பி.சாய்நாத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பி.சாய்நாத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 29 மார்ச், 2015

கார்ப்பரேட் ஏழைகளும் பன்னிரண்டு பூஜ்யங்களும்...!

                                                                                                     
கட்டுரை : பி.சாய்நாத், மூத்த பத்திரிக்கையாளர்                   
           
           தங்கம், வைரம் மற்றும் ஆபரணங்கள் ( இவையெல்லாம் சாதாரண மக்கள் பயன்படுத்திடும் பொருட்களா என்ன? ) போன்றவை இறக்குமதி செய்யப்படும்போது அவற்றின் மீது விதிக்கப்படும் சுங்கவரியில் 75,592 கோடி ரூபாய் இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இத்தொகையானது மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாதச் சட்டத்திற்கு `முன்னெப்போதும் இருந்திராத அளவு’ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகையைக் காட்டிலும் இரண்டு மடங்கிற்கும் கூடுதலான ஒன்றாகும்.
            மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாதச் சட்டம் என்பது பல நூறு கோடி மனித உழைப்பு நாட்களை பல லட்சக்கணக்கான கிராமப்புற ஏழைக் குடும்பங்களுக்கு கடந்த பத்தாண்டுகளில் அளித்தது என பேராசிரியர் ஜெயதி கோஷ் குறிப்பிடுகிறார். ஏழை மக்களுக்கு பயனளித்திடும் இத்தகையதொரு திட்டத்திற்கு வெறும் 34,699 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் விலைமதிப்பு மிக்க ரத்தினங்கள் மீது தள்ளுபடி செய்யப்பட்ட வருமானத்தின் அளவு என்பது மொத்தமாக சுங்க வரியிலிருந்து விலக்களிக்கப்பட்ட தொகையில் நான்கில் ஒரு பகுதியாகும்.
          விவசாயத்திற்கான ஒதுக்கீடு என்பது முந்தைய ஆண்டோடு ஒப்பிட்டு பார்க்கிறபோது 5,000 கோடி ரூபாய்க்கும் மேலாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தங்கத்தின் மீதான சுங்க வரிச் சலுகை என்பது கடந்த 12 மாதங்களில் இருந்த அளவை விட ஐந்து மடங்கிற்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது.

42 டிரில்லியன் ரூபாய்               

           இதனிடையே, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் சலுகை என்பது 42 டிரில்லியன் ரூபாய் (ஒரு டிரில்லியன் என்பது நூறாயிரம் கோடி) என்ற அளவை இந்த ஆண்டு தாண்டியுள்ளது. வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை கொண்டு வருவோம் என நரேந்திரமோடி அரசு சூளுரைத்ததே, அந்த கருப்புப் பணத்திற்கு சொந்தக்காரர்களாக இருப்பவர்களுக்கு புரிந்திடும்படி சொல்ல வேண்டும் எனில், இதனை 678 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என குறிப்பிட வேண்டும்.
          42 என்கிற எண்ணுக்குப் பிறகு வருகின்ற பன்னிரண்டு பூஜ்யங்களைப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் கார்ப்பரேட் ஏழைகளுக்கு(?!) நிவாரணமாக 5,89,285.2கோடி ரூபாய்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதுவே, தனிநபர் வருமான வரியில் அளிக்கப்பட்டுள்ள லேசான சலுகையை நீங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை எனில், கார்ப்பரேட்களுக்கு நிவாரணமாக அளிக்கப்பட்டுள்ள தொகையின் அளவு 5.49 லட்சம் கோடி ரூபாய்கள் (சுமாராக 88 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஆகும்.
          கார்ப்பரேட் வருமான வரி, கலால் வரி மற்றும் சுங்கத் தீர்வை ஆகிய மூன்று பிரிவுகளில் மட்டும் தர்ம தாராளத்துடன் சலுகைகள் இவர்களுக்கு அள்ளி வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு அளிக்கப்பட்டுள்ள 5.49 லட்சம் கோடி ரூபாய்களோடு சேர்த்து கடந்த பத்தாண்டுகளாக கார்ப்பரேட்டுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள சலுகை என்பது 42.08 டிரில்லியன் ரூபாய்களாகும். பொதுமக்களின் வரிப்பணத்தில் இந்த கார்ப்பரேட் விருந்தாளிகள் கும்மாளமடித்து வருகிறார்கள்.

140 சதவீதம் அதிகம்                 

              2005-06ம் ஆண்டிலிருந்துதான் தள்ளுபடி செய்யப்பட்ட வருமானத்தின் பட்டியலை அரசு வெளியிடத் துவங்கியது. எனவேதான் கடந்த 10 ஆண்டுகளாக அளிக்கப்பட்ட தொகை என சொல்கிறோம். உண்மையில் சொல்லப் போனால், இன்னும் கூடுதலான காலத்திற்கு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. அப்படியானால் இதற்கு முந்தைய ஆண்டுகளில் அளிக்கப்பட்ட சலுகைகளை எல்லாம் கூட்டினால் மொத்தத் தொகை எவ்வளவாக இருக்கும்? நிச்சயம் அது ஒரு மிகப் பெரியதொரு தொகையாக இருந்திடும்.
          கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகை தொடர்பான புள்ளிவிவரங்கள் அளிக்கப்பட ஆரம்பித்த பின்னர் உள்ள தொகைகளை கூட்டினால் அது 5.49 லட்சம் கோடி ரூபாய்கள் ஆகும். இந்த அளவிற்கு இதற்கு முன்எப்போதும் அளிக்கப்பட்டதில்லை. இந்த ஆண்டு அளிக்கப்பட்டுள்ள சலுகை என்பது, இத்தகைய புள்ளிவிவரம் நமக்கு கிடைக்கத் துவங்கிய ஆண்டான 2005-06ம் ஆண்டில் அளிக்கப்பட்ட சலுகையின் அளவை விட கிட்டத்தட்ட 140 சதவீதம் அதிகம் ஆகும். 

