செவ்வாய், 30 செப்டம்பர், 2014

தமிழகத்தில் முதல்முறையாக ஒப்பாரி வைத்து அமைச்சர்கள் பதவியேற்பு...!

              சென்ற சனிக்கிழமையன்று ''வருமானத்திற்கு அதிகமான சொத்துக்குவிப்பு'' வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை குற்றவாளி என்று அறிவித்து நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.100கோடி அபராதம் வழங்கி தீர்ப்பளித்து அன்றைய தினமே சிறைக்குள் தள்ளியது. ஜெயலலிதா சிறைக்கு சென்றது எதற்காக என்று அவரது அமைச்சர்களும், கட்சிக்காரர்களும் யோசிக்கவே இல்லை. என்ன ஆர்ப்பாட்டம்...? தமிழ்நாட்டையே கதிகலங்க வெச்சிட்டாங்க. பொது சொத்தான பஸ்களை எரிக்கிறது. திறந்திருக்கும் கடைகளை அடித்து நொறுக்கிறது. தனியார் வாகனங்களை தீயிட்டு கொளுத்துவது. சேதப்படுத்துவது. ஜெயலலிதாவின் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகள் என்னா.. அட்டகாசம் பண்றாங்க. பொது மக்கள் இவர்களுக்கு எதிராக திரும்பினால் என்னாகும். ஜெயலலிதா என்ன சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்றாரா...? அல்லது மக்கள் பிரச்சனைகளுக்காக போராடி சிறைக்கு சென்றாரா...? இல்லையே அரசு பதவியை தவறாக பயன்படுத்தி பொதுமக்களின் சொத்துக்களை அல்லவா கொள்ளையடித்து சிறைக்கு சென்றுக்கிறார். இதில் ஏன் உடன்பிறப்புகள் ஆத்திரப்படவேண்டும்... கோபப்படவேண்டும்...? இந்த கோபத்திலும், ஆத்திரத்திலும் கொஞ்சம் கூட நியாயமில்லையே. இதன் மூலம் மக்களிடம் அனுதாபத்தை பெற்றுவிடலாமென்று தப்புக்கணக்கு போடுகிறார்கள்.  அதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் அவர்களே ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு வாயசைத்திருக்கிறாரே. ''ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்'' - இந்தப்பாடல் கருணாநிதிக்கு மட்டுமல்ல. ஜெயலலிதாவிற்கு கூட பொருந்தும் தானே. ஒரு தவறை மறைப்பதற்கு இன்னொரு தவறு தீர்வாகாது என்பதை மறந்து விட்டு செய்கிறீர்கள். 
              தீர்ப்பின் காரணமாக ஜெயலலிதாவின் முதலமைச்சர் பதவி பறிபோனப் பிறகு, நேற்று அவரின் விசுவாசி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 30 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்றது. எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதா இல்லாத மூன்றாவது அதிமுக அமைச்சரவை இது. இந்த பதவியேற்பு விழா முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வித்தியாசமாக நடைபெற்றது. கவர்னர் மாளிகையை ஒரு இழவு வீடாகவே மாற்றிவிட்டார்கள் அதிமுகவினர். தங்கள் தலைவி சிறையலடைக்கப்பட்டு செக்கிழுத்துக் கொண்டிருக்கும் வேளையில் நமக்கு அமைச்சர் பதவி ஒரு கேடா என்பது போல்,  பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் பொறுப்பேற்ற பன்னீர்செல்வம் முதல் எல்லோருமே பதவியேற்கும் போது  ஒப்பாரி வெச்சி அழுதாங்க. இப்படி அழுவதன் மூலம் ஜெயலலிதாவிடம் தங்களின் விசுவாசத்தை காட்டுவதற்கும், தமிழக மக்களிடம் அனுதாப அலையை உயர்த்துவதற்கும் பெரும்  முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்கள் நினைத்தது போல் அந்த நிகழ்ச்சி அனுதாபத்தை உயர்த்தவில்லை. மாறாக எரிச்சலை தான் உண்டுபண்ணியது. அதை தொலைக்காட்சி நிகழ்ச்சி என்று நினைத்துக்கொண்டார்கள். தொலைக்காட்சியில் அழுதால் தான் அதன் ''ரேட்டிங் பாய்ன்ட்'' உயரும். அதே மாதிரி இங்கும் அழுவதால் என்ன பயன்...? ஜெயலலிதாவிற்கு கிடைத்த தண்டனையிலிருந்து எதிர் காலத்தில் தவறு செய்யாமல் ஆட்சி செய்யவேண்டும் என்ற  பாடத்தை  கற்றுக்கொள்ளுங்கள். மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுங்கள். இது தான் இன்றைய தேவை என்பதை மனதில் வைத்து ஆட்சி செய்யுங்கள். மக்களும் அதை தான் உங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கிறார்கள்.

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

நீதிக்கே ஜெயம்... மற்றவர்களுக்கு பாடம்....!

