அண்ணா நூற்றாண்டு நூலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அண்ணா நூற்றாண்டு நூலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 4 ஜூலை, 2012

அண்ணா நூலகத்துல லாட்ஜ் - பார் எல்லாம் நடத்துவாங்க போலிருக்கே....?

               "ஒரு நூலகம் திறக்கப்படும்போது, ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது" என்றார்  பேரறிஞர் விக்டர் ஹியுகோ. அந்த அளவிற்கு நூலகம் என்பது ஒரு மனிதனை ஒரு சரியான மனிதனாக வளர்க்கும் சக்தி கொண்டது. மாமேதை காரல் மார்க்ஸ் மற்றும் சீனத்தலைவர் மாவோ போன்ற உலகத்தலைவர்கள் எல்லோரும் தங்கள் நேரத்தை நூலகத்தில் புத்தகம் படித்ததன் மூலம்  தான் அவர்கள் மனித  சமூகத்தின் மீது நேசம் கொண்ட மனிதர்களாக - உலகத்தலைவர்களாக உயர முடிந்தது. இப்படித்தான் பல நூலகங்கள் பல உலகத்தலைவர்களை உருவாக்கியுள்ளது என்று  நம்மால் சொல்ல முடியும்.                                 
          அப்படிப்பட்ட  நூலகம் தான் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைவர் எம்ஜிஆரின் தலைவரான அண்ணா ஒரு சாதாரணக் குடும்பத்திலிருந்து காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு கல்லூரிப் படிப்புக்காக சென்றவர், அங்குள்ள கன்னிமரா நூலகத்தில் உள்ள அனைத்துப் புத்தகத்தையும் படித்ததனால் தான் அவர் தமிழகத்தின் முதல்வராக உயர்ந்தது மட்டுமல்ல, தமிழகத்தில் அவர் தொடங்கி வைத்த திராவிடக்கட்சியின் ஆட்சி இன்று வரை தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஒரு நூலகத்தின் மகத்துவம் இது தான்.
                      சென்னையில் கன்னிமரா நூலகம் போன்ற நூலகங்கள் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்ட நூலகங்கள் பல நாட்டில் இன்றும் இருக்கின்றனவே. அந்த நூலகங்கள் எல்லாம் பிரிட்டிஷ்காரார்களால் ஆரம்பிக்கப்பட்டது என்று சுதந்திரம் கிடைத்தவுடன் நம் முன்னோர்கள் அந்த நூலகங்களை எரித்தாவிட்டார்கள்..? அல்லது அந்த நூலகங்களுக்கு வைக்கப்பட்ட பிரிட்டிஷ்காரர்களின் பெயர்களை நீக்கிவிட்டர்களா..? இல்லையே..! அவர்களை சிறுமைப்படுத்தக் கூட இல்லையே..! 
                னால் தமிழக முதலைச்சருக்கு மட்டும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் மீது மட்டும் ஏனிந்த காழ்ப்புணர்ச்சியும், வெறுப்பும். அந்த நூலகம் எதிர்காலத்தில் இந்த நாட்டிற்கு எத்தனையோ அறிஞர்களையும், அறிவியலாளர்களையும், தலைவர்களையும் கொடுக்கப்போகிறது என்பதை முதலமைச்சர் ஏன் உணரவில்லை....? முன்னாள் முதலமைச்சர் மீதானக் கோபத்தை அவர் ஆரம்பித்தார் என்பதற்காக நூலகத்தின் காட்டுவது என்பது சிறுபிள்ளைத்தனமாக தோன்றுவது செல்வி ஜெயலலிதாவிற்கு புரியவில்லையா...? ஒரு நூலகத்தையே அழிக்கும்  செயல் என்பது எதிர்கால தலைமுறையினரையே அழிக்கும் செயல் அல்லவா....?  
              முன்னாள் முதல்வரை, முன்னாளிலிருந்த ஆட்சியாளர்களை சிறுமைப்படுத்துவற்கு  நூலகத்தை சிறுமைப்படுத்துவது என்பது அறிவுடைமை ஆகாது. இன்றைக்கு அந்த நூலகத்தில் திருமண  நிகழ்ச்சிகளுக்கு அனுமதியளித்த தமிழக அரசு, இதை கண்டுகொள்ளாமல் இருந்தால், நாளை லாட்ஜி நடத்துவதற்கும், பார் நடத்துவதற்கும், பீடா கடை போடுவதற்கும் அனுமதியளிக்கும் நிலைக்கு தமிழக அரசு போகும் என்கிற அச்சம் மக்களுக்கு இருக்கிறது என்பதை தமிழக முதலமைச்சர் புரிந்துகொள்ளவேண்டும். புத்தகங்கள் குவிந்திருக்கும் இடத்தில் சமையல் போன்ற தீயோடு சம்பந்தப்பட்ட வேலைகளை அனுமதிக்கக்கூடாது என்ற குறைந்தபட்ச அறிவு கூட தமிழக அதிகாரிகளுக்கு இல்லை என்பதும் இந்த ஆட்சியின் கோளாறு. 