மோடியின் புதிய பாணி                 

              இந்த ஆண்டு சலுகைகள் என்பது புதிய பாணியில் அளிக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு பார்த்தோமேயானால், கார்ப்பரேட்டுகளின் வருமானத்தின் மீது விதிக்கப்படும் வரியில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. 2013-14ம் நிதியாண்டு வரை இது கார்ப்பரேட் வரி செலுத்துவோரின் மிக முக்கியமானதொரு செலவினமாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால், இந்த ஆண்டு பட்ஜெட்டில் கார்ப்பரேட் வரி செலுத்துவோருக்கு அளிக்கப்படும் `ஊக்கத்தொகை’ என இதற்கு புதிதாக நாமகரணம் சூட்டப்பட்டுள்ளது. ஆம்.. இது கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்படும் ஊக்கத்தொகையே ஆகும். அரசிடமிருந்து தட்டிப் பறிக்கப்பட்ட ஒன்றல்ல. பாஜக அரசின் கீழ், `வீண் செலவாகிய’ மானியங்கள் அளிப்பது என்ற பழைய நடைமுறை மீண்டும் இடம் பெறாது என “நம்புவதாக” சென்ற ஆண்டு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டார். மேலும், நிலவுகின்ற காலச்சூழலைப் பொறுத்து அது அமைந்திடும் என்றும் குறிப்பிட்டார். எனவே, தற்போது அத்தகையதொரு காலச்சூழல் அவரைப் பொறுத்தவரை கனிந்துவிட்டது. முந்தைய ஐமுகூ அரசின் பட்ஜெட்டில் தள்ளுபடி செய்யப்பட்ட கார்ப்பரேட்டுகளின் வருமானத்தின் மீதான வரி என்பது 57,793 கோடி ரூபாய்களாகும். மோடி அரசின் முதலாவது ஆண்டில், அது 62,399 கோடி ரூபாய்களாக ஆனது. அதாவது கிட்டத்தட்ட 8 சதவீதம் அதிகரித்தது. இந்த ஆண்டு இத்தொகையின் அளவு இன்னமும் கூடுதலான ஒன்றாகவே இருந்திடும். ஏனெனில், தற்போது மதிப்பீடு செய்யப்பட்ட அல்லது இடைக்கால தொகையே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும்171 கோடி ரூபாய் சலுகை                

           மதிப்பீடு செய்யப்பட்டு அளிக்கப்பட்ட தொகையை எடுத்துக் கொண்டாலும் கூட, அதாவது வருமான வரியில் அளிக்கப்பட்டுள்ள சலுகையை மட்டும் எடுத்துக் கொண்டால், 2014-15 நிதியாண்டின் ஒவ்வொரு நாளிலும் 171 கோடி ரூபாய்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகையாக அளிக்கப்பட்டுள்ளன. ஒரு நாளின் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 7 கோடிக்கும் கூடுதலான ரூபாய்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
இந்த தொகையோடு, தள்ளுபடி செய்யப்பட்ட கலால் வரித் தொகையான 1.84 லட்சம் கோடி ரூபாய்களையும், தள்ளுபடி செய்யப்பட்ட சுங்க வரியான 3.01 லட்சம் கோடி ரூபாய்களையும் சேர்த்து கணக்குப் போட்டால், மொத்தமாக இவர்களுக்கு 5.49 லட்சம் கோடி ரூபாய்கள் அளிக்கப்பட்டுள்ளது என்பதனைப் பார்த்திட இயலும்.

