மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 13 மே, 2016

இலாசுப்பேட்டை வாக்காளர்களை ஈர்க்கும் சி.பி.எம் வேட்பாளர்...!


கல்லூரியில் மாணவர்... போராட்டக்களத்தில் ஆசிரியர்...

கட்டுரையாளர் : புதுவை ராம்ஜி 


          மாணவர்களுக்கு எதற்காக அரசியல் என்று அவர்களை ஊறுகாயாக மட்டும் தொட்டுக்கொள்கிற பல அரசியல் கட்சிகளுக்கு மாறாக, புதிய சிந்தனைகள் கொண்ட மாணவர்களும், இளைஞர்களும், பெண்களும் அரசியலுக்கு அவசியம் வரவேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரியில் முதன்முறையாக இந்திய மாணவர் சங்கத்தை சார்ந்த ஒருவரை லாசுப்பேட்டை தொகுதியில் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. 
         அவர் அ. ஆனந்த், வயது 26, புதுச்சேரி டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்ட மேற்படிப்பு படித்துக்கொண்டிருப்பவர். தமிழ்நாடு - புதுச்சேரி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களிலேயே இவர்தான் இளம் வேட்பாளர். இவர் சமூக அக்கறையுள்ள மாணவப் போராளி. லாசுப்பேட்டையிலுள்ள நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேனிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோதே மாணவர்களுக்குரிய இலவச பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகங்களுக்காகப் போராடி அவற்றைப் பெற்றுத் தந்தது இவரது முதல் போராட்டம். சமூக அக்கறையே இல்லாமல் சுற்றித்திரிபவர்களாக சித்தரிக்கப்படும் இன்றைய இளைஞர்களிடையே, பகலில் கல்விக்கான நேரம் போக மற்ற நேரங்களில் இயக்கப்பணிகள், போராட்டங்கள் என்று தன்னை ஒரு சமூக சிந்தனையாளனாக செதுக்கிக்கொண்டவர். இரவிலும் பொறுப்புள்ள மகனாக தன் தந்தையாரின் பெட்டிக்கடையில் அவருக்கு உதவியாக இருப்பவர். இப்படிப் பல வகைகளில் இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாய்த் திகழ்பவர். எளிய குடும்பத்தை சேர்ந்தவர். வாடகை வீட்டில்தான் குடியிருப்பு. அப்பா நடத்தும் பெட்டிக்கடையே பிரதான வருவாய். 
         தன்னொத்த சக மாணவர்களுக்காகக் களமிறங்கி, கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைபடுத்தவும், கல்வி நிறுவனங்களின் குளறுபடிகளுக்கு முடிவு கட்டவும், கல்விக் கட்டண உயர்வைத் தடுக்கவும், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை நிறுத்தவும், மாணவர்களுக்கு அரசு கொடுக்க மறந்த லேப்டாப்களை வழங்கச் செய்யவும் என எத்தனையோ போராட்டங்களை மாணவர் சங்கத்தின் சார்பில் நடத்திப் பங்கேற்றிருப்பவர், மக்களைத் தாக்கும் விலைவாசி உயர்வுக்கு எதிராக, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 விழுக்காடு இடஒதுக்கீடு கோரி, தனியார் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 50 விழுக்காடு அரசு ஒதுக்கீடு கோரி, புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ராகிங், பாலியல் சீண்டலுக்கு எதிராக என இன்னும் எத்தனையோ போராட்டப் பங்களிப்புகள். இவரது தலைமையிலான போராட்டத்தின் விளைவாக, கடந்த தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டு நான்கு ஆண்டுகளாக கொடுக்கப்படாமல் இருந்த லேப்டாப்களை முதலமைச்சர் ரங்கசாமி மாணவர்களுக்கு கொடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
           நீதிக்காக நடத்திய பல்வேறு போராட்டங்களுக்காக அரசு அளித்த பரிசாக இவர் மீது பல வழக்குகள். சிறுமிகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தும் பெரும்புள்ளிகளையும் காவல்துறையைச் சேர்ந்தவர்களையும் கைது செய்யக்கோரி போராட்டங்களை நடத்தியதால் அரசு ஆனந்த் மீது வழக்கு போட்டிருக்கிறது. அரசு பாலியல் குற்றம்புரிந்த காவல்துறையை சேர்ந்தவர்களை மட்டும் ஒப்புக்காக கைது செய்து வெளியே விட்டுவிட்டது. ஆனால் முக்கிய குற்றவாளிகளான அந்த 'பெரும்புள்ளிகள்' மட்டும் இன்றளவும் விட்டுவைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் தற்போதைய தேர்தலிலும் போட்டியிடுகிறார்கள் என்பது கூடுதல் செய்தி!                    ஆனந்த் வாக்காளர்களை சந்திக்கும் விதமே அலாதியானது. தொகுதி முழுதும் பெரும்பாலும் பள்ளி-கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவியர் இருக்கும் வீடென்பதால் வாக்காளர்களை அணுகுவதில் சிரமமில்லாமல் உணர்கிறார். பார்க்கும் பெரியவர்கள் அனைவரையும் 'தாத்தா, பாட்டி, ஆன்ட்டி, அங்க்கிள்' என எப்போதும் போல் இயல்பாக அழைத்து வாக்குகளை கேட்கிறார். அவர்களும் தங்கள் வீட்டுப் பிள்ளையாய் வரவேற்று உள்ளே அழைத்துப் பேசுகிறார்கள்.
        ஒரு மாணவர் அரசியலில் ஈடுபட முடியுமா... அதுவும் தேர்தலில் நிற்கமுடியுமா... மாணவர்களுக்கு வாய்ப்புத் தரும் அரசியல் கட்சியும் இருக்கிறதா... இது சாத்தியம் தானா... என்றெல்லாம் பெரியவர்களும், மாணவர்களும், இளைஞர்களும் ஆனந்தை பார்த்து அதிசயித்துப் போகிறார்கள். தினந்தோறும் காலையும் மாலையும் மக்கள் நலக்கூட்டணியை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது ஏராளமான பல்கலைக்கழக - கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் ஆனந்தோடு கூட்டமாக வருகிறார்கள். இது போட்டி வேட்பாளர்களுக்கு பயத்தை கிளப்பியுள்ளது. தற்போது அவர்களும் மாணவர்களை 'சம்பளத்திற்கு' அமர்த்தி தங்களோடு அழைத்துவரும் அளவிற்கு நிர்ப்பந்தம் உண்டாகியிருக்கிறது! 
       ஆனந்தின் பிரச்சாரத்தில் கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால், பள்ளியில் அவருக்கு ஆசிரியராக இருந்த ஆர்.ஜெயராமன் மற்றும் ஜெ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் தலைமையில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களும், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களும் களத்தில் இறங்கி ஆனந்திற்காக பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதுதான்.

தேர்ந்தெடுக்கப்பட்டால்....


          ஆனந்த் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை எளிய மாணவர்களுக்கு 25 விழுக்காடு இடஒதுக்கீட்டை பெற்றுத்தரப்படும். தனியார் கல்வி நிறுவனங்களில் நடக்கும் கட்டணக் கொள்ளையை தடுத்திட கல்விக்கட்டண நிர்ணயக்குழு அமைக்கப்படும். ''புதுச்சேரி மக்களின் கனவான மாநில பல்கலைக்கழகம் துவங்கவும், தனியார் மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பெற்றுத்தரவும், அரசுத்துறைகளில் சட்டவிரோத பணி நியமனத்தை தடுத்து, வேலைவாய்ப்பகம் மூலம் மட்டுமே பணி நியமனம் செய்யவும், லாசுப்பேட்டை அரசு மருத்துவமனை 24 மணிநேரம் செயல்படும் மருத்துவமனையாக மாற்றவும், வீடில்லாத மக்களுக்கு இலவச மனைப்பட்டா மற்றும் தொகுப்பு வீடுகள் வழங்கவும், சட்டமன்றத்தில் போராடுவேன்,'' என்று உண்மை உணர்வோடு உறுதியளிக்கிறார். ஒரு மக்கள் ஊழியனாய் மக்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன் என்றும் தன் தொகுதி மக்களுக்கு வாக்குறுதியாக அளித்திருக்கிறார். 
           ஒரு மாணவரால் சட்டமன்ற உறுப்பினராய் செயல்பட முடியுமா என்று கேட்பவர்களுக்கு, 'முடியும் என்பதே மூலதனம்... முடியாது என்பது மூடத்தனம்... இது தான் என் கட்சி எனக்குக் கற்றுத்தந்த பாடம்...' என்று சொல்லிக்கொண்டே பிரச்சாரத்தில் வலம் வருகிறார் ஆனந்த்.

நன்றி : தீக்கதிர் / 13/05/2016

வியாழன், 17 மார்ச், 2016

உதாரணமாய் வாழும் எங்கள் தோழர் சங்கரய்யா...!


              மேடவாக்கம் காயிதமில்லத் கல்லூரி சார்பில் 2016ஆம் ஆண்டுக்கான "பொதுவாழ்வில் தூய்மையாளர்" விருது விடுதலைப்போராட்ட வீரரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்தத்தலைவருமான தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு இன்று வழங்கப்பட்டது. விழாக்குழுவினர் விருதுடன் ரூ.2.50 இலட்சம் ரொக்கமும் சேர்த்து அவருக்கு வழங்கியிருக்கிறார்கள். 
          விருதினை பெற்றுக்கொண்டு வழக்கமான சிம்மக்குரலில் பேசிய தோழர் சங்கரய்யா, ''நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியன். சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அரசின் பென்ஷன் மற்றும் சலுகைகளை நான் பெறுவதில்லை. எனவே நீங்கள் கொடுத்த ரூ.2.50 இலட்சம் பணத்தை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது என பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பணத்தை காயிதேமில்லத் கல்லூரியில் படிக்கும் தலித் மற்றும் ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்'' என்று விழாக்குழுவினர் மனம் நோகாதவண்ணம் எடுத்துரைத்து கொடுத்தப் பணத்தை திருப்பி அளித்தார். 
        ஆட்சியிலிருக்கும் போது கோடிக்கணக்கில் மக்கள் பணத்தை கூச்சப்படாமலும், தைரியமாகவும் கொள்ளையடித்து சொத்து சேர்க்கும் திமுக மற்றும் அதிமுக  கட்சித்தலைவர்கள் வாழும் இந்த மண்ணில் தான், விருதாக கொடுத்தப் பணத்தின் மீது ஆசைகொள்ளாமல், நல்ல காரியத்திற்காக திருப்பிக்கொடுத்த தன்னலமற்ற கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவரும் வாழ்கிறார் என்பதும், அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்று எண்ணும்போது  பெருமையாய் இருக்கிறது. 

