காங்கிரஸ் கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காங்கிரஸ் கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 8 நவம்பர், 2015

இடதுசாரிக்கட்சிகளுக்கு கேரள மக்கள் கொடுத்த வெற்றிப்பரிசு...!



                நேற்று உலகம் முழுதும் நவம்பர் 7 - புரட்சி தினம் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆனால் கேரள மக்களோ நேற்றைய இந்த தினத்தை மேலும் சிறப்புடையதாக மாற்றிவிட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணிக்கு  உள்ளாட்சித்தேர்தல் வெற்றியை புரட்சிதினப்பரிசாக அளித்து சிறப்பு சேர்த்தனர். அதற்காக கேரள மக்களை நெஞ்சார பாராட்டவேண்டும். 
             இடது ஜனநாயக முன்னணியிலுள்ள இடதுசாரிக்கட்சிகளை இந்த தேர்தலோடு ஒழித்துக்கட்ட வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதாக்கட்சியும் ஒருபுறம் மதவாத அமைப்புகளோடும், சாதிய அமைப்புகளோடும், மறுபுறம்  தங்களுக்கு ஒத்து ஊதும் ஊடகங்களோடும் வெட்கமில்லாமல் ஒன்றாக கைகோர்த்து தேர்தல் களத்தில் இறங்கின.
            அதுமட்டுமில்லாமல்    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  கதையும், இடது ஜனநாயக முன்னணியின்  கதையும் இந்த தேர்தலோடு முடிவுக்கு வந்துவிடுமென்று ஊடகங்கள் ''கிளி ஜோசியக் கணிப்புகளை'' கொஞ்சம் கூட  தயக்கமில்லாமல்  அள்ளி வீசின.
             ஆனால் இடது ஜனநாயக முன்னணி கட்சிகளோ  ''மக்களாகிய நாம் தோற்காமலிருக்க... இடது ஜனநாயக முன்னணிக்கு வாக்களியுங்கள்'' என்று கேரள மக்களிடம் விடுத்த வேண்டுகோளை தலைமேல் ஏற்று, ஊழல்வாத காங்கிரஸ் கட்சியையும், மதவாத பாரதீய ஜனதாக்கட்சியையும், சாதிய - மதவாத அமைப்புகளையும், உண்மையை உரைக்காத ஊடகங்களையும் தூக்கியெறிந்து கேரள  மக்கள் தெளிவாக வாக்களித்திருக்கிறார்கள். 
           ஆயிரக்கணக்கான தியாகிகளின் செங்குருதியில் சிவந்த கேரள மண்ணிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிகளை  துடைத்தெறிவது என்பதும், எங்கள் மனதிலிருந்து தூக்கி எறிவது என்பதும் அவ்வளவு எளிதானகாரியமல்ல என்பதை கேரள மக்கள் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் தெளிவாக பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அதற்காக அவர்களை நெஞ்சார  பாராட்டவேண்டும். வாழ்த்தவேண்டும்.   
     இந்த வெற்றி என்பது நேரம் அறிந்து இடதுசாரிக்கட்சிகளுக்கு கொடுத்தப்பரிசு.                               

புதன், 11 பிப்ரவரி, 2015

டெல்லி மக்களை நெஞ்சார பாராட்டவேண்டும்...!

                   
             ''மோடி அலை'' என்ற மாயையை மோதி உடைத்த ''மக்கள் அலையை'' பாராட்டியே ஆகவேண்டும். ஆம்... அண்மையில் நடந்து முடிந்த டெல்லி சட்டமன்றத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியையும், பாரதீய ஜனதாக் கட்சியையும் ஒரேயடியாய் தூக்கியெறிந்த டெல்லி மக்களை நன்றியுடன் வாயார - நெஞ்சார வாழ்த்துகிறேன்... பாராட்டுகிறேன். பொய்களை அள்ளித்தெளித்து - பெருமுதலாளிகளின் கோடிகளை அள்ளிக்கொடுத்து கடந்த பாராளுமன்றத்தேர்தலில் வெற்றிபெற்று, பின்னாளில் சில மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தல்களிலும் வெற்றிபெற்று திமிரோடும், ஆணவத்தோடும் மதவெறியை உயர்த்திப்பிடித்து நாட்டில் உலா வந்த பாரதீய ஜனதாக்கட்சியின் மீது டெல்லி மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்புணர்வும், பாராளுமன்றத்தில் இராட்சச பலத்தை வைத்துக்கொண்டு, அமெரிக்காவிற்கு ஆதரவாக - தேசத்திற்கு எதிராக - மக்களுக்கு எதிராக தான்தொன்றித்தன்மாக - அடாவடித்தனமாக - தருதலைத்தனமாக மத்திய மோடி ஆட்சியின் மீது டெல்லி மக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றமும் இந்த சட்டமன்றத்தேர்தலில் பிரதிபலித்திருப்பது தெளிவாகத்தெரிகிறது.
               உலகமே பார்த்துக்கொண்டிருக்கும் இந்த தலைநகர் தேர்தலில் தான் எப்படியாவது வெற்றிபெற்று உலகத்திற்கு காட்டவேண்டும் என்று துடிதுடித்து தேர்தல் வேலைகளை பார்த்தார். அதற்காக பத்திரிக்கைகளுக்கு பல கோடிகளை  செலவு செய்திருக்கிறார். ஆனால் அவை எதையும் டெல்லி மக்கள் கண்டுகொள்ளவில்லை என்பதும், மோடியின் பொய்யான வார்த்தை ஜாலங்களுக்கு மக்கள் செவி சாய்க்கவில்லை என்பதும் யாராலும் மறுக்கமுடியாத உண்மை. கடந்த பாராளுமன்றத்தேர்தலில் தான் காங்கிரஸ் கட்சி ஆட்சியின் நாசகரக்கொள்கைகளையும், மெகா ஊழல்களையும் நேரில் தங்கள் அருகிலேயே பார்த்து நொந்து போன டெல்லி மக்கள், காங்கிரஸ் கட்சியை தங்கள் தலையை சுற்றி தூக்கிஏறிந்தார்கள். 
                அதை கிழிப்பேன்... இதை கிழிப்பேன் என்று வார்த்தை ஜாலங்களை அள்ளித்தெளித்து, கோடிகளை அள்ளிக்கொடுத்து ஆட்சியிலமர்ந்த பாரதீய ஜனதாக்கட்சியோ கடந்த காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் போலவே கொஞ்சமும் வித்தியாசமில்லாமல், அதேப்பாதையில் அவர்களை விட வேகமாக - தாறுமாறாக பயணம் செய்ததை பார்த்து வெறுத்துப் போன டெல்லி மக்கள் - மதச்சார்பின்மையை குழித்தோண்டி புதைத்து, இந்துக்கள் அல்லாத மாற்று மதத்தினருக்கெதிரான மதவெறி சம்பவங்களை பார்த்து வெகுண்டு போன டெல்லி மக்கள் கடந்த பாராளுமன்றத்தேர்தலில் ஆளுங்கட்சியாக அமரவைத்த பாரதீய ஜனதக்கட்சியை, நடந்துமுடிந்த சட்டமன்றத்தேர்தலில் எதிர்கட்சியாகக்கூட அமரமுடியாமல் துடைப்பத்தால் அள்ளி குப்பைத்தொட்டியில் வீசி எறிந்துவிட்டார்கள்.
                  இதற்காக மீண்டும் மீண்டும் டெல்லி மக்களை வாயார பாராட்டலாம். நெஞ்சார வாழ்த்தலாம். இந்திய மக்களிடையே மாற்று சிந்தனையை விதைத்திருக்கிறார்கள். மீண்டுமொரு முறை வாழ்த்துகள்.....! 

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

காங்கிரஸ் கட்சியின் பேரம் இன்னும் படியவில்லை...!

