பிரகாஷ்காரத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரகாஷ்காரத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 ஏப்ரல், 2015

விரிவான இடதுசாரி ஒற்றுமையை உருவாக்குவோம்...! - பிரகாஷ்காரத்


           விசாகப்பட்டினத்தில் துவங்கிய கட்சியின் 21-வது அகில இந்திய மாநாட்டை துவக்கிவைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர்.பிரகாஷ்காரத் ஆற்றிய உரை :- 
               ஆந்திர மாநில விவசாயிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க தெலுங்கானா ஆயுதப்போராட்டம் நடைபெற்ற மண்ணில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது அகில இந்திய மாநாட்டை நடத்துகிறது.
         இந்த நேரத்தில் அந்தவீரமிகு போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தலைவர்களுக்கும், ஒன்றுபட்ட ஆந்திரப்பிரதேசத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை கட்டுவதில் அரும்பாடுபட்ட தலைவர்கள் பி.சுந்தரய்யா, எம்.பசவபுன்னையா, சி.ராஜேஸ்வரராவ் ஆகிய தலைவர்களுக்கும் நம் மரியாதை செலுத்துகிறோம். தேசிய அரசியலில் நம்முன் பல்வேறு சவால்கள் எழுந்துள்ள நிலையில் 21வது அகில இந்திய மாநாட்டைநாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். கடந்த ஓராண்டாக நாட்டில் வலதுசாரி சக்திகளின் தாக்குதல்கள் அதிகரித்திருப்பதை நேரில் கண்டு வருகிறோம். அந்த சக்திகள் பொருளாதாரம், அரசியல், சமூகம் மற்றும் கலாச்சாரம் என சகல துறைகளிலும் ஊடுருவி உள்ளது.

கார்ப்பரேட் - மதவெறி கூட்டு                  

            முதலாவதாக, மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் அது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் கூட்டு நிறுவனமாக செயல்படத் தொடங்கிவிட்டது. இதில், பிரதான கூட்டாளி என்ற முறையில் ஆர்எஸ்எஸ் அரசின் அனைத்து முடிவுகளிலும் அதிகமாக தலையிடுகிறது. இரண்டாவதாக, மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றவுடன், பதவிக்கு வந்த மோடி அரசு தனதுஅலுவலகத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைமையிலான இந்துத்வா சக்திகளின் அலுவலகமாக மாற்றிவிட்டது.
            மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் அது ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயலுக்கேற்ப மட்டுமல்லாமல், நாட்டிலுள்ள மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படத் தொடங்கிவிட்டது. அந்தநிறுவனங்கள் தங்களது புதிய தாராளமய, பொருளாதாரக் கொள்கைகளை மோடி அரசாங்கத்தின் மூலம் மிகத்தீவிரமாக அமல்படுத்த தொடங்கிவிட்டன. கடந்த10 மாதங்களுக்குள் நாட்டின் வளத்தை மோடி அரசு மிகப்பெரிய கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கிவிட்டது.

பலன் பெற்றது யார்?                    

             கனிம வளங்கள், நிலக்கரி சுரங்கங்கள், காப்பீடு, ரயில்வே, நிலம் என அனைத்தும் மிகப்பெரிய உள்நாட்டுமற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி மாதம்தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதான வரி 5 விழுக்காடாக குறைக்கப்பட்டதோடு, சொத்து வரி முற்றிலுமாக ஒழித்துக்கட்டப்பட்டுள்ளது.
             மோடி அரசின் இத்தகைய நடவடிக்கைகளால் யார் பலன் அடைந்தார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய முதலாளியான கவுதம் அதானியின் சொத்து மட்டும் 2014ம் ஆண்டிலிருந்து 2015ம் ஆண்டிற்குள் 25ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. ஒருபுறம் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கைகளை கடைபிடிக்கும் மோடி அரசு, மறுபுறம் உழைக்கும் மக்கள் மீதும் அவர்களின் உரிமைகள் மீதும் கொடூர தாக்குதல்களைத் தொடங்கி உள்ளது. தங்களது விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்ற துயரத்திலும், இடுபொருட்களின் விலை அதிகரித்துவிட்டது என்ற கவலையிலும் விவசாயிகள் உள்ளனர்.மேலும், வேளாண் மற்றும் பாசனத்துறை மீதான தனது முதலீட்டை அரசு கணிசமாக குறைத்துக் கொண்டுவிட்டது.
              எதிர்பார்க்காத பருவத்தில் பெய்த மழையால் விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டதோடு, அதனால் நஷ்டம் அடைந்த பல விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. விவசாய தொழிலாளர்களுக்கும், கிராமப்புற ஏழைகளுக்கும் வேலை வாய்ப்புகள் கிடைப்பதும் அரிதாக மாறிவிட்டது.

