விவசாயிகள் தற்கொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விவசாயிகள் தற்கொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

இத்தனைக் காலம் ''குட்டித்தலைவர்'' ராகுல் எங்கே போயிருந்தார்...?

       
         “நாம் சாதாரண மனிதர்களின் முன்னேற்றம் குறித்து, குறிப்பாக விவசாயிகளின் முன்னேற்றம் குறித்து யோசிக்கிறோம். இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ நாம் உறுதி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு விவசாயத்தில் ஈடுபடும் வாய்ப்பினை காங்கிரஸ் வழங்குகிறது. ஆனால், பாஜக விவசாயத்தில் ஈடுபட அவர்களை கட்டாயப்படுத்துகிறது” என்று விவசாயிகளின் மீது தங்களுக்கு அக்கறை இருப்பது போல் காங்கிரஸ் கட்சியின் ''குட்டித்தலைவர்'' ராகுல்காந்தி அண்மையில் உருக்கமாக பேசியிருக்கிறார். விவசாயிகளுக்காக இவ்வளவு தூரம் உருகிப் பேசும் ''குட்டித்தலைவர்'' நடந்து முடிந்த 15-ஆவது நாடாளுமன்றத்தில் ஒரு கூட்டத் தொடரில் கூட -  ஒருமுறைகூட விவசாயிகள் குறித்து இவ்வளவு உருக்கமாக வாய் திறந்து பேசியது இல்லையே.  எந்த பிரச்சனைகளைப் பற்றியும் இவர் பேசியது இல்லை. முதலில் இவர் பாராளுமன்றக் கூட்டங்களுக்கு வந்தா தானே...? இவர் தான் 15-ஆவது பாராளுமன்றத்தில் எல்லோரையும் விட மிகக்குறைவான கூட்டங்களில் கலந்துகொண்ட ''பெருமைமிகு'' எம்.பி. ஆவார். அந்த அளவிற்கு மக்களின் மீதும் விவசாயிகளின் மீதும் அவ்வளவு அக்கறை. இப்படிப்பட்டவர் தான் இன்றைக்கு விவசாயிகளைப் பற்றி இவ்வளவு உருக்கமாக பேசுகிறார். இன்றைக்கு இவரு மட்டுமல்ல, இன்னொரு பக்கம் பாஜகவின் ''பிரதமர் கனவு வேட்பாளர்'' ஊர் ஊராகத் திரியும் நரேந்திர மோடியும் கூட விவசாயிகள் குறித்து இன்றைக்கு கண்ணீர் வடிக்கின்றார். 
           ஆனால் உண்மையில் அந்த இரு கட்சிகளுமே அமெரிக்கா சார்ந்த கொள்கையைக் கொண்டு இந்தியாவின் கோடானுகோடி விவசாயிகளையும்,  விவசாயத்தையும் வஞ்சித்தவர்களே என்பதை நாடு அறியும். பிரதமர் மன்மோகன் சிங் ஒருமுறை விவசாயிகள் விவசாயத்தைவிட்டு வெளியேற வேண்டும்; அவர்கள் தொழில் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் துணிச்சலாக கூறினார். இதன் பொருள் என்ன...?  