நோபல் பரிசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நோபல் பரிசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 16 டிசம்பர், 2014

நோபல் மங்கை மலாலா..!


நான் ஷாஜியா... நான் கைனட் ரியாஸ்... நான் கைனட் சோம்ரோ... 
நான் மேஸான்... நான் அமினா...!        
         இந்த விருது எனக்குரியது மட்டுமல்ல. இது கல்வி மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கானது. அமைதியை வேண்டி அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிற குழந்தைகளுக்கானது. இது மாற்றத்தை விரும்பும், குரலற்ற குழந்தைகளுக்கானது. நான் இங்கே அவர்களுடைய உரிமைக்குரலாக ஒலிக்கிறேன். இது அவர்களுக்கு பரிவு காட்டுவதல்ல; கல்வி மறுக்கப்பட்ட ஒரு குழந்தையை நாம் பார்ப்பது இதுவே கடைசி முறையாக இருக்கட்டும் என உறுதியேற்கும் தருணம்.
             கல்வி, வாழ்வின் அதிஅற்புதமான ஒன்று. இதுவே எனது 17 ஆண்டுகால வாழ்வின் அனுபவம். வடக்கு பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் தான் என்னுடைய வீடு இருக்கிறது. நான் எப்போதும் பள்ளிக்குச் செல்வதிலும் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதிலும் ஆர்வமாயிருந்தேன். பண்டிகைக் காலங்களில் நானும், எனது நண்பிகளும் எங்களது கைகளில் மருதாணி வைத்துக்கொள்வோம். எங்கள் கைகளில் பூக்களையும், கோலங்களையும் வரையவில்லை;
         மாறாக கணித வாய்ப்பாடுகளையும், சமன்பாடுகளையும் நாங்கள் வரைந்தோம்.கல்வியின் மீது தீராத் தாகம் கொண்டிருந்தோம். ஏனெனில் வகுப்பறைதான் எங்கள் வருங்காலத்தை மாற்றப்போகிறது. நாங்கள் ஒன்றாக அமர்ந்து இணைந்து படித்து வந்தோம். நாங்கள் எண்ணிலடங்கா கனவுகளோடு, சுத்தமான சீருடைகளை அணிய மிகவும் விரும்பினோம். ஆண்களால் மட்டுமே முடியும் என சிலர் எண்ணிவந்தவற்றை உடைத்து நாங்கள்அறிவிலும், படிப்பிலும் சிறந்தவர்களாக எங்களுடைய பெற்றோர்கள் பெருமையடையும் விதம் நடந்துகொள்ள ஆசைப்பட்டோம்.ஆனால் அந்தக் கனவு அப்படியே நிலைத்திருக்கவில்லை.
          சரியாக எனக்கு 10 வயது. அழகும் பொலிவும் நிறைந்த ஸ்வாட் பள்ளத்தாக்கு திடீரென தீவிரவாதத்தின் தலமாக மாற்றப்பட்டது. 400க்கும் மேற்பட்ட பள்ளிகள் அடையாளமின்றி அழிக்கப்பட்டன. பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வது நிறுத்தப்பட்டது. பெண்கள் சாட்டையால் அடிபட்டார்கள். அப்பாவிமக்கள் கொல்லப்பட்டார்கள். நாங்கள் அனைவரும் பாதிக்கப்பட்டோம். எங்களின் கனவுகளை இருள் கவ்வத் துவங்கியது. கல்வி பெறுவது, உரிமை என்பதற்கு மாறாக குற்றம் என ஆக்கப்பட்டது.என்னுடைய உலகமும், என்னுடைய தேவைகளும் தடம் மாறின. எனக்கு முன் இரண்டு வழிகள் இருந்தன.
            முதலாவது, அமைதியாக இருந்துவிட்டு, சில காலம் காத்திருந்து பின் கொல்லப்படுவது; இரண்டாவது, உரத்துப் பேசி உடனே கொல்லப்படுவது. இதில் நான் தேர்ந்தெடுத்தது இரண்டாவது வழியை. நான் உரத்துப் பேச முடிவு செய்தேன். அக்டோபர் 9, 2012. தீவிரவாதிகள் எங்களை தடுத்து நிறுத்தி தாக்கினர். ஆனால் அந்த துப்பாக்கிக் குண்டுகளால் எங்களை வெல்ல முடியவில்லை. இது என் கதைமட்டுமல்ல... ஏராளமான பெண் குழந்தைகளின் கதை.நான் இங்கு என்னுடன் நைஜீரியா, சிரியா என் பாகிஸ்தான் சகோதரிகளை அழைத்து வந்துள்ளேன்.
