இடதுசாரி கட்சிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இடதுசாரி கட்சிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 23 ஏப்ரல், 2014

மாற்று அரசியல் இடதுசாரிகளால் தான் சாத்தியம்...!


       மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர்.பிரகாஷ்காரத் அவர்களுடன் நேர்காணல்.                    

           இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரை நூற்றாண்டுக்கு முன் பிரிந்ததற்கான நியாயம் இன்னும் நீடிக்கிறதா? ஏன் இந்தியாவில் உள்ள எல்லா இடதுசாரி அமைப்புகளும் ஒன்றுசேரக் கூடாது?

                இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் 1964ல் பிளவு ஏற்பட சித்தாந்த, அரசியல் கார ணங்கள் அடிப்படையாக இருந்தன. அதற்குப் பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இரு கட்சிகளாகச் செயல்படுகின்றன. இந்த இருகட்சிகளிடையே ஒற்றுமையையும் வலிமையையும் வலுப்படுத்துவதன் மூலமாகவே இடதுசாரி இயக்கத்தின் இருப்பை வலுவாக வெளிப்படுத்தலாம் என்று நான் நினைக்கிறேன்.

         உலகெங்கும் கம்யூனிஸ்ட்டுகள் அவரவர் நாட்டுக்கேற்ப கட்சியைக் கட்டியிருக்கிறார்கள். சீனா ஒரு துருவம் என்றால், கியூபா ஒரு துருவம். இந்தியாவுக்கேற்ப கட்சியைக் கட்டமைக்க கம்யூனிஸ்ட்டுகள் தவறிவிட்டீர்களா?

           இந்தியச் சூழலுக்கு ஏற்ப மார்க்சிஸத்தைப் பயன்படுத்தத் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது. உலகின் பிற கம்யூ னிஸ்ட் கட்சிகளைவிட நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பில் பணிபுரிவதில் எங் களுக்குத்தான் அனுபவம் அதிகம் என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம்.

        சுதந்திரத்துக்குப் பின் கொஞ்சம் கொஞ்ச மாக காங்கிரஸ் மக்கள் ஆதரவை இழந்தே வந்திருக்கிறது. ஆனால், ஒருகாலத்தில் நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியாக இருந்த இடதுசாரிகள் இதன் பலனை அறுவடை செய்து கொள்ளும் நிலை இல்லை. இதற்கான காரணம் என்ன?

               இடதுசாரிகளுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்று நீங்கள் சொல்ல முடியாது. உதாரணமாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை எடுத்துக்கொண்டால், கட்சி 1964-ல் நிறுவப்பட்டது. காங்கிரஸூக்கு எதிராக 1967லிலும் நெருக்கடி நிலைப் பிர கடனத்துக்குப் பிறகு 1977லிலும் பெரிய அலை வீசியது. 1967-ல், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நடத்திய போராட்டங்கள் காரணமாக நாங்கள் செல்வாக்கு பெற முடிந்தது. கேரளத்திலும் மேற்கு வங்கத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் இடதுசாரிகளின் கூட் டணி அரசுகள் பதவிக்கு வந்தன. 1990களில் முழுக்க நாங்கள்தான் மூன்றாவது பெரிய கட்சி. நாடாளுமன்றத்தின் 75 தொகுதிகள் முதல் 85 தொகுதிகள் வரையில்தான் நாங் கள் போட்டியிடுகிறோம் என்றாலும், 5சதவீதம் முதல் 6சதவீதம் வரையிலான வாக்குகளைப் பெற்றுவருகிறோம். இக்கால கட்டத்தில் மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா ஆகியமாநிலங்களில் ஆட்சியிலும் இருந்திருக்கிறோம்.

மோடியின் ‘குஜராத் மாதிரி வளர்ச்சி’ யை எப்படிப் பார்க்கிறீர்கள்?

        மோடியின் குஜராத் மாதிரியையும் பாஜகவின் வளர்ச்சிக் கோட்பாட்டையும் நாங்கள் முற்றிலுமாக நிராகரிக்கிறோம். அது பெருநிறுவனங்களுக்குச் சாதகமானது, செல்வம் சிலரிடம் மட்டுமே குவியவும் மக்களிடையே ஏற்றத்தாழ்வு மேலும் அதிகமாகவும் மட்டுமே அது வழிவகுக்கும்.

          சரி, நரசிம்மராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங் முன்னெடுத்த பொருளாதாரக் கொள்கைகள் சரியில்லை. மோடி உச்சரிக்கும் வளர்ச்சியும் எல்லோருக்குமான உண்மையான வளர்ச்சியாகத் தெரியவில்லை. அப்படியென்றால், உங்களைப் பொறுத்த அளவில் வளர்ச்சிக்கான வரையறைதான் என்ன? அதற்கான செயல்திட்டம் என்ன?

         நாங்கள் வளர்ச்சிக்கு மாற்றுப் பாதையை வகுத்திருக்கிறோம். விவசாயத்தை நம்பியுள்ள நம்முடைய உற்பத்தி முறையை ஜனநாயக வழியில் மாற்றி அமைக்கும்போது, அதனால் ஏழைகளும் கிராமப்புற மக்களும் பலன் அடைவார்கள். பொது முதலீட்டை அதிகரிப்பது, உள்ளூரில் தேவைகளை ஏற்படுத்துவது, அதன் மூலம் தொழில்துறை வளர்ச்சியையும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்குவது போன்றவை எல்லோருக்குமான வளர்ச்சியை முன்னெடுக்கும் எங்கள் மாற்றுப்பாதையின் முக்கிய அம்சங்கள்.

        கம்யூனிஸ்ட்டுகளின் பலம் எப்போதுமே தொழிலாளர் வர்க்கம்தான். ஆனால், இன்றைக்குப் பத்து ரூபாய்க்கு மூட்டை தூக்குபவரும் தொழிலாளி; மாதம் லட்ச ரூபாய் வாங்கும் கணிப்பொறியாளரும் தொழிலாளிகள் தான். இந்த இரு வேறுபட்ட தொழிலாளிகளையும் ஒன்றிணைக்கும் - கட்சியை நோக்கி இழுக்கும் செயல்திட்டம் கட்சியிடம் இருக்கிறதா? வெளியிலிருந்து பார்க்க அப்படித் தெரியவில்லை?

