தலாய்லாமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தலாய்லாமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 4 ஜூலை, 2013

தலாய்லாமாவிற்கு அடைக்கலம் கொடுத்த இந்திய அரசு எட்வர்ட் ஸ்னோடெனுக்கு மறுப்பது ஏன்...?

       

        













         
     
               அமெரிக்க அரசால் தேடப்பட்டு வரும் ஒரு வீரமிக்க இளைஞர் முதலில் ஹாங்காங்கில் தலைமறைவாய் இருந்து பின்னர் தற்போது ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தஞ்சம் புகுந்து கொண்டு, தான் அமெரிக்க ஆட்சியாளர்களின் கோரைப்பற்களில் சிக்காமல் தப்பிக்க உங்கள் நாட்டில் அடைக்கலம் கொடுங்கள் என்ற இந்தியா உட்பட இருபது நாட்டு அரசுகளுக்கு அந்த மாவீரன் ஸ்னோடென் வேண்டுகோள் விடுத்தபோது உடனடியாக இந்திய அரசு  மறுத்து விட்டது
         யார் இந்த எட்வர்ட் ஸ்னோடென்...?  அமெரிக்காவால் வளர்க்கப்பட்ட பின்லேடன் போன்ற தீவிரவாதியோ அல்லது பயங்கரவாதியோ அல்ல.  அமெரிக்க நாட்டை துண்டாக்கி பிரித்துக்கொடு என்று கேட்கும் பிரிவினைவாதியும் அல்ல. அல்லது அமெரிக்காவில் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக கம்யூனிசம் பேசி போராடும் புரட்சிக்காரரும் அல்ல. என்றாலும் அமெரிக்கா ஸ்னோடெனை கொலைவெறி கொண்டு ஏன் தேடிவருகிறது...? அதுமட்டுமல்ல, சில நாட்களுக்கே அடைக்கலம் கொடுத்ததற்காக சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளை அமெரிக்கா  மிரட்டும் அளவிற்கு பிரச்சனை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
         அப்படி என்ன ஸ்னோடென் அமெரிக்காவிற்கு துரோகம் இழைத்துவிட்டார்....? அப்படிஎல்லாம்  துரோகம் ஒன்றுமில்லை. அமெரிக்காவைப் பற்றிய கீழ்த்தரமான ஒரு உண்மைச் செய்தியை ஹாங்காங்கிலிருந்து துணிந்து வெளியிட்டு விட்டார் என்பதே அமெரிக்காவிற்கு அவர் மீதான கோபத்திற்கான காரணம் ஆகும். அப்படி என்ன அவர் சொல்லிட்டார்....?  அமெரிக்க உளவுத்துறைகளான CIA மற்றும் NSA போன்ற உளவு நிறுவனங்கள், உலகில் பரவிக்கிடக்கும் சமூக வலைதளங்களான facebook, tweeter மற்றும் e-mail போன்றவற்றை அமெரிக்கா கண்காணிக்கிறது - உளவு பார்க்கிறது என்கிற உண்மையை வெளியிட்டுவிட்டார் என்பது தான் அமெரிக்காவிற்கு அவர் மீது வந்த கோபத்திற்கான காரணம். அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தையும் உளவு பார்க்கிறது என்பதும் கூடுதலான தகவலாக ஸ்னோடென் வெளியிட்டுயிருக்கிறார். இப்படி அமெரிக்கா உளவு பார்ப்பது என்பது ஒன்றும் புதிதல்ல. அண்டை நாடுகளை உளவு பார்ப்பதற்கும், தோழர். பிடல் காஸ்ட்ரோ போன்ற தனக்கு வேண்டாத வெளிநாட்டு தலைவர்களின் நடமாட்டங்களை கண்காணிப்பதற்கும் அமெரிக்காவின் செயற்கைக்கோள்கள் பல ஆண்டுகளாக விண்வெளியில் சுற்றிக்கொண்டு தான் இருக்கின்றன. அடுத்தவர் இரகசியங்களை ஒட்டுக்கேட்பதும், பக்கத்து வீட்டு படுக்கை அறையை எட்டிப் பார்ப்பதுமான மானங்கெட்ட வேலைகள் அமெரிக்காவிற்கு கைவந்த கலை.