கேட்காதீர்கள்... அது ரகசியம்               

         இந்திய நாட்டு வங்கிகளின் வாராக் கடனாக உள்ள பல லட்சம் கோடி ரூபாய்களில் பெரும்பகுதி இத்தகைய சலுகைகளை அனுபவித்தவர்களிடமிருந்து வரவேண்டிய ஒன்றாகும். ஆனால், ரகசியக் காப்பு சட்டத்தின்படி இவர்களது பெயர்களை வெளியிட இயலாது. இதற்கு முன்எப்போதும் இருந்திராத அளவு கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்திற்கு இந்த ஆண்டு கூடுதலானதொரு தொகையை அருண் ஜெட்லி ஒதுக்கியிருப்பதாக ஊடகங்கள் தெரிவித்தன.
            உண்மையில், வரிகள் வாயிலாக அரசிற்கு கிடைத்திடும் வருமானம் என்பது உற்சாகமளிக்கக் கூடிய வகையில் இருந்தால்... இன்னமும் கூடுதலாக 5000 கோடி ரூபாய்கள் ஒதுக்கப்படும் என்றே ஜெட்லி குறிப்பிட்டார். ஒரு நிகழ்வு நடைபெற்றால் அதனையடுத்து மற்றொன்று நிகழும் என்று சொல்லும்போது அது அவ்வாறு நடைபெறும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதுமட்டுமின்றி, கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு என ஒதுக்கப்பட்டுள்ள 34,699 கோடி ரூபாய்கள் என்பது உண்மையில் குறைவான தொகையே அன்றி கூடுதலான தொகையல்ல. ஏற்கனவே, மத்திய அரசு இந்த ஆண்டு 6000 கோடி ரூபாய்களை மாநில அரசுகளுக்கு அளித்திடாமல் பாக்கி வைத்துள்ளது.
            எனவே, பேராசிரியர் ஜெயதி கோஷ் குறிப்பிட்டுள்ளபடி, அடுத்த ஆண்டு ஒதுக்கப்படுகிற புதிய தொகை என்பது 30,000 கோடி ரூபாய்களை விட குறைவான ஒன்றாகவே இருந்திடும். எது எவ்வாறு இருந்தாலும் இத்திட்டத்திற்கென ஒதுக்கப்படுகிற தொகை பணவீக்கம் மிக அதிகமாக இருந்த மூன்றாண்டுகளில் இருந்த அளவே இருந்திடும். அதாவது சுமார் 33000 கோடி ரூபாய்களாகவே இருந்திடும். ஆனால், இது குறித்து ஜெட்லி மீது மட்டும் குற்றம் சாட்டுவது சரியாக இருக்காது. இதற்கான துவக்கப்புள்ளி ப.சிதம்பரம் காலத்திலேயே வைக்கப்பட்டுவிட்டது.

121 ஆண்டுகளுக்கு செலவழிக்கலாம்!              

         கிராமப்புற வேலை வாய்ப்பு உத்தரவாத திட்டத்திற்கு தற்போது செய்யப்படும் நிதி ஒதுக்கீட்டின் அளவின்படி பார்த்தால், முதலாளிகளுக்கு சலுகையாக அளிக்கப்படுகிற 42 டிரில்லியன் ரூபாய்களைக் கொண்டு அடுத்து வருகின்ற 121 ஆண்டுகளுக்கு அதனை செயல்படுத்திடலாம். ஆனால், நாடாளுமன்றத்தின் அவையிலே இத்திட்டத்தை இழிவுபடுத்தி பேசுகின்ற பிரதமரைக் கொண்ட நாடாக இருக்கும் வரை, இதனை நாம் செய்திட மாட்டோம்.
34 ஆண்டுகளுக்குமானியம் தரலாம்!              
         தற்போது உணவு மானியத்திற்கு அளிக்கப்படும் தொகையின் அளவீட்டின்படி, இந்த 42 டிரில்லியன் ரூபாய்களைக் கொண்டு அடுத்து வரும் 34 ஆண்டுகளுக்கு இந்த மானியத்தை மக்களுக்கு தொடர்ந்து அளித்திடலாம். “குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான திட்டங்களுக்கான நிதியில் 22 சதவீதம் வெட்டப்பட்டுள்ளது”, “குழந்தைகளின் ஒட்டுமொத்த கல்விக்கான திட்டங்களுக்கான ஒதுக்கீடு 25 சதவீதம் வெட்டப்பட்டுள்ளது” என குழந்தைகளின் உரிமைகளுக்கான மையம் தெரிவிக்கிறது.