        உழைக்கும் வர்க்கத்தில் மாற்றங்கள் ஏற் பட்டுவருகின்றன. உழைக்கும் வர்க்கத்தில் பெரும்பான்மையோர் அமைப்பு ரீதியாகத் திரட்டப்படாததுதான் இப்போதைய பிரச் சனையே. இந்த விஷயத்தில் இப்போது கட்சி நிறைய கவனம் செலுத்துகிறது.

பிராந்தியக் கட்சிகளின் வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

        இந்தியா போன்ற நாட்டில் மாநிலக் கட்சிகளுக்குத் தேவை இருக்கிறது. வெவ்வேறு பின்னணி கொண்டவர்கள் இணைந்து வாழும் சமஷ்டி அமைப்பு நமக்கு முக்கியம்.

       பிரச்சனைகளை அணுகும்போது தேசியக்கட்சியாக அணுகுவதா, மாநிலக் கட்சியாக அணுகுவதா என்பதில் கட்சிக்குக் குழப்பம் இருக்கிறதா?

இல்லை. நாட்டுக்கு எது தேவையோ அதையே சொல்கிறோம்; செய்கிறோம்.

        மேற்கு வங்கத்தில் வன்முறை அரசியலை இடதுசாரிகள் கையாண்டீர்கள் என்ற கடுமையான குற்றச்சாட்டு உங்கள் மீது உண்டு. இன்று அதையே திரிணமுல்காங்கிரஸிடமிருந்து நீங்களும் எதிர்கொள்கிறீர்கள். இந்த அரசியல் வேட்டையை முடிவுக்குக் கொண்டுவர ஏதேனும் நட வடிக்கை எடுத்திருக்கிறீர்களா?

          எப்போதுமே ஏழைகளுக்காகவும் ஆதிக்கத்துக்கு எதிராகவும் போராடும் கட்சி இது. மக்களைச் சுரண்டிப் பிழைப்பவர்கள் எங்களுக்கு எதிராக வன்முறைகளைக் கையாண்டனர் என்பதே வரலாறு. 1970 களில் எங்கள் கட்சிக்கு எதிராக வன் செயல்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இப்போது திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியிலும் அதே போன்ற சூழலைப் பார்க்கிறோம். இதை மறைக்கத்தான் நாங்கள் ஆட்சி யிலிருந்தபோது வன்செயல்களில் ஈடு பட்டதாகத் திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்யப் படுகிறது. நாங்கள் எப்போதும் வன்முறைக்கு எதிராகவே இருக்கிறோம்.

உங்களை நெருக்கமாகப் பார்க்கும் பலரும், “கட்சி கொஞ்ச காலத்துக்கேனும் - ஓரிரு தேர்தல்களுக்கேனும் - தேர்தல் அரசியலைப் புறக்கணித்துவிட்டு, மக்கள் மத்தியில் செயலாற்றச் செல்ல வேண்டும்; அமைப்பை வலுவாக்கிவிட்டு, பின்னர் மீண்டும் தேர்தல் அரசியலுக்குத் திரும்ப வேண்டும்” என்கிறார்கள். ஏன் செய்யக் கூடாது?

         நீங்கள் மாற்றிக் கூறுகிறீர்கள். உண்மையில், எங்கள் மீதான குற்றச்சாட்டே நாங்கள் தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை என்பதுதான். எங்களுடைய முக்கியமான வேலையே மக்களிடையே களப்பணி செய்வதுதான். எங்களுடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகள், இளைஞர்கள், மாணவர், மகளிர் இயக்கங்களில் பணிபுரிகின்றனர். இந்த அமைப்புகள் மூலம்தான் எங்களுடைய அரசியல் செல்வாக்கை வளர்த்துக்கொள்ள முடியும் என்று நம்புகிறோம். அப்போதுதான் அது தேர்தல் வெற்றியில் எதிரொலிக்கும்.

          இந்தத் தேர்தல் அரசியல் மூலம் நீங்கள் வாக்காளர்களுக்குக் கொடுக்கும் வாய்ப்பு என்ன? அதாவது, எத்தனையோ கட்சிகள் இருக்கும்போது ஏன் மக்கள் இடதுசாரிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

          ஒரு வாக்காளர் ஊழலற்ற ஆட்சியை விரும்புகிறார் என்றால், எல்லோருக்குமான வளர்ச்சியை விரும்புகிறார் என்றால், அது இடதுசாரிகளிடம்தான் சாத்தியம். ஏனென்றால், சுத்தமான கைகள் இடதுசாரி களுடையவை. மாற்று அரசியல், பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டவர்கள் இடதுசாரிகள். பெருநிறுவனங்கள், பணமூட்டைகள் அரசியலை ஆக்கிரமிக்கக் கூடாது என்று நினைத்தால், இடதுசாரிகளைத்தான் தேர்ந்தெடுக்க முடியும்.

நேர்காணல் : சமஸ்
நன்றி : தி இந்து (தமிழ்) ஏப். 22-4-2014

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

இடதுசாரி மாற்று அணியே ஆட்சி அமைக்கும்....!

   
            சென்னையில் 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி பிறந்த சீதாராம் யெச்சூரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் மட்டுமல்ல, அந்தக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் தலைவரும் கூட. கல்லூரி நாள்களிலேயே மாணவர் இயக்கத்துடன் தொடர்பு கொண்ட சீதாராமின் அரசியல் பயணம் அவசரநிலைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதுடன் தொடங்கியது. மிசாவில் கைது செய்யப்பட்ட மாணவர் தலைவர்களில் இவரும் ஒருவர். மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தின் வலதுகரம். இன்றைய தலைமுறை மார்க்சீய சிந்தனையாளர்களில் குறிப்பிடத்தக்கவர். இடதுசாரி இயக்கங்களின் பிரபலமான ஊடகத் தொடர்பாளர்.
''தினமணி'' ஆசிரியர் கே. வைத்தியநாதனுக்கு சீதாராம் யெச்சூரி அளித்த சிறப்புப் பேட்டி:
         "பிளவுக்குப் பிறகு, 1964இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டு அரை நூற்றாண்டு காலமாகிறது. இந்த இயக்கத்துக்கான அவசியம் முடிந்துவிட்டதாகக் கருதுகிறீர்களா?''

