தேர்தல் ஆணையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேர்தல் ஆணையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 15 மே, 2016

தமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....!


             கடந்த ஐம்பது ஆண்டுகளில் பல்வேறு சந்தர்பங்களில், பல்வேறு வழிகளில் தமிழக மக்களை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும் இன்று மீண்டும் தலைகுனிய வைத்திருப்பது வெட்கக்கேடானது. 
                   கடுமையான பணப்பட்டுவாடா எதிரொலியாக அரவக்குறிச்சி தொகுதியில் மட்டும்  தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது வெட்கக்கேடானது. தேர்தல் விதிமுறைப்படி  இதுவரை வேட்பாளர் இறந்துவிட்டால் அல்லது கலவரங்கள் நடைபெற்றால் தான் தேர்தலை ஒத்திவைப்பதை நாம் பார்த்திருக்கிறோம். 
             அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுகவைச்  சேர்ந்த  முன்னாள் போக்குவரத்து அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும்  திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.சி.பழனிச்சாமி போட்டியிடுகிறார்கள். இந்த இரு பணமுதலைகள் இந்த தொகுதியில் தேர்தல் ஆணையமே திணறிப்போயிருக்கிறது. இவர்கள் செய்த பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையத்தாலேயே  கட்டுப்படுத்த முடியாத அளவிற்குப் போனதால் தான் இந்த நடவடிக்கையாம். கடவுளிடம் தான் அரவக்குறிச்சி தொகுதியை ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு தேர்தல் ஆணையம் நொந்துப்போயிருக்கிறது. 
          கடுமையான பணப்பட்டுவாடா காரணமாகவும்,  இந்த தொகுதியில் தான் திமுக-அதிமுகவிடமிருந்து வாக்காளர்களுக்கு கொடுக்கவிருந்த பணம் அதிக அளவு கைப்பற்றப்பட்டதன் காரணமாகவும் தேர்தலை ஒத்திவைக்கும் முடிவுக்கு தேர்தல் ஆணையம் தள்ளப்பட்டிருக்கிறது. அநேகமாக இதுபோன்ற தேர்தல் ஒத்திவைப்பு என்பது தேர்தல் வரலாற்றிலேயே இது தான் முதல்முறையாக இருக்கும். தமிழகம் தான் முன்மாதிரியாக இருக்கும் என்பது வெட்ககேடானது. 
            தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை ஒரு வாரத்திற்கு  முன்னதாகவே எடுத்திருந்தால், மற்ற தொகுதிகளில் பணப்பட்டுவாடா குறைக்கப்பட்டிருக்கும். இந்த முடிவை எடுப்பதற்கு தேர்தல் பிரச்சாரம் முடியும் வரை காத்திருந்தது புதிராக இருக்கிறது. 
             இனிமேலாவது தங்களுக்கு பணத்தைக் கொடுத்து ஓட்டுகளை வாங்கி ஆட்சிக்கு வரத்துடிக்கும் திமுக-அதிமுக ஆட்சிகளை தூக்கியெறிய தமிழக மக்கள் தயங்கக்கூடாது. உலகத்தின் பார்வைக்கு தங்களை பிச்சைக்காரர்களாக படம் பிடித்துக்காட்டிய திமுக-அதிமுக கட்சிகளை தமிழக மக்கள் துரத்தியடிக்கவேண்டும். இப்போதாவது தமிழக மக்கள் திமுக அதிமுகவிற்கு பாடம் புகட்டுவார்கள...? 

வியாழன், 15 மே, 2014

இந்திய ஊடகங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை...!