           நான் சுடப்பட்ட நாளில் என்னுடன் இருந்த துணிவுமிக்க சகோதரிகள் ஷாஜியா மற்றும் கைனட் ரியாஸ் ஆகியோரை என்னுடன் அழைத்து வந்துள்ளேன். அவர்களும் அந்த துயரமிக்க அதிர்ச்சியை கடந்து வந்தவர்களே. பாகிஸ்தானில் இருந்து வந்திருக்கும் இன்னொரு சகோதரி கைனட் சோம்ரோ, எல்லைமீறிய துன்புறுத்தலுக்கும், வன்புணர்ச்சிக்கும் ஆளாகி, தனது சகோதரனையும் இழந்தவள். ஆனாலும் அவர்களிடம் அடங்கிவிடாமல் துணிந்து எதிர்த்தவள். இன்னும் நான் சந்தித்த ஏராளமான சகோதரிகளைச் சொல்வேன். சிரியா நாட்டைச் சேர்ந்த 16 வயதான மேஸான் - தற்போது அகதிகள் முகாம்களில் இருக்கும் ஆண் - பெண் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தருகிறாள்.
              போகோ ஹாராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்ட - கல்விக்காக ஏங்கும் சிறுமிகளில் ஒருத்தியான வடக்கு நைஜீரியாவின் அமினா... இன்னும் ஏராளமான சிறுமிகள் இருக்கிறார்கள். உங்கள் முன்னால் நிற்கும் இந்த மலாலா, ஒரு நபர் அல்ல... எனது குரல், ஒரு நபருடையதல்ல... நான் ஷாஜியா. நான் கைனட் ரியாஸ். நான் கைனட் சோம்ரோ. நான் மேஸான். நான் அமினா. நான், பள்ளிகளில் இருந்து துரத்தப்பட்ட 660 லட்சம் பெண் குழந்தைகளின் குரல். உலகெங்கிலும் நவீனமயத்தையும், வளர்ச்சியையும் பார்க்கிறோம். இருந்த போதிலும் அந்த நாடுகள் முழுவதும் இன்றும் மிகப்பழமையான பிரச்சனைகளான பசி, வறுமை, அநியாயம் மற்றும் மோதல்கள் ஏராளமாய் நிறைந்துள்ளது.
         முதலாம் உலகப்போர் நிறைவடைந்து நூறு ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது. ஆனால் இன்னும் அந்தப்போரின் பல லட்சக்கணக்கான உயிர்ப்பலியில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளாத நிலையே தொடர்கிறது. இங்கே இன்னும் ஏராளமான போர்களில் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்கள் பறிக்கப்படுகின்றன. சிரியாவிலும், காஸாவிலும், இராக்கிலும் ஏராளமான குடும்பங்கள் அகதிகளாக மாற்றப்பட்டுள்ளன. வடக்கு நைஜீரியாவில் பெண்கள் பள்ளிக்கு செல்வதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் அப்பாவி மக்கள் குண்டுவெடிப்புகளில் பலியாவதை கண் முன்னே பார்க்கிறோம்.
            ஆப்பிரிக்காவில் ஏராளமான குழந்தைகள் வறுமையின் காரணமாக பள்ளிகளின் படிகளைக் கூட மிதிக்க முடியவில்லை. இந்தியா மற்றும் பாகிஸ்தானில் ஏராளமான குழந்தைகள் சமூக ஒடுக்குமுறைகளால் கல்விகற்கும் உரிமை மறுக்கப்பட்டவர்களாகவும் அல்லது குழந்தைத் தொழிலாளர்கள், குழந்தைத் திருமணங்களினால் பாதிக்கப்படுகின்றனர். என்னுடைய வயதுடைய மிகுந்த நம்பிக்கையும், திறமையும் வாய்ந்த என் தோழி டாக்டராக வேண்டும் என கனவு கண்டு கொண்டிருந்தாள். ஆனால் அவள் கனவு கனவாகவே மாறிப்போனது. 12 வயதில் அவளுக்கு கட்டாய திருமணம். 14வயதுள்ள குழந்தை 1 வயதுக் குழந்தைக்கு தாயாகிப் போனாள். எனக்குத் தெரியும் அவள் நிச்சயம் டாக்டராகி இருப்பாள். ஆனால் அவளால் இப்போது முடியாது.           ஏனென்றால் அவள் ஒரு பெண்.