                  ''புலி வருது... புலி வருது...'' என்பது போல ''வருது... வருது... இதோ இன்சூரன்ஸ் மசோதா மாநிலங்களவையில் வருது...'' என்று கடந்த வெள்ளி மற்றும் திங்கள் ஆகிய தினங்களில் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதாக்கட்சி அபாய சங்கு ஊதிக்கொண்டே இருந்தது. ஆனால் மாநிலங்களவையில் தங்கள் கட்சி உறுப்பினர்களை கொண்டுள்ள  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எட்டு கட்சிகளும் 49 சதவீத அந்நிய நேரடி முதலீட்டு உயர்வுக்கான அந்த மசோதாவை பலமாக எதிர்த்தன. அந்த மசோதாவில் மாற்றங்கள் செய்யப்பட நிலைக்குழுவுக்கு அனுப்பப்படவேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் மாநிலங்களவைத் தலைவரிடமும் அளித்துள்ளனர். இதுல என்ன ஒரு ஆச்சரியம் என்றால்...? இன்சூரன்ஸ் மசோதாவை எதிர்க்கிற எட்டு எதிர்க்கட்சிகளில் காங்கிரஸ் கட்சியும் ஒன்று என்பது தான் வேடிக்கையான விஷயம். ஏனென்றால் சென்ற ஆட்சி காலத்தில் தான் ஆளுங்கட்சியாக இருந்த இதே காங்கிரஸ் கட்சி இதே மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்தது. அன்றைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த மசோதா இத்தனை ஆண்டுகளாக நிறைவேற்ற முடியாமல் போனது. 
               ஆனால் பாரதீய ஜனதாக்கட்சி பாராளுமன்றத்தேர்தலில் வெற்றிபெற்று பதவியில் அமர்ந்தவுடன் பாதுகாப்பு மற்றும் இன்சூரன்ஸ் போன்ற துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டினை உயர்த்தி அதை அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு பரிசாக அளிக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற காலத்திலிருந்து துடியாய் துடித்துக்கொண்டிருக்கிறார். அதனால் தான் அந்நிய நேரடி முதலீட்டு உயர்வுகளில் இத்தனை வேகத்தை காட்டுகிறது. ஆரம்பத்தில் இந்த இரு துறைகளிலும் அந்நிய நேரடி முதலீட்டு உயர்வை பற்றிய தனது ஆசையை மத்திய அரசு வெளியிட்டப்போது, தனக்கு நிராசையாய் போன இந்த ''உயர்வை'' காங்கிரஸ் கட்சி வரவேற்றது மட்டுமல்ல. அந்த மசோதா கொண்டுவரப்பட்டால் அதற்கு ஆதரவாக வாக்களிப்போம் என்றும் அறிவித்தது. ஆனால் அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சி தான் இப்போது திடீரென அந்த மசோதாவை வரவிடாமல் எதிர்க்கின்றது. 
              காங்கிரஸ் கட்சிக்கு அப்படி என்ன திடீர் ஞானோதயம் வந்து விட்டது  மசோதாவை எதிர்க்கிறார்கள் என்று ஆச்சரியப்பட்டு விடாதீர்கள். தேர்தல் படுதோல்வியால் திருந்திவிட்டார்களோ என்று மகிழ்ச்சிக்கொள்ளாதீர்கள். அப்படியெல்லாம்  அதிசயம் ஒன்றும் நடந்துவிடாது. பாரதீய ஜனதாக்கட்சியிடமிருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒரு காரியம் ஆகவேண்டியிருக்கிறது. அதற்கான பயமுறுத்தலே இந்த மசோதா எதிர்ப்பு போராட்டம். பன்றி வேண்டுமானால் தான் ஈன்ற குட்டியையே சாப்பிட்டுவிடும். ஆனால் காங்கிரஸ் கட்சி தான் ஈன்ற ''ராட்சச குட்டியான'' இன்சூரன்ஸ் மசோதாவை தானே தின்று கொன்று விடாது. அப்படி செய்தால் பன்றிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும். எனவே காங்கிரஸ் கட்சியின் இந்த மசோதா எதிர்ப்பு என்பது தற்காலிகமானதே. பாரதீய ஜனதாக் கட்சியை பணியவைப்பதற்கான ஆயுதம் தானே தவிர வேறொன்றும் இல்லை. 
            பாரதீய ஜனதாக்கட்சியினால் காங்கிரஸ் கட்சிக்கு அப்படியென்ன ஆகவேண்டியிருக்கிறது என்று கேட்டால், நாடாளுமன்றத்தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பிறகு மக்களவையில் இரண்டாவது பெரியக்கட்சியான காங்கிரஸ் கட்சியானது, போதுமான எண்ணிக்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இல்லாததால் ''எதிர்க்கட்சித் தலைவர்'' அந்தஸ்தை இழந்தது. ஆனால் மக்களவையில் இரண்டாவது பெரிய கட்சி என்ற வகையில் எண்ணிக்கையெல்லாம் பார்க்காமல் காங்கிரஸ் கட்சிக்கே எதிர்க்கட்சி அந்தஸ்து தரப்படவேண்டும் என்று மன்றாடிப்பார்த்தது. ஆனால் பாரதீய ஜனதா கட்சியோ காங்கிரஸ் கட்சிக்கு அப்படியொரு அந்தஸ்தை கொடுப்பதற்கு தயாராக இல்லை. அந்த அந்தஸ்தை பெறுவதற்கு  வேண்டித்தான், காங்கிரஸ் கட்சியானது குறுக்கு வழியில் இப்படியொரு பயமுறுத்தல் நாடகத்தை நடத்துகிறது. தனக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கொடுக்கப்பட்டுவிட்டால், 49 சதவீத அந்நிய நேரடி முதலீட்டு உயர்வை அனுமதிக்கும் இன்சூரன்ஸ் மசோதாவிற்கு தாராளமாக ஆதரவளிக்கும் என்பது தான் உண்மை.

திங்கள், 31 மார்ச், 2014

உழுகிற நாளில் ஊருக்குப் போய்விட்டு அறுக்கிற நாளில் அரிவாளோடு வருவதா?

 

 கட்டுரையாளர் :தோழர்.ஜி.ராமகிருஷ்ணன், 
               மாநிலச்செயலாளர்            
               மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி       

 
                 “நான் மின்சாரப் பிரச்சனையை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். மின்சாரத்தைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். விரைவில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழும்” மதுரையில் அஇஅதிமுக வேட்பாளருக்கு வாக்குகள் சேகரிக்கும் பிரச்சாரத்தின்  போது முதலமைச்சர் ஜெயலலிதா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
            தமிழகத்தில் கோடை வெயில் தனது உக்கிரத்தைக் காட்டத் துவங்கியுள்ள வேளையில், மக்களை மேலும் துயரத்தில் மின்வெட்டு தள்ளிவரும் நிலையில், கவலைப்படாதீர்கள் என்று ஆறுதல் வார்த்தைகளை சொல்லி வருகிறார் முதலமைச்சர். மேலும் “சில இடங்களில் மின் உற்பத்தி பிரச்சனையால், ஓரிரு நாட்கள் தமிழகத்தில் சில மணிநேரம் மின்வெட்டு இருந்தது. அந்த மின்வெட்டும் விரைந்து சரிசெய்யப்பட்டுள்ளது” என்று விளக்கம் அளித்திருக்கிறார். நான் மார்ச் 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கோவைத் தொகுதிக்கு தேர்தல் வேலையாக சென்றிருந்தேன்.
            அங்கு சுமார் நான்கு மணி நேரம் மின்வெட்டு இருந்தது. இந்த மின்வெட்டு சிறு, குறு தொழில்களைக் கூடுதலாக பாதிக்கிறது. கோவை மாநகரத்தில் மட்டுமல்ல, சென்னையைத் தவிர மாநிலம் முழுவதும் இதே நிலைமைதான். தற்போது மின்வெட்டால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. பொருளாதாரச் சுழற்சியில் ஒரு கண்ணி அறுந்தாலும் ஒட்டுமொத்த வளையமும் கழன்றுவிடும். உற்பத்தி பாதிப்பால், தொழிலாளர்களுக்கு வேலையின்மை, அதனால் அவர்களின் குடும்பங்கள் துயரில் ஆழ்தல் என்கிற துயரச் சுழற்சி அல்லவா உருவாகி வருகிறது. இந்த அவலநிலை கண்டு கவலைப்படாமல் இருக்க வேண்டும் என்று எப்படி கூறுகிறார் தமிழக முதலமைச்சர்? திருப்பூர், இந்தியாவிற்கு அதிகமான அளவில் அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் ஒன்றாகும். மின்வெட்டால் அங்கும் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
                இப்படி உற்பத்தி பாதிப்பதால், தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிப்புக்குள்ளாகிறது. மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெற்று வருகிறது. மின்வெட்டு அவர்களையும் பாதிக்கிறது. பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கவலைப்பட வேண்டாம் என்று எப்படி கூறுகிறார் தமிழக முதலமைச்சர்? 2001 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம்ஆண்டு வரையில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எந்தவித மின்திட்டங்களும் நடைமுறைக்கு வரவில்லை. இந்தப் பத்தாண்டு காலத்தில் அஇஅதிமுகவும், திமுகவும் தலா ஐந்தாண்டுகள் ஆட்சியில் அமர்ந்திருந்தன. தற்போது மாறி, மாறி ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டு இருவருமே தப்பித்துக் கொள்ளும் வழியைத் தேடுகிறார்கள்.
                    ஆனால்இல்லாத மின்சாரத்திற்கு மின்கட்டணத்தை ஏற்றுவதில் மட்டும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் இருந்தனர். தனது ஆட்சியின்போது ஆண்டுதோறும் மின்கட்டணத்தை திமுக உயர்த்தியது. 2009-10 ஆண்டில் 954 கோடி ரூபாய்க்கு மின்கட்டணம் உயர்ந்தது. மின்வெட்டு இல்லாத மாநிலமாக்குவோம் என்று ஆட்சிக்கு வந்த அஇஅதிமுக, 2011 ஆம் ஆண்டில் 42 சதவிகிதம் அளவுக்கு மின்கட்டணத்தை உயர்த்தியது. மக்கள் கடும் துயரத்துக்குள்ளாகினர். மின்வாரியத்தின் வருமானம் 35 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. தனியார் நிறுவனங்களிடம் ஒரு யூனிட் மின்சாரத்தை 12 ரூபாய் கொடுத்து வாங்குவது பற்றி ஆட்சியாளர்கள் வாய் திறக்க மாட்டேன் என்கிறார்கள். மின்வாரியத்திற்கு நட்டம் என்றால், எந்தக் கல்லாவிற்கு பணம் செல்கிறது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
            2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்குக் கிடைத்த தோல்விக்கு மின்வெட்டு ஒரு முக்கியமான காரணமாகும். மின்மிகை மாநிலமாக மாற்றுவோம் என்று அஇஅதிமுக தலைமை வாக்குறுதி அளித்தது. தற்போது மக்களைப் பார்த்து கவலைப்பட வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் தமிழக முதலமைச்சர்.தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அஇஅதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இந்த அவல நிலைக்குக் காரணம் என்பதோடு, மத்திய ஆட்சியாளர்களின் பங்கையும் குறைத்து மதிப்பிட முடியாது. காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் கடைப்பிடிக்கும் பொருளாதாரக் கொள்கைகள் மின்னுற்பத்தியைக் கடுமையாகப் பாதித்துள்ளது. அனைத்து மக்களுக்கும் மின்சாரம் வழங்க தனியார் மின்னுற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும் என்று அதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தனர். காங்கிரஸ், பாஜக, திமுக, அஇஅதிமுக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகளும் கைகளைத் தூக்கி ஆதரவளித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகள் மட்டுமே இதைக் கடுமையான எதிர்த்தன. தனியார்மயக் கொள்கை மக்களுக்குப் பலன் அளிக்கவில்லை. ஏற்கெனவே மின்னுற்பத்தி நடந்துவரும் மின்வாரிய மின்நிலையங்களின் ஆயுளும் முடிந்து கொண்டிருக்கிறது. தனியார் நிறுவனங்களுக்கு ஒரு யூனிட் மின்சாரத்திற்கு கூடுதலாக வாரி வழங்கத் தயாராக இருக்கும் அரசுகள் மின்வாரியத்திற்கு வழங்கினால், நட்டத்தில் ஓடுவதாக சொல்லப்படும் மின்வாரியம் அபாரமாக தனது பணியைச் செய்யத் துவங்கிவிடும். தனியார் நிறுவனங்களுக்கு அவசியமே இருக்காது.
                “உழுகிற நாளில் ஊருக்குப் போய்விட்டு, அறுக்கிற நாளில் அரிவாளோடு வந்து என்ன பயன்“ என்றொரு சொல்வடைதான் நினைவுக்கு வருகிறது. நீண்டகாலத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கையில் அதுபற்றித் திட்டமிடாமலேயே அஇஅதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இருந்துவிட்டு தற்போது அரசியல் லாவணி செய்வதில் கவனம் செலுத்துகின்றன. இந்த கடுமையான பாதிப்பு உருவாவதற்குக் காரணமான கொள்கைகளை நடைமுறைப்படுத்திய காங்கிரஸ் மற்றும் பாஜக, அதற்கு ஆதரவாக கை தூக்கிய மதிமுக, பாமக ஆகிய கட்சிகளும் மின்வெட்டிற்கான உண்மையான காரணத்தைச் சொல்லாமல் தட்டிக் கழிக்கின்றன.
              இந்த நாசகரக் கொள்கைகளைத்தான் பாஜகவும் பின்பற்றுகிறது. அதனுடன் அணி சேர்ந்துள்ள தேமுதிக தலைமை இதுபற்றி மூச்சுவிடுவதில்லை. வருகிற தேர்தலில் இந்த வெற்று லாவணிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து பிரச்சனைகளைத் தீர்க்க மாற்றுக் கொள்கைகளோடு வரும் இடதுசாரிக்கட்சி வேட்பாளர்களுக்கு மக்கள் ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

