குஜராத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குஜராத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 23 ஏப்ரல், 2014

மோடி - குஜராத் - வளர்ச்சி : கதவுகளில் கசியும் உண்மை...!

      
          இந்தச் சுற்றுப்பயணத்தில் நாடு முழுவதும் நான் மக்களிடம் அதிகம் கேட்ட மூன்று வார்த்தைகளுக்கு இந்த அத்தியாயத்தை ஒதுக்கலாம் என்று நினைக்கிறேன் : 
மோடி - வளர்ச்சி - குஜராத்    
 
வரலாற்றில் வித்தியாசமான தேர்தல்               
 
          இந்திய வரலாறு மிக வித்தியாசமான ஒரு தேர்தலை எதிர்கொள்கிறது. இதுவரையிலான 15 மக்களவைத் தேர்தல்களும், இந்திய மக்கள் முன் எத்தனையோ பேசுபொருள்களை முன்னிறுத்தியிருக்கின்றன. சாதனைகளும் வாக்குறுதிகளும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், ஊழல்களும் அதிகார துஷ்பிரயோகங்களும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், மரணங்களும் தியாகங்களும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், தனிக்கட்சி ஆட்சியும் நிலையான அரசும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், கூட்டாட்சியும் அனைவருக்குமான வளர்ச்சியும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள்... எல்லாத் தேர்தல்களிலுமே குறைந்தபட்சம் மக்கள் முன் இரு தேர்வுகள் முன்னிறுத்தப்பட்டது உண்டு: இந்தக் கட்சியா, அந்தக் கட்சியா அல்லது இந்தக் கூட்டணியா, அந்தக் கூட்டணியா? 

         முதல்முறையாக மக்களவைத் தேர்தலை அதிபர் தேர்தல் போல எதிர்கொள்கிறது இந்தியா. பிரச்சாரத்தில் கட்சிகளின் பெயர்கள் அடிவாங்கிவிட்டன. இன்னும் சொல்லப்போனால், ஒரேயொரு மனிதரும் அவர் முன்னிறுத்தும் முழக்கமும்தான் இன்றைய இந்தியாவின், இந்தத் தேர்தலின் பேசுபொருள் : மோடி - குஜராத் - வளர்ச்சி.

       நாட்டின் மிகப் பெரிய கட்சியான காங்கிரஸ் மோடிக்குப் பதில் அளிப்பதை மட்டுமே தேர்தல் பணியாகக் கொண்டிருக்க… ஏனைய கட்சிகளோ, மோடியை நோக்கிக் கேள்வி எழுப்புவதையே தேர்தல் பணியாகக் கொண்டிருக்கின்றன. ஆக, வாக்காளர்கள் முன் ஒரேயொரு கேள்விதான் எங்கும் தொக்கிநிற்கிறது : மோடி - குஜராத் - வளர்ச்சி வேண்டுமா; வேண்டாமா?
         மக்களிடம் இப்படி ஒரு கேள்வி தொக்கிநிற்கிறது என்றால், நாடு முழுவதும் உள்ள ஊடகங்களிலும் இப்போது இதுதான் முக்கியமான விவாதம் - குஜராத்தில் உண்மையான வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறதா, இல்லையா? அது உண்மையாகவே ஒரு நல்ல முன்மாதிரிதானா, இல்லையா? மக்கள் உண்மையாகவே எப்படி இருக்கிறார்கள்? எது குஜராத்தில் மீண்டும் மீண்டும் மோடியைப் பதவியில் அமர்த்துகிறது?
 
மோடி செய்ததும் செய்யாததும்                   

              இந்தச் சுற்றுப்பயணத்தில் இந்த மாபெரும் கேள்விக்கும் விவாதத்துக்கும் நானும் பதில் தேடினேன். குஜராத் அரசுத் தரப்பினர் சாதனைகளாகச் சொன்ன - அவர்கள் நிறைவேற்றியிருக்கும் பல்வேறு திட்டங்களைப் பார்க்க அலைந்தேன். அந்தத் திட்டங்கள் நன்மை - தீமைகளை அளவிட ஏகப்பட்ட குறிப்புகள், புள்ளிவிவரங்களைச் சேகரித்தேன். ஏராளமான மக்களிடம் கருத்துகள் கேட்டேன். சரி, உண்மை நிலவரம் என்ன?
          குஜராத்தில் மோடி முன்னோடியான திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறாரா? நிச்சயமாகக் கொண்டு வந்திருக்கிறார் - எப்படி கேரளத்திலும் தமிழகத்திலும் பிஹாரிலும் சில முன்னோடியான திட்டங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றனவோ அப்படியே குஜராத்திலும் முன்னோடியான சில திட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. ஆனால், குஜராத்துக்கு வெளியே அவை ஊதிப் பெருக்கப்படுகின்றன. பல விஷயங்களில் துளியும் உண்மை இல்லாமல் மோடி கொண்டாடப்படுகிறார். ஒரு உதாரணம்: குஜராத் மதுவிலக்கு மாநிலமாக இருப்பதற்கு மோடி கொண்டாடப்படுவது. உண்மை என்னவென்றால், குஜராத் தனி மாநிலமாக உருவாக்கப்பட்ட 1960 முதலே அது மதுவிலக்கு மாநிலம் தான். இதைச் செய்தது காங்கிரஸ் அரசாங்கம். உண்மையில் மோடி ஆட்சியில் மது கள்ளச்சந்தையில் நிறையவே கிடைக்கிறது. இரட்டை விலையில் விற்கிறார்கள். சமீபத்திய உதாரணம், நாட்டில் அதிக அளவில் ரூ.12.57 கோடி மதிப்புடைய மது, தேர்தல் ஆணையத்தால் குஜராத்தில் தான் பறிமுதல் செய்யப்பட்டது. இப்படி நிறைய அடுக்கலாம். ஆனால், வெற்றிகரமாக அந்த மாயையை நிறுவியிருக்கிறார்கள்.
              சரி, இது மாயை என்றால், உள்ளூரில் எடுபடாதே? பின் எப்படி குஜராத்தில் மோடி தொடர்ந்து வெல்கிறார்? குஜராத்திலிருந்து புறப்படும்போது எடுத்த ஒரு புகைப்படம் அந்த உண்மையை வெளிப்படுத்தும் என்று நம்புகிறேன். 

உண்மையின் கதவுகள்                        

              ஊரெல்லாம் சுற்றிவிட்டு, அகமதாபாத் திரும்பியபோதுதான் அதைக் கவனித்தேன். சில வீதிகளின் நுழைவாயில்களில் பெரிய பெரிய இரும்புக் கதவுகளை அமைத்திருந்தார்கள். அந்த வீதிகளின் புழுதி மண் சாலைகள் நாம் வெளியில் கேட்கும் குஜராத்தின் வளர்ச்சி கோஷங்களோடு எந்த வகையிலும் பொருந்தாதவை. மனதில் வித்தியாசமாகப் படவும், ஓரிடத்தில் காரை நிறுத்தச் சொல்லி இறங்கினேன். அகமதாபாதின் மையத்தை ஒட்டியிருக்கும் அந்தப் பகுதியின் பெயர் சோனி கே சால். மோடியின் தொகுதியான மணி நகருக்கு மிக அருகில் இருக்கும் பகுதி. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதி. “வீதியின் நுழைவாயிலில் ஏன் இரும்புக் கதவுகளை அமைத்திருக்கிறார்கள்?” என்று அங்குள்ளவர்களிடம் விசாரித்தபோது, கிடைத்த அதிரவைக்கும் பதில் இது: “பழங்கால முறைதான். கலவரம் ஏற்பட்டால் கதவைப் பூட்டிவிட்டுப் பதுங்க.”
          அருகருகே இருந்த வீதிகளில் நுழைந்து சென்றபோது ஒரு விஷயத்தைக் கவனிக்க முடிந்தது. பெரும்பாலான வீடுகளில் நிலை, கதவுகள், ஜன்னல்கள் யாவும் இரும்பாலேயே அமைக்கப்பட்டிருந்தன. “ஏன் மரங்களைப் பயன்படுத்துவது இல்லையா?” என்ற என் அடுத்த கேள்விக்குக் கிடைத்த பதில் நிலைகுலையச் செய்தது. “கலவரத்தின்போது தீயை இது கொஞ்சமாவது தாக்குப்பிடிக்கும் இல்லையா? இங்கே கலவரங்களின்போது தீப்பந்தங்கள்தான் வீட்டுக்குள் முதலில் வரும். அப்புறம் என்ன வெட்டினாலும் கூறுபோட்டாலும் சரி… எரித்தால்தான் அவர்களுக்கு வெறி அடங்கும்.”
          எனக்கு கோத்ராவும் நரோடா பாட்டியாவும் மாறி மாறி நினைவுக்கு வந்தன. கோத்ராவில் ரயில் பயணிகளைத் துடிக்கத் துடிக்கத் தீ வைத்துதான் அழித்தார்கள். நரோடா பாட்டியாவில் ஒன்பது மாதக் கர்ப்பிணியான கௌஸர் பானுவின் வயிற்றை வாளால் கிழித்து அந்தச் சிசுவை வெளியே எடுத்தவர்கள் தரையில் போட்டு அதை மிதித்தார்கள்; அப்போதும் ஆத்திரம் அடங்காமல், அதன் மீது எண்ணெயை ஊற்றி எரித்தார்கள்.
            அங்கிருந்து வெளியே வந்தேன். கார் ஓட்டுநர் ஒரு இந்து. “சார்… இந்துக்களுக்கும் பயம் உண்டு சார். முஸ்லிம்கள் சுற்றி அதிகமாக வாழும் இடங்களில் இந்துக்களும் இப்படிப் பாதுகாப்புக்கு வீதி நுழைவாயிலில் இரும்புக் கதவுகள் போட்டுக்கொள்வது உண்டு” என்று சொல்லி ஓர் இடத்தைக் காட்டினார். பின்னர் சொன்னார்: “இந்த பயம்தான் சார் உண்மையில் குஜராத்தை ஆட்சி செய்கிறது. இரு தரப்பையும் வெவ்வேறு வகைகளில்.”
             கார் அகலமான ஒரு சாலையில் பாய்ந்து செல்ல ஆரம்பித்தபோது, எனக்கு நடிகை நந்திதா தாஸ் ஒரு பேட்டியில் ''மோடி - வளர்ச்சி - குஜராத்'' தொடர்பான கேள்விக்கு அளித்திருந்த பதில் ஞாபகத்துக்கு வந்தது. அந்தப் பேட்டியில் நந்திதா தாஸ் இப்படிக் கூறியிருப்பார்: “ஜெர்மனியின் மிகச் சிறந்த சாலைகள் ஹிட்லர் ஆட்சியில் அமைக்கப்பட்டவை. ஜெர்மனியின் மிகச்சிறந்த மருத்துவமனைகளும் அப்போதுதான் கட்டப்பட்டன. ஆனால், ஹிட்லரை நாம் யாரும் வளர்ச்சிக்காக நினைவு கூர்வதில்லை!”
கட்டுரையாளர் : சமஸ் 
தொடர்புக்கு : samas@kslmedia.in 
ரொம்ப நன்றி

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

''மோடியும், குஜராத்தும்'' - ஆனந்த விகடனின் உண்மை கட்டுரை

            குஜராத் முதல்வராக இருக்கும் நரேந்திர மோடி இந்திய நாட்டின் பிரதமர் (?) வேட்பாளர் என்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தம்பட்டம் அடித்து வருகிறது. அவரைப் பற்றிய பல்வேறு தகவல்களை பூதாகரமாகக் கூறி வருகிறது. ஆனால் உண்மை நிலை என்ன என்பதை 16-4-2014 தேதியிட்ட ஆனந்த விகடனில் வெளியான ப.திருமாவேலன் கட்டுரை புட்டுப்புட்டு வைக்கிறது. கட்டுரையின் பகுதிகள் வருமாறு:

             எப்போதுமே இக்கரைக்கு அக்கரை பச்சைதான். 2002ல் ஆட்சியைப் பிடித்த நரேந்திர மோடி, குஜராத்தை இந்தியாவின் சொர்க்க புரியாக மாற்றிவிட்டார் என்ற நினைப்பு, நாடு முழுவதும் விதைக்கப் பட்டது. குஜராத்திகள் பிறப்பால் தொழில் சமூகத்தினர், பிரிட்டிஷ் ஆட்சி கிழக்கு இந்தியக் கம்பெனி மூலமாக வர்த்தகம் செய்த காலத்திலேயே தொழிற்சாலைகள் தொடங்கியது இந்தப் பகுதியில்தான். “மோடி, நன்கு சுழலும் தங்கச் சக்கரத்தைப் பெற்றார். அதை நிறுத்தாமல் தொடர்ந்து சுற்றிக்கொண்டிருப்பதுதான் மோடியின் சாதனை” என்றார் சமூகவியலாளர் தீ பாங்கர் குப்தா. இதனை அமர்த்தியா சென் ஏற்றுக்கொள்ளவில்லை. “குஜராத்தில் புதிய தொழிற்சாலைகள் வந்திருக்கின்றன. நிறைய சாலைகள் அமைத்திருக்கிறார்கள்.
             கட்டுமானப் பணிகள் வேகமாக நடக் கின்றன. ஆனால், ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை இதைவைத்து மட்டுமே அளவிட முடியாது. 1000 குழந்தைகள் பிறந்தால் மருத்துவ வசதி இல்லாமல் அதில் எத்தனை குழந்தைகள் குஜராத்தில் இறந்துபோகின்றன என்பதைப் பாருங்கள். அது கேரளாவைவிட மூன்று மடங்கு அதிகம். அதேபோல் கல்வி மற்றும் மருத்துவத்துறைகளில் கேரளா, தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேசத்தை விடவும் குஜராத் பின்தங்கித்தான் இருக்கிறது”என்கிறார் சென். மோசம், மிக மோசம் என்பதையே ஒவ்வொரு மாநிலமும் தங்கள் ஸ்டேட் டஸாக வைத்திருந்ததால் ஏற்பட்ட சலிப்பு, `குஜராத் முன்னேறி விட்டதோ.... அதே ஃபார்முலா இந்தியாவுக்கும் பொருந்துமோ!”என்ற நப்பாசை நம்பிக்கையை வளர்த்துவிட்டது!

