சலுகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சலுகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 நவம்பர், 2015

மோடி அவர்களே... நீங்கள் விட்டுக்கொடுத்தால் நாங்கள் விட்டுக்கொடுப்போம்...!


LPG - சமையல் எரிவாயு மான்யம் வேண்டாமென்று              
பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா...?                   

                 கொஞ்ச நாட்களுக்கு முன்பெல்லாம், சமையல் எரிவாயு சிலிண்டர் தீர்ந்தவுடன், அடுத்ததற்கு பதிவு செய்ய போன் செய்தால், எடுத்தவுடன் -   “நான் நரேந்திர மோடி பேசுகிறேன்” என்ற  குரல் கேட்கும்  ( இந்தியில் தான்…!)


        ''நீங்கள் அரசு கொடுக்கும் சமையல் எரிவாயுக்கான மான்யத்தை விட்டுக்கொடுத்து ஏழைகள் வீட்டில் அடுப்பெரிய உதவுங்கள்'' என்றும்,  ''இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நீங்களும்  உதவலாமே''  என்றும்  நமக்கு அறிவுரை வேறு சொல்லுவார். எரிவாயு சிலிண்டரை பதிவு செய்ய நாம் அழைத்தால், மோடி நாம் அழைக்காமலேயே நமக்கு இந்த போதனைகளை சொல்லுவார். ஆனால் போன் செலவு நம்முடையது.


         சில மாதங்களுக்கு முன்பு  தான் பிரதமர் நரேந்திரமோடி இந்திய பெருமுதலாளிகள்   சம்மேளன கூட்டத்தில் பேசும்போது ''இதுவரை 2.8 லட்சம் பேர் தங்களுக்கான மான்யத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இதனால்
நூறு கோடி ரூபாய் அரசுக்கு மிச்சமாகி உள்ளது.  இது இந்த நாட்டின் ஏழைகளுக்கான  வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவும். அதேப்போல் இன்னும் அதிகம் பேர் ''மான்யத்தை தியாகம் செய்ய'' முன் வரவேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். 


                 இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த சம்சாரி ஒருவர் இது குறித்து விலாவாரியாக விவரித்து நரேந்திரமோடிக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். 

          “நான் ஏன் என் LPG மான்யத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்று தலைப்பிட்டு ஆங்கிலத்தில் அந்த கடிதம் அமைந்திருக்கிறது. அந்த கடிதத்தின் தமிழ் வாசகம் கீழே...!

எங்கள் மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களுக்கு, 

சமையல் எரிவாயு மான்யத்தை நான் விட்டுக்கொடுக்க
முன்வர வேண்டுமென்று, வேலை மெனக்கெட்டு,
என் போனிலேயே,என் செலவிலேயே – 
வேண்டி, விரும்பிகேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்….!
மகிழ்ச்சியோடு நானும் இதற்கு ஒப்புக்கொள்வேன்…
ஆனால் அதற்கு முன் கீழ்க்கண்ட விஷயங்கள்
நடைபெற்றால் தேவலை….!!!


– நாட்டின் சாதாரண குடிமகன் இதைச் செய்வதற்கு முன் –
இந்த நாட்டை வழிநடத்திச் செல்லும் அரசியல்வாதிகளும்,
அத்தனை அமைச்சர்களும், சட்டமன்ற, பாராளுமன்ற
உறுப்பினர்களும், முதலில் தங்கள் மான்யத்தை விட்டுக்
கொடுப்பதாக அறிவிக்கச் செய்யமுடியுமா…?


– உங்களில் முக்கால்வாசிப் பேர்கள் தேர்தலில்
போட்டியிடும் நேரத்தில், உங்கள் சொத்து விவரத்தை
அறிவித்திருக்கிறீர்கள்.
அதில் உள்ள கோடீஸ்வரர்கள் அனைவரும் – தங்களுக்கு
சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் என்கிற முறையில்
கிடைக்கும் சலுகைகளை விட்டுக் கொடுப்பதாக
அறிவிக்கச் செய்ய முடியுமா…?


– சட்டமன்ற, பாராளுமன்ற – கூட்டங்களில் அநேக
பிரச்சினைகளில் – எதிரும் புதிருமாக நின்று
அடித்துக் கொள்ளும் நீங்கள் அனைவருமே,
அதெப்படி உங்களது சம்பளம், படி, பென்ஷன் போன்ற 
சலுகைகளை உயர்த்தி மசோதாக்கள் கொண்டு 
வரும்போது மட்டும் - அதெப்படி ஒருமித்த குரலில் 
ஒன்றுபட்டு – உடனடியாக விவாதமே இன்றி 
நிறைவேற்றிக்கொள்கிறீர்கள்…?


