தேர்தல் பாடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேர்தல் பாடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 மே, 2011

புதுச்சேரி : காசுக்காக மனசாட்சியை விற்ற அரசு ஊழியர்களின் கேவலம்

              அண்மையில் நடைபெற்ற புதுச்சேரி மாநில சட்டபேரவைத் தேர்தலில் தமிழகத்தைப் போலவே மக்கள் என். ஆர். காங்கிரஸ் - அதிமுக  கூட்டணி மூன்றில் இரண்டு மடங்கு இடங்களில் வெற்றி பெறச் செய்து  ஆட்சிக்கு தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். கடந்த இரண்டரை ஆண்டு காலமாக  வைத்திலிங்கம் தலைமையிலான செயல்படாத காங்கிரஸ் ஆட்சியை புதுவை மக்கள்  தூக்கி எறிந்திருக்கிறார்கள். 
                 கடந்தத் தேர்தல்களைப் போலவே இந்தத் தேர்தலிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மட்டும் கூட்டணியில் சேர்ப்பதில் தயக்கம் காட்டினார்கள். தான் கேட்ட இடமும் கிடைத்துவிட்ட திருப்தியில் சி பி ஐ கட்சிககூட மார்க்சிஸ்ட் கட்சியை தங்கள் கூட்டணியில் சேர்த்துக்கொள்ள அக்கறை காட்டவில்லை. அதன் காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் போல் தனித்தே நிற்பது என்று முடிவெடுத்து, புதுவையில் லாசுப்பேட்டை  தொகுதியிலும், கேரளப் பகுதியில்  மாஹி தொகுதியிலும் தனது வேட்பாளர்களை நிறுத்தி போட்டியில் இறங்கியது.
                   புதுவை லாசுப்பேட்டையில்  புதுச்சேரி அரசு ஊழியர்  சங்கங்களின் சம்மேளனத்தின் கௌரவத் தலைவராக பணியாற்றும் "தோழர். C.  H. B" என்று அரசு ஊழியர்கள் மத்தியில்  அன்போடு அழைக்கப்படும் தோழர்.சி.எச்.பாலமோகனன் அவர்களை  புதுவை பிரதேச மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி லாசுப்பேட்டைத் தொகுதி வேட்பாளராக நிறுத்தியது. லாசுபேட்டை தொகுதியை பொறுத்த வரையில் மார்க்சிஸ்ட் கட்சி என்பது மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமான கட்சி. ஏற்கனவே பல சட்டமன்றத் தேர்தல்களிலும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் போட்டி இட்டு தோற்றுப்போயிருக்கிறது என்றாலும் லாசுப்பேட்டை பகுதி பிரச்சனைகளுக்காக போராட்டங்களை தொடர்ந்து நடத்திவரும் கட்சி என்கிற வகையிலும் மக்களுக்கு நன்கு பிரசித்தமான கட்சி. அது மட்டுமல்ல கட்சியின் அமைப்புகளும், தொழிற்சங்கம் - மாதர் சங்கம் - வாலிபர் சங்கம் - மாணவர் சங்கம் போன்ற அமைப்புகளும் வலுவாக உள்ள தொகுதி என்கிறப் பார்வையோடு தான் சி பி எம் கட்சி அங்கே தனித்து போட்டியிடுவதென முடிவெடுத்தது. அதேப்போல் புதுவை அரசு ஊழியர்கள் கணிசமாக குடியிருக்கும் தொகுதியும் லாசுப்பேட்டை தான். இந்தத் தொகுதியின் வாக்காளர்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் அரசு ஊழியர்களும் அவர் தம் குடும்பத்தினரும்  ஆவார்கள். சுமார் ஐந்தாயிரம் வாக்காளர்கள் அரசு ஊழியர் பகுதியில் இருக்கிறார்கள். அதனால் தான் அரசு ஊழியர்கள் நலனுக்காக இன்றுவரை போராடிக்கொண்டிருக்கும்  தோழர் பாலமோகனன் அவர்களை கட்சியின் வேட்பாளராக நிறுத்தியது.