          "தேர்தல் வெற்றி தோல்விகளும் அரசியல் பின்னடைவுகளும் ஒரு இயக்கத்தின் வளர்ச்சியையோ செயல்பாடுகளையோ பாதித்துவிடாது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இடதுசாரி இயக்கங்களின் இன்றியமையாமை இப்போதுதான் உருவாகி இருக்கிறது. இன்று இந்தியா எதிர்கொள்ளும் எல்லாவிதப் பிரச்னைகளுக்கும், இடதுசாரி இயக்கங்கள் வலுவிழந்ததும், எங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்ததும்தான் காரணம் என்பதை மறந்துவிடாதீர்கள்.''

"எதனால் அப்படிச் சொல்கிறீர்கள்?''
 
        "எங்களது ஆதரவில் முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்ததுவரை, மன்மோகன் சிங் அரசில் மெகா ஊழல்கள் எதுவும் நடைபெறவில்லை என்பது உலகறிந்த ரகசியம்.

        "ஏதோ உங்களது ஆதரவில் இருந்ததுவரை மன்மோகன் சிங் அரசு சிறப்பாக செயல்பட்டது போலப் பேசுகிறீர்களே, எப்படிச் சொல்கிறீர்கள்?''

             கடந்த 60 ஆண்டுகளாக நமது அரசியல் சட்டம் மக்களுக்கு அளிப்பதாகச் சொன்ன எந்தவித உரிமைகளையும் எந்த அரசும் நிறைவேற்றாத நிலையில், 2004இல் இடதுசாரிகளின் ஆதரவுக்கு அடிப்படையான நாங்கள் வடிவமைத்த குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அம்சங்கள்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம், நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம், கல்விக்கான உரிமைச் சட்டம், உணவுப் பாதுகாப்பு மசோதா போன்ற எல்லாமே. இந்த அம்சங்களை ஒன்றன்பின் ஒன்றாக மன்மோகன் சிங் அரசு நிறைவேற்றியதற்குக் காரணம் எங்களது வற்புறுத்தல்தான். இந்தத் திட்டங்களுக்கு அடித்தளம் அமைத்தவர்கள் நாங்கள். பெருமை தட்டிச் சொல்வது அவர்கள்.''

          "2004இல் மன்மோகன் சிங் அரசை ஆதரித்து, ஆட்சியில் அமர்த்தியதற்கு என்ன காரணம்?''

          அந்தத் தேர்தலில், மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களது 61 இடதுசாரி எம்.பி.க்களில் 57 பேர் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராகப் போட்டியிட்டு வென்றவர்கள். அப்படி இருந்தும் நாங்கள் குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் ஆதரவளித்ததற்குக் காரணம், தேசத்தை எதிர்நோக்கியிருந்த மிகப்பெரிய பிரச்னையான மதவாதம். மத்திய அரசு 2004இல் மீண்டும் மதவாதக் கட்சிகளின் அதிகாரத்திற்கு உள்பட்டிருந்தால், இந்தியாவின் ஒற்றுமையே குலைந்திருக்கும். அதைத் தடுக்க வேண்டிய வரலாற்று நிர்பந்தம் இடதுசாரிகளுக்கு இருந்தது.''

                "நீங்கள் உறுதியாக இருந்திருந்தால் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்குமா?''

              "அந்தத் தவறை நாங்கள் வெளிப்படையாக ஏற்றுக் கொள்கிறோம். இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தொடங்கியபோதே நாங்கள் ஆதரவைத் திரும்பப் பெறுவோம் என்று திட்டவட்டமாகக் கூறியிருந்திருக்க வேண்டும். எங்களை நம்ப வைத்துக் கழுத்தறுத்துவிட்டது காங்கிரஸ். எங்கள் தயவில் மன்மோகன் சிங் அரசு ஆட்சியில் தொடர்வது தங்களுக்கு பாதகமாக இருக்கிறது என்பதால், கார்பரேட் நிறுவனங்களும் அவர்களது கைப்பாவைகளாக செயல்படும் ஊடகங்களும், எங்களை வெளியேற்றுவதில் குறியாக இருந்தன. கடைசியில் வெற்றியும் பெற்றன.''

         "நீங்கள் 2ஜி முறைகேடுகள் பற்றி விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக்குழுவில் உறுப்பினராக இருந்தீர்கள். உங்களது கருத்துப்படி, 2ஜி முறைகேட்டில் மன்மோகன் சிங்கிற்கும், ப. சிதம்பரத்திற்கும் தொடர்பு உண்டு என்று கருதுகிறீர்களா?
 
             "தொடர்பு உண்டா இல்லையா என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியாது. ஆனால், அவர்கள் இருவருக்கும் தெரிந்துதான் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு நடந்திருக்கிறது என்பதை மட்டும் என்னால் உறுதியாகக் கூறமுடியும். மன்மோகன் சிங்கும், ப. சிதம்பரமும் ஒப்புதல் வழங்காமல் நிச்சயமாக ஆ. ராசா 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அவர் கையாண்ட வழிமுறைகளைச் செய்திருக்க முடியாது. பிரதமர், நிதியமைச்சர், தகவல் தொலைத் தொடர்பு அமைச்சர், அதாவது, மன்மோகன் சிங், ப. சிதம்பரம், ஆ. ராசா ஆகிய மூவர் மட்டுமே கலந்து கொண்ட ஒரு மேல்மட்டக் கூட்டம் நடந்திருக்கிறது. அதைத் தொடர்ந்துதான் ஆ. ராசா அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான வழிமுறையை அறிவிக்கிறார்.''

        "இதை நீங்கள் ஏன் வெளிப்படையாகத் தேர்தல் பிரசார மேடைகளில் கூறவில்லை?''


           "நாங்கள் எங்கள் பிரசாரத்தில் தொடர்ந்து கூறி வருகிறோம். நீங்கள்தான், அதாவது ஊடகங்கள்தான் அதற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கையில் நான் எனது எதிர்க்கருத்தை வன்மையாகவே பதிவு செய்திருக்கிறேன். அதுமட்டுமல்ல, பிரதமர் மன்மோகன் சிங்கையும், நிதியமைச்சர் ப. சிதம்பரத்தையும் ஜே.பி.சி. தலைவர் காப்பாற்ற முயற்சிக்கிறார் என்று தெளிவாகவே எனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறேன்.''