– கட்சி அடிப்படையில் நாட்டின் பிரச்சினைகளை
விவாதிப்பதை விட்டு விட்டு, மக்களுக்கு எது நன்மை -
எது தீமை என்கிற கோணத்தில் உருப்படியாக நீங்கள்
விவாதிப்பதை நாங்கள் எப்போது காண்பது…?


– வளம் பெற்ற நாடான ஜெர்மனியின் சான்ஸ்லர் 
திருமதி.ஏஞ்சலா மெர்கெல் - தன் அலுவலகப்பணிக்குச்
செல்லும்போது பொதுமக்கள் பயன்படுத்தும்
சாதாரண ரயிலில் செல்லும்போது –
கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே
வாழும் இந்தியத்திருநாட்டில், அரசியல்வாதிகளான,
அமைச்சர்களான, சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களான
நீங்கள் மட்டும், அரசாங்க செலவில் தனித்தனியே 
ஒன்றுக்கு மேற்பட்ட கார்களை வைத்துக்கொண்டு 
பயணிப்பது எப்படி…?


– உங்கள் சொந்த வசதி, சௌகரியங்களுக்காக செலவழிக்கப்படும்
ஒவ்வொரு பைசாவும், இந்த நாட்டின் குடிமக்கள் செலுத்தும்
வரியிலிருந்து தான் எடுக்கப்படுகிறது என்பதை நீங்கள்
நினைத்துப் பார்ப்பதே இல்லையா…?


– நீங்கள் ஒவ்வொருவரும் 
பயன்படுத்தும் தொலைபேசிகளுக்காக –
உபயோகப்படுத்தும் மின் வசதிகளுக்காக –
குடும்பத்தோடு தங்கும் சொகுசு பங்களாக்களுக்காக –
இந்தியா முழுவதும் விமானத்திலும், ரயிலிலும்
பயணிப்பதற்காக – 
உருப்படியான வேலை எதுவும் இல்லாமல்,
சும்மாவே ஊர் சுற்றிப்பார்க்க நீங்கள் மேற்கொள்ளும்
வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக –
எத்தனை கோடி ரூபாய்களை நாங்கள் வரிப்பணமாக 
கொடுக்கிறோம் என்பதை என்றாவது நீங்கள் 
நினைத்துப்பார்த்திருக்கிறீர்களா...?


– உங்கள் சொந்த சௌகரியங்களுக்காக ஆகும் இந்த
செலவுகளை எல்லாம் நீங்களே ஏற்றுக் கொள்ளும்
சுபதினம் என்றாவது வருமா என்று குடிமக்களாகிய 
நாங்கள் எதிர்பார்க்கலாமா...?

– மிகச் சாதாரண தலைவலி, வயிற்று வலிகளுக்கெல்லாம் கூட,
நட்சத்திர வசதிகள் நிரம்பப்பெற்ற உயர் மருத்துவமனைகளில்
தங்கி மருத்துவ உதவி பெறுகிறீர்களே…. 
உங்கள் சகஇந்தியர்கள் எத்தனையோ பேர் சரியான 
மருத்துவ உதவி கிடைக்காமல் தினமும் செத்துக் 
கொண்டிருக்கிறார்கள் என்பதை என்றாவது
நீங்கள் எல்லாம் நினைத்துப் பார்த்தது உண்டா…?
– இந்த வசதிகளை எல்லாம் நீங்கள் உங்கள் சொந்த செலவில் 
செய்துக்கொள்ளும் நாள் என்றாவது வருமா…?


– அப்படி என்ன உங்கள் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமென்று
இத்தனை பூனைப்படைகளையும், துப்பாக்கி ஏந்திய
சிப்பாய்களையும் துணைக்கு வைத்துக்கொண்டு ''Z'' என்றும்,
''Z+'' என்றும் சொல்லிக் கொண்டு நீங்களும், 
உங்கள்  மந்திரிகளும்  திரிகிறீர்கள்...?
தினமும் உங்கள் கூட படாடோபத்திற்காக துணைக்கு வரும்
பூனைப்படை, யானைப்படை – எல்லாவற்றிற்கும் கொடுக்கும்
சம்பளப்பணம் – எங்கள் வரிப் பணத்திலிருந்து வருவது தானே...?
இந்த நாட்டையே பாதுகாக்க வேண்டிய பொறுப்பில்
இருக்கும் – உங்களை பாதுகாக்க நாங்கள் செலவழிக்க
வேண்டியிருக்கும் இந்த பரிதாப நிலை என்றைக்குத்தான் மாறும்…?