            ஆனால் எட்வர்ட் ஸ்னோடென் வெளியிட்டிருக்கும் அமெரிக்க உளவு வேலை பற்றியத் தகவல் புதுவிதமானது. இன்றைக்கு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியிலும், தகவல் பரிமாற்றங்களிலும் ஒரு குறிப்பிட்ட அளவில் பங்காற்றி வளர்ந்து வருவது சமூகவலைத்தளங்கள் தான். இதுவரையில் வலைத்தளங்கள் மூலம் பரிமாறிக்கொள்ளப்படும் தகவல்கள் இரகசியமானது என்று தான் நாம் நினைத்துக்கொண்டு செயல்படுகிறோம். ஆனால் பல்வேறு கட்டுப்பாடுகளோடு   பூட்டி பாதுகாக்கப்படுகின்ற வலைத்தளங்களைக் கூட திறந்து பார்க்கும் தொழில்நுட்பம் அமெரிக்காவிடம் இருக்கிறது என்பது ஆபத்தானது. கடுமையான கட்டுப்பாடுகளுடன் பூட்டிவைக்கப்பட்ட தகவல்களை திறந்து பார்த்து அமெரிக்கா கண்காணிக்கிறது என்றால் இதைவிட படுகேவலமான மானங்கெட்டச் செயல் வேறு இருக்கமுடியாது. இப்படிப்பட்ட இந்தத் தகவலை அமெரிக்க இளைஞன் ஒருவன் - அதுவும் இப்படிப்பட்ட மானங்கெட்ட செயல்களை செய்யக்கூடிய இடத்திலேயே வேலை பார்த்த ஒரு இளைஞன் அச்சப்படாமலும், தயங்காமலும் வெளியிடுகிறான் என்றால் இந்திய அரசு அவனை பாராட்டி பாதுகாப்பு அளித்திருக்க வேண்டாமா...? ஆனால் அந்த இளைஞன் இந்தியாவில் அடைக்கலம் கேட்டு வேண்டிக்கொண்ட போது, உடனடியாக இந்திய அரசு அந்த இளைஞனுக்கு அடைக்கலம் தர மறுத்திருக்கிறது என்பது யாரை திருப்திப்படுத்த....? அமெரிக்கா சமூக வலைத்தளங்களை கண்காணிக்கிறது என்ற தகவல் வெளியானதும், இந்திய அரசு அமெரிக்காவின் செயலைக் கண்டிக்காதது ஏன்....?
          அதுமட்டுமல்ல சீனாவில் திபெத்தை பிரித்து தனி நாடு கோரி பிரிவினைவாதத்தை தூண்டும் மதவாதி தலாய்லாமாவிற்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுத்திருக்கும் இந்திய அரசு... இன்னொரு திபெத்து மதவாதியான கர்மபா லாமா என்பவருக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுத்திருக்கும் இந்திய அரசு.... ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் மன்னரின் குடும்பத்தாருக்கும், நேபாள் நாட்டின் பதவியிறக்கப்பட்ட மன்னருக்கும், அவர் குடும்பத்தார்க்கும் இந்தியாவில் அடைக்கலம் கொடுத்த இந்திய அரசு.... இலங்கையில் பிரிவினைகளை தூண்டிய பல்வேறு பிரிவுகளின் தலைவர்களுக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுத்த இந்தியஅரசு... பங்களாதேஷ் நாட்டின் பிரச்சனைக்குரிய எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுத்த இந்திய அரசு... எட்வர்ட் ஸ்னோடெனை மட்டும் அடைக்கலம் கொடுத்து காப்பாற்றத் தயங்குவது ஏன்...? இது தான் இந்திய அரசு காட்டும் அமெரிக்க ''எஜமான விசுவாசமா...?''.