           நீங்கள் அளித்துள்ள நோபல் விருதுத் தொகை என் இதயத்தில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தானில் பள்ளிகளை கட்டுவதற்கு உதவிடப் போகிறது. முக்கியமாக எனது தாயகமான ஸ்வாட் பள்ளத்தாக்கு எனது கிராமமான சங்லாவில். என்னுடைய ஊரில், பெண் குழந்தைகளுக்கான மேல்நிலைப்பள்ளி ஒன்று கூட இல்லை. எனவே என் நண்பர்கள் தங்களின் கனவுகளை நனவாக்கிக் கொள்வதற்கும், அவர்கள் கல்வியைப் பெறுவதற்கும் ஒரு வாய்ப்பாய் நான் ஒரு பள்ளியை உருவாக்கப்போகிறேன். நம்முடைய அரசியல் தலைவர்களுக்கு கல்வியின் அவசியத்தைப் பற்றிக் கூற வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் அது அவர்களுக்குத் தெரியும். எனவேதான் அவர்களது குழந்தைகளை நல்ல பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள். நாங்கள் உலகத் தலைவர்களிடம் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வலியுறுத்துகிறோம். வலிமையான நாடுகள் என்று சொல்லிக் கொண்டு போரை உருவாக்குவதில் முனைப்பாக இருப்பது போன்று ஏன் அமைதியை உருவாக்குவதில் முனைப்பு இல்லை? ஏன் துப்பாக்கிகளைக் கொடுப்பது எளிதாகவும், புத்தகங்களைத் தருவது கடினமாகவும் உள்ளது உங்களுக்கு..? ஏன் பீரங்கிகளை உருவாக்குவதை மிக எளிமையாகவும், பள்ளிக்கு கட்டடங்களை கட்டுவதை மிகுந்த சிரமமாகவும் உணருகிறீர்கள்?நாம் நிலவை அடைய முடிகிறது; ஏன் செவ்வாய்க்கிரகத்திலேயே விரைவில் வாழ முடியும் என்கிறார்கள். ஆனால் எல்லோருக்கும் கல்வி தர முடியாதா? எனவே நாம் அனைவருக்குமான சமத்துவத்தையும், நீதியையும் மற்றும் அமைதியையும் பெற்றிட குழந்தைகளை இந்த உலகம் முழுவதும் போராட அழைக்கிறேன். இதுவே ஆண், பெண் குழந்தைகள் தாங்கள் பால்யங்களை தொழிற்சாலைகளில் தொலைத்தது கடைசியாய் இருக்கட்டும். இதுவே பெண் குழந்தைகள் கட்டாயப்படுத்தப்பட்டு குழந்தைத் திருமணங்கள் செய்தது கடைசியாய் இருக்கட்டும். இதுவே ஏதுமறியா அப்பாவிக் குழந்தைகள் போரில் இறந்தது கடைசியாய் இருக்கட்டும். இதுவே வகுப்பறைகள் யாருமின்றி தனித்துக் கிடந்தது கடைசியாய் இருக்கட்டும். இதுவே பெண்கல்வி பெறுவது உரிமையல்ல என்று கூறுவது கடைசியாய் இருக்கட்டும். இதுவே பள்ளிக்கு வெளியே குழந்தைகள் ஏக்கத்தோடு காத்திருப்பது கடைசியாய் இருக்கட்டும்.

(அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தான் சிறுமியும் பெண் கல்வி உரிமைப் போராளியுமான மலாலா யூசுப் ஜாய், நோபல் விருது விழாவில் ஆற்றிய உரையிலிருந்து)
தமிழாக்கம்  : எஸ். கார்த்திக், மதுரை புறநகர் மாவட்டத் தலைவர், 
                              இந்திய மாணவர் சங்கம்
நன்றி : தீக்கதிர்

வெள்ளி, 7 அக்டோபர், 2011

பெண்ணுரிமைப் போராளிகளுக்கு அமைதிக்கான நோபல் பரிசு - பாராட்டுகிறோம்...!

