல்.கே.அத்வானி முன்னிறுத்தப்பட்டாரோ, அதுபோல தற்போது அதனுடைய புதிய அதிர்ஷ்ட நாயகனாக மோடி முன்னிறுத்தப்படுகிறார். வாரணாசியிலிருந்து மோடி போட்டியிடுவது என்பது, அந்த புனிதமான நகரத்தின் ஆன்மீகத் தன்மை குறித்தும், அங்கு எவ்வாறு இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களின் பொருளாதாரம் பின்னிப் பிணைந்திருக்கிறது - இஸ்லாமிய நெசவாளர்களால் தயாரிக்கப்பட்ட பனாரஸ் பட்டுப் புடவைகள் இந்து வர்த்தகர்களால் வியாபாரம் செய்யப்படுகிறது, பிரபல ஷெனாய் கலைஞரான பிஸ்மில்லாகான் மதநல்லிணக்கத்தின் அடையாளமாக இருந்தார் -என்றெல்லாம் கார்ப்பரேட் ஊடகத்தை தேனொழுகப் பேச வைத்துள்ளது. இத்தகையதொரு சூழலை முன்னெடுத்துச் சொல்கிற வாரிசுதாரராக பரம்பரை சொத்தை அடைபவராக மோடியை முன்னிறுத்தும் முயற்சியே இது ஆகும்.

மோடி - இந்துத்துவாவின் அதிர்ஷ்ட நாயகன்              

              உண்மையில் சொல்லப்போனால், நிச்சயமாக அப்படி எதுவுமில்லை. இரண்டாவதாக குஜராத்தின் மற்றொரு இடத்திலிருந்து போட்டியிடுவதுடன், வாரணாசியிலிருந்தும் மோடி தேர்தலில் போட்டியிடுவது என்பதில் மிகவும் அச்சுறுத்தக்கூடிய மற்றும் கூடுதல் அபாயகரமான சங்கேத குறியீடும் அடங்கியுள்ளது. மதவாதத்தின் வரலாறும், வன்முறையை தூண்டுவதற்கான அதன் அடாவடியான முயற்சிகளும், உத்தரப்பிரதேசம் மதரீதியாகப் பிளவுபட்டபோது அதில் முக்கிய இலக்காக வாரணாசி இருந்தது என்பதெல்லாம் வேண்டுமென்றே மேலோட்டமாகப் பார்க்கப்படுகிறது அல்லது பார்வையிலிருந்து மறைக்கப்படுகிறது. 23 ஆண்டுகளுக்கு முன்பு, 10-ஆவது மக்களவைக்கான தேர்தல் நடைபெற்றபொழுது, 1991ம் ஆண்டில் என்ன நடந்தது என்பதனை திரும்பிப் பார்த்திட வேண்டும்.
                1990ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆர்எஸ்எஸ்-சும் பாஜக-வும் சேர்ந்து அத்வானியின் ரதயாத்திரையை துவக்கின. அக்டோபர் மாதத்தில் அத்வானியின் ரதயாத்திரை நிறுத்தப்பட்டு, அவர் பீகாரில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து நாட்டின் பல பகுதிகளில் வெடித்த மத மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஆர்எஸ்எஸ்-விஎச்பி தலைமையில் நடத்தப்பட்ட ராமர் கோவில் இயக்கத்தின் இலக்காக இருந்த பாபர் மசூதி அமைந்துள்ள அயோத்தி, உத்தரப்பிரதேசத்தில் கலவரத்தின் மையப்புள்ளியாக இருந்தது. அயோத்தியில் பாபர் மசூதி, வாரணாசியில் க்யான்வாபி மசூதி மற்றும் மதுராவில் ஈத்கா ஆகிய மூன்று இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ள இடங்கள் இந்துக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென விஷ்வ இந்து பரிஷத் கூக்குரல் எழுப்பியது. அயோத்தியில் ராமர் கோவில், காசியில் சிவன் கோவில் மற்றும் மதுராவில் கிருஷ்ணர் கோவில் ஆகியன கட்டப்பட்டுள்ளன. 