தொழிலதிபர்களின் அதிபர்..!


          இந்தியத் தொழில் துறை வர்க்கம், தனக்குச் சாதகமான பிரதிநிதியாக மோடியைக் கணிக்கிறது.`குஜராத்தில் தொழில் முதலீடு செய்யுங்கள்’ என்று மோடி அழைப்பதைப் போல வேறு எந்த மாநில முதல்வரும் அழைக்கவில்லை என்பது மட்டுமல்ல; அடிமாட்டு விலைக்கு நிலங்களையும், 0 சதவீதமும் வட்டியுடன் நிதி உதவியும் வேறு எந்த மாநிலமும் தர முன்வரவில்லை என்பதும் காரணம். சலுகைக்கு மேல் சலுகைகள் வழங்குவதன் மூலமாக பல்வேறு தொழிற்சாலைகளை மாநிலத்துக்குள் கொண்டுவரும் தந்திரத்தை மோடி கடைப்பிடிக்கிறார். இது தொழில் அதிபர்களுக்குச் சாதகமான அம்சம். ஒரு காலத்தில் பெரு முதலாளிகள் தரப்பு, அனைத்து இந்திய தேசியத்தைக் கட்டமைத்தது போலவே இப்போதும் இணைந்து செயல்பட்டு, மோடிக்கு ஆதரவு தருகிறது!

மோடித்துவா..!

              `நான் ஓர் இந்து தேசியவாதி. இன்னும் எளிதில் புரியும் வகையில் சொல்லவேண்டுமானால், நான் இந்து என்ப தால் இந்து தேசியவாதி’ என்று பகிரங்கமாக அறிவித்துக் கொண்டவர் நரேந்திர மோடி. இந்தியா என்பது பன்முகத் தன்மைகொண்டது. இந்தியாவின் பெருமை என்பதே வேற்றுமையில் ஒற்று மைதான். ஆனால், `இங்கு இருப்பது ஒரேஒரு தேசியம்தான். அது இந்து தேசி யம், அதுதான் இந்திய தேசியம்‘ என்றுசொல்லக்கூடிய தத்துவத்தின் பிரதிநிதி யாக நரேந்திரமோடி தன்னை அடை யாளப்படுத்திக் கொள்வதைப் பெருமை யாக நினைக்கிறார். தனிப்பட்ட மோடிஎப்படிப்பட்டவராகவும் இருக்கலாம். ஆனால், பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் பிரதமர் பதவிக்கு ஆசைப் படுகிறவர், தன்னைப் பச்சையாக `இந்து தேசியவாதி’ என்று அழைத்துக் கொள்வது சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலானது. சட்டம் - ஒழுங்கு கெடுமானால் நிம்மதி இழக்கக்கூடியவர்கள் பெரும் பான்மையினரும்தான். காங்கிரஸ் கட்சியை இந்திய நாட்டுப் பற்று காப்பாற்றுவது போல, தங்களை இந்து மதப்பற்ற காப் பாற்றும் என்று மோடி நினைக்கலாம். ஆனால், மக்கள் நலன் சாராத இந்த மாய மாத்திரைகள், விரைவிலேயே அவலமாகக் கிழிந்து தொங்கும். அயோத்தி அலையில் 1999ல் ஆட்சியைப் பிடித்தபாஜகவை 2004ல் வீட்டுக்கு அனுப்பி யவர்கள் `இந்துக்கள்’ தானே தவிர... சிறுபான்மையினர் அல்ல.  இந்து பிம்பம் ஆட்சிக்கு வரப் பயன்படலாம். ஆட்சியை எப்போதும் காப்பாற்றாது என்பதற்கு உதாரணம்... வாஜ்பாய்!

தான், தான் மட்டுமே...!

              அரசியல் என்பதே, ஒருவரை வீழ்த்தி விட்டு இன்னொருவர் அதிகாரத்தை அடைவதுதான். அதைப் பச்சையாக, பட்டவர்த்தனமாக நடத்துபவராக நரேந்திர மோடி இருக்கிறார்.சோம்நாத்தில் இருந்து அயோத்திக்கு அத்வானி ரத யாத்திரை புறப்பட்டபோது, அதனை ஏற்பாடு செய்கிற பொறுப்பில் இருந்தவர் நரேந்திர மோடி. 23 ஆண்டு களுக்கு முன்பு நடந்த அந்தச் சம்பவம் தான் மோடியை குஜராத்துக்கு அறிமுகம் செய்தது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான `ஏக்தா யாத்ரா’ என்ற ஒற்றுமை யாத்திரையை முரளி மனோகர் ஜோஷி நடத்தியபோது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மோடி முகம் அறிமுகம் ஆனது. இன்று மோடியால் வீழ்த்தப்பட்டுக் கிடப்பவர்கள் யார்? அதே அத்வானியும் முரளி மனோகர் ஜோஷியும்தான்.
              அத்வானியிடம் இருந்து `பிரதமர் வேட்பாளர்’ என்ற மகுடத்தைப் பறித்து, ஜோஷியிடம் இருந்து அவரு டைய தொகுதியைப் பறித்து மோடி ஆடியது தவறான ஆட்டங்கள். `மோடி இல்லாவிட்டால் பாஜக ஆட்சிக்கு வர முடியாது’ என்ற பிம்பத்தை உருவாக்கி, மற்ற தலைவர்கள் அனைவருக்குமே அவர்கள் பயப்படும் தொகுதிகளை ஒதுக்கி நரேந்திர மோடி செய்த வேலைகள், நரசிம்மராவ் காலத்தில்கூட காங்கிரஸில் நடக்காதவை.மோடியை அரசியலுக்கு அழைத்து வந்தவர் சங்கர் சிங் வகேலா. இவர் தனது புல்லட்டில் எப்போதும் மோடியை உட்காரவைத்துக் கொண்டு குஜராத்தை வலம் வருவார். 1995ம் ஆண்டு தேர்தலில் குஜராத் சட்டமன்றத்தை பாஜக கைப் பற்றியபோது சங்கர் சிங் வகேலா தான் முதல்வராக இருந்திருக்க வேண்டும்.
              ஆனால், அத்வானியிடம் இருந்த தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வகேலாவைத் தடுத்து கேஸூபாய் படேலை முதல்வர் ஆக்கினார் மோடி. கேஸூபாய் படேலை வாழ்த்தி... வகேலாவைக் கட்சியைவிட்டுத் துரத்தி... இத்தனையும் அத்வானி ஆசீர் வாதத்துடன் நடத்தினார் மோடி. 2002ம் ஆண்டு குஜராத் படுகொலையால் தலைகுனிந்த பிரதமர் வாஜ்பாய். முதல்வர் மோடியைப் பதவி விலகச் சொன்னபோதும் தடுத்தவர் அத்வானி. ஆனால், அந்த அத்வானியின் பிரதமர் கனவைக் காவு வாங்கினார் மோடி!பாஜக ஒருவேளை ஆட்சிக்கு வந்தால் மோடி ஒரு பக்கமும், மற்ற அனைவரும் இன்னொரு பக்கமும் சக்கரத்தைச் சுழற்று வார்கள். ஏனெனில், இரண்டாம் நபரோடு அரவணைக்கும் ஆளாக மோடி இல்லை!

சிறுபான்மையினர் சினம்..!

               இந்தியப் பிரிவினைக்குப் பின் நடந்த மிகப்பெரிய மதவெறிப் படுகொலை 2002ல் குஜராத்தில் தான் நடந்தது. குஜராத் எப்போதும் அமைதிப் பூங்காவாக இருந்தது இல்லை. 1969ல் 512 பேரையும், 1985ல் 300 பேரையும், 1992ல் 152பேரையும், பலிவாங்கிய குஜராத், 2002ல் சுமார் 1,200 பேரை (அரசுக் கணக்கின்படி) புதைத்தது. கரசேவர்கள் வந்த ரயில் பெட்டிக்குத் தீ வைக்கப்பட்டதால், எதிர்வினையாக இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று விளக்கம் சொன்னாலும், அரசும் போலீசும் நினைத்திருந்தால், அந்தச் சாவுகளில் பாதியைத் தடுத்திருக்கலாம். `எல்லாம் முடியட்டும்; இரண்டு நாட்கள் காத்திருப்போம்‘ என்று கைகட்டி வேடிக்கை பார்த்தது மோடி அரசு. `ஆட் சிக்கு வந்த சில மாதங்களில் நடந்தது என்பதால் எப்படிச் சமாளிப்பது என்று அவருக்குத் தெரியவில்லை’ என்று விளக்கம் சொல்கிறார்கள்.`காரில் போய்க்கொண்டு இருக்கிறோம்.
                 ஒரு நாய்க்குட்டி மீது நம் கார் மோதி அது இறந்துவிடுகிறது. அப்போது நாம் வருத்தப்படுகிறோம் அல்லவா? அது போன்றதுதான் 2002ம் ஆண்டு நிகழ்வும்‘ என்று இப்போது சமாளிக்கத் தெரிந்தவருக்கு போலீஸைப் பயன்படுத்தக் தெரியாதா? `ஒன்றின் எதிர்வினை இன்னொன்று’ என்று நியாயப்படுத்தினார் மோடி. இஸ்லாமியர்களையே தன்னுடைய பிராண்ட் அம்பாஸிடர்களாக மோடி நியமித்து பிரச்சாரம் செய்தாலும், அந்த மக்கள் மனதில் பயமும் பீதியும் படிந்திருப்பது மோடியின் உண்மையான சொரூபம் தெரியும் என்பதால்தான்!மேலும், என்கவுண்ட்டர் என்ற பெய ரால் சிறுபான்மையினரைக் கொன்று தீர்த்த சம்பவங்கள் ரத்தம் உறையவைக்கின்றன. இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 32 போலீஸ் உயர் அதிகாரிகள் மீது வழக்குப் பதியப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதும் அதிலிருந்து ஜாமீனில் வந்தவர்கள், ஒரு மாநில முதலமைச்சரையே குற்றம் சாட்டுவதும் இதுவரை இந்தியா பார்க்காதது!

மர்மங்களின் மனிதர்..!

                 `நான் ஒரு திறந்த புத்தகம்‘ என்று எல்லா அரசியல்வாதிகளும் சொல்லிக் கொள்வார்கள். ஆனால், யாரும் திறக்க முடியாத புத்தகமாக மோடி இருக்கிறார். திருமணம் செய்து கொள்ளாதவராக அவரைக் காட்டுகிறார்கள். 13 வயதில் ஜசோதாபென் என்பவருக்கும் இவருக்கும் திருமணம் நடந்தது. பின்னர், இவர் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு இரண்டு ஆண்டுகாலம் இமயமலைக்குப் போய்விட்டு, குஜராத் திரும்பினாலும், 32 ஆண்டுகள் தனது சொந்த வீட்டுக்கே வராமல் போனதால் அந்தப் பந்தம் அப்படியே அறுந்தது என்றும் சொல்லப்படுகிறது.அந்தப் பெண் ஒரு பள்ளியின் ஆசிரியையாக வேலை பார்த்துள்ளார். மோடி, முதல்வர் ஆன பிறகு அவர் யார் பார்வையிலும்படாமல் மறைத்து வைக்கப்பட்டார்.
               அவரை 2002ம் ஆண்டுக்குப் பிறகு பேட்டி எடுக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர். இன்று வரை அவரது இருப்பு, மறைமுகமாக இருக்கிறது. சமீபத்தில் தான் மாதுரி சோனியின் கதை பிரபலமானது. அந்தப் பெண்ணை 62 நாட்கள் குஜராத் உளவுத் துறை வேவு பார்த்தது. ஆந்திர சினிமாக்களை மிஞ்சும் ரியல் மசாலா.மோடி அரசால் வஞ்சிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் ஐபிஎஸ். அதிகாரிகளான குல்தீப் ஷர்மா, ஸ்ரீகுமார், வன்சரா, சஞ்சீவ்பட், ராகுல் ஷர்மா, ரஜ்னீஷ் ராய் போன்றவர்கள் சொல்லும் கதைகள் பதற்றமானவை.மோடிக்கு அடுத்த இடத்தில் இருந்த, `அவருக்கு அடுத்து இவர்தான்‘ என்று சொல்லப்பட்ட, அத்வானி மற்றும் அருண் ஜெட்லி ஆசீர்வாதம் பெற்ற குஜராத் வருவாய் துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா, திடீரென ஒருநாள் செத்துக் கிடந்த மர்மம் எத்தனையோ ஆண்டுகள் ஆகியும் இன்னும் விலகவில்லை!