                              கடந்த 18 ஆண்டுகளாக நடந்துவந்த ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நேற்று மிகுந்த பரபரப்புகளுக்கிடையில் முடிவுக்கு வந்தது. 18 ஆண்டுகால இழுபறிக்குப் பின் நீதி வென்றது. இந்த தேசம் நீதியை பெறுவதற்கு 18 ஆண்டுகள் காத்திருக்கவேண்டியுள்ளது. மக்களின் ஆதரவை பெற்று ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறு செய்தால், அவர்களுக்கு எதிராக வழக்குகளும், விசாரணைக் கமிஷன்களும் போடப்பட்டு நேர்மையாக விசாரணைகளை நடத்தி தீர்ப்புகளை வழங்கி தவறு செய்தவர்கள் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டு தண்டிக்கப்பட்டதாக நம் நாட்டில் இதுவரை சரித்திரமே இல்லை. அப்படியாக முந்தைய காலங்களில் தவறுகள் செய்தவர்களை - இலஞ்ச - ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களை தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டவுடன் உடனுக்குடன் நேர்மையான முறையில் விசாரித்து தண்டனை அளித்திருந்தால் இன்றைக்கு  நாட்டில் இந்த அளவிற்கு இலஞ்ச-ஊழல் என்பது யாருக்கும் அஞ்சாமல் தைரியமாக தலைவிரித்து தாண்டவம் ஆடாது. இன்றைக்கு நாட்டில் இந்த இலஞ்ச-ஊழல் குற்றங்கள் என்பது  மக்களால் அங்கீகரிக்கப்பட்ட - சட்டங்களால் - நீதிமன்றங்களால் அங்கீகரிக்கப்பட்ட குற்றங்களாக தான் பார்க்கப்படுகிறது. இன்றைய தினம் அரசியல் என்பது இலஞ்ச-ஊழல் செய்து சொத்து சேர்க்கும் தொழிலாக மாறிவிட்டது.
             அப்படியாக தான் கடந்த 1991- 1996 ஆண்டுகளில் மாதம் ஒரு ரூபாய் சம்பளத்திற்கு செல்வி. ஜெயலலிதா தமிழக முதலமைச்சராக பணியாற்றிய போது செய்த பல்வேறு ஊழல்கள் சமாச்சாரங்கள் செய்து பதவியிழந்த பிறகு அத்தனை ஊழல்களும் வெளியே வர நீதிமன்றத்தில் குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்டு, குறிப்பாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு நீதிமன்றத்திற்கு வர,  1996 - ஆம் ஆண்டு முதல் நீதிமன்றங்களின் படிகளை ஏறி ஏறி தண்டனைகளிலிருந்து தப்பிப்பதற்காக பல்வேறு காரணங்களை காட்டி வழக்கை திசைத்திருப்பி நீர்க்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு  வந்தார். 1996-ம் ஆண்டு ஜூலையில் சென்னை மாநகர அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கிய சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணைக்காக   சிங்காரவேலர் சிறப்பு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்றம் என கடந்த 18 ஆண்டுகளில் 6 நீதிமன்றங்களின் படிகளை ஜெயலலிதா முன்னாள் முதல்வராக, இந்நாள் முதல்வராக ஏறி இறங்கி இருக்கிறார். . சென்னை நீதிமன்ற நீதிபதி சம்பந்தம் என்பவரில் ஆரம்பித்து கர்நாடக மாநில நீதிபதி ஜான் மைக்கேல் டி. குன்ஹா என்பவர் வரை சுமார் 90 நீதிபதிகள் இதுவரை இவ்வழக்கை விசாரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் பெங்களூரரு  சிபிஐ நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், பெங்களூரு  மாவட்ட நீதிமன்ற பதிவாளராகவும் பணியாற்றிய நீதிபதி ஜான் மைக்கேல் டி. குன்ஹா அவர்கள் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு தான் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதியாக பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்றதும் தான் நீண்ட காலமாக இழுத்துக்கொண்டிருந்த இந்த வழக்கின் திசைவழியை மாற்றினார். வழக்கம் போல் நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்காமல் வழக்கை தீர்ப்பை நோக்கி நகர்த்தி வந்தார். நீதிபதி குன்ஹா அவர்களுடைய கடினமான உழைப்பும், கண்டிப்பான அணுகு முறையும் தான் தீர்ப்பை நோக்கிய வழக்கின் வேகத்திற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட நீதிபதிக்கே ஜெயலலிதா தண்ணி காட்டினார். தீர்ப்பு தேதியை நீதிபதி அறிவித்தப்பின்னரும், நீதிபதி தீர்ப்பு எழுதாமலிருக்க என்னென்ன செய்யவேண்டுமோ எல்லா வழிமுறைகளையும் ஜெயலலிதா கடைசி நிமிடம் வரை முயற்சி செய்து பார்த்தார் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. கடைசியில் ஜெயலலிதா தோல்வியே அடைந்தார். வெற்றி பெறுவதற்காக தேர்தல் களத்தில் செய்வது போல் நீதிமன்றத்திலும்  ஜெயலலிதா செய்த எந்த முயற்சிகளும் பலிக்கவில்லை. இறுதியில் நீதி வென்றது. நீதிபதி குன்ஹா வென்றார். நீதிக்கே ஜெயம்...!
             தவறு செய்பவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் யார்க்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. அப்படியாகத்தான் இந்த தீர்ப்பை - தண்டனையை ஜெயலலிதாவும், அதிமுக கட்சியினரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால் இது போன்ற தவறுகள்  செய்பவர்களை தப்பிக்கவிடாமல் ஆரம்பத்திலேயே தண்டித்திருந்தால், அன்றைய தமிழக முதலமைச்சராக பணியாற்றிய மு.கருணாநிதி செய்த தவறுகளை விசாரித்த சர்க்காரியா கமிஷன் அறிக்கைகளை தீர்ப்புகளாக நீதிமன்றம் அறிவித்து தண்டனைக்கொடுத்திருந்தால், இன்றைக்கு நாட்டில் ஜெயலலிதா, சவுத்தாலா, லல்லு, மாயாவதி, மம்தா பானர்ஜி, எடியூரப்பா, ஆ.ராசா, கனிமொழி, கலாநிதிமாறன் போன்ற  ஊழல்வாதிகளும், மணல் முதல் கனிமங்கள் வரை கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் திருடர்களும் உருவாகியிருக்கமாட்டார்கள் என்பதையும் மக்கள் மனதில் கொள்ளவேண்டும்.  ஜெயலலிதாவின் இந்த தண்டனை என்பது இன்றைய இந்திய அரசியவாதிகளுக்கு ஒரு பாடமாக அமையும் என்பதில் மாற்று இருக்கமுடியாது.

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

அடப்பாவமே... சம்மன் கொடுக்கத்தான் மோடிய அமெரிக்காவுக்கு கூப்டாஹளா...?

              
              2002 -ஆம் ஆண்டு தன்னுடைய ஆட்சிக்காலத்தில் நிகழ்த்திய இஸ்லாமியர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு பிறகு கடந்த ஒன்பது ஆண்டுகளாக விசா மறுக்கப்பட்டு வந்த நிலையில் அன்றையிலிருந்து நரேந்திரமோடிக்கு அமெரிக்கப்பயணம் என்பது ஒரு சிம்மசொப்பனமாகவே இருந்து வந்தது. சென்ற ஆண்டு பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது கூட அமெரிக்காவில் உள்ள தனது ஆதரவாளர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மோடி அழைக்கப்பட்ட போதும் அமெரிக்க அரசாங்கம் மோடிக்கு விசா வழங்க மறுத்துவிட்டது. இந்த சூழ்நிலையில் தான் ஆண்டு தோறும் உலகத்திலுள்ள நாடுகளின் தலைவர்களை அழைத்து ஐ.நா சபை நடத்தும் பொதுச்சபைக் கூட்டம் வழக்கம் போல் இந்த ஆண்டும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இந்திய பிரதமர் என்ற வகையில் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. கட்டிடத்தில் நடைபெறவுள்ள பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்ற நரேந்திரமொடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இது அமெரிக்க அரசாங்கம் நேரடியாக மோடிக்கு விடுத்த அழைப்பு இல்லை என்பதும், ஐ.நா விடுத்த அழைப்பு என்பதும் கவனிக்கத்தக்கது. அதனால் அமெரிக்க அரசாங்கம் மோடிக்கு எதிரான விசா தடையை விலக்கிக்கொள்ள நேரிட்டது. 
                விசா தடையை விலக்கிக்கொள்ள முடியாது என்ற அமெரிக்கா அன்று அறிவித்தபோது, என்னை ஒரு நாள் அமெரிக்கா தானாக அழைக்கும் காலம் வரும் என்று தன் நண்பர்களிடம் சவால் விட்ட மோடிக்கு அவர் சொன்னது போல் அந்த காலம் கனிந்துவிட்ட நிலையில் தனது ''கனவு தேசமான'' அமெரிக்காவிற்கு கிளம்புவதற்கு ஒரு மாதம் முன்னரே அதற்கான தயாரிப்பு வேலைகளில் இறங்கிவிட்டார் மோடி என்பது தான் உண்மை. ஐ.நா சபையில் பேசப்போவது என்னமோ அரை மணி நேரத்திற்குள்ளாகத்தான். வழக்கமாக ஐ.நா-விற்கு செல்லும் இந்திய பிரதமர்கள் போனோமா... பேசனோமா... வந்தோமா... என்று தான் இருந்துவந்திருக்கின்றனர். ஆனால் மோடியோ அங்கு நான்கு நாட்கள் தங்குகிறார். பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்று பேசிவிட்டு தன் சொந்த நிகழ்ச்சிகளில் தான் அதிகமான நேரங்களை செலவழிக்கவிருக்கிறார். 
                   அமெரிக்காவில் தங்கவிருக்கும் அந்த 100 மணி நேரத்தில் மோடி 50 கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றப்போகிறார் என்று மோடியின் நட்பு வட்டாரங்கள் மிகப் பெருமையாக சொல்கிறார்கள். ''அன்பே வா'' எம்.ஜி.ஆர் போன்று ஓய்வின்றி இடைவிடாமல் அமெரிக்க வாழ் நண்பர்களிடம் ''மேக் இன் இந்தியா... மேக் இன் இந்தியா...'' என்று பேசப்போகிறார். இதெல்லாம் விட ஒரு பெரிய விஷயம் என்னவென்றால், அமெரிக்கப்பயணத்தின் போது எந்தெந்த நிகழ்ச்சிகளில் எப்படியெல்லாம் ஆடைகளை அணிந்து மக்களை அசத்துவது  என்று  ஒரு ஆராய்ச்சியையே மோடி நடத்தியிருக்கிறார் என்றும்,  இதற்காக பாலிவுட்டின் பிரபல ''காஸ்ட்யூம் டிசைனர்'' டிராய் கோஸ்டா என்பவரை தனக்கு ஆடை வடிவமைப்பாளராக வரவழைத்து அவர் வடிவமைத்து தயாரித்த ஆடைகளையே மோடி அமெரிக்காவில் விதவிதமாக அணிவார் என்றும் அவரது வட்டாரத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாமும் பார்க்கத்தானே போகிறோம்.  மோடி முதன்முதலில் நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் உரையாற்றியது முதல், அதன் பிறகு பதவியேற்பு விழாவில் பேசியது, பிரேசில் நாட்டில் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டு பிரிக்ஸ் வங்கியை தொடங்கிவைத்தது, நேபாள நாடாளுமன்றத்தில் சிறப்புரையாற்றியது, டெல்லி செங்கோட்டையில் 65 நிமிடங்கள் சுதந்திரதின உரையாற்றியது, ஜப்பான் நாட்டிற்கு சென்று வந்தது, சீன ஜனாதிபதியுடன் பிறந்தநாள் விழா கொண்டாடியது   என அனைத்து தருணங்களிலும் ஹைலைட்டாக இருந்தது அவரது ஆடைகள் தான் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. இவர் ஐந்து ஆண்டு கால பிரதமர் வாழ்க்கையை முடிக்கும் போது அனேகமாக நம்ப ஊரு ஜெயலலிதா வீட்டில் கண்டெடுக்கப்பட்ட  ஆயிரக்கணக்கான ஆடைகளை விட மோடியின் வீட்டில் இருக்கும் ஆடைகள் அதிகமாக இருக்கும் என்று அவரது நெருங்கிய வட்டாரங்களே பெருமையாக சொல்கிறார்கள்.    
               இப்படிஎல்லாம் பலவகையான தாயாரிப்புகளோடு நம்ப நரேந்திரமோடி தான்  அமெரிக்க மண்ணில் கால் பதிக்கும் போது  தனக்கு  பூங்கொத்துகளும், பரிசுகளும் கொடுத்து தடபுடலாக வரவேற்பளிப்பார்கள் என்ற கனவுகளோடு உற்சாகத்தோடு புறப்பட்டார். ஆனால் அங்கு அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது என்பது தான் உண்மை. மோடி இந்தியாவிலிருந்து விமானம் ஏறி பறக்கும்  வரை காத்திருந்து, அவர் விமானம் அமெரிக்காவில் இறங்குவதற்குள் மோடியை நோக்கி அமெரிக்க நீதிமன்றத்திலிருந்து சம்மன் ஒன்று பறந்து வந்து மோடியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 2002 - ஆம் ஆண்டு மோடி குஜராத் மாநில முதலமைச்சராக பணியாற்றியபோது இஸ்லாமியர்களுக்கெதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலை நரேந்திரமோடியே தலைமை தாங்கி முன்னின்று நடத்தியது. இது மனித உரிமைக்கு எதிரானது'' என்று மோடியை குற்றம் சாட்டி, 21 நாட்களுக்குள் இதற்கு மோடி பதிளிக்கவேண்டும் என்றும் அந்த சம்மனில் குறிப்பிட்டு அமெரிக்கா  வந்த மோடிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இது மோடி எதிர்பாராத கிளைமாக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