–  ஒரு வேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டு 
எத்தனையோ ஏழைக் குடும்பங்கள் இந்த நாட்டின்
நடைபாதைகளில் பட்டினியோடு படுத்துத் தூங்கும்போது –
உங்களுக்கு மட்டும்  ஏன் பாராளுமன்ற கேண்டீன்களில்
மலிவு விலையில் உணவுப் பொருட்கள்…? 
அது நியாயம் தானா....?
ஒரு கப் டீ ஒரு ரூபாய்க்கும்,
ஒரு சாப்பாடு 12 ரூபாய்க்கும்
எந்த குடிமகனுக்கும் இந்த நாட்டில் கிடைப்பதில்லையே…!
கோடீஸ்வரர்களான உங்களிடம் கொடுக்க காசில்லை
என்றா இந்த மலிவு விலை…? இது தகுமா...?


– உங்களின் இந்த மலிவு விலை சோற்றுக்கு கூட –
அன்றாடங்காய்ச்சியான இந்த நாட்டின் ஏழைக்குடிமகன் 
தான் காசு கொடுக்கிறான் என்பது உங்கள் மனசாட்சியை
என்றுமே உறுத்தவில்லையா...?


– நாங்கள் செலுத்தும் வரிகள் தான் எத்தனையெத்தனை …
Income tax,
Service Tax,
Professional Tax,
Toll Gate, 
Value Added Tax,
Wealth Tax,
Corporation Tax,
Road Tax, 
Automobile Registration Tax 
and 
Property Tax –

– மக்கள் சம்பாதிப்பதில் பாதியை வரியாகப் 
பிடித்துக்கொள்ளும் இந்த அரசு நிர்வாகம் 
உங்களுக்கு மட்டும் எல்லாவற்றிலும்
விலக்கு கொடுத்திருப்பது உங்களுக்கு 
உறுத்தவில்லையா …?
உங்களுக்கும் சேர்த்து தானே, எங்களிடம் வரி வசூல்
செய்யப்படுகிறது…?


– உங்களுக்காகவே  நீங்களே இயற்றிக்கொண்ட 
சட்டங்கள் மூலம் கிடைத்துள்ள அத்தனை 
சலுகைகளையும் விட்டுக்கொடுத்து
இந்த நாட்டின் கௌரவமுள்ள குடிமகனாக நீங்கள்
எல்லாம் மாறும் நாள் என்றாவது வருமா…?


– இந்த நாட்டை நேர்மையாகவும், பொறுப்புடனும்
நிர்வாகம் செய்வதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
நீங்கள் அனைவரும் – 
உங்களுக்கு நீங்களே எடுத்துக்கொண்ட இந்த சலுகைகள் 
அத்தனையையும் என்றைக்கு விட்டுக் கொடுக்கிறீர்களோ –
அன்றைக்கு குடிமக்களாகிய நாங்கள் அனைவரும்
எங்கள் சமையல் எரிவாயு மான்யத்தை –
நீங்கள் கோராமலேயே நிச்சயம் நாங்கள் 
அனைவரும் விட்டுக்கொடுப்போம்…!!! 

                                                                         இப்படிக்கு,

                                                                 சாமான்ய இந்தியன் 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இது வாட்ஸ் ஆப்பில் தோழர் ஒருவர் அனுப்பிய தகவல் 

சனி, 29 மார்ச், 2014

மோடியும் டாடாவும்...!