கொள்கை என்ன..?

               `காங்கிரசிடம் இருந்து விடுதலை’ என்று மோடி முழங்குகிறார். ஆனால், காங்கிரஸில் இருந்து பாஜக எந்த வகையில் மாறுபட்டது என்பதை இன்று வரைவிளக்கவே இல்லை. மாற்றம், வளர்ச்சி என்று மையமாகப் பேசுகிறாரே தவிர, தன்னுடைய கொள்கை, ஆட்சி நடத்தும் வழிமுறை பற்றி பேசவே இல்லை. புதிய பொருளாதாரக் கொள் கையை அமல்படுத்தி 24 ஆண்டுகள் கடந்து விட்டன. பொருளாதாரமும் நிதியும் கோமாவில் தான் கிடக்கின்றன. இதே பொருளாதாரக் கொள்கையைத்தான் (1998-2004) பாஜக ஆட்சியும் பின் பற்றியது.ஒரு காலத்தில் சுதேசி, சுதேசி என்று அதிகம் பேசியது பாஜக தான். இன்று அதை மறந்தும் சொல்வது இல்லை.
               சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அமல்படுத்தத் துடித்தது காங்கிரஸ் என்றால், 26 சதவிகிதம் முதலீடு வரலாம் என்றது பாஜக அரசு. 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டுக்கு வசதியான வழிமுறைகளை பாஜக ஆட்சியே பாதைபோட்டுக் கொடுத்தது. காங்கிரசும் ஆ.ராசாவும் அதற்குள் புகுந்து புறப்பட்டார்கள். லோக்பால், லோக் அயுக்தா பற்றி மோடி தெளிவுப்படுத்தவில்லை. `பலவீனமான பிரதமராக இருப்பதால் அண்டை நாடுகள் மிரட்டுகிறது’ என்கிறாரே தவிர, மோடியின் வெளியுறவுக் கொள்கை இன்னும் சொல்லப்படவில்லை. அண்டை நாடுகளுடன் சண்டைக்கு நிற்கப் போகிறோம் என்றால் ராணுவச் செலவு அதிகமாகி, இந்தியாவின் கடன் இரண்டு மடங்கு ஆகும் என்பதைத் தவிர பயன் இருக்காது.மேடையில், ஏறுகிறார்; கையை வீசுகிறார்; கர்ஜிக்கிறார்; காற்றில் கலக்கிறது வார்த்தைகள். ஆனால், எதுவுமே மனதில் நிற்கவில்லை. வளர்ச்சி, மாற்றம் என்ற வாய்மொழி வார்த்தைகள் மட்டும் போதாதே!

யார் பிரதமர்..?

             இதில் என்ன சந்தேகம்? பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைத்தால், மோடிதான் பிரதமர், தனிப்பெரும்பான்மையை பாஜக அடைய முடியாமல் போனால் மற்ற கட்சிகளின் ஆதரவைத் தேட வேண்டி வரும். அப்போது? `நரேந்திர மோடியைத் தவிர வேறு யாரை முன்மொழிந்தாலும் நாங்கள் ஆதரிக்கத் தயார்’ என்று கட்சிகள் நிபந்தனை விதிக்கும். அப்போது, பாஜக என்ன முடிவு எடுக்கும்? ஆர்எஸ்எஸ் என்ன அறிவுரை சொல்லும்? இதை எதிர் பார்த்துத்தான் 87 வயதிலும் அத்வானி. காந்தி நகரில் நிற்கிறார். ராஜ்நாத் சிங், ஜோஷி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி போன்றவர்கள் மோடியை சகித்துக் கொண்டு சும்மா இருக்கிறார்கள்.இப்படி ஒரு சூழ்நிலை உருவாகுமானால் மோடி என்ன மாதிரியான முடிவு எடுப்பார் என்பதைக் கணிப்பது கஷ்டம். மோடி போன்ற ஒரு கேரக்டர் பிரதமர் ஆகிறார் என்பதை நினைத்தால், பலருக்கும் பயமாக இருக்கிறது. அவர் பிரதமர் ஆக முடியாமல் போனால் என்ன ஆகும் என்று யோசித்தால், அந்தப் பயம் இன்னும் அதிகமாகிறது.!
             
 நன்றி : ஆனந்தவிகடன் மற்றும் Theekkathir Tamil Daily..

திங்கள், 17 மார்ச், 2014

இந்தியாவில் மாற்று அரசை அமைப்பதே நம்முன் உள்ள தலையாய கடமை...!