                   ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, அரசு ஊழியராய் பணியில் சேர்ந்து,   புதுச்சேரி அரசு ஊழியர்களுக்காக கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேல் சங்கம் அமைத்து ஊழியர்களின்  உரிமைகளுக்காக போராடி, பல தியாகங்களைச் செய்து, தனக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய பலன்களை எல்லாம்  உதறித்  தள்ளிவிட்டு இன்று வரையில் அவர்களுக்காகவே உழைத்துக் கொண்டிருப்பவர் தான் பாலமோகனன்.  இன்றைக்கு அரசு ஊழியர்கள் நல்ல வருமானத்தோடும், அரசுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ பயப்படாத தன்னிச்சையான - சுதந்திரமான வேலைக் கலாச்சாரத்தோடும், மூன்று வேளை நல்ல சாப்பாட்டோடும், பல்வேறு வசதிகளோடும்,  நிம்மதியோடும், மகிழ்ச்சியோடும் இன்னும் சொல்லப்போனால் புதுவையில் மற்ற மக்களை காட்டிலும் உயர்வான நிலையிலிருந்து வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு முழுமுதற் காரணமாகத் திகழ்பவர் தோழர் பாலமோகனன் அவர்களாகத்தான்  இருக்கமுடியும். அரசு ஊழியர்கள் அன்றாடம் சாப்பிடும் உணவில் குறைந்தது ஒரு பிடிச் சோறாவது பாலமோகனனின் போராட்டங்களினாலும் தியாகத்தினாலும் கிடைத்ததாகத் தான்  இருக்க முடியும்.  உண்மையிலேயே இதையெல்லாம் நினைத்துப் பார்க்கிறவர்களாக இருந்தால் அரசு ஊழியர்கள் பாலமோகனன் அவர்களுக்கு மிகுந்த நன்றிக்கடன் பட்டிருக்கவேண்டும். அதையெல்லாம் எதிர்பார்க்காமல் தான் பாலமோகனன் இன்றுவரை அவர்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக தங்களுக்காக உழைத்துக் கொண்டும்,  போராடிக்கொண்டும், பலத் தியாகங்களை செய்துகொண்டும் இருப்பவர் பாலமோகனன் என்பதை அவர்கள் அறியாதவர்கள் அல்ல. கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருப்பவர்கள். 
                சுமார் 24,000 வாக்காளர்களைக் கொண்ட லாசுப்பெட்டைத் தொகுதியில் மட்டும் 5000 மேற்பட்ட வாக்காளர்கள் அரசு ஊழியர்கள் மற்றும்  அவர் தம் குடும்பத்தை சார்ந்தவர்கள். இந்த வாக்குகளின் மீதெல்லாம் நம்பிக்கை வைத்து தான் பாலமோகனன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். 
                ஆனால் தேர்தல் முடிந்து, மே 13-ஆம் தேதியன்று வாக்குகளை எண்ணும் போது தான் தெரிகிறது  லாசுப்பேட்டையிலுள்ள அரசு ஊழியர்கள் எவ்வளவுப்பெரிய துராகிகள் என்று. தோழர் பாலமோகனன் எவ்வளவு ஓட்டுப் பெற்றிருக்கிறார் என்றால், வெறும் 647 ஓட்டுக்கள் பெற்று டெபாசிட்டையும் இழந்திருக்கிறார்  என்பது தான் அதிர்ச்சிகரமானது. வெட்கக்கேடானது. அரசு ஊழியர்கள் ஒருசிலரை தவிர வேறு யாரும் பாலமோகனன் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை என்பது தான் உண்மை. அப்படியென்றால் அரசு ஊழியர்கள் யாருக்கு ஓட்டுப் போட்டிருகிறார்கள் என்றால், ஓட்டுக்கு பணம் கொடுத்த அரசியல் வியாபாரிகளுக்கே  ஓட்டுப்போட்டிருக்கிறார்கள் என்பது உண்மையிலேயே வெட்கக்கேடானது. இதைவிட ஒரு நன்றிக்கெட்டத்தனம் வேறு இருக்க முடியாது.. புதுச்சேரி அரசு ஊழியர்கள் காசுக்காக மனசாட்சியையே விற்றிருக்கிறார்கள் என்பது தான் இந்த தேர்தல் முடிவு காட்டும் உண்மையாகும். 