          
            வளர்ச்சிக்கு முன்மாதிரி குஜராத் என்று முதலாளிகளும், ஊடகங்களும் பெருமிதத்துடன் பேசியும் எழுதியும் வருகின்றன. ஆனால் குஜராத்தின் வளர்ச்சி யாரைச் சென்று அடைந்திருக்கிறது என்ற கேள்விக்கு இவர்கள் பதிலளிக்காமல் மௌனம் சாதிக்கின்றனர். அல்லது இடத்தைக் காலி செய்து விட்டு செல்கின்றனர். அவர்கள் போல் நாம் இருக்க முடியாது. வளர்ச்சியின் பங்குகள் வளர்ச்சிக்கு உழைத்த மக்களுக்கும், உழைப்பாளிகளுக்கும் சென்று அடையவேண்டும். ஆட்சிக்கட்டிலில் வெள்ளையன் அமர்ந்திருப்பதற்குப் பதிலாக ஒரு வேற்று நிறத்தவன் உட்காருவதல்ல சுதந்திரம். மாறாக சுதந்திரத்தின் பலன் அனைத்தும் மக்களைச் சென்று அடைய வேண்டும். அதுதான் சுதந்திரம் என்று இலக்கணம் வகுத்தான் மாவீரன் பகத்சிங். இந்தியாவில் இது நடக்கவில்லை என்பது உண்மை. அதே வேளையில் குஜராத் மட்டும் வளர்ச்சியில் பிரகாசிப்பதாக மோடியும்,பாஜகவும் பீற்றி வருகின்றனர்.
            மக்களைச் சென்றடையாத வளர்ச்சி என்ன வளர்ச்சி என்று பாமரன் கேட்கிறான். வளர்ச்சி மக்களைச் சென்று அடைய வேண்டும் என்று மோடி ஒரு போதும் கவலைப்பட்டதில்லை. அவர் கவலைப்படுவதெல்லாம், முதலாளிகள் வருத்தப்படாமல் லாபம் சம்பாதிக்க வேண்டுமே என்றுதான். அதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். இன்ஸ்டண்ட் காபி தான் துரித உணவுகளின் முன்னோடி இருந்தது. அதையடுத்து இப்போது பலவகை துரித உணவுப்பண்டங்கள் வந்துவிட்டன. ஆனால் மோடியின் ஆட்சியில் இன்ஸ்டண்ட் நிலம் கிடைக்கிறது. மோடி அரசு அளிக்கும் நிலம் யாருக்கு கிடைக்கிறது என்பதுதான் கேள்வி? அவர் உபரிநிலங்களை கையகப்படுத்தி ஏழை விவசாயிகளுக்கு அளிக்கவில்லை. மாறாக நல்ல விளைநிலங்களை விவசாயிகளிடமிருந்து பறித்து முதலாளிகளுக்கு அடிமாட்டு விலையிலும் மலிவாகவும் வழங்கி வருகிறார். தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற  நிலங்களை ஏலத்தில் விற்பதற்குப் பதிலாக, ''துடிக்கும் குஜராத்'' எனும் பெயரில் நடந்த மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிடும் முதலாளிகளுக்கு கிட்டத்தட்ட இனாமாக வழங்கி வருகிறார். டாடா நிறுவனத்துக்கு இந்த விஷயத்தில் லாட்டரி அடித்தது என்று கூறலாம்.
           மேற்கு வங்காளத்தின் சிங்கூர் கிராமத்தில் இருந்து மம்தா கட்சியினர் நடத்திய வன்முறையால் விரட்டப்பட்ட டாடா நிறுவனத்துக்கு சனந்த் கிராமத்தில் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்தார் மோடி.. டாடா நிறுவனம் சிங்கூரில் இருந்து குஜராத்தில் நிறுவப்படும் என்று டாடா அறிவித்த இரண்டு நாட்களில் நிலம் ஒதுக்கப்பட்டது. டாடாவுக்கு 1100 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. டாடாவுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தின் சந்தை விலை சதுர மீட்டருக்கு ரூ.10 ஆயிரமும் அதற்கு மேலும். ஆனால் மோடி அரசு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.900 பெற்றுக்கொண்டு 1100 ஏக்கர் நிலத்தை விற்றது. இந்த சலுகை போதாது என்று அதற்கு ரூ.33 ஆயிரம்கோடி மதிப்புள்ள சலுகைகளும் வழங்கியது. மேலும் டாடா நிறுவனம் நிலத்தின் விலையை ஆறுமாதங்களுக்கொரு முறை ரூ.50 கோடி