                   அடடடா...  இந்திய ஊடகங்களை என்னவென்று பாராட்டுவது என்றே தெரியவில்லை. என்னா நேர்மை...! என்னா நியாயம்...! வாங்கின காசுக்கு கடைசி வரையில் ஊதுராங்கப்பா...! மோடியே நேர்ல வந்து வேணா... போதும்.... நிப்பாட்டுங்கன்னு சொன்னாக்கூட  நிப்பாட்டமாட்டாங்க போலிருக்கே...! நாடு முழுதும் தேர்தல் முடிந்து கடந்த மூன்று நாட்களாக ஊடகங்கள் போடுகிற கூப்பாடு இருக்கே... தாங்க முடியல... வெட்கமே இல்லாம  மோடிக்கு ஆதரவாக இவர்கள் போடுகிற கூச்சலும், கூப்பாடும் இருக்கே அடேங்கப்பா நம்மால தாங்க முடியலடா சாமி. 
              தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என மோடியிடம் காசை வாங்கிக்கொண்டு தேர்தல் வருவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஊடகங்கள் மக்கள் மத்தியில் மோடி தான் அடுத்த பிரதமர் என்ற கருத்தை திணிக்க ஆரம்பித்துவிட்டன. என்ன ஒரு வெட்கக்கேடு என்றால், இன்னும் தேர்தல் முடிவே வரவில்லை. ஓட்டுகளையே நாளை தான் எண்ணப்போகிறார்கள். யார் வெற்றி பெறுவார்கள் என்பது பெட்டியை திறந்தால் தான் தெரியும். ஆனால் ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பை வைத்துக்கொண்டே நரேந்திர மோடி புதிய பிரதமராக பதவி ஏற்க தயாராகி விட்டார். பாரதீய ஜனதாக் கட்சியின் மேல்மட்ட தலைவர்கள் கூடி ''மந்திராலோசனை'' செய்கிறார்கள். எப்போது பதவி ஏற்பது...? யார் யாரெல்லாம் மத்திய மந்திரிகளாக பதவி ஏற்பார்கள்...? அத்வானிக்கு மந்திரிசபையில் இடம் உண்டா இல்லையா...? நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றப்பின் குஜராத் மாநிலத்தின் முதல்வராக யாரை நியமிப்பது...?  இப்படியெல்லாம் பாஜக தலைவர்கள் மத்தியில் ஆலோசனை நடப்பதாக செய்திகள் வெளியே கசிந்து கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் பங்குச் சந்தையில் பங்குச் சந்தைக் குறியீடுகளை முன்பு இல்லாத அளவிற்கு உயர்த்தி, மத்தியில் மோடி தலைமையில் ஆட்சி அமைவதற்கான தங்களது விருப்பத்தையும், ஆர்வத்தையும் இந்திய பெருமுதலாளிகள் ''குறிப்பாக'' காட்டியிருக்கிறார்கள்.
                 இந்த ''கருத்துத்திணிப்பை'' பார்த்து தேர்தல் முடிவுகள்  வருவதற்கு முன்பே ''காங்கிரஸ் கூடாரம்'' காலியாகிக்கொண்டே இருக்கிறது. மன்மோகன் சிங் தனது அரசு வீட்டையும் பிரதமர் சீட்டையும் காலி செய்துவிட்டு  சென்றுவிட்டார். தனக்கு நெருக்கமான அண்டை நாடுகளின் தலைவர்களிடமும், தன்  அலுவலக ஊழியர்களிடமும் ''டாடா'' காண்பித்துவிட்டு பிரிய மனசில்லாமல் பிரியாவிடை பெற்று சென்று விட்டார். இப்படியெல்லாம் ''கருத்துத்திணிப்பு'' செய்கிற பாட்டை பாருங்கள். ஊடகங்கள்  ஒரு புறம் ஒருவரை நன்றாக சந்தோஷப்படுத்துவதும், மறுபுறம் வேறு ஒருவரை  துரத்தி அடிப்பதுமான வேலைகளைத் தான் செய்கின்றன. மக்கள் தான் மிகுந்த குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். ஏதோ.... இந்த பாராளுமன்றத்தேர்தலில் நரேந்திர மோடியிடம் ஊடகங்கள் வாங்கின காசுக்கு இறுதிவரையில் ரொம்ப நல்லாத்தான் ஊதுகின்றன...!
             இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஒரு நல்ல யோசனை.... இனிமேல் நாட்டுல பாராளுமன்றத் தேர்தலையே நடத்தவேண்டாம். காசுக்கு கூவுற ஊடகங்களிடம் ''கருத்துக்கணிப்பை'' வாங்கியே பிரதமர் மற்றும் மந்திரிகளையும், எம்.பி-க்களையும் தேர்ந்தெடுத்துக்கலாம். தேர்தல் ஆணையம் எதுக்கு பல ஆயிரம் கோடிகளை செலவு செய்து தேர்தலை நடத்தி கஷ்டப்படனும். கருத்துக்கணிப்புத் தேர்தலே சுலபமானது. அதுமட்டுமல்ல,  பண பலம், பெருமுதலாளிகள் பலம் உள்ள அரசியல் கட்சிகளுக்கு தான் செலவு. தேர்தல் ஆணையத்திற்கு ஒரு பைசா செலவும் இல்லை.  வேலையும் இல்லை. எல்லாவற்றையும் ஊடகங்களே பார்த்து புதிய ஆட்சியாளர்களை உட்கார வைத்துவிடுவார்கள். அப்புறம் தேர்தல் ஆணையம் என்று ஒன்று எதற்கு...? அதுவும் வேண்டாம். இதைஎல்லாம்  தேர்தல் ஆணையம் யோசித்துப்பார்க்கட்டும். ஜனநாயகமாவது... மக்களாவது... தேர்தலாவது....?           