புதுவை அரசு ஊழியர்கள் திருந்தவேண்டும் :

                     பொதுவாகவே புதுவையில் எந்தத் துறைகளை எடுத்துக் கொண்டாலும் பொதுமக்களுக்கு செய்யக்கூடிய சேவைகளுக்கு - பணிகளுக்கு அரசு ஊழியர்கள் இலஞ்சம் பெறுவது என்பது ஒரு வழக்கமாகவே போய்விட்டது.  பொதுமக்கள் அன்றாடம் செல்லக்கூடிய மின் அலுவலகம், பொதுப்பணி துறை அலுவலகம், காவல் துறை, சர்வே மற்றும் பதிவு அலுவலகம், தாலுக்கா  அலுவலகம், வீடுகட்ட அனுமதித் தரும் திட்ட ஆணையம், நகரமன்ற அலுவலகம், போக்குவரத்து அலுவலகம் இப்படியாக எந்த அலுவகத்திற்கு சென்றாலும் பாக்கெட்டுல பணத்தோடு தான் செல்லவேண்டும். நாய்க்கு பிஸ்கெட்டு துண்டு போடுகிற மாதிரி பணத்தை தூக்கி எறிந்தால் தான் வேலை செய்வார்கள்.  இந்த சமூகவிரோத செயல்களை மக்களும் தங்களுக்கு வேலை ஆனால் சரி என்று சகித்துக்கொண்டும், பொறுத்துக்கொண்டும் போகிறார்கள். பாதிக்கப்படும் மக்களெல்லாம் ஒரு நாள் வெகுண்டெழுந்தால் இவர்களெல்லாம் காணாமல் போய்விடுவார்கள் என்பதை அரசு ஊழியர்கள் புரிந்து கொண்டு திருந்தவேண்டும்.

மக்கள் விரோத ஆட்சியை தூக்கி எறிந்திருக்கிறார்கள் தமிழக மக்கள்

              கடுமையான விலைவாசி உயர்வு, மோசமான மின்வெட்டு, விவசாயிகள் - தொழிலாளர்கள் பாதிப்பு, 
வேலையின்மை அதிகரிப்பு, சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு, திரைப்படத்துறையில் கருணாநிதி குடும்பத்தின் ஆக்கிரமிப்பு, ஆட்சியில் கருணாநிதி குடும்பத்தின் தலையீடு, அதிக வருமானம் தரக்கூடிய இலாபம் கொழிக்கக்கூடிய அனைத்துத் துறைகளிலும் கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள்  ஆக்கிரமிப்பு, இடைத்தேர்தலில் பணத்தை இரைத்து வாக்குகள் சேகரிப்பு,  கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் முறைகேடான முறையில் சொத்து சேர்ப்பு, இளைய மகனுக்கு முதலமைச்சராக பட்டாபிஷேகம் செய்து பார்க்க துடிப்பு   - இப்படியாக கடந்த கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியின் அவலங்களை  நிறைய அடுக்கிக் கொண்டே போகலாம். அதுமட்டுமல்ல மத்தியிலும் ஆட்சியில் பங்கெடுத்துக்கொண்டு கருணாநிதியின் குடும்பமே     2 - ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள் செய்து பணம் சேர்த்தது.   இவைகள் தான் மக்கள் திமுக-வின் மீது மக்கள் இவ்வளவு கோபத்தைக்காட்டி தூக்கி எரிந்ததற்குக் காரணம் என்பதை யாரும் மறக்க முடியாது. அந்த கோபத்தின் வெளிப்பாடு தான் அ. இ. அ. தி. மு. க. கூட்டணி இருநூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற முடிந்திருக்கிறது.  அதுமட்டுமல்ல, தமிழக மக்கள் எம். ஜி. ஆரை ஆட்சி செய்ய தேர்ந்தெடுத்த போதும் கூட திமுக-வை சட்டமன்றத்தில் இரண்டாவது இடத்தில் - எதிர்க்கட்சி வரிசையில் வைத்திருந்தனர். ஆனால் இந்த தேர்தலிலோ திமுக-விற்கு மூன்றாவது இடத்தைக் கொடுத்தது மட்டுமல்லாது, அதிமுக கூட்டணியிலேயே இருக்கும் விஜயகாந்த் கட்சிக்கு இரண்டாவது இடத்தை கொடுத்தும் எதிர்க்கட்சி தலைவர் என்கிறப் பொறுப்பும் கொடுத்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது திமுக-வின் மீது கருணாநிதியின் மீது மக்களுக்குள்ள கோபத்தின் வலிமை எப்படிப்பட்டது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. 

