மக்களவைத் தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மக்களவைத் தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 20 மே, 2014

நரேந்திர மோடிக்கு ஒரு திறந்த மடல்...!


அன்பார்ந்த நாளைய பிரதமர் அவர்களே,
                இதயப்பூர்வமான வாழ்த்துக்களோடு இதை எழுதுகிறேன். முழு நேர்மையோடு இதை நான் சொல்கிறேன். இதை தைரியமாகச் சொல்வது எனக்கு அவ்வளவு எளிதானதல்ல. ஏனென்றால், இந்த உயர்ந்த பொறுப்பை நீங்கள் அடைவதை பார்க்க விரும்பாதவர்களில் நானும் ஒருவன். நீங்கள் பிரதமராவதைப் பார்த்து லட்சக்கணக்கான மக்கள் பரவச நிலையில் இருக்கும் அதேவேளையில், மேலும் பல லட்சக்கணக்கான மக்கள் கலவர மனநிலையில் ஏன் இருக்கிறார்கள் என்பது மற்றவர்களைவிட உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
             நீங்கள் இந்த இடத்திற்கு வரப்போகிறீர்கள் என்று சொன்னவர்களை சில நாட்களுக்கு முன்புவரை நான் நம்பவில்லை. ஆனால், ஜவஹர்லால் நேரு உட்கார்ந்த, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தியின் அவசர நிலையை எதிர்த்த போராட்டத்திற்குப் பிறகு மற்றொரு குஜராத்தியான மொரார்ஜி தேசாய், பின்னர் உங்கள் அரசியல் குருவான அடல் பிகாரி வாஜ்பாய் ஆகியோர் அமர்ந்த நாற்காலியில் நீங்களும் அமர்கிறீர்கள்.
            அதில் நீங்கள் அமர்ந்துவிடக்கூடாது என்று விரும்பியவர்கள், நீங்கள் அந்த இடத்திற்கு வந்துவிட்டீர்கள் என்ற உண்மையை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இத்தகைய அபூர்வமான சிறப்பிடம் உங்களுக்குக் கிடைப்பது பற்றி எனக்குள்ள பெரிய சந்தேகங்களைத் தாண்டி, உங்களது நலிவடைந்த சமூகம் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த உங்களைப் போன்ற ஒருவர் இந்தியப் பிரதமராக வருவதை நான் மதிக்கிறேன். எல்லோரும் சமம் என்ற நமது அரசியல் சட்டத்தின் பிரதானமான நோக்கத்தை அது நிறைவேற்றுகிறது.

தேசம் பற்றிய மறுபார்வை            

          நீங்கள் “தேநீர் விற்றவர்” என்று கண்மூடித்தனமாகவும், ஏளனமாகவும் சிலர் பேசியபோது, எனக்கு வயிற்றைப் பிரட்டியது. தனது வாழ்வாதாரத்திற்காக தேநீர் செய்து அதை விற்றவர் இந்திய அரசாங்கத்திற்குத் தலைமை தாங்கப் போகிறார் என்பது எவ்வளவு அற்புதமான விஷயம் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். ஆனால் இதையெல்லாம் சொன்னபிறகும், திரு. மோடி அவர்களே, நீங்கள் இந்த உயர் பொறுப்பில் அமரப் போவது லட்சக் கணக்கானவர்களிடம் கலவர மனநிலையை ஏன் ஏற்படுத்தியுள்ளது என்பதற்குள் நான் செல்ல வேண்டும். 2014 தேர்தலில் மோடிக்கு ஆதரவா அல்லது எதிராகவா என்றுதான் வாக்காளர்கள் வாக்களித்துள்ளார்கள் என்பது மற்ற எவரையும் விட உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
             இந்தியாவின் சிறந்த பாதுகாவலர் மோடியா..? அவர்தானா, இல்லையா..? என்பதுதான் மையப்பொருளாக இருந்தது. இந்தியாவின் சிறந்த பாதுகாவலர், சொல்லப்போனால் ரட்சகர் என்ற அளவிற்கு, 31 சதவிகித மக்களின் (உங்கள் வாக்கு சதவிகிதம்) மனங்களை நீங்கள் கவர்ந்ததால் பாஜகவுக்கு இடங்கள் கிடைத்துள்ளன. 69 சதவிகித மக்கள் உங்கள் பாதுகாவலராகப் பார்க்கவில்லை என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். நமது தேசம் என்பதன் உள்ளடக்கத்தோடும் அவர்கள் வேறுபடுகிறார்கள். திரு. மோடி அவர்களே, தேசம் என்ற இந்தக் கருத்துதான், அரசியல் சட்டத்தின் அடிப்படையில் பிரதமராகப் போகும் உங்களுக்கு, இங்கு முக்கியமானதாக இருக்கப் போகிறது. தேசம் என்ற உங்கள் எண்ணத்தை மறுபார்வை செய்ய வேண்டும் என்று உங்களை நான் வலியுறுத்துகிறேன்.

