குண்டு வெடிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குண்டு வெடிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 28 ஜூலை, 2015

மரணதண்டனை மட்டுமே தீவிரவாதத்திற்கு தீர்வாகாது...!


               சோவியத் யூனியன் சிதறுண்டு போனபிறகு, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் புதிதாக நெருக்கம் ஏற்பட்டபிறகு, நம்  நாட்டில் குறிப்பாக வடமாநிலங்களில் அவ்வப்போது திடீர் திடீரென்று குண்டுகள்  வெடிக்க தொடங்கின.  அதன் விளைவாக அப்பாவி மக்கள் பலபேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால்  குண்டு வைத்தவர்கள் எவரும் அப்பாவி மக்களை சாகடித்ததை தவிர  இதுவரையில் எதையும் சாதிக்கவில்லை என்பதே உண்மை. இந்தியாவை பொருத்தவரை இது போன்ற குண்டுவெடிப்புகளில் இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும்  இந்துத்துவா தீவிரவாதம் அல்லது காவி தீவிரவாதம் இரண்டுக்குமே தொடர்பு இருக்கிறது. ஆனால் ஆட்சியாளர்களும், ஊடகங்களும் இஸ்லாமிய தீவிரவாதத்தையே முன்னிறுத்தி பிரதானமாக காட்டுவார்கள். 
              இந்த இரண்டு தீவிரவாதத்திற்கும் அதிகம் பாதிப்படைந்து சிதைந்து போனது மும்பை நகரம் தான் என்பதை நாடறியும். இன்றும் மும்பையில் மக்கள் அச்ச உணர்வோடு தான் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் உண்மை. இதில் இந்து  தீவிரவாத  அமைப்புகள் செய்கிற குண்டுவெடிப்புகள் மூடி மறைக்கப்பட்டுவிடும் அல்லது இஸ்லாமியர்கள் மீது பழி சுமத்தப்பட்டு திசைத்திருப்பப்படும். அதையும் மீறி ஹேமந்த் கர்கரே போன்ற நேர்மையான தீவிரவாத எதிர்ப்பு படை அதிகாரிகள் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடத்தப்பட்டது என்று திசைத்திருப்பியபோது, அந்த குண்டுவெடிப்புகளில்   தொடர்புடைய  இந்துத்துவா தீவிரவாதிகளை கண்டுபிடித்து கைது செய்து வெளியுலகத்திற்கு காட்டினார். அதையும் இந்த நாடு பார்த்துக்கொண்டு தான் இருந்தது.
        ஆனால் குண்டுவெடிப்புகளை நடத்தி அப்பாவி மக்களை கொன்ற அவர்கள் யாருக்கும் மரணதண்டனை அளிக்கப்படவுமில்லை. தண்டிக்கப்படவுமில்லை என்பதும் உண்மை. ஆனால் இஸ்லாமிய தீவிரவாதிகள் அகப்பட்டாலோ அல்லது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டாலோ, அவர்கள் இரகசியமாக விசாரிக்கப்பட்டு இரகசியமாகவே அவசர அவசரமாகவே தூக்கிலிட்டு கொன்றுவிடுவார்கள். ஆட்சியாளர்களுக்கும், நீதிமன்றத்திற்கும், ஊடகங்களுக்கும், இஸ்லாமிய தீவிரவாதிகள் என்றால் பழிவாங்கும் உணர்வு மேலோங்கிவிடும். அவர்களை தூக்கில் போட்டு கொன்று விட்டு தான் மறுவேலையை பார்ப்பார்கள். இவர்களுக்கு குண்டுவைக்க காசு கொடுத்து வேலைக்கு வைத்தவர்கள் யார் என்பது கூட அறியாமல் இந்த பாதக செயலை செய்து மாட்டிக்கொள்கிறார்கள். ஆனால் நமது சட்டம் எய்தவனை விட்டுவிட்டு அம்பை தான் தண்டிக்கும்.
             அப்படியாக தானாக வந்து காவல்துறையிடம் மாட்டிக்கொண்டவர் தான் இந்த யாகூப் மேமன். கடந்த 1993ஆம் ஆண்டு மார்ச் மாதம்  12ஆம் தேதி அன்று மும்பையில்  12 இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகளில்  257 பேர் கொல்லப்பட்டனர். சுமார்  700-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றனர். இந்த குண்டுவெடிப்பில் தொடர்புள்ளவராக கருதப்பட்ட யாகூப் மேமன் தானாகவே சரணடைந்தார்.  பின்னர் இவ்வழக்கில் யாகூப் மேமனுக்கு எதிராக சாட்சிகள் அமைந்ததால் நீதிமன்றம் அவருக்கு  தூக்குதண்டனை விதித்தது. அந்த குண்டுவெடிப்பில் நேரடி தொடர்புடைய ஆறு பேருக்கும் தூக்குதண்டனை கொடுக்கப்பட்டு பின்பு கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டநிலையில், அந்த குண்டுவெடிப்பில் சம்பந்தமில்லாத அல்லது நேரடி தொடர்பில்லாத யாகூப் மேமனுக்கு மட்டும், தூக்குதண்டனையிலிருந்து குறைப்பதற்கான அவரது கருணை மனுவை நீதிமன்றமும், மகாராஷ்டிரா மாநில அரசும், குடியரசுத்தலைவரும் கொஞ்சம் கூட கருணையில்லாமல் தள்ளுபடி செய்தனர் என்பது வேதனைக்குரியது. 
         இஸ்லாமிய தீவிரவாதமோ அல்லது இந்துத்துவா தீவிரவாதமோ, தீவிரவாதம் என்பது எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.  எதை சாதிப்பதற்கும் தீவிரவாதம் என்பது தீர்வாகாது. அதேப்போல் தீவிரவாதச் செயலில் ஈடுபடுபவர்களை அல்லது சந்தேகிக்கப்படுபவர்களை தூக்கிலிட்டு கொல்வது என்பதும் தீவிரவாதத்திற்கு தீர்வாகாது. அரசு இதை உணரவேண்டும். உணர்ந்து தூக்குக்கயிற்றை நெருங்கிக்கொண்டிருக்கும் யாகூப் மேமனுக்கு கருணைகாட்டி தூக்குதண்டனையிலிருந்து விடுவித்து ஆயுள் தண்டனையாக குறைக்கவேண்டும். 

