நீங்க மாத சம்பளக்காரரா...? மாதாமாதம் வீட்டுக்கும் வாகனத்திற்கும் வாங்கின கடனையும் வட்டியையும் கட்டிவிட்டு, மின்கட்டணம், தொலைபேசி கட்டணம், கேபிள் கட்டணம், பள்ளி - கல்லூரி கட்டணம், மளிகை சாமான்களுக்கும் காய்கறிகளுக்கும் செய்கிற செலவுகள், கோயில், திருவிழா, பண்டிகை செலவுகள், நண்பர்கள், விருந்தினர்களுக்கு செய்கிற செலவுகள், சமைக்க சமையல் கேஸ் கட்டணம், இவைகளோடு இன்னும் இத்தியாதி இத்தியாதி செலவுகள் என மாதம் பிறந்தால் அரசுத்துறை மாத சம்பளக்காரர்களின் கழுத்தைப்பிடிக்கும். இன்னும் தனியார் துறையில் வேலை பார்ப்பவர் என்றால் கழுத்தை இருக்கும். அதிலும் இவர்கள் வாங்குகிற சம்பளம் குறிப்பிட்ட அளவுக்கு மேலே போனால், வருமானவரியை பிடித்துக்கொண்டு தான் தருவார்கள். இப்படியாக வருமான வரி, பி.எப்., இன்சூரன்ஸ், என அத்தியாவசிய பிடித்தம் போகத்தான் மேலே சொன்ன கட்டாய செலவுகள். அப்படியென்றால் பட்டுக்கோட்டையார் அன்று பாடிய அந்த பாடல் தான் என் நினைவிற்கு வருகிறது. ''கையில வாங்கினேன்... பையில போடல... காசுப்போன இடம் தெரியில...'' - என்ற இந்தப்பாடல் அன்றும் இன்றும் மாத சம்பளக்காரர்களுக்கு, உழைப்பாளி மக்களுக்கு மிகப்பொருத்தமான பாடல் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் நம்ப ''வளர்ச்சி நாயகன்'' நரேந்திரமோடி இரண்டு நாட்களுக்கு முன்னர், ''வசதிப்படைத்தவர்கள் எல்லோரும் சமையல் எரிவாயுவிற்கான அரசு தரும் மானியத்தை விட்டுக்கொடுங்கள்'' என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். மேலும் இன்னொரு விஷயத்தையும் சொல்லியிருக்கிறார். ''மானியத்தை வங்கிக்கணக்கில் போடும் திட்டத்தில் 2,80,000 பேர் எரிவாயுவிற்கான மானியத்தை விட்டுக்கொடுத்ததன் விளைவாக அரசுக்கு ரூ.100கோடி மிச்சமானது. அந்த 100கோடியை வைத்துக்கொண்டு ஏழைகளின் நலத்திட்டங்களுக்கு செலவு செய்யலாம்'' என்றும் மோடி திருவாய் மலர்ந்திருக்கிறார். மோடி வெளிப்படுத்திய அவரது வேண்டுகோளின் மூலம், ஏதோ அவர் ஏழை மக்களுக்கு உதவி செய்யத் துடிக்கிறார் என்ற இலவச விளம்பரத்தை குடிசைபகுதியில் வைக்கிறார் என்று பொருள்.
இன்னொன்று இந்தியாவில் வசதிப்படைத்தவ்ர்கள் என்பவர்கள் யாரு...? அரசு வங்கிகளில் கோடிகோடியாய் வாரா கடனை வாங்கி திருப்பி கட்டாதவர்கள், உபரியாய் கோடிக்கணக்கில் இலாபம் பெற்று வருமானவரி கூட கட்டாமல் வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணமாய் பதுக்கிவைத்திருப்பவர்கள், நாட்டின் வளங்களையும், செல்வங்களையும் சுரண்டி அடுத்த பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்தவர்களும், மத்திய - மாநில ஆட்சியாளர்கள், நகராட்சி, மாநகராட்சி, சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அபரீதமான வருமானம் உள்ளவர்கள் என இவர்கள் தானே நம் நாட்டில் வசதிப்படைத்தவர்கள் என்றும், இவர்களைத்தான் மோடி ''கெஞ்சிக்'' கேட்கிறார் என்றும் நீங்கள் நினைத்துவிடாதீர்கள்.
பிறகு யாரைத்தான் மோடி ''வசதிப்படைத்தவ்ர்கள்'' என்று விளிக்கிறார்...? அந்த ''வசதிப்படைத்தவ்ர்கள்'' யாரென்றால், ஆரம்பத்தில் சொன்னேனே மாதசம்பளத்தை வாங்கிவிட்டு அதற்கும் இதற்கும் செலவு செய்துவிட்டு அல்லல்படுபவர்கள் அந்த வசதிப்படைத்தவ்ர்கள். இனி மோடியின் அகராதியில் வருமானவரி கட்டுபவர்கள் தான் வசதிப்படைத்தவர்கள். இவர்களைப் பார்த்து தான் மானியத்தை தியாகம் செய்யுங்கள் என்று கேட்டுக் ''கொல்''கிறார் மோடி என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இவர்கள் என்ன இளித்தவாயர்களா... மோடி கேட்டுக்கொண்டார் என்பதற்காக மானியத்தை இழப்பதற்கு...? இது மோடிக்கும் தெரியும். அதனால் அதற்கும் ஒரு வழியை வைத்திருக்கிறார். எதிர்காலத்தில், மாதசம்பளக்காரர்களின் PAN எண்ணை, ஆதார் எண்ணோடு இணைக்கப்போகிறார்கள். பிறகு வருமானவரி கட்டும் ''மாத சம்பளம் வாங்கும் பணக்காரர்களுக்கு'' அவர்களை கேட்காமலேயே மானியம் வெட்டப்படும் என்பது தான் உண்மை.
இந்த மாதசம்பள பணக்காரர்களை நம்பவைப்பதற்கும், திருப்திப்படுத்தவதற்கும் தான் மோடி சொன்ன அந்த ''உபக்கதை'' - 2,80,000 பணக்காரர்கள் விட்டுக்கொடுத்திருக்கிறார்கள். அதன் மூலம் அரசு ரூ.100கோடியை மிச்சப்படுத்தியிருக்கிறது என்று மோடி ஒரு கதை விட்டிருக்கிறார். அந்த 2,80,000 பேர் என்பது வங்கி கணக்கை ஆரம்பிக்காதவர்கள், ஒன்றுக்கு மேல் காஸ் இணைப்பு வைத்திருப்பவர்கள் மற்றும் ஆதார் கணக்கை துவக்காதவர்கள் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.
ஆக, ஓர் ஆண்டுக்கு நூற்றுக்கணக்கில் காஸ் சிலிண்டர்களை பயன்படுத்தும் உண்மையான வசதிப்படைத்தவர்களுக்கு காஸ் மானியம் உட்பட கோடிக்கணக்கில் மானியத்தை அள்ளிக்கொடுக்கும் நரேந்திரமோடி, ஆண்டுக்கு பன்னிரெண்டோ அல்லது அதற்கும் குறைவாகவோ காஸ் சிலிண்டர்களை பயன்படுத்தும் வருமானவரி கட்டும் ''போலி'' பணக்காரர்களுக்கு கொடுக்கப்படும் மானியம் வெட்டப்படும் என்ற மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு வெகுதூரமில்லை.
