மத சகிப்புத்தன்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மத சகிப்புத்தன்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 7 பிப்ரவரி, 2015

மோடியின் மவுனம் அபாயகரமானது - நியூயார்க் டைம்ஸ்

  அமெரிக்காவிலிருந்து வெளியாகும் பிப்ரவரி 6, 2015 தேதியிட்ட ''நியூயார்க் டைம்ஸ்'' நாளிதழில் வெளியான தலையங்கம்           
          இந்திய தேசத்தின் சிறுபான்மையினருக்கு எதிராக நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கும் வன்முறைகளுக்கு எதிராக கருத்து தெரிவிக்க பிரதமர் நரேந்திரமோடிக்கு என்ன சிரமம் இருந்துவிட முடியும்? கிறிஸ்தவர்கள் வழிபாட்டுத் தலங்களில் தாக்குதல் நடத்தப்படுகிறது... ஆனால் இந்தியர்கள் அனைவரையும் போற்றி பாதுகாக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரோ அவ்விவகாரத்திற்கு எவ்வித எதிர்வினையும் காட்டவில்லை.
         சரி இதற்குத்தான் பதில் இல்லை என்று பார்த்தால், கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் கட்டாயப்படுத்தப்பட்டோ, பணம் தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டோ கொத்து கொத்தாக மறு மதமாற்றம் செய்யப்பபடுகின்றனர். அதற்கும் மவுனமே பதிலாக இருக்கிறது.
        இந்தியாவில் நடைபெறும் மதவாத நிகழ்வுகளைக் கண்டும் காணாமல் திருவாளர் மோடி கடைபிடித்துவரும் மவுனமானது, இரண்டு முடிவுகளுக்கு நம்மைத் தள்ளுகிறது. ஒன்று, மோடியால் இந்துத்துவா அமைப்புகளை கட்டுப்படுத்த முடியாமல் இருக்க வேண்டும்; இல்லையேல், அவ்வாறு கட்டுப்படுத்த மோடி விரும்பாமல் இருக்க வேண்டும்.
         சமீபகாலமாக இந்தியாவில் உள்ள தேவாலயங்கள் சூறையாடப்படுவதும், தீக்கிரையாக்கப்படுவதும் அதிகமாக நடைபெறுகிறது. கடந்த டிசம்பர் மாதம், கிழக்கு டெல்லியில் உள்ள புனித செபாஸ்டின் தேவாலயம் ஒன்று தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. அந்த தேவாலயத்தின் பாதிரியார் அளித்த புகாரில் மண்ணெண்ணெய் ஊற்றி ஆலயம் எரிக்கப்பட்டதாக கூறியிருந்தார். திங்கள்கிழமை, (பிப்ரவரி 3-ம் தேதி) புதுடெல்லியில் உள்ள புனித அல்போன்ஸா தேவாலயம் சூறையாடப்பட்டுள்ளது. அதில் விந்தை என்னவென்றால், பிரார்த்தனைக்குப் பயன்படுத்தப்படும் புனித பாத்திரங்களை சேதப்படுத்திய விஷமிகள் அங்கிருந்த காணிக்கைப் பெட்டியில் நிரம்பி வழிந்த பணத்தை சட்டை செய்யவில்லை.
     இந்தத் தாக்குதல்களையடுத்து, கத்தோலிக்க பிஷப்புகள் மாநாட்டு சபையானது இந்திய அரசுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய தேசத்தின் மதச்சார்பற்ற தன்மையை பாதுகாக்கும்படியும், இங்குள்ள கிறிஸ்தவர்கள் மனங்களில் பாதுகாப்புணர்வை உறுதி செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
           தேவாலய தாக்குதல்களுக்கு நிகராகவே மறு மதமாற்ற நிகழ்வுகளும் கவனிக்கப்பட வேண்டியவை. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆக்ரா நகரில் 200 முஸ்லிம்கள், இந்து மதத்துக்கு மாற்றப்பட்டனர். ஜனவரி மாதம், மேற்குவங்கத்தில் 100 கிறிஸ்தவர்கள், இந்து மதத்துக்கு மாற்றப்பட்டனர். இந்து மதத்தின் அடிப்படைவாத அமைப்புகளான விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி) ராஷ்டிரிய சுவயம்சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்) ஆகிய அமைப்புகள் மறு மதமாற்ற நிகழ்வுகளுக்கு பகிரங்கமாகவே ஆதரவு தெரிவிக்கின்றன.
         வி.ஹெச்.பி தலைவர் பிரவீண் தொகாடியா கூறுகையில், "இந்தியாவில் 80% மக்கள் இந்துக்கள். எங்கள் அமைப்பின் தற்போதைய இலக்கு, இந்த தேசத்தை 100% இந்து தேசமாக மாற்ற வேண்டும் என்பதே. இதை அடைய ஒரே வழி, சிறுபான்மையினருக்கு அவர்களுடைய மத நம்பிக்கை உரிமையை வழங்காமல் இருப்பதே ஆகும்" என கூறியுள்ளார்.
          இத்தகையச் சூழலில், இம்மாதம் அயோத்தியாவில் 3000 முஸ்லிம்களை, இந்து மதத்துக்கு மாற்ற விஷ்வ ஹிந்து பரிஷத் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
           1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, நாடு முழுவதும் மூண்ட இந்து - முஸ்லிம் மோதலில் 2000-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
            இப்போது, விஷ்வ ஹிந்து பரிஷத் மீண்டும் நெருப்புடன் விளையாடுகிறது. திருவாளர் மோடி, இந்தியாவின் வளர்ச்சிக்கு பல நம்பிக்கைக்குரிய திட்டங்களை முன்வைத்துள்ளார். ஆனால், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பார்வையில் இந்தியாவின் எதிர்காலம் குறித்த கணிப்பு "மதச்சார்புகளால் பிரிந்துகிடக்க வாய்ப்பு கொடுக்காத வரையில் இந்தியாவின் வெற்றி நீளும்" என்பதாக இருக்கிறது. இத்தகையச் சூழலில், மத சகிப்புத்தன்மை தேய்ந்து வருவது குறித்து திரு.மோடி தனது செவியை கூராக்கி, மவுனத்தை கலைக்க வேண்டும்."
தமிழில்: பாரதி ஆனந்த் 
நன்றி : தி இந்து - தமிழ் 

