''தானே'' புயல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
''தானே'' புயல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 27 ஜனவரி, 2012

''தானே'' புயலில் பாதித்த பகுதியை எல். ஐ. சி. முகவர் சங்கம் தத்தெடுத்தது...!

  
                        சென்ற மாதம் கொடூரமாக தாக்கிய ''தானே'' புயலினால் பாதிப்படைந்து, இன்னும் மீளாத்துயரில் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் புதுச்சேரியை சேர்ந்த ''திருக்காஞ்சி'' காலணிப்பகுதியை ''லிகாய்'' எல். ஐ. சி. முகவர் சங்கம் இன்று ( ஜனவரி 26 )  தத்தெடுப்பதாக அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் அவர்களுக்கான உதவிகள் முழுமையும் செய்து தருவதாக ''லிகாய்'' சங்கத்தின் மாநிலச் செயலாளர் தோழர். எஸ். சுத்தானந்தம் அப்பகுதி மக்களுக்கு  வீட்டு உபயோகப்பொருட்களை அளித்து பேசும்போது உறுதியளித்தார். இந்த செயல்களிலும், நிகழ்ச்சியிலும் புதுச்சேரி   பொது இன்சூரன்ஸ் ஊழியர்களும் தங்களை இணைத்துக்கொண்டு கலந்து கொண்டனர். 















                    


















திங்கள், 9 ஜனவரி, 2012

தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு - ''அரசின் திட்டங்களும் பலன்களும் எட்டிப்பார்க்காத காலணிகள்''

              அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தோழர்களோடு நேற்று புயலால் பாதிக்கப்பட்ட  கடலூர் மாவட்டப்பகுதிகளை பார்வையிட சென்றிருந்தேன். அப்படி பார்வையிட்டதில் எங்கள் மனதை அழவைத்த பகுதிகள் தலித் மக்கள் வாழும்  ''கிளிஞ்சிகுப்பம்'' மற்றும் ''சந்திக்குப்பம்'' ஆகிய  இரண்டு காலணிகள் ஆகும். சென்ற  மாதம் அடித்த ''தானே'' புயலால் மிகவும் பாதிக்கப்பட்ட அந்த மக்களை தமிழக அரசு அறிவித்த எந்த நிவாரணமும் எட்டிப்பார்க்கவே இல்லை. பாராளுமன்ற உறுப்பினரோ, சட்டமன்ற உறுப்பினரோ, கவுன்சிலரோ, மாவட்ட ஆட்சித்தலைவரோ அல்லது வருவாய்த்துறை  அதிகாரிகளோ கூட இதுவரை எட்டிப்பார்க்காத இவ்விரண்டு காலனி மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு தமிழக முதலமைச்சருக்கும், கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறேன். பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு உடனே உதவி செய்கவென்று வலைப்பூ நண்பர்கள் மற்றும் முகநூல் நண்பர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். கீழே முதலமைச்சருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் நகலும் அங்கே எடுக்கப்பட்ட படமும்......
************************************************************











































---------------------------------------------------------------------------------



அனுப்புநர்

புதுவை ராம்ஜி,
காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம்,
எல். ஐ. சி. ஆப் இந்தியா,
புதுசாரம்,
புதுச்சேரி - 605 013.

பெறுநர்

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு.

மரியாதைக்குரிய முதலமைச்சர் அவர்களுக்கு,

பொருள் : கடலூர் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாத ''தானே'' புயலில் பாதித்த
                 இரண்டு காலனிகள் பற்றியது.

              எங்கள் எல். ஐ. சி ஊழியர் சங்கத்தின் சார்பில் தானே
புயலில் பாதித்த இடங்களை கடந்த நான்கு நாட்களாக பார்வையிட்டு வருகிறோம்.
அப்படி பார்வையிட்டதில்
 08 - 01 - 2012 அன்று மதியம் மூன்று மணிக்கு புதுவை பகுதிக்குள்ளேயே
இருக்கும் கிளிஞ்சிக்குப்பம் மற்றும் சந்திக்குப்பம் ஆகிய இரண்டு
கிராமங்களை பார்வையிடும் வாய்ப்புக் கிடைத்தது. இந்த கிராமங்கள் இரண்டும்
புதுச்சேரிப் பகுதியில் உள்ள தமிழகப் பகுதி ஆகும். குறிப்பாக கடலூர்
மாவட்டத்தை சேர்ந்தப் பகுதியாகும்.