புதன், 26 பிப்ரவரி, 2014

ஊழல் காங்கிரசை தூக்கி எறிவோம் - மதவெறி பாஜகவை தடுப்போம்...!

இந்திய குடியரசின் திசைவழியை தீர்மானிக்கும் தேர்தல்...!
ஊழல், மதவெறியை ஒழிப்போம்...! 
உண்மையான கூட்டாட்சியை அமைப்போம்...! 11 கட்சிகள் கூட்டாக பிரகடனம்

            வரவிருக்கும் 16வது மக்களவைத் தேர்தலையொட்டி நாட்டில் உள்ள 11 பெரிய கட்சிகள் இணைந்து தலைநகர் தில்லியில் கூட்டாகப் பிரகடனம் வெளியிட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:
               நாடு 16வது மக்களவையைத் தேர்ந்தெடுப்பதற்காக மீண்டும் தேர்தலுக்கு செல்ல இருக்கிறது. இந்தியக் குடியரசின் எதிர்காலம் எந்தத் திசைவழியில் செல்ல வேண்டும் என்பதை நாட்டு மக்கள் தீர்மானிப்பதற்கான தருணம் இது. கடந்த ஐந்தாண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி -2 அரசாங்கம் அனைத்துவிதமான பிரச்சனைகளையும், நாட்டு மக்களுக்கு கடும் துன்பங்களையும் இதுவரையில் கொடுத்து வந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி மந்தநிலையை அடைந்தது மட்டுமல்ல, அது பணக்காரர்களுக்குச் சார்பாகவும் திருப்பி விடப்பட்டது.
              முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அனைத்துப் பொருட்களின் விலைவாசி உயர்வு மக்களின் வாழ்வைச் சூறையாடிவிட்டது. நாட்டில் விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இளைஞர்கள் வேலையின்மையாலும் வேலையிழப்பாலும் மிகவும் வாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை கிடைக்குமா என்பதற்கான சூழலே இல்லை. பல லட்சக்கணக்கான பழங்குடியினர், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். பெண்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, பாதுகாப்பற்ற சூழலில் வன்முறைகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். ஊழல் என்பது நிர்வாகத்தில் புரையோடிப்போய்விட்டது.
           இதுவே மாற்றத்திற்கும், காங்கிரஸ் கட்சியை அதிகாரத்திலிருந்து தூக்கி எறிவதற்குமான தருணமாகும். காங்கிரசுக்கு தானே மாற்று என்று கூறிக்கொண்டிருக்கும் பாரதீய ஜனதாக் கட்சியும் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளிலிருந்து எந்தவிதத்திலும் மாற்றுக்கொள்கைகளைக் கொண்டிருக்கவில்லை. இன்றைக்கு  பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் புரிந்துள்ள ஊழல்களும், பின்பற்றுகின்ற பொருளாதாரக் கொள்கைகளும் அக்கட்சி காங்கிரஸ் கட்சிக்கு எந்தவிதத்திலும் மாற்றுக்கட்சி என்று கூறமுடியாத வகையில்தான் இருக்கிறது. இரு கட்சிகளுமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவைதான்.
            மேலும், பாஜக பின்பற்றும் தத்துவம் நாட்டைப் பிளவுபடுத்தக்கூடியதும், மக்கள் மத்தியில் ஒற்றுமையின்மையை ஏற்படுத்தக்கூடியதும், மதநல்லிணக்கத்திற்கு விரோதமானதும் ஒட்டுமொத்தத்தில் நம் மதச்சார்பற்ற ஜனநாயக வலைப்பின்னலையே ஆபத்திற்குள்ளாக்கக்கூடியதுமாகும். பாரதீய ஜனதாக் கட்சியும் மதவெறி சக்திகளும் தோற்கடிக்கப்படவேண்டும்; ஆட்சிக்கு வர முடியாத விதத்தில் தடுக்கப்பட்டாக வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கும் பாரதீய ஜனதாக் கட்சிகும் மாற்றாக ஓர் அணி சேர்க்கையை உருவாக்கிடவேண்டும்.
            அது ஜனநாயகப்பூர்வமான மதச்சார்பற்ற, மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கக்கூடிய விதத்தில் கூட்டாட்சித் தத்துவம் மற்றும் மக்கள் ஆதரவு வளர்ச்சிக் கொள்கையைப் பின்பற்றக்கூடியதாக அமைந்திடவேண்டும்.
            இங்கே கூடியிருக்கிற 11 கட்சிகளைச் சேர்ந்த நாங்கள், ஆட்சியாளர்களால் ஏற்றப்பட்டுள்ள சொல்லொண்ணாத் துன்ப துயரங்களிலிருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய விதத்தில் ஒன்றிணைந்து பணியாற்றத் தீர்மானித்திருக்கிறோம். அதற்காக,
(1) அரசாங்கத்தில் ஊழலை ஒழித்திடவும், வெளிப்படைத்தன்மையை உத்தரவாதப்படுத்தவும் கூடிய விதத்தில் ஜனநாயகக் கட்டமைப்பை வலுப்படுத்திடவும்,
(2) நம் சமூகத்தின் வேற்றுமையில் ஒற்றுமை காணும் பன்முகத்தன்மையை அங்கீகரித்து, ஓர் உறுதியான மதச்சார்பற்ற மாண்பை நிலைநிறுத்திடவும்,
(3) தற்போது சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையை ஒழித்துக்கட்டக்கூடிய விதத்திலும், சமூக நீதி, விவசாயிகளின் நலன்கள், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் உரிமைகள் பாதுகாக்கப்படக்கூடிய விதத்திலும் மக்கள் சார்ந்த வளர்ச்சிப்பாதையை மேற்கொள்ளவும்,
(4) அதிகாரத்தை மத்தியில் குவித்து வைத்திருக்கும் தற்போதைய நிலையை மாற்றி, அனைத்து மாநிலங்களுக்கும் உரிமைகளை உத்தரவாதப்படுத்தக்கூடிய வகையிலும், மிகவும் பின்தங்கியிருக்கும் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக்கூடிய விதத்திலும் ஓர் உண்மையான கூட்டாட்சித்தத்துவத்தை உருவாக்கிடவும் தீர்மானித்திருக்கிறோம்.
               எங்களின் இத்தகைய முயற்சியுடன் நாட்டில் உள்ள இதர மதச்சார்பற்ற-ஜனநாயகக் கட்சிகளும், சக்திகளும் இணைந்திட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். நாட்டில் உள்ள அனைத்துப் பகுதி குடிமக்களும், எங்கள் கட்சிகளுக்கும், நாங்கள் முன்வைத்துள்ள கொள்கைகளுக்கும் தங்கள் ஆதரவினை நல்கிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம். 
இவ்வாறு 11 கட்சிகளின் கூட்டுப் பிரகடனத்தில் கூறப்பட்டிருக்கிறது.
இதில், அஇஅதிமுக, மதச்சார்பற்ற ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி, பிஜூ ஜனதா தளம், அசாம் கணபரிசத், ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் மற்றும் புரட்சி சோசலிஸ்ட் கட்சி ஆகியவற்றின் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர். 
          ஊழல் காங்கிரசை தூக்கி எறிவோம்...!             
          மதவெறி பாஜகவை தடுப்போம்...!                    
       மக்கள் நல மாற்று அரசை அமைப்போம்...!        

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

ராஜீவ் கொலையாளிகளை பழி தீர்த்துக்கொள்ளத் துடிக்கும் காங்கிரஸ் கட்சி...!