வாரணாசி - வகுப்புவாத வன்முறைக்கான இலக்கு                   

                இவ்வாறாக, வாரணாசி நகரம் இந்துத்துவா வகுப்புவாத சக்திகளின் முக்கிய இலக்கானது. அதுவரை வாரணாசி நகரமானது வகுப்புவாத சக்திகளின் செல்வாக்கிற்கு அப்பாற்பட்டதாக இருந்தது. வாரணாசி நகரத்திலும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளிலும் மதச்சார்பற்ற அரசியல் சக்திகளே செல்வாக்கினைப் பெற்றிருந்தன. எனினும், ராமஜென்மபூமி இயக்கத்தின் ஒரு பகுதியாக ஆர்எஸ்எஸ் அமைப்பு தனது ஷிலபூஜன் யாத்திரையை துவங்கிய பின்பு இந்நிலைமை மாறிப் போனது. 1989ல் இந்நகரத்தில் முதன்முறையாக மதமோதல் ஏற்பட்டது. நவம்பர் 1991ல் அடுத்த கட்ட மதக்கல வரம் நடைபெற்றது. நவம்பர் 8ம் தேதி நடை பெற்ற சம்பவத்தில் ஒரு மதத்தினைச் சார்ந்தமக்கள் கொல்லப்பட்டனர், இதற்கு பழி வாங்கும் விதமாக நவம்பர் 13 அன்று மீண்டும் படுகொலைகள் நிகழ்ந்தன.
              இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியான மதன்புராவில் காவல் துறை நுழைந்து, அங்கு வசித்து வந்த பிரபல மருத்துவரான டாக்டர் அனீஸ் என்பவரை வெளியே இழுத்து வந்து அவரை அடித்துநொறுக்கியது. பின்னர் காவல் துறையின் பாதுகாப்பில் இருந்தபோது அவர் உயிரிழந்தார். இந்தவன்முறை சம்பவத்தின்போது கிட்டத்தட்ட 50 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதியன்று பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நடைபெற்றதற்கு பிறகு வந்த ஆண்டில் இந்நகரத்தில் மக்கள் மதரீதியாக பிளவுபடுவது உச்சகட்டத்தினை எட்டியது. விஎச்பி மற்றும் பஜ்ரங்தள் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் பாபர்மசூதி இடிப்பு சம்பவம் நடைபெற்றதனையடுத்து தொடர்ச்சியாக வன்முறையில் ஈடுபட்டனர். “ஹர ஹர மகாதேவ”, “அல்லாஹு அக்பர்” ஆகிய முழக் கங்களின் பின் இரு மதத்தை சார்ந்தவர்களும் அணிதிரள்வது அதிகரித்தது. வாரணாசி நகரமானது இந்துத்துவா சக்திகளின் கொத்தளமாக மாறிப்போனது.

களத்தில் சிபிஎம்            

                 அடுத்து வந்த அனைத்து மக்களவைத் தேர்தல்களிலும், வாரணாசி தொகுதியில் பாஜக வெற்றி பெற்றது. 2004ம் ஆண்டு மட்டும் காங்கிரஸ் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மதரீதியான பிளவு மக்கள் மத்தியிலே அதி கரித்து வந்த பின்னணியில் 1991, 1996 மற்றும் 1998 ஆகிய ஆண்டுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலில் பாஜகவிற்கு எதிராக போட்டியிட்டது. 1991ல் ஜனதா தள கட்சியின் ஆதரவுடனும், பின்னர் சமாஜ்வாதி கட்சியின் ஆதரவுடனும் தேர்தலில் போட்டியிட்டு, நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் இரண்டாவது இடத்தைப் பெற்றது. அனைத்து சந்தர்ப்பங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது வாரணாசி தொகுதியின் கிராமப்புற பகுதிகளில் கணிசமான வாக்குகளைப் பெற்றது. அதே நேரத்தில் நகர்ப்புற பகுதிகளில் பாஜக பெரும்பாலான வாக்கு களைப் பெற்றது.
                    1996 மற்றும் 1998-99 ஆகிய கால கட்டத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜகபெற்ற செல்வாக்கினை அதனால் தக்க வைத்துக் கொள்ள இயலவில்லை. 2004 மற்றும் 2009 மக்களவைத் தேர்தல்களில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் 80 தொகுதிகளில் வெறும்10ல் மட்டுமே பாஜகவால் வெற்றி பெற முடிந் தது. இழந்த செல்வாக்கினை மீண்டும் பெறு வது என்பது பாஜகவிற்கும், அதன் பிரதம மந்திரி வேட்பாளாரான நரேந்திர மோடிக்கும் மிக முக்கியமான ஒன்றாகும். 16வது மக்களவைக்கான தேர்தல்களை மனதில் கொண்டு, ஆர்எஸ்எஸ்-பாஜகஆகியன உத்தரப்பிரதேசத்தில் மதரீதியான பிளவை உண்டாக்குகிற சூழலை ஏற்படுத் திடுவதுடன், திட்டமிட்டு மதரீதியிலான பதற்றத்தை உருவாக்கிடவும் நீண்ட காலதிட்டத்தை செயல்படுத்தின. மோடியின் முக் கிய தளபதியான அமித் ஷா உத்தரப்பிரதேச மாநில பாஜகவின் பொறுப்பாளராக ஆக்கப்பட்டார். 