            இந்நிலையில், 42 டிரில்லியன் ரூபாய்களைக் கொண்டு சுகாதாரம் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான திட்டங்களுக்கான நிதிகள் வெட்டிச் சுருக்கப்பட்டதை மாற்றியமைத்திடலாம்.
குழந்தையா? தங்கமா?                 
         ஆனால், தள்ளுபடி செய்யப்பட்ட வருமானம் குறித்த பட்டியலைப் பார்த்தால் கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்படும் இலவசங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன. இறக்குமதி செய்யப்படும் தங்கம் மற்றும் மதிப்பு மிகுந்த ரத்தினங்கள் மீது தள்ளுபடி செய்யப்பட்ட சுங்க வரித் தொகை என்பது 2014-15ம் ஆண்டில் தள்ளுபடி செய்யப்பட்ட மொத்தத் தொகையில் 10 சதவீதமாகும். 2005-06 முதலான பத்தாண்டுகளை கணக்கில் எடுத்துக் கொண்டால், இறக்குமதி செய்யப்பட்ட தங்கம், வைரம் மற்றும் ஆபரணங்கள் மீது தள்ளுபடி செய்யப்பட்ட சுங்க வரி என்பது 4.3 டிரில்லியன் ரூபாய்களாகும்.
           குழந்தைகளின் மேம்பாட்டை தடுத்து நிறுத்தி, தங்கத்தை அதிகரித்திடும் நடவடிக்கையே இது. சலுகையாக அளிக்கப்படுகிற இந்த 42 டிரில்லியன் ரூபாய்கள் எல்லோருக்குமானது. இதனுடைய பலன் அனைவருக்கும் கிடைக்கிறது என இத்தகைய “ஊக்கத் தொகைக்கு” வக்காலத்து வாங்குகிறவர்கள் கூறுகிறார்கள். ஆனால், இத்தகைய சலுகையின் பெரும்பகுதி செல்வச் சீமான்களையே சென்றடைகிறது என்பது மறைக்க முடியாத உண்மையாகும்.
ஏழையின் பணம்                 
             இவ்வாறாக செல்வந்தர்களுக்கு வாரி இறைக்கப்படும் மக்களின் வரிப்பணம் குறித்த விவரங்கள் பொதுமக்களுக்கு முழுமையாகத் தெரிந்திடவில்லை. உதாரணமாக சொல்லவேண்டுமெனில், பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடனாக நிலுவையில் உள்ள பல்லாயிரம் கோடி ரூபாய்களில் பெரும்பகுதி இத்தகைய செல்வந்தர்களால் திருப்பிச் செலுத்தப்படாதவை ஆகும். ஆனால், ரகசியக் காப்பு என்ற பெயரில் இவர்களது பெயர்கள் வெளியிடப்படுவதில்லை. கார்ப்பரேட் ஊடகமும் இவர்களது பெயரை வெளியிடாமல் இருப்பதில் ஆனந்தம் அடைகிறது.
            தங்களிடம் உள்ள சிறு சிறு தங்க நகைகளை அடமானம் வைத்து அதனை திருப்ப முடியாமல் போகிற சாதாரண மக்களின் நகைகள் ஏலம் விடப்படுவது குறித்த விளம்பரங்களையும், சிறு தொகையை பெற்று திருப்பிச் செலுத்தாதவர்கள் குறித்த விளம்பரங்களையும் ஊடகத்தில் நாம் பார்க்கிறோம். இதுதான் இவர்களது நியாயமும் தர்மமும் ஆகும். வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாத நூற்றுக் கணக்கான செல்வந்தர்களின் பட்டியலை கடந்த ஆண்டு வங்கி ஊழியர் சங்கம் வெளியிட்டபோது கார்ப்பரேட் ஊடகம் கனத்த மௌனத்தையே சாதித்தது.
        இதற்கு மேலும் இதனை மூடி மறைத்திட முடியாது என்ற நிலை தோன்றுகின்ற வரை இந்த மௌனம் நீடிப்பதனை பார்க்க முடிகிறது. இதுமட்டுமின்றி, பல்லாயிரக்கணக்கான விவசாயிகளிடமிருந்து நிலம் பறிக்கப்பட்டு, மிக மலிவானதொரு விலையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கை மாற்றப்பட்டுள்ளன. செல்வந்தர்களுக்கு இவற்றையெல்லாம் வாரி இறைக்கிறவர்கள் தான் ‘இலவசம்’ என்பது சாத்தியமல்ல என சொல்கிறார்கள்.
தமிழில் : எம்.கிரிஜா                                 
நன்றி : தீக்கதிர்