      
            நேற்று முன் தினம் கருணை மனுவின் மீதான காலதாமத நடவடிக்கையை காரணம் காட்டி 23 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவிக்கும் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவரின் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாய் குறைத்தது மட்டுமல்லாமல், தமிழக அரசே  அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் இருக்கிறது என்ற ஆலோசனையையும் கொடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் அவர்கள்  தீர்ப்பு வழங்கியதும், அடுத்த 24 மணிநேரத்தில் அந்த 3 பேர்களோடு சேர்த்து ஆயுள் தண்டனை வகிக்கும் நளினி உட்பட மற்ற 4 பேர்களையும் சேர்த்து ஏழு பேர்களையும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வதென்று தமிழக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி முடிவெடுத்து, பின் சட்டமன்றத்திலும் தமிழக முதலைமைச்சர் ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அறிவித்ததை கண்டு காங்கிரஸ் கட்சியும், மத்திய அரசும் மிரண்டு போய்விட்டன என்று தான் சொல்லவேண்டும்.
                விடுதலை என்ற அறிவிப்பை கேட்டு காங்கிரஸ் கட்சியின் ''குட்டித்தலைவர்'' ராகுல் காந்தியும், பிரதமர் மன்மோகனும் புலம்பித் தள்ளியிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல பிரதமர் அலுவலகம் இன்று காலை விடிந்ததும் அந்த மூன்று பேரின் தண்டனைக் குறைப்பை எதிர்த்தும், விடுதலையை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்து அந்த மூன்று பேரின் விடுதலையை நிறுத்திவைத்து தடை உத்தரவை பெற்றிருக்கிறார்கள். மத்திய அரசின் ''இரக்கமற்ற'' இந்தச் செயல் காங்கிரஸ் கட்சிக்கும், மத்திய அரசுக்கும் ராஜீவ் கொலையாளிகள் மீதான பழி உணர்வைத் தான் காட்டுகிறது. அந்த மூன்று பேர்களின் மரணத்தில் இவர்களுக்கு அப்படி என்ன சந்தோசம்...?

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

காங்கிரஸ் கட்சியும், பிஜேபி-யும் முகேஷ் அம்பானியை காப்பாற்றியிருக்கிறார்கள்...!

           
         

            இன்று டில்லி சட்டமன்றத்தில் முகேஷ் அம்பானியை காப்பாற்றுவதில் காங்கிரஸ் கட்சியும் பிஜேபி-யும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக செயல்பட்டிருப்பது வெட்டவெளிச்சமாய் தெரிகிறது. இதில் வியப்பதற்கொன்றுமில்லை. சமையல் எரிவாயுவின்  விலைகளை தனது  இஷ்டம் போல் அடிக்கடி உயர்த்தியதன் மூலம் இந்திய மக்களை கொள்ளையடித்து சொத்துக்களை சேர்த்த இந்திய பெருமுதலாளி முகேஷ் அம்பானி கிரிமினல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட போதே, கேஜ்ரிவால் அரசுக்கு அல்பாயுசு தான் என்றே எதிர்ப்பார்க்கப்பட்டது. தேர்தல் நேரங்களிலும், நெருக்கடியான நேரங்களிலும் தங்களுக்கு படியளக்கும், கேட்டவாறு கொட்டிக்கொடுக்கும் பெருமுதலாளியை காப்பாற்றுவதில் காங்கிரஸ் கட்சியும், பிஜேபி-யும் ஒன்றுபட்டு ஒற்றுமையாய் செயல்பட்டிருப்பது வெட்கக்கேடானது. 
                 அதிகாரத்தில் உள்ளவர்களின் அல்லது இருந்தவர்களின் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ''ஜன் லொக்பால்'' மசோதாவை டெல்லி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படாமல் தடுக்க காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டெல்லி கவர்னர் முட்டுக்கட்டைகளை போட்டும், அதையும் மீறி கவர்னரின் ஆணையை பொருட்படுத்தாமல் கேஜ்ரிவால் தாக்கல் செய்த போது  மசோதாவை தாக்கல் செய்யவிடாமல் ஊழல் விசாரணைக்கு பயந்த காங்கிரஸ் கட்சியும், அதற்கு துணையாக பாரதீய ஜனதாக் கட்சியும் ஒன்றாக சேர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து மசோதா தாக்கல் செய்வதை தடுத்திவிட்டார்கள். தங்களுடைய முதலாளியை காப்பாற்றுவதில் தங்களது ஒற்றுமையை காட்டியிருக்கிறார்கள். இதுதான்   இவ்விரு கட்சிகளின் இலச்சணம். 

புதன், 12 பிப்ரவரி, 2014

முதலைக்கண்ணீர் வடிக்கும் மன்மோகன் சிங்...!

                           கடந்த 5-ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கப்பட்டு தொடர்ந்து ஆறு நாட்களாக மக்களவையும், மாநிலங்களவையும் நடத்த முடியாமல் முடக்கப்பட்டிருக்கிறது. இது ஒன்றும் புதிதல்ல. கடந்த 10 ஆண்டுகளாகவே நாடாளுமன்றக் கூட்டத்தொடர் என்றால் இப்படித் தான் நடக்கிறது. நாடாளுமன்றம் ஒரு நாள் முழுதும் முழுமையாக தன்னுடைய அலுவல்களை கவனித்ததாக சமீபக் காலமாக வரலாறு இல்லை. எதிர்கட்சியான பாரதீய ஜனதாக்கட்சிவும், ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சி மறைமுகமாகவும், இந்த இரு கட்சிகளும் இரகசிய உடன்பாடு செய்துகொண்டு பாராளுமன்றத்தை முடக்கும் வெட்கக்கேடான வேலைகளை ''வெற்றிகரமாக'' செய்து வருவதை நாடு நன்கறியும்.
                 ஆனால் இந்த முறை நாடு சற்று வித்தியாசமாக நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி சென்றுகொண்டிருக்கும் நேரத்தில், கடைசி கூட்டத்தொடரான இந்த கூட்டத்தொடரை எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியுடன் சேர்ந்துகொண்டு ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும்  நேரடியாக களத்தில் இறங்கி இரு அவைகளையும் நடக்கவிடாமல் முடக்குகிறார்கள் என்பதும் வெட்கக்கேடானது. ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரிப்பதை எதிர்த்து - ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தை விரும்பக்கூடிய காங்கிரஸ் கட்சி எம்.பி-க்களே அரசின் செயலை எதிர்த்து அரசிற்கு எதிராக பாராளுமன்றத்திற்குள்ளேயே போராட்டம் நடத்தி கடந்த ஆறு நாட்களாக பாராளுமன்ற அலுவல்களை நடத்தவிடாமல் முடக்கிவருகிறார்கள். 
           அதேப்போல் இன்றும் பாராளுமன்றத்தில் இடைக்கால இரயில்வே பட்ஜெட்டை இரயில்வே அமைச்சர் தாக்கல் செய்து வாசிக்கும் போது அவரை வாசிக்க விடாமல் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி எம்.பி-க்கள் இடையூறு செய்திருக்கிறார்கள். பாராளுமன்ற ஜனநாயகத்தின் மீதும், பாராளுமன்ற நடவடிக்கைகளின் மீதும் மக்கள் நம்பிக்கை இழக்கும் வண்ணம் பாரதீய ஜனதாக் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து நாடாளுமன்றத்தை முடக்கும் செயலில் ஈடுபடுவது என்பது இந்த நாட்டின் சாபக்கேடாகும்.
              இப்படியெல்லாம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாராளுமன்ற முடக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், இது வரை அதைத் தடுப்பதற்கு எந்தவித முயற்சியையும் எடுக்காமல் வாய் மூடி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த பிரதமர் மன்மோகன் சிங், இன்று தான் தனது வாயைத் திறந்திருக்கிறார். 
             நாடாளுமன்றத்தில் நடக்கும் காட்சிகளை பார்க்கும்போது தமது இதயத்தில் இருந்து ரத்தம் வழிந்தோடுவதாக பிரதமர் கூறியிருப்பதை பார்த்தால், இத்தனை ஆண்டுகளாக பிரதமர் ''கும்பகர்ணனைப்'' போல் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாரோ என்ற சந்தேகம் வருகிறது. இன்று பிரதமரின் இதயத்திலிருந்து இரத்தம் வழிதொடுவது, இரயில்வே பட்ஜெட்டை இடையூறு செய்கிறார்கள் என்பதற்காக அல்ல. இன்னும் அமெரிக்காவின் ''ஆணைப்படி'' நிறைவேற்றப்படவேண்டிய நிலுவையில் உள்ள மசோதாக்களை பாராளுமன்ற முடக்கத்தினால் முடியாமல் போய்விடுமோ...? - தன் எஜமானின் நிராசையாக போய்விடுமோ...? என்ற ஏமாற்றத்தில் வந்த ''வேதனை குமுறல்'' தான் அது. மன்மோகன் சிங் விடுவது என்பது ''முதலைக் கண்ணீர்'' தான் என்பது நமக்கு தெரியாதா என்ன...?

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

முரண்பாடுகளுடன் டெல்லியில் ''ஆம் ஆத்மி கட்சி'' ஆட்சி...!