              இதில்  கிளிஞ்சிகுப்பம் காலனிப்பகுதியில் மட்டும்  சரியாக
201 வீடுகளும்   சுமார் ஆயிரம் பேர் மக்கள்தொகையும் கொண்ட
கிராமமாகும்.இவர்கள் அனைவரும் தலித் மக்கள் ஆவர்கள்.

                   அதேப்போல் சந்திக்குப்பம் காலனிப்பகுதியில் மட்டும்
சரியாக 50 வீடுகளும் சுமார் 200 பேர்  மக்கள்தொகையும் கொண்ட கிராமமாகும்.
இவர்கள் அனைவரும் தலித் மக்கள் ஆவார்கள்.

                     மேலே சொன்ன 251 வீடுகளில் பத்துப் பதினைந்து ஓட்டு
வீடுகளைத் தவிர அனைத்தும் கூரை வீடுகள் தான். சென்ற டிசம்பர் 29 இரவு
அடித்த கோரப்புயலின் காரணமாக அனைத்து ஓட்டு வீடுகளிலும்  ஓடுகளெல்லாம்
சரிந்து வீட்டுக்குள்ளேயே விழுந்திருக்கின்றன. அதனால் ஒருவருக்கு தலையில்
காயம் ஏற்பட்டிருக்கிறது. அதேப்போல் குடிசை  வீடுகளில் சில வீடுகளில்
இருந்த கூரைகள் முழுதுமாகவும் மற்றும் வீட்டிலிருந்த பாத்திரங்கள்
துணிமணிகள்  அனைத்தும் காற்றில் பறந்து வீடுகள் ஆகாயத்தைப்
பார்த்துக்கொண்டிருக்கின்றன. அதேப்போல்    பெரும்பாலான குடிசை வீடுகள்
பூமியில் சாய்ந்தும் கிடக்கின்றன. இரவில் குழந்தைகள் - பெண்கள் உட்பட
அனைவரும் வீட்டின் உள்ளே சென்று படுத்து உறங்குவதற்கு அச்சப்பட்டு
பனியில் நனைந்து கொண்டே வீதிகளில் படுத்து உறங்குகின்றனர்.

               மேலும் அடித்தப் புயலில் பெரும்பாலான வீடுகளில்
பாத்திரங்களும், உடைகளும் பறந்து சென்றுவிட்டன. பள்ளிகுழந்தைகளின்
புத்தகங்களெல்லாம் மழைநீரில் நனைந்து மீண்டும் பயன்படுத்த முடியாமல்
வீணாகிப்போய்விட்டன.

               இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இந்த காலணிப்பகுதியை
இதுவரையில் கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் பார்வை அந்தக் கிராமத்தில்
படவேயில்லை  என்பது தான் சோகமான விஷயமாகும். பாத்திரங்கள் இல்லை - சமையல்
பொருட்களும் இல்லை. அதனால் அவர்கள் அத்தனை பேரும் உணவுக்காக
அல்லாடுகிறார்கள். குழந்தைகள் உட்பட பட்டினி கிடக்கிறார்கள். யாரோ ஒரு
சில பணம்படைத்தவர்களும், தொண்டு நிறுவனங்களும் ஒரு சிலருக்கு மட்டுமே
உணவு கொடுக்கக்கிறார்கள். அதுவும் ஒரு வேளைக்கு மட்டும் தான்
கிடைக்கிறது. முழுமையாக சாப்பாடு கிடைக்காததால், குழந்தைகள் உட்பட பல
பேர் பட்டினியால் வாடுகிறார்கள்.