பழங்குடி மக்களை வெளியேற்றத் திட்டம்                    

               சாமானிய மக்களுக்கோ கடுமையான விலைவாசியிலிருந்து நிவாரணம் கிடைக்கவில்லை. தொழிலாளர் நலச்சட்டங்களில் பல்வேறு திருத்தங்களை கொண்டு வந்து உழைக்கும் மக்களின் உரிமைகள் மீதும் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன. புதிய சுரங்கம் மற்றும்கனிம வளச்சட்டத்தை இயற்றி பழங்குடி மக்களை அவர்களது இருப்பிடத்திலிருந்து அகற்றும் நடவடிக்கைகளும் தொடங்கி உள்ளன.

அனைத்துத் துறையிலும் மதவெறி                  

                 மூன்றாவதாக, இந்துத்துவா சக்திகள் தங்களின் மதவாத செயல்பாடுகளை தீவிரமாக அமல்படுத்துவதற்கான வழிகளை மோடி அரசு திறந்து விட்டுள்ளது. கல்வித்துறையில் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆர்எஸ்எஸ் கற்றுக் கொடுக்கிறது. ஆராய்ச்சி மற்றும்கலாச்சார நிறுவனங்களில் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அதுவே தீர்மானிக்கிறது. மறுபுறம் சிறுபான்மை மக்களுக்கு எதிராக விஷம் கக்கக்கூடிய பிரச்சாரம் தீவிரமாக நடைபெறுகிறது. மறு மதமாற்றம் சிறுபான்மை மக்களின் தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் அம்மக்களின் உணவு மற்றும் கலாச்சார உரிமைகள் மீதான அத்துமீறல்கள், மாட்டிறைச்சி மீதான தடை ஆகியவை இதில் அடங்கும்.

பெண்கள் நடமாட்டத்தை ஒடுக்க சதி                    

              பொது வாழ்விலும், பொது இடங்களிலும் பெண்களின் நடமாட்டத்தை ஒடுக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் மீது சமூக ரீதியாகவும், உடைக்கட்டுப்பாடு போன்றவற்றை திணிப்பதிலும் இந்துத்வா சக்திகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. 

அமெரிக்காவுக்கு சேவகம்                  

              இறுதியாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கூட்டுச்சேர வேண்டும் என்று துடிக்கும் மோடி அரசு அதற்கேற்ப தனது வெளியுறவுக் கொள்கைகளை மாற்றி வருகிறது. அந்தக் கொள்கைகள் வலதுசாரி சக்திகளின் செயல்பாடுகளை எதிரொலிக்கும் வகையில் உள்ளன. ஆசியாவில் தனது கொள்கைகளை விரிவாக்கத் துடிக்கும் அமெரிக்காவுடன் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கூட்டாளியாக செயல்படுவதற்கான நடவடிக்கைகளில் மோடி அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மோடி அரசு, அமெரிக்க நிர்பந்தத்திற்கு அடிபணிந்து நமது பொருளாதாரத்தை வெளிநாட்டு முதலீடுகளுக்காக மேலும் திறந்துவிட்டதோடு, அறிவுச்சொத்துரிமை விஷயத்திலும் இந்தியாவின் நலன்களை பலி கொடுத்துவிட்டது.