சிறுபான்மையோருக்கு உறுதியளித்தல்           

          ஒற்றுமை மற்றும் நிலையான தன்மை ஆகியவற்றை முன்வைக்கும்போது, சர்தார்வல்லபாய் படேலின் பெயர் மற்றும் அவரது அந்தஸ்தை மீண்டும், மீண்டும் உங்கள் பேச்சில் கொண்டு வருகிறீர்கள். சிறுபான்மையினருக்கான அரசியல்சட்ட அவைக்குழுவின் தலைவராக சர்தார் இருந்தார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்தியாவின் சிறுபான்மையினருக்கு கல்வி, கலாச்சார மற்றும் மத ரீதியான உறுதி மொழிகளை அரசியல் சட்டம் அளிக்கிறது என்றால், அதற்கு சர்தார் படேல் மற்றும் அந்தக்குழுவின் உறுப்பினர்கள், குறிப்பாக சீக்கிய கபூர்தலாவின் கிறித்தவ மகளான ராஜ்குமாரி அம்ரித் கவுர் ஆகியோருக்கு நன்றி சொல்ல வேண்டும். சிறுபான்மையினர் பற்றிய அரசியல் சட்டத்தின் பார்வையை மாற்றுவதோ அல்லது திருத்துவதோ கூடாது, அதை நீர்த்துப் போகச் செய்வது அல்லது பூசிமெழுகுவது ஆகிய வேலைகளையும் நீங்கள் செய்யக்கூடாது.
            அதை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் திரு.மோடி அவர்களே. அந்தக்குழுவில் வெற்றி வீரரான சர்தார் என்ன சொன்னார் என்பதை நீங்கள் படிக்க வேண்டும்.பலரும் ஏன் இந்த அளவுக்கு அச்சப்படுகிறார்கள்... அந்த அச்சத்தை வெளிப் படுத்தக்கூட ஏன் அச்சப்படுகிறார்கள்..?நீங்கள் ஊர்வலங்களில் பேசுகையில், ஆணை பிறப்பிக்கும் ஒரு பேரரசரைப் போலல்லாமல் இந்திய மக்கள் என்ற எண்ணத்தோடு இருக்கும் ஒரு ஜனநாயகவாதியைக் கேட்க விரும்புகிறார்கள். சிறுபான்மையினரை ரட்சிக்க வேண்டாம் திரு.மோடி அவர்களே, அவர்களுக்கு நம்பிக்கையூட்டுங்கள். “வளர்ச்சி” என்பது பாதுகாப்புக்கு ஈடாகாது. “குர் ஆன் ஒரு கையில், மறுகையில் லேப்டாப்” என்ற வார்த்தைகளிலோ அல்லதுஅந்த அர்த்தத்திலோ நீங்கள் பேசியிருக்கிறீர்கள். அந்தக்காட்சி அவர்களுக்கு நம்பிக்கையூட்டவில்லை. ஏனெனில் அவர்களை அச்சுறுத்தும் வகையில் மற்றொரு காட்சி ஓடுகிறது. கொலைகாரன் ஒருவனின் ஒரு கையில் இந்து வீரகாவியம் அடங்கிய டிவிடியும், மறுகையில் அச்சுறுத்தும் திரிசூலமும் அந்தக் காட்சியில் உள்ளது. முன்பெல்லாம், வகுப்பறையின் மூலையில் உப்பு தடவப்பட்ட தடியை தலைமையாசிரியர்கள் வைத்திருப்பார்கள்.
               அதைப் பார்த்தவுடன், நம்மைத் தோலுரித்து விடுவார் என்று நினைவுக்கு வரும். இங்கு, உப்பு தடவப்பட்ட தடியாக நமக்கு நினைவுக்கு வரும் சம்பவங்களில் ஒன்று என்னவென்றால், சில மாதங்களுக்கு முன்பாக முசாபர் நகரில் நடந்த கலவரத்தில் 42 இஸ்லாமியர்கள் மற்றும் 20 இந்துக்கள் கொல்லப்பட்டதும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்கள் இருப்பிடங்களிலிருந்து வெளி யேற்றப்பட்டதும்தான். “ஜாக்கிரதை, இந்தக் கதிதான் உனக்கு நேரும்“ என்பது ஜனநாயகத்தில் அச்சப்பட வைக்கும் மிரட்டல் வார்த்தைகள் அல்ல. ஆனால், பகல் நேர அச்சமும், இரவு நேர பயங்கரமும்தான் லட்சக்கணக்கான மக்கள் மனங்களில் ஏற்றப்பட்டுள்ள செய்தியாகும். இதைப் போக்குவது உங்கள் கைகளில் தான் உள்ளது,
          திரு.மோடி அவர்களே. இதற்குரிய அதிகாரம் உங்கள் கையில் உள்ளது. அது மட்டுமல்ல, அதற்கான உரிமையும், செய்ய வேண்டிய அவசியமும் கூட இருக்கிறது. சிறுபுத்தியுள்ள ஆலோசனைகளைப் புறக்கணிப்பதன் மூலம் இந்த அச்சத்தை உங்களால் போக்க முடியும் என்று நான் நம்புகிறேன். இந்தியாவில் உள்ள அனைத்து மத சிறுபான்மையினரும், வெறும் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, மேற்கு பஞ்சாபிலிருந்து வெளி யேற்றப்பட்ட இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் மற்றும் காஷ்மீரி பண்டிதர்கள் ஆகியோரும் தங்கள் மனங்களில் வடுக்களைச் சுமக் கிறார்கள். உண்மையான அல்லது பொய்யான தூண்டுதல் காரணமாக திடீரென்று கலவரம் ஏற்படும் என்றும், அதனால் பலமடங்கு பிரதிபலன் கிடைக்கும் என்கிற அச்சமும் உள்ளது. இந்தக் கலவரத்தில் குறிப்பாக பெண்கள் தாக்கப்படுகிறார்கள். தங்கள் வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும் அவமானத்தையும், சுரண்டலையும் தாங்கிக் கொண்டு தலித்துகள் மற்றும் பழங்குடியினர், அதிலும் குறிப்பாக பெண்கள், இருக்கிறார்கள். சிறுமைப்படுத்துதல், பாரபட்சம் மற்றும் தாக்குதல்கள் ஆகியவற்றால் தொடர்ந்து அமைதியின்மையை நோக்கி இழுக்கப்பட்டு, குடிமகன், மனிதன் ஆகிய தகுதிகளையே இல்லாமல் போகச் செய்கிறது.
           அவ்வாறு இழுக்கப்படுவதை உரக்கவும், வெளிப்படையாகவும் கவனியுங்கள், திரு. மோடி அவர்களே. இதன்மூலம் அவர்களின் நம்பிக்கையைப் பெறுங்கள். அவர்களுக்கு உறுதியளித்து, அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் முதல் குரல் உங்களுடையதுதான் என்ற நம்பிக்கையை உங்களால் அளிக்க முடியும்.பன்மைத்துவம் கொண்ட குடியரசிடம் ஒற்றைத்தன்மை என்கிற மன்னரின் வார்த்தைகளைக் கொட்டும் அதிகப் பிரசங்கித்தனம் யாருக்கும் இருக்கக்கூடாது. இந்தியா என்பது பலவகைப்பட்ட வளங்களைக் கொண்ட வனமாகும். பலவகைகளைக் கொண்ட மண்ணை வளர்த்தெடுக்கவே அது விரும்புகிறது. அதன் முன்னால், ஒரே இனம், ஒரே கலாச் சாரம் மற்றும் ஒரே கடவுள் என்பதை முன்னிறுத்தக் கூடாது. அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு, பொது சிவில் சட்டம் என்கிற பழைய மற்றும் சம்பிரதாயமான கோரிக்கை, அயோத்தியில் ராமர் கோவில் ஆகியவை பற்றி உங்களது நிலைப்பாடு மற்றும் வடக்கு, வட மேற்கில் உள்ள “இந்து அகதிகள்” மற்றும் கிழக்கு, வடகிழக்கில் உள்ள “இஸ்லாமிய அகதிகள்” என்று ஊடகங்களில் வெளியாகியுள்ள உங்கள் அறிக்கைகள், நம்பிக்கையை ஏற்படுத்தாமல் அச்சத்தையே உண்டாக்கியுள்ளன.
                 அச்சத்தின் பிடியில் மக்கள் என்பது இந்தியக் குடியரசின் பண்பாக இருக்க முடியாது. மேலும், இந்தியப் பிரதமர் என்ற முறையில். நீங்கள்தான் இந்தக் குடியரசுக்கு பொறுப்பானவராக இருக்கிறீர்கள்.இந்தியாவின் சிறுபான்மையினர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல. ஒன்றோடு ஒன்று கலந்து இருப்பவர்கள். கயிற்றை யார் வேண்டுமானாலும் எரித்துக் கரியாக்கலாம். ஆனால், அதன் பிணைப்பை அறுத்துவிட முடியாது. பாரத மாதா வாழ்க என்ற முழக்கம், நிச்சயமாக, நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் கட்டாயத் தேவையான ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தை மிஞ்சிவிட முடியாது. இது உங்களுக்கு வரலாற்றுச்சிறப்புமிக்க வெற்றி, திரு.மோடி அவர்களே. மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன். ஒரு வெற்றிகரமான காலகட்டம் இதைத் தொடரட்டும். இந்த உலகை ஆச்சரியப்படுத்தும் நிகழ்வுகள் நடந்தேறட்டும். உங்கள் ஆதரவாளர்கள் அதை எதிர்பார்க்காமல் இருக்கலாம். ஆனால், ஏராளமானோர் நீங்கள் அதை நடத்திட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
               நீங்கள் பெரும் புத்திசாலி என்பதோடு, முந்தைய தலைமுறையின் தேவையற்ற மற்றும் விருப்பமற்ற ஆலோசனையை கண்டுகொள்ளமாட்டீர்கள். உங்கள் ஆதரவுத்தளத்தில் கைதட்டலுக்கு கைம்மாறு செய்யுங்கள். ஆனால், அதற்கு இணையாக, உங்களை ஆதரிக்காதவர்களின் நம்பிக்கையையும் மீட்டெடுக்கும் வகையில் செயல்படுங்கள். சிறுபான்மையினர் ஆணையத்தை மீண்டும் அமைக்கும்போது, அதில் இடம் பெறவேண்டியவர்களின் பெயர்களை எதிர்க்கட்சிகளிடமிருந்தும் கேட்டு வாங்கி, அதில் மாற்றம் செய்யாமல் அவர்களையும் இணையுங்கள்.
              இதே முறையை எஸ்.சி/எஸ்.டி ஆணையம், மொழிரீதியான சிறுபான்மையினர் ஆணையம் போன்றவற்றை அமைக்கும் போதும் கடைப்பிடியுங்கள். அடுத்த தலைமை தகவல் ஆணையர், தலைமைத் தணிக்கை அதிகாரி, மத்திய ஊழல் தடுப்பு ஆணையர் ஆகியோரைத் தேர்வு செய்யும்போதும், தேர்வுக்குழுவில் உள்ள அரசு சாரா உறுப்பினர்களின் பரிந்துரைகளை, அவை பாரபட்சமாக இல்லாத பட்சத்தில், ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் பலசாலி. இத்தகைய நடவடிக்கைகளை தைரியமாக எடுக்கலாம்.