இனிமேல் இந்தியாவில் சிறுகுறு விவசாயிகளுக்கு இடம் இல்லை. விவசாயத்தையும் சேர்த்து பன்னாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு பெருமுதலாளிகளும் பார்த்துக் கொள்வார்கள். விவசாயிகள் இனிமேல் கிராமங்களை விட்டு வெளியேறி நகரங்களில் கூலிகளாக பிழைத்துக் கொள்ளட்டும் என்பது தான் பிரதமர் பேசியதன் பொருள் என்பதைக் கூட விவசாயிகள்  இதுவரை புரிந்துகொள்ளவில்லை. புரிந்திருந்தால் அப்போதே ராகுல் காந்தியை நாக்கை பிடுங்குகிற மாதிரி கேள்வி கேட்டிருப்பார்களே...? காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் இந்தியாவில் அதிர்ச்சி தரும் அளவிற்கு விவசாயிகளின்  தற்கொலை எண்ணிக்கை அதிகரித்தது என்பதை ராகுல் வேண்டுமானால் வசதியாக மறந்திருக்கலாம். ஆனால் விவசாயிகள் அதை மறந்திருக்கமாட்டார்கள். 
            இன்றைக்கு விவசாயிகள் மத்தியில் சென்று பேசும் ராகுல்காந்தி, விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதற்கான சூழலை மாற்ற ஒருபோதும் முயற்சித்ததில்லை. அந்த விவசாயிகள் விதியினால் சாகவில்லை ராகுல் காந்தியும், காங்கிரஸ் தலைமையிலான அரசும் செய்த சதியினால் தான் செத்து மடிந்தார்கள்.  பன்னாட்டு நிறுவனங்களின் விதைகளை இவர்கள் அனுமதித்ததால் தான் அதைப் பயிரிட்டு நஷ்டமடைந்த விவசாயிகள் வாழ வழியின்றி உயிர் விட்டனர். மேலும் உரத்திற்கான  மானியம் இவர்கள் ஆட்சிக்காலத்தில் தான் தொடர்ந்து வெட்டப்பட்டது. விளைபொருள்களுக்கும்  கட்டுபடியான விலை கொடுக்கப்படவில்லை. ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் மோசடி வர்த்தகத்தை காங்கிரஸ் கூட்டணி அரசு அனுமதித்ததாலும் நஷ்டப்பட்டது விவசாயிகள் தான். காங்கிரஸ் கட்சியின் இப்படிப்பட்ட விவசாயிகள் விரோத நடவடிக்கைகளை மக்களும், விவசாயிகளும் கண்டிப்பாக மறந்திருக்க மாட்டார்கள்.
        இன்றைக்கு விவசாயிகளுக்கு முற்றிலும் விரோதமான கட்சியாகவே காங்கிரஸ் கட்சி உள்ளது என்பதை ராகுல் காந்தி உணரவேண்டும்.  ஆனால் இந்த ''குட்டித்தலைவர்'' ராகுல்காந்தி ஏதோ இப்போதுதான் விண்ணுலகிலிருந்து மண்ணுலகிற்கு இறங்கி வந்தவர் போலவும், நாட்டில் இதுவரை நடந்தது எதுவுமே தனக்கு  தெரியாதது போலவும் இன்றைக்கு பேசுகிறார். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச நிவாரணம் அளிக்க வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கொடுத்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த மன்மோகன் சிங் அரசு கடைசிவரை மறுத்தே வந்துள்ளது என்பதை மறைத்து - மறந்து , விவசாயிகளுக்கான விளைபொருளை கொண்டு செல்வதற்கான பிரத்யேக வழியை உருவாக்க உறுதி பூண்டுள்ளதாகவும் ராகுல் காந்தி விவசாயிகளிடம் அளந்துள்ளார். ஆனால் விவசாயிகளின் இறுதியாத்திரைக்கு வழி அமைத்த அரசு தான் இவருடைய அரசு என்பதை நாடு மறந்துவிடவில்லை.