         "அப்படியானால் உறுப்பினரான நீங்கள் அவர்களை ஏன் விசாரணைக்கு அழைக்க வற்புறுத்தவில்லை? ஆ. ராசாவின் கோரிக்கையை ஏன் வழிமொழியவில்லை?''


             "நாங்கள் பிரதமரையும், நிதியமைச்சரையும் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு அழைத்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். அது மறுக்கப்பட்டது. அப்படியானால், நாங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு எழுத்துமூலம் பிரதமரையும், நிதியமைச்சரையும் பதிலளிக்கச் சொல்லுங்கள் என்று கேட்டோம். அதையும் கூட்டுக் குழுவின் தலைவர் ஏற்றுக் கொள்ளவில்லை. மன்மோகன் சிங்கும், ப. சிதம்பரமும் ஒன்றுமே தெரியாத புனிதர்களல்ல. 2ஜி முறைகேட்டில் அவர்களது தொடர்பு மறைக்கப்படுகிறது.''

 "இடதுசாரி இயக்கம் நோக்கம் இழந்துவிட்டதாகக் கருதுகிறீர்களா?

             "நிச்சயமாக இல்லை. சில பலவீனங்களை நாங்கள் எதிர்கொள்கிறோம் என்பது வேண்டுமானால் உண்மை. அந்த பலவீனங்களை அகற்றினால் மட்டுமே இடதுசாரி இயக்கத்தையும், இந்தியாவையும் காப்பாற்ற முடியும் என்பது அதைவிட உண்மை. கடந்த 20 ஆண்டு கால புதிய பொருளாதாரக் கொள்கையின் பாதிப்பு இந்திய ஜனநாயகத்தின் அடித்தளத்தையும், பொருளாதாரத்தின் அடிப்படையையும் ஆட்டம்காண வைத்திருக்கிறது. எல்லோரும் மெகா ஊழல்களையும் முறைகேடுகளையும் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். இந்த முறைகேடுகளுக்குக் காரணம், அரசின் பொருளாதாரக் கொள்கைதான் என்பதை மக்களை உணர வைக்கவும், இதற்கு மாற்றாக மக்கள் சார்ந்த கொள்கைகளை முன்வைக்கவும் இடதுசாரிகளால் மட்டுமே முடியும்.''
 
 ''பொருளாதாரக் கொள்கைகளுக்கும் ஊழலுக்கும் என்ன தொடர்பு?''

             "ஏன் இல்லை. தனியார்மயம் என்று வரும்போது, அதிலும் பல லட்சம் கோடி ரூபாய் பணம் புரளும் துறைகளைத் தனியாருக்குத் திறந்துவிடும்போது, நீ, நான் என்று கார்ப்ரேட் நிறுவனங்கள் மத்தியில் போட்டி உருவாகிறது. இதுதான் மெகா ஊழல்களின் ஊற்றுக்கண். நாங்கள் ஊற்றுக்கண்ணை அடைக்க விரும்புகிறோம். ஆம் ஆத்மி கட்சி போன்றவர்கள் ஊழலின் அடையாளங்களை எதிர்த்துப் போராடுகிறார்கள், இதுதான் வித்தியாசம்.''

"அவர்களது போராட்டத்திற்கு இருக்கும் வரவேற்பு உங்கள் போராட்டங்களுக்கு இல்லையே, அது ஏன்? இடதுசாரி இயக்கம் மக்கள் ஆதரவை இழந்துவிட்டதுதான் காரணமா?

           "அல்ல, ஊடகங்கள் எங்களை இருட்டடிப்பு செய்வதுதான் காரணம். விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடாளுமன்றத்தை இந்தியா முழுவதிலிருந்தும் உள்ள இரண்டு லட்சம் தொண்டர்களுடன் முற்றுகை இடுகிறோம். அது ஊடகங்களுக்குத் தெரிவதில்லை. தொலைக்காட்சிச் சேனல்கள் முன்னுரிமை அளிப்பதில்லை. ஜந்தர் மந்தரில் அண்ணா ஹசாரே தலைமையில் இருபதாயிரம் பேர் கூடியதை இரண்டு வாரங்கள் பெரிய புரட்சி நிகழ்ந்துவிட்டதாக விளம்பரப்படுத்தினார்கள். நீறுபூத்த நெருப்பாக இடதுசாரி இயக்கம் உயிர்ப்புடன்தான் இருக்கிறது.''

"மற்றவர்கள் அடையாளங்களை எதிர்த்துப் போராடுவதாகவும், நீங்கள் மட்டும்தான் கொள்கை ரீதியாகப் போராடுவதாகவும் எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்?

           "புதிய பொருளாதாரக் கொள்கைகளை முன்வைக்கும் முதலாளித்துவவாதிகளுக்கு எதிரான வாதத்தை இடதுசாரிகள் மட்டுமே முன்வைக்கிறோம். விமர்சனங்கள் எதுவுமே ஏனையோரால் எழுப்பப்படுவதில்லை. பாரதிய ஜனதாவோ, ஆம் ஆத்மி கட்சியோ, தி.மு.க., அ.தி.மு.க. போன்ற மாநிலக் கட்சிகளோ அவர்களுக்கு எந்தவித ஆபத்தையும் தரப்போவதில்லை.''

"இதுவரை கடந்த பல தேர்தல்களில் இடதுசாரிகள் தங்கள் அணியில் இருப்பது பெருமை என்று கருதியிருந்த மாநிலக் கட்சிகள் இந்தத் தேர்தலில் உங்களைத் தனிமைப்படுத்தி இருக்கின்றனவே, அது பலமா, பலவீனமா?

           "அவர்களறியாமல் எங்களுக்கு மிகப்பெரிய உதவியைச் செய்திருக்கிறார்கள். இனிமேல் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இடதுசாரிகள் யாரையும் சார்ந்திராமல், அந்த மாநிலக் கட்சிகள் செய்யும் தவறுகளுக்குப் பொறுப்பேற்காமல் தன்னிச்சையாக செயல்படவும், மக்கள் சக்தியாக வளர்ச்சி அடையவும் வழிகோலி இருக்கிறார்கள். இது தாற்காலிக பலவீனமாகத் தெரியலாம். ஆனால், நிச்சயமாக மிகப்பெரிய பலம்.''

"இனியும் இடதுசாரி இயக்கங்கள், குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தனித்தனி அமைப்புகளாக செயல்படுவது அவசியம்தானா? இணைப்பு சாத்தியமில்லையா?