                குடிநீர் கூட எப்போதாவது தான் அளிக்கப்படுகிறது.
மின்சாரம் பக்கத்து கிராமங்களுக்கு எல்லாம்  வந்து விட்டன. ஆனால் இன்று
வரை இங்கே சரிசெய்யப்படாமல் இன்றுவரை இந்த கிராமம் இருளில்
மூழ்கியுள்ளது.

              அதேப்போல் இன்னொரு சோக நிகழ்ச்சியையும் தங்கள்
கவனத்திற்கு கொண்டுவரவிரும்புகிறேன். புயல் அடித்த அன்று விடியற்காலை
கிளிஞ்சிகுப்பம் காலணிப்பகுதியில் வசித்துவந்த  நாற்பத்தியாறு வயதான வேலு
என்பவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. புயல் அடங்கியப்பிறகு
மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வெளியே வந்திருக்கின்றனர். ஆனால் சாலை
முழுதும் மரங்களும் மின் கம்பங்களும் விழுந்துக்கிடந்ததால்
மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல முடியாமல் வீட்டிலேயே வைக்கப்பட்ட
நிலையில் இறந்துவிட்டார். ஆனால் கிராம நிர்வாகம் அவர் புயலின் காரணமாக
இறந்துவிட்டதாக பதிவு செய்யாமால் சாதாரணமாக இறந்துவிட்டதாக பதிவு
செய்திருக்கிறது.

             இவ்வளவு நடந்தும், இந்த காலணிப்பகுதிகளுக்கு பாராளுமன்ற
உறுப்பினரோ, சட்டமன்ற உறுப்பினரோ, வார்டு கவுன்சிலரோ ஒருமுறை கூட வந்து
பார்க்கவில்லை என்பது தான் ஒரு சோகமான விஷயமாகும். அதனால் தாங்கள்
அறிவித்த எந்தவிதமான நிவாரணங்களும் அந்த மக்களை சென்று அடையவில்லை.

              எனவே இந்த விஷயத்தில் தாங்கள் தலையிட்டு, பாதிக்கப்பட்ட
பாதிக்கப்பட்ட கிளிஞ்சிகுப்பம்  மற்றும் சந்திக்குப்பம் காலனி மக்களுக்கு
உடனடியாக உணவும் குடிநீரும் கிடைக்க ஏற்பாடு செய்துதர வேண்டுகிறேன்.
அதேப்போல், வீடுகளை இழந்து தவிக்கும் அம்மக்களுக்கு வீடுகளைக்
கட்டிக்கொள்ள ஏற்பாடுகள்  செய்துதர வேண்டுகிறேன். மேலும் நீங்கள்
அறிவித்த அத்தனை நிவாரண உதவிகளும் அந்த மக்களையும் சென்றடைய ஆவணச்
செய்யும்படியும் கேட்டுக்கொள்கிறேன்.

               மேலும், புயலின் காரணமாக மரணமடைந்த வேலு குடும்பத்திற்கு
நீங்கள் அறிவித்த இழப்பீட்டினை தந்து அவரை இழந்து வாடும் அவரது
குடும்பத்திற்கும் தாங்கள் தலையிட்டு உதவி செய்யும்படியும்
கேட்டுக்கொள்கிறேன்.

             இன்னொரு முக்கியமான தகவலையும் தங்கள் கவனத்திற்கு கொண்டுவர
விரும்புகிறேன். பாதிக்கப்பட்ட அந்த காலனி மக்கள் அனைவரும் சென்ற
சட்டமன்றத்தேர்தலிலும் உள்ளாட்சித்தேர்தலிலும் தங்களது கட்சிக்கு
வாக்களித்தவர்கள் என்பதையும் தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

           அங்கே எடுக்கப்பட்ட படங்களையும் தங்கள் பார்வைக்காக இத்துடன்
இணைத்துள்ளேன்

        மிக்க நன்றி.


                                                             தங்கள் உண்மையுள்ள,


                                                                   புதுவை ராம்ஜி

சனி, 7 ஜனவரி, 2012

''தானே'' புயல் மரங்களை அழித்தது - வெப்பத்தின் தாக்கம் உயர்ந்தது...!