செவ்வாய், 14 ஜனவரி, 2014

உழவர்களை இனி எங்கே எப்போது காண்போம்...?









உழவர்களே...
நீங்கள் எங்கே எங்கே 
தேடுகிறேன்...
உழவுக்கும் தொழிலுக்கும் 
வந்தனை செய்வோம் 
என்றான் பாரதி.
ஆனால் இன்று
உழவு தொழில் 
எங்கே போனது...?
உண்மையான 
இராணுவம் என்பது 
கிராமத்திலிருக்கும் 
விவசாயிகளும் 
தொழிற்சாலைகளில் 
வேலை செய்யும் 
தொழிலாளிகளும் தான் 
என்றான் பகத்சிங்.
ஆனால் இன்று 
விவசாயத் தொழிலாளர்கள் 
எங்கே போனார்கள்...?
தேடுகிறேன் 
எங்கே எங்கே 
என்று தேடுகிறேன்.
மக்கள் தொகைக் 
கணக்கெடுப்பிலும்
கிராமப்புறத்து 
விவசாயிகளை காணவில்லை. 
கேடுகெட்ட 
மத்திய அரசின் 
தாராளமயக் கொள்கையினால் 
இருபது ஆண்டுகளில் 
தற்கொலையில்  
மாண்டு போனவர்கள் 
மூன்றரை இலட்சமாம்.
ஏனென்று கேட்டால் 
கடன் தொல்லையாம். 
விவசாயிகள் 
என்ற பெயரில் 
''போலி விவசாயிகள்''
மூன்று பேர் 
அம்பானி சகோதரர்களும், 
அமிதாப்பச்சனும்
வங்கியில் 
கோடிக்கணக்கில் 
விவசாயக் கடன் வாங்கினார்களே 
இவர்கள் 
தங்கள் உயிரை 
மாய்த்துக் கொள்ளவில்லை.
கோடி கோடியாய் 
கடன் வாங்கிய 
மல்லையாவும் 
மாண்டுபொகவில்லை.
சில ஆயிரம் மட்டும் 
கடனாய் வாங்கிய 
சிறு விவசாயிகள் 
தன்மானம் காக்க 
மாண்டுபோயினர்..!
எஞ்சிய விவசாயிகளும் 
உழவைக் கை விட்டு 
மாற்று வேலை தேடி
நகரம் நோக்கி 
குடிபெயர்ந்தனர்.
இங்கே வந்தவர்கள் 
மட்டுமென்ன 
விவசாயமா செய்கிறார்கள்....?
நெல்மணியை அள்ளித்தந்த
என்னருமை விவசாயிகள்
எங்கள் நகரச் சாலைகளில்  
இரவு நேரத்தில் 
குப்பைகளை அள்ளும் 
துப்புரவு பணியை அல்லவா 
செய்கிறார்கள்...!
என்ன கொடுமை இது
நிலத்தில் உழுதவர்கள் 
இன்றோ 
சாலையில் அல்லவா 
உழலுகிறார்கள்...!
அதனால் தான் 
கிராமத்தில்  இன்று 
விவசாயிகளை காணவில்லை....!
உயிர்த்துடிப்பாய் 
இருந்த பசுமையான 
விளைநிலமும் காணவில்லை....!
உயிராய் ஓடிக்கொண்டிருந்த 
ஆறுகளையும் காணவில்லை...!
உழவுக்கும் உழவனுக்கும் 
துணை நின்ற 
மாடுகளையும் காணவில்லை...!
இது தான் இன்றைய 
பரிதாப இந்திய கிராமம்...!
ஆண்டுக்கொரு முறை 
உழவர்களை நினைவுப்படுத்தும் 
உழவர் திருநாளில்
நான் மனம் ஏங்கித் 
தவிக்கிறேன்....!
என் உயிர் காக்கும் 
உழவர்களை 
இனி எங்கே 
எப்போது காண்பேன்....?   

புதன், 10 ஜூலை, 2013

அமிதாப் - அம்பானிக்கு விவசாயக் கடன்...! - ஏழை விவசாயிக்கு தற்கொலை...!!

           