            "இணைந்து செயல்படுகிறோம். இதுவே காலப்போக்கில் இணைப்பாக மாறக்கூடும். நாமாக முயற்சிப்பதைவிடத் தானாக நடைபெறுவதுதான் நிலையானதாக இருக்கும். இணைப்புக்கான அவசியம் இருக்கத்தான் செய்கிறது.''

 "அ.தி.மு.க. தனது அணியிலிருந்து இடதுசாரிகளைக் கழற்றி விட்டது பற்றி உங்களது கருத்து என்ன?

               "அது அவர்கள் தன்னிச்சையாக எடுத்த முடிவு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. எங்களது  சுயமரியாதையை இழந்து நாங்கள் தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ ஒதுக்கும் ஒன்றிரண்டு இடங்களுக்காகக் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. இடதுசாரிகள் இல்லாவிட்டால், எந்தவொரு மாநிலக் கட்சிக்கும் மக்கள் மன்றத்தில் மரியாதை இருக்காது என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும். அது தமிழகமானாலும் சரி, ஆந்திரம், பிகார், உத்தரப்பிரேதசமானாலும் சரி!''

"எந்தவொரு அணிக்கும் பெரும்பான்மை வராமல் போனால் நீங்கள் காங்கிரஸ் ஆதரவுடனான மூன்றாவது அணி அரசு அமைய முயற்சிப்பீர்களா மாட்டீர்களா?

 "மதச் சார்பற்ற, அதே நேரத்தில் மாற்றுப் பொருளாதார சிந்தனையுடைய அரசு அமைய வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். மாற்றுப் பொருளாதாரம் என்று சொன்னால், மெகா ஊழல்களுக்கு வழிகோலும் மன்மோகன் சிங் அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைக்கு எதிரான பொருளாதாரம் என்று பொருள். இந்த விஷயத்தில் காங்கிரஸூக்கும், பா.ஜ.கவுக்கும் உள்ள வேறுபாடு சதவிகிதங்களில்தானே தவிர, மதச்சார்பு, பொருளாதாரக் கொள்கை இரண்டிலுமே இந்த இரண்டு கட்சிகளும் ஏறத்தாழ ஒத்த கருத்துடையவைதான் என்பது எங்கள் கருத்து.''

"அ.தி.மு.க. உங்களைக் கைவிட்ட நிலையில் தி.மு.க. தனது அணியில் சேர்த்துக் கொள்ளத் தயாராக இருந்ததே, நீங்கள் ஏன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை?
           
               "காங்கிரஸூம், பா.ஜ.க.வும்போல தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள், அவ்வளவே. மெகா ஊழலான 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை வெளிக் கொணர்ந்ததும், முதன் முதலில் அதற்கு எதிராகக் குரல் கொடுத்ததும் இடதுசாரிகள்தான். நாங்கள் எப்படி தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க முடியும்? ஏறத்தாழ 14 1/2 ஆண்டு காலம் தொடர்ந்து மத்திய அரசில் அங்கம் வகித்த ஒரே ஒரு மாநிலக் கட்சி தி.மு.க.தான். மதச்சார்பு பற்றியோ, மாற்றுப் பொருளாதாரம் பற்றியோ பேசும் அருகதை தி.மு.க.வுக்குக் கிடையாது!''

"மூன்றாவது அணி ஆட்சி அமைந்தால் பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா என்று முதலில் அறிவித்தீர்களே, இப்போதும் அதுதான் உங்கள் அபிப்பிராயமா?''

           "நாங்கள், அதாவது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் ஜெயலலிதாவைப் பிரதமர் பதவி வேட்பாளர் என்று கருதவும் இல்லை, அறிவிக்கவும் இல்லை. யார் பிரதமர் என்பது தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு தீர்மானிக்க வேண்டிய பிரச்னை.''

"2014 தேர்தலில் இடதுசாரிகளின் குறிக்கோள் என்ன?

            "மதவாத சக்திகளின் பிடியில் இந்தியா சிக்கிவிடாமல் காப்பதும், மெகா ஊழல்களின் ஊற்றுக்கண்ணான புதிய பொருளாதாரக் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து மாற்றுப் பொருளாதார சிந்தனைக்கு வழிகோலுவதும்தான் எங்கள் குறிக்கோள்.''

"உங்களுடைய முதல் எதிரி காங்கிரஸா, பா.ஜ.கவா?

 "இரண்டும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று ஏற்கெனவே கூறிவிட்டேன்.''

"இன்னுமா இடதுசாரிகளின் ஆதரவுடன் மூன்றாவது அணி ஆட்சி அமையும் என்று நம்புகிறீர்கள்?

          "போராளிகள் நம்பிக்கை இழப்பதில்லை. இந்தியாவைப் போன்ற பலதரப்பட்ட கலாசாரங்கள் உள்ள நாட்டில் கூட்டணி அரசுதான் சாத்தியம். நல்லது. தேவை. அதற்கான இடதுசாரிகளின் முயற்சி தொடரும்.''

நன்றி : தினமணி

சனி, 29 மார்ச், 2014

இடதுசாரிகளே நாட்டின் இன்றைய தேவை...!