தெற்கில் விழும் பள்ளத்தை கவனியுங்கள்            

              திரு. மோடி அவர்களே, உங்கள் கணக்கில் தெற்கில் பெரும் பற்றாக்குறை உள்ளது. இந்தி பேசும் மாநிலம் சார்ந்த வெற்றி என்கிற பிம்பம், வடக்கு-தெற்கு என்ற பிளவை ஏற்படுத்திவிடக்கூடாது. தெற்கிலிருந்து ஒருவரை துணைப்பிரதமராக நியமியுங்கள். அவர் நிச்சயமாக அரசியல்வாதியாக இல்லாமல், சமூக அறிவியல் வல்லுநர், சுற்றுச்சூழல் நிபுணர், பொருளாதார அறிஞர் அல்லது புள்ளியியல் ஆய்வாளர் ஆகிய துறைகளில் ஒன்றைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். தனது அமைச்சரவையில் சண்முகம் செட்டியார், ஜான் மத்தாய், சி.டி.தேஷ்முக் மற்றும் கே.எல்.ராவ் ஆகியோரை நேரு வைத்திருந்தார். அவர்கள் எல்லாம்  காங்கிரஸ்காரர்கள் அல்ல. ஏன். அரசியல்வாதிகள்கூட கிடையாது.
             எஸ்.சந்திரசேகர் மற்றும் வி.கே.ஆர்.வி. ராவ் ஆகியோரை இந்திரா காந்தி அமைச்சர்களாக ஆக்கினார். மாநிலங்களவை உறுப்பினர்களாக ஆக்கப்பட்ட பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் ஷியாம் பெனகல் ஆகிய இருவரும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் அமைச்சர்களாக ஏன் ஆக்கப்படவில்லை என்பதை, எனக்குள்ள அனுபவத்தில், என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு மரபு உள்ளது. அதை ஆரோக்கியமானது என்று கூட ஒருவர் சொல்லலாம். நியமன உறுப்பினர்களை அமைச்சர்களாக ஆக்குவதில்லை என்பதுதான் அது. ஆனால், அவசரத் தேவைகள் என்பது அவசரத் தேவைகள்தான். நமக்கு இதுவரை இருந்த மிகச்சிறந்த கல்வி அமைச்சர்களில் நியமன உறுப்பினராக இருந்து அமைச்சரான நூருல் ஹசனும் ஒருவராவார்.
                ஏகாதிபத்திய மற்றும் கொள்கை ரீதியான தலைவர்களை உங்களுக்குப் பிடிக்கிறது. உங்களது போராட்டத்தில் நீங்கள் கருதுவது போலவே, மகா ராணா பிரதாப் சிங்காகவே இருங்கள். ஆனால் ஆற்றுப்படுத்துதலில் அக்பராக இருங்கள். இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், உங்கள் இதயத்தில் சாவர்க்கராக இருங்கள். ஆனால், மனதால் அம்பேத்கராக இருங்கள். தேவை என்றால், மரபணுவில் ஆர்.எஸ்.எஸ்.சால் பயிற்றுவிக்கப்பட்ட இந்துத்துவாவை நம்புபவராக இருங்கள். ஆனால் இந்துஸ்தானத்தின் வாசிர்-இ-ஆசமாக(உருது மொழியில் பிரதமர்) இருங்கள். உங்களுக்கு வாக்களிக்காத 69 சதவிகிதத்தினர், நீங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
         நமது தேசத்தின் உயர் பொறுப்பில் நீங்கள் அமர்கையில் உங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாழ்த்துக்களோடும்,