             
           ஆர்எஸ்எஸ்/பாஜக பிரதமர் வேட்பாளர் மோடிக்குத் தாங்களாகவே முன்வந்து தம்பட்டம் அடிக்கும் இந்திய கார்ப்பரேட்டுகளில் ஒரு பிரிவினர் அவரைத் துதிபாடுவதில் புதியதொரு உச்சிக்கே சென்றுள்ளனர். 1930-களில் ஜெர்மனியில் பாசிசமும் ஹிட்லரும் தலைதூக்குவதற்கு உலகளவில் முதலாளிகள் எப்படியெல்லாம் வெளிப்படையாகவே உதவினார்கள் என்பது தெரியும். உண்மையில் பாசிசம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள உலக முதலாளித்துவத்தின் பெரும்பகுதி (முதலாளிகளுடன் அரசின் ஒற்றுமை குறித்துப் பேசிய முசோலினியைப் போன்றே) ஹிட்லரின் தலைமையிலான பாசிசம் தங்களைக் காத்திடும் என்று கருதி அதனை வரவேற்றார்கள். 1939 மாபெரும் பொருளாதார மந்தம் காரணமாக சின்னாபின்னமாகிப் போயுள்ள உலகில் மீண்டும் தங்கள் கொள்ளை லாப வேட்டை தொடரஅவர் வழிவகுத்துக் கொடுப்பார் என்றுகருதினார்கள்.
          ஜெர்மன் யுத்த எந்திரத்தைக் கட்டி உருவாக்கியமை, அதனைத் தொடர்ந்து ராணுவத்தை இயக்குவதற்கான நவீன உள்கட்டமைப்பு வசதிகளின் தேவை, ராணுவ ரீதியிலான தொழில் வளாகம் மற்றும் அதனைத் தொடர்ந்து இரண்டாம் உலகப் போர் ஆகியவை உலக முதலாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்தன. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உலகின் செல்வ வளம் மிக மோசமான முறையில் அழிக்கப்பட்டது குறித்தோ, பல லட்சக்கணக்கான மனித உயிர்கள் பலியானது குறித்தோ அது சிறிதும் கவலைப்படவில்லை. கூடுதலாக, பாசிஸ்ட் அரசு மக்கள் மீது மிகவும் பயங்கரமான முறையில் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது. இவற்றில் பெரும்பாலானவை வரலாற்றில் மிகவும் வேதனையுடன் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஜனநாயக உரிமைகள் மற்றும் பிரஜா உரிமைகளை ரத்து செய்தல், குறிப்பாக ஸ்தாபன ரீதியாகச் செயல்படும் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளை ரத்து செய்தல் ஆகியவை இத்தகைய அடக்குமுறைகளில் அடங்கும். இவ்வாறு தொழிலாளர் உரிமைகள் நசுக்கப்பட்டதன் காரணமாக முதலாளிகளின் லாபம் என்பது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உச்சத்திற்குச் சென்றது.
          அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற பெரிய முதலாளித்துவ நாடுகள், தங்கள் நாடுகளின் சொந்த முதலாளித்துவ வர்க்க நலன்களைப் பாதுகாப்பதற்காக, பாசிஸ்ட் ஜெர்மனியின் உலக ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக உருவான பாசிஸ்ட் எதிர்ப்புக் கூட்டணியில் இணைந்தன.
               குறிப்பாக சோவியத் செஞ்சேனை ஸ்டாலின்கிராடில் நடைபெற்ற முதல் தீர்மானகரமான வெற்றியின்போது தனியாகவே பாசிஸ்ட்டுகளின் வெறியாட்டத்தை வீரத்துடன் எதிர்த்து முறியடித்த போது, அதனுடன் இணைந்து கொண்டன. பாசிசத்தை முறியடித்ததில் சோவியத் யூனியன் தீர்மானகரமான முறையில் ஆற்றிய பங்களிப்பு உலக வரலாற்றின் ஒளிமிகுந்த அத்தியாயமாகும். அன்றைய தினம் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடி போன்றே இன்றைய தினமும் உலக முதலாளித்துவத்திற்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், 2008-ல் ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்தம் இன்றளவும் தொடரக்கூடிய நிலையில், இந்திய கார்ப்பரேட்டுகள் தங்கள் கொள்ளை லாபவேட்டையைத் தொடர்வதற்கு சிறந்ததொரு வாய்ப்பாக இந்தியாவில் உள்ள மதவெறி பாசிஸ்ட் எந்திரமான ஆர்எஸ்எஸ்/பாஜக-வைத்தான் பார்க்கின்றன. அவற்றிற்கு நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு குறித்தோ அதிலும் குறிப்பாக மக்கள் இடையே சமூக நல்லிணக்கம் இருந்திட வேண்டும் என்பதிலோ கொஞ்சமும் கவலையில்லை, எப்படியாவது தங்கள் கொள்ளை லாபவேட்டை தொடர வேண்டும் என்பதேயாகும்.
              இதன் காரணமாகவே தங்களுக்கு ஒரு `வலுவான தலைவர்’ தேவை என்கிற ரீதியில் அவை கூப்பாடு போடுகின்றன. இதன் சமீபத்திய எடுத்துக்காட்டுதான் இந்தியப் பங்குச் சந்தையின் சமீபத்திய ஏறுமுகமான காட்சியாகும். உலக அளவில் மிகவும் சோகமாக உள்ள பங்குச்சந்தை இந்தியாவில் மட்டும் தன்னுடைய 22 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து புதிய உச்சத்திற்கு சென்றிருக்கிறது. தேசிய அளவிலான பங்குச் சந்தையும் புதிய ரிக்கார்டை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியக் கார்ப்பரேட்டுகள் ஒரு முக்கியமான நிதி நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் மூலமாக தங்கள் கருத்தை பதிவு செய்திருக்கின்றன. அவர், “நரேந்திர மோடி தலைமையிலான தேஜகூ அரசாங்கம் மக்களவைத் தேர்தலுக்குப்பின் ஆட்சிக்கு வரும் வாய்ப்புகள்’’ இருப்பதாகக் கூறியிருக்கிறார். (இந்துஸ்தான் டைம்ஸ், மார்ச் 8, 2014)தங்கள் கொள்ளை லாபவேட்டை எவ்விதமான தடங்கலுமின்றி தொடர்வதில் தங்களுக்குள்ள பேரவாவின் காரணமாகவே இந்திய கார்ப்பரேட்டுகள் பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களை விளக்கிடுவதில் ஒரு விரைவான தீர்வினைக் கண்டறிய முனைந்துள்ளன.
       இதுபோன்று கடந்த காலங்களிலும் நடந்திருக்கிறது. 1998-ல் பிரதமராகப் பதவியேற்பதற்காக வாஜ்பாய் காத்துக் கொண்டிருந்த சமயத்தில் ஜெயலலிதாவின் ஆதரவுக் கடிதம் வருவதில் தாமதம் ஏற்பட்டபோது இவ்வாறு பம்பாய் பங்குச் சந்தை தள்ளாடியது. உண்மையில் அந்த சமயத்தில் கிழக்கு ஆசிய பொருளாதாரமே நிலைகுலைந்திருந்தது. மீண்டும் 2004ல் பம்பாய் பங்குச்சந்தை தள்ளாடியது. அப்போதும் அதற்கு உண்மையான காரணமான சர்வதேச நிதி கொந்தளிப்பான சூழல்தான் காரணம். ஆயினும் அதனை மறைத்துவிட்டு அப்போது ஐமுகூ-1 அரசாங்கத்திற்கு சில நிபந்தனைகளின் அடிப்படையில் இடது சாரிக்கட்சிகள் வெளியிலிருந்து அளித்துவந்த ஆதரவுதான் காரணம் என்று பிரச்சாரம் செய்தனர். அப்போது இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் விடுத்த சில அறிக்கைகள் “சந்தைக்கு ஏற்புடையதாக இல்லை’’ என்று அவர்களால் குறை கூறப்பட்டது.
            வாஜ்பாய் தலைமையில் தேஜகூட்டணி ஆட்சிக்கு வருவதை இடதுசாரிக் கட்சிகள் தடுத்துவிட்டன என்று சில கார்ப்பரேட்டுகள் அறிவித்தன. அதேபோன்றுதான் இன்றும், சர்வதேச அளவில் சந்தைகள் மிகவும் மோசமான முறையில் தள்ளாடிக் கொண்டிருப்பதை இவை பார்க்க மறுத்து கண்ணை மூடிக்கொண்டிருக்கின்றன. வால் ஸ்ட்ரீட் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையாக ஆட்டங் கண்டுள்ளது. இருந்தபோதிலும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் உலக அளவில் வேறு நாடுகளில் முதலீடுகளைச் செய்திட முன்வந்துள்ளார்கள். இதன் காரணமாக அவர்கள் இந்தியாவில் பெரிய அளவில் முதலீடுகளைச் செய்து வருகிறார்கள். ஆயினும், உக்ரைன் நெருக்கடியை அடுத்து ஐரோப்பா மற்றும் ஆசிய சந்தைகளிலிருந்து வரும் எதிர்மறையான செய்திகளாலும், சீனாவிலிருந்து வரும் உள்நாட்டு பொருளாதார விவரங்கள் ஆர்வத்தைக்குலைக்கக் கூடிய விதத்தில் இருப்பதாலும் இவ்வாறு அமெரிக்க முதலீட்டால் ஏற்பட்ட மகிழ்ச்சி நீடித்திருக்க முடியவில்லை.
             அவற்றின் தாக்கம் ஏற்கனவே உலக அளவில் பிரதிபலிக்கத் தொடங்கிவிட்டது. விரைவில் இந்தியச் சந்தைகளையும் பிரதிபலித்திடும். மேலும் பங்குச்சந்தை விவரங்கள் உள்நாட்டுப் பொருளாதார அடிப்படைகளுக்கும் விடையளித்தாக வேண்டும். நிதி அமைச்சரின் கூற்றின்படி 18 மாதங்களுக்குப் பின்னர் இப்போதுதான் ரூபாய், டாலருக்கு எதிராக வலுப்பட்ட நிலையில் இருக்கிறது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி ஆகியவற்றிற்கு இடையேயான இடைவெளி) யிலும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆடம்பரப் பொருள்கள் இறக்குமதியில் தடைகள் விதித்திருப்பதன் மூலம் இது சாத்திய மாகி இருக்கிறது. இதைத்தான் இடது சாரிக் கட்சிகள் வெகுகாலமாக சொல்லி வந்தன. இப்போதாவது இதனை அரசாங்கம் செய்திருப்பதற்கு நன்றி தெரிவித்துக்கொள்வோம். பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களும், அவை குறைந்த அளவில் இருந்தாலும் கூட, நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரங்கள் மீது கடும் விளைவுகளை ஏற்படுத்திடும். உலக அளவில் கார்ப்பரேட்டுகளுக்குக் கடும் பாதிப்புகள் ஏற்பட்ட போதிலும் கூட அந்தப் பாதிப்புகள் இந்தியக் கார்ப்பரேட்டுகள் மீது பாயாதவாறு ஐமுகூ-2 அரசாங்கம் அவர்களைப் பார்த்துக் கொண்டது.
          உலக அளவில்பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்த போதிலும் இந்திய கார்ப்பரேட்டுகளின் வருமானத்தில் எந்த ஆண்டிலும் வீழ்ச்சி ஏற்படவில்லை என்று ஒரு முன்னணி முதலீட்டு வங்கியின் மேலாண் இயக்குநர் ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 5.72 சதவீதம் லாபம் ஈட்டியிருக்கிறது. அதேபோன்று டெல்கோ, பார்தி ஏர்டெல், 5.5 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கி 6 சதவீதமும் லாபம் ஈட்டியிருக்கின்றன. இந்திய கார்ப்பரேட்டுகளுக்கு இந்திய அரசாங்கம் சலுகைகளை வாரி வழங்கியிருக்காவிட்டால் இந்நிறுவனங்களுக்கு இவை சாத்தியமாகி இருக்காது. இத்தகைய சலுகைகளை மேலும் அபரிமிதமான முறையில் தங்களுக்கு அளிக்கக்கூடிய ஒரு `மீட்பரைத்தான்’ இந்திய கார்ப்பரேட்டுகள் எதிர்பார்க்கின்றன.
             இவர்களில் கணிசமானவர்கள் ஏற்கனவே குஜராத் மாநிலத்தில் மோடியால் சலுகைகள் அளிக்கப்பட்டவர்களாவார்கள். தகவலறியும் சட்டத்தின் கீழ் வெளிக்கொணரப்பட்ட பல உண்மைகளை ஹார்ட்நியூஸ் 2012 ஜூலை வெளியான செய்தித்தாள் வெளியிட்டுள்ளது. அதன்படி சூரத் அருகே ஹசிரா தொழிற்சாலை மண்டலத்தில் நிலக்குழு நிலத்தின் மதிப்பு சதுர மீட்டர் 950 ரூபாய் என்று நிர்ணயம் செய்திருக்கும் நிலத்தினை மோடி அரசு சதுர மீட்டர் ஒரு ரூபாய் என்ற முறையில் 8 லட்சம் சதுர மீட்டர் நிலத்தை எல் அண்ட் டி நிறுவனத்திற்கு வாரி வழங்கியிருக்கிறது. அதேபோன்று டாட்டா நானோ கார் தொழிற்சாலை அமைந்துள்ள இடத்தின் சந்தை மதிப்பு சதுர மீட்டர் 10 ஆயிரம் ரூபாய் அளவிலானது. அதனை வெறுமனே சதுர மீட்டர் 900 ரூபாய்க்கு விற்றது. இவ்வாறு 1100 ஏக்கர் நிலம் விற்கப்பட்டது. அந்நிறுவனம் வங்கியிடமிருந்து 9570 கோடி ரூபாய் வெறும் 0.10 சதவீத வட்டி விகிதத்தில் அதனையும் 20 ஆண்டு காலம் கழித்துவழங்கக்கூடிய விதத்தில் பெற்றிருக்கிறது. எந்தவொரு நிதி நிறுவனமும் தான் மேற்கொள்ளவிருக்கும் திட்டத்தின் மொத்த செலவினத்தில் 100 சதவீதத்திற்கு மேல் கடன் கொடுக்காது.
              நானோ திட்டத்தின் மொத்த செலவின மதிப்பு 2200 கோடி ரூபாய்தான். ஆனால் அது 9570 கோடி ரூபாய் கடன் வாங்கி இருக்கிறது. இவைதவிர மானிய கட்டணத்தில் மின்சாரம், தண்ணீர் ஆகியவையும் மற்றும் பல வசதிகளும் அளிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் விளைவாக குஜராத் அரசாங்கத்திற்கு 33 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நானோ கார் உற்பத்திக்கும் குஜராத் அரசாங்கம் வழங்கியிருக்கும் சலுகை என்பது 60 ஆயிரம் ரூபாய் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதேபோன்று தான் மற்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சலுகைகள் வாரி வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதான் `வீரியம் மிகுந்த குஜராத்’’ உண்மை நிலையாகும். அதே சமயத்தில் நாட்டிலேயே மக்களின் வறுமை விகிதம் மிக அதிகமாக இருக்கும் மாநிலம் குஜராத் மாநிலம் தான். சுமார் 4 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கிடையாது. மோடி அரசாங்கத்தின் கீழ் 9829 தொழிலாளர்கள், 5447 விவசாயிகள், 919 கூலிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.
            மாநில அரசின் கடனும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்த வண்ணம் உள்ளது. 2008-09ம் ஆண்டில் 87,010 கோடி ரூபாயாக இருந்த கடன், 2009-10ம் ஆண்டில் 98,528 கோடி ரூபாயாகவும், 2010-11ல் 1 லட்சத்து 12 ஆயிரத்து 462 கோடி ரூபாயாகவும் அதிகரித்திருக்கிறது. எனவேதான் கார்ப்பரேட்டுகள் மோடியை தங்கள் `இதயக்கனி’யாக ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். மக்களின் வாழ்க்கைத்தரம் கடுமையாக சீரழிந்துள்ளதைப்பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. இந்தியக் கார்ப்பரேட்டுகளின் எதிர் பார்ப்புகள் ஒருவேளை ஈடேறுமானால் என்னாகும்? நாட்டில் மதவெறி வன்முறை நடவடிக்கைகளும் சலுகைசார் முதலாளித்துவமும் இணைந்து மெகா ஊழல்கள் உருவாகும். இதன் விளைவு மிகவும் கொடூரமாக இருக்கும். மனித உரிமைகள், பிரஜா உரிமைகள் நசுக்கப்படும். இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை காணும் சமூக நல்லிணக்க மாண்பே கடும்பாதிப்புக்கு உள்ளாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, பெரும்பான்மை மக்களின் வாழ்க்கைத் தரம் கடும் வீழ்ச்சிக்கு உள்ளாகும்.
         எனவே நாட்டிற்குத் தேவை காங்கிரஸ் மற்றும் பாஜக பின்பற்றி வந்த கொள்கைகளிலிருந்து மாறுபட்ட, மாற்றுக் கொள்கைத் திசைவழிதான். அதன்மூலமாக மட்டுமே பொருளாதார வளர்ச்சியும் அதனுடன் அனைத்துப் பகுதி மக்களின் பொருளாதார வளமும் அதிகரித்திடும். ஒருசிலரை மட்டும் ஒளிரச்செய்திடும் கேடுகெட்ட கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைத்திட முடியும். இத்தகைய மாற்றுக் கொள்கை சாத்தியமானது மட்டுமல்ல, நடைமுறைப்படுத்தக்கூடியதுமாகும். நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்த லின்போது இதனை அடையும் விதத்தில் மாற்று அரசாங்கத்தை அமைப்பதே நம்முன் உள்ள கடமையாகும்.
தமிழில் : ச.வீரமணி
நன்றி :      
 
People's Democracy

ஞாயிறு, 16 மார்ச், 2014

தோல்வி பயத்தில் தன் மாநிலத்தை விட்டே ஓடும் கோழை நரேந்திர மோடி...!

              
            பாராளுமன்றத் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்னரே பாரதீய ஜனதாக் கட்சியின் ''பிரதமர் கனவு வேட்பாளராக'' மோடி அறிவிக்கப்பட்டவுடனேயே  மோடி தான் நாட்டின் அடுத்த பிரதமர் என்றும்,   நாடு முழுதும் ''மோடி அலை'' தான் வீசுகிறது என்றும் பாஜாக-வினரும், ஊடகங்களும் பிரச்சாரத்தை அள்ளி வீசிக்கொண்டிருந்தார்கள். குஜராத் மாநிலத்தில்  பல்வேறு துறைகளில் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் கொண்டு வந்த  மோடியால் மட்டுமே நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்து செல்லமுடியும் என்றெல்லாம்  கடந்த ஓராண்டு காலமாக நாடுமுழுதும்  பல கோடிகளை செலவழித்து பிரச்சாரம் செய்துவந்தனர்.
            ஆனால் ''பிரதமர் கனவு வேட்பாளராக'' அறிவிக்கப்பட்ட மோடி போட்டியிடப்போகும் தொகுதியை மட்டும் சொல்லப்படாமலேயே இருந்தது. காரணம் மோடியின் பார்வை உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியின் மீது தான் இருந்தது. ஏற்கனவே ''அமைதிப்படை அமாவாசை'' பாணியில் பிரதமர் கனவில் மிதந்த அத்வானியை கவிழ்த்தது போல், உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த வாரணாசி பாராளுமன்றத் தொகுதியின் தற்போதைய எம்.பி-யான பாரதீய ஜனதாக் கட்சியை சேர்ந்த முரளி மனோகர் ஜோஷியை கவிழ்த்துவிட்டு அந்த தொகுதியை தான் போட்டியிட கைப்பற்றிக்கொண்டார். அந்த தொகுதியை மோடிக்கென்று அறிவிக்கும் வரையில் இழுபறியாகவே இருந்தது. இப்போது ஒரு வழியாக அறிவிக்கப்பட்டுவிட்டது.
            நமக்கு ஒரு சந்தேகம் என்னவென்றால்...? ஒரு மாநில முதல்வர் தான் தேர்தலில் போட்டிப்போட தன் சொந்த மாநிலத்தில் அவருக்கான தொகுதியை தேடுவது தானே முறையாக இருக்கும். நியாயமாகவும் இருக்கும். ஆனால் மோடியோ தன் சொந்த மாநிலத்தை விட்டுவிட்டு வேற்று மாநிலத்தில் தனக்கான தொகுதியை தேடியது ஏன் என்பது தான் நமது கேள்வி...? 
             மோடியின் தலைமையிலான ஆட்சியால் பல்வேறு துறைகளிலும் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும்  கண்டுகொண்டிருக்கும் குஜராத் மக்கள் மோடிக்கு வாக்களிக்கமாட்டார்களா...? என்பது தான் நமது கேள்வி.
      மோடியின் திறமையான ஆட்சியினால் குஜராத்தில் தேனாறும், பாலாறும் ஓடிக்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருக்கும் அம்மாநில மக்கள் மோடிக்கு வாக்களிக்கமாட்டார்களா...? என்பது தான் நமது கேள்வி.
    விவசாயமும், கல்வியும், மின்சாரமும் ஒளிரும் ''குஜராத் மாடலை'' அனுபவித்துக்கொண்டிருக்கும் குஜராத் மக்கள் தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று மோடி முடிவு செய்துவிட்டாரா...? என்பது தான் நமது கேள்வி...?
            கடந்த 2002 - ஆம் ஆண்டு இஸ்லாமியர்களுக்கெதிராக தாம் நிகழ்த்திய ''இனப்படுகொலையை'' மறந்திராத குஜராத் மக்கள் தனக்கெதிராக வாக்களித்துவிடுவார்கள் என்ற பயமா...? என்பது தான் நமது கேள்வி.
          அப்படி என்றால் ''குஜராத் வளர்ச்சிப்பாதையில் செல்கிறது'' என்று இதுவரையில் செய்தப்  பிரச்சாரம் பொய் என்பதை மோடி ஒப்புக்கொள்வாரா...?
                தேர்தல் தேதி அறிவித்தவுடன் மோடிக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது. குஜராத்தில் போட்டியிட்டால் தோல்வி நிச்சயம் என்பதை மோடி புரிந்துவைத்திருக்கிறார். அதனால் தான் ''காவிச்சாயம்'' பூசிய ''பாதுகாப்பான'' தொகுதியை தேடி கண்டுபிடித்து தட்டிப் பறித்திருக்கிறார்.
               தோல்வி பயத்தில் தன்  சொந்த மாநிலத்தையே விட்டு ஓடும் கோழை தான் இந்த நரேந்திர மோடி என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். 