வியாழன், 19 ஜனவரி, 2012

பிசிசிஐ: இந்திய கோடீஸ்வர்கள் கட்டுப்படுத்தும் கிரிக்கெட்....!

( ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி, பி.சி.சி.ஐ.-ன் செயல்பாடு ஆகியவை பற்றி 'BCCI: Billionaires Control Cricket in India' எனும் தலைப்பில் தன் கருத்துக்களை 'தி ஹிண்டு' நாளிதழில் கட்டுரையாக்கி இருந்தார் அதன் 'ரூரல் அஃபையர்ஸ் எடிட்டர்' பி.சாய்நாத். அந்தக் கட்டுரையின் தமிழாக்கம் இது ).
              
                    வறான வழிகளில் மிக விரைவாகப் பணம் பெற்றுக் கொண்டு 30 ரன், 40 ரன் (ஏன் 20 ரன் கூட) எடுத்தாலும் இந்தியன் பிரிமியர் லீக்கில் போதுமானதுதான். நமது நண்பர்கள் அப்படித்தான் ஆஸ்திரேலியாவில் தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஐ.பி.எல்.-லில் 30 ரன்கள், எப்போதாவது 50 ரன்கள் எடுக்க உங்கள் பேட்டைச் சுழற்றிவிட்டு இரண்டு மில்லியன் டாலர்களை நீங்கள் சம்பாதித்துவிட முடியும் என்பதையும் அல்லது 90 நாள் சீஸனில் சில முறை தொடர்ந்து நான்கு ஓவர்கள் வீசுவது என்பதையும் சற்று சிந்தித்துப் பாருங்கள். மிக மோசமான உங்களின் விளையாட்டுக்கு அதிகமான ஊக்கத் தொகை வழங்கப்படும் போது உங்களில் இருந்து மிகச் சிறந்த விளையாட்டை எதிர்பார்ப்பது மிகவும் கடினம்.  பி.சி.சி.ஐ. எனும் அதே அமைப்புதான் தனியார் (ஐ.பி.எல்.) மற்றும் தேசிய கிரிக்கெட்டையும் நிர்வகிக்கிறது. யாரோ ஒருவர் பெரும் பணம் பார்க்க அது அனுமதிக்கிறது. இன்னொரு பக்கம் பொன் முட்டையிடும் வாத்தின் கழுத்தை நெறித்துப் போடுகிறது. நம்முடைய 'வீரர்கள்' அதிகமாக கிரிக்கெட் விளையாடுகிறார்கள் என்பதல்ல... அவர்கள் கிரிக்கெட் விளையாடுவதே இல்லை என்பதுதான் பிரச்னை. அவர்களோ நோக்கம், கவனம், உத்தி மற்றும் நின்று ஆடும் திறன் எல்லாம் குறைவாகவே தேவைப்படுகின்ற ஐ.பி.எல். டி20 விளையாடுகிறார்கள். அதன் விளைவையே இப்போது நாம் பார்க்கிறோம்.
அதிகரிக்கும் ஐ.பி.எல். மோகம்...                                                    
              அங்கே இருப்பவர்கள் என்ன மிக மோசமான வீரர்களா? காயம் பெற்றுவிட்ட பெருமை, சுலபமான முடிவுக்கு இட்டுச் சென்றுவிடுகிறது. உண்மையில், இந்திய கிரிக்கெட் அணி - தற்போது சற்று கேலிக்குரியதாகத் தோன்றினாலும் - எப்போதுமில்லாத அளவுக்கு மிகச் சிறந்த பேட்டிங் லைனுடன் சவாரி செய்து கொண்டிருக்கிறது. பெருந்தன்மையும், தரமும் மற்றும் பல சாதனைகளைத் தன்னுள் கொண்டிருக்கிற டெண்டுல்கர், டிராவிட், லக்ஷ்மண் மற்றும் சேவாக் போன்ற வீரர்களை இனி நாம் பார்க்க முடியாது. இன்னும் இருக்கும் டெஸ்ட் விளையாட்டில் காலம் கடந்துவிடாத புத்திசாலித்தனத்தை நீங்கள் பார்க்கக் கூடும். ஆனால் நான் அதன்மீது பந்தயம் கட்டமாட்டேன். விளம்பரங்களால் நகர்த்தப்பட்டு, ஊடகங்களால் போற்றப்பட்டு கிடைக்கும் சந்தோஷத்துக்காக ஐ.பி.எல்.-லில் அதிகமான விளையாட்டுகள் அங்கே நடைபெறுகின்றன. சிறிய எல்லைக்குள்ளே நீங்கள் 'சிக்ஸர்' விளாச முடியும், அனேகமாக 30 பந்துகளில் சோர்வுடன் உள்ளே வந்துவிட்டு வெளியே சென்றுவிட முடியும் -  அதற்கான புகழாரத்தையும் பெற்றுக் கொண்டு படோபடமான மிதப்புடன் வங்கியை நோக்கிச் செல்ல முடியும். ஐ.பி.எல். சீஸனில் விளையாடிய சில வீரர்கள் முன்பு நிகழ்ந்த மேற்கிந்திய தீவுகள் டூருக்குச் செல்வதைத் தவிர்த்துவிட்டார்கள். மற்றவர்கள் 'சோர்வாக' இருந்ததால் நாட்டுக்காக விளையாடுவதில் இருந்து 'பிரேக்' எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் ஐ.பி.எல். போட்டிகளில் காயங்கள் ஏற்பட்டிருந்தாலும் கூட விளையாடினார்கள். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவும் நமக்குப் பெரும் சரிவைக் கொடுக்க காத்துக் கொண்டிருந்தன. அதற்குக் காரணம் நம்முடைய சிறந்த வீரர்கள் சுதாரித்துக் கொள்ளவில்லை என்பதுதான்.எவ்வளவுதான் திறமையானவராக இருந்தாலும், நீங்கள் யாருக்காக விளையாடுகிறீர்கள் என்பதும் கவனத்துக்குரியது. கிரிக்கெட்டை தேசிய விளையாட்டாக நினைத்து நம் அணி ஜெயிக்க வேண்டும் என்று எதிர்பாக்கிற எண்ணிலடங்கா ரசிகர்களுக்காக நீங்கள் விளையாடுகிறீர்களா? அல்லது விஜய் மல்லையா, முகேஷ் அம்பானி மற்றும் குழுவுக்காக நீங்கள் விளையாடுகிறீர்களா? தானாக முன்வந்து  ஐ.பி.எல்.-ஐ ஒளிபரப்புகிற ஊடகத்தைக் கேள்வி கேட்பதைக் காட்டிலும் இது மிக முக்கியமான கேள்வி. இந்தியாவின் ஒளிமயமான மற்றும் சிறந்த அணிகளின் முதலாளிகளுக்கு நாம் சேவகம் செய்திருக்கிறோம். இந்திய கிரிக்கெட் அதற்கான தொகையையும் கொடுத்தது. இங்கிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் நம்மை மண்ணைக் கவ்வ வைத்த பலர் ஐ.பி.எல். விளையாடவில்லை. சிலர் உள்ளுணர்வுடன், விவேகமான முடிவுகளை எடுத்து அதில் விளையாடுவதைத் தவிர்த்தார்கள். சூழ்நிலை இணக்கம் என்பது வானிலையையோ, பிட்ச்களைப் பொறுத்ததோ மட்டும் அல்ல. மனரீதியாக மீண்டும் உண்மையான விளையாட்டுக்குத் திரும்புவதும் ஆகும். அத்துடன், உங்கள் ஊக்கத்தின் ஆதாரத்தைப் பற்றிய தெளிவுடன் இருத்தலும் அவசியம்.
'கிளப்'பா... தேசமா..?
 