                       புதுச்சேரி மற்றும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில்  ''தானே'' புயல் தாக்கி சென்று பத்து நாட்கள் கடந்த பின்னும் இன்னும் சகஜ நிலை திரும்பவில்லை. அடித்த புயல் வேகத்தில் வேலை நடக்காவிட்டாலும் வேலை நடந்துகொண்டு தான் இருக்கிறது. இடிந்த வீடுகளையும், கூரைகளையும் சரிசெய்வது, மின்சாரம் - குடிநீர் - பால் விநியோகங்களை சீர்செய்வது, சாலைகளில் வீழ்ந்துகிடக்கும் மரங்களை அப்புறப்படுத்துவது  போன்ற வேலைகள் நடந்துகொண்டு தான் இருக்கிறது. இந்த வேலைகளெல்லாம் முடிந்து சகஜநிலைக்குத் திரும்ப இன்னும் பல நாட்கள் ஆகும் என்று தான் சொல்லப்படுகிறது. 
                இவ்வளவு வேலைகள் நடந்துகொண்டிருக்கும் சூழ்நிலையில் ஒரு விஷயத்தை அரசாங்கமும், மக்களும் கவனிக்க தவறிவிட்டனர். அடித்தப் புயலில் வேரோடு  பிடுங்கி எறியப்பட்டும்,  கிளைகளோடு ஒடிந்து வீழ்த்தப்பட்டும், புயலின் வேகத்துக்கு அசராமல் நின்றுகொண்டிருந்தாலும் கிளைகளையும், இலைகளையும் இழந்தும் சோகமாக நின்றுகொண்டிருக்கும் மரங்களைப் பார்க்கும் போது போர் நடந்தது போல் - அணுகுண்டு வெடித்தது போல் காட்சியளிக்கிறது.  அந்த மரங்களை எல்லாம்  பார்க்கும் போது நம் நெஞ்சமெல்லாம் பதறுகிறது.
                 அப்படி வீழ்ந்த மரங்கள் அனைத்தும்   பல ஆண்டுகள் வயதான மரங்களாகவும், பல அரிய வகை மரங்களாகவும், பல வகையான பறவைகளுக்கு சரணாலயமாகவும், பல வகையான சிறு விலங்குகளுக்கு புகலிடமாகவும், உழைப்பாளி  மக்கள் ஓய்வெடுக்கும் கூரையாகவும், அடிக்கும் வெய்யிலில் அருமையான குடையாகவும்,  ஊரின் வெப்பத்தைக் குறைக்கும் குளிர் சாதனப்பெட்டியாகவும், பூக்களையும், காய்கனிகளையும் அள்ளித்தந்த வள்ளலாகவும்  இருந்திருக்கின்றன என்பது நாம் கண் கூடாக பார்த்த உண்மையாகும். தாகத்தைத் தனித்து குளிர்ச்சியைத் தந்த நெடிய தென்னை மரங்களும் நிலம் சாய்ந்து போயின.
               இன்று அந்த மரங்கள் எல்லாம் விறகாக மாறிவிட்டன. அந்த மரங்களை எல்லாம் வெட்டியும் அறுத்தும், எந்திரங்கள் அள்ளி தூக்கி போட்டு, லாரியில் ஏற்றிச்செல்லும் போது நமக்கெல்லாம் மனது பதைக்கிறது. எத்தனை தலைமுறைகளை காத்த மரங்கள், இன்று இன்றைய தலைமுறையினால் கூட காப்பாற்ற முடியாமல் வீழ்ந்து போயிற்று என்பதை பார்க்கும் போது கண்கள் கலங்குகிறது. நம்முடைய முன்னோர்கள் எத்தனைக் கனவோடு இந்த மரங்களை வைத்திருப்பார்கள். எதிர்காலத்தில் வரும் தலைமுறையினருக்கு  இந்த மரங்கள் எல்லாம் காவல் தெய்வங்களாக இருக்கும் என்று அல்லவா கனவு கண்டு இருப்பார்கள். இந்தனை காலமாக நம்மை காப்பாற்றிய மரங்களை நம்மால் காப்பாற்ற முடியவில்லையே என்று மனம் பொருமுகிறது.
                ஒரு மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜெனை (Oxygen) 22 மரங்கள் தருகின்றன என்றும், ஒரு ஏக்கர் நிலத்தில் வளர்ந்திருக்கும் மரங்கள் உற்பத்தி செய்யும் ஆக்சிஜெனை 18 பேர் சுவாசிக்கலாம் என்றும் சுற்றுச்சூழல் மற்றும் வன ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