      தோழர் சங்கரய்யா அவர்கள் சுதந்திரப்போராட்டக் காலத்தில் எட்டு ஆண்டுகள் சிறைச்சாலையிலும், 3-1/2 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையும் வாழ்ந்தவர். மூன்று  முறை தமிழக சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றியவர். 

உதாரணமாய் வாழும் உயர்ந்த உள்ளத்தை உவப்புடன் வணங்குவோம்...!

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

தியாகத்தின் மீது கல்லெறிகிறது துரோகம்...!


           ''அவர்கள் தேசபக்தி பற்றிப் பேசுகிறார்கள். மாற்றுக் கருத்து சொல்பவர்கள் எல்லாம் தேச விரோதி என்கிறார்கள். இந்திய அன்னை அடிமைத் தளையில் சிறைப்பட்டு உழன்று கொண்டிருந்த போது இவர்கள் சற்றும் மனம் கலங்காமல் கொண்டாடி திரிந்து கொண்டிருந்தனர். இப்போது அவர்களுக்கு ஆட்சி பீடம் கிடைத்திருக்கிறது. சுதந்திரப் போர் குறித்து அதில் தங்கள் பங்கு குறித்து சொல்லிக் கொள்வதற்கு அவர்களுக்கு ஏதும் இல்லை. அதை மீறி சொல்லத் துணிந்தால் அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு நிற்க வேண்டிய நிலையில் அவர்கள் இருக்கிறார்கள்''                    





கட்டுரையாளர் ​: 

தோழர்.க.கனகராஜ்        
தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி        



துரோகமே வாழ்க்கையாக...         

               அவர்கள் தங்களை தேச பக்தர்கள் என்கிறார்கள். சுதந்திரத்திற்கு முன்பாக சுதந்திரம் பெற்ற காலத்தையும் சேர்த்து ஆர்.எஸ்.எஸ்.சுக்கு இரண்டு பேர் தலைவர்களாக இருந்தார்கள். ஒருவர் ஹெட்கேவர். அவர் நிறுவனத் தலைவர். அதற்கு முன்பு காங்கிரசிலிருந்தார். காங்கிரசிலிருந்த போது, ஆர்எஸ்எஸ்-சை ஆரம்பிக்கும் முன் ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ஆரம்பித்த பிறகு ஒருமுறை ஜெயிலுக்கு போனார். இந்த சிறைவாசத்திற்கான நோக்கத்தை அவரது சுயசரிதையை எழுதியவரிடம் “சிறைக்குப் போனால் உள்ளேயிருக்கும் காங்கிரஸ்காரர்களை ஆர்.எஸ்.எஸ்.காரர்களாக மாற்ற முடியும்” என்பதற்காகவே போனதாகச் சொல்லியிருக்கிறார். இதைத் தவிர ஆர்.எஸ்.எஸ்.சின் எந்த ஒரு ஈ, காக்கையும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதே கிடையாது. மாறாக, சுதந்திரப் போராட்டத்தின் நெடுகிலும் தேச பக்தர்களை, தியாகிகளை அவமானப்படுத்துவதும், அவதூறு செய்வதும், ஆங்கிலேயர்களுக்கு பாராட்டுப் பத்திரம் வாசிப்பதுமாகவே அவர்களின் காலம் கழிந்திருக்கிறது.
        சுதந்திரப் போராட்டத்தின் போது ஆர்.எஸ்.எஸ்.சின் தலைவராக இருந்த கோல்வால்கர் (குருஜிதான்) ஒரு நாள், ஒரு பொழுது, ஒரு நிமிடம் கூட தப்பித் தவறிக் கூட கனவிலும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதும் கிடையாது; ஈடுபட்டவர்களை வாழ்த்திப் பேசியதும் கிடையாது, இன்னும் சொல்லப்போனால் ஒரு பேச்சுக்காகக் கூட ஆங்கிலேயர்களை விமர்சித்ததும் கூட கிடையாது. தங்களில் யாராவது ஒருவரை சுதந்திரப் போராட்ட வீரராகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக வாஜ்பாய் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதாகச் சொல்லி, அதை பத்திரிகைகள் விசாரிக்கும்போது அது உண்மையல்ல, மாறாக, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை சொல்லிவிட்டு அவர் வெளியே வந்துவிட்டார் என்கிற விஷயம் வெளியே வந்து, அவர்கள் அவமானப்பட்டு நின்றார்கள். சாவர்க்கர் பெரிய சாகசம் செய்து விட்டதாகவும், அதன் காரணமாகவே அவர் ‘வீர’ சாவர்க்கர் என்றழைக்கப்பட்டதாகவும் அவ்வப்போது அவர்கள் சொல்வதுண்டு. அவர் இங்கிலாந்தில் இருக்கும்போது ஆங்கில அரசாங்கத்திற்கு எதிராக பேசினார், எழுதினார் என்பதெல்லாம் உண்மை. ஆனால் அவர் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு மன்னிப்புக் கடிதங்களை மட்டுமே எழுதிக் கொண்டிருந்தார். இன்னும் சொல்லப்போனால், கருணை மனு எப்படியெல்லாம் எழுத முடியும் என்பதற்கு இன்றுவரையிலும் ‘சிறந்த உதாரணமாய்’ திகழ்வது ‘வீர’சாவர்க்கர் ஆங்கில அரசாங்கத்திற்கு எழுதிய கடிதங்கள்தான்.
         அவர்களைப் பற்றி மற்றவர்கள் என்ன எழுதினார்கள் என்பதை விட அவர்களுடைய ஆவணங்களில் அவர்கள் சுதந்திரப் போராட்டம் குறித்து என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை தில்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஷம்சுல் இஸ்லாம், வரிக்கு வரி ஆய்வு செய்து எழுதியிருக்கிறார். இதோ அந்த விபரங்கள்:அவர்களது ஆவணங்களில் உள்ளபடி அவர்களின் எழுத்துக்களில்....

1. ஆங்கிலேயர்களை விமர்சித்து எழுதியது - ஜீரோ
2. ஆங்கிலேய ஆட்சியாளர்களைப் போற்றிப் புகழ்ந்து எழுதியது - 16 முறை
3. ஆங்கிலேய எதிர்ப்புச் சின்னமான வந்தே மாதரம் பாடியது - ஜீரோ
4. விடுதலைப் போராட்டத்தை அவதூறு செய்து எழுதியது - 16 முறை5. விடுதலைப் போராட்டத்தைப் பாராட்டி எழுதியது - ஜீரோ
6. ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டுச் செல்ல வேண்டுமென எழுதியது - ஜீரோ
7. ஜாலியன் வாலாபாக், ககோரி குண்டு வழக்கு, கதார் இயக்கம் போன்ற சுதந்திரப் போராட்ட முக்கிய நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்பு - ஜீரோ
8. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தங்களின் உயிரை அர்ப்பணித்தவர்களைப் பாராட்டி எழுதியது - ஜீரோ
9. தியாகிகளின் தியாகத்தை கேவலப்படுத்தி எழுதியது - 10 முறை
10. சுதேசியைப் பாராட்டிய குறிப்புகள் - ஜீரோ - இப்படி அடுக்கிக் கொண்டே போக முடியும்.

         அவர்கள் விடுதலைப் போராட்டத்தை, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஆதரித்தவர்கள் கிடையாது. அதைச் சிறுமைப்படுத்தியவர்கள். அதைச் சீர்குலைக்க முனைந்தவர்கள். இப்போது அதிகார பீடம் அவர்களுக்கு வாய்த்திருப்பதால் தேச பக்தி பற்றிப் பேசுகிறார்கள். தேச விடுதலை இயக்கத்தில் இருந்தவர்களை அப்போது அவமானப்படுத்தினார்கள்.  இப்போது தேச விரோதிகள் என்கிறார்கள்.