''மங்கல்யான்'' - இந்தியாவிற்கு பெருமையளிக்கும் சாதனை...!

         
 
            ''மங்கல்யான்'' - இந்திய விண்களம் நேற்று முன் தினம் செவ்வாய் கிரகத்தை நெருங்கியது. செவ்வாயும் நாம் தொட்டுவிடும் தூரம் தான் என்பதை நமது விஞ்ஞானிகள் நிருபித்துக்காட்டியிருக்கிறார்கள். சிவப்பு கிரகத்தை வெற்றிகரமாக எட்டிப்பிடித்த நான்காது நாடாக இந்தியா பெருமையடைகிறது. இதற்கு முன்னர் சோவியத் யூனியன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகவாண்மை போன்ற நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேருகிறது. ஆனால் மேலே சொன்ன மூன்று நாடுகளுமே செவ்வாயை நோக்கிய தங்களது முதல் மற்றும் அடுத்தடுத்த பயணங்களில் தங்களது இலக்கை எட்டமுடியாமல் தோல்வியடைந்து தொடர் முயற்சிக்குப் பின்னரே வெற்றியடைந்தன. ஆனால் நமது நாடு மட்டுமே தனது முதல் முயற்சியிலேயே தனது இலக்கை சர்வசாதாரணமாக எட்டிப்பிடித்து சாதனைப்படைத்து விண்வெளி வரலாற்றில் முத்திரைப்படைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல நமக்கு முன்னரே ஜப்பான், சீனா போன்ற முன்னேறிய நாடுகளெல்லாம் செவ்வாயை நோக்கிய தங்களது முயற்சியில் இலக்கை அடையமுடியாமல் தொல்வியடைந்திருகின்றன என்பது நமக்கு மேலும் பெருமை சேர்க்கும் செய்தியாகும். 
                மேலும் இந்த மங்கல்யான் விண்கலத்தை வடிவமைத்து விண்ணில் செலுத்த, இஸ்ரோ நிறுவனம் செய்த செலவுகளை கணக்கிட்டால், மற்ற நாடுகள் இதற்காக செய்த செலவுகளை காட்டிலும் மிக மிக குறைவு என்பது மட்டுமல்ல. நம் நாட்டில் உத்திரபிரதேசத்தில் அன்றைய முதலமைச்சர் மாயாவதி தனக்காக சிலை செய்து வைத்த செலவை காட்டிலும், குஜராத் மாநிலத்தில் இன்றைய பிரதமர் நரேந்திரமோடியின் ''கனவு திட்டமான'' வல்லபாய் பட்டேல் சிலை வைக்க ஆகும் செலவை காட்டிலும்  மங்கல்யானுக்கு ஆன செலவு என்பது மிகவும் குறைவு  என்பதும் குறிப்பிடத்தக்கது. மங்கல்யான் பூமியிலிருந்து 68கோடி கிலோமீட்டர் தூரத்தில் உள்ள செவ்வாய் கிரக சுற்றுப்பாதையை சென்றடைய இஸ்ரோ செய்த செலவு ரூ.450 கோடி மட்டுமே. அனால் மாயாவதி சிலைக்கு ஆன செலவோ ரூ.685 கோடி என்பதும், பட்டேல் சிலைக்கு ஆகும் செலவோ ரூ.2600 கோடி என்பதும் கவனிக்கத்தக்கது.  
               உலகமே வியக்கும் வகையில் சிறப்புப்பெற்ற இந்த மாபெரும் வெற்றிக்குப்பின்னால் இஸ்ரோவில் பணிபுரியும் பல இந்திய விஞ்ஞானிகளின் அறிவும்,  ஆற்றலும், திறமையும், உழைப்பும் உள்ளன என்பதை யாராலும் மறுக்கமுடியாது. ஆண் மற்றும் பெண் விஞ்ஞானிகள் என இருபாலரும் இணைந்தே இந்த வெற்றிக்கு பாடுபட்டிருக்கின்றனர். ஆனால் ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் எப்போதும் போல் இஸ்ரோவின் இந்த வெற்றிக்குப் பின்னால் ஆண்கள் மட்டுமே இருப்பது போல் காட்டுகின்றன. வழக்கம் போல் இங்கேயும் பெண்களின் அறிவும், ஆற்றலும், திறமையும், உழைப்பும் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன என்பது தான் வருத்தமான விஷயமாக இருக்கின்றன. மங்கல்யான் வெற்றிக்குப் பின்னால் பல பெண்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரோவில் பணிபுரியும் மொத்தமுள்ள விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களில்  இருபது  சதவீதத்திற்கும் அதிகமானவர்கள்   பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே சுமார் 14,246 பெண்களின் பங்களிப்பும் மங்கல்யான் வெற்றியில் இருக்கிறது என்பதும்  நமக்கு மேலும் பெருமை சேர்க்கும் விஷயமாகும். மங்கல்யான் வெற்றிகரமாக செவ்வாயின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டவுடன் அந்த வெற்றிக்கு பங்களித்த அங்கே கூடியிருந்த பெண்களும் தங்களுக்குள் கைத்தட்டி, கைக்கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். அவர்களையும் இந்த நேரத்தில் நாம் நெஞ்சார பாராட்டவேண்டும்... வாழ்த்தவேண்டும்.

