அமெரிக்க பொருளாதாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமெரிக்க பொருளாதாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 2 அக்டோபர், 2013

திவாலாகிறது டாலர் தேசம் - செயலிழந்து தவிக்கிறது ஒபாமா நிர்வாகம்...!

   
( இது ''மாற்று'' - இணையத்தளத்தில் வெளியான எனது கட்டுரையின் விரிவு....! ) 
          உலகத்திலேயே தன்னை ஒரு ''பொருளாதார வல்லரசாக'' தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அமெரிக்காவில் புதிய நிதியாண்டிற்கான பட்ஜெட் நிதிப்பற்றாக்குறை காரணத்தால் நிறைவேற்றப்படாமல் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல்  அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் வைக்கப்பட்ட புதிய நிதியாண்டிற்கான வரவு - செலவுத் திட்டத்தில் ''ஒபாமா கேர்'' என்று அழைக்கப்படும் ''தனி நபர் சுகாதார காப்பீட்டு திட்டத்திற்கான'' நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு அந்நாட்டின் எதிர்க்கட்சியான குடியரசுக்கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வரவு - செலவுத் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்காததால் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. இதனால் அமெரிக்க அரசு இயந்திரமே செயலிழந்து தவிக்கிறது.
          அமெரிக்காவின் நிதியாண்டு என்பது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30 - ஆம் தேதி முடியும். நேற்று அக்டோபர் 1 - ஆம் ஆண்டு புதிய நிதியாண்டின் தொடக்கமாகும். ஒவ்வொரு ஆண்டும் நிதியாண்டு தொடங்குவதற்கு முன்பே வரும் ஆண்டிற்கு எவ்வளவு ''பொதுக்கடனை'' வாங்கலாம் என்பதை தீர்மானித்து அதற்கான சட்டத்தை நிறைவேற்றி அதிபருக்கு அனுப்புவது என்பது வழக்கம். அதே போன்று அடுத்த நிதி ஆண்டுக்கு 17.8 டிரில்லியன் (ஒரு டிரில்லியன் = 1 லட்சம் கோடி) டாலர் அளவுக்கு ''பொதுக்கடன் தொகை'' உயர்த்தப்பட்டால் மட்டுமே அடுத்த ஆண்டு பட்ஜெட்டை உருவாக்க முடியும் என்ற வழக்கமும் இருந்து வருகிறது.  ஆனால்  வழக்கப்படி கடன் வாங்கும் அளவை உயர்த்த எதிர்க்கட்சி இம்முறை  அனுமதிக்கவில்லை. அதனால் அமெரிக்க அரசாங்கம் மிகப்பெரிய இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்டது. இதன் காரணமாக அந்நாட்டில் மாபெரும் இழுபறி நிலை நீடித்து வருகிறது. இந்த நிலை என்பது அதிபர் ஒபாமாவிற்கு ஏற்பட்டுள்ள மிக மோசமான பின்னடைவு என்றே சொல்லவேண்டும். இப்படியாக பொருளாதார பின்னடைவால் ''டாலர் தேசம்'' தத்தளித்துக் கொண்டிருப்பதை உலக நாடுகள் உண்ணிப்பாக பார்த்துக்கொண்டிருக்கின்றன.