தேசப் பிரிவினையும் சங்பரிவாரமும்            


                     இந்தியா இரு நாடுகளாக பிரிக்கப்பட்டதற்கு முஸ்லிம்கள் தான் காரணம் என்று இவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால், 1942ம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக நாடு முழுவதும் சுதந்திரப் போராட்டம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த போது இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதைப் பார்த்தால் இவர்களின் தேசபக்த முகமூடி மட்டுமல்ல, இவர்களது உண்மையான முகமே கூட அறுந்து தொங்கும். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடாதது மட்டுமன்றி, 1942 இல் பல மாநிலங்களில் இருந்த காங்கிரஸ் அரசாங்கங்கள் ஆங்கிலேய கவர்னர்களால் பதவியிலிருந்து நீக்கப்பட்டபோது, இந்து மகா சபா அந்த அரசாங்கங்களில் பங்கெடுத்துக் கொண்டது.
          அவர்கள் எந்த முஸ்லிம் லீக்கை இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குக் காரணம் என்றார்களோ, அந்த முஸ்லிம் லீக்கோடு இணைந்து சிந்து, வங்காளம், வடமேற்கு மாநிலம் ஆகிய மாநிலங்களில் ஆட்சியைப் பகிர்ந்து கொண்டார்கள். இதுகுறித்து கான்பூரில் நடைபெற்ற இந்து மகா சபையின் 24 ஆவது கூட்டத்தில் தலைமை தாங்கிப் பேசிய வீர சாவர்க்கர் பின்வருமாறு பேசினார். “நடைமுறை அரசியலில் நாம் முன்னேற வேண்டும். அதற்காக இந்து மகா சபா நியாயமான சமரசங்களைச் செய்து கொள்ள வேண்டும். சமீபத்தில் சிந்து மாகாணத்தில் அந்த மாகாண இந்து மகாசபா, முஸ்லிம் லீக் அழைப்பின் பேரில் அவர்களோடு கைகோர்த்து கூட்டணி அரசை நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. வங்காளத்தைப் பற்றி நன்றாகத் தெரியும். முஸ்லிம் லீக்கின் முரட்டுத்தனமான நபர்களோடு காங்கிரஸால் கூட எவ்வளவு பணிந்து போன பிறகும் ஒத்துப்போக முடியவில்லை. தற்போது இந்து மகா சபாவோடு தொடர்பு கொண்டு கூட்டணி அரசை அமைத்திருக்கிறார்கள். அதன் பிரதமராக பஸ்லூல் ஹக் விளங்குகிறார். அந்த அரசாங்கம் இந்து மகா சபையின் தலைவரான டாக்டர். சியாமா பிரசாத் முகர்ஜியின் வழிகாட்டுதலோடு ஓராண்டுக்கும் மேலாக வெற்றிகரமாக இயங்கி வந்திருக்கிறது. இதனால் இரண்டு சமூகங்களுமே பலன் பெற்றிருக்கிறார்கள்.” எந்த தேசப் பிரிவினையைச் சொல்லி, அதற்குக் காரணமான முஸ்லிம் லீக்கைச் சொல்லி இன்றைக்கும் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களோடு கைகோர்த்துக் கொண்டவர்கள்தான் இவர்கள்.
            இதில் வேடிக்கை என்னவென்றால், வங்காள மாகாண சட்டமன்றத்தில் இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளாகப் பிரிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது சியாமா பிரசாத் முகர்ஜி அந்த அரசாங்கத்தில் நிதியமைச்சர். அதன் பிறகும் அந்தப் பொறுப்பில் ஒட்டிக் கொண்டிருந்தார். அவருக்குத் தான் சமீபத்தில் தபால் தலை வெளியிட்டு அவர்கள் கொண்டாடியிருக்கிறார்கள். அவரின் வாரிசுகள் தான், கடந்த ஜனவரி 30-ந் தேதியன்று காந்தியைக் கொன்ற கோட்சேயை, கோட்சேவின் பிறந்த நாளில் கூட அல்ல, காந்தி கொல்லப்பட்ட நாளன்று அவரை நினைவு கூர்ந்து இனிப்பு கொடுத்து கொண்டாடியிருக்கிறார்கள். தேசப் பிதாவின் கொலையைக் கொண்டாடும் வக்கிரப்புத்திக்காரர்கள் தேசபக்தர்கள் என்றும், வாழ்நாள் முழுவதும் சுதந்திரப்போராட்டத்தில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களை தேச விரோதிகள் என்றும் சொல்லுகிற தைரியம் இவர்களுக்கு வந்திருக்கிறது.
           தில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை அவர்கள் தாக்கிவிட்டு பெயர்ப் பலகையின் மீது ‘பாகிஸ்தான் ஏஜெண்டுகள் அலுவலகம்‘ என்று எழுதிவைத்து விட்டுப் போயிருக்கிறார்கள். இந்த வக்கிரப்புத்திக்காரர்களுக்கு தேச பக்தியும் தெரியாது, தேச பக்தர்களை மதிக்கவும் தெரியாது. எந்த ஹபீஸ் சையதின் டுவிட்டர் பக்கத்திலிருந்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக கருத்து வந்தாகச் சொல்லி பாஜக எம்.பி.யான சாக்ஷி மகராஜ் அந்த பல்கலைக்கழகத்தில் இருக்கும் ‘தேச விரோதிகளை’ எல்லாம் தூக்கில் போட சாட்சி வேண்டுமென்கிறாரோ, அந்த ஹபீஸ் சையத்தோடு வைதீக் என்கிற ஒரு நபர் ரகசியமாக இந்தியாவிலிருந்து பயணம் செய்து பாகிஸ்தான் போய் சந்தித்து விட்டு வந்தார். அவர் யார் என்ற கேள்வி எழும்.
           அவரும் இப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் அஜீத் தோவலும் பிரதமரின் முதன்மைச் செயலாளராக இருக்கும் நிருபேந்திர மிஸ்ராவும், பிரதமரின் கூடுதல் முதன்மைச் செயலாளராக இருக்கும் பி.கே. மிஸ்ராவும் ஒரு டிரஸ்ட்டின் உறுப்பினர்களாக இருந்தார்கள். மூலம் எதுவென்பது தெரிந்திருக்கும். இவர்கள் தான் போலி டுவிட்டர் பக்கத்தில் தாங்களே உருவாக்கிய செய்திகளை வைத்துக் கொண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்கிறார்கள். அது தவறு என்று சொன்ன மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது கல்லெறிகிறார்கள்.
          1340 வருடங்கள் சுதந்திரப் போராட்டத்தில் அதன் துவக்கம் முதல் இறுதி வரை துரோகமிழைத்து மட்டுமே வந்த ஒரு கூட்டம், மார்க்சிஸ்ட் கட்சியை தேச விரோதிகள் என்றும், பாகிஸ்தான் ஏஜெண்டுகள் என்றும் கூவித் திரிகிறது.
        அவர்கள் கல்லெறிந்த அந்த அலுவலகத்தில் பணிபுரிந்தவர்கள், நடமாடியவர்கள் பெருமை இவர்களுக்குத் தெரியாது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது அகில இந்திய மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் 422 பேர். இவர்கள் ஒட்டுமொத்தமாக சிறையில் இருந்த காலம் 1340 வருடங்கள் 2 மாதங்கள் 20 நாட்கள். நாட்டு விடுதலையின் போது 20 வயதிற்கும் குறைந்தவர்களை விட்டு விட்டால் ஒவ்வொருவரும் சராசரியாக சிறையில் இருந்த காலம் 5 ஆண்டுகள். ஆங்கில ஆட்சியிலும், அதற்குப் பின்னர் காங்கிரசின் அடக்குமுறை காலத்திலும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த காலம் 348 வருடங்கள், 10 மாதங்கள், 15 நாட்கள். இத்தகைய மகத்தான தலைவர்களின் இயக்க அலுவலகத்தின் மீதுதான் அவர்கள் கல்லெறிந்திருக்கிறார்கள். சுதந்திரம், தேசபக்தி, போராட்டம், தியாகம் என்கிற கற்பூர வாசனைக்கும் தங்களுக்கும் காததூரம் என்பதை மீண்டும் ஒருமுறை மதவெறி சங் பரிவாரம் நிரூபித்திருக்கிறது.

நன்றி : தீக்கதிர் 

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

நாட்டிற்கே வழிகாட்டுகிறது திரிபுரா மாநில அரசு...!


ஒரு அரசாங்கம் எப்படிச் செயல்பட வேண்டும் 
என்று நாட்டிற்கே முன்னுதாரணமாக வழிகாட்டுகிறது 
தோழர். மாணிக் சர்க்கார்  தலைமையிலான் திரிபுரா மாநில அரசு...!

          அண்மையில் கொல்கத்தாவில் நடைபெற்ற  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபன சிறப்பு மாநாட்டில் (பிளீனத்தில்) திரிபுரா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு :
           இடது முன்னணி அரசாங்கத்தின் கீழ், வடகிழக்கில் உள்ள ஒரு சிறிய மாநிலமான திரிபுரா, பல்வேறு முனைகளிலும் சக்திவாய்ந்த முறையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இடது முன்னணி அரசாங்கம் தன்னுடைய மக்கள் ஆதரவு கொள்கைகள் மூலமாக, மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தியிருப்பது மட்டுமல்லாமல், மிகவும் குறைவான வள ஆதாரங்களே இருந்தபோதிலும் அதில்கூட மக்களுக்கு ஆதரவாக எந்தவிதமான மாற்றுக் கொள்கைகளைப் பின்பற்ற முடியும் என்பதைக் காட்டியிருக்கிறது. திரிபுரா மாநிலம் 1978இலிருந்து இடது முன்னணி அரசாங்கத்தைப் பெற்றிருக்கிறது. இடது முன்னணி அரசாங்கத்தின் முதல் இரு ஆட்சிக்காலத்தில், மாபெரும் இரு சாதனைகளை அது நடத்தி இருக்கிறது. நிலச்சீர்திருத்தங்களை அமல்படுத்தியதும், அரசமைப்புச் சட்டத்தின்கீழ் பழங்குடியின மக்களை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஆறாவது அட்டவணையின்கீழ் திரிபுரா பழங்குடியினப் பகுதிகள் சுயாட்சி மாவட்டக் கவுன்சில் அமைத்ததுமே மேற்படி இரு பெரும் சாதனைகளாகும்.
              1988-93 ஆண்டு காலத்தில் தேர்தலில் மோசடி நடத்தி, ஓர் அரைப்பாசிச பயங்கர ஆட்சி (காங்கிரஸ் ஆட்சி) நடத்தப்பட்ட காலத்திற்குப்பின், நடைபெற்ற தேர்தலில் இடது முன்னணி மீண்டும் ஆட்சி அமைத்தது. அதன்பின் நடைபெற்ற தேர்தல்கள் அனைத்திலும் இடது முன்னணி மீது மக்கள் அளவிடற்கரிய நம்பிக்கைகளை வெளிப்படுத்தினார்கள். கடந்த 22 ஆண்டுகள் மாநிலத்தின் வளர்ச்சியில் அபரிமிதமான முன்னேற்றத்தை இடதுமுன்னணி அரசு ஏற்படுத்தி இருக்கிறது. முன்மாதிரி மாநிலம் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்து நின்று முறியடித்து முன்னேறிய முன்மாதிரியான மாநிலமாக திரிபுரா மாறி இருக்கிறது. ஒருகாலத்தில் ஏகாதிபத்தியத்தின் ஏஜெண்டுகளால் நிதிஉதவி மற்றும் ஆதரவுடன் தீவிரவாதிகளின் வன்முறைச் சம்பவங்கள் மாநிலத்தையே சிதைத்து சின்னாபின்னமாக்கி இருந்தது.
         அவற்றையெல்லாம் மக்களின் ஒற்றுமையுடன் உறுதியுடன் எதிர்த்து நின்று அமைதியை நிலைநிறுத்திய ஒரு முன்மாதிரியான மாநிலமாக உருவாகியிருக்கிறது. இத்தகைய அமைதி நிலைமையை நிர்வாக உறுதியால் மட்டும் எய்தியதாகக் கொள்ள முடியாது. மாறாக, மக்களை அரசியல் ரீதியாக அணி திரட்டியிருப்பதும் குறிப்பாக பழங்குடியினர் பகுதிகளில் வளர்ச்சி நடவடிக்கைகளை அமல்படுத்தி இருப்பதுமே காரணங்களாகும். சுயாட்சி மாவட்டக் கவுன்சிலுக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சிகள், பஞ்சாயத்துகள், கிராமக் குழுக்களிடையே அதிகாரங்களைப் பரவலாக்கியதன் மூலம் அரசியல் ஜனநாயகம் ஆழமாக வேரூன்றி இருப்பதும், வளர்ச்சி நடவடிக்கைகளில் மக்கள்ஆர்வத்துடன் பங்களிப்பினைச் செய்வதற்கு வழிவகுத்தது.

