2ஜி ஸ்பெக்ட்ரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
2ஜி ஸ்பெக்ட்ரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 1 அக்டோபர், 2011

என்னாங்கடா டேய்.... கிண்டலா பண்றீங்க..?

                மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஒவ்வொரு மாதமும் புதுதில்லியில் சம்பிரதாயமாக செய்தியாளர்களை சந்தித்து தனது துறை சார்ந்த விபரங்களைப் பகிர்ந்து கொள்வது வழக்கமாய் வைத்துள்ளார்.  தனது துறையின் செயல்பாடு, எதிர்காலத் திட்டம் குறித்து விளக்கம் அளிக்க செய்தியாளர்கள் கூட்டத்தை சிதம்பரம் கூட்டினாலும் அவரது துறை சாராத கேள்விகளை அவரிடம் செய்தியாளர்கள் எப்போதும் கேட்காமல் விடுவதில்லை.
                   இதேப்போல் நேற்றும் - வெள்ளிக்கிழமையும் வழக்கம்போல் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.  2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சிக்கியிருக்கும்   சூழல்நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதனால் இந்தச் சந்திப்பின் போது பெரும்பாலும் 2ஜி சார்ந்த கேள்விகளையே செய்தியாளர்கள் எழுப்பினார்கள்.
                 2ஜி சம்பந்தப்பட்ட அத்தனை கேள்விகளுக்கும், '' எனக்கு ஞாபகம் இல்லை''.. ''எனக்கு ஞாபக மறதி உண்டு''.. போன்ற பதில்களையே அவர் திரும்பத் திரும்ப சளைக்காமல் பதில் சொல்லியிருக்கிறார். குற்றவாளிகள் தான் செய்த தவறுகளை மறைப்பதற்காக சொல்லப்படும் வார்த்தைகள் தான் இவைகள் என்பதை நாம் மறுப்பதற்கில்லை. ஊழல் செய்து மாட்டிக்கொண்ட ஒரு அமைச்சர் இப்படி பேசுவது என்பது நாட்டு மக்கள் அனைவரையும் ''கேனைப்பசங்கன்னு'' நெனைச்சி கொழுப்பாக பேசியதாகத் தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். 
                     இதற்கு முன்பு கூட, காமன்வெல்த் விளையாட்டில் பல ஆயிரம் கோடிகளை சுருட்டி திஹார் சிறையிலிருக்கும் சுரேஷ் கல்மாடி கூட செய்த குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல் ''எனக்கு மறதி நோய் இருக்கிறது'' என்று மத்திய புலனாய்வுத் துறையிடம் கூசாமல் பொய் சொன்னதையும் இங்கே பொருத்திப் பார்க்கவேண்டியிக்கிறது.
                 அதுமட்டுமல்ல, ஒரு மந்திரி, ''எனக்கு ஞாபக மறதி இருக்கிறது'' என்று சொன்னால் அவர் எப்படி தொடர்ந்து மந்திரியாக நீடிக்கமுடியும்..?  என்பது தான் மக்களின் கேள்வியாகும்.
                 சிதம்பரத்திற்கு இப்படி ஞாபக மறதி உண்டென்றால், மன்மோகன் சிங்கையும், சோனியாவையும் அல்லவா எதிர்காலத்தில் மறந்துவிடுவார்.
              ஞாபக மறதி என்று சொல்லி, செய்த குற்றத்திற்காக தண்டனைப் பெறாமல் தப்பிக்க முடியாது மிஸ்டர் சிதம்பரம்...!

சமாதானம் ஆகிட்டா சிதம்பரம் குற்றமற்றவரா..? நிச்சயம் சிதம்பரம் குற்றவாளியே..!

                   2 ஜி ஸ்பெக்ட்ரம்  ஊழலில் தான் குற்றவாளி என்றால் அப்போதைய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும், பிரதமர் மன மோகன் சிங்கும் குற்றவாளிகளே என திஹார் சிறையிலிருக்கும் ஆ.ராசா தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் சூழ்நிலையில்,  இந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி பிரதமர் அலுவலகத்திற்கு, பிரணாப் முகர்ஜி தலைமையிலான மத்திய நிதிஅமைச்சகம் அனுப்பிய முக்கிய கடிதம் ஒன்றில், 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் அளிக்கப்பட்ட போது அப்போதைய நிதியமைச்சர்   ப.சிதம்பரம் ஸ்பெக்ட்ரம் உரிமங்களை 2001ம் ஆண்டு கட்டண விகிதத்திலேயே அளிப்பதற்கு ஒப்புக்கொள்ளாமல் இருந்திருந்தாலும்,  அதற்குப் பதிலாக ஏல முறையிலேயே உரிமம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தாலும்  இந்த ஊழலே நடந்திருக்காது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தக்கடிதம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து உலகமே பார்த்தது. இந்தக் கடிதம்,  ஸ்பெக்ட்ரம் ஊழலில் ப.சிதம்பரத்திற்கு உள்ள தொடர்பை அப்பட்டமாக அம்பலப்படுத்தியது. 
                    இந்த சூழ்நிலையில் சிதம்பரத்தை பாதுகாக்க  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் முயற்சிகள் மேற்கொண்டனர். அதனால் இந்தக் கடிதம் வெளிவர மூலக்காரணமாக இருந்த இப்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியையும், ப. சிதம்பரத்தையும் சமாதானப்படுத்தி சமரசம் செய்துவைத்தனர்.  அதனால்,  ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் அளிக்கும் விவகாரத்தில் எதேச்சதிகாரமான முறையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கடிதம் தொடர்பாக ஏற்கெனவே விளக்கமளித்த நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி -  இந்தக்கருத்தானது, பல்வேறு அமைச்சகங்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டே பிர தமருக்கு அனுப்பப்பட்டது என்பதை ஒப்புக்கொண்ட பிரணாப் முகர்ஜி இறுதியில் மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி தலையீட்டினால் சிதம்பரத்தொடு சமாதானம் ஆனார். இருவரும் ஜோடியாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தது என்பது ஒரு கேலிக்கூத்தாகும். 
             சிதம்பரத்திற்கு உள்ள தொடர்பு குறித்து மேற்படி கடிதத்தில் இடம்பெற்றிருந்த விபரங்களுக்கு நிதியமைச்சர் என்ற முறையில் தான் ஒப்புதல் அளிக்கவில்லை என்று புது விளக்கம் ஒன்றையும் சென்ற வியாழனன்று அளித்தார். தனது அமைச்சரவை சகாவான சிதம்பரத்தை பாதுகாக்கும் நோக்கில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி புதிய விளக்கம் ஒன்றை அளித்தார். இது  பிரணாப் முகர்ஜியின் பரிதாப நிலையை தான் காட்டியது. 
              பிரணாப் முகர்ஜி விளக்கமளித்ததைத் தொடர்ந்து இந்தப் பிரச்சனை முடிந்துவிட்டது என்று  உடனே சிதம்பரம்  பத்திரிக்கையாளர்களுக்கு பதிலளித்தார்.  ஆனால் பிரச்சனை இன்னும் முடிந்துவிடவில்லை... 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் ஒதுக்கீடு செய்வதில் அரசுக்கு பேரிழப்பு ஏற்படுத்திய ஒரு நடை முறையை செயல்படுத்தியதில் அவருக்கு நேரடியாக தொடர்பும் பங்கும் இருக்கிறது என்பதை உறுதி செய்யும் ஆதாரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டுமென்பது தான் மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

சனி, 24 செப்டம்பர், 2011

சிதம்பரத்தின் யோக்கியதை இப்போதாவது புரியட்டும்..!