          
       காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில், கடந்த பத்தாண்டுகளில் தங்களின் சாதனைகளாக மக்கள் முன் வைத்திருப்பது உணவுக்கான உரிமை (Right to food), தகவலுக்கான உரிமை (Right to information) மற்றும் நிலம் கையகப்படுத்தும் சட்டம் (Land Acquisition Act) ஆகியவை தான். ஆனால் இவை மூன்றும் ஐ.மு.கூ-1 அரசின் முதல் நான்கு ஆணடுகளில் இடதுசாரிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். 2004ம் ஆண்டில் ஐ.மு.கூ.-1 அரசிற்கு குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் தான் இடதுசாரிகள் ஆதரவு அளித்தனர். இடதுசாரிகளின் நிர்ப்பந்தத்தால் தான் இவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டன. இந்திய நாட்டில் வளங்களுக்கு எந்தவித குறைவுமில்லை. ஆனால் வளங்கள் அனைத்தும் பணக்காரர்களின் கார்ப்பரேட் நிறுவனங்களின் கஜானாவை நோக்கித் திருப்பப்படுகின்றன.
           கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், பெரும்பணக்காரர்களுக்கும் அளிக்கப்பட்டு வரும் சலுகைகள், இடதுசாரிகள் முன்வைக்கும் ''மாற்றுப்பொருளாதாரக் கொள்கைகள்'' மூலம் நிறுத்தப்படும்; அவர்களிடம் சரியான முறையில் வரி வசூல் செய்யப்படும்; அதன் மூலம் கிடைக்கும் வருவாயை இந்தியத் திருநாட்டின் வளர்ச்சிக்கு திருப்பிவிட வேண்டும்.
            அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சியில் செய்யப்படும் முதலீடு அதிகரிக்க அதிகரிக்க நாட்டில் புதிது புதிதாக வேலைவாய்ப்புகள் பெருகும். அதன்மூலம் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும். இதற்கு மாறாக, காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பொருளாதாரக் கொள்கைகளால், புதிது புதிதாக ஊழல்களும், முறைகேடுகளும் உருவாகிக்கொண்டிருப்பதை மக்கள் உணர வேண்டும்.
        வருகிற நாடாளுமன்றத் தேர்தல் இந்திய நாட்டின் ஏழை-எளிய நடுத்தர மக்களைப் பொறுத்தவரையில் மிக மிக முக்கியமான தேர்தல் ஆகும். இந்த தேர்தல் இந்திய நாடு வருங்காலத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய பொருளாதாரக் கொள்கைகளை தீர்மானம் செய்யக்கூடிய தேர்தல் என்பதை மக்கள் உணரவேண்டும். இந்திய மக்கள் நான்கு சாலைகளின் சந்திப்பில் நின்று கொண்டு இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறார்கள். மாற்று பொருளாதாரக் கொள்கைகள் தான் சரியான பாதை, அதுவே மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என சரியான பாதையை இடதுசாரிக் கட்சிகள் கை காட்டிகளாக நின்று சொல்கின்றனர். அடுத்து அமையக்கூடிய நாடாளுமன்றத்தில் இத்தகைய மாற்று பொருளாதாரக் கொள்கைகளை கொண்டு செல்லவும், மக்கள் ஒற்றுமையை உறுதிப்படுத்தவும், இடதுசாரி எம்.பிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியது மிக மிக அவசியமானது. 
           நாட்டில் கொட்டிக்கிடக்கும் எண்ணற்ற வளங்களின் பயன்கள் அனைத்தும், கோடானுகோடி மக்களுக்கும் அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கும் திருப்பிவிட வேண்டியது காலத்தின் காட்டாயம்!
           அசாம் மாநிலத்தில் பார்பேட்டா, தேஜ்பூர், சில்சார் ஆகிய 3 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. இத்தொகுதிகளில், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார். கவுகாத்தியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் சீதாராம் யெச்சூரி ஆற்றிய உரையின் பகுதிகள் இவை. 
தொகுப்பு : வெ.ராகுல்ஜி

வியாழன், 20 மார்ச், 2014

மாற்றம் சாத்தியமே - அதுவே இந்தியாவின் இன்றைய தேவை...!


அ. சவுந்தரராசன், எம்.எல்.ஏ., அவர்களின் உரை...!