எழுத்தறிவில் சாதனை                  

         இடதுமுன்னணி அரசாங்கம் பல்வேறு முனைகளிலும் மகத்தான சாதனைகளைப் பதிவு செய்திருக்கிறது. குறிப்பாக, மனிதவள வளர்ச்சியில் அது மிகவும் உன்னதமான முறையில் அமைந்திருக்கிறது. நாட்டில் எழுத்தறிவு பெற்றோர் விகிதம் 97 சதவீதத்தை எட்டி, நாட்டில் உயர்ந்த அளவிற்கு கல்வியறிவு பெற்றோர் மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. பெண்களில் எழுத்தறிவு பெற்றோர் விகிதம் 95.71 சதவீதமாகும். இலவச பாடப் புத்தகங்களுடன் பள்ளிக் கல்வியை கல்லூரி வரைக்கும் இலவசமாக்கி இருப்பதன் மூலம் திரிபுரா அனைவருக்கும் இடைநிலைக் கல்விவரை உத்தரவாதப்படுத்தியிருக்கிறது. 

மனிதவள வளர்ச்சி                   

         மனிதவள வளர்ச்சி குறித்த இதர அட்டவணைகளும் மக்களின் தரமான வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன. குழந்தைகள் இறப்பு விகிதம் (ஐகேயவே ஆடிசவயடவைல) அகில இந்திய அளவில் 40 ஆக இருக்கும் அதே சமயத்தில், திரிபுராவில் அது 26 மட்டும்தான். பிறப்பு விகிதம் அகில இந்திய அளவில் 21.4 சதவீதமாக இருக்கக்கூடிய அதே சமயத்தில் திரிபுராவில் அது 13.7 சதவீதம் மட்டுமேயாகும். அதேபோன்று இறப்பு விகிதம் அகில இந்திய அளவில் 7 சதவீதமாக இருக்கக்கூடிய அதே சமயத்தில் திரிபுராவில் அது 4.7 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. உள்கட்டமைப்பு வசதிகள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தபோதிலும் மாநிலத்தின் பூகோள அமைப்பு மிகவும் சிக்கலானதாக அமைந்துள்ள போதிலும், திரிபுரா இத்தகு சாதனைகளை எய்தி இருக்கிறது.

அனைவருக்கும் பொது விநியோகம்                 

          திரிபுரா, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்துக் குடும்பங்களையும் கொண்டுவந்து உணவுப் பாதுகாப்பை எய்தி இருக்கிறது. மக்கள் தொகையில் பெரும்பகுதியினருக்கு கிலோ ஒன்றிற்கு 2 ரூபாய் விலையில் அரிசி வழங்கப்படும் அதே சமயத்தில், இதரர்களுக்கும் அரிசி, வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கான விலைவிகிதத்தில் அளிக்கப்படுகிறது.கிராமப்புற வேலைத்திட்டத்தில் சாதனை திரிபுரா அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களின் மூலம் வேளாண்மை, காடு வளர்ப்பு, மீன்வளம், தோட்டக்கலை மற்றும் கைவினைப் பொருட்கள் உற்பத்தி முதலானவை அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன. இத்துடன் திரிபுரா, மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை அமல்படுத்துவதில் நாட்டிலேயே உயர்ந்தநிலையில் இருப்பதை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. 2013-14ஆம் ஆண்டில், கிராமப்புற மக்களுக்கு வேலை அளித்த நாட்கள் அகில இந்திய அளவில் சராசரி 38 நாட்கள் மட்டுமே என்று இருக்கக்கூடிய அதே சமயத்தில், திரிபுராவில் அது 88 நாட்களாகும். நகர்ப்புற வேலைத்திட்டம் அறிமுகம் நாட்டிலேயே முதன்முதலாக நகர்ப்புறங்களில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கும் குறைந்தபட்சம் 75 நாட்களுக்கு ஊதியத்துடன் வேலை அளிக்கப்பட்டிருக்கிறது.
    வன உரிமைகள் சட்டத்தின்கீழ் மக்களுக்கு நில உரிமை அளிக்கப்பட்டிருப்பதிலும் திரிபுரா உயர்ந்த இடத்தில் இருக்கிறது. 1 லட்சத்து 24 ஆயிரத்து 541 நபர்களுக்கு நிலப் பட்டாக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவர்களில் 99 சதவீதத்தினர் பழங்குடியினர். உள் கட்டமைப்பு விரிவாக்கம் கடும் சிரமங்கள் இருந்தபோதிலும், இடது முன்னணி அரசாங்கம் உள்கட்டமைப்பு வசதிகளை விரிவாக்கி இருக்கின்றது.
           மொத்தம் 8,313 மக்கள் வாழும் பகுதிகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் மின்சாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. பாசனத்திற்குரிய நிலங்களில் 95 சதவீதத்திற்கும் அதிகமான அளவு பாசனவசதிகளைப் பெற்றிருக்கின்றன. முன்னெப்போதும் கற்பனை செய்யமுடியாத அளவிற்கு சாலைப்போக்குவரத்து வசதிகள் உள்கிராமங்கள் வரை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
               ஏழைகளின் அரசு மக்களின் வாழ்வாதாரங்களின் மீது நவீன தாராளமயக் கொள்கைகள் கடும் தாக்குதல்களைத் தொடுத்துள்ள நிலையில், இடது முன்னணி அரசாங்கம் அணிதிரட்டப்படாத ஏழைத் தொழிலாளர்கள் பக்கம் நின்று அவர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை விரிவாக்கி இருக்கிறது. 27 விதமான ஓய்வூதியத் திட்டங்கள் திரிபுராவில் வீட்டுவேலைகள் செய்யும் பெண் தொழிலாளர்கள், ஊனமுற்றோர், விதவைகள், கைவிடப்பட்ட பெண்கள், ரிக்ஷா இழுக்கும் தொழிலாளர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள், மீனவர்கள் உட்பட அனைத்துத் தரப்பினருக்கும் நலம் பயக்கும் விதத்தில் 27 விதமான ஓய்வூதியத்திட்டங்கள் மாநில அரசால் அமல்படுத்தப் பட்டு வருகின்றன.
           அதுமட்டுமல்ல, திருநங்கையர் மற்றும் எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் ஓய்வூதியத் திட்டங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. தலித்துகள், இதர பிற்பட்ட வகுப்பினர் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கும் பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. 

உள்ளாட்சிகளில் சரிபாதி பெண்கள்                 

          உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 57 சதவீதம் அளவிற்கு உயர்ந்து நிற்கிறது. பொது வாழ்வின் அனைத்து முனைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதையே இது பிரதிபலிக்கிறது. மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சிறந்த வாய்ப்புகளை அளித்திட இடது முன்னணி அரசாங்கம் திட்டமிட்டமுறையில் விடாது முயற்சிகளை மேற்கொண்டு வருவது அவர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.

மக்கள் நலனுக்கான மாற்றுக்கொள்கைகள்                 

       அகில இந்திய அளவில் கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதன் காரணமாக ஏற்பட்டுள்ள வரையறைகளுக்கு உட்பட்டும், ஏற்றத்தாழ்வான கூட்டாட்சி அமைப்பிலும் மற்றும் நிதி நிலைமை மிகவும் சுருங்கியநிலையில் இருந்தபோதிலும்கூட, இடது முன்னணி அரசாங்கம் தன்னுடைய மாற்றுக் கொள்கைகளின் அடிப்படையில் இவற்றை அளித்திட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கக்கூடிய விதத்தில் முன்வைத்துள்ள மக்கள் நலன் காக்கும் மாற்றுக்கொள்கைகளை முன்னெடுத்துச் சென்றிட திரிபுரா மாநில இடதுமுன்னணி அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் உத்வேகம் அளிக்கக்கூடியவைகளாக அமைந்துள்ளன. சதி செய்யும் பிற்போக்கு சக்திகள்இருப்பினும் சுயதிருப்தி மனப்பான்மைக்கு இடம் அளித்திடவில்லை. திரிபுரா மாநிலத்தில் இத்தகைய அளப்பரிய முன்னேற்றத்திற்கு அடிப்படைக்காரணமாக விளங்கும் பழங்குடியினர் மற்றும் பழங்குடியினரல்லாதவர் இடையே நிகழும் ஒற்றுமையைக் குலைத்திட திரிபுராவிற்கு உள்ளேயும் வெளியேயும் இயங்கும் பிற்போக்கு சக்திகள் சமயம் பார்த்துக்கொண்டிருக்கின்றன. 
             எனவே, இத்தகைய சதிவேலைகள் எதுவரினும் அதனை உடனடியாகத் தடுத்துநிறுத்தக்கூடிய விதத்தில் மக்களை அணி திரட்டுவதில் விழிப்புடன் இருக்க வேண்டிய தேவை இருக்கிறது. கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் வாழும் திரிபுரா மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீதும், இடது முன்னணி மீதும் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்கள் உட்பட தொடர்ந்து நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் அளவிடற்கரிய நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் பிரதிபலித்துள்ளனர்.
               மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபன சிறப்பு மாநாடு (பிளீனம்) திரிபுரா மக்கள் மற்றும் இடதுமுன்னணி அரசாங்கத்திற்குத் தன் மனமார்ந்த ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது. நாட்டின் அனைத்துப்பகுதி மக்களுக்கும் இந்த சாதனைகளை கொண்டுசெல்லுமாறு நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிக் கிளைகளையும் கேட்டுக்கொள்கிறது. 
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

நன்றி :
தீக்கதிர் 

வியாழன், 24 டிசம்பர், 2015

மக்கள் தான் நமது உயிர்...!