                                                                                                        உங்கள் சக குடிமகன்
                                                                                                    கோபாலகிருஷ்ண காந்தி
---------------------------------------------------------------------------------------------------------------
நன்றி - தி இந்து(மே 19, 2014) 
தமிழில் - கணேஷ்
(கோபாலகிருஷ்ண காந்தி - காந்திஜியின் பேரன், மேற்குவங்கஆளுநராக பணியாற்றியவர்)
நன்றி : 



ஞாயிறு, 18 மே, 2014

காங்கிரஸ் கட்சி மீதான வெறுப்பு : பாஜக அறுவடை

 கட்டுரையாளர் : தோழர். சீத்தாராம் யெச்சூரி, எம்.பி.,                             
                                 அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்,                    
                                 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி                                          
              16வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து இறுதியாகத் தேர்தல் ஆணையம் தன் அறிக்கையை தாக்கல் செய்த பின்னர், அனைத்துப் பெரிய அரசியல் கட்சிகளும் தங்கள் ஆய்வினையும் மதிப்பீடுகளையும் முடிவு செய்யும். தேர்தல் முடிவுகள் குறித்து பூர்வாங்கமான ஆய்வினை மேற்கொள்வதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு மே 18 அன்று கூடுகிறது. அதனைத் தொடர்ந்து மத்தியக்குழு ஜூன் 7, 8 தேதிகளில் கூடுகிறது. அப்போது சம்பந்தப்பட்ட மாநிலக் குழுக்களும் தங்கள் மாநிலம் குறித்த பூர்வாங்க ஆய்வுகளை அளித்திடும். 1984ஆம் ஆண்டு இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அனுதாப அலை வீசியதை அடுத்து அன்றைக்கு 542 மக்களவை இடங்களில் 405 இடங்களைப் பெற்று ராஜீவ் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. 
             அதன்பின்னர் முப்பது ஆண்டுகளுக்குப்பின்னர் முதன்முறையாக பாஜக மக்களவையில் தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியாக முன்னேறியிருக்கிறது. பாஜக தன்னுடன் பயணம் செய்த தேஜ கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளைத் தூக்கிஎறிந்துவிட்டு தனியாகவே ஆட்சி அமைக்கும் நிலையினைப் பெற்றிருக் கிறது.தேர்தல் பிரச்சாரத்தின்போதே, நாளும் தங்கள் மீது ஏவப்படும் தாக்குதல் களிலிருந்து நிவாரணம் அளிக்கக்கூடிய விதத்தில் ஓர் அரசாங்கம் முன்வராதா என்று மக்கள் ஏங்கத் துவங்கியிருந்ததைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது.
               காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசாங்கம், அதிலும் குறிப்பாக கடைசி ஈராண்டு காலத்தில், மக்கள் மீது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு விலைவாசி உயர் வாலும், பொருளாதார மந்தத்தாலும் அதனைத் தொடர்ந்து உருவான வேலையில்லாத் திண்டாட்டத்தாலும் பொருளாதாரச் சுமைகளை ஏற்றியது மட்டுமல்லாமல், நாட்டின் செல்வாதாரங் களையும் மிகப்பெரிய ஊழல்கள் மூலமாக கொள்ளையடித்தனர். இவற்றின் விளைவாக மக்கள் மத்தியில் ஏற்பட்ட விரக்தியை பாஜக தேர்தல் வெற்றிக்கு மிகவும் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொண்டது. இந்தப் பின்னணியில், பாஜக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பண பலத்துடனும், ஊடகங்களின் மூலமாகவும் தனக்குச் சாதகமாக மிகவும் வலுவான பிரச்சாரத்தை மேற்கொண்டது. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை மிகவும் வெற்றிகரமான முறையில் சித்தரித்ததுடன், இந்துத்துவா நிகழ்ச்சி நிரலையும் `வளர்ச்சி’ மற்றும் `நல்லதோர் அரசாங்கம்’ ஆகியவற்றிற்கான உறுதி மொழிகளையும் மிகவும் சாமர்த்தியமாக இணைத்து தேர்தல் பிரச்சாரத்தை பாஜக மேற்கொண்டது.
            முதலாவதாக, 2002இல் குஜராத்தில் முஸ்லிம்கள் மீது இனப்படுகொலைகள் நடைபெற்றதைத் தொடர்ந்தே, நரேந்திர மோடி, இந்துத்துவா மதவெறியை முன் னெடுத்துச் செல்வதற்கு, சரியானதொரு நபராக ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரத்தால் முன்னிறுத்தப்பட்டு வந்தார். எனவேதான், ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரம் எதிர்காலத்தின் பிரதமராக அவரை முன்னிறுத்துவதே போதுமானது என்றும், வேறு எவ்விதமான பிரச்சாரமும் தேவையில்லை என்றும் கருதின. பாஜக பிரச்சாரத்தின் வலுவான அடிநாதமாக இது தொடர்ந்தது.இரண்டாவதாக, பெரும்பான்மை யைப் பெறுவதற்கு இந்துத்துவாவை முன்னிறுத்தினால் மட்டும் போதாது என்கிற கடந்த கால அனுபவம் அவர் களை எச்சரித்தது. எனவேதான் இம்முறை, நரேந்திர மோடி பிரதமரானால் மட்டுமே, இந்தியா முழுமையும் குஜராத் போல வளர்ச்சியடையும் என்று பாஜக சரடு விட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளது.
குஜராத், பாலும் தேனும் ஆறாக ஓடும் மாநிலமாக சித்தரிக்கப்பட்டது. `வாஷிங்டன் போஸ்ட்’ செய்தியாளர்ராம லக்ஷ்மி, “மோடி புராணத்தை உருவாக்குதல்’’ என்னும் தன்னுடைய செய்திக்கட்டுரையில் சுட்டிக்காட்டி யிருப்பதைப்போல, பாஜகவின் பிரச்சார மேலாளர்கள், அயோத்தியை யும், ராமரையும் ஓரங்கட்டி வைத்துவிட்டு, மிகவும் புத்தி சாலித்தனத்துடன் குஜராத்தையும் அதன் தற்போதைய கடவுளான மோடியையும் சுற்றி இந்தி யர்களைத் திரட்டியிருக்கிறார்கள். நாட்டு மக்களின் மனதில் குஜராத், “பாலும் தேனும் ஆறாக ஓடும் மாநிலமாகவும், இந்த பூமியிலேயே ஒரு சொர்க்கமாகவும், அங்கே உள்ள அனைவரும் வேலை பார்ப்பது போலவும், அனைவருக்கும் எப்போதும் மின்சாரம் உண்டு என்பது போலவும், விவசாயிகள் பேரானந்தத்துடன் வாழ்வது போலவும், அங்கேயுள்ள நெடுஞ்சாலைகள் உலகிலேயே சிறந்தவை போலவும், ஊழல் நோய் அண்டாத மாநிலம் போலவும்’’ கருதிக் கொண்டிருக்கிறார்கள்.