தீவிரம் அடையும் போராட்டங்கள்                

              தங்களது வாழ்வுரிமையை பாதுகாப்பதற்காக ஏற்கெனவே உழைக்கும் மக்களின் பல்வேறு பிரிவினர் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்திற்கு எதிராகவிரிவான இயக்கங்கள் தொடங்கி உள்ளன.
             தொழிலாளர் நலச்சட்டங்களில் மேற்கொள்ளப்படும் திருத்தங்களை எதிர்த்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்தி வருகின்றன.ஏற்கெனவே, நிலக்கரி சுரங்கங்களை தனியார்மயமாக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நிலக்கரி மசோதாவை எதிர்த்து நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தை நடத்தினர். காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை எதிர்த்துஅத்துறையில் உள்ள ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
         இதேபோல் மோடி அரசாங்கத்தின் மோசமான கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு பிரிவினரும் தங்களது உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தெருக்களில் இறங்கியுள்ளனர்.

முரண்பாடு முற்றும்             

                 தனியார் பெரு நிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்களுக்கு ஆதரவான மோடி அரசின் கொள்கைகளால் வரும் நாட்களில் உழைக்கும் மக்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் இடையே மிகப்பெரிய முரண்பாடுகள் ஏற்படப்போகிறது. எனவே, இத்தகைய காலகட்டத்தில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தை ஒருங்கிணைத்து வலதுசாரி சக்திகளின் சவால்களை முறியடிப்பது குறித்து கட்சியின் மாநாடு விவாதிக்க உள்ளது.

மேற்குவங்கத் தோழர்களுக்கு பாராட்டு                  

            நம் நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தனித்தும், இடதுசாரி அணியையும் வலுவாக கட்டும் கடமை நம் முன் உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி சக்திகளுக்கு குறிப்பாக, மேற்குவங்கத்தில் ஏற்பட்ட பின்னடைவிலிருந்து நாம் மீண்டு வரவேண்டி உள்ளது. கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெறும்இந்த வேளையில் மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரின் கொடூரமான தாக்குதல்களை எதிர்கொண்டு இயக்கங்களை நடத்தி வரும் ஆயிரக்கணக்கான நமது கட்சி ஊழியர்களையும், இடதுசாரி கட்சிகளின் தொண்டர்களையும் பாராட்டுகிறோம். தற்போதுகூட, அம்மாநிலத்தில் நகராட்சி தேர்தல்களில் ஆளும் கட்சி கொடூரமான வன்முறையை ஏவி உள்ளது. இதில் நமது தோழர்கள் சுபாஷ் முகோபாத்தியாயா, மனேஷ் முகர்ஜி ஆகியோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் அவர்கள் மாநாட்டில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் குணமடைய மாநாட்டின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மீண்டு எழுவோம்!          

            கடந்த அகில இந்திய மாநாட்டிற்குப் பின்னர் மேற்குவங்க மாநிலத்தில் உயிர் நீத்த 99 தோழர்களின் தியாகம் வீண்போகாது. மக்களின் ஆதரவோடு நாம் மீண்டெழுந்து இத்தகைய சக்திகளை தோற்கடிப்போம்.

அனைத்து இடதுசாரிகளையும் ஒருங்கிணைப்போம்!        

            நாட்டில் வலதுசாரி சக்திகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், இடதுசாரி ஒற்றுமையை மேலும் விரிவுபடுத்த வேண்டிய முக்கியமான தருணத்தில் நாம் உள்ளோம். விரிவான இடதுசாரி அணியில் அனைத்து இடதுசாரி கட்சிகளும், குழுக்களும், தனி நபர்களும் இணைய வேண்டும். இடதுசாரி கட்சிகளின் வெகுஜன அமைப்புகளுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் பணியிலும் நாம் ஈடுபட வேண்டி உள்ளது. வலுவான இடதுசாரி ஒற்றுமை உருவானால், மற்ற ஜனநாயகசக்திகளை நம்மால் திரட்டி வலுவான இடது மற்றும் ஜனநாயக மாற்றை உருவாக்க முடியும். எனவே, கட்சியின் 21வது மாநாடு கட்சிக்கு புதிய வழியை காட்டும். அந்த வகையில் இந்த மாநாடு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதியை பாதுகாக்கவும், இடது மற்றும் ஜனநாயக மாற்றை உருவாக்கவும், கட்சிக்கு இம்மாநாடு வழிகாட்டும். வலுவான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவோம். விரிவான இடது ஒற்றுமையை கட்டுவோம். இடது மற்றும் ஜனநாயக மாற்று அணியை உருவாக்கும் பணியை நோக்கி முன்னேறுவோம்.