வியாழன், 25 செப்டம்பர், 2014

அடேங்கப்பா...மோடி என்னமா பேசறாரு....?

                         ''மேக் இன் இந்தியா'' என்ற முழக்கமிட்டு ஆண் சிங்கம் ஒன்று நடந்து வருவது போல் ஒரு சின்னத்தை உருவாக்கி நரேந்திரமோடி தன்னை ஒரு சிங்கமாக உலக முதலாளிகளுக்கு இன்று புதுடெல்லியில் விழா ஒன்றில் எடுத்துக்காட்டியிருக்கிறார்.  இதன் மூலம் ''அந்நிய முதலாளிகளே... இந்தியாவிற்கு வாருங்கள்... இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்.... இந்திய பொருட்கள் உலகெங்கும் விற்கட்டும்...'' என்று உலக முதலாளிகளுக்கு அழைப்புவிடுத்துள்ளார். இந்த விழாவில் மோடி என்னமா பேசினாரு தெரியுமா...? அடேங்கப்பா... இவர் பேசுவதற்கு எழுதிகொடுத்த அந்த மனுஷன் என்னமா யோசிச்சிருப்பான்.... அந்த பேச்சை கேட்கும்போதே மெய்சிலிர்க்குது. அந்த விழாவில் மோடி அப்படி என்ன பேசினாரு...? FDI-க்கு ஒரு புது அர்த்தம் சொன்னாரு பாருங்க. ஆஹா... என்னமா கருத்தா பேசினாரு. உண்மையாவே உலகத்துல யாரும் இவர் போல் இவ்வளவு அறிவாளியாக பேசியிருக்கமுடியாதுங்க. எப்படி மோடியால மட்டும் இப்படியெல்லாம் அறிவா சிந்திக்க முடியுது என்று நினைச்சி நினைச்சி புல்லரிச்சி போனேன்னா பாத்துக்கொங்குளேன். 
               அப்படி என்ன மோடி FDI -ஐ பத்தி பேசினார்னு தானே கேட்கறீங்க...? ''FDI'' - அப்படின்னா நாம்ப இதுவரைக்கும் என்ன அர்த்தத்தை புரிஞ்சிகிட்டு இருந்தோம்னா...? ''Foreign Direct Investment - அந்நிய நேரடி முதலீடு'' என்று தானே நாம்  இதுவரையில் நெனைச்சிகிட்டிருந்தோம். ஆனால் மோடி இதை வேறு மாதிரி சிந்திக்கிறார். அந்த விழாவில் அவர் என்ன சொல்கிறார்ன்னா, FDI என்றால், ''First Develop India'' வாம். ''இந்தியாவை முதலில் முன்னேற்று'' என்று புதுபுது அர்த்தங்களாக உதிர்த்து தனது தேசபக்தியை உலகத்திற்கு உயர்த்தி காட்டினாரு பாருங்க... தாங்கல... இப்படி அவர் பேசியதற்கு என்ன அர்த்தம் என்றால், FDI-ஐ எதிர்ப்பவர்களே.... FDI-ன்னா நீங்க நினைக்கிற மாதிரி அந்நிய நேரடி முதலீடு கிடையாது. அந்நிய நேரடி முதலீட்டினை ஏற்றுக்கொன்று நாட்டை முதலில் முன்னேற்று என்று அர்த்தம். நீங்க FDI-ஐ ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், இந்தியாவை முன்னேற்றுவதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று பொருள் என்பது போல பேசியிருக்கிறார். ''FDI மூலம் இந்தியாவை முன்னேற்ற துடித்துக்கொண்டிருக்கிறார் மோடி... அதை இவர்கள் எதிர்க்கிறார்கள்... அப்படின்னா FDI-ஐ எதிர்ப்பவர்கள் நமக்கும் வேண்டாதவர்கள்''  என்று மக்களை FDI-ஐ எதிர்ப்பவர்களுக்கு எதிராக திருப்பிவிடுவதற்காக மோடி செய்த தந்திரம் தான் இது. இப்படியெல்லாம் பேசி யாரை எமாற்றப்பார்க்கிறார் மிஸ்டர் மோடி....? தன்னை நம்பி வாக்களித்த இந்திய மக்களையா...? என்பது தான் எனது கேள்வி.

புதன், 17 செப்டம்பர், 2014

நரேந்திரமோடிக்கு மக்கள் அளித்த பிறந்தநாள் பரிசு...!

                         இன்று ''வளர்ச்சி நாயகன்'' நரேந்திரமோடியின் பிறந்தநாள். முன்னெப்போதும் இல்லாத திருநாளாய் ஒரு ''மகாராஜாவின்'' பிறந்தநாளாய் இன்று இந்த பிறந்தநாளை மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. அந்த காலத்தில் மகாராஜாவின் பிறந்தாநாளை அண்டை நாட்டு மன்னர்களை எல்லாம் அழைத்துக்கொண்டாடுவார்கள். அது போல் தான் மோடியும் தன் சொந்த மாநிலத்தில் மிகக் கோலாகலமாக விழா ஏற்பாடுகளை செய்து, தன் பிறந்தநாள் கொண்டாட்டங்களை சிறப்பு செய்ய நம் அண்டை நாடான மக்கள் சீனத்தின் ஜனாதிபதியை அழைத்திருக்கிறார். அவரும் இந்த விழாவில் கலந்துகொள்வதற்கு கிளம்பிவிட்டார். நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசு நடத்தும் இந்திய குடியரசுத்தலைவர் கொடியேற்றும் குடியரசு தினவிழாவை மட்டும் தான்  அண்டை நாடுகளின் தலைவர்கள் - பிரதமர் அல்லது ஜனாதிபதியை அழைத்து ஒரு சம்பிரதாய சடங்காக கோலாகலமாக கொண்டாடுவது என்பது வழக்கமாய் இருந்துவருகிறது. ஆனால் இப்போது இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு பிரதமரின் பிறந்தநாள் விழாவிற்கு அண்டை  நாட்டின் தலைவரை அழைத்து கொண்டாடி தன்னை இந்த நாட்டின் மக்களை கவர்ந்த ''கதாநாயகனாக'' உலக அரங்கில் காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறார் நரேந்திரமோடி என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. 
               ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே குஜராத் மாநிலத்தில் ஒரே தடபுடல் ஏற்பாடுகள் தான். பிறந்தநாள் அன்று மோடிக்கும், மக்களுக்கும் விநியோகம் செய்ய ஏராளமான  லட்டுகள்  தயாரிக்கப்படுகின்றன. சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவிருக்கும் சீன ஜனாதிபதிக்கென்று ஸ்பெஷலாக உணவு தயாரிப்பதற்கு ஏகப்பட்ட ''மெனு'' தான் போங்க. ஆனால் அவருக்கும் கூட அசைவம் கலக்கப்படாத ''சுத்த-சைவ பிராமணாள் ஓட்டல்'' சாப்பாடு தான் தாயாரிக்கப்படுகிறது என்றால் பாருங்களேன்.
              இவ்வளவு ஏற்பாடுகளுக்கு நடுவில், இந்திய மக்களும் தன்னை வளர்ச்சி நாயகனாக காட்டிக்கொண்டு தங்களை வளைச்சி வளைச்சி ஓட்டுக்களை வாங்கி பிரதமராக உட்கார்ந்த நரேந்திரமோடிக்கு நேற்றைய தினம் ''இடைத்தேர்தல் முடிவுகள்'' மூலம் ஒரு மறக்கமுடியாத பரிசினை தந்திருக்கிறார்கள் என்பதும் இந்த நேரத்தில் குறிப்பிடத்தக்கது. சென்ற ஞாயிறன்று நாடு முழுவதும் 10 மாநிலங்களில் மூன்று மக்களவைத் தொகுதி, 33 சட்டசபைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் மோடி - அமித்ஷா கூட்டாளிகளின் தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சிக்கு பெருத்த தோல்வியை தான் இந்திய  மக்கள் மறக்கமுடியாத பிறந்தநாள் பரிசாக மோடிக்கு கொடுத்திருக்கிறார்கள். நரேந்திரமோடி பிரதமராக பதவி ஏற்று 80 நாட்களை கடந்த நிலையில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும், 100 நாட்களை கடந்துவிட்ட நிலையில் நடைபெற்ற இந்த இடைத்தேர்தலிலும் தங்களை ஏமாற்றி ஓட்டுகளை பெற்று ஆட்சிக்கு வந்த நரேந்திரமோடிக்கு சரியான பாடத்தை கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல பாரதீய ஜனதாக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற அமித்ஷாவிற்கும், அவரது கொழுப்பான பேச்சுக்கும் மக்கள் பலத்த அடி கொடுத்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
மோடி சாயம் வெளுத்துப்போச்சு.... டும்.... டும்.... டும்....!                
                             ராஜா வேஷம் கலைஞ்சு போச்சு.... டும்.... டும்.... டும்....!                  

ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் நீதிமன்ற நேரமும், மக்கள் வரிப்பணமும் விரயம்...!

                        பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தற்சமயம் நடைபெற்றுவரும், சொத்துக் குவிப்பு வழக்கு ஒருவழியாக வருகிற செப்டம்பர் 20 - ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. தீர்ப்பு எப்படியிருக்கும் என்பது பற்றி அரசியல் விமர்சகர்கள் பல்வேறு கருத்துகளை கூறிவருகிறார்கள். தீர்ப்பை வைத்து நாட்டில் மக்களிடையே சூதாட்டமே நடைபெறுகிறது. சொல்லப்போகிற  தீர்ப்பு என்பது சாலைகளில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி பட்டாசு வெடித்துக் கொண்டாடும் விதமாக இருக்குமா என்ற எதிர்ப்பார்ப்போடு அதிமுகவும், திமுகவும் காத்திருக்கிறார்கள். தீர்ப்பு என்பது ஜெயலலிதாவிற்கு சாதகமாக இருந்தால் அது அதிமுகவிற்கு கொண்டாட்டமாக இருக்கும். அதுவே பாதகமாக இருந்தால் திமுகவிற்கு கொண்டாட்டமாகவே இருக்கும். மொத்தத்தில் இவர்களுக்கு ஓட்டுப்போட்ட தமிழக மக்களுக்கு திண்டாட்டமாகவே இருக்கும்.
               கடந்த 2000 - ஆம் ஆண்டில் தருமபுரியில் நடைபெற்ற பஸ் எரிப்பும், பஸ்ஸில் இருந்த மூன்று வேளாண் கல்லூரி மாணவிகள் எரிந்து கருகிப்போன சம்பவத்தை இன்னும் தமிழக மக்கள் மறந்துவிடவில்லை. கொடைக்கானல் ப்லெசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதாவிற்கு சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியபோது நடைபெற்ற அதிமுகவினரால் நடத்தப்பட்ட கொடுமையான சம்பவம் தான் அது. இதுபோன்ற கொடுமையான சம்பவங்கள் இந்த நாட்டில் மீண்டும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இதை தலைவர்கள் தான் தங்கள் தொண்டர்களுக்கு அறிவுறுத்தவேண்டும். 
             இது ஒருபுறமிருக்க பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு முடிவுக்கு வருவதற்கு பதினொரு  ஆண்டுகள் தேவைப்பட்டது என்றால் எவ்வளவு பொன்னான நேரங்களை நீதிமன்றம் விரயம் செய்திருக்கிறது என்பதை நினைக்கும் போது உண்மையிலேயே வேதனையாக இருக்கிறது. அந்த அளவிற்கு இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்ட அனைவருமே நீதிமன்றத்தை உதாசினப்படுத்தி இருக்கிறார்கள் என்று  தான் அதற்கு பொருள் கொள்ளவேண்டும்.
              நீதிமன்ற நேரம் விரயம் ஆனது மட்டுமல்ல மக்களின் வரிப்பணமும் ஏராளமாக விரயமாக்கப்பட்டுள்ளது. இந்த பதினொரு ஆண்டுகால நீதிமன்ற விசாரணைக்கு மட்டும் இதுவரையில் கர்நாடக அரசு ரூ.2.86 கோடிசெலவு செய்திருக்கிறது என்ற அதிர்ச்சியான செய்தி வெளியே வந்திருக்கின்றது. இதில் ரூ.1.46 கோடியை தமிழக அரசு கர்நாடக அரசிடம் செலுத்திவிட்டதாம். இன்னும் ரூ.1.40 கோடி கர்நாடக அரசுக்கு தரவேண்டிய பாக்கியிருக்கிறதாம். மக்கள் பணத்தை சட்டவிரோதமாக குவித்த வழக்கிற்கு ஆகிற இத்தனைக் கோடி ரூபாய் செலவும் மக்களின் வரிப்பணம் தான் என்று என்னும் போது வேதனையாகத்தான் இருக்கிறது. 
                 இப்படியே தேர்தலுக்கு தேர்தல் மக்களின் வரிப்பணத்தை சட்டவிரோதமாக கொள்ளையடித்து குவித்து வைத்திருக்கும் ஜெயலலிதாவிற்கும், கருணாநிதிக்கும் மாறி மாறி ஓட்டுப்போடும் தமிழக மக்கள் அப்பாவிகளா... ஏமாளிகளா.... அல்லது முட்டாள்களா...?

மோடிக்கு பயந்து கழிவறையில் ஒளிந்துகொண்ட குழந்தைகள்...!