வீதம் செலுத்தலாம் என்றும் கூறிவிட்டது. டாடாவுக்கு விற்கப்பட்ட நிலம் யாருடையது? இந்த நிலத்தை குஜராத் அரசு கால்நடை பல்கலைக்கழகத்துக்காக ஒதுக்கியிருந்தது. முதலில் இந்த ஒதுக்கீட்டை அரசு ரத்து செய்தது. உரிய நடவடிக்கைகள் பின்பற்றப்படாமல் இந்த நிலம் டாடாவுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த நில ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மையும் இல்லை. மேலும் டாடா நிறுவனம் நூற்றுக்கு பத்து பைசா வட்டியில் அரசிடம் இருந்து ரூ.9570 கோடி கடன் பெற்றுள்ளது.
இந்தக் கடனை இருபது வருடங்களுக்கு டாடா நிறுவனம் திரும்பச் செலுத்த வேண்டியதில்லை. இந்த நிலப்பரிமாற்றத்துக்கு மேலும் பல சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஸ்டாம்ப் டூட்டி கட்ட வேண்டியதில்லை. பதிவுக்கட்டணம் கிடையாது. சாலை மற்றும் ரயில் இணைப்புகள் உடனடியாக அரசால் வழங்கப்படும். உப தொழில்களுக்கு துரிதமாக நிலங்கள் ஒதுக்கப்படும். சலுகை விலையில் நீர் விற்கப்படும். டாடாவின் நானோ கார் நிறுவனத்துக்கு இவ்வகையில் அரசு வழங்கிய சலுகையின் மொத்த மதிப்பு ரூ.33 ஆயிரம் கோடியாகும். சனந்த் கிராமத்தில் நிறுவப்பட்டுள்ள டாடா நானோ கார் தொழிற்சாலையில் உற்பத்தியாகும் ஒவ்வொரு காரிலும் அரசின் அல்லது வரி செலுத்தும் பொதுமக்களின் இழப்பு கிட்டத்தட்ட 60 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கும். இந்த காரில் இருந்து கிடைக்கும் லாபம் எதுவும் அரசுக்கு அல்லது மக்களுக்கு கிடைக்காது. அது மொத்தமாக டாடாவின் வங்கிக்கணக்கில் டெபாசிட் ஆகும்.
              இந்த தொழில் முனைப்பைத்தான் மோடியின் கிரீடத்தில் மற்றுமொரு ரத்தினம் என்று பாஜகவும் பிக்கி, அசோசாம் போன்ற வர்த்தக முதலாளிகள் அமைப்புகளும் கூறி புளகாங்கிதம் அடைகின்றன. இது போன்ற சலுகைகளை ஏராளமான பெருநிறுவனங்களும் அடைந்து வருகின்றன. எல் அண்ட் டி, அதானிகள், அம்பானிகள், எஸ்ஸார்கள் போன்ற நிறுவனங்களுக்கு குஜராத் அரசு வழங்கிய சலுகைகள் ஏராளம். அவை குறித்த விவரங்கள் ஊடகங்களில் ஏராளமாகக் கிடைக்கின்றன. எனவேதான் நிறுவனங்களின் ஊடகங்கள் மோடி அலை வீசுவதாக சுனாமியை கிளப்பி வருகின்றன. சாதாரண மனிதனின் வயிற்றில் அடித்து விட்டு சலுகை சார் முதலாளிகள் அரசுப்பணத்தை கொள்ளையடித்துச் செல்கின்றனர். இது போன்ற சலுகைகளை மனிதகுல மேம்பாட்டுக்குரிய சேவைகளில் மோடி அரசு அளிக்கவில்லை. மாறாக மனிதர்களின் மலத்தை மனிதர்கள் அள்ளுவது ஒரு தெய்வீக அனுபவம் என்று மோடி வர்ணிக்கிறார். கல்வி, பொது சுகாதாரம், ஆரோக்கியம், பொது விநியோகம், வேலை உற்பத்தி போன்றவற்றுக்கு அரசு நிதி வழங்குவதில் ஆயிரத்தெட்டு நடைமுறைகள் தடையாக உள்ளன.
            செல்வந்த முதலாளிகளுக்கு அனைத்தும் தடையின்றி கிடைக்கும் என்பதுடன் இருக்கும் கட்டுப்பாடுகளும் கருணையுடன் அகற்றப்படும். ஆனால் அதுவே சாதாரண மனிதர்களுக்கென்றால் அவையனைத்தும் தடுக்கப்படும், நிறுத்தப்படும், மறுக்கப்படும். இந்த வகையில் ஐமு கூட்டணிக்கும் மோடிக்கும் வேறுபாடு கிடையாது. ஐமு கூட்டணிக்கு எதிராக மக்கள் எதிர்பார்க்கும் மாற்றுக் கொள்கை கொண்ட அரசை மோடியால் தரமுடியாது.

(நிலோத்பல் பாசுவின் கட்டுரையைத் தழுவி எழுதியவர் தாஸ்)