செவ்வாய், 4 மார்ச், 2014

மதவாதம் பிரித்த உள்ளங்களை மனிதநேயம் இணைத்தது....!

          
           படத்தில் உள்ள அந்த இரண்டு பேர்களையும் இந்த நாடு மறந்திருக்க முடியாது. இது திரைப்படத்தில் வரும் காட்சியல்ல. 2002 - ஆம் ஆண்டு குஜராத்தில் நரேந்திர மோடி நடத்திய ''நரவேட்டை'' ரத்தக்காட்சிகள் தான் அவைகள். இஸ்லாமியர்களுடன் ஒற்றுமையாய் சகோதரர்களாய் வாழ்ந்து வந்த தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட தொழிலாளர்களின் நெஞ்சில் மோடி ''மதம்'' என்ற நஞ்சை வார்த்து, கையில் ஆயுதத்தை கொடுத்து, கொலை பயிற்சியும் தந்து இஸ்லாமியர்களுக்கு எதிராகவே திருப்பிவிட்டபோது, இஸ்லாமியர்களுக்கு எதிராக இரத்தவெறி பிடித்து வெறித்தனமாக வாளேந்தி நிற்கும் பஜ்ரங் தள் என்ற பாரதீய ஜனதாக் கட்சியின் இன்னொரு மதவாத அமைப்பைச் சார்ந்த அசோக் மொச்சி என்ற அந்த இளைஞனின் முகத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த இளைஞன் ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன் என்பது யாருக்கும் தெரியாது. 
           இரத்தவெறியுடன் தன்னையும் தன் குடும்பத்தினரையும் கொல்லப் பாய்ந்துவரும் பஜ்ரங் தள்ளை சேர்ந்த இரத்தவெறிக்கூட்டத்தை பார்த்து பயத்துடன் கதறி கைக்கூப்பி உயிர்பிச்சைக் கேட்கும் குத்புதீன் அன்சாரியின் கொலைநடுங்கும் முகத்தையும் யாரும் மறந்திருக்கமுடியாது. 
             இப்படியான இஸ்லாமியர்களுக்கெதிராக 2002-ஆம் ஆண்டு மோடி நடத்திய இரத்தவேட்டைக்குப் பிறகு, மதக்கலவரத்தில் பங்கெடுத்து இன்று செருப்புத் தைக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் அசோக் மொச்சி என்ற அந்த இளைஞனும், மதவெறிக் கூட்டத்திடம் அஞ்சி கைக்கூப்பி உயிர்பிச்சை கேட்ட குத்புதீன் அன்சாரி என்ற அந்த இஸ்லாமிய இளைஞனும் பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து இன்று சந்தித்தது என்பது உலகில் ஓர் அதிசயத்தக்க நிகழ்வாகும். மேடையில் சந்தித்துக்கொண்ட இருவரும் மலர் கொடுத்து கைக்கொடுத்து நட்பு பாராட்டியது என்பது வரவேற்கத்தக்க நிகழ்ச்சியாகும். 
                நெகிழ்ச்சியான  இந்த சந்திப்பு நிகழ்ச்சி என்பது கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்றது. பொதுமக்கள் முன்னிலையில் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை நெஞ்சார பாராட்ட வேண்டும். மதவாதம் பிரித்துவைத்த ஒற்றுமையை, ஒருமைப்பாட்டை, மத நல்லிணக்கத்தை மனிதநேயம் சேர்த்துவைத்திருக்கிறது. மனிதநேயம் போற்றும், மானுடத்தை வாழவைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரிப்போம்.

சனி, 30 நவம்பர், 2013

நரேந்திர மோடியின் தள்ளி வைக்கப்பட்ட மனைவி....!

ஞாயிறு, 17 நவம்பர், 2013

இளம்பெண்ணை உளவு பார்த்த மோடியும், அவரது கூட்டாளியும்...!

        
          வர வர நமக்கெல்லாம் தலைகுனிவை ஏற்படுத்தும் ''பிரதமர் கனவு வேட்பாளர்'' நரேந்திர மோடியின் ''லீலைகளும்'' வெளியே வரத்தொடங்கிவிட்டன. ''கோப்ரா போஸ்ட்'' என்ற புலனாய்வு இணையதள ஊடகம் இந்த பரபரப்புச் செய்தியை வெளியிட்டிருக்கிறது.
           2009 - ஆம் ஆண்டில் பெங்களூரிலிருந்து அகமதாபாத்திற்கு வருகை புரிந்த பெண் பொறியாளர் ஒருவரை குஜராத் மாநிலத்தின் மூத்த போலீஸ் அதிகாரி ஜி.எல்.சிங்கால் என்பவரின் தலைமையில் குஜராத் போலீசார் உளவு பார்த்துள்ளனர். அகமதாபாத்தில் அந்தப் பெண் சென்ற இடங்களிலெல்லாம் - விமான நிலையம், தங்கியிருந்த ஹோட்டல், உணவகம், ஷாப்பிங் மால், உடற்பயிற்சிக்கூடம், மருத்துவமனை என பல்வேறு இடங்களில் பின்தொடர்ந்து வேவு பார்த்துள்ளனர் என்பது அதிர்ச்சித் தரக்கூடிய  தகவல்களாகும். . வேவு பார்க்கப் பட்டதாகக் கூறப்படும் அந்த  பெண்ணின் பெற்றோர் குஜராத்தின் அகமதாபாத் நகரில் வசிப்பதாகவும்,  அவர்களைப் பார்க்க தான் அந்தப் பெண், பெங்களூரில் இருந்து அகமதாபாத் அடிக்கடி வந்து சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
            ''மேலிட உத்தரவின்'' பேரில், அப்போதைய உள்துறை அமைச்சரும், மோடியும் நெருங்கிய கூட்டாளியுமான அமித் ஷா தான் இந்த ''மானங்கெட்ட'' வேலைக்கு போலீசாரைப் பணித்ததாக அந்த இணையதள ஊடகம் சுட்டிக்காட்டுகிறது. தொலைபேசி உரையாடலிலும் ''மேலிட உத்தரவின்'' பேரில் தான் அந்தப் பெண் வேவு பார்க்கப்பட்டதாக மோடியின் கூட்டாளி அமித் ஷாவே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்படியென்றால் ''மேலிடம்'' என்று சொல்லப்படுவது யார்....? குஜராத்தில் ''மேலிடம்'' என்று சொன்னால், சந்தேகமில்லாமல் அது நரேந்திர மோடியை தான் குறிக்கும் என்பதை யாரும் மறுக்கமுடியாது. நிச்சயமாக வேறு யாரையும் குறிப்பதற்கு வாய்ப்பில்லை. ஆகவே இளம்பெண்ணை உளவு பார்த்த விஷயத்தில் ''பிரதமர் கனவு வேட்பாளர்'' நரேந்திர மோடிக்கும் முக்கிய பங்கு இருப்பது நமக்கு தெளிவாகத் தெரிகிறது.
           அதிகாரம் மற்றும் போலீசாரை பயன்படுத்தி இளம்பெண் ஒருவரின் அந்தரங்க வாழ்க்கையை வேவு பார்ப்பது என்பது ஒரு அநாகரீகமான செயலாகும். அதுமட்டுமல்லாது இயற்கை மரபுகளுக்கும், சட்டவிதிகளுக்கும் எதிரானது.
          அதுமட்டுமல்ல, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாநில முதல்வர் நரேந்திர மோடி, அவரது கூட்டாளி அமித் ஷா மற்றும் சம்பந்தபட்ட போலீஸ் அதிகாரிகள் மீது முறையான நீதிமன்ற விசாரணை நடத்தப்படவேண்டும். இந்த விவகாரத்தில் மோடிக்கு தொடர்பு இருப்பது நிரூபிக்கப்பட்டால், ''இம்முறையாவது'' அவர் தண்டிக்கப்படவேண்டும்.