             எல்லா சாலைகளும் ரோம் நகரை நோக்கி என்று சொல்வார்கள். அது போல இப்போது நமது எல்லா சக்திகளும் நாடாளுமன்ற தேர்தலை நோக்கி என்று எண்ணி நாம் செயல்பட வேண்டிய நேரம் இது. நாடாளுமன்ற தேர்தலில் யார் என்ன செய்தார்கள் என்று பார்ப்பதில் தான் நாம் தீர்க்கமான முடிவிற்கு வர முடியும். நம்மைப் பொறுத்த வரையில் நாம் இந்த நாட்டின் உழைப்பாளி மக்களின், நடுத்தர வர்க்க மக்களின், தொழிலாளிகளின், விவசாயிகளின், ஏழை எளிய மக்களின், மிகப் பெரும்பான்மை மக்களின் வாழ்கைக்கான தேவைகளை நிறை வேற்றுவதற்கான கொள்கைகளை பின் பற்றுபவர்களாக, பெரு முதலாளிகளுக்கு சாதகமாக இல்லை என்பதான கொள்கைகளை பின்பற்றுபவர்களாக இருக்கிறோம்.
           மாருதியில் ஒரு அதிகாரி கொலைசெய்யப்பட்ட சம்பவத்தை பயன்படுத்தி தொழிற்சங்கத்தை முடக்குவதற்காக 147 பேரை சிறையில் அடைத்து வைத்துள்ள சம்பவத்தை எடுத்துக் கொண்டால், அவர்களை ஜாமீனில் விடும்படி கோரிநீதிபதியை அணுகினால், நீதிபதி சொல் லக் கூடிய காரணம் இன்றைய உலகமயச் சூழலில், இவர்களை வெளியேவிட்டால் வெளி நாடுகளில் இருந்து வர வேண்டிய மூலதனம் இந்தியாவிற்குள்ளே வராது என்பதாகும். நீதிமன்றமே பிரச்சாரத்தை நடத்துகிறது. தொழிலாளி தன்னை ஒன்றுபடுத்திக் கொள்வதை, ஒரு சக்தியாக்கிக் கொள்வதை, இன்றைய உலகமய சமூகம் ஏற்காது, இன்றைய சட்டம் ஏற்காது. நீதிகள் ஏற்காது. ஸ்ரீபெரும்புதூரிலே, சென் னையிலே எத்தனை தாக்குதல்களை சந்தித்துள்ளோம் என்று அறிவோம். ஆகவே, நம்முடைய பலத்தை நாம் நிலை நிறுத்திக் கொண்டால்தான் நமக்கென்று இருக்கின்ற உரிமைகளைக் கூட நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.எதைச் செய்தாலும், எந்த நடவடிக்கை எடுத்தாலும், அது முதலாளிகளுக்கு இறுதியில் நன்மையை அளிக்க வேண்டும் என்ற வகையில்தான் ஆட்சி யாளர்களால் கொள்கைகள் உருவாக்கப் பட்டு பின்பற்றப்படுகின்றன.
           அன்றைக்கு பொதுத்துறைகளை உண்டாக்கி யதும், இன்றைக்கு அவற்றை சிதைப் பதும் முதலாளிகளுக்காகத்தான். அன்றைய முதலாளிகள் சிறிது பலவீன மானவர்களாக இருந்தார்கள். ஆகவே பொதுத்துறை தேவைப்பட்டது. பொது மக்களின் பணம் தேவைப்பட்டது. அதன் மூலம் கட்டமைப்புகள் உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதனால் மின்சாரம், போக்குவரத்து போன்ற கேந்திரமான துறைகள் அரசு மட்டுமே நடத்தப்பட வேண்டிய துறைகள் என்று முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், இப்போது முதலாளிகள் பலத்தைப் பெற்ற பிறகு அவற்றை அவர்கள் கையில் கொடுத்துவிடுவோம் என்ற கொள்கை நிலைப்பாடு. அதிகமான விலை கொடுத்துத்தான் வாங்க வேண்டும் என்ற நிலை இருந்தாலும், இன்று இரயில்வே உட்பட அனைத்துக் கேந்திரமான துறைகளிலும் தனியாரை அனுமதிப்பதும், அவுட் சோர்சிங், காண்டிராக்ட் என்றுதனியார்மயப்படுத்தும் முயற்சி நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. அதே போல கனரகத் தொழிற் சாலைகளில் தீர்மானிக்கும் சக்தியாக அரசு இருக்க வேண்டும் என்ற நிலைமாறி தனியார் கைகளுக்குக் கொண்டு செல்லும் முயற்சி தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
               1968-69ம் ஆண்டுகளில் பெட்ரோலியத் துறை தனி யாருக்குப் போய்விடக் கூடாது என்பது முடிவாக இருந்தது. கேந்திரமான ஒன்று மக்களுக்கு அவசியம், நாட்டிற்கு அவசியம், பொருளாதாரத்திற்கு அவசியம், சமூக இயக்கத்திற்கு அவசியம் என்று இருக்கின்ற எந்த ஒரு பொருளையும் தனியாரின் ஆதிக்கத்திற்கு விடக்கூடாது என்றிருந்தது. எனவே, அது தனியார் கையில் செல்லக்கூடாது என்று சொல்லப்பட்டது. பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் போன்றவை அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவரப் பட்டன. ஆனால், இன்று நிலைமையே வேறு. இயற்கை எரிவாயுவில் ஓஎன்ஜிசியை விட ரிலையன்சிடம் அதிகமாக உள்ளது. ரிலையன்ஸ் உட்பட பலதனியார் நிறுவனங்கள் பல இலட்சக் கணக்கான கோடி ரூபாயை உபரியாக பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இரண் டாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ரிலையன்சுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது. பிஜேபியை எடுத்துக் கொண்டால் பெரு முதலாளிகளுக்குச் சாதகமான இது போன்ற விஷயங்களில் ஒரு சிறு முணுமுணுப்புக் கூட கிடையாது என்பது தான். காரணம் இரண்டு கட்சி களுமே பெரு முதலாளிகளைப் பொறுத்த வரையில் ஒன்றுபோல் தான் உள்ளன. அதே போல கேந்திரமான துறைகளிலே தனியார்மயம் தேவை என்பதிலும் ஒரே நிலைப்பாட்டினையே கொண்டுள்ளன.இரும்பு, செம்பு போன்றவற்றில் எல்லாம் அரசின் கட்டுப்பாடுகள் இருந் தன.
மின்சாரத் துறையிலும் தனியார்மய முயற்சி. 60 முதல் 70 சதமானம் உற்பத்தி என்பது நம் கையில், அரசின் கையில் இருக்குமானால் முதலாளிகள் மிரட்டுகிறார்கள் என்று சொல்கின்ற நிலை இருக்காது. தமிழ்நாட்டில் 72 ஐடிஐ நிறுவனங் கள் அரசுக்குச் சொந்தமாக உள்ளன. கிட்டத்தட்ட 700 ஐடிஐ நிறுவனங்கள் தனியாருக்குச் சொந்தமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற் றில் பெரும்பாலானவற்றில் மாணவர் களே இல்லை. இன்றைக்குத் தமிழகஅரசாங்கம் என்ன செய்து கொண் டிருக்கிறதென்றால், இந்த தனியார் நிறுவனங்களில் படிக்கும் மாணவர் களுக்கான செலவினை அரசாங்கமே அவர்களுக்கு வேண்டிய கட்டணத்தை கொடுத்துவிடும். தனியாரிடம் படிப் பதற்கு அரசாங்கம் பணம் கொடுக்கும் என்பதை விட உயர்ந்த தரத்தோடு உயர்ந்தகட்டமைப்போடு வேண்டிய ஆசிரியர்களோடு வேண்டிய உபகரணங் களோடு அரசாங்கமே ஐடிஐ நிறுவனங்களை நடத்த முடியும். ஆனால்,அப்படி செய்வதில்லை. அதேபோல் தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் இதேநிலைதான். எல்லா கல்வி நிறுவனங் களையும் நாட்டுடைமையாக்குகிறோம் என்று அறிவிக்கின்ற கொள்கையாவது அரசாங்கத்திற்கு இருக்க வேண்டும்.தாராளமயம் என்றால் என்ன? அரசு எந்தவிதமான பொறுப்பையும் எடுத்துக் கொள்ளாது என்பது தான் தாராளமயம். சந்தை எதை வேண்டுமானாலும் தீர் மானித்துக் கொள்ளும். அதில் அரசு தலையிடாது. அரசு மக்களுக்குத் தேவையான கல்வி, சுகாதாரம் போன்ற அடிப் படை வசதிகளை அளிப்பதில் தலை யிடாது என்பது தான் தாராளமயம். முத லாளிகளுக்கு தாராளம் - ஏழைகளுக்கு ஏமாற்றம் என்பதுதான் தாராளமயம். கட்டுப்பாடு என்பதே இருக்காது என்பது இருக்கக்கூடாது.
