சூதாடிகளுக்கும்,
வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கும் இந்தியாவின் மிக உயரிய பரிசு ''பாரத
ரத்னா'' விருது கொடுப்பது சரிதானா..? முறை தானா...? நியாயம் தானா....?
சச்சின் ஒரு குறிப்பிட்ட விளையாட்டின் தனிப்பட்ட சாதனைப் படைத்த வீரர் தான் என்பதை யாரும் மறுக்கவில்லை. சச்சின் உலகம் முழுதும் அறியப்பட்டவர் என்று சொல்ல முடியாது. ஆனால் கிரிக்கெட் விளையாட்டை பற்றி அறிந்த நாட்டிலுள்ள மக்களால் நன்கு அறியப்பட்டவர் தான். ஏனென்றால் உலகம் முழுதும் அனைவராலும்
விளையாடப்படும் விளையாட்டுமல்ல. உலகம் முழுதும் பரவிக்கிடக்கும்
விளையாட்டுமல்ல. கிரிக்கெட் என்ற விளையாட்டே போய் சேராத நாடுகள் உள்ளன. கிரிக்கெட் பற்றியே அறியாத மக்களும் கோடிக்கணக்கில் உள்ளனர். ஏனென்றால் வெறும் பத்து நாடுகளில் மட்டுமே விளையாடப்படும்
விளையாட்டு தான் இந்த கிரிக்கெட் என்ற விளையாட்டு. அதனால் தான் ஒலிம்பிக் போட்டி
போன்ற உலக அளவிலான போட்டிகளில் இதுவரை கிரிக்கெட் சேர்க்கப்படவில்லை என்பதற்கான மிக முக்கிய காரணம். கிரிக்கெட் விளையாட்டு என்பது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய 10 காலனி நாடுகளில் மட்டுமே விடுதலைக்குப் பின் இன்றும் ஆடப்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தங்கள் அடிமைகளை கிரிக்கெட் விளையாடவிட்டு வேடிக்கைப்பார்த்து போழுதுபோக்கியிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட விளையாட்டில் சாதனை செய்தாரா சச்சின் என்றால் கேட்டால், நிச்சயமாக சாதனை
செய்திருக்கிறார் என்று சந்தேகமில்லாமல் சொல்லலாம். நாமெல்லாம் பெருமைப்படத்தக்க அளவில் சாதனை
புரிந்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது. அனால் அவை அத்தனையும் ஒரு
தனிமனித சாதனை தான் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
அவர் அப்படிப்பட்ட சாதனைகள் புரியவேண்டும் என்பதற்காகவே ஆட்சியாளர்களால் அவருக்கு
வாய்ப்புகளும், நேரங்களும், விளம்பரங்களும், ஊக்கமும் கொடுக்கப்பட்டு சச்சினால் செய்யப்பட்டிருக்கும் சாதனைகள் தான் அத்தனையும் என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். கிரிக்கெட் ஆடும் அத்தனை வீரர்களுக்கும் இதே
போல் வாய்ப்புகளும், நேரங்களும், விளம்பரங்களும், ஊக்கமும் கொடுக்கப்பட்டால்
அவர்களும் தனிமனித சாதனைகளை நிச்சயம் செய்துகாட்டுவார்கள்.
அதுமட்டுமல்ல, இன்றைக்கு உலகமய சூழலில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக
கிரிக்கெட் மைதானம் என்பது ஒரு சூதாட்டக்களமாக மாறிவிட்ட சூழ்நிலையில் - கிரிக்கெட் என்பது
பண மழை கொட்டுகிற விளையாட்டாக மாறிவிட்ட இந்த சூழ்நிலையில் கிரிக்கெட் என்பது
சாதனை படைக்கும் களமாக இல்லாமல், பணம் - சொத்து சேர்க்கும்
கஜானாவாக மாறிவிட்டது.
அப்படி சம்பாதித்த பணத்திற்கு சச்சின் போன்ற பெரிய கிரிக்கெட் வீரர்கள் அரசுக்கு
கட்டவேண்டிய வரியை சரியாக - முறையாக - நியாயமாக கட்டியிருப்பார்களா....?
என்றால்... இல்லை... இல்லவே இல்லை என்பது தான் உண்மை. அதை வருமானவரித்துறையும் கண்டுகொள்வதே இல்லை என்பதை யாராலும் மறுக்கமுடியாது. சச்சினும் இதில் விதிவிலக்கல்ல. இவர் இப்படியாக கிரிக்கெட் ஆடியும், விளம்பரங்களில் நடித்தும் ''கொள்ளையாக'' சம்பாதித்த பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்திருக்கிறார். இவர் தேசியக்கொடியை பிடிப்பதற்கே அருகதையில்லாதவர்.