புதன், 2 நவம்பர், 2011

திருந்தமாட்டார் ஜெயலலிதா...!

                      அம்மாவின் ''மூடுவிழா'' வரிசையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆசை ஆசையாய் கட்டி அழகு பார்த்த  சென்னை கோட்டுர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் இன்று சிக்கிக்கொண்டது. அது அய்யா கட்டின வசந்த மாளிகையாம். அதுவும் 180 கோடி ரூபாயை செலவுபண்ணி கட்டப்பட்டது. அதில் தமிழ் மட்டுமல்ல மற்ற மொழி புத்தகங்களும் அங்கு வைக்கப்பட்டிருக்கிறது. அந்த நூலகம் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள்,  புத்தக ஆர்வலர்கள், பதிப்பாளர்கள் என பலபேருக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் ஒரு நவீன நூலகம் இல்லையே என்ற குறையை போக்கியது. அங்கு பல லட்சம் புத்தகங்கள் வைக்கப்பட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே சமயத்தில் படிப்பதற்கேற்றவாறு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
                தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இதய தெய்வம் எம்ஜியாரின் இதய்தெய்வமான மறைந்த முதலமைச்சர் அண்ணாவின் நூற்றாண்டை குறிக்கும் வகையில் கட்டப்பட்ட இந்த நூலகம், சென்னை பள்ளிக் கல்வி இயக்கக (டிபிஐ) வளாகத்தில் அமைக்கப்பட உள்ள நவீன மைய நூலகக் கட்டடத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளதாக தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார்.
                  சமுதாய வளர்ச்சிக்கும், சமுதாய மாற்றத்திற்கும் நூலகங்கள்  மிக மிக அவசியாமானதாகும். நல்ல புத்தகங்களை மட்டுமல்ல நல்ல நண்பர்களையும் கூட நூலகத்தில் மட்டுமே தேட முடியும். அத்தகைய நூலகத்தை மூடுவது என்பது கண்டிக்கத்தக்கது. அதிலும் நூலகத்தை எடுத்துவிட்டு அங்கு குழந்தைகளுக்கான மருத்துவமனை தொடங்கப்படும் என்ற  முதல்வரின் அறிவிப்பு ஏற்புடையதாக இல்லை. மக்களின் கோபத்திற்கு ஆளாகிவிட கூடாது என்பதற்காக இந்த மருத்துவனை அறிவிப்பெல்லாம்  என்பதை மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை ஜெயலலிதா புரிந்துகொள்ளவேண்டும்.
             இவர் ஆட்சிக்கு வந்ததும், கோட்டையில்  இருந்த செந்தமிழ் நூலகத்தை எங்கோ கிளப்பி அனுப்பி வைத்தார். இப்போது அது எங்கிருக்கிறது என்பதே தெரியவில்லை. 
                 சமச்சீர் கல்வியை சீரழிக்க  பள்ளிக்குழந்தைகளுக்கு இன்றுவரை பாடபுத்தகங்களை கொடுக்காமல் இழுத்தடிக்கிறார். முழுமையாக புத்தகங்களை கொடுத்தபாடில்லை.
                      இன்றோ கோட்டுர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கெளப்பி அனுப்ப முயற்சி செய்துகொண்டிருக்கிறார்.
                        புத்தகம் என்றால் முதல்வருக்கு ஏன் இந்த கசப்பு..?
           அறிவு வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் புத்தகங்களை எட்டாத இடத்தில் வைத்துவிட்டு, இலவசமாய் ஆடுகளையும், மாடுகளையும் கொடுத்தால் என்ன அர்த்தம்..? அறிவு வளர்ச்சியில் தமிழக இளையத்தலைமுறையினரை பின்னுக்குத் தள்ளும் - இளையச்சமுதாத்தின் வளர்ச்சியை தடுக்கும் ஜெயலலிதாவின் இந்த பிற்போக்குத்தனமான முயற்சியை தமிழக மக்கள் கண்டிக்கவேண்டும். 
*******************************************************
தோழர் மாதவராஜ் அவர்களின் ''தீராத பக்கங்கள்'' - லிருந்து கீழே மறு பதிவு...

முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு தமிழ் எழுத்தாளர்கள் எதிர்ப்பு!

ezhudhalar_arikkai

“சென்னை கோட்டூர்புரத்தில் அண்மையில் திறக்கப்பட்ட அண்ணா நூலகம், விரைவில் டிபிஐ வளாகத்துக்கு மாற்றப்படும் எனவும், அந்த இடத்தில் உயர் சிறப்பு குழந்தைகள் நல மருத்துவமனையாக (Super Specialty Pediatric Hospital) மாற்றி அமைக்கப்படும்” என இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா  அறிவித்துள்ளார்.  அவர் பதவிக்கு வந்த பின்னர், தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றியதிலிருந்து  இதுபோன்ற காரியங்களைத் தொடர்ந்து செய்து வருகிறார்.  இந்த மருத்துவமனைகளின் பின்னால் இருக்கிற நோயை தமிழகம் அறிந்தே வைத்திருக்கிறது.

ஜெயலலிதாவின் தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு  ஒட்டுமொத்த மக்களின் வரிப்பணமும், தமிழகத்தின் சில முக்கிய திட்டங்களும் இரையாகிக்கொண்டு இருக்கின்றன.  இப்படி ‘கருணாநிதி கட்டியவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக மாற்றுவேன்” என மக்கள் முன்வைத்து தேதலில் வாக்கு பெறவில்லை, வெற்றி பெறவில்லை.

தேர்தல் வாக்குறுதிகளிலோ, அறிக்கையிலோ  சொல்லியதை நிறைவேற்றுவதை விட்டு விட்டு, சொல்லாதவற்றையெல்லாம்  ஜெயலலிதா ஒவ்வொன்றாகச் செய்து வருகிறார். வன்மமும், அதிகார துஷ்பிரயோகமும் தலைவிரித்தாடுகிறது.

கருணாநிதியை மதிக்கிறார், மதிக்காமல் போகிறார். அதுபற்றி நமக்கு கவலையில்லை. ஆனால் அறிவு சார்ந்த ஒரு  நூலகத்தை மதிக்கவில்லை. நம்பி வாக்களித்த தமிழக மக்களையும் மதிக்கவில்லை. அதுபற்றி நமக்கு கவலை மட்டுமல்ல, ஆத்திரமும் உண்டு.

அரசின் இந்த முடிவுக்கு எதிராக  ‘புத்தகம் பேசுது’ இதழ் ஒருங்கிணைப்பில் தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்கள் இன்று கூட்டாக அறிக்கை விடுத்திருக்கிறார்கள். நாமும் நமது எதிர்ப்பை தெரிவிப்போம் நண்பர்களே!

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றக் கூடாது என ‘புத்தகம் பேசுது’ இதழ் சார்பில் ஒரு ஆன்லைன் பெட்டிஷன், தமிழக முதலமைச்சருக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது இங்கே:
நண்பர்களே!, தாங்களும் இப்பெட்டிஷனில் கையெழுத்திட்டு, ஆதரவு திரட்டுங்களேன்