                  இரண்டு நாட்களுக்கு முன்பு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ''குரு உத்சவ்'' என்ற பெயரில் பிரதமர் நரேந்திரமோடி எதிர்கால வாக்காளர்களான இன்றைய பள்ளி மாணவ - மாணவியர்களை தன்  பக்கம் கவர்ந்திழுப்பதற்காக நாடு முழுதும் உள்ள பள்ளி குழந்தைகளுடன் ''வீடியோ கான்பரன்சிங்'' மூலம் மாலை இரண்டு மணிநேரம் பேசி உரையாடினார். பொதுவாக அந்த நேரம் என்பது குழந்தைகள் வகுப்புகளை முடித்து களைப்படைந்து ஓய்ந்து போய் வீடு சென்று சேரும் நேரம். குழந்தைகளின் அந்த ஓய்வு நேரத்தை பிரதமர் மோடி பிடுங்கிக்கொண்டார் என்று தான் சொல்லவேண்டும். நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் கட்டாயமாக பெரிய திரையில் குழந்தைகளுக்கு காண்பிக்கவேண்டும் என்றும், பள்ளிக் குழந்தைகள் அனைவரும் முழுமையாக அந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு உறுதிசெய்யவேண்டும் என்றும் மத்திய - மாநில அரசுகள் பள்ளிகளை கெடுபிடி செய்தன. பதிலுக்கு பள்ளிகளும் குழந்தைகளிடம் ''உங்களுக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ... கட்டாயமாக அன்றைய தினம் விடுமுறை எடுக்கவோ அல்லது நிகழ்ச்சிக்கு முன்பே வீட்டிற்கு விரைந்து சென்றுவிடுவதோ கூடாது'' என்று பள்ளிகள்  இன்னொரு பக்கம் குழந்தைகளை கெடுபிடி செய்தன.
               அரசு எதிர்ப்பார்த்தது போல் நாட்டிலுள்ள எல்லா பள்ளிகளும் மோடியின் பேச்சை ஒளிப்பரப்புவதற்காக பெரிய திரைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நாட்டிலுள்ள பெரும்பாலான குழந்தைகள் மோடியின் பேச்சில் ஈர்ப்புக்கொள்ளவில்லை. தொடர்ந்து உட்கார்ந்து மோடியின் பேச்சை கேட்பதற்கு இருப்பும் கொள்ளவில்லை.  மாறாக குழந்தைகள்  இதிலிருந்து தப்பிக்கிறது எப்படி என்று தான் யோசித்தார்கள். மோடி பேசிக்கொண்டிருந்த போதே பெரும்பாலான குழந்தைகள் உச்சா வருவதாக சொல்லி வகுப்பறையை விட்டு கழிவறைக்கு சென்று பதுங்கியிருக்கிறார்கள். விளையாட்டு மைதானத்தில் பதுங்கியிருக்கிறார்கள். பல பள்ளிகளில் குழந்தைகள் உச்சா போவதற்கு கூட அனுமதி மறுக்கபட்டிருக்கிறது. அந்த நேரம் என்பது குழந்தைகள் தங்கள் வீட்டில் சிற்றுண்டி உண்ணும் நேரம் என்பதால், பெரும்பாலான குழந்தைகள் பசியோடு இருந்திருக்கிறார்கள். குழந்தைகள் சாப்பிடுவதற்கு பள்ளி நிர்வாகமும் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. அந்த அளவிற்கு குழந்தைகளை ''கட்டிப்போட்டு'' பிரதமரின் பேச்சை கேட்க செய்திருக்கிறார்கள். என்ன கொடுமையடா சாமி...? மோடியின் ''குரு உத்சவ்'' என்பது குழந்தைகள் மீதான வன்முறையாகவே கொண்டாடப்பட்டிருக்கிறது என்று தான் சொல்லவேண்டும்.
               பாவம் மோடி....! அவர் எதிர்ப்பார்த்தபடி அவரையோ அல்லது அவரது பேச்சையோ குழந்தைகள் ரசிக்கவில்லை. மாறாக அவருக்கு பயந்து ஓடி ஒளிந்துகொண்டார்கள்  என்பது தான் உண்மை.

சேரன் செங்குட்டுவனாக மாறிய நம்ப மோடி மகராசன்...!

                
         அடிக்கடி ஏதாவது ''அவதாரம்'' எடுத்து மக்களை வியப்பில் ஆழ்த்தும் பிரதமர் நரேந்திரமோடி நேற்று முன் தினமும் ''சேரன் செங்குட்டுவன்'' போன்ற அவதாரம் எடுத்து இந்திய மக்களை வியப்பில் ஆழ்த்தினார் என்றால் அது மிகையாகாது.   2008 - ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள வெவ்வேறு இரண்டு கோயில்களிலிருந்து  காணாமல் போனதாக சொல்லப்படும், 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடராஜர் பஞ்சலோக சிலையும், அர்த்தநாரீஸ்வரர் கல் சிலையும் கடல் கடந்து ஆஸ்திரேலியா நாட்டு அருங்காட்சியகத்தில் உட்கார்ந்து இருப்பதை நம்ப ''CID-007'' நரேந்திரமோடி கண்டுபிடித்து அந்த இரண்டு சிலைகளையும் அந்த நாட்டு பிரதமரை வைத்தே விமானத்தில் ஏற்றி கொண்டு வந்து இந்தியாவில் சேர்க்கச் செய்தார். இத்தனை ஆண்டுகாலமாக யாரும் கண்டுபிடிக்காத சாமி சிலைகளை மோடியால் மட்டுமே   கண்டுபிடிக்க முடிந்தது மட்டுமல்ல, அந்த சிலைகளை ஆஸ்திரேலியா நாட்டு பிரதமரே சுமந்து கொண்டுவந்து சேர்க்க செய்தார் என்றெல்லாம் பத்திரிக்கைகளும், தொலைகாட்சிகளும் மோடியை வெகுவாக புகழ்ந்து தள்ளுகிறார்கள். அந்த செய்தியை படத்துடன் பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பார்த்து அதிசயித்துப்போன நம் மக்கள் சிலபேர் அப்படியே காணாமல் போன என் பைக்கையும்  கண்டுபிடிச்சி கொடுக்க சொல்லுங்க... வீட்டிலிருந்து திருடுபோன எங்க நகைகளையும்  கண்டுபிடிச்சி கொடுக்க சொல்லுங்கன்னு ஆளாளுக்கு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க.
                மோடியின் இந்த வீரதீரச்செயலை பார்க்கும் போது, மூவேந்தர்கள்  காலத்தில் கண்ணகி சிலை செய்வதற்கு இமயமலையிலிருந்து கனகவிஜயன் என்ற மன்னன் தலையில் கல்லேற்றி தன்  நாட்டிற்கு கொண்டுவந்த சேரன் செங்குட்டுவன் தான் நம் நினைவுக்கு வருகிறது. இன்று அந்த சேரன் செங்குட்டுவனாகவே மாறி நமக்கு காட்சி தருகிறார் நம்ப மோடி மகராசன்.              

வியாழன், 4 செப்டம்பர், 2014

மோடியின் ''குரு உத்சவ்'' - பள்ளிகளில் கெடுபிடி...!