உத்தரப்பிரதேசத்தில் மதமோதலுக்கான வரைபடம்                

                    2012 பிப்ரவரியில் நடைபெற்ற தேர்தல்களில் சமாஜ்வாதி கட்சி அபார வெற்றி பெற்று அரசினை அமைத்த பிறகு இந்த வரைபடம் செயல்படுத்தப்பட துவங்கப்பட்டது. சமாஜ்வாதி கட்சி இஸ்லாமியர்களுக்கு ஆதரவான கட்சி என்கிற மிக மோசமான மதரீதியிலான பொய்ப்பிரச்சாரத்தை ஆர்எஸ்எஸ்சும் அதன் பரிவாரங்களும் முழுமூச்சாக கட்டவிழ்த்து விட்டன. பசுக்கள் இஸ்லாமியர்களால் உணவுக்காக கொல்லப்படுவதாகவும், இஸ்லாமிய இளைஞர்கள் இந்துப் பெண்களை ஆசை காட்டி ஏமாற்றுவதாகவும் மற்றும் இதர மதஉணர்வை தூண்டக் கூடிய பிரச்சனைகள் திட்டமிட்டு எழுப்பப்பட்டன.
                  கோசிகலன்பகுதியில் முதல் முறையாக மதமோதல் நடைபெற்றபோது, சிறுபான்மை இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலில் கிராமப்புற பகுதிகளைச் சார்ந்த மக்கள் ஈடுபடுத்தப்பட்டது கவலையளிப்பதாக இருந்தது. அடுத்து வந்த இரண்டாண்டு காலத்தில், பிரதாப்கர், பரேய்லி, சஹரன்பூர், பைசாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாநிலம் முழுவதிலும் அதிக எண்ணிக்கையிலான மதமோதல் நிகழ்வுகள் அரங்கேறின. பைசாபாத்தின் நகர்ப்புற பகுதியில் மோதல் நிகழ்வுகள் நடைபெற்ற பிறகு, அம்மாவட்டத்தின் இதர கிராமப்புற பகுதிகளிலும் மோதல்களை தூண்டிவிடுவதற்கான முயற்சிகளும் அதே சமயத்தில் மேற்கொள்ளப்பட்டன. இறுதியாக செப்டம்பர் 2013ல் முசாபர்நகர் மதக்கலவரம் நடைபெற்றது.
                பல நூறாண்டுகளாக ஜாட் பிரிவு மக்களும் இஸ்லாமியர்களும் ஒன்றாக வசித்து வந்த கிராமங்களில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள், கிராமப்புற மக்களை மதரீதியாக அணிதிரட்டுவதில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் வெற்றி பெற்றுள்ளதையே வெளிப்படுத்தின. அதுவரை உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற மதமோதல் நிகழ்வுகள் எல்லாம் நகர்ப்புற பகுதிகளையே மையமாகக் கொண்டு நடைபெற்று வந்தன. 2011 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற மதரீதியிலான வன்முறைகள் என்பன, 1990 களின் துவக்க ஆண்டுகளில் நடைபெற்ற அதிர்ச்சியில் உறையச் செய்த மதமோதல் நிகழ்வுகளுக்குப் பிறகு மாநிலம் முழுவதிலுமாக முதன்முறையாக நடைபெற்ற மோதல் நிகழ்வாகும். இப்படித்தான் மோடியின் நுழைவிற்கான சூழல் ஏற்படுத்தப்பட்டது. 2013ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதியன்று மோடிவாரணாசியில் பேரணி ஒன்றை நடத்தினார். கூட்டமேடையின் பின்னணியில் சிவபெருமானின் மிகப்பெரிய உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது.
          சோமநாதரின் மண்ணிலிருந்து பாபா விஷ்வநாத்தின் பூமிக்கு வந்திருப்பதாக அக்கூட்டத்தில் மோடி பேசினார். சோமநாத்திலிருந்துதான் மோடி தனது ரதயாத்திரையைத் துவக்கினார். “ஹர ஹர மகாதேவ்” என்கிற மதரீதியான மந்திரத்தைப் போல் “ஹர ஹர மோடி” என்ற மந்திரத்தை பாஜக தொண்டர்கள் உச்சாடனம் செய்தனர். இவர்களது இந்த நடவடிக்கையானது, அந்நகரத்தில் வசித்துவரும் இஸ்லாமியர்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு 1992ல் இந்துத்துவா வெறியர்கள் உச்சாடனம் செய்த முழக்கங்களை நினைவுபடுத்துவதாக இருந்தது. 