                       தலைநகர் டெல்லியில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், கடந்த காலங்களில் தொடர்ந்து ஆட்சியில் இருந்துவந்த காங்கிரஸ் கட்சி டெல்லி மாகலின் மிக கடுமையான கோபத்திற்கு பலியாகி போனது. மீண்டும் உயிர் பெற்று எழுந்திருப்பது என்பது அவர்களால் நினைத்துக்கூட  பார்க்கமுடியாது. காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் உட்பட பல முக்கிய  காங்கிரஸ் கட்சித் தலைவர்களெல்லாம் படுதோல்வி அடைந்து, 70 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் எட்டே தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்று மண்ணைக் கவ்வியது.  கடந்த ஐந்து ஆண்டுகால மகா ஊழல்கள், கடுமையான விலைவாசி உயர்வு என மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு சீர்கேடுகள் நிறைந்த   ஆட்சியினால் பாதிக்கப்பட்ட மக்கள் காங்கிரஸ் கட்சியை தூக்கி எறிந்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
           இன்னொரு பக்கம், மத்தியில் ஆட்சியை பிடிக்க அலைந்து கொண்டிருக்கும் பாரதீய ஜனதா கட்சி, டெல்லியில் பிரபலமான நபர் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து, முதலில் டெல்லியை பிடிக்கும் ஆசையில் அனைத்து 70 தொகுதிகளிலும் களத்தில் இறங்கியது. ஆனால் ஊழலை பொருத்தவரை பாரதீய ஜனதாக் கட்சியும் விதிவிலக்கல்ல. அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களும், ஆட்சி செய்த மாநிலங்களுமே மிகப்பெரிய சாட்சியாக நிற்கிறது என்பதாலும், மதவாதம் மற்றும்  சிறுபான்மையினருக்கு எதிரான போக்குகள் கொண்ட  ஒரு சீர்குலைவு சக்தியாக காட்சிதரும் பாரதீய ஜனதாக் கட்சிக்கும் ஆட்சியமைக்க முழு அளவிற்கான மெஜாரிட்டியை மக்கள் தாராமல் 30 தொகுதிகளை மட்டுமே கொடுத்தார்கள். அந்த முப்பது இடங்களில் பெற்ற வெற்றி கூட, காங்கிரஸ் கட்சியின் மீதான கோபத்தினால் மக்கள் அளித்த காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகள் தான் என்பதும் உண்மை.
          இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஊழல் எதிர்ப்பை மட்டுமே முழக்கமிட்டு தலைநகர் டெல்லியில், வெளிநாட்டுப் பணத்தை செலவு செய்து, கார்ப்போரேட் கம்பெனிகள் மற்றும் இந்திய - அந்நிய பெருமுதலாளிகளின் ஆதரவுடன் இரண்டு முறை உண்ணாவிரதமிருந்த ''ஊழலை ஒழிக்க ஆதாரம்'' எடுத்த அண்ணா ஹசாரே உடன் மேடையில் காட்சியளித்து, ஊடகங்களின் மூலம் மக்களின் மத்தியில் பிரபலமான கெஜ்ரிவால், ஹசாரேவை முந்திக்கொண்டு ''ஊழலை ஒழிக்கப்போகிறேன்'' என்று ''ஆம் ஆத்மி கட்சியை'' துவக்கி மக்களிடம் அறிமுகமே இல்லாத பலரையும் தேர்தல் களத்தில் இறக்கி 70 தொகுதிகளிலும் போட்டியிட்டார். உளவியல் ரீதியாக இந்திய மக்களை மிகவும் பாதித்த விஷயம் காங்கிரஸ் கட்சியும் பாரதீய ஜனதாக் கட்சியும் செய்த ஊழல் என்பது மட்டுமே மக்களின் மூளைகளில் பிரதானமாக ஆக்கிரமித்த ஒன்றாகிவிட்டது. ஊழலை மட்டுமே வைத்துக்கொண்டு மக்களை மூளைச் சலவை செய்து அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துவிடலாம் என்று கெஜ்ரிவால் கனவுகண்டு களத்தில் இறங்கினார். ஆனால்  28 இடங்களிலேயே வெற்றி பெற முடிந்தது. இவருக்கு கிடைத்ததும் காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகளே என்பதும் உண்மை.
          கெஜ்ரிவால் மிகவும் மிகவும் கெட்டிக்காரர். அனுபவமில்லாமலேயே மிகவும் தேர்ந்த அரசியல்வாதியை போல் நடந்துகொண்டிருக்கிறார். அண்ணா ஹசாரே ஏதோ  சிரமப்பட்டு உண்ணாவிரதமெல்லாம் இருந்து மக்கள் மத்தியில் ஒரு ''பரமாத்மா'' போல் காட்சி தந்து பிரபலமாகிக்கொண்டிருந்த கூழ்நிலையில், தான் ஒரு அரசியலில் குதித்து ஒரு கலக்கு கலக்கலாம் என்று ஹசாரே நினைத்துக்கொண்டிருக்கும் போதே அவரை முந்திக்கொண்டு ஊழல் எதிர்ப்பு கோஷத்தை யாரும் எதிர்பாராத விதமாக அரசியலில் தொபுக்கடீரென்று குதித்தார் இந்த குருவை மிஞ்சிய சிஷ்யன் கெஜ்ரிவால். ''வடை போச்சே'' என்று ஹசாரே கெஜ்ரிவாலை திட்டித்தீர்த்தார். சாபமிட்டார். தேர்தலில் கெஜ்ரிவாலுக்கு நான் ஆதரவு தரமாட்டேன் என்று சபதமிட்டார். சட்டமன்றத்தேர்தலில் கெஜ்ரிவால் 28 இடங்களே கிடைத்ததில் ஹசாரேக்கு மகிழ்ச்சி தான். நான் ஆதரவு கொடுத்திருந்தால் இன்னும் அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்திருப்பார் என்று ஹசாரே கர்ஜித்தார். இதிலே என்னன்னா.... விதைத்தவன் ஒருத்தன் அறுவடை செய்தவன் வேறோருத்தனா போய்ட்டான் என்பது தான் உண்மை. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பான்னு கெஜ்ரிவால்  சொல்லுவாரு போலிருக்கு. அந்த அளவிற்கு தேர்ந்துவிட்டார்.
         ஆனால் இந்த டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவின் மூலம் நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். சட்டமன்ற தேர்தலில் எந்த ஒரு கட்சியும் 36 இடங்களில் வெற்றி பெற்றால் தான் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கமுடியும். ஆனால் இந்த தேர்தலில் டெல்லி மக்கள் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மையை தராதது என்பதிலிருந்து நாம் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும். ''எங்களுக்கு எந்த ஒரு  கட்சியின் ஆட்சியும் வேண்டாம்'' என்று ''NOTA'' வை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
   # அப்படியிருக்க மக்களின் விருப்பத்திற்கு எதிராக கெஜ்ரிவால் ஆட்சியமைத்திருப்பது என்பதே ஒரு முரண்பாடு தான்.
              # அதுமட்டுமல்லாமல், ஊழல்கள் மலிந்த காங்கிரஸ் கட்சியே வேண்டாம் என்று தான் டெல்லி மக்கள் அக்கட்சியை தூக்கி எறிந்திருக்கிறார்கள். அப்படியிருக்கையில் மக்கள்
தூக்கி எறிந்த கட்சியின் ஆதரவோடு ஆட்சி அமைத்திருப்பது என்பது இன்னொரு முரண்பாடு.
          # காங்கிரஸ் கட்சி செய்த ஊழலைப்பார்த்து தான் ஊழலை ஒழிக்கபோறேன்னு கட்சியை ஆரம்பித்து மக்களிடம் ஒட்டு கேட்டு வந்தார். இப்போது அதே காங்கிரஸ் கட்சியோடு கைகொர்த்திருப்பது மற்றுமொரு முரண்பாடு.
          # யாருக்குமே தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலையில் எண்ணிக்கை மட்டுமே உண்மையான ஜனநாயகமாக கருதமுடியாது. ஜனநாயகத்தில் இதுவே ஒரு முரண்பாடு தான்.

சனி, 16 நவம்பர், 2013

சச்சினுக்கு ''பாரத ரத்னா'' விருது - இது நியாயம் தானா....?

 
                                                                                                                                        
         
                                                                                                                                                                   
                                                                                                        
         