                 நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளராக அறிவித்த காலத்திலிருந்தே ஒரே ''திணிப்பு'' தான். நாடாளுமன்றத்தேர்தலுக்கு முன்னரே மோடி தான் பிரதமராக வருவார் என்ற ''கருத்துத் திணிப்பு'' ஆட்சிக்கு வந்த பின்பு ''ஹிந்தி திணிப்பு'' பின்னர் ''சம்ஸ்கிருத திணிப்பு'' ரம்சான் நோன்பிருந்த இஸ்லாமிய இளைஞன் வாயில் ''சப்பாத்தி திணிப்பு'' இப்போது ஆசிரியர் தினத்திற்கு பதிலாக ''குரு உத்சவ்'' என்ற ''பெயர் திணிப்பு'' அந்த விழாவையொட்டி பள்ளிக்குழந்தைகளின் மீது மோடியின் ''காட்சி திணிப்பு'' ஒரே திணிப்பு தான் போங்க. ''திணிப்பு புகழ்'' மோடி என்று எதிர்கால வரலாறு பேசும். மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, மோடி மூளையில் உதித்ததை கூச்சப்படாமல் மக்களிடம் திணித்து விடுவார்.
             அப்படித்தான் இத்தனை ஆண்டுகளாக நாடு முழுதும் மறைந்த இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை கல்வியாளர் - அறிஞர் என்ற முறையில் ''ஆசிரியர் தினமாக'' சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது. மோடி ஆட்சிக்கு வந்தாரு ஆசிரியர் தினத்தை ''குரு உத்சவ்-ன்னு'' மாத்திட்டார். அந்த புதிய பெயரை பொதுமக்கள், ஆசிரியர்கள் மற்றும் குழந்தைங்க மூளையில கட்டாயமாக திணிச்சார். குரு  உத்சவ் என்ற பெயரில் நாட்டிலுள்ள எல்லா பள்ளிகளிலும் செப்டம்பர் - 5 அன்று மாலை ''மோடி உத்சவ்'' நடக்கும் என்றும், நேரலையில் பள்ளிக்குழந்தைகள் மத்தியில் ஒன்றரை மணி நேரம் காட்சிக் கொடுப்பார் என்றும், அதற்கான ஏற்பாடுகளை செய்து பள்ளிக்குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை ''கட்டாயம்'' பார்க்கச் செய்யவேண்டுமென்றும் நரேந்திரமோடி மற்றுமொரு ''திணிப்பை'' செய்திருக்கிறார். 
              இப்போது நாட்டுல ஜெனங்க - குழந்தைங்க எல்லோரும் டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணனையும் மறந்துட்டாங்க... ஆசிரியர் தினத்தையும் மறந்துட்டாங்க. அதுமட்டுமா காலையில் பள்ளிக்கு வந்துட்டு பாடம் சொல்லிக்கொடுத்து விட்டு, பாடம் படித்துவிட்டு ஆசிரியர்களும், மாணவ - மாணவியர்களும் களைச்சிப் போயி வீடு சென்று சேரும் நேரத்தில், உத்சவத்தை பாரு... மோடிய பாருன்னு மாலை 5.30 மணி வரையில் ஸ்கிரீன்ல அந்த மூஞ்சியே பார்த்துகிட்டு இருக்கணும்னு கட்டாயமா திணிச்சதுல ஆசிரியர்களும், பொதுமக்களும், பள்ளிக் குழந்தைகளும் கொதிச்சிப்போயி இருக்கிறாங்க. அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கெடுபிடி செய்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதுவும் தனியார் பள்ளிகளில் கேட்கவே வேண்டாம். சுற்றறிக்கை எட்டடி பாஞ்சா... நிர்வாகமோ  பதினாறு அடி பாய்வார்கள். மோடி நிகழ்ச்சி பிடிக்கிறதோ அல்லது பிடிக்கலையோ அவசியம் நாளைய தினம் கட்டாயம் பள்ளிக்கு வந்துவிடவேண்டும். பள்ளிக்கு வராம லீவு போட்டாலோ அல்லது வந்துட்டு நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்னரே கிளம்பிவிட்டாலோ டி. சி கொடுக்கப்படுமென்று நிர்வாகம் கெடுபிடி செய்கிறது. இந்த கட்டாய திணிப்பைப் பற்றி நிர்வாகத்திடம் கேட்டால், அரசு இப்படித்தான் எங்களை கட்டாயப்படுத்துகிறது என்று சொல்கிறார்கள். 
              ''குரு உத்சவ்''-ல மோடி என்னன்ன ''சேஷ்டைகளை'' செய்யப்போகிறாரோ என்று ஆசிரியர்களும், குழந்தைகளும் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

புதன், 3 செப்டம்பர், 2014

மோடி சொன்ன 100 நாளு ஆயிபோச்சே... என்னான்னு கேட்டியா...?























மோடிக்கு தான்னு ஓட்டுப்போட்ட
32 சதவீத மக்கா..!
ஓட்டுப்போட்டு பாத்தீயே...
உட்காரவெச்சி பாத்தீயே...
இரயில் கட்டணம் ஏத்திப்புட்டான்
ஏன்னு கேட்டியா...?
100 நாள்ல வெலைவாசியை
குறைப்போம்னாங்களே...
வெலைவாசியெல்லாம் ஏறிப்போச்சே
என்னான்னு கேட்டியா...?
100 நாள்ல கருப்புப் பணம்
சுவிஸ் பேங்க் பணத்தையெல்லாம்
இந்தியாவிற்கு இழுத்து
வருவோமுன்னு
ஓட்டு கேட்டுப் போனாங்களே...
நீ ஓட்டுப்போட்டுப் பாத்தியே...
உட்காரவெச்சி பாத்தியே...
இன்னும் ஏன் வரலைன்னு கேட்டியா...?
நீங்க ஓட்டுப் போட்ட
பிரதமரு...
நிமிட்டுக்கு நிமிட்டு
டிரெஸ்ஸ மாத்தி மாத்தி
போடுறாரே...
மாயவித்தை காட்டுறாரே...
உன் குழந்தைக்கொரு
சொக்கா கேட்க மறந்துட்டியே...
ஜப்பானுக்கு போனாரு
பிரதமரு...
தாளம் போட்டுக் காட்டுறாரு...
அமெரிக்காவுக்கு போறாரு...
விதவிதமா சட்டைப்போட்டு காட்டுவாரு...
அவருக்கு ஓட்டுப் போட்டுப் பாத்தியே..
அவரை உட்காரவெச்சி பாத்தியே...
இதெல்லாம் எதுக்குன்னு கேட்டியா...?
ஏன்னு கேட்டியா...?
மோடி வந்தவுடனேயே
உனக்கு கசப்பு மருந்து கொடுத்தாரே....
ஏன்னு கேட்டியா...?
என்னான்னு கேட்டியா...?
''அச்சே தின்'' என்று சொல்லி
100 நாளு ஆயாச்சே...
இவ்வளவும் நடக்குதே
நீ வேடிக்கை பாக்குற...
நமக்கென்னன்னு போகுற...
இப்பவாது உன் வாயை திறந்து
பேசுவதை செய்வீயா...?

மோடியின் 100 நாள் ஆட்சியும் ஈர்க்கும் ஆடையலங்காரமும்....!