                      இந்திய அணி செயல்படும் விதம் கண்டு நாம் அதிர்ச்சியடைய நமக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. ஆச்சரியப்படுவதற்கு நம்மிடம் எதுவும் இல்லை. ஒவ்வொரு அடியும், ஒவ்வொரு சாலையும் இங்கேதான் முடிகின்றன. வீரர்கள் தேசத்துக்காக விளையாடுவதைத் தவிர்த்துவிட்டு ஐ.பி.எல்.-லில் விளையாடிய போது 'கிளப்'பா... தேசமா?' என்று எழுந்த விவாதங்களை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்களா? 'கிளப்' எனும் ஒன்று கிடையாது என்ற உண்மையை அந்த விவாதம் தவறவிட்டுவிட்டது. எந்த வகையிலும் பன்மையில் இல்லை. ஐ.பி.எல். சார்ந்த 'கிளப்'கள் மற்ற இடங்களில் உள்ளது போன்று வெகுஜனத்தன்மைக்குரிய உடைமைகளுடன் இருக்கவில்லை. 'தேசத்தை விட கிளப் முக்கியம்' என்ற விசுவாசம் பற்றியது அல்ல நம்முடைய கேள்வி. அப்படியான போர்வையில் சோகம் கவிழ்ந்த தார்மீகமான கேள்வி ஒன்று எழும்புகிறது: கிளப்களுக்கு ஆதரவு தரும் கூட்டத்துக்காக நாம் விளையாடுகிறோமா அல்லது தேசத்தின் பக்கம் நிற்கும் எண்ணிலடங்கா ரசிகர்களுக்காக நாம் விளையாடுகிறோமா?இங்கே 'கிளப்' என்பது கோடீஸ்வரர்களுக்கு மாநில அரசுகள் வழங்கிய மானியத்துடன் செயல்படும் கிளப் மட்டும்தான். கிரிக்கெட் அமைப்பும், அதில் விளையாடும் வீரர்களும் (கூடவே பெரும்பான்மையான ஊடகங்கள்) இந்த கிளப்பின் விசுவாசிகள். பி.சி.சி.ஐ. என்பது இன்று 'இந்திய கோடீஸ்வர்கள் கட்டுப்படுத்தும் கிரிக்கெட்' ஆக (BCCI: Billionaires Control Cricket in India) மாறியிருக்கிறது. உங்களின் டாப் கிரிக்கெட் வீரர்கள் எல்லாம் கார்ப்பரேட்களின் இருப்பு நிலைக்குறிப்புகளில் (பேலன்ஸ் ஷீட்) வைக்கப்படும் சொத்துக்களாக (அஸெட்) தரம் குறைந்து போயிருக்கிறார்கள். அணிகளிடம் இருக்கும் 'அவர்களின் தலைகளைக் கொண்டு வாருங்கள்' எனும் அவமானம், ஏன் தவறு நிகழ்ந்தது என்பதற்கான வாதத்தைக் கடத்திக் கொண்டு போய்விடுகிறது. வீரர்களும் அவர்களின் மலைக்க வைக்கும் பெர்ஃபாமன்ஸும் மட்டுமே நம் மனத்தைக் கவர்வனவாக இருக்கின்றன. தேர்வாளர்களை நோக்கிய விசனமான கேவல்களும் கூட நம்மைக் கவர்கின்ற ஒன்றாக இருக்கலாம். ஆனால் ஐ.பி.எல். எவ்வாறு இந்திய கிரிக்கெட்டை கொடூரமாக்கியது, உலகம் முழுவதும் அந்த விளையாட்டை எப்படிப் பாதித்தது என்பது பற்றி மிகச் சொற்ப அளவினருக்கே தெரிகிறது. பெர்ஃபாமன்ஸுக்காக தற்போது கிழித்தெறியப்படும் லக்ஷ்மண் ஆஸ்திரேலிய டூரின் போது அசரடிக்கிற சராசரியுடன் திகழ்ந்தார். நிச்சயமாக அவர் எப்போதும் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். அப்படியே இன்னும் சில பேர் இருக்கிறார்கள். இதன் அர்த்தம் இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவில் அவர்கள் விளையாடியதே இல்லை, இப்போதுதான் நன்றாக விளையாடவில்லை என்பதல்ல. அப்படியெனில் வயது ஒரு காரணமா?சில வாரங்களுக்கு முன்பு, ஆஸ்திரேலியர்களை அவர்களின் மண்ணிலேயே தோற்கடிக்க இது மிகச் சரியான சந்தர்ப்பம் என்று மேதாவிகள் சிலர் சொன்னார்கள். நம்முடைய மிகச்சிறந்த அணி அதை சாதிக்கும் என்றார்கள். அந்த மிகச்சிறந்த அணிக்கு சில வாரங்களில் வயது ஏறிவிட்டதா? என்ன நடந்தது?ஐ.பி.எல். நடந்தது. இப்படியான மண்ணைக் கவ்வச் செய்கிற டூர்களுக்கு முன்பே பல போட்டிகளில் நடந்தது. காயங்களுடன் 90 நாட்கள் மிகக் குறைந்த தரத்தில் கிளப் அளவிலான கிரிக்கெட்டில் வீரர்கள் விளையாடியது நடந்தது. அது மிக நல்ல முறையில் விளையாட உங்களைத் தயார்படுத்தாமல் ஒவ்வொரு வருடமும் மிக மோசமாக விளையாடவே உங்களைத் தயார் செய்யும். காயங்களுடனேயே அவர்கள் விளையாடினார்கள். ஏனெனில் பி.சி.சி.ஐ.-ன் ஐ.பி.எல். மிக அதிகப் பணத்தை இந்த விளையாட்டைத் தனியார்மயப்படுத்தியவர்களுக்குக் கொண்டு வந்து கொட்டியது. தேசம் விளையாடும் விளையாட்டுக்கு அல்ல.உள்ளூர் அளவிலான விளையாட்டுதான் இந்திய கிரிக்கெட்டுக்கு வீரர்களைத் தயார் செய்து அனுப்புகிறது. நம்முடைய மிகச் சிறந்தை வீரர்கள் எல்லோரும் ரஞ்சி போட்டியில் இருந்துதான் வந்தார்கள். சிலர் 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து வந்தார்கள். ஒருவர் கூட ஐ.பி.எல்.-லில் இருந்து வரவில்லை. அதுவே டெஸ்ட் கிரிக்கெட்டில் மிளிர்ந்தாலும் இளம் வீரர்களின் திறன் மீது மோனமான அபிப்ராயத்தை ஏற்படுத்திவிடுகிறது. இன்று வீரர்களைத் தயார் செய்து அனுப்பும் பணி ஐ.பி.எல்.-லின் கைவசம். ஆஸ்திரேலியர்கள் திறமையான உள்ளூர் விளையாட்டுக் குழுக்களையும் ஆரோக்கியமான மரபுக் கூட்டத்தையும் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய திறமையையும், ஆரோக்கியமான மரபையும் நாம் கவனிக்காமல் கொன்றுவிடுகிறோம்.
 