ஒபாமாவின் முதலைக் கண்ணீரும், மோடியின் மவுனமும்...!

              
                அமெரிக்க அதிபர் ஒபாமா இந்திய குடியரசு தினக் கொண்டாட்டத்திற்கு வருவதற்கு முன்பே பல்வேறு அவசர சட்டங்களும், வரவேற்புகளுமாக பிரதமர் நரேந்திரமோடி காட்டிய ஆரவாரமும் ஆர்ப்பரிப்பும், ஒபாமா இந்தியாவில் தங்கியிருந்தபோது ''நிமிட்டுக்கு நிமிட்'' இலட்சக்கணக்கில் செலவு செய்து தயாரிக்கப்பட்ட வகைவகையான புத்தாடைகளை உடுத்தி மோடி வெளிப்படுத்திய ஆரவாரமும், ஆர்ப்பரிப்பும், உற்சாகமும்  ஒபாமா இந்தியாவை விட்டு பறந்து சென்றவுடன் சத்தமில்லாமல் அடங்கிப்போய் விட்டதே ஏன்...? திருடனுக்கு தேள் கொட்டியதுபோல் மோடி சத்தமில்லாமல் அடங்கிவிட்டாரே ஏன்...?
               கடந்த மாதம் இந்திய குடியரசு தினவிழாவில் கலந்து கொள்வதற்காக மூன்று  நாள் பயணமாக இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது பயணத்தின் இறுதி நாளான ஜனவரி 27-ஆம் தேதி அன்று புதுடெல்லியில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய ஒபாமா, ''இந்தியாவின் வளர்ச்சிக்கு மத சகிப்புத்தன்மை மிகவும் அவசியம். மத சகிப்புத்தன்மை இல்லாமல் இந்தியா இல்லை'' என்று  மோடியின் தலையில் நறுக்கென்று ஒரு ''குட்டு'' வைத்தார். சாத்தான் வேதம் ஓதுகிறது என்பது வேறு விஷயம். ஆனால் சற்றும் எதிர்ப்பார்க்காத அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்தப் பேச்சு மோடியை மட்டுமல்ல ஒட்டுமொத்த பாரதீய ஜனதாக்கட்சியையே அதிரவைத்தது. காசு கொடுத்து சூனியம் வைத்துக்கொண்ட கதையா போச்சு. 
                ஒபாமாவின் இந்தப் பேச்சு துரதிர்ஷ்டவசமானவை என்று பாரதீய ஜனதாக்கட்சி தான் சொல்லியதே தவிர மோடி அதைப்பற்றி இதுவரை வாயை திறக்கவே இல்லை. இப்படியிருக்க ஒபாமா நேற்று அமெரிக்க வெள்ளை மாளிகையிலிருந்து இன்னொரு அஸ்திரத்தை மோடியின் மீது வீசினார். 
                 தனது  இந்திய சுற்றுப்பயணம் குறித்து வாஷிங்டனின் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமா  பேசும்போது, "மகாத்மா காந்தி மீது இந்தியா வைத்திருக்கும் அதே நன்மதிப்பை அமெரிக்காவும் கொண்டுள்ளது. மிக அற்புதமான, பன்முகத்தன்மை கொண்ட அழகான நாடாக இந்தியா உள்ளது. அங்கு பார்த்த ஒவ்வொரு கலாச்சாரத்தையும் கண்டு நானும் மிஷேலும் வியப்படைந்தோம். ஆனால் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு மதக்கோட்பாடுகளும், அவர்களது கலாச்சார நிகழ்ச்சிகளும் தொடர்ந்து குறிவைக்கப்படுகிறது. அதனால்  இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் ''மத சகிப்புதன்மையின்மையை'' இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட மகாத்மா காந்தி கண்டிருந்தால் அதிர்ந்து போயிருப்பார்" என்ற உண்மையை சொல்லி முதலைக்கண்ணீர் வடித்திருக்கிறார். 
               ''இந்தியாவில் தற்போது மத சகிப்புத்தன்மை இல்லாததை காந்தியடிகள் காண நேர்ந்தால் அவர் அதிர்ச்சிக்குள்ளாகி இருப்பார்'' என்று ஒபாமா வெளிப்படுத்திய கருத்து மோடியின் தலையில் இடியாய் விழுந்திருக்கிறது. ஆனால் ஒபாமாவின் இந்த கருத்துக்கும் மோடி மட்டுமல்ல பாரதீய ஜனதாக்கட்சியும் இதுவரையில் வாயை திறக்கவில்லை. மவுனம் சாதிக்கின்றனர். ஒபாமாவின் இந்த கருத்துக்கு மோடி மவுனமாய் இருப்பது என்பது ஒபாமாவின் ''மதம்'' சார்ந்த கருத்தில் மோடிக்கு ''சம்மதமே'' என்று எடுத்துக்கொள்ளலாமா...?