 பத்திரிக்கையாளர் பி. சாய்நாத் அவர்களின் உரையிலிருந்து....
               இந்தியாவில் புதிய தாராளமயக் கொள்கை அமல்படுத்திய பின்பு விவசாயிகள் தற்கொலை அதிகரித்தது.   குற்ற ஆய்வு கழகம் வழங்கிய புள்ளி விவரப்படி, கடந்த 18 ஆண்டுகளில் 2லட்சத்து 84 ஆயிரத்து 694 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடைசி 9 ஆண்டுகளில் தான் தற்கொலைகள் அதிகமாகியுள்ளன. சத்தீஸ்கர் மாநிலத்தில் மட்டும், 2001-2009 - ஆம் ஆண்டுகளுக்குள் 18ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். சராசரியாக வருடத்திற்கு ஆயிரத்து 800 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.          ஆனால், அந்த மாநில அரசு, விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லையென செய்தி வெளியிட்டது. 2013 ல் 4 பேர் மட்டுமே தற்கொலை செய்து கொண்டதாக அறிவித்தது.
            மேற்குவங்க மாநிலத்தில் கடந்த ஆண்டில் (2012) ஒரு விவசாயி கூட தற்கொலை செய்து கொள்ளவில்லையென மம்தா அரசு தவறான தகவலை கூறியது. உண்மையென்னவெனில் கடந்த 2012 - ஆம் ஆண்டில் மட்டும் 14 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். நாட்டில், கடந்த 9 ஆண்டுகளில் சராசரியாக ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார்.
             1990 வரை விவசாயிகள் தற்கொலை இல்லை. தற்போது 21 -ஆம் நூற்றாண்டில் மட்டும்  ஏன் இந்தக் கொடூரம் நடக்கிறது? 1960-70 காலகட்டத்தில் விவசாயிகளின் எழுச்சிமிக்க, வீரம் செறிந்த மிகப் பெரிய போராட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக நிலத்தை மீட்கும் போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. 1940 - ஆம் ஆண்டில் நடைபெற்ற வீரத் தெலுங்கானா போராட்டத்தால் ஏழை விவசாயிகள் ஏராளமான நிலங்களைப் பெற்றனர். தற்போது விவசாயிகளின் மிகப்பெரிய போராட்டங்கள் நடைபெறுவதில்லை. தற்கொலைச் சாவில் முதல் மாநிலம் மகாராஷ்டிரா. இங்கு, 11.5 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் அதிகமாக உள்ள, வசதி படைத்த மாநிலமாகும். ஆனால், அங்கு மட்டுமே விவசாயிகளின் தற்கொலைச் சாவு அதிகமாக நடைபெறுகிறது. காரணம் என்னவெனில், சமத்துவமான வளர்ச்சி இல்லை.
             பொருட்களை உற்பத்தி செய்யும் மக்களுக்கு சரியாக பணம் கிடைப்பதில்லை. ஒளரங்காபாத் மாவட்டத்தில்  115 வங்கிகள் உள்ளன. ஆனால் இங்கு கடன்கள் பணக்காரர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. இங்குள்ள வணிகக்குழுவில் உள்ள 120 பேர், விலைமதிப்பு மிக்க மெர்சிடெஸ் பென்ஸ் ரகக் கார்களை வங்கியில் கடன் பெற்று வாங்கியுள்ளனர்.  ஆனால், விதர்பா விவசாயிகள் யாருக்குமே வங்கி கணக்கு இல்லை. பிறகு எப்படி அவர்கள் விவசாய கடன் பெற முடியும்?
              பாரத ஸ்டேட் வங்கி, சொகுசுக் கார் வாங்கும் பணக்காரர்களுக்கு 7 சதவீத வட்டியில் கடன் தருகிறது. ஆனால், விவசாயிகள் டிராக்டர் வாங்கினால், 14 சதவீத வட்டி என்கின்றனர். இந்த விவசாயக் கொள்கை யாருக்காக உள்ளது. சிறு,குறு விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கு இல்லை. இதனால் அவர்கள் கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கி விவசாயம் செய்கின்றனர். வாங்கிய கடனை திருப்பிச்செலுத்த முடியாமல் தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர். ‘விவசாயக் கடன்’ வாங்குபவர்கள் எல்லாம் விவசாயிகள் தானா? எனப் பார்க்க வேண்டியுள்ளது. விவசாயக் கடன் யாரிடம் போய்ச் சேர்கிறது? இதனை பேராசிரியர் ராம்குமார் என்பவர் ஆய்வு செய்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை மெட்ரோ வங்கியில் 53 சதவீதம் விவசாயக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