          மறுபக்கத்தில், காங்கிரஸ் தரப்பில் நடைபெற்ற பிரச்சாரம் முற்றிலுமாக வலுவிழந்த நிலையில் அமைந்திருந்தது. இவ்வாறு மோடி குறித்து எழுப்பப்பட்ட அண்டப்புளுகுகளை, ஆகாசப் புளுகுகளை உடைத்தெறியக்கூடிய விதத்தில்வலுவான முறையில் அமையாதிருந்தது.  குஜராத் வளர்ச்சி மாடல் தொடர்பான உண்மையான புள்ளிவிவரங்களை அது அடுக்க முயன்ற போதிலும், காங்கிரசின் கடந்த கால நடவடிக்கைகளால் வெறுப் படைந்திருந்த மக்கள் அக்கட்சி கூறுவதை நம்பத் தயாராக இல்லை. ஐமுகூ அரசாங்கம் மக்கள் மீது வறுமையை யும் பொருளாதாரச் சுமைகளையும் திணிக்கும் கொள்கைகளை அமல்படுத்தத் தொடங்கியபோதே, காங்கிரசின் தோல்வி தொடங்கிவிட்டது. மேலும், காங்கிரஸ் தலைமை, தன் ஆட்சிக்காலத்தில் தான் மக்களுக்கு அளித்த அரசியலமைப்புச் சட்ட உரிமைகளை - கல்விபெறும் உரிமை, தகவல் பெறும் உரிமை, பழங்குடியினருக்கு வன நிலங்கள் மற்றும் வன உற்பத்தியில் அளித்த உரிமை, கிராமப்புற வேலைவாய்ப்பு உரிமை, முதலானவற்றைக் கூட - (இவற்றில் எவ்வளவோ குறைபாடுகள் இருந்தபோதிலும்கூட) மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லவும், இவ்வாறு எடுத்துச் சொல்வதன் மூலம் தன் ஊழியர்களுக்கு உற்சாகமூட்டவும்கூடத் தவறிவிட்டது.
          மேலே குறிப்பிட்டிருக்கும் அனைத்து நடவடிக்கைகளுமே, இடதுசாரிகளின் செல்வாக்கின்கீழ் ஐமுகூ-1 அரசாங்கம் இருந்தபோது தொடங்கப்பட்டவைகளாகும். இவை ஐமுகூ-2 அரசாங்கத்தின் காலத்தில் அமல்படுத்தப்பட்டது. இவற்றைஅமல்படுத்தியதன் மூலம் இடதுசாரி களுக்கு ஒரு கவுரவத்தை கொடுக்க காங்கிரஸ் விரும்பாதிருந்த போதிலும், தனக்காகவாவது இவற்றை அக் கட்சி பயன்படுத்திக் கொண்டிருக்க முடியும்.இவ்வாறு அக்கட்சி கூற முன்வராத திலிருந்தே இவற்றை அது இடதுசாரிகளின் நிர்ப்பந்தத்தின் காரணமாகத்தான் மேற்கொண்டது என்பது மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந் நடவடிக்கைகளின் மீது அதற்கிருந்த நேர்மையின்மைதான் இதற்குக் காரணமாகும். இத்துடன் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை அது பின்பற்றியதிலிருந்த வெறியுடன் மெகா ஊழல்களும் இணைந்ததும்தான் பாஜக பிரச்சாரத்தை எதிர்ப்பதற்குத் திராணியற்ற நிலைக்கு அதனைத் தள்ளிவிட்டது. ஆயினும், இத்தேர்தல்கள், இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து ஆழமான பரிசீலனை மேற்கொள்வதற்காக சில முக்கிய பிரச்சனைகளையும் முன்னுக்குக் கொண்டு வந்துள்ளன.
          தேர்தலில் பண பலம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இருந்துள்ளது. பாஜக பிரச்சாரத்தில் பணம் ஆறாய் ஓட அனுமதிக்கப்பட்டது. மறுபக்கத்தில், இவ்வாறு பணம், வாக்காளர் களுக்குக் விலைக்கு வாங்கக்கூடிய விதத்தில் பல்வேறு இழிவழிகளிலும் பயன்படுத்தப்பட்டது. வாக்காளர்களுக்குப் பணம் தரும் பழக்கத்தைப் பல கட்சிகளும் நடைமுறைப்படுத்தியுள்ளன. தேர்தல் ஆணையம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பணத்தை பறிமுதல் செய்துள்ளது. பணம் மட்டுமல்ல, மது மற்றும் பல்வேறுவிதமான இலவசப் பொருள்களையும் பறிமுதல் செய்துள்ளது.
             கூடுதலாக, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் தங்கள் கட்சிக்கு வாக்களிக்காவிட்டால் உயிருடன் இருக்க முடியாது என்பது போன்ற பயங்கரவாத மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்களும் நடைபெற்றுள்ளன. அதனைத் தொடர்ந்து மிக விரிவான அளவில் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி மோசடியாக வாக்களித்தல் மற்றும் இடதுசாரிகள் மீது வன்முறையைக் கட்ட விழ்த்து விட்டிருப்பதன் மூலம், இடது சாரிக் கட்சிகளின் மக்கள் செல்வாக்கை உண்மையாகப் பிரதிபலிக்க முடியாத அளவிற்கு தேர்தல் முடிவுகள் சிதைக்கப்பட்டிருக்கின்றன.
              தேர்தல் ஆணையத்திற்கு எண்ணற்ற முறையீடுகள் அளிக்கப்பட்டபோதிலும், இவற்றைச் சரிசெய்திட அதனால் முடியவில்லை என்பது துரதிர்ஷ்டமாகும். கடும் விலைவாசி உயர்வாலும், மெகா ஊழல்களாலும் மக்கள் மிகப்பெரிய அளவிற்கு பாதிக்கப்பட்டிருந்தபோதிலும், இடதுசாரிக் கட்சிகளால் அவற்றைத் தங்களுக்குச் சாதகமாக மாற்ற முடிய வில்லை. இடதுசாரிகள் தங்கள் நிலையை திரிபுராவில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்துடன், நிலை நிறுத்திக்கொண்டுள்ள அதே சமயத்தில், கேரளாவிலும் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றுள்ள அதே சமயத்தில், இத்தேர்தல் முடிவுகள் பலவீனங்களை அடையாளம் கண்டு, அவற்றை சரிப் படுத்துவதற்கான தேவையையும் உணர்ந்துள்ளன.முறையான தேர்தல் சீர்திருத்தங்கள் மூலமாக இத்தகு சிதைவுகளை ஆழமான முறையில் சரிசெய்ய வேண்டியது நாட்டின்முன் எழுந்துள்ள அவசர மற்றும் அவசியத் தேவையாகும்.
           எடுத்துக்காட்டாக, அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதி உதவி அளித்தல், அரசியல் கட்சிகள் செலவினங்களுக்குக் கட்டுப்பாடுகள் கொண்டுவருதல் (தற்சமயம் வேட்பாளர்களுக்கு மட்டுமே அத்தகைய கட்டுப்பாடுகள் உள்ளன) போன்ற பிரச்சனைகள் ஆழமாகப் பரிசீலிக்கப்பட வேண்டியவைகளாகும். நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளிலேயே கார்ப்பரேட் நிறுவனங்கள் நன்கொடை கொடுப்பதைத் தடை செய்ய வேண்டும் என்று ஒளிவுமறைவின்றி அறிவித்திருக்கிற ஒரே கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான்.