இவ்வாறு தோழர்.பிரகாஷ்காரத் பேசினார்.

நன்றி : தீக்கதிர்

புதன், 23 ஏப்ரல், 2014

மாற்று அரசியல் இடதுசாரிகளால் தான் சாத்தியம்...!


       மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர்.பிரகாஷ்காரத் அவர்களுடன் நேர்காணல்.                    

           இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரை நூற்றாண்டுக்கு முன் பிரிந்ததற்கான நியாயம் இன்னும் நீடிக்கிறதா? ஏன் இந்தியாவில் உள்ள எல்லா இடதுசாரி அமைப்புகளும் ஒன்றுசேரக் கூடாது?

                இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் 1964ல் பிளவு ஏற்பட சித்தாந்த, அரசியல் கார ணங்கள் அடிப்படையாக இருந்தன. அதற்குப் பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இரு கட்சிகளாகச் செயல்படுகின்றன. இந்த இருகட்சிகளிடையே ஒற்றுமையையும் வலிமையையும் வலுப்படுத்துவதன் மூலமாகவே இடதுசாரி இயக்கத்தின் இருப்பை வலுவாக வெளிப்படுத்தலாம் என்று நான் நினைக்கிறேன்.

         உலகெங்கும் கம்யூனிஸ்ட்டுகள் அவரவர் நாட்டுக்கேற்ப கட்சியைக் கட்டியிருக்கிறார்கள். சீனா ஒரு துருவம் என்றால், கியூபா ஒரு துருவம். இந்தியாவுக்கேற்ப கட்சியைக் கட்டமைக்க கம்யூனிஸ்ட்டுகள் தவறிவிட்டீர்களா?

           இந்தியச் சூழலுக்கு ஏற்ப மார்க்சிஸத்தைப் பயன்படுத்தத் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது. உலகின் பிற கம்யூ னிஸ்ட் கட்சிகளைவிட நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பில் பணிபுரிவதில் எங் களுக்குத்தான் அனுபவம் அதிகம் என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம்.

        சுதந்திரத்துக்குப் பின் கொஞ்சம் கொஞ்ச மாக காங்கிரஸ் மக்கள் ஆதரவை இழந்தே வந்திருக்கிறது. ஆனால், ஒருகாலத்தில் நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியாக இருந்த இடதுசாரிகள் இதன் பலனை அறுவடை செய்து கொள்ளும் நிலை இல்லை. இதற்கான காரணம் என்ன?

               இடதுசாரிகளுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்று நீங்கள் சொல்ல முடியாது. உதாரணமாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை எடுத்துக்கொண்டால், கட்சி 1964-ல் நிறுவப்பட்டது. காங்கிரஸூக்கு எதிராக 1967லிலும் நெருக்கடி நிலைப் பிர கடனத்துக்குப் பிறகு 1977லிலும் பெரிய அலை வீசியது. 1967-ல், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நடத்திய போராட்டங்கள் காரணமாக நாங்கள் செல்வாக்கு பெற முடிந்தது. கேரளத்திலும் மேற்கு வங்கத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் இடதுசாரிகளின் கூட் டணி அரசுகள் பதவிக்கு வந்தன. 1990களில் முழுக்க நாங்கள்தான் மூன்றாவது பெரிய கட்சி. நாடாளுமன்றத்தின் 75 தொகுதிகள் முதல் 85 தொகுதிகள் வரையில்தான் நாங் கள் போட்டியிடுகிறோம் என்றாலும், 5சதவீதம் முதல் 6சதவீதம் வரையிலான வாக்குகளைப் பெற்றுவருகிறோம். இக்கால கட்டத்தில் மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா ஆகியமாநிலங்களில் ஆட்சியிலும் இருந்திருக்கிறோம்.