 தோழர். பிரகாஷ் காரத்                                          
 அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்          
 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி                       

          
     
              கொல்கத்தாவில் டிசம்பர் 27ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை கட்சி அமைப்பு குறித்த சிறப்பு மாநாட்டை (ஸ்தாபன பிளீனம்) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திட உள்ளது. தேசத்தில் நிகழ்ந்து வரும் வலதுசாரி சக்திகளின் தாக்குதலை எதிர்கொள்வதற்கு ஏதுவாக கட்சியை எவ்வாறு வலிமை மிக்க அமைப்பாக மாற்றுவது என்பது குறித்து விவாதிப்பது தான் இந்த சிறப்பு மாநாட்டின் நோக்கம். நவீன தாராளமயமாக்கல் மற்றும் வகுப்புவாதம், எதேச்சதிகாரம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வலதுசாரி சக்திகளின் தாக்குதல்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21ஆவது அகில இந்திய மாநாட்டில் உருவாக்கப்பட்ட அரசியல், நடைமுறை உத்தி அழைப்பு விடுத்தது. இத்தகைய சக்திகளை எதிர்த்து வலுவுடன் போராட கட்சி அமைப்பை வலிமை மிக்கதாக கட்டமைப்பது அவசியமாகும்.
              கட்சியின் 21ஆவது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் நடைமுறை உத்தியானது, இடது மற்றும் ஜனநாயக முன்னணியை உருவாக்கும் கடமையை முன்னிறுத்தியது. கட்சியின் சுயேட்சையான வலிமையை பெருமளவில் அதிகப்படுத்துவது இதற்கு அவசியமாகிறது. கட்சி அமைப்பை ஆற்றல் மிக்கதாக உருவாக்கினால்தான் வர்க்க மற்றும் வெகுமக்கள் போராட்டத்தை முனைப்பாக முன்னெடுத்துச் செல்ல முடியும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் பின்னடைவுகளை சந்தித்துள்ள நிலையில், நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது அதன் வெகுஜன செல்வாக்கு குறைந்துள்ள நிலையில் கட்சியின் சிறப்பு மாநாடு நடைபெறுகிறது. அகில இந்திய அளவில் கம்யூனிஸ்ட் கட்சியை வெகுமக்கள் அடித்தளத்துடன் வலிமைமிக்கதாக கட்டமைப்பது எப்படி என்பது குறித்து சிறப்பு மாநாடு விவாதிக்க உள்ளது. ‘மாஸ் லைன்‘ (வெகு மக்களுடன் நெருக்கமான தொடர்பு) என்பதை நிறைவேற்றுவதற்கு வெகு மக்களுடன் உயிரோட்டமான தொடர்பு மற்றும் வர்க்க மற்றும் வெகுஜனப் போராட்டங்களை வளர்த்தெடுப்பது அவசியமான ஒன்றாகும்.

‘மாஸ்லைன்’                        

                 ‘மாஸ்லைன்’ என்ற கோட்பாட்டை நிறைவேற்ற கட்சியின் அடி முதல் நுனி வரை செயல்படும் விதத்தில் பெருமளவு மாற்றம் தேவைப்படுகிறது. மக்களிடம் செல்வது, மக்களிடமிருந்து கற்றுத் தேர்வது, அந்த அனுபவ திரட்சியுடன் மீண்டும் மக்களிடம் செல்வது என்பதை போதனையாக கொண்டு பணியாற்றுகிற விதத்தில் பெருமளவு மாற்றம் தேவைப்படுகிறது. இதன் பொருள் என்னவென்றால் சலிப்பூட்டுகிற, மாற்றம் இல்லாத, ஒரே மாதிரியான வேலை முறை மற்றும் பழக்கமாக மாறிவிட்ட பணிமுறை என்பதை விட்டொழிப்பது என்பதாகும். நவீன தாராளமயமாக்கல் கொள்கை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டதால் பல்வேறு வர்க்கப் பிரிவுகளின் சமூகப் பொருளாதார நிலையில் பெருமளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. உழைக்கும் வர்க்கம், விவசாயிகள், கிராமப்புற தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடையே இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஆய்ந்தறிந்து அதற்கேற்ப புதிய முழக்கங்களும் நடைமுறை உத்திகளும், அமைப்பின் போராட்ட வடிவங்களும் உருவாக்கப்பட்டு வர்க்க, வெகுஜன இயக்கங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். கட்சியின் சிறப்பு மாநாடு இது குறித்து விவாதிக்கும்.

மிகப் பெரிய இடதுசாரிக் கட்சி                   

        மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவின் மிகப்பெரிய இடதுசாரி கட்சியாகும். 10லட்சத்து 48 ஆயிரம் பேர் கட்சியில் உறுப்பினர்களாக உள்ளனர். அடிப்படை அலகுகளாக 90 ஆயிரம் கிளைகள், 285 மாவட்டக் குழுக்கள், 23 மாநிலக் குழுக்கள் மற்றும் மூன்று மாநில அமைப்புக் குழுக்கள் என கட்சி விரிந்து பரந்து காலூன்றி உள்ளது. 10ஆயிரத்து 350 பேர் கட்சியின் முழுநேர ஊழியர்களாக பணியாற்றுகின்றனர். இது கட்சியின் அமைப்பு ரீதியான சொத்தாகும். அமைப்பின் வலிமை மற்றும் பலவீனங்களை சிறப்பு மாநாடு ஆய்வு செய்து, கட்சி அமைப்பை மேலும் சீர் செய்வதற்கான நடவடிக்கைகளை தீர்மானிக்கும். குறிப்பாக, கட்சி உறுப்பினர்களின் தரம் மற்றும் அரசியல் - தத்துவார்த்த நிலையை உயர்த்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அரசியல் - தத்துவார்த்த நிலையை உயர்த்துவது மட்டுமின்றி, கட்சியின் புரட்சிகர குணத்தை நிலைநிறுத்தவும் வேண்டியுள்ளது. இதற்கு அடிப்படை வர்க்கங்களிலிருந்தும், பெண்கள் மற்றும் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட பிரிவுகளிலிருந்தும் ஊழியர்களை உருவாக்கி கட்சி அமைப்புகளுக்கு உயர்த்த வேண்டியுள்ளது. கட்சிக்குள் இளைஞர்களை ஈர்க்கும் பணிக்கு சிறப்பு மாநாடு தனித்த கவனம் செலுத்துவதோடு கட்சி உறுப்பினர்களில் இளைஞர்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிப்பது குறித்தும் விவாதிக்க உள்ளது.

லெனினியக் கோட்பாடே வழிகாட்டி                   

        மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பது லெனினிய கோட்பாட்டு அடிப்படையிலான ஸ்தாபன விதிகளின்படி செயல்படுவதாகும். அதாவது ஜனநாயக மத்தியத்துவ கோட்பாடு மையமானதாக இருக்கும். ஜனநாயக மத்தியத்துவம் என்பது மத்தியத்துவம் மற்றும் ஜனநாயகத்தின் கலவையாகும். இதை நடைமுறைப்படுத்துவதற்கு தொடர்ச்சியான போராட்டம் தேவைப்படும். இப்போது உள்ள ஸ்தாபன முறையில் தேவைப்படுவது என்னவென்றால், உள்கட்சி ஜனநாயகத்தை பலப்படுத்துவதன் மூலம் ஜனநாயக மத்தியத்துவத்தை முறையாக செயல்பட வைப்பதாகும். ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடு கட்சிக்குள் எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்து சிறப்பு மாநாடு விவாதித்து, திரிபுகளை சீர்செய்யவும் ஜனநாயக மத்தியத்துவம் மீறப்படுவதை ஒழுங்குபடுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கும்.

தத்துவார்த்தப் போராட்டம்                    

        கட்சியின் ஸ்தாபனப் பணியில் தத்துவார்த்த போராட்டம் என்பது முக்கியமான பகுதியாகும். மார்க்சிய - லெனினியக் கோட்பாடுகளை அடிப்படையாக  கொண்ட கட்சி என்ற முறையில், நம்முடைய சமூகத்தில் நீடித்திருக்கும் முதலாளித்துவம் மற்றும் முதலாளித்துவத்திற்கு முந்தைய சித்தாந்தங்களின் தாக்கங்களை எதிர்த்து அயர்வற்ற போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது. ஏகாதிபத்திய உலகமயமாக்கல் மற்றும் நவீன தாராளமயமாக்கல் நம்முன் புதிய சவால்களை உருவாக்கியுள்ளது. 1990களில் சோசலிசத்திற்கு பின்னடைவு ஏற்பட்ட பின்னணியில் இத்தகைய போக்கு மேலும் தீவிரமடைந்துள்ளது. நவீன தாராளமயமாக்கல் மதிப்பீடுகள் சமூகத்தில் மேலோங்கியுள்ள நிலையில், பெரும் கார்ப்பரேட் ஊடகங்கள் இதை மேலும் பரவலாக்குகின்றன. எனவே கட்சி தனது ஊழியர்களை தத்துவார்த்த ரீதியாக மேலும் வளர்த்தெடுக்க வேண்டியுள்ளது. கட்சிக்குள் தத்துவார்த்த ரீதியிலான பணிகளை மேற்கொள்ள கட்சிக் கல்விமுறையை மேம்படுத்தி புத்துயிரூட்ட வேண்டியுள்ளது. தத்துவார்த்த, சமூக கல்வி மற்றும் பண்பாட்டுத்தளத்தில் வகுப்புவாதத்தை எதிர்த்துப் போராட திட்டவட்டமான நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் சிறப்பு மாநாடு விவாதிக்க உள்ளது. வகுப்புவாத சித்தாந்தத்தை எதிர்த்து முறியடிக்கவும் மதச்சார்பற்ற ஜனநாயக விழுமியங்களை உயர்த்திப் பிடிக்கவும் கட்சியும், தொழிற்சங்கங்களும், வெகுஜன அமைப்புகளும், சமூக மற்றும் பண்பாட்டு துறைசார் நடவடிக்கைகளை உருவாக்க வேண்டியுள்ளது.

நகர்ப்புற ஏழைகளை நோக்கி...                   

                சிறப்பு மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ள மற்றொரு முக்கியமான பகுதி வர்க்க மற்றும் வெகுஜன அமைப்புகள் சுயேட்சையாகவும், ஜனநாயக ரீதியிலும் இயங்குவதற்கான நடைமுறைகளை வலுப்படுத்துவது ஆகும். வெகுஜன அமைப்புகளுக்குள் கம்யூனிஸ்ட்டுகள் அரசியல் ரீதியிலான பணிகளை மேற்கொள்வது என்பது, அந்த அமைப்புகளுக்குள் அணிதிரளும் மக்களை அரசியல்படுத்துவது என்பதாகும். சமூகப் பிரச்சனைகளை கையில் எடுப்பதிலும் சாதிய ஒடுக்குமுறை மற்றும் பாரபட்சங்களுக்கு எதிராக போராடுவதிலும் கட்சி முனைப்பாக பங்காற்ற வேண்டும். பழங்குடியின மக்கள், தலித் மக்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் மத்தியில் பணியாற்றத்தக்க வகையில் அமைப்புகளை உருவாக்குவதற்கு முன்முயற்சி எடுக்கப்பட வேண்டும். நகர்ப்புற பகுதிகளில் குறிப்பாக, நகர்ப்புற ஏழை மக்கள் மத்தியில் பணியாற்ற புதிய முன்முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடியதிலும், உழைக்கும் மக்களுக்கான அமைப்புகளை கட்டமைத்ததிலும் கம்யூனிஸ்டுகளுக்கு பெருமைமிகு பாரம்பரிய வரலாறு உண்டு. மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்ததற்காக பல்வேறு காலகட்டங்களில் கொடூரமான அடக்குமுறைகளை கம்யூனிஸ்டுகள் எதிர்கொண்டுள்ளனர். ஆயினும், நவீன தாராளமயமாக்கலுக்கு எதிராகவும் வகுப்புவாதத்திற்கு எதிராகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களைத் திரட்டுவது என்பது தடைபடவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி இயக்கத்திற்கு வலுவான அடித்தளத்தைக் கொண்ட மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் கொடூரமான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இத்தகைய தாக்குதல்களை எதிர்கொண்டவாறு மக்களுடன் ஜீவிதமான தொடர்பை பேணிக்கொண்டு அவர்களுக்காக கட்சி போராடி வருகிறது. 
         ஜனநாயகம் மற்றும் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான போராட்டத்தில் கொல்கத்தா சிறப்பு மாநாடு ஒரு மைல்கல்லாக திகழும். வலிமை மிகுந்த, நாடு தழுவிய வெகுஜன அடித்தளத்துடன் அகில இந்திய அளவில் ஆற்றல் மிகுந்த கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவதற்கான தெளிவான திசை வழியை கொல்கத்தா சிறப்பு மாநாடு வகுத்துத்தரும்.