          சச்சின் டெண்டுல்கர் இன்று தான் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்று மைதானத்தை வெளியேறுகிறார். இன்னும் அவர் தன் வீட்டிற்கு கூட போய் செர்ந்திருக்கமாட்டார். அதற்குள் பிரதமர் அலுவலகத்திலிருந்து சச்சினுக்கு ''பாரத ரத்னா'' விருது என்ற அறிவிப்பு வந்துவிட்டது. ''பாரத ரத்னா'' விருதென்ன விளையாட்டு சமாச்சாரமா சாதாரணமா எல்லாருக்கும் தூக்கிக்கொடுக்க...?
           சூதாடிகளுக்கும், வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கும் இந்தியாவின் மிக உயரிய பரிசு ''பாரத ரத்னா''  விருது கொடுப்பது சரிதானா..? முறை தானா...? நியாயம் தானா....?                                                        
              சச்சின் ஒரு குறிப்பிட்ட விளையாட்டின் தனிப்பட்ட சாதனைப் படைத்த வீரர் தான் என்பதை யாரும் மறுக்கவில்லை. சச்சின் உலகம் முழுதும் அறியப்பட்டவர் என்று சொல்ல முடியாது. ஆனால்  கிரிக்கெட் விளையாட்டை பற்றி அறிந்த நாட்டிலுள்ள மக்களால் நன்கு அறியப்பட்டவர் தான். ஏனென்றால்  உலகம் முழுதும் அனைவராலும் விளையாடப்படும் விளையாட்டுமல்ல. உலகம் முழுதும் பரவிக்கிடக்கும் விளையாட்டுமல்ல. கிரிக்கெட் என்ற விளையாட்டே போய் சேராத நாடுகள் உள்ளன. கிரிக்கெட் பற்றியே அறியாத மக்களும் கோடிக்கணக்கில் உள்ளனர். ஏனென்றால் வெறும் பத்து நாடுகளில் மட்டுமே விளையாடப்படும் விளையாட்டு தான் இந்த கிரிக்கெட் என்ற விளையாட்டு. அதனால் தான் ஒலிம்பிக் போட்டி போன்ற உலக அளவிலான போட்டிகளில் இதுவரை கிரிக்கெட் சேர்க்கப்படவில்லை என்பதற்கான மிக முக்கிய காரணம். கிரிக்கெட் விளையாட்டு என்பது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய 10 காலனி நாடுகளில் மட்டுமே விடுதலைக்குப் பின் இன்றும் ஆடப்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தங்கள் அடிமைகளை கிரிக்கெட் விளையாடவிட்டு வேடிக்கைப்பார்த்து போழுதுபோக்கியிருக்கிறார்கள். 
                அப்படிப்பட்ட விளையாட்டில் சாதனை செய்தாரா சச்சின் என்றால் கேட்டால், நிச்சயமாக சாதனை செய்திருக்கிறார் என்று சந்தேகமில்லாமல் சொல்லலாம். நாமெல்லாம்  பெருமைப்படத்தக்க அளவில் சாதனை புரிந்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது. அனால் அவை அத்தனையும் ஒரு  தனிமனித சாதனை தான் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். 
 அவர் அப்படிப்பட்ட சாதனைகள் புரியவேண்டும் என்பதற்காகவே ஆட்சியாளர்களால் அவருக்கு வாய்ப்புகளும், நேரங்களும், விளம்பரங்களும், ஊக்கமும்  கொடுக்கப்பட்டு சச்சினால் செய்யப்பட்டிருக்கும் சாதனைகள் தான் அத்தனையும்  என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.   கிரிக்கெட் ஆடும் அத்தனை வீரர்களுக்கும் இதே போல் வாய்ப்புகளும், நேரங்களும், விளம்பரங்களும், ஊக்கமும்  கொடுக்கப்பட்டால் அவர்களும் தனிமனித சாதனைகளை நிச்சயம்  செய்துகாட்டுவார்கள்.
                 அதுமட்டுமல்ல, இன்றைக்கு உலகமய சூழலில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக கிரிக்கெட் மைதானம் என்பது ஒரு சூதாட்டக்களமாக மாறிவிட்ட சூழ்நிலையில் - கிரிக்கெட் என்பது பண மழை  கொட்டுகிற விளையாட்டாக மாறிவிட்ட இந்த சூழ்நிலையில்  கிரிக்கெட் என்பது சாதனை படைக்கும் களமாக இல்லாமல், பணம்  - சொத்து சேர்க்கும் கஜானாவாக மாறிவிட்டது. 
               அப்படி சம்பாதித்த பணத்திற்கு சச்சின் போன்ற பெரிய கிரிக்கெட் வீரர்கள் அரசுக்கு கட்டவேண்டிய வரியை சரியாக - முறையாக - நியாயமாக கட்டியிருப்பார்களா....? என்றால்... இல்லை... இல்லவே இல்லை என்பது தான் உண்மை. அதை வருமானவரித்துறையும் கண்டுகொள்வதே இல்லை என்பதை யாராலும் மறுக்கமுடியாது. சச்சினும் இதில் விதிவிலக்கல்ல. இவர் இப்படியாக கிரிக்கெட் ஆடியும், விளம்பரங்களில் நடித்தும் ''கொள்ளையாக'' சம்பாதித்த பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்திருக்கிறார். இவர் தேசியக்கொடியை பிடிப்பதற்கே அருகதையில்லாதவர். 
               இவர் ஒரு நேர்மையான இந்திய குடிமகன்  இல்லை என்பதுமட்டுமல்ல, ஓர் உண்மையான இந்திய குடிமகனாகவும் அவர் நடந்துகொள்ளவில்லை என்பதையும் இந்த நாட்டு மக்கள் அறிவார்கள். பெப்சி, பூஸ்ட், மெட் லைப் இன்சூரன்ஸ் கம்பெனி போன்ற அந்நிய பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு இவர் தான் நிறுவனத் தூதராக இருந்து, அந்த கம்பெனிகளின் விளம்பரத்தில் நடித்து கோடி கோடியாய் சம்பாதித்தவர் என்பதையும் இந்த நாடு அறியும். இப்படிப்பட்டவர் எப்படி ஓர் உண்மையான இந்தியக் குடிமகனாக இருக்கமுடியும் என்று சொல்லுங்கள்.
              இப்படிப்பட்டவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டால் அது எப்படி சரியாக இருக்கும் - நியாயமாக இருக்கும் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.
             இதுவரை கலை, இலக்கியம், அறிவியல்   மற்றும் பொதுச்சேவை துறைகளில்  பெருமைப்படத்தக்க சாதனைகள் படைத்தவர்கள் மட்டுமே ''பாரத ரத்னா'' விருது பெற முடியும் என்ற விதிமுறை  நடைமுறையில் இருந்து வருகிறது. பிற துறைகளில் சாதித்தவர்களும் இந்த விருதை பெற முடியும் என்று விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டு சென்ற 2011 - ஆம் ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி மத்திய அரசு அறிவிப்பு  வெளியிட்டது. அப்போதே இவருக்கு  இந்த உயரிய விருதினை தருவதற்காகவே, பாரத ரத்னா விருது பெறுவதற்கான விதிமுறையில் மத்திய அரசு திருத்தம் செய்கிறது என்ற விமர்சனம் வந்தது. விளையாட்டுத் துறையில் சாதனைப் படைத்தவர்களுக்கும் பாரத ரத்னா விருது  வழங்க தான் இந்த மாற்றம் என்று அரசு பொதுவாக சொல்லியிருந்தாலும் அதில் நியாயம் இருக்கிறது. ஆனால் டெண்டுல்கருக்காக தான் இந்த மாற்றம் என்று வெளிப்படையாகவே தெரிந்ததும் நாட்டின் அனைத்துப்பகுதிகளிலிருந்து எதிர்ப்புக் கிளம்பவே மத்திய அரசின் முயற்சி கைவிடப்பட்டது. 
              ஆனால் இன்று ஓய்வுபெறும் ஒரு உணர்ச்சிமிக்க சூழ்நிலையில் - யாரும் எதிர்ப்பார்க்காத இந்த சூழ்நிலையில் பிரதமரின் அலுவலகம் வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பு என்பது துரதஷ்டமானது. ''பாரத ரத்னா'' விருதின் மாண்பும், பெருமையும் காப்பாற்றப்படவேண்டுமானால், மத்திய அரசு சச்சினுக்கு ''பாரத ரத்னா'' விருது கொடுப்பதாக எடுத்திருக்கும் முடிவை திரும்பப்பெறவேண்டும். ''பாரத ரத்னா'' விருதை வழங்கி பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு சச்சினைப் பயன்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று காங்கிரஸ் கட்சி பகல் கனவு காண்கிறது.
                             சென்ற 1954-ம் ஆண்டிலிருந்து பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. மக்களையும், தேசத்தையும் பற்றி தன்னலமில்லாமல்  சிந்தித்தவர்களும், நம் தேசத்தை பெருமைக்குள்ளாக்கியவர்களுமான சர் சி.வி.ராமன், சி.வி.ராஜகோபாலாச்சாரி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்  ஆகிய  இவர்களில் தொடங்கி, இதுவரை 41 பேருக்கு ''பாரத ரத்னா'' விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
             கடந்த காலங்களில் இந்த உயரிய விருதினை ஜவஹர்லால் நேரு, டாக்டர் ராஜேந்திர பிரசாத், அமார்த்தியா சென், ஜெயபிரகாஷ் நாராயண், டாக்டர் அப்துல் கலாம், டாக்டர் அம்பேத்கர், எம். எஸ். சுப்புலட்சுமி, பண்டிட் ரவி சங்கர், உஸ்தாது பிஸ்மில்லாகான், மொரார்ஜி தேசாய், எம். ஜி. ராமச்சந்திரன், ராஜீவ் காந்தி,  லதா மன்கேஷ்கார், அன்னை தெரசா, கான் அப்துல் காபார் கான், நெல்சன் மண்டேலா.... போன்ற உலகின் - தேசத்தின் - சமூகத்தின் உயர்ந்த தலைவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட இந்த உயரிய விருதினை பெறுவதற்கு மேலே குறிப்பிடப்பட்டவர்களின் தகுதிகளில் ஏதாவது ஒரு தகுதியாவது ''கிரிக்கெட் சூதாடி'' சச்சின் டெண்டுல்கருக்கு உண்டா...? என்பதை அவரே தன்னை எடைபோட்டுப்பார்க்கவேண்டும்.  நீங்களும் யோசித்துப்பாருங்கள்.         

வியாழன், 24 அக்டோபர், 2013

அனுதாபத்தைத் தேடுகிறார் காங்கிரஸ் கட்சியின் ''குட்டித்தலைவர்'' ராகுல் காந்தி....!

         
                                                                                                                                                                   