வெள்ளி, 11 ஜனவரி, 2013

உங்கள் பணம் உங்கள் கையில் - வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும் இலஞ்சம்...!


















             இதுவரையில் நம் நாட்டில் முதியோர் உதவித் தொகை மற்றும் கல்வி உதவித் தொகை போன்ற அரசின் நல உதவித் திட்டங்கள் மட்டுமே ''பணமாக'' மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. அதே சமயத்தில் அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய், எரிவாயு, பெட்ரோல், டீசல், உரம் போன்ற அன்றாட தேவைகளான இத்தனை அத்தியாவசியப் பொருட்களுக்கான மானியம் மட்டும் அந்தந்த பொருட்களாகவே ரேஷன் கடைகளில் கொடுக்கப்பட்டு வந்தன. பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்த இந்த முறையை சீர்படுத்தி, மேலும் பல்வேறு உணவு பொருட்களை இணைத்து மானிய விலையில் மக்களுக்கு கொடுப்பதற்கு பதிலாக, இதுவரையில் ரேஷன் கடைகளில்  மானிய விலைகளில் கொடுக்கப்பட்டு வந்த இத்தனைப் பொருட்களின் விநியோகத்தையும்  நிறுத்தி ரேஷன் கடைகளையெல்லாம் மூடிவிட்டு அந்த பொருட்களுக்கு இதுவரையில் மறைமுகமாக கொடுக்கப்பட்ட மானியத் தொகையினை மக்களுக்கு நேரடியாக பணமாக கையில கொடுக்கப்போராங்கலாம். இதற்கு ''உங்கள் பணம் உங்கள் கையில்'' என்று கவர்ச்சிகரமான பெயர் வைத்திருக்கிறார்கள். இது மக்களை மயக்கும் ஏமாற்று வித்தை.  பொறியில் வடை வைத்து எலிகளை பிடிப்பது போல், ஓட்டுகளை பொறுக்குவதற்கு 2014 தேர்தலை மனதில் வைத்து காங்கிரஸ் கட்சி இவ்வாறு செயல்படுகிறது. 
          ரேஷன் கடைகளில் கொடுக்கப்பட்ட உணவு பொருட்களை நிறுத்துவது என்பதும், ரேஷன் கடைகளை மூடுவது என்பதும் ''உணவு உரிமைக்கு'' எதிரானது. மக்களுக்கு உணவு அளிக்க வேண்டியது என்பதும், உணவு பாதுகாப்பு என்பதும்  மத்திய அரசின் தலையாய கடமையாகும். இது மனித உரிமையோடு சம்பந்தப்பட்டது. அப்படியென்றால் உணவுப் பொருட்களை வழங்காமல் பணமாக கொடுப்பது என்பது மனித உரிமைக்கு எதிரானது என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். இது 1948 - ஆம் ஆண்டில் உணவு உரிமை என்பது மக்களின் அடிப்படை உரிமை என்று பிரகடணம்  செய்த  ஐநா சபைக்கு எதிரானது.