மோடியின் ‘குஜராத் மாதிரி வளர்ச்சி’ யை எப்படிப் பார்க்கிறீர்கள்?

        மோடியின் குஜராத் மாதிரியையும் பாஜகவின் வளர்ச்சிக் கோட்பாட்டையும் நாங்கள் முற்றிலுமாக நிராகரிக்கிறோம். அது பெருநிறுவனங்களுக்குச் சாதகமானது, செல்வம் சிலரிடம் மட்டுமே குவியவும் மக்களிடையே ஏற்றத்தாழ்வு மேலும் அதிகமாகவும் மட்டுமே அது வழிவகுக்கும்.

          சரி, நரசிம்மராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங் முன்னெடுத்த பொருளாதாரக் கொள்கைகள் சரியில்லை. மோடி உச்சரிக்கும் வளர்ச்சியும் எல்லோருக்குமான உண்மையான வளர்ச்சியாகத் தெரியவில்லை. அப்படியென்றால், உங்களைப் பொறுத்த அளவில் வளர்ச்சிக்கான வரையறைதான் என்ன? அதற்கான செயல்திட்டம் என்ன?

         நாங்கள் வளர்ச்சிக்கு மாற்றுப் பாதையை வகுத்திருக்கிறோம். விவசாயத்தை நம்பியுள்ள நம்முடைய உற்பத்தி முறையை ஜனநாயக வழியில் மாற்றி அமைக்கும்போது, அதனால் ஏழைகளும் கிராமப்புற மக்களும் பலன் அடைவார்கள். பொது முதலீட்டை அதிகரிப்பது, உள்ளூரில் தேவைகளை ஏற்படுத்துவது, அதன் மூலம் தொழில்துறை வளர்ச்சியையும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்குவது போன்றவை எல்லோருக்குமான வளர்ச்சியை முன்னெடுக்கும் எங்கள் மாற்றுப்பாதையின் முக்கிய அம்சங்கள்.

        கம்யூனிஸ்ட்டுகளின் பலம் எப்போதுமே தொழிலாளர் வர்க்கம்தான். ஆனால், இன்றைக்குப் பத்து ரூபாய்க்கு மூட்டை தூக்குபவரும் தொழிலாளி; மாதம் லட்ச ரூபாய் வாங்கும் கணிப்பொறியாளரும் தொழிலாளிகள் தான். இந்த இரு வேறுபட்ட தொழிலாளிகளையும் ஒன்றிணைக்கும் - கட்சியை நோக்கி இழுக்கும் செயல்திட்டம் கட்சியிடம் இருக்கிறதா? வெளியிலிருந்து பார்க்க அப்படித் தெரியவில்லை?

        உழைக்கும் வர்க்கத்தில் மாற்றங்கள் ஏற் பட்டுவருகின்றன. உழைக்கும் வர்க்கத்தில் பெரும்பான்மையோர் அமைப்பு ரீதியாகத் திரட்டப்படாததுதான் இப்போதைய பிரச் சனையே. இந்த விஷயத்தில் இப்போது கட்சி நிறைய கவனம் செலுத்துகிறது.

பிராந்தியக் கட்சிகளின் வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

        இந்தியா போன்ற நாட்டில் மாநிலக் கட்சிகளுக்குத் தேவை இருக்கிறது. வெவ்வேறு பின்னணி கொண்டவர்கள் இணைந்து வாழும் சமஷ்டி அமைப்பு நமக்கு முக்கியம்.

       பிரச்சனைகளை அணுகும்போது தேசியக்கட்சியாக அணுகுவதா, மாநிலக் கட்சியாக அணுகுவதா என்பதில் கட்சிக்குக் குழப்பம் இருக்கிறதா?