வெள்ளி, 19 ஜூலை, 2013

மோடியின் குஜராத் Vs ஹிட்லரின் ஜெர்மனி


கட்டுரையாளர் : மருதன், தமிழ் பேப்பர் - இணையதளம்

          அடால்ஃப் ஹிட்லர் யூத இனப் படுகொலைகளை நிகழ்த்திக்கொண்டிருந்தபோது, கற்றறிந்த, நடுத்தர ஜெர்மானியர்கள் செயலற்று அமைதியாக நின்றனர் என்று வரலாற்றாசிரியர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். இந்தக் கனத்த அமைதிக்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும். விஷயத்தின் விபரீதத்தை மக்கள் உணராமல் இருந்திருக்கலாம். அல்லது, ஹிட்லரின் பிரசாரத்தை நம்பி, நம் நன்மைக்காகத்தானே இவ்வாறு செய்கிறார் என்று நினைத்திருக்கலாம். அல்லது, ஓர் அரசை எதிர்த்து சாமானியர்கள் நம்மால் என்ன செய்துவிடமுடியும் என்று கையறு நிலையில் அனைத்தையும் சகித்துக்கொண்டு இருந்திருக்கலாம். காரணங்கள் அல்ல, விளைவுகளே இங்கு முக்கியம்.  யூதர்கள் படுகொலை செய்யப்பட்டதை யாராலும் தடுத்து நிறுத்தமுடியவில்லை என்பது முக்கியம்.  ரகசியமாக அல்ல, எல்லோருக்கும் முன்னால் திட்டமிட்டு வதை முகாம்களை உருவாக்கி, யூதர்களைப் பட்டவர்த்தனமாக அழித்தொழித்தான் ஹிட்லர்.
          ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால் (ஜூன் 2004) இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேர் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு குஜராத் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் உண்மையில் தீவிரவாதிகள் அல்ல; நடைபெற்றது போலி என்கவுன்ட்டர்தான் என்று சிபிஐ தற்போது அறிவித்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக குஜராத்தைச் சேர்ந்த ஏழு காவல் துறை  அதிகாரிகள்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நரேந்திர மோடிமீண்டும் விமரிசன வட்டத்துக்குள் வந்து விழுந்திருக்கிறார்.
             ஹிட்லர் என்னும் ஆளுமை உருவான கதையும் அவர் ஜெர்மனியில் ஆட்சியைக் கைப்பற்றிய வரலாறும் The Rise and Fall of Third Reich-ல் விவரிக்கப்பட்டுள்ளது. ஹிட்லர் ஏன், எவ்வாறு யூதர்களைத் தேர்ந்தெடுத்தான், எப்படி வெறுப்பு அரசியலை வளர்த்தெடுத்தான், யூத எதிர்ப்பை எப்படி ஒரு சித்தாந்ததமாக வடிவமைத்தான், அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி எப்படித் தன் கனவைச் செயல்படுத்தத் தொடங்கினான் என்பது இந்தப் புத்தகத்தில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
          ஹிட்லரையும் நரேந்திர மோடியையும் ஒப்பிடுவது அல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம்.  மாறாக, ஹிட்லரின் ஜெர்மனியையும் மோடியின் இந்தியாவையும் அருகருகே நிறுத்தி வைத்து ஒப்பிட விரும்புகிறேன்.
                 யூதர்களுக்கு எதிரான ஹிட்லரின் வெறுப்பு பிரசாரத்தை ஜெர்மானியர்கள் ஆட்சேபிக்கவில்லை. அதில் பெரிதளவும் உண்மை இருப்பதாக அவர்கள் நினைத்தனர். யூதர்களை ஜெர்மானியர்களாக அவர்களால் ஏற்கமுடியவில்லை. யூதர்களுக்குத் தேச பக்தி இல்லை என்றும் அவர்கள் தனியொரு குழுவாக இருக்கிறார்கள் என்றும் நமக்கு வரவேண்டிய வாய்ப்புகளை தட்டிப் பறித்துக்கொள்கிறார்கள் என்றும் ஜெர்மானியர்கள் நம்பினார்கள். இந்த பெரும்பான்மை நம்பிக்கையின்மீதே ஹிட்லர் தன் வெறுப்பு அரசியலைக் கட்டமைத்துக்கொண்டான். இந்த வெறுப்பு அரசியலைக் கொண்டுதான் அவன் யூதர்களைக் கொல்லத் தொடங்கினான்.
                நரேந்திர மோடியும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும் இந்துக்களையே இந்தியர்களாகக் காண்கின்றனர். இஸ்லாமியர்களை இந்துக்களுக்கு எதிரானவர்களாகவே அவர்கள் தொடர்ந்து முன்னிறுத்தி வந்திருக்கிறார்கள். மோடி வெளிப்படையாகவே இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பொதுக்கூட்டங்களில் உரையாடியிருக்கிறார். 2002 குஜராத் படுகொலைகளில் மோடிக்குப் பங்கு இருக்கிறது என்பது மட்டுமல்ல, 2002 சம்பவத்தை தனது உந்து பலகையாகப் பயன்படுத்தி மேலேழும்பி வந்தவர் அவர். சந்தேகத்துக்கு இடமின்றி அதிலிருந்து பெரும் ஆதாயமும் அடைந்திருக்கிறார்.
               அந்த வகையில், ஹிட்லர், மோடி ஆகிய இருவருடைய எழுச்சியின் அடித்தளத்திலும் வெறுப்பு அரசியல் (அல்லது வெறுப்பு அரசியலும்) காணக்கிடைக்கிறது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. மோடி யாரையும் நேரடியாகக் கொல்லவில்லை என்பதை ஒரு வாதமாக முன்வைக்கமுடியாது. ஹிட்லரும்தான் யாரையும் நேரடியாகக் கொல்லவில்லை. ஆனால் நிச்சயமாக ஹிட்லரின் கரங்களில் படிந்த அதே ரத்தக் கறை மோடியின் கரங்களிலும் படிந்திருக்கிறது. அந்தக் கரங்களில் கறை அதிகம், இதில் குறைச்சல் என்று வேண்டுமானால் ஒருவர் வாதிடலாம்.
                 அல்ல, மோடியின் கரங்களில் கறையே இல்லை என்று சிலர் வாதிடும்போது தவிர்க்கயிலாதபடி ஜெர்மானியர்கள் நினைவுக்கு வந்துவிடுகிறார்கள். இப்போது இஷ்ரத் ஜஹான் வழக்கு பற்றிய விவாதங்களிலும்கூட இவர்கள் நரேந்திர மோடியைத் தப்புவிக்கவே ஆர்வமாக இருக்கிறார்கள். ‘இஷ்ரத் ஜஹான் மோதல் கொலை மோடிக்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லையா? 2002 சம்பவத்தில் மோடி நேரடியாக ஈடுபட்டார் என்று எங்காவது நீதிமன்ற தீர்ப்பு கூறுகிறதா? (கரண் தாப்பருடனான முடிவுறாத டிவி பேட்டியின்போதும் மோடியே இதையே கேட்டார்). மோடியின் குஜராத்தில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? அந்த ஒரு சம்பவம் (2002) நீங்கலாக மோடிமீது ஏதாவது குற்றம் சுமத்த முடியுமா உங்களால்?’
                 நம் கண் முன்னால் ஒரு பெரும் குற்றம் நிகழ்ந்திருக்கிறது. அதை ஒருவர் தூண்டிவிட்டிருக்கிறார் அல்லது பின்நின்று இயக்கியிருக்கிறார் அல்லது கண்டும் காணாமல் விட்டிருக்கிறார். குறைந்தபட்சம், அதிலிருந்து நேரடி பலன் ஈட்டியிருக்கிறார். இருந்தும் எப்படி அவரை நம்மில் சிலரால் உயர்த்திப் பிடிக்க முடிகிறது? அவரைத் தாங்கி பிடிக்கவேண்டும் என்று எப்படி, ஏன் சிந்திக்கிறோம்? ’குஜராத் மாதிரி வளர்ச்சி’ நம் கண்களைச் கூசச் செய்கிறதா? அழிவைவிட்டுவிட்டு வளர்ச்சியைமட்டுமே அன்னப்பறவைப் போல் நாம் உறிஞ்சி எடுத்து மகிழ்கிறோமா? என்றால், இப்படிப்பட்ட cherry picking மதிப்பீடுகளை ஹிட்லருக்கும்கூட நம்மால் அருளமுடியும் அல்லவா?
               இந்துத்துவா கொள்கையோடு உடன்படுவதால் மோடியை உயர்த்திப் பிடிப்பவர்களைக்கூட புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால், கற்றறிந்த, நடுத்தர வர்க்க இந்தியர்களில் ஒரு சாரார் மோடியை அவருடைய ‘குஜராத் மாதிரி வளர்ச்சிக்காக’ 2002-ஐ வசதியாக மறந்துவிட்டு ஆதரிப்பதைப் பார்க்கும்போது அச்சமே ஏற்படுகிறது. மோடியை உயர்த்திப் பிடிப்பதன்மூலம் இவர்கள் வெறுப்பு அரசியலையும்கூட சேர்த்தே உயர்த்திப்பிடிக்கிறார்களா? இன்னும் வெளிப்படையாகச் சொல்லவேண்டுமானால், இஸ்லாமிய வெறுப்பைத்தான் இவர்கள் மோடி ஆதரவாக முன்வைக்கிறார்களா? மீண்டும் மீண்டும் மோடியை idolize செய்வதன்மூலம் இவர்கள் தெரியப்படுத்தும் செய்தி என்ன? யூதர்களை அடியோடு வெறுத்த பலர் ஹிட்லரை மனமுவந்து ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
             அறம் சார்ந்த விழுமியங்களை நாம் மீட்டெடுக்கவேண்டிய தருணமிது. ஹிட்லரின் ஜெர்மனி செய்த தவறை மோடியின் இந்தியா இழைக்கக்கூடாது.  குஜராத் அரசு ஆவணங்கள் சொல்வதைப் போலவே அந்த மாநிலம் வளர்ச்சியடைந்திருந்தாலும்கூட நாம் நரேந்திர மோடியை நோக்கி அறம் சார்ந்த கேள்விகளை எழுப்பியே தீரவேண்டும். 2002-ஐ நாமும் மறக்கக்கூடாது; மோடி அதனை மறந்துபோகவும் அனுமதிக்கக்கூடாது. மோடியின் செயல்களை நாம் நியாயப்படுத்தி பேசும் ஒவ்வொரு முறையும் நாம் வரலாற்றில் பல அடிகள் பின்னோக்கிச் செல்கிறோம். இப்படி பின்னோக்கி நகர்ந்து நகர்ந்து செல்லும்போது ஒரு கட்டத்தில் நாம் ஹிட்லரின் ஜெர்மனியைச் சந்திக்கவேண்டியிருக்கும்.
           அறம் அத்தனை முக்கியமல்ல, வளர்ச்சியைக் காட்டினால் போதும் என்னும் அபாயகரமான செய்தியை அரசியல்வாதிகளுக்கு நாம் வெளிப்படுத்துவது இன்றைய சமூகத்தை மட்டுமல்ல இனிவரும் சமூகங்களையும் சேர்த்து பாதிக்கும். அதற்குத் துணை போன பெருமை மட்டும் நமக்கு எஞ்சி நிற்கும்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

வியாழன், 4 ஜூலை, 2013

குஜராத் போலி என்கவுண்டர் - நரேந்திர மோடியின் முகத்திரையை கிழிக்கத் தயங்குவதேன்....?



                     முதலமைச்சர் நாற்காலியில் சொகுசாக உட்கார்ந்திருந்தாலும், குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு இந்திய பிரதமர் நாற்காலியின் மீது எப்போதுமே ஒரு கண் உண்டு. அதற்காக மக்கள் மனதில் தன்னை ஒரு ஹீரோவாக நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அடிக்கடி ஹீரோ மாதிரி ஏதாவது ஸ்டண்ட் அடித்துக்கொண்டே இருப்பார். அண்மையில் கூட உத்திரகாண்ட்டில் ஆற்றின் சீற்றத்தால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கித் தவித்த 15,000 குஜராத் மாநில மக்களை மட்டும் நரேந்திர மோடி தான் மட்டும் தன்னுடைய அதிகாரிகள் சிலரை அழைத்துக்கொண்டு ஹெலிகாப்டரில் பறந்து சென்று காப்பாற்றி அழைத்து வந்ததாக ''காதில் பூச்சுற்றும் செய்தியை'' பரவலாக செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் பரப்பிவிட்டார்.
         இந்தியாவிலுள்ள முதலமைச்சர்களிலேயே தன்னை வித்தியாசமான முதலமைச்சராக காட்டிக்கொள்வதற்காகவும், பப்ளிசிடிக்காவும் ஒரு ஹீரோவைப் போன்று ஸ்டண்ட் அடித்து திரிபவர் தான் இந்த நரேந்திர மோடி.
         இதேப்போல் 2002 - ஆம் ஆண்டில் தான் இந்து மதத்தை காக்க வந்த பரமாத்மாவாக தன்னைக் காட்டிக் கொள்வதற்காகவே மதவெறி பிடித்த நரேந்திர மோடி ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை கொன்று குவித்தார். இதன் மூலம் இந்துக்கள் மத்தியில் தன்னை ஒரு ஹீரோவாக - ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணியாக காட்டிக்கொண்டார்.
         அதற்கு பிறகும் ''பப்ளிசிட்டி'' பிரியரான நரேந்திர மோடியின் உள்ளே தூங்கிக்கொண்டிருந்த ''மதம் பிடித்த மிருகம்''  2004 - ஆம் ஆண்டு மீண்டும் விழித்துக்கொண்டது. ''ரகசிய போலிஸ் 115'' மற்றும் ''ஜேம்ஸ்பாண்டு 007'' வேஷங்களை மாட்டிக்கொண்டு, மும்பை கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு அப்பாவிகளை ''டப்.. டப்..ன்னு'' சுட்டு தள்ளி விட்டார். ஏண்டா பாவி சுட்டேன்னு கேட்டா, ''அவிங்கல்லாம் லஷ்கர் - இ - தொய்வா தீவிரவாத அமைப்பினால் என்னை கொலை செய்ய அனுப்பப்பட்ட ஆளுங்க... அதான் சுட்டுட்டேன்னு நரேந்திர மோடி எல்லாரும் நம்புற மாதிரி டபாய்ச்சுட்டாரு. எந்தவிதமான விசாரணையும் இன்றி என்கவுண்டர் என்ற பெயரில் இரக்கமின்றி செய்யப்பட்ட படுகொலை அது. எப்போதுமே சினிமாவில ஹீரோ கொலை பண்ணா தப்பே கிடையாதே. அதேப்போல் தான் இந்த ஹீரோ பண்ணக் கொலையையும் மூடி மறைத்துவிட்டார்கள். சட்டத்தையும், நீதியையும் அதே என்கவுண்டர் மூலம் கொலை செய்து விடலாம் என்று நினைத்திருந்தார்கள்.
          இறுதியாக பாதிக்கப்பட்டவர்களின் கடுமையான போராட்டங்களுக்குப் பின் உச்சநீதிமன்றத்தின் ஆணைபடி , மத்திய புலனாய்வு நிறுவனமான சி.பி.ஐ விசாரித்து அண்மையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருக்கிறது. இந்த வழக்கிலும் சி.பி.ஐ வழக்கம் போல் எய்தவர்களை விட்டுவிட்டு அம்புகளை மட்டுமே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருக்கிறது என்பதை தான் நடுநிலையான மக்கள் முணுமுணுக்கிறார்கள்.

வியாழன், 27 டிசம்பர், 2012

அன்புள்ள மோடிக்கு, ஹிட்லர் எழுதுவது… !