         இந்திய மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் அனைத்தும் மோடியையும், ராகுல் காந்தியையும் 2014 - ஆம் ஆண்டின் பிரதமர் வேட்பாளர்கள் என்று அவர்களாகவே முடிவுபண்ணி, அந்த இரண்டு பேரையும் உசுப்பேத்திவிட்டதால் அந்த ரெண்டு பெரும் கள்ளு குடிச்ச குரங்குகளைப்போல் செய்யற லொள்ளு இருக்கே தாங்கமுடியலடா சாமி. தினம் தினம் இவர்களைப்பற்றிய செய்திகளைத் தான் ஊடகங்கள் முன்னிலைப்படுத்துகின்றன.   இப்படித்தான் நேற்று இராஜஸ்தான் மாநிலத்தில் சுரு என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில்  காங்கிரஸ் கட்சியின் ''குட்டித்தலைவர்'' ராகுல் காந்தி, மத்தியில் தங்கள் கட்சியின்  தலைமையிலான ஆட்சியில் அதை வெட்டி முறிச்சோம், இதை கிழிச்சோம் என்று சாதனைகளை எடுத்துச் சொல்ல முடியாமல், மக்கள் மறந்து போன ''பழங்கதைகளை'' எல்லாம் சொல்லி ஒப்பாரி வெச்சிருக்கிறார்.  ''நாட்டுக்காக உயிர் நீத்த என் பாட்டி, தந்தையைப் போல நானும் ஒரு நாள் கொல்லப்படலாம். அதற்காக நான் கவலைப்படவில்லை. இதனை என் இதயத்தின் ஆழத்திலிருந்து சொல்கிறேன்'' என்று சோகமாக சொல்லி ராகுல் காந்தி அழுதிருக்கிறார். தொலைக்காட்சி சீரியலை பாக்கிறமாதிரி ஜெனங்கல்லாம் ''ஓவென்று'' அழுதிருக்கிறார்கள்.   காங்கிரஸ் கட்சிக்கு சாதனைகள்  என்று ஒன்றும் சொல்வதற்கில்லை. மக்களுக்கு கொடுத்த வேதனைகள் தான் அதிகம். வேதனையில் தத்தளிக்கும் மக்களை திசைத்திருப்புவதற்கு காங்கிரஸ் கட்சிக்கு இப்படிப்பட்ட ''நாடகம்'' தேவைபடுகிறது. ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டதையும், அப்பா ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதையும் சொல்லி மக்களிடையே அனுதாப அலையை உருவாக்கி தேர்தலில் வெற்றிப்பெற்றுவிடலாம் என்று கனவு காண்கிறது காங்கிரஸ் கட்சி.
          தனது பாட்டி மற்றும் அப்பாவின் மறைவிற்கு பிறகு, கார்ப்போரேட் கட்சிகளான   காங்கிரஸ் கட்சி மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் தவறான மக்கள் விரோத கொள்கைகளின் காரணமாக கடந்த 23 ஆண்டுகளாக இன்று வரை மூன்றரை இலட்சம் விவசாயிகள் ''தற்கொலை'' செய்துகொண்டார்களே அதை மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை.
          கடந்த 23 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதாக் கட்சியும் மாறி மாறி ஆட்சி செய்த நம் நாட்டில் வேலையின்மை, வேலையிழப்பு, வருமானம் வெட்டு, விலைவாசி உயர்வு, கடன் தொல்லை என பல்வேறு வேதனைகளுக்கு ஆளான இளைஞர்கள் திருடர்களாகவும், அடியாட்களாகவும், கூலிப்படைகளாகவும், நக்சலைட்டாகவும், தீவிரவாதிகளாகவும் மாறி சீரழிந்துப்போய் திரிகிறார்களே அதை மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை.
        காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் தங்களை வாழவைக்கும் கார்ப்போரேட் முதலாளிகளுக்கு சலுகைகளையும், வருமானவரி விலக்கையும், மானியங்களையும் அள்ளி அள்ளி கொடுத்துவிட்டு, ஆனால் தங்களுக்கு மட்டும் நின்னா வரி, உட்காந்தா வரி, நடந்தா வரி, சாப்பிட்டா வரி,  தூங்கினா வரி என்று ஏராளமான வரிகளைப்போட்டு மத்திய அரசே மக்களிடம் ''கொள்ளையடித்தது'' மட்டுமல்லாது, இதுவரை அளித்து வந்த சலுகைகளையும், மானியங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டினார்களே அதை மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை.
              கொள்ளுத்தாத்தா நேரு உருவாக்கிய பொதுத்துறை ஆயுள் காப்பீட்டையும், பாட்டி இந்திரா காந்தி உருவாக்கிய அரசு வங்கிகளையும், பொதுத்துறை பொதுக்காப்பீட்டையும் காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதாக் கட்சியும் சேர்ந்து கொன்றீர்களே அதை மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை.
       இந்த இரண்டு மக்கள் விரோதக் கட்சிகளின் வேதனைமிகுந்த ஆட்சிகளின் ''சாதனைப்பட்டியலை'' அடுக்கிக்கிட்டே போகலாம். கடந்த பல ஆண்டுகளாக இத்தனை வேதனைகளிலும் அல்லல்படும் மக்களை திசைத்திருப்புவதற்கு ராகுல் காந்திக்கு மக்கள் மறந்து போன ''பழங்கதைகள்'' தேவைப்படுகிறது. இதன் மூலம் ஓட்டுகளை பெற்றுவிடலாம் என்று பகல் கனவு காண்கிறார்.    

புதன், 9 அக்டோபர், 2013

பிரிவினையை விரும்பாத ஆந்திர மக்களின் உணர்வுகளை மதிக்கவேண்டும்...!

 

                எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சி வீழ்ச்சியடைகிறதோ அல்லது நாட்டு மக்கள் எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தியில் இருக்கிறார்களோ அப்போதெல்லாம் கட்சியை காப்பாற்றிக்கொள்ள மக்களை திசைத்திருப்புவதற்கு ஏதாவது ''சித்து விளையாட்டில்'' ஈடுபடுவது என்பது காங்கிரஸ் கட்சியின் கடந்த கால வரலாறாக இருந்து வருகிறது. சுதந்திரம் அடைவதற்கு முன்பும் பின்பும் இது தான் காங்கிரஸ் கட்சியின் அரசியலாக கருதப்படுகிறது. தற்போது நாடு முழுதும் மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைமையினான மத்திய ஆட்சியாளர்கள் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள். விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, எங்கும் ஊழல், எதிலும் ஊழல், பெருகிவரும் வேலையின்மை, வேலையிழப்பு, பணவீக்கம், ரூபாய் மதிப்பிழப்பு போன்ற மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் கையாலாகாதத்தனத்தால் மக்கள் ஒரு பக்கம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் நாடு முழுதும் மக்களின் செல்வாக்கை இழந்துவிட்ட காங்கிரஸ் கட்சி, குறிப்பாக ஆந்திர மக்களிடம் மிகப்பெரிய சரிவை சந்தித்துக்கொண்டிருக்கிறது.
          அரசியல் ஆதாயத்திற்காக தெலங்கானா பிரிவினைக்கு ஊக்கம் கொடுத்தது மட்டுமல்லாது, அதை சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்தத் துடித்துக்கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி நாடு முழுதும் குழப்பத்தை உண்டாக்கியிருக்கிறது. பிரிவினையை விரும்பாத ஆந்திர மக்கள் - ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தையே விரும்பக்கூடிய ஆந்திர மக்கள், அரசே செய்யும் பிரிவினை வேலைகளைக் கண்டு கோபங்கொண்டு மாபெரும் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். அவர்கள் நாட்டின் ஒருமைப்பாட்டை - ஒற்றுமையை சீர்குலைக்கின்ற வகையில் தனி மாநிலம் வேண்டும் என்று போராடவில்லை. ஒருமைப்பாட்டிற்கும், ஒற்றுமைக்கும் வலுசேர்க்கும் விதமாகத்  தான் போராடுகிறார்கள். ஒன்றுபட்ட ஆந்திரமாநிலத்திற்காக ஒட்டுமொத்த மாநில மக்களும், அரசு ஊழியர்களும் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். அவர்கள் பக்கம் நிற்கவேண்டிய மத்திய அரசு அவர்களுக்கெதிரான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. ஊரடங்குச்சட்டம், கண்டதும் சுடுதல் போன்ற அடக்குமுறை உத்திரவுகளை பிறப்பித்துள்ளது என்பது துரதஷ்டமானது. மேலும் இச்செயல் பிரிவினை வேண்டுவோர்க்கு பலம் சேர்க்கும் நியாயமற்ற செயல் மட்டுமல்ல, ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் சீர்க்குலைக்கும் செயல். இது ஆபத்தானது. விபரீதமானது. இது அரசே செய்யும் பயங்கரவாத செயலாக கருதப்படும்.
             குழம்பியக்குட்டையில் மீன் பிடிக்கும் வேலையை காங்கிரஸ் கட்சி நிறுத்திக்கொள்ளவேண்டும். பிரிவினை விரும்பாத ஆந்திர மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவேண்டும். அரசியல் ஆதாயத்திற்காக நாட்டின் எதிர்காலத்தை பலியிடக்கூடாது.



ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

ஊ...ஊ...ஊ... காங்கிரஸ் கட்சிக்கு சங்கு ஊதியாச்சி.!

                                                                                                                                                        

                                                                                                                                                        

                                                                                                                                                     

                                                                                                                                                     
                                                                                                                                                      

                                                                                                                                                     

               அன்றே சொன்னார் காந்தி...  காங்கிரஸ் கட்சியை கலைச்சிடுங்கடா பாவிகளான்னு...
பின்னாடி வந்த காந்தி குடும்பம் (இது வேற காந்தி) அதை கச்சிதமா செய்றாங்க... காங்கிரஸ் கட்சிக்கு சங்கு ஊதியாச்சி... அடக்கம் பண்ணவேண்டியது தான்...

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

பிரிவினையை ஊக்குவித்து கலகம் செய்யும் காங்கிரஸ் கட்சி...!

                                                                                                                      

                                                                                                                                                                                                                                                                                   
நாட்டின் பிற பகுதிகளிலும் பிரிவினை கலகக் குரல் கேட்க ஆரம்பித்துவிட்டது. இது இந்திய ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் ஆபத்தானது என்பதை காங்கிரஸ் கட்சி உணரவில்லை.


சனி, 9 பிப்ரவரி, 2013

அவை ஒழுக்கமும் கண்ணியமும் காப்பாற்றப்படவேண்டும்...!



