இன்று தலைநகர் புதுடெல்லி ஒரே பரபரப்பாய் இருந்தது. ' 2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் எனக்கோரி, சுப்ரமணிய சாமி தாக்கல் செய்த மனுவை பாட்டியாலா சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் இன்று மதியம் தள்ளுபடி செய்தது தான் அந்த பரபரப்புக்கு காரணம்.
'2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில், ராஜாவோடு மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சாமி ஆஜராகி சாட்சியம் அளிக்கும் போது, தன் கோரிக்கைக்கு ஆதாரமாக பல முக்கிய ஆவணங்களையும் சி. பி. ஐ., நீதிபதி ஷைனி முன் சமர்ப்பித்திருந்தார்.
இந்த வழக்கில் சிதம்பரத்திற்கு எதிராக நிச்சயம் தீர்ப்பு வரும் என்று நாடே எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்தது.
நாடே பெரும் பரபரப்புடன் எதிர்பார்த்த இந்த வழக்கில், நீதிபதி ஓ.பி.சைனி, இன்று மதியம் இந்த வழக்கின் மீது தீர்ப்பு வழங்கும் போது, சிதம்பரம் கிரிமினல் குற்றம் புரிந்துள்ளார் என்பதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை என்று அறிவித்தது என்பது நாம் எதிர்ப்பார்த்த ஒன்று தான். சி. பி. ஐ. சிதம்பரம் கையில் இருக்கும் போது, தீர்ப்பு மட்டும் எப்படி அவருக்கு எதிராக இருக்கும்...? என்றாலும் இது சிதம்பரத்திற்கு ஒரு தற்காலிக சந்தோசம் தான். ஏனென்றால் தில்லி உயர்நீதிமன்றம் செல்கிறார் சுப்பிரமணிய சாமி.
