இந்திய தலைநகரிலிருந்து முப்பதே கிலோமீட்டர் தொலைவிலுள்ள
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஃபரிதாபாத்தில் ஜிதேந்திரகுமார் மற்றும் அவரது மனைவி ரேகா ஆகிய தலித் குடும்பத்தினரின் வீட்டை உயர்சாதியை சேர்ந்தவர்கள் சென்ற வாரம் மிருகத்தனமாக இரக்கமின்றி தீயிட்டுக் கொளுத்தினர். வீடு கொழுந்துவிட்டு எரிந்ததில் உள்ளே இருந்த அந்த தம்பதியனரின் மூன்று வயது மற்றும் பதினொன்றே மாதங்கள் ஆன இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உடல் கருகி இறந்தனர். அந்த குழந்தைகளோடு வீட்டிலிருந்த அந்த தம்பதியினர் இருவரும் பலத்த தீக்காயத்துடன் உயிர் தப்பினர்.
தலைநகருக்கு அருகிலேயே நடந்த இந்த சம்பவம் பற்றிய செய்தி நாடு முழுதும் காட்டுத்தீயாக பரவியது. இந்த கோரச்சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டவுடனேயே தோழர். பிருந்தா காரத் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குழுவினர் சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். ஆனால் சம்பவம் நடைபெற்ற நாளிலிருந்து இன்று வரையில், பிரதமரோ, மத்திய அமைச்சர்களோ, ஹரியானா முதலமைச்சரோ, அவரது அமைச்சர்களோ அல்லது வேறு கட்சியை சேர்ந்த தலைவர்களோ அல்லது குழுக்களோ பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்திக்கவுமில்லை அல்லது ஆறுதல் கூறவுமில்லை என்பது தான் உண்மை.