           ஊழல் குற்றச்சாட்டுகளில் தத்தளித்துக்கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி தற்போது ஒரு படி மேலே போய் பாலியல் குற்றச்சாட்டில் நுழைந்திருக்கிறது. இதெல்லாம் காங்கிரஸ் கட்சியின் ''அரசியல்ல சகஜமப்பா'' என்று நீங்கள் சொல்லுவது கேட்கிறது. அந்த பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அந்த ''மகா யோக்கியர்'' யார் என்பது தான் நமது கேள்வி....? அவரு யாருன்னு தெரிய வேண்டுமென்றால் நாம் 17 ஆண்டுகளுக்கு பின்னோக்கிச் செல்லவேண்டும்.
                ''சூரியநெல்லி'' என்ற ஓர் ஊர் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் இருக்கிறது. 17 ஆண்டுகளுக்கு முன் 1996 - ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 வயதே ஆன அந்த சூரியநெல்லி ஊரைச் சேர்ந்த ஒரு சிறுமியை பஸ் கண்டக்டர் ஒருவன் ஏமாற்றி கடத்திச் சென்று வேறொருப் பெண்ணிடம் விற்றுவிட்டான். அந்தப் பெண்ணோ பாலியல் தொழில் செய்யும் விடுதிகளுக்கு தவறான முறையில் அப்பாவிப் பெண்களை சப்ளை செய்பவள். இவளது கூட்டாளியாக இருந்து இது போன்ற வேலைகளுக்கு உதவியாக இருந்தவன் தர்மராஜன் என்ற வக்கீல் தொழில் செய்தவன். வக்கீல் தொழிலைத் தவிர இது போன்ற சமூகப் பணிகளைச் செய்தவன்.
           இப்படி சிக்கிய 16 வயதே ஆன அந்த சிறுமியை கேரளாவில் பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று பாலியல் தொழிலில் ஈடுபத்தி வன்கொடுமை செய்துள்ளனர். பெரிய பெரிய முதலாளிகள், பெரிய அதிகாரிகள், பிரபலமான அரசியல்வாதிகள் என பல பேர் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது தான் வெட்கக்கேடான விஷயம். சுமார் 40 நாட்களாக 42 பேர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி பிறகு துரத்தி அனுப்பிவிட்டனர்.
            அந்த 42 பெரிய மனிதர்களில் ஒருவர் தான் இந்த ''மகா யோக்கியர்'' கேரளா மாநில காங்கிரஸ் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவைத் துணைத்தலைவருமான ''பெருமரியாதைக்குரிய'' பி. ஜே. குரியன் என்பது இந்த நாடு தலைகுனிய வேண்டிய விஷயமாகும். அந்த சிறுமி பாலியல் கொடுமை சம்பந்தப்பட்ட வழக்கில் சிக்கிய குரியன் உட்பட அந்த   42 பேரும் விடுதலை செய்யப்பட்டார்கள். பிறகு அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யப்பட்டு, அந்த 42 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது தவறு என்று உச்சநீதிமன்றமும் கூறிவிட்டது.
          இது ஒரு பக்கம் இருக்க... கடந்த டிசம்பர் மாதம் புதுதில்லியில், ஓடும் பஸ்ஸில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்துவிட்ட சம்பவத்தை எதிர்த்து நாடு முழுதும் எழுந்த மக்களின் கிளர்ச்சியின் காரணமாக மத்திய அரசு கடந்த வாரம் ''பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு தண்டனை வழங்கும் அவசர சட்டத்தை'' பிறப்பித்தது. இந்த சட்டம் வருகிற பாராளுமன்றக் கூட்டத்தொடரிலேயே விவாதிக்கப்படவுள்ளது. மாநிலங்களவையிலும் விவாதிக்கப்படும். பாலியல் வன்கொடுமைக்கு தண்டனை வழங்கும் ஒரு சட்டத்தை அவையில்  விவாதிக்கும் போது பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவர் - அதாவது இந்த ''மகா யோக்கியர்'' பி. ஜே. குரியன் அவையின் துணைத்தலைவராக இருந்து அவையை நடத்துவது என்பதோ அல்லது ஒரு மாநிலங்களவை உறுப்பினராக கூட அவையில் அமர்ந்திருப்பது என்பதோ நியாயமற்றது.. நீதியற்றது என்பது தான் இன்றைக்கு மக்கள் மத்தியில் உலா வரும் செய்தியாகும்.
            பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு தண்டனை வழங்க வழிச்செய்யும் இந்த சட்ட மசோதா மாநிலங்களவையில் நுழைவதற்கு முன், பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட அவையின் துணைத்தலைவர் வெளியேற வேண்டும். கண்டிப்பாக அவராகவே பதவி விலகவேண்டும் அல்லது காங்கிரஸ் கட்சியின் தலைமை அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பாகும். அப்போது தான் அவையின் ஒழுக்கமும், கண்ணியமும் காப்பாற்றப்படும். அது தான் அவையின் மாண்புக்கு மரியாதைக்கும் அர்த்தமாகும்.
         ஆனால் ''அன்னை'' சோனியா காந்தியும், ''அண்ணன்'' ராகுல் காந்தியும் எந்தவிதமான சலனமும் இல்லாமல் வாயை மூடிக்கொண்டு மவுனமாக இருக்கின்றனர் என்பதை தான் நாடு தலைகுனிந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

காங்கிரஸ் கட்சியின் ''மூளைச் சலவை'' கூட்டம் - மக்களிடையே எடுபடாது...!


       கடுமையான விலைவாசி உயர்வால் வாடிக்கிடக்கும் இந்திய நாட்டின் சாதாரண குடிமக்கள் ஒரு பக்கம். மத்திய அரசின் தவறான கொள்கைகளின் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை எதிர்வரும் மக்களவைத் தேர்தல் நேரத்தில் எப்படி சந்திப்பது என்று புரியாமல் சோர்ந்துப் போயிருக்கும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் இன்னொரு பக்கம். தேர்தலுக்கோ இன்னும் ஓராண்டு மட்டுமே இருக்கும் சூழ்நிலையில், தேர்தலை எப்படி சந்திப்பது என்பதை விட மக்களை எப்படி சந்திப்பது என்ற பயம் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு வந்துவிட்டது என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். அதனால் தான் ஜெய்ப்பூரில் கடந்த நான்கு நாட்களாக ''சிந்தனை அமர்வு'' என்ற பெயரில் ஒரு ''மூளைச் சலவை''  கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது
              கூட்டத்தில் பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்களை எப்படி மீட்பது...? எதிர் வரும் மத்திய பட்ஜெட்டில் வரிச்சுமையிலிருந்து மக்களை எவ்வாறு காப்பாற்றுவது...? நிலம், வேலைவாய்ப்பு, உணவு, கல்வி, சுகாதாரம், மருத்துவம் போன்றவற்றிற்கு பட்ஜெட்டில் ஒதுக்கீடு எப்படி இருக்கவேண்டும்...? கட்டுக்கடங்கா விலைவாசியை கட்டுப்படுத்துவது எப்படி...? போன்றவைகளைப் பற்றியெல்லாம்  ''சிந்தனை'' செய்வதற்காக - விவாதிப்பதற்காக கூட்டப்பட்ட கூட்டம் என்று நீங்கள் நினைத்திருந்தால் உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். ஏனென்றால் இது அதற்கான கூட்டமே அல்ல. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கின்ற மக்களவைத் தேர்தலில் எப்படிப்பட்ட ''வேஷங்களையும், கோஷங்களையும்'' போட்டு மக்களை ஏமாற்றலாம் என்பது தான் இந்த கூட்டத்தின் முதல் ''செயல் திட்டமாக'' இருந்தது.
             தற்போது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடி, வேலையின்மை, வேலையிழப்பு, வருமானம் இழப்பு, உயராத வருமானம், உயர்ந்துகொண்டே போகும் விலைவாசி, சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாக போய்விட்ட கல்வி, சுகாதாரம், மருத்துவம், உணவு உரிமை பறிப்பு, சில்லறை வர்த்தகத்தில் அன்னியர் நுழைவு, எங்கும் ஊழல் - எதிலும் ஊழல் போன்றவைகள் தான் ''பொருளாதார மேதை'' மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சி மற்றும் திராவிட முன்னேற்ற கழக கூட்டணி ஆட்சியின் கடந்த நான்கு ஆண்டுகால சாதனையாகும். இதை யாரும் மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும் என்கிற அவசியமில்லை. இவைகளை மக்களே உணர்ந்திருக்கிறார்கள். எனவே இவற்றுக்கெல்லாம் காரணமான இந்திய பிரதமராக வேலையிலிருந்து கொண்டு அமெரிக்க எகாதிப்பத்தியத்திற்காக வேலை செய்துகொண்டிருக்கும் மன்மோகன் சிங் மீதும், காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்துகொண்டு நாட்டிற்கெதிரான வேலைகளை செய்துகொண்டிருக்கும் சோனியா காந்தி மீதும் மக்கள் மிகுந்த கோபத்தோடும் எரிச்சலோடும் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. மக்களை நாடியை புரிந்துகொண்ட தான் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு, தேர்தல் நேரத்தில் ஓட்டுக்காக மக்களை  சந்திக்கப் போகும் போது தங்களை மக்கள் விரட்டியடிப்பார்கள் என்ற பயத்தில், மக்களிடமிருந்து தப்பித்துக்கொள்வதற்கு ஒரு ''மாயஜால வித்தை'' உடனடியாக தேவைப்பட்டது. அந்த மாயஜால வித்தைக்கான ''மந்திரக்கோல்'' தான் இந்த ''யுவராஜ்''  ராகுல் காந்தி என்பதையும் மக்கள் எந்த வித மயக்கமுமில்லாமல், சலனமும் இல்லாமல் புரிந்துகொள்ளவேண்டும்.
          அதனால் தான் காங்கிரஸ் கட்சிக்கு மக்களுக்கு எரிச்சலூட்டும் மன்மோகன் சிங்கின் முகமூடியை கழட்டிவிட்டு, இப்போது யுவராஜ் ராகுலின் முகமூடியை போட்டிருக்கிறார்கள். இந்த முடிவு என்பது கட்சித் தொண்டர்களை எல்லாம் கலந்தாலோசித்து ஜனநாயக முறைப்படி எடுத்த முடிவல்ல. ஒரு சில மேல்மட்ட கட்சித்தலைவர்கள் மட்டுமே முன்மொழித்து திணிக்கப்பட்ட ''கருத்துத்திணிப்பு''  என்பதையும், அதற்கான ''மூளைச் சலவை'' கூட்டமே இந்த கூட்டம் என்பதையும் யாரும் மறந்துவிடக்கூடாது.
           இது முகமூடி மாற்றமே தவிர அரசியல் மாற்றமோ - கொள்கை மாற்றமோ அல்ல என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். இது புதிய மொந்தையில் பழைய கள் தான்.   இந்த பழையக் கள்ளுக்கு மயங்கி காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகளுக்கு வாக்களித்து ஆட்சியில் அமரச் செய்தால், மிச்ச மீதி உரிமைகளும் பறிக்கப்படும். நாம் இனிமேலும் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலைவரும். நம் நாடும், நாட்டின் செல்வங்களும் நம் கையைவிட்டு போய்விடும் என்பதை மறந்துவிடக்கூடாது.
           நாமிருக்கும் நாடு நமதென்பதை அறிவோம்... நமக்கே உரிமையாம் என்பதறிவோம்... நமக்கான ஆட்சியை பற்றி சிந்திப்போம்... நமக்காக போராடுபவர்களை அடையாளம் காண்போம்... அவர்களுக்கே வாக்களிப்போம்... தேர்ந்தெடுப்போம்...