மிகப்பெரிய யுத்தம்                   

                    வாரணாசியில் இருந்து பாஜகவின் வேட்பாளரான மோடி தேர்தலில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது, உத்தரப்பிரதேசத்தில் அரங்கேற்றிட வேண்டிய நாடகத்திற்கு சங்பரிவார் எழுதிய கதை வசனத்தின் ஒரு பகுதியே ஆகும். இது பீகாருக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவர்களது இந்துத்துவா நிகழ்ச்சி நிரலானது உத்தரப்பிரதேச மாநில மக்களை கடந்த 15 ஆண்டுகளாக உற்சாகப்படுத்திடவில்லை என்பது உண்மை யாகும். இந்த உண்மையின் பின்னணியில், இந்துத்துவா நிகழ்ச்சி நிரல் குறித்து வெளிப்படையான பிரச்சாரம் எதுவும் இருக்காது என்றபோதும், அதே அரசியல் ரீதியிலான செய்தி ஒளிவுமறைவாகவும், இரகசியமாகவும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. ராமர் கோவிலுக்கான தீவிரமான இந்துத்துவா பிரச்சாரம் முன்னெடுத்துச் செல்லப்பட்டபோது பார்க்கப்பட்ட பழைய முகங்கள் எல்லாம் இன்று இவர்களுக்கிடையேயான சண்டை சச்சரவுகளில் பின்னுக்குப் போயுள்ளனர். மீண்டும் பாஜகவில் இணைந்துள்ள கல்யாண் சிங் தனது மகனை வேட் பாளராக நிறுத்தியுள்ளார்.
              உமா பாரதியும், சாக்ஷி மஹராஜூம் கூட இம்மாநிலத்திலிருந்து தேர்தல்களில் போட்டியிடுகின்றனர். “இந்து தேசியவாதி” என தன்னைத் தானே பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் மோடிதான் இந்த யுத்தத்தினை நடத்திட இவர்களால் தேர்வு செய்யப்பட்ட நபர் ஆவார். எனவே, இது ஏதோ வாரணாசியில் மோடிக்கு எதிராக நடைபெறும் போராட்டம் மட்டுமல்ல. இந்திய நாட்டின் மிகப்பெரிய மாநிலத்திலும், நாடு முழுவதிலும் மீண்டும் தங்களது ஆதிக்கத்தை ஏற்படுத்திட முயலும் ஒட்டுமொத்த இந்துத்துவா சக்திகளுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டமாகும். வாரணாசி தொகுதியில் போட்டியிடும் மோடிக்கு எதிராக பல்வேறு கட்சிகள் தங்களது வேட்பாளர்களை களத்தில் இறக்கிடும். இதில் சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ் மற்றும் முக்தர் அன்சாரியின் குவாமி ஏக்தா தள் ஆகிய கட்சிகளும் அடங்கும். 2009ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளாராகப் போட்டியிட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்த அன்சாரி, மாபியா கும்பலை நடத்தி வருபவர். தற்போது இவர் சிறையில் இருக்கிறார். இத்தகையதொரு சூழலில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.
             இந்தத் தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது வேட்பாளரின் பெயரை ஒரு மாதத்திற்கு முன்பே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. ஒரு வலுவான பொதுவான காங்கிரசல்லாத மதச்சார்பற்ற வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்திடுவதற்கான இசைவு ஏற்பட்டிருக்குமேயானால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது தேர்தல் களத்திலிருந்து தனது வேட்பாளரை திரும்பப் பெற்றிருக்கும். அத்தகையதொரு கூட்டு மேடை என்பது இல்லாத சூழலில், வாரணாசி தொகுதியில் இடதுசாரிக்கட்சியின் போட்டியிடுவதும், ஆர்எஸ்எஸ்-பாஜகவின் சதித்திட்டத்தை அம்பலப்படுத்திடு வதற்கான அரசியல் பிரச்சாரத்தை வலுவான முறையில் நடத்திடுவதும் அவசியமாகும்.
தமிழில் : எம்.கிரிஜா               