             மாறாக,கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்திய ஜனநாயக நடைமுறைக்கு நிதி அளித்திடலாம் என்றும், ஆயினும் அத்தகைய நிதிதேர்தல் ஆணையத்தால் நிர்வகிக்கப்படும் ஓர் அமைப்பிற்கோ அல்லது அரசால் அமைக்கப்படும் ஒரு நிறுவனத்துக்கோ தான் செல்ல வேண்டும் என்றும், அந்த அமைப்பு தேர்தலை நடத்திட செலவு செய்திட வேண்டும் என்றும் கூறுகிறோம். மேற்கத்திய நாடுகள் பலவற்றின் நடைமுறை இதுதான். முக்கியமாக, நம்முடைய தேர்தல் நடைமுறையில் ஒரு பகுதி விகிதாச்சார பிரதிநிதித்துவம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே வாதிட்டுக் கொண்டிருக்கிறது.தற்சமயம் பாஜக பெற்றிருக்கும் மிகப் பெரிய வெற்றிக்குப்பின்பும் கூட, அது பெற்றுள்ள வாக்கு சதவீதம் என்பது 50 சதவீதத்திற்கும் மிகவும் குறைவுதான். இதன் பொருள், நாட்டு மக்களில் பாஜக விற்கு எதிராக வாக்களித்தவர்கள் அதிகம்என்பதேயாகும். போட்டியிடும் வேட் பாளர்களில் அதிக வாக்குகளைப் பெற் றவர் வென்றவராகக் கருதப்படுவார் என்கிற தற்போது நம்முடைய தேர்தல் நடை முறையில் உள்ள முரண்பாடு அல்லது குறைபாடு இது.
       பக்குவப்பட்ட பல ஜனநாயக நாடுகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றவர்கள் மட்டுமே ஆட்சிக்கு வரமுடியும். ஒருபகுதி விகிதாச்சார பிரதிநிதித்துவ அமைப்பு முறை கொண்டுவரப்பட்டால் தற்போது மிகவும் பூதாகரமான முறையில் அதிகரித்து, மக்களின் ஜனநாயகக் கருத்தை சிதைக்கக்கூடிய விதத்தில் அமைந்திருக்கும் பணபலம் மற்றும் புஜபலத்தின் செல்வாக்கைக் குறைத்திட கணிசமான அளவிற்கு உதவிடும். இரு மக்களவைத் தொகுதிகளை ஒன்றாக இணைத்து, ஒவ்வொரு வாக்காளருக்கும் இரு வாக்குகள் கொடுத்து, ஒரு வாக்கை குறிப்பிட்ட ஒரு வேட்பாளருக்கும், மற்றொரு வாக்கை அதன் கொள்கை மற்றும் திட்டத்தின் அடிப்படையில் ஓர் அரசியல் கட்சிக்கும் அளித்திடலாம். அதேபோன்று அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்திற்கு ஒரு முன்னுரிமைப் பட்டியலை முன்னதாகவே அளித்திடும்.
           தேசிய அளவில் ஒவ்வொரு கட்சிக்கும் கிடைக்கும் சதவீதத்தின் அடிப்படையில், ஒவ்வொரு கட்சிக்கும் அது முன்னதாகவே அளித்துள்ள முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையில் இடங்களை நிரப்பிடும். இத்தகைய பரிந்துரைகளையும், சீர்திருத்தங்களையும் ஆழமாகப் பரிசீலனை செய்வதற்கான தருணம் இப்போது வந்திருக்கிறது. மேலும், இப்போது நடைபெற்ற தேர்தல்கள் தற்போதுள்ள சட்டங்களில் உள்ள பல ஓட்டைகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன. எடுத்துக்காட்டாக, பல தொகுதிகளில் தேர்தல் வேலைகள் தொடங்கிய பின்னர் நரேந்திர மோடி தன் வேட்புமனுவைத் தாக்கல் செய்ததை நாடு பார்த்தது.
           பல தொகுதிகளில் தேர்தலின் முதல் கட்டம் நடைபெறத் துவங்கிய பின்னே, பாஜக தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. வாரணாசியில் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமயத்தில், நரேந்திர மோடி குஜராத்திலிருந்து வீடியோ பேச்சு ஒன்றை வெளியிடுகிறார். அது தேசிய அளவில் ஒளிபரப்பப்பட்டது. இவ்வாறு இப்போதுள்ள சட்டங்களில் ஏராளமான ஓட்டைகள் காணப்படுகின்றன. பாஜக வெற்றி தொடர்பாக அக்கட்சி யால் அவிழ்த்து விடப்பட்ட சரடுகள் அனைத்தும் விரைவில் மாயைதான்என்பது மக்கள் மத்தியில் வெட்ட வெளிச்சமாகிவிடும். எதிர்காலத்தில் ஏராள மான சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். பாஜக விற்கு இத்தேர்தல் பிரச்சாரத்திற்காக நிதி உதவி செய்தவர்கள் அவ்வாறு செலவு செய்ததை எவ்வளவு விரைவாகத் திரும்ப எடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாகத் திரும்ப எடுப்பதில் மிகவும் குறியாக இருப்பார்கள்.
          இதன் பொருள் மக்கள் மீது மேலும் சுமைகள் ஏற்றப்படும் என்பதாகும். மக்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்பதை மறந்து விடுவார்கள். பாஜகவின் அடிநாதமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்துத்துவா பிரச்சாரம் நம் நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயகஅடித்தளங்களுக்கே வேட்டு வைக்கக்கூடியவைகளாகும். இவை இரண்டையும் எப்படி வலுவாக எதிர்கொள்ளப் போகிறோம் என்பதைப் பொறுத்தே நாட்டின், நாட்டு மக்களின் எதிர்காலம் அமையவிருக்கிறது.
         ஒரு பக்கத்தில், சமூக நல்லிணக்கம், நாட்டின் ஒற்றுமை, நாட்டு மக்களின் ஒற்றுமை மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயகஅடித்தளங்களை பாதுகாக்கக்கூடிய விதத்தில் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றிடவும், மறுபக்கத்தில் மக்கள்விரோத பொருளாதாரக் கொள்கைகளை எதிர்ப்பதுடன் நம் நாட்டிற்குத் தேவையான மாற்று மக்கள் ஆதரவு கொள்கைதிசைவழிக்கான போராட்டத்தை நடத்திடவும் இவ்வாறு இவ்விரண்டு திசைகளி லும் வெகுஜன போராட்டங்களை வலுப் படுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதிபூண்டிருக்கிறது.இத்தேர்தல்களுக்குப்பின்னர், இடது சாரிகள் வலுவாகவுள்ள இடங்களில் நம்மீது ஏவப்பட்டுள்ள கம்யூனிஸ்ட் எதிர்ப்புத் தாக்குதல்களை உறுதியுடன் எதிர்த்து முறியடித்திடும் அதேசமயத்தில், இவ்விரு திசைவழிகளிலும் மிகப் பிரம்மாண்டமான முறையில் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லவும். உறுதி மேற்கொள்வோம்