தமிழில்: மதுக்கூர் இராமலிங்கம்
நன்றி :
தீக்கதிர் 

புதன், 18 நவம்பர், 2015

வெள்ளம் கடுமையாக பாதித்த கடலூர் மாவட்டத்தை தோழர்.ஜி.ஆர் பார்வை...!

                மக்கள் நலப்பணியில் மார்க்சிஸ்ட்டுகள்...!            


அண்மையில் பெய்த மழையினால் வெள்ளம் பெருக்கெடுத்து கடுமையாக பாதித்த கடலூர் மாவட்டத்திலுள்ள பெரியகாட்டுப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளரும், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான தோழர். ஜி.ராமகிருஷ்ணன் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் அம்மக்களுக்கு பாத்திரங்கள், அரிசி, போர்வை போன்ற நிவாரணப்பொருட்களை வழங்கினார். அரசு செய்யவேண்டிய இந்த பணிகளை எந்த ஒரு பிரதிபலனும் எதிர்ப்பார்க்காமல் தனியொரு அரசியல் கட்சி செய்வது என்பது பாராட்டுதற்குரியது.  













ஞாயிறு, 25 அக்டோபர், 2015

ஓடோடிச்சென்று ஆறுதல் சொன்ன மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி


                   இந்திய தலைநகரிலிருந்து முப்பதே கிலோமீட்டர் தொலைவிலுள்ள 
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஃபரிதாபாத்தில் ஜிதேந்திரகுமார் மற்றும் அவரது மனைவி ரேகா ஆகிய தலித் குடும்பத்தினரின் வீட்டை உயர்சாதியை சேர்ந்தவர்கள் சென்ற வாரம் மிருகத்தனமாக இரக்கமின்றி  தீயிட்டுக் கொளுத்தினர். வீடு கொழுந்துவிட்டு எரிந்ததில் உள்ளே இருந்த அந்த தம்பதியனரின் மூன்று வயது மற்றும் பதினொன்றே மாதங்கள் ஆன  இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உடல் கருகி இறந்தனர். அந்த குழந்தைகளோடு வீட்டிலிருந்த அந்த தம்பதியினர் இருவரும் பலத்த தீக்காயத்துடன் உயிர் தப்பினர். 
        தலைநகருக்கு அருகிலேயே நடந்த இந்த சம்பவம் பற்றிய செய்தி நாடு முழுதும் காட்டுத்தீயாக பரவியது. இந்த கோரச்சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டவுடனேயே   தோழர். பிருந்தா காரத் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குழுவினர்  சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். ஆனால் சம்பவம் நடைபெற்ற நாளிலிருந்து இன்று வரையில், பிரதமரோ, மத்திய அமைச்சர்களோ, ஹரியானா முதலமைச்சரோ, அவரது அமைச்சர்களோ அல்லது வேறு கட்சியை சேர்ந்த தலைவர்களோ அல்லது குழுக்களோ பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்திக்கவுமில்லை அல்லது ஆறுதல் கூறவுமில்லை என்பது தான் உண்மை.  

ஞாயிறு, 10 மே, 2015

புதுச்சேரியில் வளர்ந்துவரும் தீண்டாமை வன்கொடுமைகள்...!


               இந்தியா அரசியல் விடுதலை பெற்று 67 ஆண்டுகளை கடந்த பிறகும், தீண்டாமை நீங்கி சமத்துவ சமநிலை கொண்ட சமூகவிடுதலை என்பதற்காக நாளுக்கு நாள் போராடிக்கொண்டே தான் இருக்கவேண்டியிருக்கிறது. தீண்டாமையின் வடிவங்கள் மாறாமல் இடத்திற்கு இடம் பலவகைகளில்   விஸ்வரூபம் எடுத்துக்கொண்டே இருக்கிறது. தலித்  மக்களின் பொருளாதார வளர்ச்சிகளை பொறுத்துக்கொள்ள முடியாத ஆதிக்கசாதியினர், தீண்டாமை ஒழிந்துவிடாமல் திட்டம்போட்டு தீனிப்போட்டு வளர்த்துகொண்டு வருகிறார்கள் என்பது தான் உண்மை. 
          புதுச்சேரியின் மேற்குப் பகுதியில் உள்ள நெட்டப்பாக்கம் சட்டமன்ற (தனி) தொகுதியில் மடுகரை என்ற ஆதிக்கசாதியினர்  ஆதிக்கம் செலுத்தும் கிராமம் ஒன்று உள்ளது. இங்குள்ள கூத்தாண்டவர் கோயிலில் கடந்த ஒரு வார காலமாக கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மூன்று நாட்களுக்கு முன்பு சென்ற ஆறாம் தேதியன்று தேர்த்திருவிழா நடைபெற்றது. கூத்தாண்டவர் சாமியும் தேரோட்டம் காண தேரில் அமர்ந்துவிட்டார், தேரை இழுக்க வடமும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கே அந்த தேரை வடம்பிடித்து இழுப்பதற்கு அந்த தொகுதியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் திரு.பெரியசாமி அங்கு வந்தார். அவர் வடம் பிடிக்க அதன் அருகில் வரும்போதே ஆதிக்கசாதியை சார்ந்த ஒருவன்  ''பறையன் எல்லாம் வடம் பிடிக்க அனுமதிக்கமாட்டோம்'' என்று வெறித்தனத்துடன் கூவியிருக்கிறான். அந்த கோயில் அலுவலரோ ''நாங்க தான் உங்களுக்கு அழைப்பே தரவில்லையே. நீங்க ஏன் இங்க வந்தீங்க...?'' என்று கொக்கரித்திருக்கிறான். ''நான் இந்த தொகுதி எம்.எல்.ஏ'' என்று சொல்லி அவர்கள் தடையையும்  மீறி அவரும் அவரோடு  வந்த மற்ற  தலித் நண்பர்களும்  சேர்ந்து வடம் பிடிக்க முயற்சித்தபோது, அங்கு கூடியிருந்த ஆதிக்கசாதியினர் அந்த சட்டமன்ற உறுப்பினரை தாக்கி கீழே தள்ளிவிட்டிருக்கின்றனர்.
              அமைதிப்படுத்த வேண்டிய அங்கிருந்த காவல்துறையினரோ சட்டமன்ற உறுப்பினரோடு வந்திருந்த தலித் மக்கள் மீது தடியடி நடத்தி கலைத்திருக்கின்றனர். அதிமுகவை சேர்ந்த அந்த சட்டமன்ற உறுப்பினர் ஒரு தலித்  என்பதாலேயே அவருக்கு அழைப்பு வழங்கப்படவில்லை என்பதும்,  அழைப்பு இல்லாமலேயே கோயிலுக்கு வந்தும் வடம் பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டார் என்பதும் யாராலும் மறைக்கமுடியாத  உண்மை. ஆனால் சட்டமன்றத்தில் இந்த பிரச்சனையை பாதிக்கப்பட்ட அந்த எம்.எல்.ஏ சார்ந்த கட்சியான அதிமுகவோ சட்டமன்றத்தில் இப்பிரச்சனையைப் பற்றி எழுப்பிய போது பேரவைத்தலைவரும் அரசும் இதை தலித்க்கு எதிரான  ஒரு   தீண்டாமை பிரச்சனை என்பதை மறைத்துவிட்டு  ரங்கசாமி தலைமையிலான என்.ஆர் காங்கிரசுக்கும், அதிமுகவுக்குமான அரசியல் பிரச்சனை, அரசியல்ல இதெல்லாம் சகஜம் என்று பதிலளித்திருக்கிறார்கள். அதிமுக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே, இந்த பிரச்சனை என்பது இவர்கள் இரண்டு கட்சிகளுக்கும் இடையேயான மோதல் என்பது போல் தான் சித்தரிக்கப்படுகிறதே தவிர தீண்டாமையை கொழுந்துவிட்டு எரியச்செய்யும் சாதிய மோதல் என்பதை இருக்கட்சிகளுமே திட்டமிட்டு மறைக்கிறார்கள்.
          புதுச்சேரியில் இது ஏதோ ஒரு பிரச்சனை தானே என்று எண்ணாதீர்கள். புதுச்சேரி சட்டமன்றத்தேர்தல் நெருங்க நெருங்க, தீண்டாமையை மையப்படுத்திய இது போன்ற சாதிய பிரச்சனைகள் புதுச்சேரி கிராமப்புறங்களில் புற்றீசல்கள் போல் கிளம்பிக்கொண்டே தான் இருக்கிறது.
            அண்மையில் மதகடிப்பட்டு கலிதீர்த்தால்குப்பத்தில் திரௌபதையம்மன் கோயிலில் அங்குள்ள தலித் மக்கள் நுழைவது தடுக்கப்பட்டது. அதை எதிர்த்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்   தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் மறுக்கப்பட்ட தலித் மக்களுடன்     ஆலய நுழைவு போராட்டம் என தேதி குறிப்பிட்டு அறிவித்தார்கள். அதை கேட்டு  ஆத்திரமடைந்த ஆதிக்கசாதியினர் கோயிலுக்கு அருகிலிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை  
தீயிட்டு கொளுத்தினர் என்பதை யாராலும் மறக்கமுடியாது. இங்கே சாதிய வெறுப்புணர்ச்சி இன்னும் புகைந்துகொண்டு தான் இருக்கிறது.
                 அதேபோல் இன்னொரு சம்பவமும் வேறொரு இடத்தில் அரங்கேறியிருக்கிறது. ஒவ்வொரு  மாசிமகத் திருவிழாவின் போதும், திருக்காஞ்சியை  சுற்றியுள்ள கிராமத்து கோயில்களிலிருந்து சாமிகள் எல்லாம் புறப்பட்டு தலித் மக்கள் வாழும் சேரியை கடந்து தான் ஆற்றுக்கு செல்வது என்பது பல ஆண்டுகளாக  எல்லோரும் ஏற்றுக்கொண்ட ஒரு மரபாக -  வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. அனால் இந்த ஆண்டு மட்டும் சேரி வழியாக செல்ல முடியாது என்று சாமிகள் சொல்லவில்லை. சாமியை தூக்கிச்செல்லும் ஆசாமிகள் சொன்னார்கள்.  சென்ற மாசிமகத் திருவிழாவின் போது இந்த மரபு மீறப்பட்டு, சாமி ஆற்றில் இறங்குவதற்கு சேரி வழியாக செல்வதற்கு பதிலாக இடையிலேயே மாற்றுப்பாதை போடப்பட்டு சேரியை புறக்கணித்துவிட்டு சாமியை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இந்த தேவையற்ற மரபு மீறலை எதிர்த்தும் மார்க்சிஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் போர் குரல் எழுப்பியிருக்கிறது. என்றாலும்  அங்கு இந்த பிரச்சனையும்  இன்னும்  புகைந்துகொண்டு இருக்கிறது.
               இப்படியாக புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு இது போன்று சாதிய தீயை ஊதிவிட்டு, மக்களை உசுப்பேற்றி வருகிறார்கள்  என்பதையும் புதுச்சேரி  மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். மக்களின் ஒற்றுமையை குலைத்து அதன் மூலம் ஓட்டுகளை பெற்றுவிடலாம் என்று கனவு காண்கிறார்கள். அந்த கனவு ஒரு போதும் பலிக்காது.

ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

வீரஞ்செறிந்த போராட்டங்களை நோக்கி முன்னேறுவோம்...!


கட்டுரையாளர் : சீத்தாராம் யெச்சூரி,          
                                     பொதுச்செயலாளர்,               
                                     மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி                     
             மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தனது 21-வது அகில இந்திய மாநாட்டில், இந்திய ஆளும் வர்க்கங்களால் பின்பற்றப்படும் தற்போதைய கொள்கைகளுக்கு மாற்றாக திட்டத்தின் அடிப்படையில், தற்போதைய முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ வர்க்க ஆட்சியை, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான மக்கள் ஜனநாயக முன்னணியால் அகற்றும் குறிக்கோளுடன், கட்சியையும், வர்க்க-வெகுஜன அமைப்புகளையும் வலுப்படுத்துவதற்கான உறுதியையும், இடது ஜனநாயக முன்னணியை உருவாக்குவதற்காக வலுவான மக்கள் போராட்டங்களை தீவிரப்படுத்துவதற்கான உறுதியையும் இரட்டிப்பாக்கியுள்ளது.
                  நாட்டு மக்களின் வாழ்வாதாரங்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள பன்முகத் தாக்குதல்களிலிருந்து அவர்களை விடுவித்திட இது ஒன்றே வழியாகும்.

முழுமையான உட்கட்சி விவாதம்                

           கட்சியின் மாநாடு, அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வறிக்கை மற்றும் அரசியல் தீர்மானம் ஆகிய இரு முக்கிய தீர்மானங்களை முழுமையாக விவாதித்து நிறைவேற்றியுள்ளது. இவற்றின் வரைவுகள் இரு மாதங்களுக்கு முன்பே `பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ இதழில் வெளியிடப்பட்டு, முழுமையாக உட்கட்சி விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தன. கட்சி உறுப்பினர்களிடமிருந்தும், கட்சிக் கிளைகளிலிருந்தும் அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வறிக்கை மீது முறையே 1432 திருத்தங்களும், 136 திருத்தங்களும் வரப்பெற்று அவை பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, அகில இந்திய மாநாடு அவற்றில் 29-ஐ ஏற்றுக்கொண்டிருக்கிறது.
             அதேபோன்று வரைவு அரசியல் தீர்மானத்தின் மீது 2,552 திருத்தங்களும், 248 பரிந்துரைகளும் வரப்பெற்றன. அவற்றில் 74 ஏற்றுக்கொள்ளப்பட்டன. அகில இந்திய மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கையில், மாநாட்டுப் பிரதிநிதிகள், அரசியல் - நடைமுறை உத்தி குறித்த ஆய்வறிக்கை மீது 259 திருத்தங்களையும், வரைவு அரசியல் தீர்மானத்தின் மீது 473 திருத்தங்கள் மற்றும் 5 பரிந்துரைகளையும் முன் வைத்தனர். இவற்றில் அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வறிக்கை மீது 11 திருத்தங்களும், வரைவு அரசியல் தீர்மானத்தின் மீது 55 திருத்தங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

ஸ்தாபன பிளீனம்                  

            இத்தீர்மானங்கள் மீதான பல்வேறு அம்சங்கள் குறித்தும் ஏராளமாக எழுத வேண்டியது அவசியமாகும். சாராம்சத்தில், அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வறிக்கையானது, இடது ஜனநாயக முன்னணியைக் கட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்பதை அடிக்கோடிட்டுக் கூறியிருக்கிறது. போராட்டங்களில் இடதுசாரி சக்திகளின் ஒற்றுமையை வலுப்படுத்துவதன் மூலம் மட்டுமே இது சாத்தியமாகும். கட்சி மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகள் சுயேச்சையான முறையில் வலுவாக இருந்தால் தான், இவ்வாறு இடது ஜனநாயக முன்னணியை வலுவாகக் கட்டுவதும் சாத்தியமாகும். எனவே, இத்தீர்மானங்களின் அடிநாதமாக இருப்பது, கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகளின் செயல்பாடுகளை இன்னும் வலுப்படுத்துவது என்பதேயாகும். எனினும் இந்தக் குறிக்கோளை எய்த வேண்டுமானால், கட்சி ஸ்தாபனத்தின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்தும், வர்க்க, வெகுஜன அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்தும் ஒரு முழுமையான ஆய்வினை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வறிக்கையின்கீழ் மேற்கொண்டுள்ள முடிவுகளின்படி கட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கு, அத்தகைய ஆய்வு மிகவும் அவசியமாகும். இந்தக் குறிக்கோளை எய்துவதற்காக, கட்சியின் அகில இந்திய மாநாடு இந்தாண்டு இறுதிக்குள் ஸ்தாபனம் குறித்து ஒரு பிளீனத்தை (சிறப்பு மாநாடு) நடத்திடவும் தீர்மானித்திருக்கிறது.

சுரண்டல்களுக்கு எதிராகஇரண்டு கால்கள்            

        மக்கள் எதிர்கொள்ளும் பன்முகப்பட்ட பிரச்சனைகள் மீது பெரும் போராட்டங்களை வலுப்படுத்துவதற்கு, பொருளாதாரச் சுரண்டல் சார்ந்த பிரச்சனையுடன் சமூக ஒடுக்குமுறைப் பிரச்சனையையும் ஒன்றிணைத்து கூர்மையான திட்டமிடலை மேற்கொள்வது அவசியமாகும். தற்போதைய இந்திய சமூகத்தில், தலித்துகள், பழங்குடியினர், பெண்கள் மற்றும் மதச்சிறுபான்மையினர் ஆகியோர் மீது ஏவப்பட்டுள்ள சமூக ஒடுக்குமுறை வடிவங்களுக்கு எதிரான போராட்டங்கள் அத்தகைய வலுவான மக்கள் இயக்கங்களைக் கட்டுவதற்கு ஒரு முக்கிய அம்சம் ஆகும். இந்தியாவில் பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிரான போராட்டம் ஒரு கால் என்றால், சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் மற்றொருகால் ஆகும்.
       இவ்விரு போராட்டங்களும் பின்னிப்பிணைந்து வலுப்படுத்தி முன்னெடுத்துச் செல்லப்படுவது அவசியம் என்கிற நமது புரிதலை கட்சியின் 21-வது மாநாடு மீண்டும் அழுத்தமாக வலியுறுத்தி இருக்கிறது. இவற்றில் ஏதேனும் ஒன்றிற்கு முக்கிய கவனம் தரப்படவில்லையெனில் அது, சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை, பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களுடன் இணைக்க முடியாத நிலையை ஏற்படுத்திவிடும். விளைவு, நாட்டு மக்களில் சுரண்டப்படும் பெருவாரியான மக்களை விடுவிப்பதற்குரிய விதத்தில் வர்க்கப் போராட் டங்களை நடத்த முடியாத நிலையை ஏற்படுத்தி விடும்.
            எனவேதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தன் குறிக்கோளை விரைவில் எய்த வேண்டுமானால் இவ்விரு கால்களின் மீதும் முதலில் நின்று, நடந்து, பின்னர் ஓட வேண்டியது அவசியம் என்று கட்சியின் அகில இந்திய மாநாடு அழுத்தமாக வலியுறுத்திக் கூறி இருக்கிறது. 

மக்கள் இயக்கமே நமது பலம்!                   

          கட்சியின் சுயேச்சையான பலம் மற்றும் அதன் தலைமையின்கீழ் கட்டமைக்கப்படும் மக்கள் இயக்கங்களின் பலம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் தேர்தல்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடங்கள் கிடைத்திருக்கின்றன என்று மீண்டும் ஒருமுறை அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வறிக்கை உறுதி செய்திருக்கிறது. கடந்த கால அனுபவம் நமக்கு அதைத்தான் எவ்விதப் பிசிறுமின்றி நடைமுறைப்படுத்திக் காட்டி இருக்கிறது. அத்தகைய பலத்தின் அடிப்படையில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேரளம், மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் குறிப்பிடத்தக்க முறையில் தேர்தல் வெற்றிகளைப் பதிவு செய்ய முடிந்தது.