இவர் ஒரு நேர்மையான இந்திய குடிமகன் இல்லை என்பதுமட்டுமல்ல,
ஓர் உண்மையான இந்திய குடிமகனாகவும் அவர் நடந்துகொள்ளவில்லை என்பதையும்
இந்த நாட்டு மக்கள் அறிவார்கள். பெப்சி, பூஸ்ட், மெட் லைப் இன்சூரன்ஸ்
கம்பெனி போன்ற அந்நிய பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு இவர் தான் நிறுவனத்
தூதராக இருந்து, அந்த கம்பெனிகளின் விளம்பரத்தில் நடித்து கோடி கோடியாய்
சம்பாதித்தவர் என்பதையும் இந்த நாடு அறியும். இப்படிப்பட்டவர் எப்படி ஓர்
உண்மையான இந்தியக் குடிமகனாக இருக்கமுடியும் என்று சொல்லுங்கள்.
இப்படிப்பட்டவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டால் அது
எப்படி சரியாக இருக்கும் - நியாயமாக இருக்கும் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.
இதுவரை கலை,
இலக்கியம், அறிவியல் மற்றும் பொதுச்சேவை துறைகளில் பெருமைப்படத்தக்க சாதனைகள் படைத்தவர்கள் மட்டுமே
''பாரத ரத்னா'' விருது பெற முடியும் என்ற விதிமுறை நடைமுறையில் இருந்து வருகிறது.
பிற துறைகளில் சாதித்தவர்களும் இந்த விருதை பெற முடியும் என்று விதிமுறையில்
மாற்றம் செய்யப்பட்டு சென்ற 2011 - ஆம் ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி மத்திய அரசு அறிவிப்பு
வெளியிட்டது. அப்போதே இவருக்கு இந்த உயரிய விருதினை தருவதற்காகவே, பாரத
ரத்னா விருது பெறுவதற்கான விதிமுறையில் மத்திய அரசு திருத்தம்
செய்கிறது என்ற விமர்சனம் வந்தது. விளையாட்டுத் துறையில் சாதனைப் படைத்தவர்களுக்கும் பாரத ரத்னா விருது வழங்க தான் இந்த மாற்றம் என்று அரசு பொதுவாக சொல்லியிருந்தாலும் அதில்
நியாயம் இருக்கிறது. ஆனால் டெண்டுல்கருக்காக தான் இந்த மாற்றம் என்று வெளிப்படையாகவே தெரிந்ததும் நாட்டின் அனைத்துப்பகுதிகளிலிருந்து எதிர்ப்புக் கிளம்பவே மத்திய அரசின் முயற்சி கைவிடப்பட்டது.
ஆனால் இன்று ஓய்வுபெறும் ஒரு உணர்ச்சிமிக்க சூழ்நிலையில் - யாரும் எதிர்ப்பார்க்காத இந்த சூழ்நிலையில் பிரதமரின் அலுவலகம் வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பு என்பது துரதஷ்டமானது. ''பாரத ரத்னா'' விருதின் மாண்பும், பெருமையும் காப்பாற்றப்படவேண்டுமானால், மத்திய அரசு சச்சினுக்கு ''பாரத ரத்னா'' விருது கொடுப்பதாக எடுத்திருக்கும் முடிவை திரும்பப்பெறவேண்டும். ''பாரத ரத்னா'' விருதை வழங்கி பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு சச்சினைப் பயன்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று காங்கிரஸ் கட்சி பகல் கனவு காண்கிறது.
சென்ற 1954-ம்
ஆண்டிலிருந்து பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. மக்களையும், தேசத்தையும் பற்றி தன்னலமில்லாமல்
சிந்தித்தவர்களும், நம் தேசத்தை பெருமைக்குள்ளாக்கியவர்களுமான சர் சி.வி.ராமன், சி.வி.ராஜகோபாலாச்சாரி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆகிய இவர்களில் தொடங்கி, இதுவரை 41 பேருக்கு ''பாரத ரத்னா'' விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த
காலங்களில் இந்த உயரிய விருதினை ஜவஹர்லால் நேரு, டாக்டர் ராஜேந்திர
பிரசாத், அமார்த்தியா சென், ஜெயபிரகாஷ் நாராயண், டாக்டர் அப்துல் கலாம்,
டாக்டர் அம்பேத்கர், எம். எஸ். சுப்புலட்சுமி, பண்டிட் ரவி சங்கர், உஸ்தாது
பிஸ்மில்லாகான், மொரார்ஜி தேசாய், எம். ஜி. ராமச்சந்திரன், ராஜீவ்
காந்தி, லதா மன்கேஷ்கார், அன்னை தெரசா, கான் அப்துல் காபார் கான், நெல்சன்
மண்டேலா.... போன்ற உலகின் - தேசத்தின் - சமூகத்தின் உயர்ந்த தலைவர்களுக்கு
மட்டுமே கொடுக்கப்பட்ட இந்த உயரிய விருதினை பெறுவதற்கு மேலே குறிப்பிடப்பட்டவர்களின் தகுதிகளில் ஏதாவது ஒரு தகுதியாவது ''கிரிக்கெட் சூதாடி'' சச்சின்
டெண்டுல்கருக்கு உண்டா...?
என்பதை அவரே தன்னை எடைபோட்டுப்பார்க்கவேண்டும். நீங்களும் யோசித்துப்பாருங்கள்.