பீப்பிள்ஸ் டெமாக்ரசி-தமிழில் : ச.வீரமணி         

வெள்ளி, 17 ஜனவரி, 2014

தவறான பொருளாதாரக் கொள்கைகளை மாற்றும் ஆட்சி ஏற்பட வேண்டும் : முதல்வர் ஜெயலலிதா

.
                                                                                                                                                       
           மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களின் 97-ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தனது கட்சியினருக்கு தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கீழ்கண்டவாறு வேண்டுகோள் விடுத்தார். 

             ''மாநிலங்கள் வலுப்பெற்றிருந்தால் மட்டுமே இந்தியக் குடியரசு வலுப்பெற்றிருக்க முடியும். இதற்குத் தேவை மத்தியில் ஆட்சி மாற்றம். தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் நன்மைபயக்கக்கூடிய ஆட்சி மாற்றம் மத்தியில் ஏற்படவேண்டும். 20 ஆண்டுகளாக நிலவிவரும் தவறான பொருளாதாரக் கொள்கைகள் மாற்றப்பட்டு புது சிந்தனையுடன் மக்களின் தேவைகளைப் பரிவுடன் அணுகும் புதிய ஆட்சி ஏற்பட வேண்டும்.                                                                                      
                தவறான பொருளாதாரக் கொள்கைகள் மாற்றப்பட்டு புது சிந்தனையுடன் மக்களின் தேவைகளைப் பரிவுடன் அணுகும் புதிய ஆட்சி ஏற்பட வேண்டும்.                    
               தமிழகத்தை வளப்படுத்த, பாரதத்தை வலிமைப்படுத்த, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றிக்கனியைப் பெறும் வகையில் களப்பணி ஆற்றிடவேண்டும்.''                                  

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

காங்கிரஸ் கட்சியின் ''மூளைச் சலவை'' கூட்டம் - மக்களிடையே எடுபடாது...!