                 ''வளர்ச்சி... வளர்ச்சி'' என்று சொல்லி மக்களை ''வளைச்சி வளைச்சி'' ஓட்டுக்கேட்டு வெறும் 31 சதவீத வாக்குகளே பெற்றாலும், தேர்தலில்   வெற்றிபெற்ற மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையில் அதிகம் என்ற அடிப்படையில் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிப்பொறுப்பை ஏற்று இன்று நூறாவது நாளை தொடுகிறது. அதிக எண்ணிக்கையில் மக்களவை உறுப்பினர்களை கொண்ட பாரதீய ஜனதாக் கட்சிக்கு நூறாவது நாளை தொடுவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. ஆனால் இந்த நூறு நாட்களில் மோடி தலைமையிலான ஆட்சி என்ன சாதித்தது....? நான் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமானவன் என்று தன்னை பற்றி விளம்பரப்படுத்திக்கொள்ளும் மோடி கடந்த நூறு நாட்களில் என்ன சாதித்து காட்டினார்....? இந்த கேள்வியெல்லாம் நூறு நாளிலேயே கேட்டா எப்படி...? இன்னும் 5 வருஷம் இருக்கு இல்ல..? அப்படின்னு கேள்வி வரும். ஏன் இந்த ''நூறு நாள்'' அளவுகோளை எடுக்கிறோம் என்றால், தேர்தல் நேரத்தில மோடியும், அவரது கூட்டாளிகளும் தான் நாங்கள் பதவியேற்று 100 நாளில ''வானத்தை வில்லா வளைப்போம்... மணல கயிறா திரிப்போம்... நாங்க வித்தியாசமானவங்க...'' என்றெல்லாம் வாய் ஜாலமும் வார்த்தை ஜாலமும் மாயா ஜாலமும் காட்டித்தான் இப்போ ஆட்சியில உட்கார்ந்துகிட்டு இருக்காங்க.
                   ஆனால் இந்த நூறு நாட்களில் நடந்தது என்ன...? மோடி என்னென்ன சாதனைகளை செய்திருக்கிறாருன்னு பார்த்தா தலையே சுத்தும். இவர்கள் பதவியேற்றவுடன் பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்திக்காட்டினார். இரயில் கட்டணத்தையும்  கடுமையாக உயர்த்திக்காட்டினார். பாதுகாப்புத்துறையில் அந்நிய நேரடி முதலீடு... இன்சூரன்ஸ் துறையில்  அந்நிய நேரடி முதலீடு... இரயில்வே துறையில் அந்நிய  நேரடி முதலீடு... என அந்த மூன்று துறைகளையும் பார்சல் செய்து இந்த மாதம் அமெரிக்க சுற்றுப்பயணம் போகும்போது அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் பரிசுப்பொருளாய் கொடுக்க  ஏற்பாடுகள் செய்தார். 64 ஆண்டுகாலமாக இயங்கிவந்த திட்டக்கமிஷனுக்கு மூடுவிழா நடத்த கருத்துக்கேட்டார்.  வசதியற்ற மக்களுக்கு வருமானம் இல்லையென்றாலும் பரவாயில்லை. காசு இல்லையென்றாலும் பரவாயில்லை. பசிக்கிற வயித்துக்கு சோறில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் அவர்களுக்கு வங்கிக்கணக்கு அவசியம் என்று ''கட்டாய வங்கிக்கணக்கு'' அறிமுகம் செய்துவைத்தார். ஏறுகின்ற விலைவாசியை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். பதவியேற்ற 100 நாட்களில் பூட்டான், பிரேசில், நேபாளம், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சென்று வந்தார். தேர்தல் வரையில் ஓயாமல் பேசிக்கொண்டிருந்தவர், பிரதமராக ஆனப்பிறகு பேசுவதை நிறுத்திக்கொண்டார். ஆனால் வெளிநாட்டில் பேசுவார். இவைகள் தான் மோடியின் 100 நாள் சாதனைகளாக மக்களால் இன்றைக்கு முணுமுணுக்கப்படுகின்றன.
                 ஆனால் மோடியின் அரசியல் காலத்தை மூன்று காலமாக பிரிக்கலாம். ஒன்று...  பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கு  முந்தைய காலம்.  இரண்டு... பிரதமர் வேட்பாளர் காலம். மூன்று... பிரதமர் பதவிக்காலம். இதுல 100 நாள் பிரதமர் பதவிக்காலம் தான் மிகவும் குறிப்பிடத்தக்க காலம் கருதவேண்டும். மேலே சொன்ன சாதனைகள் ஒருபுறமிருக்க. இன்னொரு பக்கம்... இந்த பிரதமராக இருக்கும் இந்த 100 நாட்களில் நரேந்திரமோடி சுமார் 200-க்கும் அதிகமான ஆடை அணிந்திருக்கிறாராம். அதுமட்டுமல்ல ஒரு முறை அணிந்த ஆடையை இன்னொரு முறை அணிந்ததில்லையாம். இந்தியாவில் உள்ள முக்கிய உடையலங்கார நிபுணர்கள் சொல்லும் தகவல்கள் தான் இது. இன்றைக்கு ஜப்பான் நாட்டில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருக்கும் மோடியின் ஆடை அலங்காரங்களைப் பார்த்து ஜப்பானிய பிரதமரே அசந்துபோய்விட்டாராம். ஜப்பானில் ஒரே நாளில் நடைபெற்ற நான்கு வெவ்வேறு நிகழ்ச்சிகளுக்கு நான்கு வெவ்வேறு விதமான ஆடைகளில் கலந்துகொண்டாராம். அந்த நிகழ்ச்சிகளில் அவரோடு கலந்துகொண்ட ஜப்பானிய பிரதமரே ''அடேங்கப்பா....!!!!! இவ்வளவு டிரெஸ் வெச்சிகிட்டு நம்மகிட்ட கடன் கேட்கிறாரே'' என்று அசந்துபோய் விட்டாராம்.
           பொதுவாகவே நரேந்திரமோடி பொதுவாகவே ஒரு ''அலங்காரப்பிரியர்'' என்பதை யாராலும் மறுக்கமுடியாது. நடையலங்காரம், உடையலங்காரம், பாவனையலங்காரம், சொல்லங்காரம்... உடலசைவில் அலங்காரம்... என இந்த அலங்காரங்களில் மோடி அதிக நாட்டமும் மோகமும் கொண்டவர். அதற்காகவே பணத்தையும் நேரத்தையும் சிந்தனையையும் செலவிடக்கூடியவர் என்று அவருக்கு அருகிலிருப்பவர்களே சொல்கிறார்கள். அப்படிப்பட்ட மோடியிடம் பதவியேற்ற இந்த 100 நாட்களில் இப்படிப்பட்ட  அலங்காரங்களில் அதிகமான வளர்ச்சியை நம்மால் காணமுடிகிறது. மக்கள் தன்னை ஒரு பிரதமராக பார்ப்பதை விட ஒரு ''ஹீரோவாக'' பார்க்கவேண்டும் என்று அதிக கவனம் செலுத்துகிறார் என்றே சொல்லவேண்டும்.  பிரதமர் என்ற முறையில் அவர்  ஒரு இடத்திற்கு சென்றால், தன்னுடைய நடை, உடை, பாவனைகளாலும், ஏதாவது ''வித்தியாசமான'' செயல்களாலும் அங்கு கூடியிருப்பவர்களை தன்பால் ஈர்க்கும் வேலைகளில் சிந்தித்து செயல்படுகிறார். .
                மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் முதன்முறையாக பாராளுமன்றக் கட்டிடத்திற்குள் நுழையும் போதே, அவரது சிந்தனையை நம்மால் புரிந்துகொள்ள முடிந்தது. தேசத்தின் விடுதலைக்காக பல்வேறு போராட்டங்களையும், தியாகங்களையும், இழப்புகளையும் சந்தித்து சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்று பாராளுமன்றத்தின் உள்ளே நுழையும் போது ஜவஹர்லால் நேரு கூட செய்யாத செயலை, இந்திய பெருமுதலாளிகளின் செலவில் பிரதமர் பதவியை பெற்ற நரேந்திரமோடி செய்தபோது அதைப்பார்த்த நமக்கெல்லாம் புல்லரித்துப் போனது. அதை அருகிலிருந்து பார்த்த தாத்தா அத்வானியே ''அய்யோ.... போதும் டா சாமி'' என்று அழுதுவிட்டார் என்றால் பாருங்களேன். பாராளுமன்றக் கட்டிடத்தின் உள்ளே நுழையும் போதே அதன் படிகளை குனிந்து வணங்கி முத்தமிட்டு நுழைந்தாரே மோடி அது தான் அவரது 100 நாள் சாதனையின் முதல் படிக்கட்டு. அன்றையிலிருந்து மேலே சொன்ன சாதனைகளை திறம்பட செய்து இன்று ஜப்பான் நாட்டில் அந்த நாட்டு மக்களின் முன்னால் ''டிரம்ஸ் சிவமணி'' போல் மோடி டிரம்ஸ் வாசித்து காட்டினாரே அது தான் அவரது 100 நாள் சாதனைகளின் கடைசிப் படிக்கட்டு. அன்று முதல் இன்று வரை இந்த 100 நாட்களில் தன்னை  ஒரு பிரதமர் என்று காட்டிக்கொள்வதை விட ஒரு ஹீரோவாக காட்டிக்கொள்ள அவர் பலவாறு யோசித்ததும், அதற்காக  நேரத்தையும், பணத்தையும் செலவழித்ததும்,  இந்த 100 நாட்களில் அவர் உபயோகப்படுத்திய விதவிதமான ஆடைகளையும், அதன் எண்ணிக்கையையும்  நிச்சயமாக யாராலும் மறுக்கமுடியாது. ஒரு பிரதமருக்கு இப்படியெல்லாம் ஆடையலங்காரம் செய்துகொள்ள நேரமிருக்கிறதா என்று ஆச்சரியப்படுகிறார்கள் அவருக்கு வாக்களித்த மக்கள். இவர் பிரதமர் வேலையைத்தவிர மற்ற வேலைகளை ''ரூம் போட்டு யோசித்து'' செய்கிறார் என்று அவருக்கு வாக்களிக்காத ''பெரும்பான்மை'' மக்கள் வேதனைப்படுகிறார்கள்.