சனி, 22 பிப்ரவரி, 2014

தினமலர் ஏன் நாறுகிறது...?

           
           ''சோவியத் யூனியன்'' என்று பெரிய தலைப்பிட்டு நியாயமான விலையிலான உணவகம், மருந்தகம், திரையரங்கம் போன்றவற்றை உருவாக்கும் தமிழக அரசின் நடவடிக்கைகளை தினமலர் (பிப்ரவரி 20) விமர்சித்துள்ளது. கருத்துப்படம் ஒன்றையும் போட்டு, ஒரு தொழிலாளி (அதுவும் சிகப்பு சட்டையோடு...!!) வயிறு முட்ட சாப்பிடுகிறாராம். மினி பஸ்சில் ஏறுகிறார்... குவார்ட்டர் ஊற்றுகிறார்... தியேட்டரில் சினிமா... அதுவும் பலான படமாம்.. பின்னர் தலை கிறுகிறுத்து, வாரச்சந்தையில் வாந்தி எடுக்கிறார்... மருந்தகத்தில் மருந்து வாங்குகிறார்... என்பதாக அந்த கருத்துப்படம் உள்ளது. அதாவது, தொழிலாளி வேலையே செய்யாமல் தினமும் இப்படி தான் உலாவும்படியான நிலைமை உருவாகிவிட்டது என்று தினமலர் ஆவேசப்படுகிறது.
                    தமிழ்நாட்டில் வலை போட்டுத் தேடினாலும் அப்படி ஒரு தொழிலாளி இருக்க முடியாது என்பது ஒருபுறம் இருக்க, இவர்கள் சொல்வது போன்ற அன்றாட நடவடிக்கைகள் யாருக்காவது இருக்க முடியுமா என்றால் நாட்டிலுள்ள பெருநிறுவனங்களின் முதலாளிகள் பெரும்பாலானோரின் அன்றாட வாழ்க்கையே இப்படித்தான் இருக்கும். இருக்கிறது. அதை யாராலும் மறுக்கமுடியாது. தன் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காத - அரசாங்கத்திற்கு வரி கட்டாமல் ஏய்க்கின்ற - வங்கியில் வாங்கிய கோடிக்கணக்கான கடனை திருப்பிக் கட்டாமல் வராக்கடனில் சேர்த்த இந்திய பெருமுதலாளி விஜய் மல்லையா அண்மையில் மிக தைரியமாக 14 கோடி ரூபாய்க்கு ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரரை ஏலத்துக்கு எடுக்க முடிகிறது. இதில் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு வேறு. இதற்கு தினமலர் ஏன் சிறப்பு தலைப்பிடவில்லை..?? இதை ஏன் தினமலர் விமர்சனம் செய்யவில்லை....?
               திரையரங்கம் என்றால் அதில் திரையிடப்படுவது ''பலானப்படமாகத்'' தான் இருக்கவேண்டுமா...? ஏன் பலான படம் தான் தினமலர் நினைவுக்கு வருகிறது...? சாதாரணக் கட்டணம் என்றால் அப்படிப்பட்ட படம்தான் போட வேண்டும் என்று தினமலர் சொல்ல வருகிறதா அல்லது சகவாச தோஷமா...? ஏனென்றால் பாஜகவினருக்கு மிகவும் பிடித்தமான படங்கள் ''பலானப்படங்கள்'' தான் என்பதை நாடே அறியும். கர்நாடகம்  மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்திலேயே பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அவை நடைபெற்றுக்கொண்டிருந்த போதே  அமர்ந்து பார்த்த பலான படத்தை நாடே பார்த்ததே.       