       கடுமையான விலைவாசி உயர்வால் வாடிக்கிடக்கும் இந்திய நாட்டின் சாதாரண குடிமக்கள் ஒரு பக்கம். மத்திய அரசின் தவறான கொள்கைகளின் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை எதிர்வரும் மக்களவைத் தேர்தல் நேரத்தில் எப்படி சந்திப்பது என்று புரியாமல் சோர்ந்துப் போயிருக்கும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் இன்னொரு பக்கம். தேர்தலுக்கோ இன்னும் ஓராண்டு மட்டுமே இருக்கும் சூழ்நிலையில், தேர்தலை எப்படி சந்திப்பது என்பதை விட மக்களை எப்படி சந்திப்பது என்ற பயம் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு வந்துவிட்டது என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். அதனால் தான் ஜெய்ப்பூரில் கடந்த நான்கு நாட்களாக ''சிந்தனை அமர்வு'' என்ற பெயரில் ஒரு ''மூளைச் சலவை''  கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது
              கூட்டத்தில் பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்களை எப்படி மீட்பது...? எதிர் வரும் மத்திய பட்ஜெட்டில் வரிச்சுமையிலிருந்து மக்களை எவ்வாறு காப்பாற்றுவது...? நிலம், வேலைவாய்ப்பு, உணவு, கல்வி, சுகாதாரம், மருத்துவம் போன்றவற்றிற்கு பட்ஜெட்டில் ஒதுக்கீடு எப்படி இருக்கவேண்டும்...? கட்டுக்கடங்கா விலைவாசியை கட்டுப்படுத்துவது எப்படி...? போன்றவைகளைப் பற்றியெல்லாம்  ''சிந்தனை'' செய்வதற்காக - விவாதிப்பதற்காக கூட்டப்பட்ட கூட்டம் என்று நீங்கள் நினைத்திருந்தால் உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். ஏனென்றால் இது அதற்கான கூட்டமே அல்ல. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கின்ற மக்களவைத் தேர்தலில் எப்படிப்பட்ட ''வேஷங்களையும், கோஷங்களையும்'' போட்டு மக்களை ஏமாற்றலாம் என்பது தான் இந்த கூட்டத்தின் முதல் ''செயல் திட்டமாக'' இருந்தது.
             தற்போது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடி, வேலையின்மை, வேலையிழப்பு, வருமானம் இழப்பு, உயராத வருமானம், உயர்ந்துகொண்டே போகும் விலைவாசி, சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாக போய்விட்ட கல்வி, சுகாதாரம், மருத்துவம், உணவு உரிமை பறிப்பு, சில்லறை வர்த்தகத்தில் அன்னியர் நுழைவு, எங்கும் ஊழல் - எதிலும் ஊழல் போன்றவைகள் தான் ''பொருளாதார மேதை'' மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சி மற்றும் திராவிட முன்னேற்ற கழக கூட்டணி ஆட்சியின் கடந்த நான்கு ஆண்டுகால சாதனையாகும். இதை யாரும் மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும் என்கிற அவசியமில்லை. இவைகளை மக்களே உணர்ந்திருக்கிறார்கள். எனவே இவற்றுக்கெல்லாம் காரணமான இந்திய பிரதமராக வேலையிலிருந்து கொண்டு அமெரிக்க எகாதிப்பத்தியத்திற்காக வேலை செய்துகொண்டிருக்கும் மன்மோகன் சிங் மீதும், காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்துகொண்டு நாட்டிற்கெதிரான வேலைகளை செய்துகொண்டிருக்கும் சோனியா காந்தி மீதும் மக்கள் மிகுந்த கோபத்தோடும் எரிச்சலோடும் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. மக்களை நாடியை புரிந்துகொண்ட தான் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு, தேர்தல் நேரத்தில் ஓட்டுக்காக மக்களை  சந்திக்கப் போகும் போது தங்களை மக்கள் விரட்டியடிப்பார்கள் என்ற பயத்தில், மக்களிடமிருந்து தப்பித்துக்கொள்வதற்கு ஒரு ''மாயஜால வித்தை'' உடனடியாக தேவைப்பட்டது. அந்த மாயஜால வித்தைக்கான ''மந்திரக்கோல்'' தான் இந்த ''யுவராஜ்''  ராகுல் காந்தி என்பதையும் மக்கள் எந்த வித மயக்கமுமில்லாமல், சலனமும் இல்லாமல் புரிந்துகொள்ளவேண்டும்.
          அதனால் தான் காங்கிரஸ் கட்சிக்கு மக்களுக்கு எரிச்சலூட்டும் மன்மோகன் சிங்கின் முகமூடியை கழட்டிவிட்டு, இப்போது யுவராஜ் ராகுலின் முகமூடியை போட்டிருக்கிறார்கள். இந்த முடிவு என்பது கட்சித் தொண்டர்களை எல்லாம் கலந்தாலோசித்து ஜனநாயக முறைப்படி எடுத்த முடிவல்ல. ஒரு சில மேல்மட்ட கட்சித்தலைவர்கள் மட்டுமே முன்மொழித்து திணிக்கப்பட்ட ''கருத்துத்திணிப்பு''  என்பதையும், அதற்கான ''மூளைச் சலவை'' கூட்டமே இந்த கூட்டம் என்பதையும் யாரும் மறந்துவிடக்கூடாது.
           இது முகமூடி மாற்றமே தவிர அரசியல் மாற்றமோ - கொள்கை மாற்றமோ அல்ல என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். இது புதிய மொந்தையில் பழைய கள் தான்.   இந்த பழையக் கள்ளுக்கு மயங்கி காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகளுக்கு வாக்களித்து ஆட்சியில் அமரச் செய்தால், மிச்ச மீதி உரிமைகளும் பறிக்கப்படும். நாம் இனிமேலும் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலைவரும். நம் நாடும், நாட்டின் செல்வங்களும் நம் கையைவிட்டு போய்விடும் என்பதை மறந்துவிடக்கூடாது.
           நாமிருக்கும் நாடு நமதென்பதை அறிவோம்... நமக்கே உரிமையாம் என்பதறிவோம்... நமக்கான ஆட்சியை பற்றி சிந்திப்போம்... நமக்காக போராடுபவர்களை அடையாளம் காண்போம்... அவர்களுக்கே வாக்களிப்போம்... தேர்ந்தெடுப்போம்...