சிந்தித்துப் பாருங்கள்:                                                    
               பி.சி.சி.ஐ. உள்ளூர் விளையாட்டை தூக்கிப் பிடித்திருக்கலாம். அப்படிச் செய்வதற்கும் அதனிடத்தில் பணம் இருக்கிறது, ஆனால் விளையாடுவதற்கான ஆர்வத்தையும், ஊக்கத்தையும் அது ஏற்படுத்தவில்லை. ஐ.பி.எல். மூலம் வரும் பணம் அனைத்தும் தனியார்களின் கைகளுக்குத்தான் செல்கின்றன. அதுவே உள்ளூர் கிரிக்கெட், சாதனைகள் படைப்பதற்குத் தடையாக அமைகின்றது. பணம், தரகர்கள், லாபியிஸ்ட்கள், கார்ப்பரேட்கள், ஆதரவாளர்கள், விளம்பரதாரர்கள் எனப் பலர் கூட்டணி சேர்ந்த உயர் வணிகமாக இந்த விளையாட்டு மாறியிருக்கிறது. கிரிக்கெட் என்பது வெறும் துணைப்பொருளாக (பை பிராடக்ட்) ஆகியிருக்கிறது. (சில வீரர்களின் 'சந்தை மதிப்பால்' (பிராண்ட் வேல்யூ), அவர்களை அணியில் இருந்து நீக்குவது கூட தேர்வாளர்களுக்குக் கடினமான காரியமாக மாறிப் போன சமயங்களும் இந்த முறையில் உண்டு). 
இந்தியாவைத் தாண்டியும்...
இதனுடைய தாக்கம் இந்தியாவைத் தாண்டியும் செல்கிறது. எல்லா இடங்களிலும் கிரிக்கெட் எனும் விளையாட்டின் தரத்தையும், ஒழுக்க விதிகள், முன்னுரிமை என அனைத்தையும் பாதித்திருக்கிறது ஐ.பி.எல். மலிங்கா, இலங்கையின் மிகச் சிறந்த வீரரான அவர், ஐ.பி.எல்.-லில் கவனம் செலுத்துவதற்காக டெஸ்ட் கிரிக்கெட்டை விட்டு விலகுகிறார். சில நாடுகளுக்கு, இது நன்றாக வேலை செய்திருக்கிறது. ஐ.பி.எல்., விளையாடும் பல ஆஸ்திரேலிய, இங்கிலாந்து வீரர்கள் எல்லோரும் ஓய்வு பெற்றவர்கள். அதிலும் ஆஸ்திரேலியாவைப் பொறுத்த வரையில் இன்றும் விளையாடும் பல கிரிக்கெட் சகாப்தங்கள், தேசிய கடமையில் கவனம் செலுத்துவதற்காக ஐ.பி.எல்.-ஐ புறக்கணிக்கிறார்கள். ஆனால் இந்தியாவில், நம் வீரர்கள் ஐ.பி.எல்.-லில் ஆழ்ந்து போய் இருக்கிறார்கள். அதுவே தற்போது டெஸ்ட் கிரிக்கெட்களில் எதிரொலிக்கிறது.இதனுடைய தாக்கம் இந்தியாவைத் தாண்டியும் செல்கிறது. எல்லா இடங்களிலும் கிரிக்கெட் எனும் விளையாட்டின் தரத்தையும், ஒழுக்க விதிகள், முன்னுரிமை என அனைத்தையும் பாதித்திருக்கிறது ஐ.பி.எல். மலிங்கா, இலங்கையின் மிகச் சிறந்த வீரரான அவர், ஐ.பி.எல்.-லில் கவனம் செலுத்துவதற்காக டெஸ்ட் கிரிக்கெட்டை விட்டு விலகுகிறார். சில நாடுகளுக்கு, இது நன்றாக வேலை செய்திருக்கிறது. ஐ.பி.எல்., விளையாடும் பல ஆஸ்திரேலிய, இங்கிலாந்து வீரர்கள் எல்லோரும் ஓய்வு பெற்றவர்கள். அதிலும் ஆஸ்திரேலியாவைப் பொறுத்த வரையில் இன்றும் விளையாடும் பல கிரிக்கெட் சகாப்தங்கள், தேசிய கடமையில் கவனம் செலுத்துவதற்காக ஐ.பி.எல்.