              அதென்ன  ''ஒபாமா கேர்''....? நம்ம ஊரு ''கலைஞர் காப்பீட்டுத் திட்டம்'' போல், ''ஒபாமா கேர்'' என்ற பெயரில் அமெரிக்காவில் பிரபலமாக அழைக்கப்பட்ட ஒபாமாவின் சுகாதார நலத்திட்டமாகும். நம்ப நாட்டுல  சோனியா காந்தியின் ''கனவு திட்டம்'' போல, இது அமெரிக்காவுல அதிபர் ஒபாமாவின் ''கனவு திட்டம்'' என்று சொல்லப்படுகிறது. நம்ம ஊரு தலைவர்களைப் போல அரசு திட்டங்களுக்கு தன்னுடைய பெயரையே வைத்துக்கொண்டு விளம்பரத்தைத் தேடிக்கொள்ளும் மலிவு அரசியல் புத்தி அமெரிக்க அதிபர் ஒபாமாவையும் விட்டுவைக்கவில்லை. இது ஏழை - எளியவர்களுக்கான திட்டம் என்பதால் அப்படிப்பட்ட இந்த சுகாதார நலத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டு மசோதாவிற்கு எதிர்க்கட்சியான குடியரசு கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எதிர்க்கட்சியினரான குடியரசுக்கட்சியினர் அதிக எண்ணிக்கையில் உள்ள பிரதிநிதிகள் சபை என்பதால் ஒபாமாவின் இத்திட்டத்திற்கு ஆதரவு கிடைக்காமல் தீர்மானம் நிறைவேற்றப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல்  இந்த மசோதா நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவும் முடிவடைந்துவிட்டது.
              இப்படிப்பட்ட பொருளாதார சீர்கேடுகள் நிறைந்த கடுமையான சூழ்நிலையில் அமெரிக்காவில் உள்ள அரசு நிறுவனங்களை ''தற்காலிகமாக'' மூடிவிடுவதென முடிவெடுத்து வெள்ளை மாளிகையிலிருந்து அதிபர் ஒபாமா கெடுபிடியான - அபாயகரமான உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனால் அமெரிக்க அரசு நிறுவனங்களில் வேலை செய்யும் சுமார் 8லட்சம் அரசு ஊழியர்கள் சம்பளமின்றி கட்டாய விடுப்பில் அனுப்பட்டுள்ளனர். மேலும் இலட்சக்கணக்கான பேர் பணியிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலை எத்தனை நாட்களுக்கு நீட்டிக்கும் என்பதையும் ஒபாமா அறிவிக்கவில்லை. நாடு சந்தித்துக்கொண்டிருக்கும் இவ்வளவு மோசமான சூழ்நிலையைப் பற்றி அமெரிக்க மக்களிடமும் கூட ஒபாமா இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. இதே நிலை 15 நாட்களுக்கு மேல் நீடித்தால், 2009 - ஆம் ஆண்டு அமெரிக்கா சந்தித்த ''ரெசஷன்'' என்று சொல்லக்கூடிய பொருளாதார வீழ்ச்சி என்பது மீண்டும் பூதாகரமாய் உருவெடுக்கும் வாய்ப்பிருக்கிறது. இதனால் அமெரிக்க மக்கள் மேலும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பார்கள். வேலையை இழந்த - வருமானத்தை இழந்த குடும்பங்கள் கடுமையான அளவிற்கு பாதிக்கும் என்றும், வியாபாரம் நடைபெறாமல் வருமானமில்லாமல் பல்வேறு வியாபார நிறுவனங்களும் மூடப்படும் அபாயத்தில் உள்ளது என்றும் சொல்லப்படுகிறது. அமெரிக்க  பங்கு சந்தையும் விழ்ச்சியுற்று ''வால் வீதியே'' ஸ்தம்பித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களும் ஒபாமா மீது வெறுப்பும், கோபமும் அடைந்திருக்கிறார்கள்.
             அதுமட்டுமல்ல இதுபோன்று அரசு நிறுவனங்கள் மூடப்படுவது என்பது அமெரிக்காவிற்கு இது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பு 1995 - 96 நிதியாண்டிலும் இதுபோன்ற மோசமான சூழ்நிலையை அமெரிக்கா  சந்தித்து அரசு நிறுவனங்களை மூடியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. என்றாலும் அதிலிருந்து 17 ஆண்டுகள் ஆகியும் அமெரிக்கா பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதைத் தான் இன்றைய சூழ்நிலை நமக்கு உணர்த்துகிறது.