தேர்தல் முடிவின் பாடங்கள் :                  

                பாடம்  - 1:  கடந்த ஐந்து ஆண்டுகளில் 2006-ஆம் சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்  அதிமுக-வின் தலைவர் செல்வி. ஜெயலலிதா அவர்கள் சட்டமன்ற எதிர்கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாரே தவிர  ஒரு பொறுப்பான எதிர்கட்சித்தலைவராக செயல்பட்டிருப்பாரா என்றால், இல்லை என்று தான் பதில் வரும். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஓரிரு முறை தான் சட்டமன்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் என்பதும் வெளிப்படையான உண்மை. வருகைப்  பதிவேட்டில் கையெழுத்து இடுவதோடு அவரது எதிர்க்கட்சித்தலைவர் பொறுப்பு முடிந்துவிடும். 
                 அதுமட்டுமல்ல,  கடந்த ஐந்து ஆண்டுகளில் மேலே சொன்ன மக்கள் பிரச்சனைகளுக்காக ஒரு போதும் வீதியில் நின்று போராடியவர் இல்லை. விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு மூன்று அல்லது நான்கு  பொதுக்கூட்டங்கள் தான் நடத்தி இருப்பார். பொறுப்பான எதிர்கட்சித்தலைவர் என்கிற முறையில் பொதுமக்களை சந்திப்பதற்கு மாறாக போயஸ் தோட்டத்து வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பார் அல்லது கொடநாடு சென்று ஓய்வு எடுப்பார் என்பது தான் கடந்த ஐந்து ஆண்டுகால எதிர்க்கட்சித்தலைவரின் முக்கியப் பணியாக இருந்தது என்பதையும் யாரும் மறுக்க முடியாது. தேர்தல்-தேர்தலுக்கு தான் ஒட்டுக்கேட்டு வீதியில் வளம் வரக்கூடிய எதிர்க்கட்சித்தலைவராகத் தான் இருந்தார் என்பதும் யாரும் மறுப்பதற்கில்லை.
                இப்படிப்பட்ட, ஒரு கட்சித் தலைவரைத்தான் தமிழக மக்கள் அதிகமான  வாக்குகளை கொடுத்து அதிகமான இடங்களில் வெற்றிபெறச் செய்து ஆட்சியில் அமர்த்தி இருக்கிறார்கள் என்றால் அதற்கு அதிமுக மீதோ அல்லது செல்வி.ஜெயலலிதா மீதோ தமிழக மக்கள் வைத்திருக்கும் நன்னம்பிக்கை என்று பொருள் அல்ல என்பதையும் அரசியல் நோக்கர்கள் மறுக்கமாட்டார்கள். ஏனென்றால் இன்று திமுக-வின் மீது கோபம் கொண்ட இதே  மக்கள் தான் கடந்த முறை 1996-லும் 2006-லும் செல்வி. ஜெயலலிதா மீதும் கோபம் கொண்டு தூக்கி எறிந்தார்கள் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.