-ஐ புறக்கணிக்கிறார்கள். ஆனால் இந்தியாவில், நம் வீரர்கள் ஐ.பி.எல்.-லில் ஆழ்ந்து போய் இருக்கிறார்கள். அதுவே தற்போது டெஸ்ட் கிரிக்கெட்களில் எதிரொலிக்கிறது.இதனுடைய தாக்கம் இந்தியாவைத் தாண்டியும் செல்கிறது. எல்லா இடங்களிலும் கிரிக்கெட் எனும் விளையாட்டின் தரத்தையும், ஒழுக்க விதிகள், முன்னுரிமை என அனைத்தையும் பாதித்திருக்கிறது ஐ.பி.எல். மலிங்கா, இலங்கையின் மிகச் சிறந்த வீரரான அவர், ஐ.பி.எல்.-லில் கவனம் செலுத்துவதற்காக டெஸ்ட் கிரிக்கெட்டை விட்டு விலகுகிறார். சில நாடுகளுக்கு, இது நன்றாக வேலை செய்திருக்கிறது. ஐ.பி.எல்., விளையாடும் பல ஆஸ்திரேலிய, இங்கிலாந்து வீரர்கள் எல்லோரும் ஓய்வு பெற்றவர்கள். அதிலும் ஆஸ்திரேலியாவைப் பொறுத்த வரையில் இன்றும் விளையாடும் பல கிரிக்கெட் சகாப்தங்கள், தேசிய கடமையில் கவனம் செலுத்துவதற்காக ஐ.பி.எல்.-ஐ புறக்கணிக்கிறார்கள். ஆனால் இந்தியாவில், நம் வீரர்கள் ஐ.பி.எல்.-லில் ஆழ்ந்து போய் இருக்கிறார்கள். அதுவே தற்போது டெஸ்ட் கிரிக்கெட்களில் எதிரொலிக்கிறது.இந்த நிலையில், தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்கள் இதைப் பற்றி விமர்சனம் செய்ய வழியே இல்லை (அல்லது தங்களின் கேரியர் காரணமாக பி.சி.சி.ஐ.-ன் செயல்களையும் விமர்சனம் செய்ய முடியாது). கிரிக்கெட்டின் காமதேனுவாக இது நிலைநிறுத்தப்படுவதில்லை. பி.சி.சி.ஐ. அப்படியான ஒரு தகுதியை ஐ.பி.எல். போட்டிகளுக்கு வழங்கியது. நமது நாட்டில் கிரிக்கெட் விளையாட்டை அதுதான் கட்டுப்படுத்துகிறது. தன்னுடைய பண பலத்தால் உலக அளவிலும் அது ஆட்சி புரிகிறது. அதனாலேயே மற்ற நாடுகளுக்கு நம் தேசத்தைப் பற்றி அவநம்பிக்கையைச் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. இது பி.சி.சி.ஐ., ஒரு விளையாட்டை விடவும் இன்னொன்றுக்கு அதிக சலுகை அளிக்கிறது என்பது மட்டுமல்லாமல், சிலரின் வாதங்களைப் போன்று மூவருக்குமே அது சலுகை காட்டுகிறது. பொதுமக்களை விட தனியார்களுக்கே பி.சி.சி.ஐ. அதிகம் சலுகை காட்டுகிறது. அதற்கு நாம் விலை கொடுக்க வேண்டியிருக்கிறது.
பிரச்னை இங்கேதான்:
              எல்லோரும் சத்தம் போட்டு, வீரர்களின் தலை உருட்டப்பட்டால் ஆகப்போவது எதுவுமில்லை. இந்திய கிரிக்கெட்டின் இயங்குமுறையும், மரபுக் கூட்டமும் அடிப்படையிலேயே மிக மோசமாக மாற்றப்பட்டிருக்கிறது. நம்முடைய உள்ளூர் கிரிக்கெட் விளையாட்டை எப்படி மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். கிரிக்கெட்டை பில்லியனர்களிடம் இருந்து காப்பாற்றி அதை பொது வெளியில் கொண்டு வருவது எப்படி என்பதையும் கூட!

தமிழில்: ந.வினோத் குமார், விகடன்