   நகர்ப்புறத்தில் வாழக்கூடிய பணக்காரர்களுக்கு இந்தக் கடன் போய்ச் சேர்ந்துள்ளது. உதாரணமாக நடிகர் அமிதாப்பச்சன் பெயரில் பட்டா உள்ளதால் அவர் விவசாயக் கடன் பெற்றுள்ளார். இதைவிடக் கொடுமை முகேஷ் அம்பானியும் விவசாயக் கடன் பெற்றுள்ளார்.
           வெறும் 43 சதவீதம் மட்டுமே சிறு, குறு விவசாயிகளுக்குக் கடனாக வழங்கப்பட்டுள்ளது. நிதியமைச்சராக பிரணாப் முகர்ஜி போய், ப.சிதம்பரம் வந்தாலும் கொள்கை மாறவில்லை.  இவர்களால் கார்ப்பரேட் நிறுவனங்களே பயனடைந்துள்ளன. முகேஷ் அம்பானி குளிர்பதன கிட்டங்கி அமைக்க வெறும் 4 சதவீத வட்டியில் வங்கி மூலம் விவசாய கடன் பெறமுடியும்.   அவர் விவசாய பொருட்களை அதில் சேமித்து வைக்கிறாராம். ஆனால், ஏழை விவசாயிக்குத் தர மாட்டார்கள். அந்த  விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டாலும், அரசாங்கம் அவர்கள் விவசாயி கிடையாது என அறிவிக்கும்.
         இறந்து போன ஒருவரின் நிலத்தில் அவரது உறவினர்கள், வாரிசுகள் வேலை செய்தால் அவர்கள் விவசாயி கணக்கில் வரமாட்டார்கள். ஏனெனில், இறந்தவரின் பெயரில் பட்டா இருக்காது. இறந்தவரை காவல்துறை கணக்கு எடுக்கும். அப்போது பட்டா இருக்க வேண்டும். அதேபோல், குத்தகை விவசாயி தற்கொலை செய்தாலும் அவர் கணக்கில் வரமாட்டார். பிரபாகர் கட்டாரி என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டார். ஆனால் பட்டா அவரது தந்தை பெயரில் இருந்தது. எனவே, அவருக்கு இழப்பீடு தர முடியாது என மாநில அமைச்சரே அறிவித்தார்.  அதேபோல் 3 ல் 2 பங்கு விவசாயப் பணியில் ஈடுபடும் பெண்கள் அரசாங்கக் கணக்குப்படி விவசாயிகள் கிடையாது.
அப்படியென்றால், விவசாயப் பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றன?
             ஏற்கனவே தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் பட்டியலிலும் பெண்கள் கிடையாது. மழை இல்லாத காரணத்தாலோ, போதிய தண்ணீர் கிடைக்காத காரணத்தாலோ, பூச்சிகள் பயிர்களை சேதப்படுத்தியதாலோ விவசாயிகளின் தற்கொலை அதிகரிக்கவில்லை. மாறாக, அதிக மகசூல் கிடைத்தும்,  கட்டுப்படியான விலை கிடைக்காத காரணத்தாலேயே 45 சதமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
            உணவு உற்பத்தியைக் கைவிட்டு பணப் பயிருக்கு மாறுங்கள் என அரசாங்கம் சொல்கிறது. அதற்காக கடனும் வழங்குகிறது. பணப் பயிர்களான பருத்தி, நிலக்கடலை, கரும்பு, வெண்ணிலா பயிரிட்ட விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டனர். 2002-03 ல் விதர்பாவில் ஒரு கிலோ பருத்தி விதை 9 ரூபாய் 2003 கடைசியில் அரசாங்கம் அதிக மகசூல் பெறும் விதைகளை அறிமுகப்படுத்தியது. அதன் விலை 450 கிராம் 320 ரூபாய் 2004 - ஆம் ஆண்டில் பி.டி காட்டன் விதை 450 கிராம் விலை ரூ.1600 என உயர்ந்தது.
          மான்சாண்டோ விதைகளை அறிமுகப்படுத்தியதால் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
 2003 - ஆம் ஆண்டில் இருந்து விவசாய இடு பொருட்களின் விலையை ஆய்வு செய்துள்ளேன்.
மானாவாரியில் பயிரிட ஏக்கருக்கு ரூ.2500 ம், பாசன விவசாயத்திற்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரமும்  செலவாகிறது.  2010 - ஆம் ஆண்டில் மானவாரியில் பருத்தி பயிரிட ரூ.15 ஆயிரம் முதல் 20 ஆயிரமும்,  பாசனத்தில் 45 ஆயிரமும் செலவாகிறது. மகாராஷ்டிராவில் பருத்தி ஒரு குவிண்டால் பயிரிட ரூ.4500 செலவாகிறது என அரசாங்கமே கூறுகிறது. உற்பத்தி செலவு 5 மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால், விவசாயிகளின் வருமானம் 5 மடங்கு உயரவில்லை.
மத்திய அரசின் தவறான விவசாயக் கொள்கையால் தற்கொலைகள் அதிகரித்தன. தற்கொலைப் பாதை தீர்வல்ல என்பதை விவசாயிகள் உணரவேண்டும். போராட வேண்டும்.
நன்றி :