இல்லை. நாட்டுக்கு எது தேவையோ அதையே சொல்கிறோம்; செய்கிறோம்.

        மேற்கு வங்கத்தில் வன்முறை அரசியலை இடதுசாரிகள் கையாண்டீர்கள் என்ற கடுமையான குற்றச்சாட்டு உங்கள் மீது உண்டு. இன்று அதையே திரிணமுல்காங்கிரஸிடமிருந்து நீங்களும் எதிர்கொள்கிறீர்கள். இந்த அரசியல் வேட்டையை முடிவுக்குக் கொண்டுவர ஏதேனும் நட வடிக்கை எடுத்திருக்கிறீர்களா?

          எப்போதுமே ஏழைகளுக்காகவும் ஆதிக்கத்துக்கு எதிராகவும் போராடும் கட்சி இது. மக்களைச் சுரண்டிப் பிழைப்பவர்கள் எங்களுக்கு எதிராக வன்முறைகளைக் கையாண்டனர் என்பதே வரலாறு. 1970 களில் எங்கள் கட்சிக்கு எதிராக வன் செயல்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இப்போது திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியிலும் அதே போன்ற சூழலைப் பார்க்கிறோம். இதை மறைக்கத்தான் நாங்கள் ஆட்சி யிலிருந்தபோது வன்செயல்களில் ஈடு பட்டதாகத் திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்யப் படுகிறது. நாங்கள் எப்போதும் வன்முறைக்கு எதிராகவே இருக்கிறோம்.

உங்களை நெருக்கமாகப் பார்க்கும் பலரும், “கட்சி கொஞ்ச காலத்துக்கேனும் - ஓரிரு தேர்தல்களுக்கேனும் - தேர்தல் அரசியலைப் புறக்கணித்துவிட்டு, மக்கள் மத்தியில் செயலாற்றச் செல்ல வேண்டும்; அமைப்பை வலுவாக்கிவிட்டு, பின்னர் மீண்டும் தேர்தல் அரசியலுக்குத் திரும்ப வேண்டும்” என்கிறார்கள். ஏன் செய்யக் கூடாது?

         நீங்கள் மாற்றிக் கூறுகிறீர்கள். உண்மையில், எங்கள் மீதான குற்றச்சாட்டே நாங்கள் தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை என்பதுதான். எங்களுடைய முக்கியமான வேலையே மக்களிடையே களப்பணி செய்வதுதான். எங்களுடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகள், இளைஞர்கள், மாணவர், மகளிர் இயக்கங்களில் பணிபுரிகின்றனர். இந்த அமைப்புகள் மூலம்தான் எங்களுடைய அரசியல் செல்வாக்கை வளர்த்துக்கொள்ள முடியும் என்று நம்புகிறோம். அப்போதுதான் அது தேர்தல் வெற்றியில் எதிரொலிக்கும்.

          இந்தத் தேர்தல் அரசியல் மூலம் நீங்கள் வாக்காளர்களுக்குக் கொடுக்கும் வாய்ப்பு என்ன? அதாவது, எத்தனையோ கட்சிகள் இருக்கும்போது ஏன் மக்கள் இடதுசாரிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

          ஒரு வாக்காளர் ஊழலற்ற ஆட்சியை விரும்புகிறார் என்றால், எல்லோருக்குமான வளர்ச்சியை விரும்புகிறார் என்றால், அது இடதுசாரிகளிடம்தான் சாத்தியம். ஏனென்றால், சுத்தமான கைகள் இடதுசாரி களுடையவை. மாற்று அரசியல், பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டவர்கள் இடதுசாரிகள். பெருநிறுவனங்கள், பணமூட்டைகள் அரசியலை ஆக்கிரமிக்கக் கூடாது என்று நினைத்தால், இடதுசாரிகளைத்தான் தேர்ந்தெடுக்க முடியும்.

நேர்காணல் : சமஸ்
நன்றி : தி இந்து (தமிழ்) ஏப். 22-4-2014