               எனவே இந்தத் தேர்தல் முடிவின் மூலம் தமிழக மக்கள் கருணாநிதியின் மீதான கோபத்தை - அதிருப்தியை வாக்குகளாக காட்டி இருக்கிறார்கள். அது அதிமுக-விற்கு சாதகமாக மாறி இருக்கிறது என்பது தான் இந்த தேர்தல் நமக்கு - குறிப்பாக அதிமுக-விற்கு கற்றுகொடுக்கும் பாடம் என்பதை மறுப்பதற்கில்லை. 
               பாடம் - 2 : வழக்கமாக தமிழக மக்கள் திமுக-வை தோற்கடித்தால் ஆளும் கட்சி பொறுப்பிலிருந்து எதிர்கட்சித் தலைவர் பொறுப்பில் அமர்த்திவிடுவார்கள். அதிமுக-வை தோற்கடித்தாலும் அப்படித்தான் செய்வார்கள். எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே திமுக - அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையுமே ஆளும் கட்சி - எதிர்க்கட்சி என்றே மாற்றி மாற்றி அமரவைத்திருக்கிறார்கள் என்பதை தான் நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். ஆனால் இந்த முறை திமுக-வின் மீதிருந்த மக்களின் அதீத கோபத்தின் காரணமாக சட்டமன்றத்தில் வழக்கமாக கொடுத்த எதிர்கட்சித் தலைவர் பதவியைக்கூட கொடுக்காமல் மூன்றாவது இடத்திற்கு தூக்கி எறிந்திருக்கிறது என்பது மட்டுமல்ல கட்சி ஆரம்பித்து குறைந்த காலமே ஆன நடிகர் விஜயகாந்த் கட்சியான தேமுதிக கட்சிக்கு சட்டமன்றத்தில் இரண்டாவது பெரியக்கட்சி என்ற அங்கீகாரத்தையும் முதல் முறையாக எதிர்கட்சித்தலைவர் என்கிற பொறுப்பையும் தமிழக மக்கள் அளித்திருக்கிறார்கள்   என்பதையும் இங்கே கவனிக்க வேண்டி இருக்கிறது. 
                  அப்படியென்றால் தமிழக மக்களின் பார்வை விஜயகாந்த் மீது திரும்பி இருக்கிறது என்பதும், செல்வி. ஜெயலலிதாவிற்கு மாற்றாக இனி விஜயகாந்த் என்பது மக்களின் மனதில் எழுந்துள்ளது என்பதும், ஜெயலலிதாவின் மீது வெறுப்பு ஏற்பட்டால்  விஜயகாந்த்  நாளை முதல் இடத்திற்கு வருவார் என்பதையே மக்கள் இந்த தீர்ப்பின் மூலம் அறிவிக்கிறார்கள் என்பதும் இந்த தேர்தல் நமக்கு கொடுக்கும் அடுத்தப் பாடம்.
                  பாடம் - 3 : தன் சாதி மக்களின் ஓட்டுக்களை பெற்று பதவி சுகம் காணும் தலைவர்களை கொண்ட சாதிய அமைப்புகளான பாட்டாளி மக்கள் கட்சியையும் விடுதலைச் சிறுத்தை கட்சியையும் அவர்கள் சாதிய மக்களே புரிந்துகொண்டு ஒரு இடம் கூட வரமுடியாமல் தூக்கி எறிந்திருக்கிறார்கள் என்பது சாதிய அமைப்புகளுக்கு கிடைத்த பாடம்.
                  இந்த தேர்தலின் மூலம் தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் தங்களுக்கான பாடமாக எடுத்துக்கொண்டு - அதில் கற்றுக்கொண்டு  மக்களுக்கு சேவைச் செய்யும், மக்களின் பிரச்சனைகளுக்காக போராட்டங்கள் நடத்தும் உண்மையான தன்னலமற்ற கட்சிகளாக மாறவேண்டும் என்பதே நமது எதிர்ப்பார்ப்புகளாகும்.