                சமீபத்தில் தான்  உயர் நீதிமன்றத்தில் குண்டுவெடித்து ஓய்ந்து தலைநகரம் அமைதியாகி  இருக்கிறது. அதற்குள் இன்னொரு குண்டு வெடித்திருக்கிறது. நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பிரதமருக்கு எழுதிய கடிதம் வெளியாகியிருக்கிறது. யோக்கியன் சிதம்பரத்தின் வேஷம் கலைந்திருக்கிறது. ''சிதம்பர ரகசியம்'' இப்போது தான் மக்களுக்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது.
                 சென்ற ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசின் நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தால்  2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த ஊழலைத் தடுத்திருக்க முடியும் என்று கடந்த மார்ச் 2011-ல் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தற்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கடிதம் எழுதியிருப்பது வெளிவந்திருக்கிறது. நிதி அமைச்சக அதிகாரி ஒருவரின் கடிதத்தில் அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் நடவடிக்கை குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரத்தின் விலை மற்றும் ஒதுக்கீடு தொடர்பாக நிதி அமைச்சகத்தில் துணை இயக்குநராக உள்ள டாக்டர் பி.ஜி.எஸ்.ராவ் என்பவர் பிரதமர் அலுவலக இணை இயக்குநர் வினி மகாஜனுக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். பிரணாப் முகர்ஜி இந்த 11 பக்க கடிதத்தை ஆய்வுசெய்து ஒப்புதல் அளித்துள்ளார். இந்த கடிதம் குறித்து சமூக ஆர்வலர் விவேக் கார்க் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம்  மூலம் கேள்வி கேட்டு தகவல் பெற்றிருக்கிறார். இந்த கடிதத்தில் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் , 2ஜி உரிமங்களை ரத்து செய்ய தொலைத்தொடர்புத் துறையை நிர்பந்தம் செய்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யாமல் அ.  ராசாவின் முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார் என அந்த கடிதத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அலைக்கற்றை உரிமங்களுக்காக 2001ல் விதிக்கப்பட்ட நுழைவுக் கட்டணமே 2008 டிசம்பர் 31 வரை அமலில் இருந்துள்ளது என அந்த கடிதம் குறிப்பிடுகிறது. இந்த கடிதம் குறித்து தகவல் பெற்ற விவேக் கார்க் கூறுகையில் நிதி அமைச்சகம் மற்றும் இதர அமைச்சகங்களின் தொடர்பு இல்லாமல் இவ்வளவு பெரிய ஊழல் நடக்க சாத்தியமில்லை. ஆர்டிஐ மூலம் பிரதமர் அலுவலகத்திடம் இருந்து பெற்ற ஆவணம் இதை வெளிப்படுத்தியுள்ளது. சிதம்பரத்துக்கும் வேறு சிலருக்கும் இந்த ஊழலில் தொடர்புள்ளதை இந்த கடிதம் தெளிவாகக் குறிப்பிடுகிறது என கார்க் தெரிவித்தார்.
                இன்னொரு பக்கம், 2ஜி ஊழல் வழக்கில் ப.சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். உடனே மத்திய அரசு பதறுகிறது. லட்சுமணக் கோட்டை தாண்டக்கூடாது என உச்சநீதிமன்றத்தையே மிரட்டும் வகையில் மத்திய அரசு வாதிடுகிறது. ஏன் இந்த பதற்றம்..? ஏன் இந்த மிரட்டல்..? மடியில் கனம் இல்லையென்றால் வழியில் பயம் எதற்கு?. ஊழலில் பங்கு இல்லை என்றால் வழக்கை சந்திக்கலாமே!.
                  யார் லட்சுமணக்கோட்டை தாண்டியது..? மக்களிடம் வாக்குகளை வாங்கி அமைச்சர்களானவர்கள் தானே  மக்கள் பணத்தை பாதுகாக்க வேண்டும். அதை விட்டுவிட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரும் இணைந்து கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டது எந்தக் கோட்டிற்கு உட்பட்டது ?. ஊழல் மலிந்தும், சிபிஐ அதனை ஒழுங்காக விசாரிக்காமல் விடுவதும், பரவலான தீமை, சீர்கேடுகளுக்கு காரணமாக இருக்கிறது என மீண்டும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது.
       இவ்வளவு தகவல்கள் கிடைத்தப்பின்னும்,  2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் பங்கு குறித்து மத்திய புலனாய்வுத் துறை விசாரிக்காமல்  அவரை பாதுகாத்து வருவது மட்டுமல்லாமல், சிதம்பரத்தின் நேர்மை மீது முழு நம்பிக்கை வைத்திருப்பதாக  பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருப்பது என்பது மக்களுக்கு பலத்த சந்தேகத்தை வரவழைக்கிறது.
               எனவே 2ஜி ஊழலில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் விசாரித்து, உண்மையை கண்டறிவதன் மூலமே 2ஜி வழக்கின் ஆழத்தை கண்டறிய முடியும். அதன் மூலம் நீதியை நிலைநாட்ட முடியும். உள்துறை அமைச்சரானாலும் சட்டத்திற்கு உட்பட்டவரே. ஆக சிதம்பரம் தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
             ஊழல் புகாரில் சிக்கி குற்றம் சாட்டப்பட்டுள்ள ப. சிதம்பரம் நேர்மையான முறையில் பதவி விலகி, மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு உட்படவேண்டும். இதற்கான நடவடிக்கைகளை பிரதமர் மன்மோகன் சிங் எடுக்கவேண்டும் என்பது தான் மக்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.
              நாட்டின் முதலாவது நிதியமைச்சராக இருந்த ஆர்.கே.சண்முகம் செட்டியாரும், பின்னர் நிதியமைச்சராக இருந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரியும், தங்கள் மீது ஊழல் புகார்கள் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டவுடன் தாமதிக்காமல், தங்கள் பதவிகளைவிட்டு விலகி, விசாரணையை எதிர்கொண்டனர் என்பது இந்த நாட்டின் கடந்த கால வரலாறு. அந்த இரு தமிழர்களும் காட்டிய நேர்மையான பாதையை ப.சிதம்பரம் பின்பற்ற வேண்டும் என்பது தான் நம்முடைய இன்றைய எதிர்ப்பார்ப்பு. நடக்குமா...?