அன்புள்ள நரேந்திர மோடிக்கு
         நான் என்னை அறிமுகம் செய்துகொள்ளவேண்டிய அவசியம் இருக்காது. நாம் இதுவரை சந்தித்துக் கொண்டதில்லை என்றாலும் உன்னை என்னுடைய சகோதரனாகவே கருதிவந்தேன். இப்போது உன்னை குருவாக ஏற்றுக்கொண்டுவிட்டேன். இனவெறுப்பு அல்லது இனஅழித்தொழிப்பு என்னும் பெயரால் என் செயல்கள் இன்று அழைக்கப்படுகின்றன. மனித குலத்தின் விரோதியாகவும், படுபயங்கர சாத்தானாகவும் என்னைப் பலர் உருவகப்படுத்துகிறார்கள். 
          பல லட்சக்கணக்கானவர்களை நான் கொன்றேனாம். குழந்தைகள் என்றும் பெண்கள் என்றும் வயதானவர்கள் என்றும் பாராமல் யூதர்களை நான் தேடித்தேடி சிறைப்பிடித்து அழித்தேனாம். என்ன ஓர் அபாண்டமான குற்றச்சாட்டு! ஜெர்மனியைச் சுத்தப்படுத்தியவன் நான். கசடுகளைக் கண்டறிந்து களைவது ஒரு குற்றமா? நோயைக் கண்டுபிடித்து அழிப்பது தவறாகுமா? 
           நல்லவேளை, நரேந்திர மோடி, என்னை நீ நன்கு அறிந்து வைத்திருக்கிறாய். ஏன், உன் இயக்கத்தில் உள்ள பலரும் என்னைப் பற்றிய மிகச் சரியான மதிப்பீட்டையே உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சி தான். மீடியாவை எப்படி கையகப்படுத்திக் கொள்ள வேண்டும், வலுவான ஒரு பிரசாச வாகனமாக எப்படி அதனை மாற்றியமைக்க வேண்டும் என்பதை உலகுக்குக் கற்றுக்கொடுத்தவன் நான். குழந்தைகள் முயல்களைப் போல் தாவிவந்து பூங்கொத்து கொடுத்து என்னை வரவேற்பது போலவும், லட்சக்கணக்கான ஜெர்மானிய வீரர்கள் என் தலைமையின் கீழ் உற்சாகத்துடன் களத்துக்குச் செல்வது போலவும் பல புகைப்படங்களை வெளியிட்டு என் மக்களை நான் ஈர்த்திருக்கிறேன். 
          ஆஹா ஹிட்லரைப் போன்ற தலைவர் இந்த அகிலத்தில் உண்டா என்று வாய்பிளக்கச் செய்திருக்கிறேன். ஆனால், நீ என்னை மிஞ்சிவிட்டாய், நரேந்திர மோடி. என்னைக் கடந்து நீ வெகு தூரம் சென்று விட்டாய். மூன்று நாள்களாக நீ நடத்திய உண்ணாவிரதத்தைக் கண்டு நான் வெலவெலத்துப் போய்விட்டேன். என்னவொரு சாதுர்யம்! என்னவொரு மேதாவிலாசம்! நீ எத்தனை கூர் மதி படைத்தவன் என்பதைப் புரிந்து கொள்ள இந்த ஒரு சம்பவம் போதாதா? 
          பிப்ரவரி 2002ல் குஜராத் கலவரத்தால் வெடித்த போது நான் இப்படிச் சொல்லிக்கொண்டேன். ‘பாவம் மோடி, இனி அவன் மீண்டும் அரசியலுக்குள் காலடி எடுத்து வைக்க முடியாது!’ உன் ஆசிர்வாதத்துடனும் அங்கீகாரத்துடனும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் குஜராத்தில் கொல்லப்பட்ட போது, பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட போது, உயிர் பயத்துடன் முஸ்லிம்கள் குஜராத்தைக் காலி செய்து கொண்டு ஓடிய போது, உன் சகாப்தம் முடிந்து விட்டது என்று கருதினேன். 
             காலம் இறுதித் தீர்ப்பெழுதி விட்டது என்று பயந்தேன். எனக்கு நானே தீர்ப்பெழுதிக் கொண்டு விட்டது உனக்குத் தெரியும். எந்த மூளையைப் பயன்படுத்தி யூதர்களை அகற்றினேனோ அந்த மூளையை நானே சிதறிடித்துவிட்டேன். நான் தோல்வியடைந்துவிட்டேன். என்னால் யூதர்களை மட்டுமே வெற்றி கொள்ள முடிந்தது. உலகத்தை அல்ல. என் ஜெர்மனி இன்று என்னைக் கைவிட்டுவிட்டது! உனக்கும் இப்படிப்பட்ட நிலைமை தான் வந்து சேரும் என்று நினைத்தேன். எப்படி உதித்தது இந்த உண்ணாவிரத யோசனை? யார் சொன்னது? என் அருமை கெப்பல்ஸால்கூட இப்படியொரு திட்டத்தைத் தீட்டியிருக்க முடியாது! 
             மூன்று தினங்கள். வெள்ளாடை உடுத்தி தேவகுமாரன் போல் நீ நடந்து வந்தாய். அலங்கரிக்கப்பட்ட, குளிரூட்டப்பட்ட மேடையில் பாந்தமாக அமர்ந்திருந்தாய். கேள்விக் கணைகளைத் திறமையாகவும் பொறுமையாகவும் எதிர்கொண்டாய். உலகமே உன்னைத் திரும்பிப் பார்த்தது. என் மீதும் குஜராத் மீதும் வீசப்பட்ட கற்களை நான் அமைதியாகச் சேகரித்து வந்தேன். அந்தக் கற்களைக் கொண்டு தான் குஜராத்தை பலமாகக் கட்டமைத்தேன்!’ எவ்வளவு அழுத்தமான வாசகம்! உன் எதிரிகளின் அத்தனைக் குற்றச்சாட்டுகளையும் ஒரு நொடியில், ஒரு வாக்கியத்தில் தகர்த்து உதிர்தது விட்டாய், மோடி! அமைதியாக காரியத்தைச் சாதித்து விட்டாய்! உன் சித்தாந்தமும் என்னுடையதும் ஒன்று தான். உன் அணுகுமுறையும் என்னுடையதும் ஒன்றுதான். ஆனால், உன் செயல்திட்டம் அபாரமானது. 
                யூதர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை முடிவெடுத்தவுடன் நான் என் ராணுவத்தை தான் அழைத்தேன். அவர்களிடம் தான் பொறுப்பை ஒப்படைத்தேன். ஜெர்மனியிலும் ஜெர்மனியைத் தாண்டியும் பல வதை முகாம்களை அவர்கள் உருவாக்கினார்கள். வீடுகளில் புகுந்து, இனம் கண்டு யூதர்களை இழுத்து வந்தார்கள். நூறு நூறாக, ஆயிரம் ஆயிரமாகக் கொன்றார்கள். ஆனால் நீயோ இஸ்லாமியர்களை அழிக்க இந்துக்களைப் பயன்படுத்திக் கொண்டாய். யோசித்துப் பார்த்தால் இதைவிட அற்புதமான ஒரு திட்டத்தை யாராலும் வகுக்க முடியாது என்றே தோன்றுகிறது. 
          செய்ய வேண்டியதைச் செய்துவிட்டு நீ அழகாக ஒதுங்கிக் கொண்டு விட்டாய். ம், விளையாடு என்று பச்சைக்கொடி காட்டி விட்டு நீ புன்னகையுடன் பின் நகர்ந்து விட்டாய். யூதர்கள் ஜெர்மனியின் இதயத்தை அழிக்க வந்த கிருமிகள் என்பதை ஜெர்மானியர்கள் நம்பினார்கள். நம்ப வைத்தேன். ஆனால், அவர்களையே யூதர்களுக்கு எதிராகத் திருப்பி விடும் கலையை நான் கைக்கொள்ளவில்லை. நீ என் சகோதரன் அல்ல, என் குரு என்று நான் அழைத்ததன் காரணம் இப்போது புரிகிறதா? மோடி, நீ காந்தி பிறந்த மண்ணில் இருந்து தோன்றியிருக்கிறாய். 
                 விமானப் படைகளைக் கொண்டு தான் இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனை என்னால் வீழ்த்த முடிந்தது. ஆனால், காந்தி உண்ணாவிரதம் மூலமாகவே பிரிட்டனை விரட்டியடித்து விட்டாராமே! எப்பேர்ப்பட்ட சாதனை! எனக்கும் கூட மிஸ்டர் காந்தியிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அகிம்சையின் முக்கியத்துவம் பற்றி. யூதர்களுடன் ஒன்றிணைந்து வாழ்வது பற்றி. சத்தியத்தின் முக்கியத்தும் பற்றி. யூதர்களுக்கும் கூட அவர் கடிதம் எழுதியிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். வன்முறையை உதறிவிட்டு, அன்பாலும் நேசத்தாலும் என்னை வீழ்த்த வேண்டுமாம்! ஓவென்று சிரித்துவிட்டு காந்தியை நான் மறந்து போனேன். ஆனால், நீ மறக்கவில்லை. மூன்று நாள் உணவை மறுத்ததன் மூலம், உன் ஒட்டுமொத்த எதிரிகளையும் நீ வாயடைக்கச் செய்துவிட்டாய். 
            ‘குஜராத்தில் சிறுபான்மையினருக்காக நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்?’ பந்தலில் இந்தக் கேள்வி உன்னிடம் கேட்கப்பட்ட போது நான் கூர்மையாக உன் முகத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு அசைவும் இல்லை உன்னிடம். விரிந்த புன்னகை விரிந்த படியே இருந்தது. உன் கண்கள், புருவம், கன்னம் எதிலும் அசைவில்லை. நீ துடிக்கவில்லை. பதறவில்லை. (ஒருமுறை தொலைக்காட்சி பேட்டியில் நீ தயங்கியும் சீறியும் பயந்தும் நடுங்கியதைப் பார்த்திருக்கிறேன்!) நீ உன் உதடுகளை இயல்பாகப் பிரித்தாய். 
                பிறகு சொன்னாய். ‘சிறுபான்மையினருக்காக நான் எதுவும் செய்யவில்லை. பெரும்பான்மையினருக்காகவும் எதுவும் செய்யவில்லை. நான் குஜராத்துக்காக உழைக்கிறேன். குஜராத்தின் முன்னேற்றத்துக்காகவே பணியாற்றுகிறேன். சிறுபான்மை, பெரும்பான்மை என்று மக்களை நான் பிரித்து பார்ப்பதில்லை.’ சொல்லி முடித்துவிட்டு, அடுத்த கேள்வி என்ன என்பது போல் ஒரு பார்வை பார்த்தாயே! அந்த இடத்தில் நான் மீண்டும் இறந்து போனேன். 
          என் அகந்தை அழிந்த சமயம் அது. நீ என்னை உலுக்கியெடுத்து விட்டாய், நரேந்திர மோடி. என் அத்தனை சாதனைகளையும் நீ துடைத்து அழித்து விட்டாய். முதல் முதலாகப் பயத்தை நான் தரிசித்தது உன்னிடம்தான். நடைபெற்றதை ‘கலவரம்’ என்று அழைக்கும் துணிச்சல் உனக்கு மட்டும்தான் இருக்கிறது. சடலங்கள் புதைக்கப்பட்ட கையோடு தேர்தலில் நின்று, வாக்கு சேகரித்து, வெற்றி பெறும் தீர்க்கமும் தீரமும் உன்னிடம் மட்டும் தான் இருக்கிறது. 
                  நான் கேள்விப்பட்டது நிஜமா என்று தெரியவில்லை. குஜராத்துக்கு மட்டுமின்றி முழு இந்தியாவுக்கும் நீ தலைமை தாங்கப் போகிறாயாமே! உண்மைதானா? அதற்கான முன்னோட்டம் தான் இந்த உண்ணாவிரதமா? நிச்சயம் நீ வெற்றி பெறுவாய் நரேந்திர மோடி. ஆரிய ரத்தம் தூய்மையானது. உலகை ஆளும் திறன் கொண்டது. நீ மெய்யான ஆரியன். நீ வெல்வாய்! குஜராத்தைப் போலவே இந்தியாவையும் மோடி வளர்த்தெடுக்க வேண்டும் என்று பலர் என் காதுபடப் பேசிக் கொண்டார்கள். நான் சிரித்துக் கொண்டேன். நீயும் சிரித்துக்கொண்டுதான் இருப்பாய் அல்லவா? 
                                                                                                         அன்புடன் 
                                                                                                 அடால்ஃப் ஹிட்லர் 

சனி, 1 செப்டம்பர், 2012

நரவேட்டை நரேந்திர மோடியின் பிரதமர் கனவு தகர்ந்தது....!

        கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில்  இதே நரேந்திர மோடியின் அன்றைய ஆட்சிகாலத்தில், கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தை காரணம் காட்டி, நரோடா பாட்டியாவில் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலையில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான தீர்ப்பு நேற்று முன் தினம் ஆகஸ்ட் 30 - ஆம் தேதி சிறப்பு நீதிமன்றத்தால் அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு என்பது, இத்தனை ஆண்டு காலமாக அந்த இனப் படுகொலையை நேரில் பார்த்து, தீர்ப்புக்காக காத்திருந்த அந்த பகுதி மக்களுக்கு சற்று ஆறுதலைக் கொடுத்திருக்கிறது. 
           நரோடாவில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக இந்து மதவெறியர்கள் நடத்திய கொடுஞ்செயல்களை இன்றைக்கும் எங்களால் மறக்க முடியவில்லை என்று அதை நேரில் பார்த்தவர்கள் அந்த சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சி அளித்திருக்கிறார்கள் . பதைபதைக்க இஸ்லாமியப் பெண்களின் மேலாடை உருவி, கூட்டாக கற்பழித்துக்  கொல்லப்பட்டுக் கிடந்த பெண்களைப்  பார்த்த அந்த மக்கள், அந்த பெண்களின் மானத்தை மறைக்க நாங்கள் எங்கள் துப்பட்டாவை பயன்படுத்தி  மூடினோம். அங்கிருந்த ஆண்களும் கூட தங்கள் முகத்தை திருப்பிக்கொண்டு தாங்கள் அணிந்திருந்த சட்டையை கழற்றி அந்த பெண்களின் மானத்தை மறைத்தார்கள். துணியின்றி கிடந்த சடலத்தை செய்தித்தாள்களைக்  கொண்டு மூடி மறைத்தோம் என்றெல்லாம் நரோடா மக்கள் சாட்சியளித்திருக்கிறார்கள்.
              அது மட்டுமல்ல வயது வித்தியாசமில்லாமல் மொத்தம் 97 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் இஸ்லாமிய பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் என கொல்லப்பட்டார்கள். எரியும் நெருப்பில் வீசி எறியப்பட்டார்கள். பன்னிரெண்டு நாள்  சிசுக்கூட இந்த கொலை பாதகச்செயலிலிருந்து தப்பவில்லை. மதவெறிக் கூட்டத்தினர், அந்த சிசுவை கொன்று தீயில் எரிந்தது  என்பது மிகக்கொடுமையானது. இத்தனை மாபாதகச் செயல்களுக்கும் கொல்வதற்கு  நீண்ட வாளும், தீயிட்டுக் கொளுத்துவதற்கு மண்ணெண்ணையையும் அருகிலிருந்து கொடுத்து உதவிய ''மாபாதகி'' தான் இந்த மாயா பென்  கோத்னானி என்பவள்.   இவள் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவள். அதுமட்டுமல்ல, அத்வானியின் சீடராக இருந்து வகுப்புவாத அரசியலுக்கு  வந்தவள் என்கிற பெருமையும் இவளுக்கு உண்டு. மேலும் அத்வானியைப் போலவே  சுதந்திரத்திற்குப் பிறகு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலிருந்து இந்தியாவிற்கு வந்த குடும்பங்களில் இவளது குடும்பமும் ஒன்று. 
                அந்த படுகொலைகள் நடந்த காலத்தில் இந்த கோத்னானி குஜராத்தில் மோடி அமைச்சரவையில் அமைச்சர் பதவியில் இல்லை. முதலமைச்சர் பொறுப்பிலிருந்து தான் விலக முடியாது என்பதற்கு மோடி இதையே ஒரு வாதமாக இப்போது வைக்கிறார். ஆனால் இந்த படுகொலை சம்பவத்திற்கு பிறகு குற்றஞ்சாட்டப்பட்டு, விசாரணையில் உள்ள ஒருவளை  மோடி எப்படி  அமைச்சராக்கினார் என்பது அன்றே மிகப்பெரிய கேள்விக்குறியாய் எழுந்தது. தான் நினைத்தது போல் படுகொலைகளை முன்னின்று நடத்தியதற்கு பரிசாகவும், தான் அந்த சம்பவம் நடந்த இடத்திலேயே இல்லை என்றும், காந்தி நகரில் இருந்தேன் என்றும்  நீதிமன்றத்தில் அவள் சொன்ன பொய்க்கு நன்றிக்கடனாகவும் தான் இந்த மகா கொடுமைக்காரி கோத்னானிக்கு அமைச்சர் பதவியை கொடுத்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. மோடி இவளை குஜராத் அரசின் குழந்தைகள் மற்றும்  பெண்கள் நலத்துறை அமைச்சராக்கி அழகு பார்த்தார்.
               ஒருவழியாக நடைபெற்ற  நரவேட்டையின் விசாரணையிலிருந்து நரேந்திர மோடி விலக்கப்பட்டது என்பது  ஒரு சோகம் என்றாலும், விசாரணையின் முடிவில் வந்த தீர்ப்பு என்பது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்களும், மனிதநேயமுள்ளவர்களும், மதநல்லிணக்கம் வேண்டுவோர்களும், மதசார்பற்ற கொள்கையாளர்களும் ஓரளவு எதிர்ப்பார்த்த  தீர்ப்பாக அமைந்துள்ளது என்று சொல்லலாம். அவர்களது நம்பிக்கை வீண் போகவில்லை.
            அதேப்போல், சம்பவத்தை நேரில் பார்த்த நரோடாவில் வசிக்கும் மக்கள் '' கடந்த பத்து ஆண்டுகளாக நாங்கள் நிம்மதியில்லாமல் இருந்தோம். இந்த தீர்ப்பின் மூலம் இப்போது தான் எங்களுக்கு நிம்மதி வந்தது'' என்று பெருமூச்சிவிட்டு பேசினார்கள். 
courtesy : The Hindu
            ஆனால், பாகிஸ்தான்  பயங்கரவாதி அஜ்மல் கசாப்பின் தூக்குதண்டனையை கொண்டாடும் பாரதீய ஜனதா கட்சியும், சிவசேனாவும் குஜராத் சிறப்பு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பைக்கேட்டு வாயடைத்துப் போய்விட்டனர் என்பது தான் உண்மை. 
            பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் போதே பிரதமர் பதவியை நோக்கிய அவரது கனவு என்பது இந்த தீர்ப்புக்குப் பிறகு தகர்க்கப்பட்டு விட்டது. இன்னும் சொல்லப்போனால், அருகில் வந்துகொண்டிருக்கக்கூடிய  குஜராத் சட்டமன்றத்  தேர்தலில் கூட, இந்த தீர்ப்பின் காரணமாக மோடியின் கதி மட்டுமல்ல, பாரதீய ஜனதா கட்சியின் கதி கூட அதோ கதியாகத் தான் இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.

புதன், 14 செப்டம்பர், 2011

நம்ப நரவேட்டை நரேந்திர மோடி புனிதர் ஆயிட்டாருடா டோய்...!

        கடந்த 2002 - ஆம் ஆண்டு  குஜராத்தில் கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ் பிரஸ் ரயில் எரிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் முஸ்லிம் சிறுபான்மை மக்களை குறிவைத்து, நரேந்திரமோடி அரசின் முழு ஆதரவோடு, பாஜக-ஆர்எஸ்எஸ் - விஎச்பி - பஜ்ரங்தள் உள்பட மதவெறிப் பரிவாரம் கொடிய வெறியாட்டம் போட்டதை நாடு மறந்திருக்க முடியாது. சுமார் 3 ஆயிரம் இஸ்லாமிய சிறுபான்மை மக்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப் பட்டதையும் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.  இந்த நரவேட்டை தொடர்பாக 10 முக்கிய வழக்குகள் கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. அவற்றில் ஒரு வழக்கு குர்பர்க் வீட்டு வசதிக்கழக பகுதியில் 37 பேர் எரித்து படுகொலை செய்யப்பட்ட வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
                 கடந்த 2002 பிப்ரவரி 28ம்தேதி அகமதாபாத்தில் உள்ள குல்பர்க் வீட்டுவசதிக்கழக வளாகத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈசான் ஜாப்ரி உள்பட 37 பேர் உயிரோடு எரித்து படுகொலை செய்யப்பட்டனர் என்பது நமது ரத்தத்தையே உறைய வைக்கும் சம்பவமாகும். அது மட்டுமல்லாது, சம்பவம் நடந்தபோது காவல் துறையினர் அருகிலேயே இருந்தபோதிலும், மதவெறியர்களால் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் தங்களை காப்பாற்றுமாறு கதறியபோதும், எரித்துக் கொல்லப்படுவதை காவல் துறையினர் பார்த்துக் கொண்டே இருந்தனர் என்பதும் நெஞ்சை பதறவைக்கும் சம்பவமாகும்.
            மேலும்  கொல்லப்பட்ட ஈசான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி, முதலமைச்சர் நரேந்திரமோடி மற்றும் 62 பேர் மீது வழக்கு பதிவு செய்யுமாறு மாநில டிஜிபியிடம் புகார் அளித்தார். ஆனால், மோடி அரசின் காவல்துறை அதை கண்டுகொள்ளாமல் தட்டிக்கழித்தது. இதையடுத்து அவர், குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். குஜராத் உயர் நீதிமன்றமோ அதை  நிராகரித்தது என்பது அதைவிட கொடுமையானது.
         இதற்கிடையே 2008 மார்ச் 26ம்தேதி, குஜராத்தில் நடந்த குர்பர்க் வீட்டு வசதிக்கழக  படுகொலை உள்பட 10 பெரும் படுகொலை வழக்குகள் குறித்து புலனாய்வு செய்வதற்காக சிபிஐயின் முன்னாள் இயக்குநர் ஆர்.கே. ராகவன் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. ஆனால், இந்தக் குழு தனது விசாரணையில் குல்பர்க் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவான நிலையை எடுப்பதாக புகார் கூறி சிறப்பு பொது வழக்கறிஞர் ஆர்.கே.ஷா மற்றும் அவரது துணை வழக்கறிஞர் நைனா பட் ஆகியோர் பதவிகளிலிருந்து ராஜினாமா செய்தனர். இந்தப் பின்னணியில் அதே ஆண்டு மார்ச் 27ம் தேதி குல்பர்க் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதலமைச்சர் நரேந்திர மோடியை சிறப்பு புலனாய்வுக் குழு நேரில் அழைத்து விசாரணை நடத்தியது. இதன் பின்னர் மே 14ம் தேதி உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
                   இந்த அறிக்கையை ஆய்வு செய்த உச்சநீதிமன்றம், இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் குறித்தும், பிரதான குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நரேந்திர மோடியின் நடவடிக்கைகள்  பற்றியும்  எதுவுமே குறிப்பிடப்படாததது  குறித்தும் அதிருப்திகளும், சந்தேகங்களும் வலுவாக எழுந்த நிலையில், சிறப்பு விசாரணை அதிகாரியாக நீதிபதி ராஜு ராமச்சந்திரனை நியமித்தது. அவர், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடமும், சாட்சிகளிடமும், மனுதாரர்களிடமும் நேரடியாகவும், சுயேட்சையாகவும் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தர விட்டது. அதன் அடிப்படையில் தான், கடந்த 2011 ஜூலை 25ம்தேதி, மேற்கண்ட சிறப்பு விசாரணை அதிகாரி ராஜு ராமச்சந்திரன், தனது விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்செய்தார். இந்த அறிக்கையின் மீது தான் செப்டம்பர் 12ம்தேதி திங்களன்று தனது உத்தரவை வெளியிட்ட உச்சநீதிமன்றம், ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவானது இந்த வழக்கில் மேலும் விசாரணையை விரிவு படுத்தி நடத்த வேண்டும் என்றும், அதன்பின்னர் தனது இறுதி அறிக்கையை அகமதாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறியுறுத்தி  உத்தரவு பிறப்பித்தது.
                கடந்த 9 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் சிறப்பு விசாரணை அதிகாரி அளித்த அறிக்கையை தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் விசாரணையை தொடராமல், வழக்கை சம்பந்தப்பட்ட சிறப்பு நீதிமன்றமே நடத்த வேண்டும் என்றும், அதன் முடிவுக்காக காத்திருக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியதை,   2002 மதக்கலவர கொலை   வழக்கில் நரேந்திரமோடியை குற்ற மற்றவராக உச்சநீதிமன்றமே  அங்கீகரித்து விட்டதாக ஒரு பிரம்மையை உருவாக்கி பாரதீய ஜனதா கட்சியின் கூடாரத்தில் ஒரு கொண்டாட்டமே நடந்து வருகிறது.
             பா.ஜ.க - குள்ளேயே தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கிடையே குடுமிபிடி சண்டை ஒரு பக்கம். மக்களுக்கு நன்கு அறிமுகமான  பிரபலமான தலைவருக்கு ஏற்பட்டுள்ள பஞ்சம் இன்னொரு பக்கம். கட்சியில் இளைஞர்களே இல்லாத சூழ்நிலையில் அவர்களை ஈர்ப்பதற்கு ஏதாவது மாயஜாலம் செய்யவேண்டிய கட்டாயம் மற்றொரு புறம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் உச்ச நீதிமன்றத்தின் அறியுறுத்தலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, ''ஆயிரம் தலை வாங்கிய  அபூர்வ சிந்தாமணி'' நரவேட்டை நரேந்திர மோடிக்கு புனித நீராட்டுவிழா நடத்தி, ''இவரு ரொம்ப நல்லவரு''ன்னு  ஒரு பட்டத்தைச் சூட்டி, பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக பட்டாபிஷேகம் நடத்தி எதிர்வரும் தேர்தலில் ''எப்படியாவது'' ஆட்சியை பிடித்துவிடலாமென்று கனவு காண்கிறார்கள் பாரதீய ஜனதா கட்சியினரும், நரவேட்டை நரேந்திர மோடியும் என்பது தான் வெளிப்படையாக மக்களுக்கு தெரிகின்ற உண்மையாகும்.