 

வியாழன், 26 ஏப்ரல், 2012

அடப்பாவிகளா... விவசாயிகளை கொல்லுவதற்காகவா ஆட்சி செய்கிறீர்கள்...?


                      அண்மையில் இரண்டு நாட்களுக்கு முன்பு,  மகாராஷ்டிரா மாநிலத்தில் விதர்பா பகுதியில் 45 வயதான பருத்தி விவசாயி ஒருவர் கடன் பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டார் என்றும்,  தற்கொலை செய்துகொள்வதற்கு  முன்பு  அவர் எழுதிவைத்த கடிதத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என்று பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார் என்றும் செய்தித்தாள்களில் செய்தி வெளியாகியிருந்தன. கஜானந்த் கோத்தீகர் என்ற அந்த விவசாயி டிராக்டர் ஒன்றை வாங்கி இருக்கிறார். ஆனால் பருத்தி விலைகள் மிகவும் குறைவாக இருந்ததால் டிராக்டருக்காக வாங்கிய 1 லட்ச ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. தனது இளைய மகளுக்கான திருமண ஏற்பாடும் அவரை மேலும் கடனில் ஆழ்த்தியது. இதனால் கடிதம் எழுதிவைத்துவிட்டு அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று அந்த செய்தி தெரிவிக்கிறது. 
            இவர் பி.டி வகை பருத்தியை தான் பயிர் செய்திருந்தார். மான்சான்ட்டோ போன்ற பன்னாட்டுக் கம்பெனிகள் மிகுந்த இலாபம் அடைவதற்காக,  அந்த கம்பெனிகள் பி. டி வகை விதைகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு அனுமதியளித்தது. ஆனால் விவசாயிகளிடம் சொல்லப்பட்டதோ இந்த பி. டி வகை விதைகளை பயிரிட்டால் விவசாயிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும் என்ற ஏமாற்று வார்த்தைகளைத் தான்.   மத்திய அரசு மற்றும் பன்னாட்டுக் கம்பெனிகளின் பசப்பு ஏமாற்று வார்த்தைகளை நம்பித்தான் மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர மாநிலங்களில் அப்பாவி விவசாயி பெருமக்கள் பி. டி. வகை விதைக்கு மாறினார்கள். ஆனால் மத்திய - மாநில அரசுகளும், பன்னாட்டு நிறுவனங்களும் சொன்னது போல் இலாபம் கிடைக்கப்பெறாமல், குறிப்பாக பருத்தி விவசாயிகள் படுகுழியில் தள்ளப்பட்டனர். விவசாயத்திற்காக வாங்கிய கடன் அவர்களின் கழுத்தை நேருக்க ஆரம்பித்தது. கடன் தொல்லை தாங்கமாட்டாமல் விவசாயப் பெருமக்கள் தற்கொலை செய்துகொண்டு தங்களை தாங்களே உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள். 
             மத்தியில் நரசிம்மராவ் -  மன்மோகன்சிங் கூட்டாளிகளின் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டு, மன்மோகன்சிங் - சரத் பவார் - சிதம்பரம் - பிரணாப் முகர்ஜி கூட்டாளிகளின் காங்கிரஸ் ஆட்சி வரை கடைபிடிக்கப்பட்டுவரும்   கடுமையான பொருளாதாரக் கொள்கை தான் இதுமாதிரியான விவசாயிகளின் தற்கொலைகளுக்கு பிரதான காரணம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. கடந்த 1995 - ஆம் ஆண்டிலிருந்து - கடந்த 17 ஆண்டுகளில்  இந்தியாவில் இதுவரையில் 2,50,000 - க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு மாண்டுப்போயிருக்கிறார்கள் என்பது இந்த தேசம் வேதனையும் வெட்கமும் படவேண்டிய விஷயமாகும். கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சி செய்த மேற்கு வங்கம் - கேரள மாநிலங்கள் மற்றும் தற்போது ஆட்சி செய்யும் திரிபுரா மாநிலங்கள் நீங்கலாக,   ஆந்திரா,  மகாராஷ்டிரா உட்பட நாட்டிலுள்ள 18 மாநிலங்களில் தான் இது போன்ற விவசாயிகளின் தற்கொலை என்பது வேதனையும் சாதனையுமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இப்போது மம்தா ஆட்சிக்கு வந்த பிறகு மேற்கு வங்கத்திலும் விவசாயிகள் தற்கொலை என்பது கணக்கு தொடங்கப்பட்டிருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.
              இந்தியாவில் 12 மணி நேரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இது தான் இன்றைய ஆட்சியாளர்களின் மகத்தான சாதனையாகும்.
                இரண்டு நாட்களுக்கு முன்பு விதர்பாவில் தற்கொலை செய்துகொண்டு இறந்து போன பருத்தி விவசாயி, தனது தற்கொலை குறிப்பில் பருத்திக்கு நல்ல விலை கிடைக்க மத்திய அரசும், மாநில அரசும் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்த்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளின் துயரம் குறித்து கவலைப்படாத காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் அரசுக்கு அடுத்தமுறை வாக்களிக்காதீர்கள் என்று பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.விதர்பா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 5 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து இதுவரை 325 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.