             அதுமட்டுமல்லாமல் சோவியத் யூனியனில் அனைத்தும் மலிவு விலையில் வழங்கப்பட்டதால், உற்பத்திப்பணி அங்கு நடைபெறவில்லை என்பது போன்று தினமலர் அரற்றுகிறது. உற்பத்தியில் பெரும் சாதனையைப் படைத்தது சோவியத் யூனியன் என்பதை முதலாளித்துவ ஆதரவாளர்கள் கூட ஒப்புக் கொள்வார்கள். அதன் சாதனைகள் என்ன என்பதைப் பட்டியலிட்டால், நீண்டுகொண்டே போகும். ஆனால், சோவியத் யூனியனின் பொருளாதார நிலைமை கெட்டுப் போய்விட்டதாகச் சொல்லப்படும் அதன் இறுதிக்காலத்தில் இருந்த பலத்தைக் கூட இன்னும் முதலாளித்துவ ரஷ்யாவால் அடையமுடியவில்லை. சோவியத் யூனியன் காணாத வறுமை, பட்டினி, சுகாதாரமின்மை, கல்வியின்மை போன்றவை தற்போதைய ரஷ்யாவில் பெருகிக் கிடக்கின்றன.
          இது ஒருபுறம், இருக்கட்டும். சென்னையில் உள்ள பல பன்னாட்டு கணினி நிறுவனங்களில் காலையில் விரைவில் வருபவர்களுக்கு மலிவு விலையில் சிற்றுண்டி, இரவு வரை இருந்து வேலை செய்பவர்களுக்கு மலிவு விலை உணவு என்றெல்லாம் தந்து, 13, 14 மணிநேரம் வேலை வாங்கிக் கொண்டிருக்கும் நிலைமை உள்ளதே... இதைக் கண்டித்து தினமலர் ஏன் தலைப்புச் செய்தி எழுதவில்லை...?? சாதாரண மக்களுக்கு பலன் தரப்போகும் வாரச்சந்தையைப் பார்த்து வாந்தி எடுக்கும் கருத்துப்படம் போடும் தினமலர், கல்வி மற்றும் மருத்துவத்தில் மிகப்பெரிய வியாபாரச் சந்தையாக தமிழகம் உருவெடுத்துள்ளதை ஏன் கண்டுகொள்ள மாட்டேனென்கிறது...?
             இது எத்தகைய உற்பத்தியை உருவாக்கியுள்ளது என்று பட்டியல் போட்டிருக்கலாமே..? ராகுல்காந்தியா அல்லது மோடியா என்ற விளம்பரப்படம் போணியாகாமல் போய்விடுமோ என்ற கவலை நாடு முழுவதுமுள்ள பெரும் பணக்காரர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதால் தினமலரிடமிருந்தும் முனகல் ஒலி கேட்கிறது. சிறப்புநிருபர் செய்தி, வாசகர் கடிதம் என்று அதிமுக-பாஜக கூட்டணி அமைய வேண்டுமென்று தினமலர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியுற்றதும் சேர்ந்து கொண்டதால் முனகல் ஒலி கூடுதலாகக் கேட்கிறது. அதனால் தான் தினமலர் நாறுகிறதோ....?
நன்றி :