தேர்தல் உடன்பாடுகள்              

          அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வறிக்கையானது, மாநிலங்களில் உள்ள மதச்சார்பற்ற கட்சிகளுடனான தேர்தல் கூட்டணிகள் மட்டுமே ஆளும் வர்க்கங்களின் தற்போதைய ஆட்சிக்கு அடிப்படை மாற்றாகஅமைந்திட முடியாது என்பதையும் காட்டியிருக்கிறது. மாநிலக் கட்சி களுடன் தொகுதி உடன்பாடுகள்கூட கட்சியின் சுயேச்சையான வலுவின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகின்றன.
          எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபன பலம் மற்றும் போராட்டங்களில் வலுவான தலையீடுகள் ஆகியவற்றுக்கு அதிமுக்கியத்துவம் கொடுப்பதன் அடிப்படையிலேயே கட்சியின் அரசியல் நடைமுறை உத்தி அமைந்திட வேண்டும். தேர்தல் நடைபெறும் காலங்களில் சில மாநிலங்களில் மாநிலக்கட்சிகளுடன் சில உடன்பாடுகள் தேவைப்படலாம். ஆயினும், அத்தகைய தேர்தல் உத்தி அடிப்படையில் இடது ஜனநாயக முன்னணியை வலுப் படுத்துவதற்கான குறிக்கோளை எய்துவது நோக்கி முன்னேற முடியாது.
              இதனை நமது சுயேச்சையான பலம் மற்றும் போராட்டங்களில் தலையிடக் கூடிய தகுதியை ஒருமுகப்படுத்துவதன் அடிப்படையில் மட்டுமே எய்திட முடியும். மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள அரசியல் தீர்மானமானது, ஒரு பக்கத்தில் மிகவும் மூர்க்கமான முறையில் பின்பற்றப்படும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகவும், மறுபக்கத்தில் மிகவும் வெறித்தனமாகக் கட்டவிழ்த்துவிடப்படுகிற மதவெறிக்கெதிராகவும் மக்கள் போராட்டங்களை வலுப்படுத்தவேண்டியதன் தேவையை அழுத்தமாகத் தெரிவித்துள்ளது.
          மோடி அரசாங்கமானது, நாட்டு மக்களில் பெரும்பான்மையோரின் அடிப்படை வாழ்வாதாரங்களைக் காவு கொடுத்து சர்வதேசமற்றும் இந்திய மூலதனம் கொள்ளை லாபம் ஈட்ட வழிவகை செய்து தருகிறது. அதே சமயத்தில், அந்நிய நேரடி மூலதனம் ஆதிக்கம் செலுத்தக்கூடிய விதத்தில் அனைத்துத்துறைகளையும் அவசர அவசரமாகத் திறந்து விட்டுக்கொண்டும் இருக்கிறது. “வளர்ச்சி’’ “வளர்ச்சி’’ என்று ஆட்சியாளர்கள் என்னதான் தம்பட்டம் அடித்தாலும், இதன்பின்னே மறைந்திருக்கும் உண்மையான நோக்கம் என்னவெனில், நாட்டையும், நாட்டின்வளங்களையும் அந்நிய மற்றும் இந்திய கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம்ஈட்டுவதற்காகத் தங்குதடையற்ற சுரண்டலுக்கு முழுமையாகத் திறந்துவிடுவதேயாகும். இவற்றின் காரணமாக நம் நாட்டு மக்களில் பெரும்பான்மையோரின் வாழ்க்கை மிக வேகமாக வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. இத்தகைய கொள்ளை லாப வேட்டையால் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலர் ஆதாயம் அடைந்திருக்கிறார்கள்; பெரும்பணக்காரர்களுக்கும், ஏதும் இல்லாதவர்களுக்கும் இடையேயான இடைவெளி மிகவும் அபாயகரமான முறையில் விரிவடைந்து கொண்டிருக்கிறது. 

விவசாயியின் துயரம்                       

             நம் விவசாயத்தைப் பற்றிக்கொண்டுள்ள நெருக்கடி தொடர்வதிலிருந்து இதனை நன்கு காண முடியும். வட இந்தியாவின் பல மாநிலங்களில் பருவமழை காலம் தவறி பெய்திருப்பதன் காரணமாக, பயிர்கள் முழுமையாக நாசம் அடைந்து, விவசாயிகளுக்கு மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் உணவுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதற்கு ஒரு முன்நிபந்தனை, கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிற விவசாயிகளைப் பாதுகாப்பதே ஆகும். ஆனால் அதற்குப் பதிலாக, மோடி அரசாங்கமானது மிகவும் கருணையற்ற முறையில் நிலம் கையகப்படுத்தல் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இது விவசாயிகளின் வாழ்வில் மேலும் கூடுதலாக துன்பதுயரங்களை ஏற்படுத்துவதுடன், நம் ஒட்டுமொத்த விவசாயத்துறையில் காணப்படும் நெருக்கடியை மேலும் ஆழமாக்கிடும்.
தொழிலாளியின் அவலம்
           நாட்டிலுள்ள தொழிலாளர் நலச் சட்டங்களில், உழைக்கும் மக்களுக்கு இதுநாள்வரை இருந்து வந்த கொஞ்சநஞ்ச உரிமைகளைக்கூடப் பறிக்கும் விதத்தில், பெரிய அளவில் மாற்றங்களைக் கொண்டுவருதல் உட்பட எண்ணற்ற தொழிலாளர்நல விரோதச் சட்டங்களைக் கொண்டுவர ஆட்சியாளர்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்காலத்தில் மோடி அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை உக்கிரப்படுத்திடும்.

விஷம் கக்கும் மோடி அரசு             

            அதேபோன்று, மோடி அரசாங்கமானது, இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களுக்கு எதிராகவும், நாட்டிலுள்ள மதச்சிறுபான்மையினரின் உயிர் வாழ்விற்கு எதிராகவும், மதவெறி நஞ்சைக் கக்கிக்கொண்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் பலவும் மறுமதமாற்றம் என்றும், காதலுக்கு எதிரான `புனிதப் போர்’ என்றும் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளன. மோடி அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் பல அமைச்சர்களும், ஆளும் பாஜக எம்பி-க்களும் மதச்சிறுபான்மையினருக்கு எதிராக விஷத்தைக் கக்கும் பேச்சுக்களை தங்குதடையின்றித் தொடர்ந்து மேற் கொண்டு வருகின்றனர். நாட்டின் சட்டத்தை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெயரளவிற்குக்கூட உறுதி அளிப்பதற்கு, மோடி அரசாங்கம் முன்வரத் தயாராயில்லை. அரசின் இத்தகைய அடாவடித்தனம் மதச்சிறுபான்மையினர் மத்தியில் பாதுகாப்பின்மையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இத்தகைய இழிமுயற்சிகளின் மூலமாக, ஆர்எஸ்எஸ்/பாஜக வகையறாக்கள் இந்து வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்தி, அதன் மூலம் அரசியல் மற்றும் தேர்தல் ஆதாயங்களை அடைந்திட முயற்சித்துக்கொண்டிருக்கின்றன. இவர்களது முயற்சிகள், நம் இந்தியக்குடியரசின் அடித்தளங்கள் மீது கருணையற்ற முறையில் ஏவப்பட்டுள்ள தாக்குதல்கள் மட்டுமல்ல; மக்கள் தங்கள் வாழ்வாதாரங்கள் அரிக்கப்படுவதற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடும்போது அவர்களின் ஒற்றுமையை மத அடிப்படையில் சிதைத்து சின்னாபின்னப்படுத்தும் சதியும் ஆகும்.

எதேச்சதிகார ஆட்சியை நோக்கி...              

           இப்படியாக, மோடி அரசாங்கம் நவீன தாராளமயப் பொருளாதாரத் தாக்குதல்களுடன் மதவெறி நஞ்சையும் இணைத்து, மக்கள் மீது தாக்குதல்களைத் தொடுத்துக்கொண்டிருக்கிறது. இப்போது மேலும் கூடுதலாக, மோடி அரசாங்கமானது தன்னுடைய குறிக்கோள்களை எய்துவதற்காக, நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறைகளைக் கூட சிதைத்திட நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. நம் ஜனநாயகக் கட்டமைப்பினை சிதைத்து சின்னாபின்னப்படுத்துவதன் மூலம் ஓர் எதேச்சதிகார ஆட்சிமுறையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிற அறிகுறி தெரியத் தொடங்கி இருக்கிறது. கட்சியின் 21வது அகில இந்திய மாநாடு, இந்திய நாட்டின் மீதும் நாட்டு மக்களின் மீதும் ஏவப்பட்டுள்ள மேற்படி மும்முனைத் தாக்குதல்களுக்கு எதிராகத் தன் கடும் எதிர்ப்பினைப் பிரகடனம் செய்திருக்கிறது. இம்மூன்றும் நாட்டையும் நாட்டு மக்களின் வாழ்வையும் சூறையாடக்கூடிய `திரிசூலமாக’ மாறுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தடுத்திடும் என்றும் 21வது அகில இந்திய மாநாடு உறுதிபட அறிவித்திருக்கிறது. எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டையும், நம் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களையும் பாதுகாக்கக் கூடிய அதே சமயத்தில், நாட்டு மக்களின் நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்கான வேலையில் முன்னிலும் பன்மடங்கு செயலூக்கத்துடன் இறங்கிடும். 
நன்றி : தீக்கதிர்

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

சிபிஐ(எம்) - ன் புதிய தலைமைக்குழு உறுப்பினர்களை வாழ்த்துகிறோம்...!

 

                இன்று விசாகப்பட்டினத்தில் நிறைவடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21-ஆவது அகில இந்திய மாநாட்டில் வரும் மூன்று ஆண்டுகளுக்கு கட்சிக்கு வழிகாட்டும்  பதினாறு பேர் கொண்ட அரசியல் தலைமைக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. புதிதாய் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் புரட்சிகர நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறோம். 
                 அரசியல் தலைமைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக தமிழ்நாடு மாநிலச்செயலாளர்   தோழர்.ஜி.ராமகிருஷ்ணன் அவர்களும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்  என்பது நம்மக்கெல்லாம் பெருமையையும், மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது.  1998-ஆம் ஆண்டு இவரது அரசியல் வகுப்பு ஒன்று தான் நான்  செங்கொடி இயக்கத்திற்குள் நுழைவதற்கு காரணமாய் அமைந்தது. அற்புதமான ஆசிரியர். என்னுடைய அரசியல் ஆசான் கட்சியின் உச்சி வரை உயர்ந்து நிற்கிறார் என்பதில் பெருமையாய் இருக்கிறது. தமிழ்நாட்டின் ஆளுமை தேசத்தின் ஆளுமையாய் விஸ்வரூபம் எடுக்கிறது.
           தோழரின் புதிய பணி  சிறக்க எங்கள் குடும்பத்தார் அனைவரின் சார்பிலும் புரட்சிகர நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். 
         வாழ்க தோழர். ஜி. ராமகிருஷ்ணன்..!