                 அப்படி இருந்தால் வசதிபடைத்தவர்கள் மேலும் வளர்வதும், ஏழை எளிய மக்கள் மேலும் நசிவதும் தடுக்கப்பட முடியாமல் போய்விடும்.யார் இந்த நாட்டில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்? பல்வேறு ஏமாற்றுக் கோஷங்களை வைத்து ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நாம் வலுப்பட வேண்டுமென்றால், தொழிலாளிகளின் எண்ணிக்கை விவசாயிகளின் எண்ணிக்கை வலுப் படுத்தப்பட வேண்டியுள்ளது. நாடாளு மன்றத்திலே நமக்கு சாதகமாக ஒரு சிறு மாற்றத்தை ஒரு சிறு திருப்பத்தை கொண்டு வர முடியும் என்றாலும் அதை யும் நாம் பயன்படுத்த வேண்டும் என்பது நமது நிலைப்பாடு. விளைவைப்பற்றி கவலைப்படாமல் தாராளமயக் கொள்கையை அமலாக்கி வரும் காங்கிரஸ் கட்சி. ஊழல் என்பதே தாராளமயத்தின் நேரடியான பலன், நேரடியான விளைவு. எந்த கட்டுப்பாடும் இன்றி வர்த்தகம் செய்யலாம், வியாபாரம் செய்யலாம் என்ற அரசாங்கக் கொள்கை. எதை வேண்டுமானாலும் பணத்தைக் கொண்டு சாதிக்கலாம் விலைக்கு வாங்க முடியும் என்ற கொள்கையின் விளைவு. அதை எதுவும் கட்டுப்படுத்தாது என்ற கொள்கை. அலைக்கற்றை ஊழல் -. 1,76,000 கோடி ஊழல்.
முதலாளிகள் எல்லோரும் கூட்டாக சேர்ந்து கொண்டு அரசாங்கத்துடன் கை கோர்த்து நடத்திய கொள்ளை. ஊழலைப் பொறுத்த வரையில் பாரதீய ஜனதா கட்சியை எடுத்துக் கொண்டால் அதற்கு கடுகளவும் மாற்றுக் கருத்து கிடையாது. இரண்டு கட்சிகளுக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை. நிலக்கரியை சூறையாடுவது, இந்தநாட்டின் கனிம வளங்களை, இயற் கை வளங்களை சூறையாடுவது என்றுஊழல் தொடர்கிறது. தமிழ்நாட்டின்கனிம வளங்களை இந்த நாட்டின் கனிம வளங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்குமானால், அரசாங்கத்திற்கு மக்களுக்குத் தேவை யானவற்றை நிறைவேற்ற தேவை யான ஆதாரங்கள் இருக்கும். வங்கிகள் உட்பட அனைத்தையும் தனியார்மயப்படுத்துவோம் என்பது அர சின் நிலைப்பாடு. வக்கீல்கள் கூடவெளி நாட்டிலிருந்து வந்து வாதாடி விட்டுப் போகலாம் என்று இன்று யோசிக் கிறார்கள். அவரவருக்கு வரும் போது மட்டும் அந்தந்த பகுதியினருக்கு கோபம் வருகிறது. இது மாற்றப்பட வேண்டும். காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளும் அல்லாமல் ஒருவரை யொருவர் சார்ந்து பலர் சேர்ந்து நடைபெறக்கூடிய ஒரு ஆட்சி அமையு மானால்தான் ஏதாவது ஒரு கட்டுப் பாட்டினை கொண்டு வர முடியும். ஒரே யடியாக முதலாளிகளுக்கு சாதகமாக இல்லாமல் சிறிதளவாவது சாதாரண மக்களுக்கு சாதகமாக, வேலையில்லாத் திண்டாட்டம் உட்பட்ட அனைத்துப் பிரச் சனைகளிலும் ஏதேனும் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். இரண்டும் அல்லாத இன்னொன்றை உருவாக்க வேண்டியுள்ளது.
               அதற்கு நாம் முயற்சி செய்கிறோம். ஆனால் என்ன பிரச்சாரம் செய்யப் படுகிறதென்றால் பலமான நிலையான ஆட்சி வேண்டும் என்று. அது யாருக்குத் தேவை சாதாரண மக்களுக்கா?முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது இடதுசாரிகளுடன் ஆதவுடன் இருந்தது என்பதால் நினைத்த தையெல்லாம் செய்துவிட முடிய வில்லை. ஆனால் இரண்டாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது அதற்கு எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் போய்விட்டது. கட்டுப்பாடு இருக்கும் போது நம்மால் ஏழை-எளிய மக்களுக்கு சாதகமான சில விஷயங்களை செய்ய முடியும் என்பதற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் 1 சான்று. அமெரிக் காவிற்கே நாட்டை அடமானம் வைக்கும் நிலைக்கு வந்தபோது தான் நாம் ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தோம். அப்படிப் பட்ட வலுவான சக்தியாக நாம் தற்போது உருவாக வேண்டும். அதேபோல அப் போது நமக்கு அமைச்சர் பதவிகள் உட் பட பல சலுகைகளை அளிக்க முன் வந்தபோது நாம் அதனை ஏற்கவில்லை. மக் களுக்கு சாதகமான சில விஷயங்களை அமலாக்க வேண்டும் என்பதில் தான்நாம் குறியாக இருந்தோம். இது தான்இடதுசாரிகளின் நேர்மை. ஆனால் இன்று திமுகவும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில் இருந்து வெளியே வந்துள்ளது. இது கிண்ட லுக்கும் கேலிக்கும் உரியதாக மாறியிருக் கிறது. அனைத்து நாடுகளிலும் எப்போது தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வீதிக்கு வந்தார்களோ அப்போதுதான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தேர்தல் என்பது இப்போது வருகிறது. நாம் நமது சொந்தபலத்துடன் இருக்க வேண்டும்.
             தொடர்ச்சியாக நாம் செய்ய வேண்டியது பொது வான பிரச்சனைகளின் மீது மக்களை அணி திரட்ட வேண்டும். பிஜேபி அல்லாத காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைய வேண்டும்.வெண்மணி திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரம்மாண்டமாக தொழிலாளி மக்கள் திரண்டார்கள். சொந்தக்காலில் திரண்ட பெருங்கூட்டம் என்று பத்திரிகைகள் எழுதுமளவிற்கு தொழிலாளிகள் திரண்டனர். நம்முடைய வர்க்கத்தின் நன்மைக்கான போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகளுக்கான நிகழ்ச்சி என்ற அடிப்படையில் பெருந்திரளாக அணிதிரண் டனர். வர்க்கப் போரை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதற்கான சான்று. மாற்றம் முக்கியம்- மாற்றம் சாத்தியம்- மாற்றம் அவசியம் என்று சாதாரண மக்களை நம்மால் நெருங்க முடியும்.