சனி, 24 நவம்பர், 2012

மதவாதிகளையும் பிரிவினைவாதிகளையும் வளர்க்கும் அமெரிக்கா - துணைபோகும் இந்தியா...!

           உலக வரைப்படத்திலிருந்து சோசலிச நாடுகளை ஒழித்துக்கட்டவும், மனித குலத்தின் மாண்புகளில் இருந்து சோசலிசத்தை அழித்துவிடவும் கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்துகொண்டிருக்கும் ஏகாதிபத்தியமும், முதலாளித்துவமும் வளர்த்துவிடப்பட்டவர்  தான் தலாய்லாமா என்ற இந்த புத்தமத சாமியார்.    சீன நாட்டின் ஒன்றுபட்ட பகுதியாக இருக்கக்கூடிய திபெத் பகுதியை தனி நாடாக பிரிக்கப்படவேண்டும் என்று அங்குள்ள பிரிவினையை விரும்பும் ஒருசில மக்களை மதத்தலைவர் என்ற முறையில் ஒன்று திரட்டி தேசவிரோத செயல்களில் ஈடுபடுபவர்.    இந்தியாவிலுள்ள இமாச்சலபிரதேச  மாநிலத்திலுள்ள‌ ''தரமஷாலா'' - வில் சட்டவிரோத திபெத் நாட்டின் அரசை நடத்திக்கொண்டிருப்பவர். அவருக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது. பக்கத்து நாட்டில் தேசவிரோத செயல் புரியும் இவருக்கு இடம் கொடுத்து பாதுகாப்பு கொடுத்து வருவது இந்திய அரசு என்பதும், அதேப்போல் இவர் சட்டவிரோத அரசை நடத்துவதற்கு நிதி கொடுத்து உதவி செய்வது அமெரிக்க ஏகாதிபத்தியம் என்பதும் குறிப்படத்தக்கது. சோசலிசத்தையும் சோஷலிச நாடுகளையும் ஒழித்துக்கட்டுவதற்கு, மதவாதிகளையும், பிரிவினைவாதிகளையும் வளர்ப்பதில் என்றைக்குமே அமெரிக்க ஏகாதிபத்தியம் தயங்கியதே கிடையாது. அதற்காக எவ்வளவு நிதி வேண்டுமானாலும் செலவு செய்வார்கள். ஆனால் இவ்வாறு அமெரிக்க மற்றும் திபெத் மக்கள் நிதியில் உருவாக்கப்பட்ட  தர்மஷாலாவில் உல்லாச‌ விடுதி நடத்தும் ஒரு தொழிலதிபர் தான் இந்த தலாய்லாமா என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் இங்கு அவ்வப்போது வந்து ஓய்வெடுத்து செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்த தலாய்லாமாவிற்கும் அமெரிக்காவிற்கும் இஸ்ரேல் நாட்டிற்கும் உள்ள நெருக்கம் நன்கு விளங்கும். மேலும் இவர் பேருக்கு தான் சாமியார். மற்றபடி பகட்டான வாழ்க்கை வாழும் ஒரு சுகபோகவாதியாவார். அதனால் உலகளவில் பல திரைப்பட நட்சத்திரங்கள் இவருடைய விசிறியாக இருக்கிறார்கள் என்பது இவருடைய பகட்டு நன்கு புரியும். இந்த சாமியார் சில சமயங்களில் விளம்பரங்களில் கூட நடிக்கும் நட்சத்திரமாகவும் இருக்கிறார். 
                மேற்கத்திய முதலாளித்துவ  அரசியல் சிந்தனைக்கும், சிந்தனையாளர்களுக்கும் இவரது வார்த்தைகள்  பொன்மொழியாக பயன்படுகிறது. இவர் ''வோக்'' என்ற  ஃபாஷன் பத்திரிக்கையின் கெளவரவ ஆசிரியராகவும் வேலை செய்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் இந்தியாவில்  தஞ்சம் புகுவதற்கு முன்பு  1960 - ஆம் ஆண்டுகளிலேயே திபெத்தில் 1000 அறைகள் கொண்ட 14 மாடி ''பொட்டாலா'' அரண்மனையில் வாழ்ந்தவர்.  இவரை சுற்றி இருந்த  திபெத்தியர்கள் வறுமையில் வாடும்போது இவருக்கு மட்டும் இந்த வாழ்க்கை தேவையானதாக இருந்தது. ஏனெனில், மக்களின் பார்வையில் இவர் மிகவும் புனிதம் மிகுந்தவர். மேட்டுக்குடியினைச் சார்ந்தவர். எனவே அதில் ஒன்றும் தவறு கிடையாது என்று மக்கள் நினைத்தார்களோ இல்லையோ... தலாய்லாமா நினைத்தார்.
                  
மேலும் இவர் உலக வாழ்க்கையைத் துறந்த துறவியாகத் தானே காட்சியளிக்கிறார். அவர் ஒரு  ''புத்த பிச்சு'' - வாக அல்லவா காட்சியளிக்கிறார். ஆனால்  உலகில் எந்த மூலையில் மக்களைக் கொன்று குவிக்கும் போர்கள் நடந்தாலும் அதைப் பற்றி எவ்வித மூச்சும் விடமாட்டார். ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் போன்ற நாடுகள் உடனான அமெரிக்காவின் கொலைவெறிப் போரினை பற்றி எந்தவிதமான எதிர்ப்பும் காட்டாதவர். அமெரிக்காவை கண்டித்து ஒரு வார்த்தைக் கூட இவர் உதிர்க்கவில்லை. இருப்பினும் அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. இஸ்ரேல் எப்போதும்  பாலஸ்தீனர்கள்  மீது தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவித்தாலும், இஸ்ரேலை தட்டிக்கேட்காமல்,   இஸ்ரேலுக்கே  சென்று பாலஸ்தீனர்களிடம் ''வன்முறை வேண்டாம்'' என்று 'அமைதிப் புறா'வைப் போல் அறிவுரைக் கூறியவர் இவர் சீனாவிடமிருந்து தப்பி வருவதற்கு முன்பு, இவர் ஏதோ சீனாவினை எதிர்த்து வன்முறையில் ஈடுபடாதவர் போல  இவர் உதிர்த்த இந்த அறிவுரை என்பது சாத்தான் வேதம் ஓதுவது போல இருக்கும்.
 
             உலக அமைதி குலைவதற்கும், ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் போன்ற நாடுகள் சீரழிவதற்கும் காரணமாக இருந்த அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை பார்த்து,
''பிரெசிடெண்ட் புஷ்ஷை நேசிக்கின்றேன்'' என வெளிப்படையாக பறை சாற்றியவர் தான் இந்த தலாய்லாமா. அண்மையில் கூட  ஆப்கானிஸ்தான்  போரைப் பற்றியும், ஈராக் போரைப் பற்றியும்  பேசும் போது, ''அப்போர்கள் எந்த வகையைச் சேர்ந்தது என சொல்வது கடினம'' என  போர் வெறி பிடித்த அமெரிக்காவின் மீது அருள் பாலித்திருக்கிறார்.