                  ஒரு மனிதனுக்கு ஒரு நிமிடத்திற்கு சுவாசிக்க ஏழிலிருந்து எட்டு லிட்டர் வரை ஆக்சிஜென் தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு 11,000 லிட்டர் ஆக்சிஜெனை சுவாசிக்கிறான்.
அப்படியென்றால் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு இந்த மரங்கள் எவ்வளவு உதவிபுரிகின்றது என்பதை புரிந்துகொள்ளுங்கள். 
               இன்று தொண்ணுறு சதவீத மரங்களை  நாம் இழந்துவிட்டாதால், நாம் சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜெனை பல கோடி லிட்டர் அளவுக்கு இழந்துவிட்டோம் என்பது தான் உண்மை.  அதுமட்டுமல்ல, நாட்டிலுள்ள தொழிற்சாலைகளும், வாகனங்களும் வெளியிட்ட கரியமில வாயுக்கள் என்று சொல்லக்கூடிய கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு பூமி சூடாகும் போது இந்த மரங்கள் வெளியிட்ட ஆக்சிஜென் தான் பூமியின் சூட்டைக் குறைத்தது.
             இன்று மரங்கள் வெகுவாக குறைந்துவிட்டதால், புயலுக்குப் பிறகு நீங்கள் கூர்ந்து கவனித்திருந்தால் தெரியும், புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதிகளில் வெப்பம் அதிகமாகத் தெரிகிறது. இரவு நேரம் கூட பனி தெரிவதில்லை. இரவும் சூடாகத்தான் இருக்கிறது. மின்விசிறி இல்லாமல் தூங்க முடியவில்லை. பகலில் வெய்யில் சுளீரென்று அடிக்கிறது. மரங்களே இல்லாமல் ஊரே பளீர் வெளிச்சமாக இருக்கிறது. இப்போதே இப்படி இருக்கிறதென்றால், கோடை மிகக் கடுமையாக இருக்கும் என்பது தான் மிகப்பெரிய கொடுமையாகும்.
                எனவே மரத்தைப் பற்றிய கவலை இப்போதே தொற்றிக்கொண்டது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, இருப்பிடம், மின்சாரம், குடிநீர், பால் போன்றவற்றை ஏற்பாடு செய்கின்ற மத்திய - மாநில அரசுகள் மரங்கள் நடுவதிலும் அக்கறைக்காட்ட வேண்டும். இப்போது மரக்கன்றுகளை நட்டால் தான் குறைந்தது பத்தாண்டுகளிலாவது நிலைமை சீரடியும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
               இந்த விஷயத்தில் அரசுகளை மட்டும் எதிர் பார்க்காமல், பொது மக்களும்  அக்கறை காட்டவேண்டும். மக்கள் தங்கள் வீடுகளின் எதிரே வீதிகளின் இருப்பக்கங்களிலும், தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளிலும், முக்கிய சாலைகளிலும், மக்கள் கூடும் இடங்களான மருத்துவமனை, திருமணக்கூடம், சமுதாயக்கூடம், விளையாட்டு மைதானம், பார்க், மார்க்கெட், வழிப்பாட்டுத்தலங்கள்  போன்ற இடங்களிலும் கண்டிப்பாக மரக்கன்றுகளை நடுவதற்கு முயற்சி செய்யவேண்டும்.
                 இப்படி செய்தால் தான் வரும் காலம் குளிர்ச்சியாக இருக்கும். நாம் சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜென் கிடைக்கும். சுற்றுச்சூழலையும் பாதுகாக்கமுடியும்.