         அது மட்டுமல்லாது மானியம் என்பது உணவுப் பொருட்களாக கொடுக்காமல் பணமாக கொடுக்கப்பட்டால், குடும்பத்தலைவர் அந்த பணத்தை தன் குடும்பத்திற்கான  உணவு பொருட்களை தான் வாங்குவார் என்பது என்ன நிச்சயம்...? ஆட்சியாளர்கள் ஒரு பக்கம் மதுக்கடைகளையும், ''பார்''களையும்  திறந்துவிட்டு, இன்னொரு பக்கம் குடும்பத்தலைவரிடம் உணவுப் பொருட்களுக்கு பதில் பணத்துக் கொடுத்துவிட்டு, அவர் உணவுப் பொருட்களைத் தான் வாங்குவார் என்று அரசு எப்படி எதிர்பார்க்கிறது...?  இது அரசுக்கு மக்கள் மீது இருக்கும்  போலியான அக்கறையை அல்லவா காட்டுகிறது...? இதனால் பட்டினிச் சாவு  மேலும் அதிகரிக்கும் என்பது ஆட்சியாளருக்கு தெரியாதா...?
      அப்படியென்றால் மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் உண்மையான நோக்கம் என்ன...?  எப்படியோ மக்கள் கையில் காசைக் கொடுத்தா 2014 - லில் தங்கள் கையில் ஒட்டுக் கிடைக்கும் என்று பகல் கனவு காண்கிறார்கள் என்பது மட்டும் நமக்கு புரிகிறது. காசைக் கொடுத்தா மக்கள் பல்லை இளித்துக் கொண்டே தங்களுக்கே ஓட்டைப் போட்டுவிடுவார்கள் என்று நினைப்பில்,  மன்மோகன் சிங் - ப. சிதம்பரம் கூட்டாளிகள்  அரசாங்கத்தின் நிதியையே - மக்களின் பணத்தையே வாக்காளர்களுக்கு  இலஞ்சமாக கொடுக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இதை ஏன் இந்திய தேர்தல் ஆணையம் புரிந்துகொள்ளவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது...?  காங்கிரஸ் கட்சி ஓட்டுக்காக அரசாங்கத்தின் கஜானாவிலிருந்து பணத்தை மக்களுக்கு விநியோகம் செய்கிறது.  தலைமை தேர்தல் ஆணையரும், மற்ற இரு ஆணையர்களும் இதை எப்படி வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்...?
        இப்போதும் நேரம் கடந்துவிடவில்லை. சென்ற புத்தாண்டு தினத்தன்று தான் முதலில் இருபது மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தை மேலும் நாடு முழுதும் மத்திய அரசாங்கம் கொண்டுசெல்வதற்கு முன், தேர்தல் ஆணையம் இந்த திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளை மத்திய அரசே  ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தான் கோரிக்கை எழுந்ததே தவிர, இது போல் ஓட்டுக்கு ''இலஞ்சம்'' கொடுப்பதை மத்திய அரசே செய்வது என்பதும், காங்கிரஸ் கட்சி இது போல் இலஞ்சம்  கொடுத்து  தேர்தல் மோசடி செய்யத் துணிந்திருப்பது என்பதும் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை தேர்தல் ஆணையம் புரிந்துகொண்டு செயல்படவேண்டும்.