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

தள்ளாடும் அமெரிக்க பொருளாதாரம் - இந்தியாவையும் பற்றிக்கொள்ளும் அபாயம் ..!

 மமதையில் அலையும்  அமெரிக்காவுக்கு  மீண்டும் பொருளாதார (நெருக்) அடி - இது இந்தியாவையும் பாதிக்கும்.     
     
          பொருளாதாரக்கொள்கைகளை மதிப்பீடு செய்து தரச்சான்றிதழ் வழங்கும் ஸ்டாண்டர்டு & பூவர்ஸ்  எனும் நிறுவனம், அமெரிக்க அரசின் சமீபத்திய கடன் கொள்கைகளை ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தர வரிசையில் அமெரிக்காவுக்கு குறைந்த மதிப்பீட்டை அளித்துள்ளது.    
                       இந்தப்பின்னணியில் சர்வதேச கடன் தர வரிசையில் அமெரிக்காவுக்கு முதல் முறையாக குறைவான ரேட்டிங் மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளதை  தொடர்ந்து ,  அமெரிக்கப் பொருளாதாரத்தின் மீது அந்நாட்டிலுள்ள முதலீட்டாளர்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதிலுமுள்ள முதலீட்டாளர்கள் நம்பிக்கையை இழக்கத் துவங்கியுள்ளனர். அதனால் அதிபர் ஒபாமாவுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.
                  முதன்முதலாக தரவரிசைப் பட்டியலில் அமெரிக்கப் பொருளாதாரம் சரிவைச் சந்தித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதிலுமுள்ள பங்குச்சந்தைகளில் அமெரிக்க நிறுவனங்களின் பங்குகள் மளமளவென சரிந்து வருகின்றன. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அமெரிக்கப் பொருளாதாரம் மிக ஆழமான நெருக்கடிக்குள் வேகமாக பயணித்துக்கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை.
                   இந்தப்பின்னணியில் மீண்டுமொரு கடும் நெருக்கடியை சந்திக்க வேண்டிய ஆபத்து அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க நாடாளுமன்றத்தில் குடியரசுக்கட்சியும் ஜனநாய கக்கட்சியும் இணைந்து, அமெரிக்கப்பொருளாதாரத்தில் பொதுச்செலவினங்களை கடுமையாக குறைப்பதன்மூலம் நெருக்கடியிலிருந்து தப்பித்துக்கொள்ள தீர்மானித்தன. இதுதொடர்பாக சில நாட்களுக்கு முன்பு சட்டமும் நிறைவேற்றப்பட்டது. இதன் பொருள், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பொதுச்செலவினங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை கடுமையாக வெட்டிக்குறைத்து, பெரும் நிறுவனங்களின் இழப்பை ஈடுகட்டுவது என்பதே அந்த சட்டத்தின் அம்சமாகும்.

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எச்சரிக்கை :                              
 
                அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள சறுக்கல் உலகளாவிய பொருளாதார மந்தத்தை நோக்கி மேலும் தீவிரமாக செல்லும் என்றும், இது இந்தியாவையும் கடுமையாக தாக்கக்கூடும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடி காரணமாக உலக அளவில் மீண்டும் பொருளாதார தேக்கநிலை ஏற்படும் அதனால் இந்தியாவும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
                 அமெரிக்காவில் பொருளாதார மீட்சி எதிர்பார்த்த அளவுக்கு ஏற்படவில்லை. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. தொழில் நிறுவனங்களில் உற்பத்தி குறைந்து வருகிறது. மக்களிடையே பணப்புழக்கம் குறைந்து வருகிறது. இதை எப்படிச் சமாளிப்பது என்பதில் அமெரிக்க ஆட்சியாளர்களிடையே கருத்தொற்றுமை இல்லை.  இந்திய அரசு சர்வதேசச் செலாவணி நிதியம், பன்னாட்டு வங்கிகளின் யோசனைகளையே காது கொடுத்து கேட்டு வருகிறது. தன்னுடைய பொருளாதார நடவடிக்கைகளையும் அமெரிக்க அரசின் கண்ணசைவுக்கு ஏற்ப மாற்றி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவுக்கு ஏற்படும் பாதிப்பு இந்தியாவையும் பற்றும் வாய்ப்பு இருப்பதாகவே மார்க்சிஸ்ட் கட்சி அச்சம் தெரிவித்துள்ளது.
             
அமெரிக்க பத்திரிக்கைகளின் கணிப்பு:

               அமெரிக்காவின் சரிவு, உலக நிதிக்கட்டமைப்பில் கடும் அதிர்வை ஏற்படுத்தும் என்று அந்நாட்டின் பிரபலமான பொருளாதார ஏடான ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ குறிப்பிட்டுள்ளது.
              அமெரிக்கப்பொருளாதாரத்தின் தரக்குறைவு, உலக நிதிச்சந்தைகளை திக்குத் தெரியாத எல்லையில் கொண்டுபோய் நிறுத்தும் என்றும், ஏற்கெனவே நீடிக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் ஐரோப்பிய நெருக்கடியால் தற்போதைய நிலைமை மேலும் மோசமடையும் என்றும் ‘வாஷிங் டன் போஸ்ட்’ ஏடு எழுதியுள்ளது.