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

மதவெறி ஆர்.எஸ்.எஸ் அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்...!

‘தி கேரவன்’ இதழின் அட்டையில் இடம் பெற்றுள்ள அசீமானந்தா புகைப்படம்./ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்/அசீமானந்தாவின் ஆசிரமத்தில் நரேந்திரமோடி./டாங்ஸ் பகுதியில் கிறிஸ்துமஸ் விழாவுக்கு மறுநாள் அசீமானந்தாவின் ஆட்களால் எரிக்கப்பட்ட ஒரு கிறிஸ்தவ இளைஞர் விடுதி./இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில், குண்டுவெடிப்பால் எரிந்து       போன காட்சி.          
         காவி பயங்கரவாதத்தின் இன்னொரு பயங்கரமான உண்மை முகம் சாமியார் அசீமானந்தாவின் வாக்கு மூலங்களின் வழியே வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தற்போது அம்பாலா மத்தியச்சிறையில் இருக்கும் சாமியார் அசீமானந்தா மீதான குற்றங்கள் என்ன? 18பிப்ரவரி2007-ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஓடும் சம்ஜவுதா விரைவு ரயிலில் வெடிகுண்டு வைத்து 68 உயிர்களை கொன்றது; மே 2007ல் ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதியில் வெடிகுண்டு வைத்து 11 உயிர்களை கொன்றது; அக்டோபர் 2007ல் ஆஜ்மீரில் உள்ள மசூதி ஒன்றில் குண்டுவைத்து 3 பேர் உயிரைப் பறித்தது. இந்தக் குற்றங்களுக்கு பின்னணியாக இருந்தது மட்டுமல்ல... அதற்கான சதித்திட்டத்தை வகுத்த ''கொடிய குற்றவாளி'' இந்த காவி சாமியார் அசீமானந்தா. இவரிடம் கடந்த 2 ஆண்டுகளாக அவ்வப்போது நடத்திய சந்திப்புகளின் மூலம் கிடைத்த விபரங்களை, ஆதாரங்களுடன்,       ‘தி கேரவன்‘ என்கிற ஆங்கில இதழ் வெளியிட்டுள்ளது.
           ‘நம்பிக்கையாளர்’ என்று தலைப்பிடப்பட்ட அக்கட்டுரையில் சாமியார் அசீமானந்தா, தான் சதித்திட்டம் தீட்டியதை ஒப்புக்கொண்டிருக்கிறார். அத்துடன், தங்கள் சதிச்செயல்களுக்கு ஆர்.எஸ்.எஸ் ஆசீர்வாதம் இருந்தது என்றத் தகவல்களையும் வெளியிட்டிருக்கிறார். தற்போதைய ஆர்.எஸ்.எஸ் தலைவரான மோகன் பகவத், கடந்த 2005-ஆம் ஆண்டில், ‘இந்த வன்முறைச் செயலை கண்டிப்பாக செய்யவெண்டும் என்றும், ஆனால் ஆர்.எஸ்.எஸ் பெயர் சம்பந்தப்படக்கூடாது’ என்றும் அறிவுறுத்தியதாகவும் வாக்குமூலம் அளித்திருப்பது, விரிவாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ’நாங்கள் சம்பந்தப்படாவிட்டாலும், உங்கள் பக்கம் தான் நிற்கிறோம் என்றும், அந்த செயல் கிரிமினல் குற்றம் ஆகாது எனவும், நமது கொள்கையுடன் சம்பந்தப்பட்டதாகத்தான் இந்துக்கள் கருதுவார்கள். இந்தியா முழுவதும் இந்த வன்முறையைத் தூண்ட ஆர்.எஸ்.எஸ்-ன் ஆசீர்வாதம் உண்டு’ என்று மோகன் பகவத் சொன்னதாக, அசீமானந்தா மிக இயல்பான தனது உரையாடலில் வெளிப்படுத்தியுள்ளார். அசீமானந்தாவின் கூட்டாளியான சுனில் ஜோஷி என்பவர் 2007 டிசம்பரில் சந்தேகச் சூழ்நிலையில் இறந்துவிட்டார். அதே சமயம், தேவையான ஆதாரங்கள் இருந்தும் மோகன் பகவத் இதுவரை சுதந்திரமாகவே நடமாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. யார் இந்த அசீமானந்தா? அசீமானந்தாவின் இயற்பெயர் நபகுமார் சர்க்கார் என்பதாகும். அவரது தந்தை ஒரு காந்தி பக்தர். காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்ற தந்தையின் சொல்லை மீறி ஒரு தீவிர இந்து வெறியனாகத்தான் அசீமானந்தா வளர்ந்திருக்கிறார்.
                    சிறு வயதில் ராமகிருஷ்ணா மடத்துடன் இருந்த தொடர்பை முற்றிலும் துண்டித்துக் கொண்டு, ஆர்.எஸ்.எஸ் கிளை ஸ்தாபனத்தில் தன்னை இணைத்துக் கொண்டு இந்து அல்லாதவர்கள் மீதுகடும் வெறுப்பை வளர்த்துக் கொண்டார். இவர், குண்டு வெடிப்புச் சதித்திட்டங்களை தனது உரையாடலில் எந்தகுற்ற உணர்வும் இல்லாமல் வெளிப்படுத்தியுள்ளார். இந்தச் செய்தி வெளியாகியுள்ள நிலையில், ஆர்.எஸ்.எஸ் வழக்கம் போல் தனக்கும், அசீமானந்தாவுக்கும் எந்த தொடர்புமில்லை என சொல்லத் தொடங்கியுள்ளது. ஆனால், இதே அசீமானந்தாவுக்கு டிசம்பர் 2005ல் கோல்வால்கர் விருதை ஆர்.எஸ்.எஸ் வழங்கியது.  இதில் பாஜகவின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி கலந்து கொண்டார் என்பதும்  நினைவுகூரத்தக்கது. வன்முறையும், பயங்கரவாதமும் குஜராத்தின் தென்பகுதியில் கிழக்கும் மேற்கும் மஹாராஷ்டிர மாநிலம் எல்லையாக அமைந்துள்ள மிகச்சிறு பிரதேசம் ‘டாங்ஸ்’. அங்கு வாழும் 2 லட்சம் மக்கட்தொகையில் 73சதவீதம் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்பவர்கள். 93 சதவீதம் ஆதிவாசியினர். கிறிஸ்துவ பாதிரிமார்கள் இங்கு பணியாற்றிவந்தனர்.
             அசீமானந்தா இந்த இடத்தை தன் மைய வேலைப்பகுதியாக தேர்ந்தெடுத்துக் கொண்டார். அவசரகால நிலைக்குப் பின்னர் வங்காளத்திலும் வடகிழக்கு பகுதியிலும் பணியாற்றவே ஆர்எஸ்எஸ்-ஆல் தோற்றுவிக்கப்பட்ட ‘வனவாசி கல்யாண் ஆசிரமம்’ என்ற ஸ்தாபனம் அசீமானந்தாவின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் வந்தது. டாங்ஸ் பகுதியில் அமைதியின்மையும், வன்முறையும் ஒரு சேர, அசீமானந்தா 1998ல் அங்கு சென்ற பின் தலைதூக்க ஆரம்பித்தன. அது, மத்திய உள்துறை அமைச்சராக இருந்த அத்வானிக்கு பெரும் தலைவலியாக மாறியது. முதலமைச்சராக இருந்த கேஷூபாய் படேலை கூப்பிட்டு அசீமான்ந்தாவை கட்டுக்குள் கொண்டுவர பணிக்கும் அளவுக்கு நிலைமை சென்றது. இச்சமயத்தில், ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி ஒன்றில் அசீமானந்தாவை சந்தித்த நரேந்திர மோடி, “சுவாமிஜி, நீங்கள் செய்யும் வேலைக்கு ஈடு இணைகிடையாது. நீங்கள் சரியான வேலையை செய்கிறீர்கள். நான் தான் முதலமைச்சராகப் போகிறேன். வந்த பிறகு உங்கள் வேலையை நான் பார்த்துக் கொள்கிறேன். அமைதியாக இருங்கள்” என்று கூறியுள்ளார். அக்டோபர் 2001ல் மோடி முதலமைச்சரான பின்னர், கோத்ரா சம்பவத்தை காரணமாக வைத்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். டாங்ஸ் பகுதிக்கு வடக்கில் உள்ள பஞ்ச்மஹால் மாவட்டத்தில் முஸ்லிம்கள் அனைவரையும் அழித்தொழிக்கும் வேலைக்கு நான் தலைமை தாங்கினேன் என்று அசீமானந்தா பெருமையுடன் தனது பேட்டியில் கூறியுள்ளார். அசீமானந்தாவின் பிடியை பலப்படுத்த மோடி, 2002ல் டாங்ஸ்க்கு விஜயம் செய்தது குறிப்பிடத்தக்கது.
                  டாங்ஸ் பகுதி இப்போது ஆர்.எஸ்.எஸ்-ன் முழுக்கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. டாங்ஸ் பரிசோதனையின் வெற்றி, அசீமானந்தாவுக்கு மட்டுமல்ல மோடிக்கும் இந்துத்துவா அரசியலுக்கு புதுவடிவம் கொடுக்கும் முயற்சிக்கு உந்து சக்தியாக திகழ்ந்தது. இதற்கு பின்னர் தான் சம்ஜவுதா விரைவு ரயில், ஆஜ்மீர், மாலேகாவ், ஹைதராபாத், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பகுதிகளில் குண்டுவெடிப்பு நிகழ்த்த பயங்கரவாத சதித்திட்டங்கள் ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலில் தீட்டப்பட்டன. இவை அனைத்தையும் அசீமானந்தா தனது பேட்டியில் ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் எப்படியும் மறுப்பார்கள் என்று தெரிந்தே உரையாடல் டேப்புகளையும் கையோடு வெளியிட்டுள்ளது ‘தி கேரவன்‘ ஏடு! 
(‘மாற்று’ இணைய இதழில் வந்த விபரங்களுடன்)
நன்றி :
 

புதன், 7 செப்டம்பர், 2011

அடிக்கடி குண்டு வெடிப்பு - மத்திய உள்துறை அமைச்சரும் உளவுத்துறையும் தான் பொறுப்பேற்கவேண்டும்..!

                   இன்று காலை புதுடெல்லி உயர்நீதி மன்றம் அருகில் சக்கிவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 11 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 65 பேர் பலத்தக் காயங்களுடன் புதுடெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 15 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்பாவி மக்கள் தான் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த நான்கு மாதங்களில் இங்கு இரண்டாவது முறையாக இது போன்ற குண்டு வெடிப்பு  நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால் உள்துறை அமைச்சரும், உளவுத்துறையும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தான்   தெரியவில்லை. 
                   உள்துறை  அமைச்சரைப் பொறுத்தவரையில் ஒரு ''மங்குனி'' உள்துறை  அமைச்சர் என்றும் சொல்லிவிட முடியாது. ரொம்ப ''விபரமா''னவர். உள்துறையைத் தவிர ''மற்ற'' எல்லா விஷயங்களிலும் ''கை'' தேர்ந்தவர். உள்நாட்டு பெருமுதலாளிகளுக்கும், அமெரிக்க பெருமுதலாளிகளுக்கும் பொதுத் துறையையும், அதன் பங்குகளையும் விற்பதும் கொடுப்பதுமான புரோக்கர் வேலைகளை மட்டும் சிறப்பாக செய்வார். ஆனால்  உள்நாட்டு  பாதுகாப்பை மட்டும் கோட்டை விட்டுவிடுவார். தேசத்தைப் பற்றியோ, மக்களை பற்றியோ அக்கறை இல்லாதவர் இந்த நாட்டின் உள்துறை அமைச்சர்.  நாட்டின் பாதுகாப்பு என்பது ஒரு கேலிக் கூத்தாக போய்விட்டது. 
   இந்த குண்டுவெடிப்பில் தன் குடும்ப உறுப்பினர்களையும், உறவினர்களையும் இழந்து தவிக்கும் அப்பாவி  மக்களுக்கு  உள்துறை அமைச்சர் என்ன  சொல்லப்போகிறார்...? எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஆறுதல் கூறுவார்...? இப்படி கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் ஒரு உள்துறை அமைச்சர்  எதற்கு..?
                 மத்திய உள்துறை  அமைச்சர் மாற்றப்படவில்லையென்றாலும், அல்லது  ப.சிதம்பரம் திருந்தவில்லையென்றாலும்  ...  இதுபோன்ற குண்டு வெடிப்புகளையும், நாச வேலைகளையும் தடுக்க முடியாது.

வியாழன், 14 ஜூலை, 2011

துப்பு கெட்ட சிதம்பரம் பொறுப்பு ஏற்பாரா ? அமைச்சர் பதவி விலகுவாரா ?

               மும்பையில் இன்று - ஜூலை 13 இரவு ஏழு மணிக்கு மூன்று இடங்களில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 21 பேர் கொல்லப்பட்டனர் எனவும், 141   பேர்  பலத்த காயங்களுடன்  மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர் எனவும் மும்பையிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த குண்டு வெடிப்பு என்பது பயங்கரவாதிகளின் தாக்குதலாகும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கிறது.
              2008 - க்கு பிறகு மும்பையில் நடைபெறும் மிகப்பெரிய குண்டுவெடிப்பு இது.  இன்று 2008 குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட காசாப் - இன் பிறந்தநாள் அன்று நடந்திருக்கும் சம்பவம் இது. 
              இதைப்பற்றி முன்கூட்டியே உளவுத்துறைக்கோ அல்லது உள்துறை அமைச்சகத்திற்கோ எப்படி தெரியாமல் போனது என்பது தான் நம் சந்தேகமே. இந்த இரண்டு பேரின் அலட்சிய போக்கே இத்தனை பேரை பலி கொண்டிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. காசாப் -இன் பிறந்தநாளை பற்றி ஊடகங்கள் முன்னமே செய்தியாக வெளியிடுகின்றன. இதைப்பற்றி அறிந்திருக்கும் மத்திய அரசு விழிப்போடு இருந்திருக்க வேண்டாமா என்பது தான் நமது கேள்வி. இந்த விஷயத்தில் உள்துறை அமைச்சகம் கோட்டைவிட்டிருக்கிறது என்று தான் சொல்லவேண்டும்.
              பயங்கரவாத செயல் என்பதும் குண்டுவெடிப்பு சம்பவம் என்பதும் இந்தியாவிற்கு புதிதான அனுபவம் கிடையாது. உலக வரைபடத்தையும் கடந்தகால வரலாற்றையும் உற்றுப்பாருங்கள். அமெரிக்காவுடன் உறவாடும் நாடுகளிலெல்லாம் பயங்கரவாதமும், குண்டுவெடிப்பும் சர்வசாதாரணமாக நடக்கும். பயங்கரவாதத்துக்கு எதிரானவர்களைப்போல் நடித்துக்கொண்டே பயங்கரவாதத்துக்கு தண்ணீர் ஊற்றி வளர்த்து நாட்டின் அமைதியை குலைப்பது தான் ஏகாதிபத்தியத்தின் வழக்கமான கலாச்சாரம்.   என்றைக்கு இந்திய ஆட்சியாளர்கள் அமெரிக்காவோடு ஒட்டி உறவாட ஆரம்பித்தார்களோ அன்றைக்கு ஆரம்பம் ஆனது தான் இந்த எல்லை தாண்டிய பயங்கரவாதமும் குண்டுவெடிப்பும். தொடர்ந்து நடைபெற்றுவரும் இந்த சம்பவங்களுக்கு ஆட்சியாளர்களே  பொறுப்பேற்க வேண்டும்.
                 நாட்டில் தினமும் பல இடங்களில் அமைதி குலைந்துகொண்டே வருகின்றது. காஷ்மீரில் எல்லை தாண்டிய தீவிரவாதிகளின்  பிரச்சனை, மேற்கு வங்கம் உள்ளிட்ட வடமாநிலங்களில் மாவோயிஸ்ட்டுகள் என்ற பெயரில் தீவிரவாதிகள் பிரச்சனை, தெற்கே தனி தெலுங்கானா  பிரிவினைவாதிகளின் பிரச்சனை... இப்படியான பல்வேறு பிரச்சனைகளுக்கும் நாட்டின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தான் பொறுப்பேற்கவேண்டும். பொறுப்பேற்று பதவி விலகவேண்டும். இதைத்தான் நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.