              2011 - ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு கடந்த ஒரு வாரகாலமாக தினமும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இயற்பியல், வேதியியல், இலக்கியம் என பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்தவர்களுக்கு இந்த பரிசுகள் அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில், இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு மூன்று பெண்களுக்கு - அதுவும் பெண்ணுரிமைப் போராளிகளுக்கு  பகிர்ந்தளிக்கப்படுகிறது.  இதன் படி அமைதிக்கான நோபல் பரிசுக்காக லைபிரீய அதிபர் ஆலன் ஜாண்சன்சர்லீப், இதே  நாட்டை சேர்ந்த சமூக போராட்ட வீராங்கனை லீமாத் போவீ, ஏமன் நாட்டை சேர்ந்த பெண்ணுரிமைப் போராளி தவக்குல்கர்மான் ஆகிய மூன்று  பெண்கள்   தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
          சமூகத்தில் ஆண்களுக்கு இணையாக   பெண்களின் முன்னேற்றமில்லாமல்   நாம் ஜனநாயகத்தையும் அமைதியையும்  அடைய முடியாது. அமைதியை இழக்கும் நிலை ஏற்பட்டு விடும் என்றும் இந்த நோபல் பரிசுக் குழுவினர் தங்களுடைய தேர்வு கருத்துப்பட்டியலில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
                பொதுவாக அமெரிக்க ஆதரவாளர்களுக்கும், அமெரிக்க ஆதரவு நாடுகளை சேர்ந்தவர்களுக்கும், சோஷலிச நாடுகளில் அரசுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கும் தான்  நோபல் பரிசு வழங்குவது வழக்கம். அதிலும் அமைதிக்காக கொடுக்கப்படும் பரிசினை அறிவிக்கும்  போது ஏதாவது சர்ச்சை எழுவதும் வழக்கமாகத் தான் இருந்து வருகிறது. இப்படித் தான் 2009 - ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு கொடுத்தபோதும், சென்ற ஆண்டு சீன அரசுக்கு எதிராக செயல் பட்டு சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் லியூ சியோபோக்கு கொடுத்தபோதும் சர்ச்சைகளும், விமர்சனங்களும் எழுந்தன.
                 ஆனால் இந்த முறை தான் நோபல் பரிசு வரலாற்றிலேயே முதல் முறையாக, பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்ணுரிமைப் போராளிகள் என்ற மதிப்பளித்து மூன்றுப் பெண்களுக்கு நோபல் பரிசு பகிர்ந்தளித்திருப்பது வரவேற்கத்தக்கது.    
                 ஆலன் ஜாண்சன்சர்லீப்  என்பவர் 72 வயதான   இவர் கடந்த 2005 - ஆம் ஆண்டு  ஆப்பிரிக்க  நாட்டின் முதல் பெண் அதிபராக ஜனநாயக முறைப்படி  தேர்ந்தேடுக்கப்பட்டவர். அதற்கு முன்பு  இவர் லைபீரியாவில் அமைதிக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறார். சமீபத்தில் இரண்டாவது முறையாக லைபீரியாவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 2005  - ஆம் ஆண்டு இவர் அதிபராகப் பதவியேற்றுக் கொண்டது முதலே லைபீரியாவில் அமைதியை நிலைநாட்டுவதற்காக பாடுபட்டவர். மேலும் பெண்களின் நிலையை வலுப்படுத்தவும், சமூக மேம்பாடு மற்றும் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் பாடுபட்டவர்.
                  அதே நாட்டை சேர்ந்த  லீமாத் போவீ ஒரு ஆப்பிரிக்க  அமைதி ஆர்வலர். அமைதிக்கான இயக்கத்தை ஏற்படுத்தி லைபீரியாவின் 2-வது சிவில் போரை 2003-ல் முடிவுக்குக் கொண்டுவந்தவர். கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம் பெண்களை இணைத்து அவரது உரிமைக்காக போராடியவர். மேலும் தேர்தல்களில் பெண்களின் பங்களிப்புக்கு உறுதி ஏற்படுத்திக் கொடுத்தவர்.
                    ஏமன் நாட்டை சேர்ந்த தவக்குல்கர்மான்,  32  வயதான  இவர் மூன்று குழந்தைகளுக்கு தாயாவார். அந்நாட்டில் நடந்த பல்வேறு மனிதஉரிமை போராட்டம் மற்றும் அதிபருக்கு எதிரான புரட்சியில் முக்கிய பங்கு வகித்தவர். பெண் பத்திரிகையாளர் அமைப்பின் தலைவராகவும் உள்ளார். இந்த பரிசு தமக்கு பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும். இதனை ஏமன் நாட்டு புரட்சிக்கர இளைஞர்களுக்கும் மக்களுக்கும்  அர்ப்பணிக்கிறேன்  என்று மகிழ்ச்சி ததும்பக் கூறினார்.
                   இம்முறை பெண்ணுரிமைப் போராளிகள் மூவருக்கு நோபல் பரிசு அளித்திருப்பது என்பது பெண்ணுரிமைப் போராளிகளுக்கு தரப்பட்ட அங்கீகாரமாகவும், கௌரவமாகவும் கருதப்படுவது மட்டுமல்லாமல், இந்தப் பரிசு உலகெங்கிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பெண்ணுரிமைப் போராட்டங்களுக்கு மேலும் வலுசேர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை.