நரேந்திர மோடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நரேந்திர மோடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 23 டிசம்பர், 2014

செங்கொடியின் பக்கம் வாருங்கள் இளைஞர்களே...!

தோழர் டி.கே.ரங்கராஜன், எம்.பி.,                
20-12-2014 அன்று நடைபெற்ற, சிபிஎம் மதுரை புறநகர் மாவட்ட 21-ஆவது மாநாட்டுப் பொதுக்கூட்ட உரையில் இருந்து                
 
                     நிரஞ்சன் ஜோதி என்ற பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பேச்சால் ஐந்து நாட்களாக முடங்கியது நாடாளுமன்றம். ராமனுக்குப் பிறந்தவர்களைத் தவிர யாரும் நாட்டில் இருக்கக் கூடாது என்று மதவெறியுடன் அவர் பேசியுள்ளார். ராமனுக்கு லவன், குசன் என்ற இரண்டு மகன்கள் மட்டும்தான் இருந்தனர். நிரஞ்சன் ஜோதி கூற்றுப்படி, ராமனுக்குப் பிறக்காத பரமசிவன், அவருடைய பிள்ளைகள் விநாயகர், முருகன் ஆகியோர் எங்கே போவது? பாஜக நாடாளுமன்ற உறுப்பினரின் கணக்குப்படி அவர்கள் இந்திய பிரஜையே இல்லை.
             கடந்த ஏழு மாதங்களுக்கு முன் பாஜக, தேர்தல் வாக்குறுதி தந்தது. ஆட்சிக்கு வந்த நூறு நாட்களில் கறுப்புப் பணத்தைக் கைப்பற்றுவோம் என நரேந்திர மோடி கூறினார். அப்படி கைப்பற்றும் பணத்தில் தலைக்கு 35 லட்சம் ரூபாய் கிடைக்கும் என வெங்கைய்யா நாயுடு கூறினார். அவர்கள் கூறியபடி நூறு நாட்களைக் கடந்து 7 மாதங்கள் முடிந்து விட்டன. ஏன் கறுப்புப்பணம் வரவில்லை எனக் கேட்டால் கமிட்டி போட்டிருக்கிறோம் என்கிறார்கள். இதையேதான் காங்கிரசும் சொன்னது. மன்மோகன்சிங்கும் சொன்னார்.
             பாஜக ஆட்சிக்கு வந்து 7 மாதங்களில் சாமானிய மக்கள் பயன்படுத்தும் பல பொருட்களின் விலை ஏற்றப்பட்டிருக்கிறது. மானியங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன. கிராமப்புற வேலை உறுதித் திட்டம் படிப்படியாகக் கைவிடப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை சந்தைக்கு தள்ளிவிடப்பட்ட பின்னும், அரசு சார்பில் கடுமையாக வரி விதிக்கபடுகிறது. 
               திட்டக்கமிஷன் கலைக்கப்பட்டு விட்டது. அப்படியென்றால் இதற்கான திட்டங்களை யார் தீட்டுவது...? ஒரு காலத்தில் டாட்டா, பிர்லா என்றால் இப்போது அதானி, முருகப்பா, அம்பானி ஆகியோர் தான் இத்திட்டங்களைத் தீட்டுகிறார்கள். உலகத்தில் யாரும் கடன் தர மறுத்த பின்பும் அதானியின் பக்கம் மோடி நிற்கிறார்; ஆஸ்திரேலியாவில் கைவிடப்பட்ட நிலக்கரி சுரங்கத்தை வாங்கிவதற்கு 1 லட்சம் டாலரை ஸ்டேட் பாங்க் மூலம் கடனாக வழங்க உத்திரவிடுகிறார். எந்த ஆட்சியிலாவது இந்த அநியாயத்தைப் பார்த்ததுண்டா?
              இப்படிப்பட்ட பாஜக, அரசு எப்படி மக்கள் நலனைப் பாதுகாக்கும்? கடந்த 7 மாதங்களாக மக்கள் பிரச்சனை குறித்து பிரமரான நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பேசவில்லையே, ஏன்...?
                இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களை பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்க்க வேண்டும் என்றும், சமஸ்கிருதத்தை பாடமொழியாக்க வேண்டும் என்ற இரண்டு அஜண்டாக்களை மட்டும் பாஜக வைத்துள்ளது. இதைச் சொன்னால் கம்யூனிஸ்ட் கட்சிகள் தூண்டி விடுவதாக போஸ்டர் போடுகிறார்கள். பொதுத்துறையைக் காப்பதற்கும், மக்கள் ஒற்றுமையைப் பாதுகாப்பதற்கும் எங்கள் கொள்கையைச் சொல்ல ஒருமுறையல்ல, பலமுறை தூண்டிவிடுவோம்.
        சிறுபான்மை மக்களை மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ள பாஜக, முஸ்லீம் ஒருவர் இந்துவாக மாறினால் அவரை என்ன சாதியில் சேர்க்கும்...? இந்து மதத்தில் இருந்து ஒடுக்கப்பட்ட மக்கள் வேறு மதத்திற்குப் போனது வர்ணாசிரமக் கோட்பாடுதான் காரணம். வர்ணாசிரமவாதிகள் செய்யும் வேலையைத் தான் உசிலம்பட்டியில் முருகன்ஜி செய்து கொண்டிருக்கிறார்.
                128 கோடி மக்கள் வாழக்கூடிய இந்தியாவில் சமஸ்கிருதம் படித்து ஒருவர்கூட பி.எச்.டி பட்டம் வாங்கவில்லை. எம்.ஏ படித்த ஒருவரும் இல்லை. பாடமொழி சமஸ்கிருதம் என்றால் இதற்குப் புத்தகங்கள் எங்கே...? இல்லாத ஒன்றை கற்பனையில் உருவாக்குவதுதான் பாஜகவின் வேலை.
நன்றி :

புதன், 3 செப்டம்பர், 2014

மோடியின் 100 நாள் ஆட்சியும் ஈர்க்கும் ஆடையலங்காரமும்....!

                 ''வளர்ச்சி... வளர்ச்சி'' என்று சொல்லி மக்களை ''வளைச்சி வளைச்சி'' ஓட்டுக்கேட்டு வெறும் 31 சதவீத வாக்குகளே பெற்றாலும், தேர்தலில்   வெற்றிபெற்ற மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையில் அதிகம் என்ற அடிப்படையில் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிப்பொறுப்பை ஏற்று இன்று நூறாவது நாளை தொடுகிறது. அதிக எண்ணிக்கையில் மக்களவை உறுப்பினர்களை கொண்ட பாரதீய ஜனதாக் கட்சிக்கு நூறாவது நாளை தொடுவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. ஆனால் இந்த நூறு நாட்களில் மோடி தலைமையிலான ஆட்சி என்ன சாதித்தது....? நான் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமானவன் என்று தன்னை பற்றி விளம்பரப்படுத்திக்கொள்ளும் மோடி கடந்த நூறு நாட்களில் என்ன சாதித்து காட்டினார்....? இந்த கேள்வியெல்லாம் நூறு நாளிலேயே கேட்டா எப்படி...? இன்னும் 5 வருஷம் இருக்கு இல்ல..? அப்படின்னு கேள்வி வரும். ஏன் இந்த ''நூறு நாள்'' அளவுகோளை எடுக்கிறோம் என்றால், தேர்தல் நேரத்தில மோடியும், அவரது கூட்டாளிகளும் தான் நாங்கள் பதவியேற்று 100 நாளில ''வானத்தை வில்லா வளைப்போம்... மணல கயிறா திரிப்போம்... நாங்க வித்தியாசமானவங்க...'' என்றெல்லாம் வாய் ஜாலமும் வார்த்தை ஜாலமும் மாயா ஜாலமும் காட்டித்தான் இப்போ ஆட்சியில உட்கார்ந்துகிட்டு இருக்காங்க.
                   ஆனால் இந்த நூறு நாட்களில் நடந்தது என்ன...? மோடி என்னென்ன சாதனைகளை செய்திருக்கிறாருன்னு பார்த்தா தலையே சுத்தும். இவர்கள் பதவியேற்றவுடன் பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்திக்காட்டினார். இரயில் கட்டணத்தையும்  கடுமையாக உயர்த்திக்காட்டினார். பாதுகாப்புத்துறையில் அந்நிய நேரடி முதலீடு... இன்சூரன்ஸ் துறையில்  அந்நிய நேரடி முதலீடு... இரயில்வே துறையில் அந்நிய  நேரடி முதலீடு... என அந்த மூன்று துறைகளையும் பார்சல் செய்து இந்த மாதம் அமெரிக்க சுற்றுப்பயணம் போகும்போது அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் பரிசுப்பொருளாய் கொடுக்க  ஏற்பாடுகள் செய்தார். 64 ஆண்டுகாலமாக இயங்கிவந்த திட்டக்கமிஷனுக்கு மூடுவிழா நடத்த கருத்துக்கேட்டார்.  வசதியற்ற மக்களுக்கு வருமானம் இல்லையென்றாலும் பரவாயில்லை. காசு இல்லையென்றாலும் பரவாயில்லை. பசிக்கிற வயித்துக்கு சோறில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் அவர்களுக்கு வங்கிக்கணக்கு அவசியம் என்று ''கட்டாய வங்கிக்கணக்கு'' அறிமுகம் செய்துவைத்தார். ஏறுகின்ற விலைவாசியை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். பதவியேற்ற 100 நாட்களில் பூட்டான், பிரேசில், நேபாளம், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சென்று வந்தார். தேர்தல் வரையில் ஓயாமல் பேசிக்கொண்டிருந்தவர், பிரதமராக ஆனப்பிறகு பேசுவதை நிறுத்திக்கொண்டார். ஆனால் வெளிநாட்டில் பேசுவார். இவைகள் தான் மோடியின் 100 நாள் சாதனைகளாக மக்களால் இன்றைக்கு முணுமுணுக்கப்படுகின்றன.
                 ஆனால் மோடியின் அரசியல் காலத்தை மூன்று காலமாக பிரிக்கலாம். ஒன்று...  பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கு  முந்தைய காலம்.  இரண்டு... பிரதமர் வேட்பாளர் காலம். மூன்று... பிரதமர் பதவிக்காலம். இதுல 100 நாள் பிரதமர் பதவிக்காலம் தான் மிகவும் குறிப்பிடத்தக்க காலம் கருதவேண்டும். மேலே சொன்ன சாதனைகள் ஒருபுறமிருக்க. இன்னொரு பக்கம்... இந்த பிரதமராக இருக்கும் இந்த 100 நாட்களில் நரேந்திரமோடி சுமார் 200-க்கும் அதிகமான ஆடை அணிந்திருக்கிறாராம். அதுமட்டுமல்ல ஒரு முறை அணிந்த ஆடையை இன்னொரு முறை அணிந்ததில்லையாம். இந்தியாவில் உள்ள முக்கிய உடையலங்கார நிபுணர்கள் சொல்லும் தகவல்கள் தான் இது. இன்றைக்கு ஜப்பான் நாட்டில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருக்கும் மோடியின் ஆடை அலங்காரங்களைப் பார்த்து ஜப்பானிய பிரதமரே அசந்துபோய்விட்டாராம். ஜப்பானில் ஒரே நாளில் நடைபெற்ற நான்கு வெவ்வேறு நிகழ்ச்சிகளுக்கு நான்கு வெவ்வேறு விதமான ஆடைகளில் கலந்துகொண்டாராம். அந்த நிகழ்ச்சிகளில் அவரோடு கலந்துகொண்ட ஜப்பானிய பிரதமரே ''அடேங்கப்பா....!!!!! இவ்வளவு டிரெஸ் வெச்சிகிட்டு நம்மகிட்ட கடன் கேட்கிறாரே'' என்று அசந்துபோய் விட்டாராம்.
           பொதுவாகவே நரேந்திரமோடி பொதுவாகவே ஒரு ''அலங்காரப்பிரியர்'' என்பதை யாராலும் மறுக்கமுடியாது. நடையலங்காரம், உடையலங்காரம், பாவனையலங்காரம், சொல்லங்காரம்... உடலசைவில் அலங்காரம்... என இந்த அலங்காரங்களில் மோடி அதிக நாட்டமும் மோகமும் கொண்டவர். அதற்காகவே பணத்தையும் நேரத்தையும் சிந்தனையையும் செலவிடக்கூடியவர் என்று அவருக்கு அருகிலிருப்பவர்களே சொல்கிறார்கள். அப்படிப்பட்ட மோடியிடம் பதவியேற்ற இந்த 100 நாட்களில் இப்படிப்பட்ட  அலங்காரங்களில் அதிகமான வளர்ச்சியை நம்மால் காணமுடிகிறது. மக்கள் தன்னை ஒரு பிரதமராக பார்ப்பதை விட ஒரு ''ஹீரோவாக'' பார்க்கவேண்டும் என்று அதிக கவனம் செலுத்துகிறார் என்றே சொல்லவேண்டும்.  பிரதமர் என்ற முறையில் அவர்  ஒரு இடத்திற்கு சென்றால், தன்னுடைய நடை, உடை, பாவனைகளாலும், ஏதாவது ''வித்தியாசமான'' செயல்களாலும் அங்கு கூடியிருப்பவர்களை தன்பால் ஈர்க்கும் வேலைகளில் சிந்தித்து செயல்படுகிறார். .
                மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் முதன்முறையாக பாராளுமன்றக் கட்டிடத்திற்குள் நுழையும் போதே, அவரது சிந்தனையை நம்மால் புரிந்துகொள்ள முடிந்தது. தேசத்தின் விடுதலைக்காக பல்வேறு போராட்டங்களையும், தியாகங்களையும், இழப்புகளையும் சந்தித்து சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்று பாராளுமன்றத்தின் உள்ளே நுழையும் போது ஜவஹர்லால் நேரு கூட செய்யாத செயலை, இந்திய பெருமுதலாளிகளின் செலவில் பிரதமர் பதவியை பெற்ற நரேந்திரமோடி செய்தபோது அதைப்பார்த்த நமக்கெல்லாம் புல்லரித்துப் போனது. அதை அருகிலிருந்து பார்த்த தாத்தா அத்வானியே ''அய்யோ.... போதும் டா சாமி'' என்று அழுதுவிட்டார் என்றால் பாருங்களேன். பாராளுமன்றக் கட்டிடத்தின் உள்ளே நுழையும் போதே அதன் படிகளை குனிந்து வணங்கி முத்தமிட்டு நுழைந்தாரே மோடி அது தான் அவரது 100 நாள் சாதனையின் முதல் படிக்கட்டு. அன்றையிலிருந்து மேலே சொன்ன சாதனைகளை திறம்பட செய்து இன்று ஜப்பான் நாட்டில் அந்த நாட்டு மக்களின் முன்னால் ''டிரம்ஸ் சிவமணி'' போல் மோடி டிரம்ஸ் வாசித்து காட்டினாரே அது தான் அவரது 100 நாள் சாதனைகளின் கடைசிப் படிக்கட்டு. அன்று முதல் இன்று வரை இந்த 100 நாட்களில் தன்னை  ஒரு பிரதமர் என்று காட்டிக்கொள்வதை விட ஒரு ஹீரோவாக காட்டிக்கொள்ள அவர் பலவாறு யோசித்ததும், அதற்காக  நேரத்தையும், பணத்தையும் செலவழித்ததும்,  இந்த 100 நாட்களில் அவர் உபயோகப்படுத்திய விதவிதமான ஆடைகளையும், அதன் எண்ணிக்கையையும்  நிச்சயமாக யாராலும் மறுக்கமுடியாது. ஒரு பிரதமருக்கு இப்படியெல்லாம் ஆடையலங்காரம் செய்துகொள்ள நேரமிருக்கிறதா என்று ஆச்சரியப்படுகிறார்கள் அவருக்கு வாக்களித்த மக்கள். இவர் பிரதமர் வேலையைத்தவிர மற்ற வேலைகளை ''ரூம் போட்டு யோசித்து'' செய்கிறார் என்று அவருக்கு வாக்களிக்காத ''பெரும்பான்மை'' மக்கள் வேதனைப்படுகிறார்கள்.

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

அனாதை இரட்சகனாக மாறிய நரேந்திர மோடி....!

              
            சென்ற ஆண்டு கேதார்நாத்தில் மலையை உடைத்துக்கொண்டு பொங்கி எழுந்த கங்கை வெள்ளத்தில் மாட்டிக்கொண்டு தவித்த பொதுமக்கள் கூட்டத்தில், மக்களோடு மக்களாய் உயிர் பிழைப்பதற்கு போராடிக்கொண்டிருந்த 10,000 குஜராத் மாநில மக்களை ''மட்டும்'' தனியாக பொருக்கி எடுத்து தான் சென்ற தனி விமானத்தில்  அவர்களை ''மட்டும்'' காப்பாற்றி குஜராத்திற்கு அழைத்து வந்ததாக ட்வீட்டரிலும், பேஸ் புக்கிலும் போட்டு தன்னை ஒரு ''சக்திமானாக - அனுமானாக'' காட்டிக்கொண்டார் நரேந்திர மோடி என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
            அண்மையில் இராக்கில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய நாட்டிலிருந்து அங்கு வேலைக்கு சென்ற நர்சுகள் 58 பேரை இவரே நம்ம விஜயகாந்த் போல் தீவிரவாதிகளிடம் தாவித்தாவி சண்டைப்போட்டு அழைத்து வந்ததாக மோடியின் அமைச்சர்கள் பாராளுமன்றத்திலேயே தம்பட்டம் அடித்துக்கொண்டார்கள். இதற்காக எதிர்காலத்தில்  ''கேப்டன் நரேந்திர மோடி'' என்று கூட அழைக்கப்படலாம்.        
         இவைகளெல்லாம் ஒரு புறமிருக்க, சென்ற ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இரண்டு நாட்கள் பக்கத்து நாடான நேபாளத்திற்கு நரேந்திர மோடி சென்றிருந்தார். போகும் போது சும்மா வெறுங்கையோடு போகவில்லை. 16 ஆண்டுகளுக்கு முன்பு தனது பத்து வயதில் ஜித்பகதூர் என்ற சிறுவன் நேபாளத்திலிருந்து இந்தியாவிற்கு வந்த போது குஜராத்தில் தொலைந்து போக,   அந்த சமயத்தில் ''தெய்வாதீனமாக - அதிர்ஷ்டவசமாக''  நரேந்திர மோடியின் கண்களில் அந்த சிறுவன் பட்டுவிட, அந்த ஆபத்தாண்டவனும் அநாதை இரட்சகனுமான நரேந்திர மோடி அந்த சிறுவனை காப்பாற்றி உடனடியாக அந்த பையனின் பெற்றோர்களிடம் சேர்க்காமல், ''நான் ஒரு நாள் இந்த நாட்டின் பிரதமாராக வருவேன். அன்று உன்னை அழைத்துக்கொண்டு நேபாளம் சென்று, தெருத்தெருவாய் உன் ''குடும்ப பாட்டை''  பாடி உன் பெற்றோர்களை கண்டுபிடித்து அவர்களிடம் நான் சேர்த்துவிடுகிறேன்'' என்று அந்த 10 வயது சிறுவனை கடந்த 16 ஆண்டுகளாக வளர்த்துவந்திருக்கிறார்.
              இப்போது நரேந்திர மோடி பிரதமர் ஆகிவிட்டபடியால் தான் அன்று அந்த சிறுவனுக்கு உறுதியளித்தது போல், இன்றைக்கு 26 வயது இளைஞனான ஜித்பகதூரை கூட்டிக்கொண்டு நேபாளம் நோக்கி பறந்தார். அனுமான் சஞ்சீவி மலையை தூக்கிக்கொண்டு பறந்தது போல், மோடி தன் தோளில் போட்டு வளர்த்த அந்த இளைஞனை தூக்கிக்கொண்டு இமயமலைகளை தாண்டிப் பறந்து சென்று,  கடந்த 16 ஆண்டுகளாக தொலைந்துபோன தன் மகனுக்காக காத்திருந்த நேபாளப் பெற்றோர்களிடம் பத்திரிக்கையாளர்கள் புடைசூழ கண்கள் கலங்க ஒப்படைத்தார். ''பெற்றால்தான் பிள்ளையா'' என்ற பழைய எம்ஜிஆர் படம் பார்த்த மாதிரி இருக்கு இல்ல...? இந்த செய்திகளை உணர்வுமயமாக நேபாளப் பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் வெளியிட்டன. நேபாள மக்களும் அநாதை இரட்சகனான நரேந்திர மோடியின் இந்த செயலைப்பார்த்து நெகிழ்ந்து போனார்கள். வழக்கம் போல் மோடியும் தன்னுடைய ட்வீட்டரில் அந்த புகைப்படங்களை போட்டு தன்னுடைய ''சாகச செயல்களை'' பற்றி பதிவு செய்திருந்தார்.
               அதன் பிறகு தான் தெரிகிறது. நரேந்திர மோடி அழைத்துச்சென்ற அந்த இளைஞன் ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன் 2012 - ஆம் ஆண்டிலேயே நேபாளத்தில் தன பெற்றோர்களை சந்தித்திருக்கிறான் என்பதும், அந்த இளைஞனே அந்த சந்திப்பின் புகைப்படத்தை அன்றைய தினமே தன்னுடைய முகநூலில் வெளியிட்டிருக்கிறான் என்பது இப்போது வெட்டவெளிச்சமாகியிருக்கிறது.
               ம்ம்ம்ம்ம்..... இன்னும் ஐந்து ஆண்டுகளில் நரேந்திர மோடியின் ''சாகசங்களை'' இன்னும் என்னென்ன பார்க்கப்போகிறோமென்று தெரியவில்லை.

ஞாயிறு, 13 ஜூலை, 2014

மோடியின் முழு கட்டுப்பாட்டில் ஆட்சியையும், கட்சியும்....!

               
        பாராளுமன்றத்தேர்தல் நடைபெறுவதற்கு ஓராண்டிற்கு முன்னரே, ''வளர்ச்சியின் நாயகனாக'' தன்னை தானே அறிவித்துக்கொண்டு, பல ஆண்டுகளாக பிரதமர் கனவில் மிதந்த கட்சியின் மூத்தத் தலைவர் அத்வானியை ஓரங்கட்டிவிட்டு, தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கச் செய்து நாடு முழுதும் நாயா பேயா அலைந்து பிரச்சாரம் செய்து, வெற்றிபெற்று நினைத்தது போல் பிரதமர் பதவியில் உட்கார்ந்துவிட்ட மோடி அத்தோடு விட்டுவிடவில்லை. பெரும்பாலும் ஆளுங்கட்சியில் பிரதமர் பதவிக்கு ஒருவர், அக்கட்சியின் மற்றொரு மூத்தத் தலைவர் அக்கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு அமர்த்தப்படுவது தான் இதுவரை வழக்கமாக இருந்துவந்தது. அதேப்போல், ஆளுங்கட்சியான பாரதீய ஜனதாக்கட்சியிலும் மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதால், பிரதமர் பதவியும் இல்லாமல், மந்திரிப் பதவியும் இல்லாமல் வெறுமனே எம்.பி-யாக மட்டுமே வெளங்காமல் நடமாடிக்கொண்டிருக்கும் மூத்தத் தலைவர் அத்வானிக்கு கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் பதவி கொடுக்கப்படும் என்று அக்கட்சியிலேயே எதிர்ப்பார்க்கப்பட்டுவந்த நிலையில் நேற்று நடைபெற்ற பாஜக-வின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நாடாளுமன்றக்குழுத் தலைவராக நரேந்திர மோடியே தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதிலிருந்து கட்சியிலும், ஆட்சியிலும் மோடியின் கை ஓங்கியிருக்கிறது என்று தான் பொருள்கொள்ளவேண்டும். 
               அதுமட்டுமல்ல, சென்ற வாரம் பாரதீய ஜனதாக் கட்சியின் புதிய அகில இந்திய தலைவராக மோடியின் ''நெருங்கிய கூட்டாளியான'' அமித்ஷா தேர்ந்தெடுக்கப்பட்ட போதே கட்சியில் மோடியின் கை ஓங்கிவருகிறது என்பது உறுதியாகத் தெரிந்தது. அதுவும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மக்களால் உன்னிப்பாக கவனிக்கப்படும் ஒரு நாட்டின் ஆளுங்கட்சியின் தலைவர் எப்படியிருக்கவேண்டும் என்ற குறைந்தபட்ச தகுதிகளைக் கூட ஆய்வு செய்யாமல் தன்  கட்சித்தலைவராக தன்னுடைய நெருங்கியக் கூட்டாளியை தேர்ந்தெடுக்கச் செய்ததன் மூலம் கட்சியில் மோடியின் கை எந்த அளவிற்கு ஓங்கியிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளமுடியும். கட்சித் தலைவராக அமித்ஷா தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, ''கட்சித்தலைவர் பதவிக்குக்கூட லாயக்கில்லாமல் போய்விட்டாரா அத்வானி'' என்று அக்கட்சியிலேயே தொண்டர்கள் பொருமித்தள்ளுகிறார்கள். 
              புதிய தலைவர் அமித்ஷா யார்...? 2010-ஆண்டு வரை குஜராத் மாநிலத்தின் உள்துறை அமைச்சராக இருந்தவர். முதலமைச்சர் நரேந்திர மோடியின் கண்ணசைவை பார்த்தே கச்சிதமாக காரியத்தை முடிக்கக்கூடியவர்.  முதலமைச்சரின் பார்வைப்பட்ட இளம்பெண்ணை அவ்வப்போது இரகசியமாக பின்தொடர்ந்து கண்காணித்து முதலமைச்சரை குஷிப்படுத்திய பெருமை இந்த அமித்ஷாவிற்கு உண்டு.
            இவர் உள்துறை அமைச்சராக இருந்த போது போலி என்கவுண்டரில் புகழ் பெற்றவர். முதலமைச்சரை குஷிப்படுத்த சோராபுதீன், துளசிராம் பிரஜாபதி போன்ற அப்பாவிகளை போலி என்கவுண்டரில் போட்டுத்தள்ளிய பெருமையும் இவருக்கு உண்டு. இந்த படுகொலையை விசாரணை செய்த மத்திய புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டு மூன்று மாத காலங்கள் சிறைச்சாலையில் இருந்தார். அதுமட்டுமல்ல நிபந்தனை ஜாமீனில்  சிறைச்சாலையை விட்டு வெளியே வந்த அமித்ஷாவை   இரண்டு ஆண்டுகளுக்கு  குஜராத் மாநிலத்திற்குள்ளேயே  நுழையக்கூடாது என்று நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. இந்தக்காலக்கட்டத்தில் தான் அமித்ஷா மோடியின் பிரதிநிதியாக - பாஜக-வின் மாநிலப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உத்திரபிரதேச மாநிலத்தில் குடியேறினார். 
              உத்திரபிரதேசத்திலும் அமித்ஷா சும்மா இறக்கவில்லை. அங்கேயும் குஜராத்தில் தூவிய மதவெறி விஷத்தை மிக கச்சிதமாக தூவினார். அங்கே காப் பஞ்சாயத்துகள் என்ற மதவெறி தர்பார், முசாபர் நகர் மதக்கலவரம் போன்ற மதமோதல்களுக்கு காரணமாக திகழ்ந்தவர் தான் இந்த அமித்ஷா. மக்களவைத்தேர்தலின் போது மதவெறியை தூண்டும் வகையில் பொதுக்கூட்டங்களில் பேசியமைக்காக உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்கு அமித்ஷாவிற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தபோதும், தான் ஏற்கனவே தூவிவிட்ட மதவாத விஷத்தையே மூலதனமாக வைத்து தான் உத்திரபிரதேசத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 72 இடங்களில் பாஜக-வை வெற்றிபெற மூலகாரணமாக இருந்தார் என்பது அனைவரும் அறிந்த உண்மை தான். அந்த மாபெரும் வெற்றியையே மோடிக்கு காணிக்கையாக்கினார். மோடியும், பாஜக-வும் மிருகபலம் பெற்று - இராட்சசபலம் பெற்று யாரும் எதிர்பாராதவிதமாக தனிப்பெரும் கட்சியாக விஸ்வரூபம் எடுப்பதற்கு ''மாபெரும் உதவி'' செய்ததனால் தான் அமித்ஷா பாஜக-வின் தேசியத்தலைவராக முடிசூட்டப்பட்டார் என்பதும்  யாரும் அறியாதது அல்ல. 
             ஏற்கனவே ஏராளமான கொலை வழக்குகள் நிலுவையிலுள்ள ஒருவர் ஆளுங்கட்சியின் தேசியத்தலைவர் என்பது பாஜக-விற்கு பெருமையான விஷயமாக இருக்கலாம். இப்படிப்பட்ட ''புகழ்'' வாய்ந்த தன் கூட்டாளியை தேசியத்தலைவராக ஆக்கிய பெருமை ''வளர்ச்சி நாயகன்'' மோடியையே சாரும். அப்படியென்றால் அவரது கை எப்படி ஓங்கியிருக்கிறது என்பதை பாருங்கள்.  

வெள்ளி, 11 ஜூலை, 2014

மக்களை ஏமாற்றும் மோடியின் பட்ஜெட்...!

                       ''வளர்ச்சி நாயகன்'' மோடி ஆட்சிக்கு வந்தால் கடந்த காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உயர்ந்துகொண்டே போன அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை அடக்கி கட்டுப்படுத்திவிடுவார் என்று என்றெல்லாம் சொல்லி மக்களை நம்பவைத்து, அவர்களின் ஓட்டுக்களை வாங்கி ஆட்சியில் அமர்ந்த ''வளர்ச்சி நாயகன்'' நரேந்திர மோடி தன்  சுயரூபத்தை கொஞ்சம் கொஞ்சமாக காட்டுகிறார். பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த நாளிலிருந்து மாற்றத்தை விரும்பிய மக்களுக்கு ''அல்வா'' கொடுத்துகொண்டே இருக்கிறார். அந்த ''அல்வா'' வழங்குதலின் ''ஹைலைட்டாக'' அமைந்தது தான் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் என்பதை மக்கள் உணர்ந்துகொண்டார்கள். 
               ஏழை எளிய மக்களுக்கு சாதகமாக பட்ஜெட்டில் எந்தவிதமான அறிவிப்பும் இல்லை. விவசாயம், தொழிற்சாலைகளுக்கு பட்ஜெட்டில் இடமளிக்கவில்லை. அதனால் புதிய வேலைவாய்ப்புகளுக்கும் வாய்ப்பில்லை. மக்களின் வாழ்வாதாரம் உயர அவர்களின் வருமானத்தை உயர்த்தும் எண்ணம் பட்ஜெட்டில் துளியும் இல்லை. வருமானம் தான் உயரவில்லை. ஏறும் விலைவாசியையாவது குறைக்கும் யோசனை கொஞ்சம் கூட இல்லை என்பது வெட்கக்கேடானது. ஆனால் மாதச் சம்பளக்காரர்களுக்கு ஒருசில சில்லறைச் சலுகைகளை தந்து திருப்திப்படுத்திவிடலாமென்று நினைத்துவிட்டார் மோடி. 
            வருமான வரிச்சலுகை 2 இலட்சத்திலிருந்து 2.5 இலட்சமாக உயர்த்தியும்,  80-C - சேமிப்புக்கான வரிச்சலுகையாக ரூ.1 இலட்சமாக இருந்ததை 1.5 இலட்சமாக உயர்த்தியும் அறிவிப்பு வெளியிட்டதன் மூலம் மாதச்சம்பளக்காரர்களை தனது ஆதரவுக் கூட்டமாக மாற்றிவிடலாம் என்று பகல் கனவு கண்டிருக்கிறார் மோடி. ஆனால் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பே பாராளுமன்றத்தையே மதிக்காமல் பெட்ரோல், டீசல், சமையல் காஸ், சர்க்கரை ஆகியவற்றின் விலைகளையும், இரயில் கட்டணங்களையும் கடுமையாக உயர்த்திவிட்டு, பட்ஜெட்டில் வருமான வரி சம்பந்தமான சில்லரைச் சலுகைகளை தந்து மக்களை ஏமாற்றியிருக்கிறார் நரேந்திர மோடி என்பதை யாராலும் மறுக்கமுடியாது. 
             அத்தியாவசியப்பொருட்களின் விலையுயர்வை தடுப்பதற்கு - விலையேற்றத்திற்கு காரணமான ஆன்-லைன் வர்த்தகத்தை தடை செய்வதற்கு எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்காததன் மூலமாகவும், மேற்கண்ட அத்தியாவசியப்பொருட்களின் விலைகளை இவராக உயர்த்தியதன் மூலமாகவும் மக்களின் வாங்கும் சக்தியை குறைத்துவிட்டு சேமிப்பிற்கு 1.5 இலட்சமாக  உயர்த்தியது என்பது நகைப்பிற்குரியது.  இது யாரை ஏமாற்றுகிற வேலை. ஒரு பக்கம் உழைப்பாளி மக்களின் - ஊழியர்களின் வருமானம் உயரவில்லை. இன்னொரு பக்கம் அதற்கு நேரெதிராக விலைவாசி விண்ணை நோக்கி உயர்ந்துகொண்டே போகிறது. இந்த சூழ்நிலையில் இவர்களால் எப்படி சேமிக்கமுடியும்...? - இவர்கள் சேமிப்பிற்கு எங்கே போவார்கள்...? என்கிற பொதுபுத்தி கூட மத்திய நிதியமைச்சருக்கு இல்லாமல் போனது நம்முடைய துரதஷ்டம் தான். வாங்கற சம்பளம் காய்-கறி வாங்கறதுக்கும், மளிகை சாமான்கள் வாங்கறதுக்கும், வண்டிக்கு பெட்ரோல் போடறதுக்குமே சரியா இருக்கு. இதுல எங்கிருந்து சேமிக்கிறது. இந்த சலுகை சாதாரண நடுத்தர மக்களுக்கு எந்தவகையிலும் பயன்தராது. பாத்துகிட்டே இருங்கள்... கூடியவிரைவில் மோடியின் அடிவருடிகள் வழக்கம்போல் மோடிக்கும், அருண் ஜெட்லிக்கும் ''பொருளாதார மேதைகள்'' என்ற நாமத்தை சூட்டினாலும் சூட்டுவார்கள். நாம்ப பார்க்கத்தான் போறோம்.
              மொத்தத்தில் தனக்கு வாக்களித்த மக்களைப் பற்றிய அக்கறையில்லாமல், மாற்றம் விரும்பிய மக்களை ஏமாற்றம் அடையச்செய்த மோடியின் பட்ஜெட் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

செவ்வாய், 20 மே, 2014

நரேந்திர மோடிக்கு ஒரு திறந்த மடல்...!


அன்பார்ந்த நாளைய பிரதமர் அவர்களே,
                இதயப்பூர்வமான வாழ்த்துக்களோடு இதை எழுதுகிறேன். முழு நேர்மையோடு இதை நான் சொல்கிறேன். இதை தைரியமாகச் சொல்வது எனக்கு அவ்வளவு எளிதானதல்ல. ஏனென்றால், இந்த உயர்ந்த பொறுப்பை நீங்கள் அடைவதை பார்க்க விரும்பாதவர்களில் நானும் ஒருவன். நீங்கள் பிரதமராவதைப் பார்த்து லட்சக்கணக்கான மக்கள் பரவச நிலையில் இருக்கும் அதேவேளையில், மேலும் பல லட்சக்கணக்கான மக்கள் கலவர மனநிலையில் ஏன் இருக்கிறார்கள் என்பது மற்றவர்களைவிட உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
             நீங்கள் இந்த இடத்திற்கு வரப்போகிறீர்கள் என்று சொன்னவர்களை சில நாட்களுக்கு முன்புவரை நான் நம்பவில்லை. ஆனால், ஜவஹர்லால் நேரு உட்கார்ந்த, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தியின் அவசர நிலையை எதிர்த்த போராட்டத்திற்குப் பிறகு மற்றொரு குஜராத்தியான மொரார்ஜி தேசாய், பின்னர் உங்கள் அரசியல் குருவான அடல் பிகாரி வாஜ்பாய் ஆகியோர் அமர்ந்த நாற்காலியில் நீங்களும் அமர்கிறீர்கள்.
            அதில் நீங்கள் அமர்ந்துவிடக்கூடாது என்று விரும்பியவர்கள், நீங்கள் அந்த இடத்திற்கு வந்துவிட்டீர்கள் என்ற உண்மையை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இத்தகைய அபூர்வமான சிறப்பிடம் உங்களுக்குக் கிடைப்பது பற்றி எனக்குள்ள பெரிய சந்தேகங்களைத் தாண்டி, உங்களது நலிவடைந்த சமூகம் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த உங்களைப் போன்ற ஒருவர் இந்தியப் பிரதமராக வருவதை நான் மதிக்கிறேன். எல்லோரும் சமம் என்ற நமது அரசியல் சட்டத்தின் பிரதானமான நோக்கத்தை அது நிறைவேற்றுகிறது.

தேசம் பற்றிய மறுபார்வை            

          நீங்கள் “தேநீர் விற்றவர்” என்று கண்மூடித்தனமாகவும், ஏளனமாகவும் சிலர் பேசியபோது, எனக்கு வயிற்றைப் பிரட்டியது. தனது வாழ்வாதாரத்திற்காக தேநீர் செய்து அதை விற்றவர் இந்திய அரசாங்கத்திற்குத் தலைமை தாங்கப் போகிறார் என்பது எவ்வளவு அற்புதமான விஷயம் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். ஆனால் இதையெல்லாம் சொன்னபிறகும், திரு. மோடி அவர்களே, நீங்கள் இந்த உயர் பொறுப்பில் அமரப் போவது லட்சக் கணக்கானவர்களிடம் கலவர மனநிலையை ஏன் ஏற்படுத்தியுள்ளது என்பதற்குள் நான் செல்ல வேண்டும். 2014 தேர்தலில் மோடிக்கு ஆதரவா அல்லது எதிராகவா என்றுதான் வாக்காளர்கள் வாக்களித்துள்ளார்கள் என்பது மற்ற எவரையும் விட உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
             இந்தியாவின் சிறந்த பாதுகாவலர் மோடியா..? அவர்தானா, இல்லையா..? என்பதுதான் மையப்பொருளாக இருந்தது. இந்தியாவின் சிறந்த பாதுகாவலர், சொல்லப்போனால் ரட்சகர் என்ற அளவிற்கு, 31 சதவிகித மக்களின் (உங்கள் வாக்கு சதவிகிதம்) மனங்களை நீங்கள் கவர்ந்ததால் பாஜகவுக்கு இடங்கள் கிடைத்துள்ளன. 69 சதவிகித மக்கள் உங்கள் பாதுகாவலராகப் பார்க்கவில்லை என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். நமது தேசம் என்பதன் உள்ளடக்கத்தோடும் அவர்கள் வேறுபடுகிறார்கள். திரு. மோடி அவர்களே, தேசம் என்ற இந்தக் கருத்துதான், அரசியல் சட்டத்தின் அடிப்படையில் பிரதமராகப் போகும் உங்களுக்கு, இங்கு முக்கியமானதாக இருக்கப் போகிறது. தேசம் என்ற உங்கள் எண்ணத்தை மறுபார்வை செய்ய வேண்டும் என்று உங்களை நான் வலியுறுத்துகிறேன்.

சிறுபான்மையோருக்கு உறுதியளித்தல்           

          ஒற்றுமை மற்றும் நிலையான தன்மை ஆகியவற்றை முன்வைக்கும்போது, சர்தார்வல்லபாய் படேலின் பெயர் மற்றும் அவரது அந்தஸ்தை மீண்டும், மீண்டும் உங்கள் பேச்சில் கொண்டு வருகிறீர்கள். சிறுபான்மையினருக்கான அரசியல்சட்ட அவைக்குழுவின் தலைவராக சர்தார் இருந்தார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்தியாவின் சிறுபான்மையினருக்கு கல்வி, கலாச்சார மற்றும் மத ரீதியான உறுதி மொழிகளை அரசியல் சட்டம் அளிக்கிறது என்றால், அதற்கு சர்தார் படேல் மற்றும் அந்தக்குழுவின் உறுப்பினர்கள், குறிப்பாக சீக்கிய கபூர்தலாவின் கிறித்தவ மகளான ராஜ்குமாரி அம்ரித் கவுர் ஆகியோருக்கு நன்றி சொல்ல வேண்டும். சிறுபான்மையினர் பற்றிய அரசியல் சட்டத்தின் பார்வையை மாற்றுவதோ அல்லது திருத்துவதோ கூடாது, அதை நீர்த்துப் போகச் செய்வது அல்லது பூசிமெழுகுவது ஆகிய வேலைகளையும் நீங்கள் செய்யக்கூடாது.
            அதை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் திரு.மோடி அவர்களே. அந்தக்குழுவில் வெற்றி வீரரான சர்தார் என்ன சொன்னார் என்பதை நீங்கள் படிக்க வேண்டும்.பலரும் ஏன் இந்த அளவுக்கு அச்சப்படுகிறார்கள்... அந்த அச்சத்தை வெளிப் படுத்தக்கூட ஏன் அச்சப்படுகிறார்கள்..?நீங்கள் ஊர்வலங்களில் பேசுகையில், ஆணை பிறப்பிக்கும் ஒரு பேரரசரைப் போலல்லாமல் இந்திய மக்கள் என்ற எண்ணத்தோடு இருக்கும் ஒரு ஜனநாயகவாதியைக் கேட்க விரும்புகிறார்கள். சிறுபான்மையினரை ரட்சிக்க வேண்டாம் திரு.மோடி அவர்களே, அவர்களுக்கு நம்பிக்கையூட்டுங்கள். “வளர்ச்சி” என்பது பாதுகாப்புக்கு ஈடாகாது. “குர் ஆன் ஒரு கையில், மறுகையில் லேப்டாப்” என்ற வார்த்தைகளிலோ அல்லதுஅந்த அர்த்தத்திலோ நீங்கள் பேசியிருக்கிறீர்கள். அந்தக்காட்சி அவர்களுக்கு நம்பிக்கையூட்டவில்லை. ஏனெனில் அவர்களை அச்சுறுத்தும் வகையில் மற்றொரு காட்சி ஓடுகிறது. கொலைகாரன் ஒருவனின் ஒரு கையில் இந்து வீரகாவியம் அடங்கிய டிவிடியும், மறுகையில் அச்சுறுத்தும் திரிசூலமும் அந்தக் காட்சியில் உள்ளது. முன்பெல்லாம், வகுப்பறையின் மூலையில் உப்பு தடவப்பட்ட தடியை தலைமையாசிரியர்கள் வைத்திருப்பார்கள்.
               அதைப் பார்த்தவுடன், நம்மைத் தோலுரித்து விடுவார் என்று நினைவுக்கு வரும். இங்கு, உப்பு தடவப்பட்ட தடியாக நமக்கு நினைவுக்கு வரும் சம்பவங்களில் ஒன்று என்னவென்றால், சில மாதங்களுக்கு முன்பாக முசாபர் நகரில் நடந்த கலவரத்தில் 42 இஸ்லாமியர்கள் மற்றும் 20 இந்துக்கள் கொல்லப்பட்டதும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்கள் இருப்பிடங்களிலிருந்து வெளி யேற்றப்பட்டதும்தான். “ஜாக்கிரதை, இந்தக் கதிதான் உனக்கு நேரும்“ என்பது ஜனநாயகத்தில் அச்சப்பட வைக்கும் மிரட்டல் வார்த்தைகள் அல்ல. ஆனால், பகல் நேர அச்சமும், இரவு நேர பயங்கரமும்தான் லட்சக்கணக்கான மக்கள் மனங்களில் ஏற்றப்பட்டுள்ள செய்தியாகும். இதைப் போக்குவது உங்கள் கைகளில் தான் உள்ளது,
          திரு.மோடி அவர்களே. இதற்குரிய அதிகாரம் உங்கள் கையில் உள்ளது. அது மட்டுமல்ல, அதற்கான உரிமையும், செய்ய வேண்டிய அவசியமும் கூட இருக்கிறது. சிறுபுத்தியுள்ள ஆலோசனைகளைப் புறக்கணிப்பதன் மூலம் இந்த அச்சத்தை உங்களால் போக்க முடியும் என்று நான் நம்புகிறேன். இந்தியாவில் உள்ள அனைத்து மத சிறுபான்மையினரும், வெறும் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, மேற்கு பஞ்சாபிலிருந்து வெளி யேற்றப்பட்ட இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் மற்றும் காஷ்மீரி பண்டிதர்கள் ஆகியோரும் தங்கள் மனங்களில் வடுக்களைச் சுமக் கிறார்கள். உண்மையான அல்லது பொய்யான தூண்டுதல் காரணமாக திடீரென்று கலவரம் ஏற்படும் என்றும், அதனால் பலமடங்கு பிரதிபலன் கிடைக்கும் என்கிற அச்சமும் உள்ளது. இந்தக் கலவரத்தில் குறிப்பாக பெண்கள் தாக்கப்படுகிறார்கள். தங்கள் வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும் அவமானத்தையும், சுரண்டலையும் தாங்கிக் கொண்டு தலித்துகள் மற்றும் பழங்குடியினர், அதிலும் குறிப்பாக பெண்கள், இருக்கிறார்கள். சிறுமைப்படுத்துதல், பாரபட்சம் மற்றும் தாக்குதல்கள் ஆகியவற்றால் தொடர்ந்து அமைதியின்மையை நோக்கி இழுக்கப்பட்டு, குடிமகன், மனிதன் ஆகிய தகுதிகளையே இல்லாமல் போகச் செய்கிறது.
           அவ்வாறு இழுக்கப்படுவதை உரக்கவும், வெளிப்படையாகவும் கவனியுங்கள், திரு. மோடி அவர்களே. இதன்மூலம் அவர்களின் நம்பிக்கையைப் பெறுங்கள். அவர்களுக்கு உறுதியளித்து, அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் முதல் குரல் உங்களுடையதுதான் என்ற நம்பிக்கையை உங்களால் அளிக்க முடியும்.பன்மைத்துவம் கொண்ட குடியரசிடம் ஒற்றைத்தன்மை என்கிற மன்னரின் வார்த்தைகளைக் கொட்டும் அதிகப் பிரசங்கித்தனம் யாருக்கும் இருக்கக்கூடாது. இந்தியா என்பது பலவகைப்பட்ட வளங்களைக் கொண்ட வனமாகும். பலவகைகளைக் கொண்ட மண்ணை வளர்த்தெடுக்கவே அது விரும்புகிறது. அதன் முன்னால், ஒரே இனம், ஒரே கலாச் சாரம் மற்றும் ஒரே கடவுள் என்பதை முன்னிறுத்தக் கூடாது. அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு, பொது சிவில் சட்டம் என்கிற பழைய மற்றும் சம்பிரதாயமான கோரிக்கை, அயோத்தியில் ராமர் கோவில் ஆகியவை பற்றி உங்களது நிலைப்பாடு மற்றும் வடக்கு, வட மேற்கில் உள்ள “இந்து அகதிகள்” மற்றும் கிழக்கு, வடகிழக்கில் உள்ள “இஸ்லாமிய அகதிகள்” என்று ஊடகங்களில் வெளியாகியுள்ள உங்கள் அறிக்கைகள், நம்பிக்கையை ஏற்படுத்தாமல் அச்சத்தையே உண்டாக்கியுள்ளன.
                 அச்சத்தின் பிடியில் மக்கள் என்பது இந்தியக் குடியரசின் பண்பாக இருக்க முடியாது. மேலும், இந்தியப் பிரதமர் என்ற முறையில். நீங்கள்தான் இந்தக் குடியரசுக்கு பொறுப்பானவராக இருக்கிறீர்கள்.இந்தியாவின் சிறுபான்மையினர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல. ஒன்றோடு ஒன்று கலந்து இருப்பவர்கள். கயிற்றை யார் வேண்டுமானாலும் எரித்துக் கரியாக்கலாம். ஆனால், அதன் பிணைப்பை அறுத்துவிட முடியாது. பாரத மாதா வாழ்க என்ற முழக்கம், நிச்சயமாக, நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் கட்டாயத் தேவையான ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தை மிஞ்சிவிட முடியாது. இது உங்களுக்கு வரலாற்றுச்சிறப்புமிக்க வெற்றி, திரு.மோடி அவர்களே. மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன். ஒரு வெற்றிகரமான காலகட்டம் இதைத் தொடரட்டும். இந்த உலகை ஆச்சரியப்படுத்தும் நிகழ்வுகள் நடந்தேறட்டும். உங்கள் ஆதரவாளர்கள் அதை எதிர்பார்க்காமல் இருக்கலாம். ஆனால், ஏராளமானோர் நீங்கள் அதை நடத்திட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
               நீங்கள் பெரும் புத்திசாலி என்பதோடு, முந்தைய தலைமுறையின் தேவையற்ற மற்றும் விருப்பமற்ற ஆலோசனையை கண்டுகொள்ளமாட்டீர்கள். உங்கள் ஆதரவுத்தளத்தில் கைதட்டலுக்கு கைம்மாறு செய்யுங்கள். ஆனால், அதற்கு இணையாக, உங்களை ஆதரிக்காதவர்களின் நம்பிக்கையையும் மீட்டெடுக்கும் வகையில் செயல்படுங்கள். சிறுபான்மையினர் ஆணையத்தை மீண்டும் அமைக்கும்போது, அதில் இடம் பெறவேண்டியவர்களின் பெயர்களை எதிர்க்கட்சிகளிடமிருந்தும் கேட்டு வாங்கி, அதில் மாற்றம் செய்யாமல் அவர்களையும் இணையுங்கள்.
              இதே முறையை எஸ்.சி/எஸ்.டி ஆணையம், மொழிரீதியான சிறுபான்மையினர் ஆணையம் போன்றவற்றை அமைக்கும் போதும் கடைப்பிடியுங்கள். அடுத்த தலைமை தகவல் ஆணையர், தலைமைத் தணிக்கை அதிகாரி, மத்திய ஊழல் தடுப்பு ஆணையர் ஆகியோரைத் தேர்வு செய்யும்போதும், தேர்வுக்குழுவில் உள்ள அரசு சாரா உறுப்பினர்களின் பரிந்துரைகளை, அவை பாரபட்சமாக இல்லாத பட்சத்தில், ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் பலசாலி. இத்தகைய நடவடிக்கைகளை தைரியமாக எடுக்கலாம்.

தெற்கில் விழும் பள்ளத்தை கவனியுங்கள்            

              திரு. மோடி அவர்களே, உங்கள் கணக்கில் தெற்கில் பெரும் பற்றாக்குறை உள்ளது. இந்தி பேசும் மாநிலம் சார்ந்த வெற்றி என்கிற பிம்பம், வடக்கு-தெற்கு என்ற பிளவை ஏற்படுத்திவிடக்கூடாது. தெற்கிலிருந்து ஒருவரை துணைப்பிரதமராக நியமியுங்கள். அவர் நிச்சயமாக அரசியல்வாதியாக இல்லாமல், சமூக அறிவியல் வல்லுநர், சுற்றுச்சூழல் நிபுணர், பொருளாதார அறிஞர் அல்லது புள்ளியியல் ஆய்வாளர் ஆகிய துறைகளில் ஒன்றைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். தனது அமைச்சரவையில் சண்முகம் செட்டியார், ஜான் மத்தாய், சி.டி.தேஷ்முக் மற்றும் கே.எல்.ராவ் ஆகியோரை நேரு வைத்திருந்தார். அவர்கள் எல்லாம்  காங்கிரஸ்காரர்கள் அல்ல. ஏன். அரசியல்வாதிகள்கூட கிடையாது.
             எஸ்.சந்திரசேகர் மற்றும் வி.கே.ஆர்.வி. ராவ் ஆகியோரை இந்திரா காந்தி அமைச்சர்களாக ஆக்கினார். மாநிலங்களவை உறுப்பினர்களாக ஆக்கப்பட்ட பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் ஷியாம் பெனகல் ஆகிய இருவரும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் அமைச்சர்களாக ஏன் ஆக்கப்படவில்லை என்பதை, எனக்குள்ள அனுபவத்தில், என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு மரபு உள்ளது. அதை ஆரோக்கியமானது என்று கூட ஒருவர் சொல்லலாம். நியமன உறுப்பினர்களை அமைச்சர்களாக ஆக்குவதில்லை என்பதுதான் அது. ஆனால், அவசரத் தேவைகள் என்பது அவசரத் தேவைகள்தான். நமக்கு இதுவரை இருந்த மிகச்சிறந்த கல்வி அமைச்சர்களில் நியமன உறுப்பினராக இருந்து அமைச்சரான நூருல் ஹசனும் ஒருவராவார்.
                ஏகாதிபத்திய மற்றும் கொள்கை ரீதியான தலைவர்களை உங்களுக்குப் பிடிக்கிறது. உங்களது போராட்டத்தில் நீங்கள் கருதுவது போலவே, மகா ராணா பிரதாப் சிங்காகவே இருங்கள். ஆனால் ஆற்றுப்படுத்துதலில் அக்பராக இருங்கள். இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், உங்கள் இதயத்தில் சாவர்க்கராக இருங்கள். ஆனால், மனதால் அம்பேத்கராக இருங்கள். தேவை என்றால், மரபணுவில் ஆர்.எஸ்.எஸ்.சால் பயிற்றுவிக்கப்பட்ட இந்துத்துவாவை நம்புபவராக இருங்கள். ஆனால் இந்துஸ்தானத்தின் வாசிர்-இ-ஆசமாக(உருது மொழியில் பிரதமர்) இருங்கள். உங்களுக்கு வாக்களிக்காத 69 சதவிகிதத்தினர், நீங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
         நமது தேசத்தின் உயர் பொறுப்பில் நீங்கள் அமர்கையில் உங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாழ்த்துக்களோடும்,

                                                                                                        உங்கள் சக குடிமகன்
                                                                                                    கோபாலகிருஷ்ண காந்தி
---------------------------------------------------------------------------------------------------------------
நன்றி - தி இந்து(மே 19, 2014) 
தமிழில் - கணேஷ்
(கோபாலகிருஷ்ண காந்தி - காந்திஜியின் பேரன், மேற்குவங்கஆளுநராக பணியாற்றியவர்)
நன்றி : 



சனி, 17 மே, 2014

மோடியின் வெற்றி - நாட்டைப் பிடித்த கேடுகாலம்

         ஒரு வழியாக தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. கடந்த ஐந்து ஆண்டு கால காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்  மக்களுக்கெதிரான தவறான ஆட்சி நடத்தியதால் மக்களின் வெறுப்புக்கும், அதீத கோபத்திற்கும் உள்ளானதால், மக்களின்  வெறுப்பு அலை - எதிர்ப்பு அலை பாரதீய ஜனதாக் கட்சிக்கு சாதகமாக அடித்துவிட்டது. காங்கிரஸ் ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன், காங்கிரஸ் கட்சியின் மீதான மக்களின் எதிர்ப்பு அலை இடதுசாரிகளின் பக்கம்  திரும்பிவிடாமல் இருக்க, தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே   இந்திய பெருமுதலாளிகள் அந்த எதிர்ப்பு அலைக்கு ''மோடி அலை'' என்ற பெயரைச் சூட்டி காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் பாரதீய ஜனதாக் கட்சியை நோக்கி திருப்பிவிட்டனர். அதற்காக மோடி என்ற பந்தயக் குதிரையின் மீது 50,000 கோடி ரூபாயை கட்டினர். மோடி வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்தால் பல இலட்சம் கோடிகளை கொள்ளை அடிக்கலாம் என்ற எதிர்ப்புடன்,  இந்திய பெருமுதலாளிகள் மோடி மற்றும் பாஜக வெற்றிபெறுவதற்கு பிரச்சாரத்திற்கும், விளம்பரத்திற்கும், ஓட்டுக்கும் என 50,000 கோடிகளை கொட்டி செலவு செய்திருக்கிறார்கள் என்பதும், அதற்கு ஊடகங்களையும் பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதும் உண்மை. 
           ஆனால் தேர்தல் முடிவு என்பது தேர்தலுக்கு முந்தைய-பிந்தைய கருத்துக்கணிப்பையே உடைத்தெறிந்து யாரும் எதிர்பாராத வகையிலும், ஆச்சரியப்படும்வகையிலும் முன்னெப்போது இல்லாத அளவிற்கு பாரதீய ஜனதாக் கட்சி எண்ணிக்கையில் ஆட்சி அமைக்கத்தேவையான பெரும்பான்மையை பெற்று ஆட்சிக்கு வந்திருப்பது என்பது நாட்டிற்கும் மக்களுக்கும் ஆபத்தானது என்பதை மறந்துவிடக்கூடாது. இந்த அதீத வெற்றி என்பது பாரதீய ஜனதாக் கட்சிக்கு மட்டுமல்ல இந்திய பெருமுதலாளிகளுக்கும் ஊடகங்களுக்கும் மிகுந்த உற்சாகத்தை அளித்திருக்கிறது என்பது இந்திய பங்குச் சந்தையின் ஏற்றத்தைப் பார்க்கும் போதே தெரிந்துகொள்ளலாம். போட்டக் காசை பல மடங்கு திருப்பி எடுத்துவிடலாம் என்ற நம்பிக்கை பெருமுதலாளிகள் மத்தியில் வந்துவிட்டது. அவர்கள் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி காத்திருக்கிறார்கள்.
 
அப்படி என்ன தான் அவர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள்...?             

               # கடந்த ஐந்து ஆண்டுகால காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் கனிம வளங்கள் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் போன்றவற்றில் பல இலட்சம் கோடி ரூபாய்களை சுருட்டியது போல்,  மிச்ச-மீதி எஞ்சியிருக்கக்கூடிய கனிம வளங்களை தங்குதடையின்றி மேலும்   கொள்ளையடிக்க மோடியால் அனுமதி வழங்கப்படும்.
                #  ஏற்கனவே வாஜ்பாயி ஆட்சியின் போது தொழிலாளர்களுக்கு சாதகமான அல்லது பாதுகாப்பான முக்கிய ஷரத்துக்கள் பிடுங்கப்பட்டு காயடிக்கப்பட்ட ''தொழிலாளர் நலச் சட்டங்கள்'' முதலாளிகளுக்கு சாதகமாக முற்றிலுமாக நீக்கப்படும். இனி இந்தியாவில் எங்கும் எதிலும் ''நிரந்தர வேலை''  என்பது இருக்காது. ஒப்பந்தத் தொழிலாளர்கள் தான் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள். வேலை பாதுகாப்பு, குறைந்த பட்ச ஊதியம், அதிகபட்ச வேலை நேரம்,  மகளீர் ஊழியர்கள் பாதுகாப்பு, தொழிற்சங்கம்  அமைத்தல் போன்றவை ஏற்கனவே காற்றில் பறந்துவிட்ட நிலையில், தொழிலாளர் நலச் சட்டங்கள் முற்றிலும் நீக்கப்பட்டால், நிரந்தர வேலை உரிமை ஒழித்துக்கட்டப்படும். அதன் மூலம் மருத்துவ உதவி, பி.எப்., கிராஜுயுட்டி, போனஸ், ஓய்வூதியம் போன்றவைகளும் ஒழித்துக்கட்டப்படும். 
          #  இன்சூரன்ஸ், வங்கி, பாதுகாப்பு,  தொலைத்தொடர்பு, விமானம், இரயில்வே, சுரங்கம், சில்லறை வர்த்தகம், ரியல் எஸ்டேட், கல்வி, மருத்துவம், சுகாதாரம் அனைத்திலும் அந்நிய நேரடி முதலீடு என்பது 100% - ஐ நோக்கி பாயும்.
            # எல்.ஐ.சி., வங்கி போன்ற பணம் கொழிக்கும் பொதுத்துறை நிறுவனங்களும், ''நவரத்தினா'' என்று அழைக்கப்படும் வளம் கொழிக்கும் பொதுத்துறை நிறுவனங்களும் அம்பானி சகோதரர்கள், அதானி, டாடா போன்ற பெருமுதலாளிகளிடம் கைமாறும்.
           மொத்தத்தில் முகேஷ் அம்பானி, அனில்  அம்பானி, அதானி, டாடா போன்ற பெருமுதலாளிகள் மோடியால் சந்தொஷப்படுத்தப்படுவார்கள். மோடியை பின்னாலிலிருந்து இயக்கப்போகிறவர்கள் இவர்கள் தான் என்பதை மறந்துவிடக்கூடாது.
          இதையெல்லாம் நாம் கோபப்படாமல் வேடிக்கைப்பார்க்கத்தானே போகிறோம். போகப் போக தெரியும்... இந்த பாம்பின் வேஷம் புரியும்...!

வியாழன், 15 மே, 2014

இந்திய ஊடகங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை...!

                   அடடடா...  இந்திய ஊடகங்களை என்னவென்று பாராட்டுவது என்றே தெரியவில்லை. என்னா நேர்மை...! என்னா நியாயம்...! வாங்கின காசுக்கு கடைசி வரையில் ஊதுராங்கப்பா...! மோடியே நேர்ல வந்து வேணா... போதும்.... நிப்பாட்டுங்கன்னு சொன்னாக்கூட  நிப்பாட்டமாட்டாங்க போலிருக்கே...! நாடு முழுதும் தேர்தல் முடிந்து கடந்த மூன்று நாட்களாக ஊடகங்கள் போடுகிற கூப்பாடு இருக்கே... தாங்க முடியல... வெட்கமே இல்லாம  மோடிக்கு ஆதரவாக இவர்கள் போடுகிற கூச்சலும், கூப்பாடும் இருக்கே அடேங்கப்பா நம்மால தாங்க முடியலடா சாமி. 
              தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என மோடியிடம் காசை வாங்கிக்கொண்டு தேர்தல் வருவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஊடகங்கள் மக்கள் மத்தியில் மோடி தான் அடுத்த பிரதமர் என்ற கருத்தை திணிக்க ஆரம்பித்துவிட்டன. என்ன ஒரு வெட்கக்கேடு என்றால், இன்னும் தேர்தல் முடிவே வரவில்லை. ஓட்டுகளையே நாளை தான் எண்ணப்போகிறார்கள். யார் வெற்றி பெறுவார்கள் என்பது பெட்டியை திறந்தால் தான் தெரியும். ஆனால் ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பை வைத்துக்கொண்டே நரேந்திர மோடி புதிய பிரதமராக பதவி ஏற்க தயாராகி விட்டார். பாரதீய ஜனதாக் கட்சியின் மேல்மட்ட தலைவர்கள் கூடி ''மந்திராலோசனை'' செய்கிறார்கள். எப்போது பதவி ஏற்பது...? யார் யாரெல்லாம் மத்திய மந்திரிகளாக பதவி ஏற்பார்கள்...? அத்வானிக்கு மந்திரிசபையில் இடம் உண்டா இல்லையா...? நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றப்பின் குஜராத் மாநிலத்தின் முதல்வராக யாரை நியமிப்பது...?  இப்படியெல்லாம் பாஜக தலைவர்கள் மத்தியில் ஆலோசனை நடப்பதாக செய்திகள் வெளியே கசிந்து கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் பங்குச் சந்தையில் பங்குச் சந்தைக் குறியீடுகளை முன்பு இல்லாத அளவிற்கு உயர்த்தி, மத்தியில் மோடி தலைமையில் ஆட்சி அமைவதற்கான தங்களது விருப்பத்தையும், ஆர்வத்தையும் இந்திய பெருமுதலாளிகள் ''குறிப்பாக'' காட்டியிருக்கிறார்கள்.
                 இந்த ''கருத்துத்திணிப்பை'' பார்த்து தேர்தல் முடிவுகள்  வருவதற்கு முன்பே ''காங்கிரஸ் கூடாரம்'' காலியாகிக்கொண்டே இருக்கிறது. மன்மோகன் சிங் தனது அரசு வீட்டையும் பிரதமர் சீட்டையும் காலி செய்துவிட்டு  சென்றுவிட்டார். தனக்கு நெருக்கமான அண்டை நாடுகளின் தலைவர்களிடமும், தன்  அலுவலக ஊழியர்களிடமும் ''டாடா'' காண்பித்துவிட்டு பிரிய மனசில்லாமல் பிரியாவிடை பெற்று சென்று விட்டார். இப்படியெல்லாம் ''கருத்துத்திணிப்பு'' செய்கிற பாட்டை பாருங்கள். ஊடகங்கள்  ஒரு புறம் ஒருவரை நன்றாக சந்தோஷப்படுத்துவதும், மறுபுறம் வேறு ஒருவரை  துரத்தி அடிப்பதுமான வேலைகளைத் தான் செய்கின்றன. மக்கள் தான் மிகுந்த குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். ஏதோ.... இந்த பாராளுமன்றத்தேர்தலில் நரேந்திர மோடியிடம் ஊடகங்கள் வாங்கின காசுக்கு இறுதிவரையில் ரொம்ப நல்லாத்தான் ஊதுகின்றன...!
             இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஒரு நல்ல யோசனை.... இனிமேல் நாட்டுல பாராளுமன்றத் தேர்தலையே நடத்தவேண்டாம். காசுக்கு கூவுற ஊடகங்களிடம் ''கருத்துக்கணிப்பை'' வாங்கியே பிரதமர் மற்றும் மந்திரிகளையும், எம்.பி-க்களையும் தேர்ந்தெடுத்துக்கலாம். தேர்தல் ஆணையம் எதுக்கு பல ஆயிரம் கோடிகளை செலவு செய்து தேர்தலை நடத்தி கஷ்டப்படனும். கருத்துக்கணிப்புத் தேர்தலே சுலபமானது. அதுமட்டுமல்ல,  பண பலம், பெருமுதலாளிகள் பலம் உள்ள அரசியல் கட்சிகளுக்கு தான் செலவு. தேர்தல் ஆணையத்திற்கு ஒரு பைசா செலவும் இல்லை.  வேலையும் இல்லை. எல்லாவற்றையும் ஊடகங்களே பார்த்து புதிய ஆட்சியாளர்களை உட்கார வைத்துவிடுவார்கள். அப்புறம் தேர்தல் ஆணையம் என்று ஒன்று எதற்கு...? அதுவும் வேண்டாம். இதைஎல்லாம்  தேர்தல் ஆணையம் யோசித்துப்பார்க்கட்டும். ஜனநாயகமாவது... மக்களாவது... தேர்தலாவது....?           

புதன், 23 ஏப்ரல், 2014

மோடி - குஜராத் - வளர்ச்சி : கதவுகளில் கசியும் உண்மை...!

      
          இந்தச் சுற்றுப்பயணத்தில் நாடு முழுவதும் நான் மக்களிடம் அதிகம் கேட்ட மூன்று வார்த்தைகளுக்கு இந்த அத்தியாயத்தை ஒதுக்கலாம் என்று நினைக்கிறேன் : 
மோடி - வளர்ச்சி - குஜராத்    
 
வரலாற்றில் வித்தியாசமான தேர்தல்               
 
          இந்திய வரலாறு மிக வித்தியாசமான ஒரு தேர்தலை எதிர்கொள்கிறது. இதுவரையிலான 15 மக்களவைத் தேர்தல்களும், இந்திய மக்கள் முன் எத்தனையோ பேசுபொருள்களை முன்னிறுத்தியிருக்கின்றன. சாதனைகளும் வாக்குறுதிகளும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், ஊழல்களும் அதிகார துஷ்பிரயோகங்களும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், மரணங்களும் தியாகங்களும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், தனிக்கட்சி ஆட்சியும் நிலையான அரசும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், கூட்டாட்சியும் அனைவருக்குமான வளர்ச்சியும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள்... எல்லாத் தேர்தல்களிலுமே குறைந்தபட்சம் மக்கள் முன் இரு தேர்வுகள் முன்னிறுத்தப்பட்டது உண்டு: இந்தக் கட்சியா, அந்தக் கட்சியா அல்லது இந்தக் கூட்டணியா, அந்தக் கூட்டணியா? 

         முதல்முறையாக மக்களவைத் தேர்தலை அதிபர் தேர்தல் போல எதிர்கொள்கிறது இந்தியா. பிரச்சாரத்தில் கட்சிகளின் பெயர்கள் அடிவாங்கிவிட்டன. இன்னும் சொல்லப்போனால், ஒரேயொரு மனிதரும் அவர் முன்னிறுத்தும் முழக்கமும்தான் இன்றைய இந்தியாவின், இந்தத் தேர்தலின் பேசுபொருள் : மோடி - குஜராத் - வளர்ச்சி.

       நாட்டின் மிகப் பெரிய கட்சியான காங்கிரஸ் மோடிக்குப் பதில் அளிப்பதை மட்டுமே தேர்தல் பணியாகக் கொண்டிருக்க… ஏனைய கட்சிகளோ, மோடியை நோக்கிக் கேள்வி எழுப்புவதையே தேர்தல் பணியாகக் கொண்டிருக்கின்றன. ஆக, வாக்காளர்கள் முன் ஒரேயொரு கேள்விதான் எங்கும் தொக்கிநிற்கிறது : மோடி - குஜராத் - வளர்ச்சி வேண்டுமா; வேண்டாமா?
         மக்களிடம் இப்படி ஒரு கேள்வி தொக்கிநிற்கிறது என்றால், நாடு முழுவதும் உள்ள ஊடகங்களிலும் இப்போது இதுதான் முக்கியமான விவாதம் - குஜராத்தில் உண்மையான வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறதா, இல்லையா? அது உண்மையாகவே ஒரு நல்ல முன்மாதிரிதானா, இல்லையா? மக்கள் உண்மையாகவே எப்படி இருக்கிறார்கள்? எது குஜராத்தில் மீண்டும் மீண்டும் மோடியைப் பதவியில் அமர்த்துகிறது?
 
மோடி செய்ததும் செய்யாததும்                   

              இந்தச் சுற்றுப்பயணத்தில் இந்த மாபெரும் கேள்விக்கும் விவாதத்துக்கும் நானும் பதில் தேடினேன். குஜராத் அரசுத் தரப்பினர் சாதனைகளாகச் சொன்ன - அவர்கள் நிறைவேற்றியிருக்கும் பல்வேறு திட்டங்களைப் பார்க்க அலைந்தேன். அந்தத் திட்டங்கள் நன்மை - தீமைகளை அளவிட ஏகப்பட்ட குறிப்புகள், புள்ளிவிவரங்களைச் சேகரித்தேன். ஏராளமான மக்களிடம் கருத்துகள் கேட்டேன். சரி, உண்மை நிலவரம் என்ன?
          குஜராத்தில் மோடி முன்னோடியான திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறாரா? நிச்சயமாகக் கொண்டு வந்திருக்கிறார் - எப்படி கேரளத்திலும் தமிழகத்திலும் பிஹாரிலும் சில முன்னோடியான திட்டங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றனவோ அப்படியே குஜராத்திலும் முன்னோடியான சில திட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. ஆனால், குஜராத்துக்கு வெளியே அவை ஊதிப் பெருக்கப்படுகின்றன. பல விஷயங்களில் துளியும் உண்மை இல்லாமல் மோடி கொண்டாடப்படுகிறார். ஒரு உதாரணம்: குஜராத் மதுவிலக்கு மாநிலமாக இருப்பதற்கு மோடி கொண்டாடப்படுவது. உண்மை என்னவென்றால், குஜராத் தனி மாநிலமாக உருவாக்கப்பட்ட 1960 முதலே அது மதுவிலக்கு மாநிலம் தான். இதைச் செய்தது காங்கிரஸ் அரசாங்கம். உண்மையில் மோடி ஆட்சியில் மது கள்ளச்சந்தையில் நிறையவே கிடைக்கிறது. இரட்டை விலையில் விற்கிறார்கள். சமீபத்திய உதாரணம், நாட்டில் அதிக அளவில் ரூ.12.57 கோடி மதிப்புடைய மது, தேர்தல் ஆணையத்தால் குஜராத்தில் தான் பறிமுதல் செய்யப்பட்டது. இப்படி நிறைய அடுக்கலாம். ஆனால், வெற்றிகரமாக அந்த மாயையை நிறுவியிருக்கிறார்கள்.
              சரி, இது மாயை என்றால், உள்ளூரில் எடுபடாதே? பின் எப்படி குஜராத்தில் மோடி தொடர்ந்து வெல்கிறார்? குஜராத்திலிருந்து புறப்படும்போது எடுத்த ஒரு புகைப்படம் அந்த உண்மையை வெளிப்படுத்தும் என்று நம்புகிறேன். 

உண்மையின் கதவுகள்                        

              ஊரெல்லாம் சுற்றிவிட்டு, அகமதாபாத் திரும்பியபோதுதான் அதைக் கவனித்தேன். சில வீதிகளின் நுழைவாயில்களில் பெரிய பெரிய இரும்புக் கதவுகளை அமைத்திருந்தார்கள். அந்த வீதிகளின் புழுதி மண் சாலைகள் நாம் வெளியில் கேட்கும் குஜராத்தின் வளர்ச்சி கோஷங்களோடு எந்த வகையிலும் பொருந்தாதவை. மனதில் வித்தியாசமாகப் படவும், ஓரிடத்தில் காரை நிறுத்தச் சொல்லி இறங்கினேன். அகமதாபாதின் மையத்தை ஒட்டியிருக்கும் அந்தப் பகுதியின் பெயர் சோனி கே சால். மோடியின் தொகுதியான மணி நகருக்கு மிக அருகில் இருக்கும் பகுதி. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதி. “வீதியின் நுழைவாயிலில் ஏன் இரும்புக் கதவுகளை அமைத்திருக்கிறார்கள்?” என்று அங்குள்ளவர்களிடம் விசாரித்தபோது, கிடைத்த அதிரவைக்கும் பதில் இது: “பழங்கால முறைதான். கலவரம் ஏற்பட்டால் கதவைப் பூட்டிவிட்டுப் பதுங்க.”
          அருகருகே இருந்த வீதிகளில் நுழைந்து சென்றபோது ஒரு விஷயத்தைக் கவனிக்க முடிந்தது. பெரும்பாலான வீடுகளில் நிலை, கதவுகள், ஜன்னல்கள் யாவும் இரும்பாலேயே அமைக்கப்பட்டிருந்தன. “ஏன் மரங்களைப் பயன்படுத்துவது இல்லையா?” என்ற என் அடுத்த கேள்விக்குக் கிடைத்த பதில் நிலைகுலையச் செய்தது. “கலவரத்தின்போது தீயை இது கொஞ்சமாவது தாக்குப்பிடிக்கும் இல்லையா? இங்கே கலவரங்களின்போது தீப்பந்தங்கள்தான் வீட்டுக்குள் முதலில் வரும். அப்புறம் என்ன வெட்டினாலும் கூறுபோட்டாலும் சரி… எரித்தால்தான் அவர்களுக்கு வெறி அடங்கும்.”
          எனக்கு கோத்ராவும் நரோடா பாட்டியாவும் மாறி மாறி நினைவுக்கு வந்தன. கோத்ராவில் ரயில் பயணிகளைத் துடிக்கத் துடிக்கத் தீ வைத்துதான் அழித்தார்கள். நரோடா பாட்டியாவில் ஒன்பது மாதக் கர்ப்பிணியான கௌஸர் பானுவின் வயிற்றை வாளால் கிழித்து அந்தச் சிசுவை வெளியே எடுத்தவர்கள் தரையில் போட்டு அதை மிதித்தார்கள்; அப்போதும் ஆத்திரம் அடங்காமல், அதன் மீது எண்ணெயை ஊற்றி எரித்தார்கள்.
            அங்கிருந்து வெளியே வந்தேன். கார் ஓட்டுநர் ஒரு இந்து. “சார்… இந்துக்களுக்கும் பயம் உண்டு சார். முஸ்லிம்கள் சுற்றி அதிகமாக வாழும் இடங்களில் இந்துக்களும் இப்படிப் பாதுகாப்புக்கு வீதி நுழைவாயிலில் இரும்புக் கதவுகள் போட்டுக்கொள்வது உண்டு” என்று சொல்லி ஓர் இடத்தைக் காட்டினார். பின்னர் சொன்னார்: “இந்த பயம்தான் சார் உண்மையில் குஜராத்தை ஆட்சி செய்கிறது. இரு தரப்பையும் வெவ்வேறு வகைகளில்.”
             கார் அகலமான ஒரு சாலையில் பாய்ந்து செல்ல ஆரம்பித்தபோது, எனக்கு நடிகை நந்திதா தாஸ் ஒரு பேட்டியில் ''மோடி - வளர்ச்சி - குஜராத்'' தொடர்பான கேள்விக்கு அளித்திருந்த பதில் ஞாபகத்துக்கு வந்தது. அந்தப் பேட்டியில் நந்திதா தாஸ் இப்படிக் கூறியிருப்பார்: “ஜெர்மனியின் மிகச் சிறந்த சாலைகள் ஹிட்லர் ஆட்சியில் அமைக்கப்பட்டவை. ஜெர்மனியின் மிகச்சிறந்த மருத்துவமனைகளும் அப்போதுதான் கட்டப்பட்டன. ஆனால், ஹிட்லரை நாம் யாரும் வளர்ச்சிக்காக நினைவு கூர்வதில்லை!”
கட்டுரையாளர் : சமஸ் 
தொடர்புக்கு : samas@kslmedia.in 
ரொம்ப நன்றி

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

''மோடியும், குஜராத்தும்'' - ஆனந்த விகடனின் உண்மை கட்டுரை

            குஜராத் முதல்வராக இருக்கும் நரேந்திர மோடி இந்திய நாட்டின் பிரதமர் (?) வேட்பாளர் என்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தம்பட்டம் அடித்து வருகிறது. அவரைப் பற்றிய பல்வேறு தகவல்களை பூதாகரமாகக் கூறி வருகிறது. ஆனால் உண்மை நிலை என்ன என்பதை 16-4-2014 தேதியிட்ட ஆனந்த விகடனில் வெளியான ப.திருமாவேலன் கட்டுரை புட்டுப்புட்டு வைக்கிறது. கட்டுரையின் பகுதிகள் வருமாறு:

             எப்போதுமே இக்கரைக்கு அக்கரை பச்சைதான். 2002ல் ஆட்சியைப் பிடித்த நரேந்திர மோடி, குஜராத்தை இந்தியாவின் சொர்க்க புரியாக மாற்றிவிட்டார் என்ற நினைப்பு, நாடு முழுவதும் விதைக்கப் பட்டது. குஜராத்திகள் பிறப்பால் தொழில் சமூகத்தினர், பிரிட்டிஷ் ஆட்சி கிழக்கு இந்தியக் கம்பெனி மூலமாக வர்த்தகம் செய்த காலத்திலேயே தொழிற்சாலைகள் தொடங்கியது இந்தப் பகுதியில்தான். “மோடி, நன்கு சுழலும் தங்கச் சக்கரத்தைப் பெற்றார். அதை நிறுத்தாமல் தொடர்ந்து சுற்றிக்கொண்டிருப்பதுதான் மோடியின் சாதனை” என்றார் சமூகவியலாளர் தீ பாங்கர் குப்தா. இதனை அமர்த்தியா சென் ஏற்றுக்கொள்ளவில்லை. “குஜராத்தில் புதிய தொழிற்சாலைகள் வந்திருக்கின்றன. நிறைய சாலைகள் அமைத்திருக்கிறார்கள்.
             கட்டுமானப் பணிகள் வேகமாக நடக் கின்றன. ஆனால், ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை இதைவைத்து மட்டுமே அளவிட முடியாது. 1000 குழந்தைகள் பிறந்தால் மருத்துவ வசதி இல்லாமல் அதில் எத்தனை குழந்தைகள் குஜராத்தில் இறந்துபோகின்றன என்பதைப் பாருங்கள். அது கேரளாவைவிட மூன்று மடங்கு அதிகம். அதேபோல் கல்வி மற்றும் மருத்துவத்துறைகளில் கேரளா, தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேசத்தை விடவும் குஜராத் பின்தங்கித்தான் இருக்கிறது”என்கிறார் சென். மோசம், மிக மோசம் என்பதையே ஒவ்வொரு மாநிலமும் தங்கள் ஸ்டேட் டஸாக வைத்திருந்ததால் ஏற்பட்ட சலிப்பு, `குஜராத் முன்னேறி விட்டதோ.... அதே ஃபார்முலா இந்தியாவுக்கும் பொருந்துமோ!”என்ற நப்பாசை நம்பிக்கையை வளர்த்துவிட்டது!

தொழிலதிபர்களின் அதிபர்..!


          இந்தியத் தொழில் துறை வர்க்கம், தனக்குச் சாதகமான பிரதிநிதியாக மோடியைக் கணிக்கிறது.`குஜராத்தில் தொழில் முதலீடு செய்யுங்கள்’ என்று மோடி அழைப்பதைப் போல வேறு எந்த மாநில முதல்வரும் அழைக்கவில்லை என்பது மட்டுமல்ல; அடிமாட்டு விலைக்கு நிலங்களையும், 0 சதவீதமும் வட்டியுடன் நிதி உதவியும் வேறு எந்த மாநிலமும் தர முன்வரவில்லை என்பதும் காரணம். சலுகைக்கு மேல் சலுகைகள் வழங்குவதன் மூலமாக பல்வேறு தொழிற்சாலைகளை மாநிலத்துக்குள் கொண்டுவரும் தந்திரத்தை மோடி கடைப்பிடிக்கிறார். இது தொழில் அதிபர்களுக்குச் சாதகமான அம்சம். ஒரு காலத்தில் பெரு முதலாளிகள் தரப்பு, அனைத்து இந்திய தேசியத்தைக் கட்டமைத்தது போலவே இப்போதும் இணைந்து செயல்பட்டு, மோடிக்கு ஆதரவு தருகிறது!

மோடித்துவா..!

              `நான் ஓர் இந்து தேசியவாதி. இன்னும் எளிதில் புரியும் வகையில் சொல்லவேண்டுமானால், நான் இந்து என்ப தால் இந்து தேசியவாதி’ என்று பகிரங்கமாக அறிவித்துக் கொண்டவர் நரேந்திர மோடி. இந்தியா என்பது பன்முகத் தன்மைகொண்டது. இந்தியாவின் பெருமை என்பதே வேற்றுமையில் ஒற்று மைதான். ஆனால், `இங்கு இருப்பது ஒரேஒரு தேசியம்தான். அது இந்து தேசி யம், அதுதான் இந்திய தேசியம்‘ என்றுசொல்லக்கூடிய தத்துவத்தின் பிரதிநிதி யாக நரேந்திரமோடி தன்னை அடை யாளப்படுத்திக் கொள்வதைப் பெருமை யாக நினைக்கிறார். தனிப்பட்ட மோடிஎப்படிப்பட்டவராகவும் இருக்கலாம். ஆனால், பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் பிரதமர் பதவிக்கு ஆசைப் படுகிறவர், தன்னைப் பச்சையாக `இந்து தேசியவாதி’ என்று அழைத்துக் கொள்வது சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலானது. சட்டம் - ஒழுங்கு கெடுமானால் நிம்மதி இழக்கக்கூடியவர்கள் பெரும் பான்மையினரும்தான். காங்கிரஸ் கட்சியை இந்திய நாட்டுப் பற்று காப்பாற்றுவது போல, தங்களை இந்து மதப்பற்ற காப் பாற்றும் என்று மோடி நினைக்கலாம். ஆனால், மக்கள் நலன் சாராத இந்த மாய மாத்திரைகள், விரைவிலேயே அவலமாகக் கிழிந்து தொங்கும். அயோத்தி அலையில் 1999ல் ஆட்சியைப் பிடித்தபாஜகவை 2004ல் வீட்டுக்கு அனுப்பி யவர்கள் `இந்துக்கள்’ தானே தவிர... சிறுபான்மையினர் அல்ல.  இந்து பிம்பம் ஆட்சிக்கு வரப் பயன்படலாம். ஆட்சியை எப்போதும் காப்பாற்றாது என்பதற்கு உதாரணம்... வாஜ்பாய்!

தான், தான் மட்டுமே...!

              அரசியல் என்பதே, ஒருவரை வீழ்த்தி விட்டு இன்னொருவர் அதிகாரத்தை அடைவதுதான். அதைப் பச்சையாக, பட்டவர்த்தனமாக நடத்துபவராக நரேந்திர மோடி இருக்கிறார்.சோம்நாத்தில் இருந்து அயோத்திக்கு அத்வானி ரத யாத்திரை புறப்பட்டபோது, அதனை ஏற்பாடு செய்கிற பொறுப்பில் இருந்தவர் நரேந்திர மோடி. 23 ஆண்டு களுக்கு முன்பு நடந்த அந்தச் சம்பவம் தான் மோடியை குஜராத்துக்கு அறிமுகம் செய்தது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான `ஏக்தா யாத்ரா’ என்ற ஒற்றுமை யாத்திரையை முரளி மனோகர் ஜோஷி நடத்தியபோது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மோடி முகம் அறிமுகம் ஆனது. இன்று மோடியால் வீழ்த்தப்பட்டுக் கிடப்பவர்கள் யார்? அதே அத்வானியும் முரளி மனோகர் ஜோஷியும்தான்.
              அத்வானியிடம் இருந்து `பிரதமர் வேட்பாளர்’ என்ற மகுடத்தைப் பறித்து, ஜோஷியிடம் இருந்து அவரு டைய தொகுதியைப் பறித்து மோடி ஆடியது தவறான ஆட்டங்கள். `மோடி இல்லாவிட்டால் பாஜக ஆட்சிக்கு வர முடியாது’ என்ற பிம்பத்தை உருவாக்கி, மற்ற தலைவர்கள் அனைவருக்குமே அவர்கள் பயப்படும் தொகுதிகளை ஒதுக்கி நரேந்திர மோடி செய்த வேலைகள், நரசிம்மராவ் காலத்தில்கூட காங்கிரஸில் நடக்காதவை.மோடியை அரசியலுக்கு அழைத்து வந்தவர் சங்கர் சிங் வகேலா. இவர் தனது புல்லட்டில் எப்போதும் மோடியை உட்காரவைத்துக் கொண்டு குஜராத்தை வலம் வருவார். 1995ம் ஆண்டு தேர்தலில் குஜராத் சட்டமன்றத்தை பாஜக கைப் பற்றியபோது சங்கர் சிங் வகேலா தான் முதல்வராக இருந்திருக்க வேண்டும்.
              ஆனால், அத்வானியிடம் இருந்த தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வகேலாவைத் தடுத்து கேஸூபாய் படேலை முதல்வர் ஆக்கினார் மோடி. கேஸூபாய் படேலை வாழ்த்தி... வகேலாவைக் கட்சியைவிட்டுத் துரத்தி... இத்தனையும் அத்வானி ஆசீர் வாதத்துடன் நடத்தினார் மோடி. 2002ம் ஆண்டு குஜராத் படுகொலையால் தலைகுனிந்த பிரதமர் வாஜ்பாய். முதல்வர் மோடியைப் பதவி விலகச் சொன்னபோதும் தடுத்தவர் அத்வானி. ஆனால், அந்த அத்வானியின் பிரதமர் கனவைக் காவு வாங்கினார் மோடி!பாஜக ஒருவேளை ஆட்சிக்கு வந்தால் மோடி ஒரு பக்கமும், மற்ற அனைவரும் இன்னொரு பக்கமும் சக்கரத்தைச் சுழற்று வார்கள். ஏனெனில், இரண்டாம் நபரோடு அரவணைக்கும் ஆளாக மோடி இல்லை!

சிறுபான்மையினர் சினம்..!

               இந்தியப் பிரிவினைக்குப் பின் நடந்த மிகப்பெரிய மதவெறிப் படுகொலை 2002ல் குஜராத்தில் தான் நடந்தது. குஜராத் எப்போதும் அமைதிப் பூங்காவாக இருந்தது இல்லை. 1969ல் 512 பேரையும், 1985ல் 300 பேரையும், 1992ல் 152பேரையும், பலிவாங்கிய குஜராத், 2002ல் சுமார் 1,200 பேரை (அரசுக் கணக்கின்படி) புதைத்தது. கரசேவர்கள் வந்த ரயில் பெட்டிக்குத் தீ வைக்கப்பட்டதால், எதிர்வினையாக இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று விளக்கம் சொன்னாலும், அரசும் போலீசும் நினைத்திருந்தால், அந்தச் சாவுகளில் பாதியைத் தடுத்திருக்கலாம். `எல்லாம் முடியட்டும்; இரண்டு நாட்கள் காத்திருப்போம்‘ என்று கைகட்டி வேடிக்கை பார்த்தது மோடி அரசு. `ஆட் சிக்கு வந்த சில மாதங்களில் நடந்தது என்பதால் எப்படிச் சமாளிப்பது என்று அவருக்குத் தெரியவில்லை’ என்று விளக்கம் சொல்கிறார்கள்.`காரில் போய்க்கொண்டு இருக்கிறோம்.
                 ஒரு நாய்க்குட்டி மீது நம் கார் மோதி அது இறந்துவிடுகிறது. அப்போது நாம் வருத்தப்படுகிறோம் அல்லவா? அது போன்றதுதான் 2002ம் ஆண்டு நிகழ்வும்‘ என்று இப்போது சமாளிக்கத் தெரிந்தவருக்கு போலீஸைப் பயன்படுத்தக் தெரியாதா? `ஒன்றின் எதிர்வினை இன்னொன்று’ என்று நியாயப்படுத்தினார் மோடி. இஸ்லாமியர்களையே தன்னுடைய பிராண்ட் அம்பாஸிடர்களாக மோடி நியமித்து பிரச்சாரம் செய்தாலும், அந்த மக்கள் மனதில் பயமும் பீதியும் படிந்திருப்பது மோடியின் உண்மையான சொரூபம் தெரியும் என்பதால்தான்!மேலும், என்கவுண்ட்டர் என்ற பெய ரால் சிறுபான்மையினரைக் கொன்று தீர்த்த சம்பவங்கள் ரத்தம் உறையவைக்கின்றன. இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 32 போலீஸ் உயர் அதிகாரிகள் மீது வழக்குப் பதியப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதும் அதிலிருந்து ஜாமீனில் வந்தவர்கள், ஒரு மாநில முதலமைச்சரையே குற்றம் சாட்டுவதும் இதுவரை இந்தியா பார்க்காதது!

மர்மங்களின் மனிதர்..!

                 `நான் ஒரு திறந்த புத்தகம்‘ என்று எல்லா அரசியல்வாதிகளும் சொல்லிக் கொள்வார்கள். ஆனால், யாரும் திறக்க முடியாத புத்தகமாக மோடி இருக்கிறார். திருமணம் செய்து கொள்ளாதவராக அவரைக் காட்டுகிறார்கள். 13 வயதில் ஜசோதாபென் என்பவருக்கும் இவருக்கும் திருமணம் நடந்தது. பின்னர், இவர் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு இரண்டு ஆண்டுகாலம் இமயமலைக்குப் போய்விட்டு, குஜராத் திரும்பினாலும், 32 ஆண்டுகள் தனது சொந்த வீட்டுக்கே வராமல் போனதால் அந்தப் பந்தம் அப்படியே அறுந்தது என்றும் சொல்லப்படுகிறது.அந்தப் பெண் ஒரு பள்ளியின் ஆசிரியையாக வேலை பார்த்துள்ளார். மோடி, முதல்வர் ஆன பிறகு அவர் யார் பார்வையிலும்படாமல் மறைத்து வைக்கப்பட்டார்.
               அவரை 2002ம் ஆண்டுக்குப் பிறகு பேட்டி எடுக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர். இன்று வரை அவரது இருப்பு, மறைமுகமாக இருக்கிறது. சமீபத்தில் தான் மாதுரி சோனியின் கதை பிரபலமானது. அந்தப் பெண்ணை 62 நாட்கள் குஜராத் உளவுத் துறை வேவு பார்த்தது. ஆந்திர சினிமாக்களை மிஞ்சும் ரியல் மசாலா.மோடி அரசால் வஞ்சிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் ஐபிஎஸ். அதிகாரிகளான குல்தீப் ஷர்மா, ஸ்ரீகுமார், வன்சரா, சஞ்சீவ்பட், ராகுல் ஷர்மா, ரஜ்னீஷ் ராய் போன்றவர்கள் சொல்லும் கதைகள் பதற்றமானவை.மோடிக்கு அடுத்த இடத்தில் இருந்த, `அவருக்கு அடுத்து இவர்தான்‘ என்று சொல்லப்பட்ட, அத்வானி மற்றும் அருண் ஜெட்லி ஆசீர்வாதம் பெற்ற குஜராத் வருவாய் துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா, திடீரென ஒருநாள் செத்துக் கிடந்த மர்மம் எத்தனையோ ஆண்டுகள் ஆகியும் இன்னும் விலகவில்லை!

கொள்கை என்ன..?

               `காங்கிரசிடம் இருந்து விடுதலை’ என்று மோடி முழங்குகிறார். ஆனால், காங்கிரஸில் இருந்து பாஜக எந்த வகையில் மாறுபட்டது என்பதை இன்று வரைவிளக்கவே இல்லை. மாற்றம், வளர்ச்சி என்று மையமாகப் பேசுகிறாரே தவிர, தன்னுடைய கொள்கை, ஆட்சி நடத்தும் வழிமுறை பற்றி பேசவே இல்லை. புதிய பொருளாதாரக் கொள் கையை அமல்படுத்தி 24 ஆண்டுகள் கடந்து விட்டன. பொருளாதாரமும் நிதியும் கோமாவில் தான் கிடக்கின்றன. இதே பொருளாதாரக் கொள்கையைத்தான் (1998-2004) பாஜக ஆட்சியும் பின் பற்றியது.ஒரு காலத்தில் சுதேசி, சுதேசி என்று அதிகம் பேசியது பாஜக தான். இன்று அதை மறந்தும் சொல்வது இல்லை.
               சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அமல்படுத்தத் துடித்தது காங்கிரஸ் என்றால், 26 சதவிகிதம் முதலீடு வரலாம் என்றது பாஜக அரசு. 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டுக்கு வசதியான வழிமுறைகளை பாஜக ஆட்சியே பாதைபோட்டுக் கொடுத்தது. காங்கிரசும் ஆ.ராசாவும் அதற்குள் புகுந்து புறப்பட்டார்கள். லோக்பால், லோக் அயுக்தா பற்றி மோடி தெளிவுப்படுத்தவில்லை. `பலவீனமான பிரதமராக இருப்பதால் அண்டை நாடுகள் மிரட்டுகிறது’ என்கிறாரே தவிர, மோடியின் வெளியுறவுக் கொள்கை இன்னும் சொல்லப்படவில்லை. அண்டை நாடுகளுடன் சண்டைக்கு நிற்கப் போகிறோம் என்றால் ராணுவச் செலவு அதிகமாகி, இந்தியாவின் கடன் இரண்டு மடங்கு ஆகும் என்பதைத் தவிர பயன் இருக்காது.மேடையில், ஏறுகிறார்; கையை வீசுகிறார்; கர்ஜிக்கிறார்; காற்றில் கலக்கிறது வார்த்தைகள். ஆனால், எதுவுமே மனதில் நிற்கவில்லை. வளர்ச்சி, மாற்றம் என்ற வாய்மொழி வார்த்தைகள் மட்டும் போதாதே!

யார் பிரதமர்..?

             இதில் என்ன சந்தேகம்? பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைத்தால், மோடிதான் பிரதமர், தனிப்பெரும்பான்மையை பாஜக அடைய முடியாமல் போனால் மற்ற கட்சிகளின் ஆதரவைத் தேட வேண்டி வரும். அப்போது? `நரேந்திர மோடியைத் தவிர வேறு யாரை முன்மொழிந்தாலும் நாங்கள் ஆதரிக்கத் தயார்’ என்று கட்சிகள் நிபந்தனை விதிக்கும். அப்போது, பாஜக என்ன முடிவு எடுக்கும்? ஆர்எஸ்எஸ் என்ன அறிவுரை சொல்லும்? இதை எதிர் பார்த்துத்தான் 87 வயதிலும் அத்வானி. காந்தி நகரில் நிற்கிறார். ராஜ்நாத் சிங், ஜோஷி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி போன்றவர்கள் மோடியை சகித்துக் கொண்டு சும்மா இருக்கிறார்கள்.இப்படி ஒரு சூழ்நிலை உருவாகுமானால் மோடி என்ன மாதிரியான முடிவு எடுப்பார் என்பதைக் கணிப்பது கஷ்டம். மோடி போன்ற ஒரு கேரக்டர் பிரதமர் ஆகிறார் என்பதை நினைத்தால், பலருக்கும் பயமாக இருக்கிறது. அவர் பிரதமர் ஆக முடியாமல் போனால் என்ன ஆகும் என்று யோசித்தால், அந்தப் பயம் இன்னும் அதிகமாகிறது.!
             
 நன்றி : ஆனந்தவிகடன் மற்றும் Theekkathir Tamil Daily..

சனி, 12 ஏப்ரல், 2014

மனைவியைக் கைவிட்டு மறைத்த மோடி...!

          
                 பிரதமர் கனவில் மிதக்கும் நரேந்திர மோடி தன் மனைவியைக் கைவிட்டு மறைத்தது மட்டுமல்லாது,   45 ஆண்டுகளாக வாழ்வாதார உதவி கூட செய்யாமல் தவிக்கவிட்ட கொடுமை - இதை தேர்தல் ஆணையம் செவ்வனே வேடிக்கைப் பார்க்குமா...? அல்லது மோடி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்குமா...? என்பது தான் இன்று நாட்டிலுள்ள நடுநிலையாளர்களின் - பொதுமக்களின் கேள்வியாக இருக்கிறது.
               பிரதமர் கனவோடு வலம் வரும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் நரேந்திர மோடி, தனக்கு திருமணமான தகவலை கடந்த தேர்தல்களில் மறைத்தது மட்டுமின்றி, மனைவியின் பெயரை குறிப்பிடாமல் இருந்தது பற்றி அரசியல் அரங்கில் கடும் கண்டனக்குரல் எழுந்துள்ளது.
           அதுமட்டுமின்றி தற்போது வரை மனைவியோடு சேர்ந்து வாழாமல் அவரை கைவிட்டது மட்டுமின்றி, அவருக்கு வாழ்வாதார உதவி கூட கொடுக்காமல் கொடுமைப்படுத்தியிருப்பதும் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. மோடிக்கு தற்போது 62 வயதாகிறது. 45 ஆண்டுகளுக்கு முன்பே, ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரச்சாரகர் ஆகும் பொருட்டு மோடி தனது மனைவியை கைவிட்டுச் சென்றுவிட்டார். 1968-ஆம் ஆண்டிலேயே  மோடியின் சொந்த ஊரான வத்நகருக்கு அருகில் உள்ள பிரம்மன்வாடா என்ற கிராமத்தைச் சேர்ந்த யசோதாபென் என்ற பெண்ணுக்கும் மோடிக்கும் திருமணம் நடந்திருக்கிறது.
         திருமணம் நடந்த போது யசோதா பென்  13 வயது மட்டுமே நிரம்பிய சிறுமி ஆவார். மோடிக்கு வயது 17. இதன் பின்னர் யசோதாபென்னை நிராதரவாக விட்டுவிட்டு மோடி சென்று விட்டார். இதுவரையிலும் அப்பெண்ணுக்கு எந்தவிதமான வாழ்வாதார உதவியும் மோடி செய்யவில்லை.
           இத்தனைஆண்டுகளாக யசோதா பென், தனது சொந்த கிராமத்தில் தனது மூத்த சகோதரரால் நடத்தப்படும் ஒரு சிறிய மளிகைக்கடையில் வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

   வெளிச்சத்திற்கு வந்த திருமணம் : 

              இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு குஜராத்தின் வதோதரா தொகுதியில் போட்டியிடுவதற்காக நரேந்திர மோடி வேட்புமனுத்தாக்கல் செய்தார். அந்த வேட்புமனுவில் மனைவி என்ற இடத்தில் யசோதா பென்னின் பெயரை நிரப்பி அளித்துள்ளார். இதைத்தொடர்ந்தே மோடியின் திருமணமும், அவர் தனது மனைவியை கைவிட்டு வந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது. ஆனால் இதற்கு முன்பு நடந்த தேர்தல்களில் நரேந்திர மோடி திருமணமானவர் என்றோ, மனைவியின் பெயரையோ குறிப்பிடவில்லை. எனவே இது தற்போது சட்டரீதியான பிரச்சனையாக மாறியுள்ளது. தேர்தல் ஆணையம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி ஒருபுறம் புகார் பதிவு செய்துள்ளது.
           தேர்தல் ஆவணங்களில் தனது கடந்த கால வாழ்க்கை குறித்த உண்மைகளை நரேந்திர மோடி திட்டமிட்டு மறைத்துள்ளார் என தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ள புகாரில் கேள்வி எழுப்பியிருப்பதாக காங்கிரசின் மூத்த தலைவர் கபில்சிபல் தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளியன்று தெரிவித்தார்.

  தேசிய மகளிர் ஆணையம் கேள்வி : 

           மோடியின் திருமணம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. அதன் உறுப்பினர் நிர்மலா சமந்த் கூறும்போது, ‘‘இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. நரேந்திரமோடியின் மனைவி தனது சொத்துரிமை பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் இழந்துள்ளார். ஆனால் மோடி பெண்கள் உரிமைகளுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார். தனது வேட்பு மனுவில் அவர் தனது சொத்து விவரங்கள், குடும்ப உறுப்பினர்கள் பற்றிய தகவல்களை தெரிவித்துள்ளார்.
              ஆனால் முதல் முறையாக தனதுமனைவியின் பெயரை குறிப்பிட வேண்டிய தேவை என்ன? இதற்கு முந்தைய தேர்தல்களில் மனைவியின் பெயரை குறிப்பிடும்படி அவரிடம் தேர்தல் ஆணையம் கட்டாயப்படுத்த வில்லையா? இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்“ என்றார்.

 பிருந்தா காரத் : 

                       இந்த விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், கடும் விமர்சனம் செய்துள்ளார்.
        யசோதா பென்னுடனான தனது திருமணத்தையே மறைத்து பொய் கூறிய மோடியை இந்த நாடு நம்புகிறதா....? என்று ‘சிபிஐ(எம்) ஸ்பீக்’ என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ள பிருந்தா காரத், தன்னை நம்பி திருமணம் செய்து கொண்டபெண்ணை ஏமாற்றி கைவிட்டது மட்டுமல்ல, இத்தனை ஆண்டுகாலமாக அப்பெண்ணுக்கு வாழ்வாதார உதவியைக்கூட மோடி அளிக்கவில்லை என்பது இந்த நாட்டின் பெண்களுக்கு ஏற்பட்ட அவமானம் என்றும் எழுதியுள்ளார்.
           ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும் என்று மோடி கூறியதன் உண்மை அர்த்தம் என்ன என்றும் பிருந்தா காரத் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜி.ராமகிருஷ்ணன் :

                இந்நிலையில், மனைவியின் பெயரையே மறைத்த மோடி போன்ற பொய்யரிடமா இந்த நாட்டை ஒப்படைக்கப்போகிறோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
        தானிக்கோட்டகம் கிராமத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், “3 முறை குஜராத் சட்டமன்றத்திற்குப் போட்டியிட்டு வெற்றிபெற்ற மோடி தேர்தல் விண்ணப்பத்தில் எல்லாம் திருமணம் ஆகாதவர் என்றே பொய் சொல்லியிருக்கிறார். தற்போது ஏதோ பயம் வந்து, திருமணம் ஆகிவிட்டது மனைவி இருக்கிறார் என்று உண்மையைச் சொல்லியிருக்கிறார். 13 வயதுடைய பெண்ணைத் தனது 17 வயதில் மணந்ததாகச் சொல்கிறார். இந்தத் திருமணமே சட்டப்படி செல்லாதே. இவர் மோடியா? மோசடிப் பேர்வழியா? இப்படிப்பட்ட பொய்யரிடம்- மதவெறி பிடித்த மோசடிக்காரரிடம் இந்த தேசத்தை ஒப்படைக்கலாமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இப்படிப்பட்ட மோடியை முன்னிறுத்தும் பாஜகவிற்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள கட்சிகள் பல்லக்குத் தூக்குவதையும் அவர் கடுமையாக சாடினார்.

வியாழன், 10 ஏப்ரல், 2014

பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை : நாம் பேசியாக வேண்டும்


 கட்டுரையாளர் : என். ராம், பத்திரிக்கையாளர்        


             இந்த 16-வது மக்களவைப் பொதுத்தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கும்வரை, பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. இந்தியத் தேர்தல் ஆணையம் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்திய போதிலும் எந்த விளக்கமும் அளிக்காத கட்சி முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கிய பின் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. தேர்தல் அறிக்கை என்பது பெரிய விஷயமல்ல என்று பா.ஜ.க. நினைப்பது போலத் தெரிகிறது. ''வளர்ச்சி நாயகன்'' என்றுஅழைக்கப்படும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பிரச்சார இயந்திரம், 2002-ல் நடந்ததைப் பற்றி விவாதிக்க விடாமல் - அல்லது அதிலிருந்து கவனத்தை வேறுதிசைகளில் இழுத்துச்செல்லும் வேலையை - தனது வரம்புக்கு உட்பட்ட வகையில் ஏற்கெனவே கச்சிதமாகச் செய்துமுடித்து விட்டது. ''மோடி மந்திரம்'' கையில் இருக்கும் போது தேர்தல் அறிக்கைக்கு என்ன தேவை என்று கட்சி நினைத்திருக்கலாம்.

  தாமதத்தின் உண்மையான பின்னணி                    

           ஏனைய தேசியக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் தங்களுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகும், முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கும் வரை பாஜகவால் தேர்தல் அறிக்கையைக் கொண்டுவர முடியவில்லை என்பது சாதாரண விஷயமல்ல. யாருக்கு வாக்களிப்பது என்பதைத் தீர்மானிக்க வேண்டிய வாக்காளர்களுக்கு அவசியமான தேர்தல் அறிக்கையை வெளியிடுவதில் இவ்வளவு தாமதம் ஏற்பட உண்மையான காரணம் என்ன? இதுதொடர்பாக பாஜக தலைமையிடமிருந்து விளக்கம் ஏதும் வருவதற்கு முன்பாகவே, ஊடகங்களில் ‘பாஜக சார்புள்ளவர்கள்’ முந்திக்கொண்டு பதில் அளிக்கிறார்கள். அவர்களில் ஒருவரான ‘நெட்வொர்க் 18’ குழு வெளியீடுகளின் தலைமை ஆசிரியர் ஆர். ஜெகந்நாதன், “மோடியே தேர்தல் அறிக்கை தான்; கனமான இன்னொரு அறிக்கை பாஜக-வுக்குத் தேவையா என்ன?” என்று கட்டுரையில் வினவுகிறார்.
                 கட்டுரையின் கடைசிப் பகுதியை அவர் இப்படி முடிக்கிறார்: “தேர்தல் அறிக்கைகள் என்பவை கால்கட்டு மாதிரி, தேர்தலில் நிச்சயம் வெற்றிபெற்று ஆட்சியமைக்கப்போகும் கட்சிக்கு இம்மாதிரியான தளைகள் தேவையில்லை.” இதை வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ‘நிச்சயம் வெற்றிபெறக்கூடிய கட்சிக்கு இந்தத் தேர்தல் அறிக்கை என்பதெல்லாம் எதிர்காலத்தில் பெரிய பிரச்சனையாக மாறிவிடக்கூடும்‘ என்று தெரிகிறது. தேர்தல் அறிக்கை என்பது ‘தெரிவிப்பது குறைவாகவும் மறைப்பது அதிகமாகவும்‘ இருப்பது. அப்படி மறைக்கப்பட வேண்டியவற்றில் கட்சியின் சித்தாந்தம், குணவிசேஷம் ஆகியவை முக்கியமானவை. பாஜகவைப் பொறுத்தவரை கவனத்துக்குரியவை அதன் சங் பரிவாரங்களின் முக்கியமான செயல்திட்டங்கள், நோக்கங்கள், சித்தாந்தங்கள், ‘இந்துத்துவா’ என்று அது கருதும் விஷயங்கள் - அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமருக்குக் கோயில் கட்டுவது, காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை ரத்துசெய்வது, அனைவருக்கும் பொதுவான குடியுரிமைச் சட்டம் இயற்றுவது, மதமாற்றங்களைத் தடை செய்வது, பசுவதைத் தடை உள்பட பல. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த அம்சங்களெல்லாம் பெரும்பாலான மக்களுடைய கவனத்திலிருந்து தப்பிவிடுவதுதான். பா.ஜ.க என்பது தன்னுடைய கொள்கைகளில் பிடிப்பு உள்ள கட்சி. எந்தக் காரணத்துக்காகவும் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக்கூடிய உணர்ச்சிப் பிழம்பான அமைப்புகளைக் கொண்டது தான் சங் பரிவாரம். இவற்றையெல்லாம் ஊட்டி வளர்ப்பது ‘ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்’ என்ற தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.
                  இந்த அமைப்புகளுக்குள்ள உறவு எப்படிப்பட்டது, அவை எப்படிச் செயல்படுகின்றன என்று அறிய வேறெங்கும் போக வேண்டாம் அவற்றின் இணையதளங்களைக் கவனித்தாலே போதும். ஒரு இணையதளம் சொல்கிறது: “சங் பரிவாரத்தின் மிகவும் பிரபலமான அங்கம் பாரதிய ஜனதா கட்சி. இந்திய வரலாறு எது என்பதில் சங் பரிவாரங்கள் தெளிவாக இருக்கின்றன. இந்திய நாட்டுக்கும் சமூகத்துக்கும் இந்து மதம்தான் அடையாளம், இந்துத்துவம்தான் கலாச்சாரம்.”


 அடிநாதம் இந்துத்துவமே                  

           பாஜக 1980-86 காலகட்டத்தில் அதன்‘சாதாரணமான’ வலதுசாரிக் கருத்துகளுக்குக் கிடைத்த தேர்தல் வெற்றிகளால் துணிச்சல் பெற்று, 1989-ல் ‘தீவிரமான’ இந்துத்துவக் கருத்துக்களை முன்வைத்துச் செயல்படத் தொடங்கியது. 1996 தொடங்கி பாஜக-வின் தேர்தல் அறிக்கைகளை ஊன்றிக் கவனித்தால், 1999 தவிர பிற தேர்தல்களிலெல்லாம் இந்துத்துவக் கருத்துகளை மையமாக வைத்தே அது தேர்தல் அறிக்கை யைத் தயாரித்துவந்துள்ளது தெரியவரும். கொள்கைகளைச் சொல்லப் பயன்படுத்தும் மொழி, தொனி, பாணி வேறுபட்டாலும் பிரதான அம்சங்கள் அப்படியே தொடர்கின்றன. பாஜக-வின் 1998 தேர்தல் அறிக்கை அதனுடைய முக்கியக் கொள்கைகளை வெளிப்படையாகப் பேசுகிறது. “சனாதன தர்மம்தான் இந்திய தேசியத்துவம்” என்கிறது. “ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே தேசம்” என்ற லட்சியத்தை முழங்குகிறது. “அரசியலில் இந்துத்துவம் உருவாவது, சமுதாயத்தின் சிலருக்கு சலுகைகள் காட்டி திருப்திப்படுத்துவதற்கும், சிலரை வாக்கு வங்கிகளாக நடத்துவதற்கும் நல்ல முறிவு மருந்தாக இருக்கும்” என்கிறது.
              “இந்தியாவின் மனசாட்சியாக பகவான் ராமர் இருக்கிறார்” என்கிறது. “அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் அழகிய, பெரிய ஆலயத்தை எழுப்ப வேண்டும்” என்கிறது. இதைச் செய்ய சட்டப்பூர்வமாகவும் கருத்தொற்றுமை அடிப்படையிலும், அரசியல் சட்டம் மூலமாகவும் முயற்சிகளை மேற்கொள்வோம்” என்கிறது. மேலும், காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப் பிரிவு 370 ரத்துசெய்யப்படும் என்று எச்சரிக்கும் அந்த அறிக்கை அனைத்து மக்களுக்கும் பொதுவான சிவில் சட்டம் வகுக்கப்படும் வகையில் அனைத்து மரபுகளிலும் உள்ள முற்போக்கான அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்ற பொறுப்பு சட்ட ஆணையத்துக்கு அளிக்கப்படும் என்கிறது. அடுத்த பொதுத்தேர்தலில் அதாவது 1999 தேர்தலில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிடாமல் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்காக, ‘நிர்வாகத்துக்கான தேசிய செயல்திட்டம்‘ வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
                அதில் இந்துத்துவத்தின் அடிப்படை அம்சங்கள் விலக்கி வைக்கப்பட்டிருந்தன. அடுத்த பொதுத்தேர்தலில் பலகட்சிகளையும் உள்ளடக்கி விரிவானகூட்டணியை ஏற்படுத்திக் கொண்ட போதிலும் இந்துத்துவக் கொள்கைகள், ‘2004-க்கான தீர்க்கதரிசனத் திட்டங்கள்’ என்ற பெயரில் அப்படியே இடம்பிடித்தன. இந்த அறிக்கையின் முக்கிய அம்சம், அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்ற தங்களுடைய நீண்ட நாள் கோரிக்கையை பா.ஜ.க. மீண்டும் கையில் எடுத்ததுதான். அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்குப் பதிலாக, “ஜம்மு, லடாக் ஆகிய பகுதிகளுக்கும் போதிய நிதி, நிர்வாக அதிகாரங்களுடன் கூடிய சுயாட்சி பிரதேச ஆணையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்” என்ற கோரிக்கை இதில் இடம் பெற்றிருந்தது.



   மீண்டும் இறுகிய இந்துத்துவா                      
            மீண்டும் இந்துத்துவக் கொள்கைகள் தீவிரமாக வலியுறுத்தப்பட்டன 2009 தேர்தல் அறிக்கையில். “அத்வானி தலைமையிலான அயோத்தி இயக்கம்தான் சுதந்திர இந்தியா வில் மக்களிடையே எழுச்சியைப் பெற்ற பெரியநிகழ்வு” என்று வாழ்த்துப் பாடிய அந்த அறிக்கையில், “காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை ரத்துசெய்ய வேண்டும்” என்ற பழைய பல்லவி மீண்டும் ஒலித்தது. அனைத்துமதத்தவருக்கும் பொதுவான குடி யுரிமைச் சட்டத்தை உருவாக்க உறுதி பூண்டிருப்பதாகவும் எல்லா மதங்களிலும் கடைப்பிடிக்கப்படும் உயர்ந்த அம்சங்களை ஒன்றுசேர்த்து நவீன சமூகத்துக்கு ஏற்ற வகையில் குடியுரிமைச் சட்டம் தயாரிக் கப்படும் என்றும் அது கூறியது.



   முன் தயாரிப்புகள்                         

            இந்த 2014 தேர்தல் அறிக்கைக்கான பூர்வாங்க வேலைகளை 2013 அக்டோபரிலேயே பா.ஜ.க. தொடங்கிவிட்டது. வாக்காளர்களிடமிருந்தே யோசனைகளை வரவேற்கிறோம் என்றெல்லாம், தனி இணையதளம் தொடங்கப்பட்டாலும் கட்சியின் அடிப்படை என்னவோ இந்துத்துவக் கொள்கைகள்தான். உத்தரப் பிரதேசத்தில் பாஜகவினர் நடத்தும் மதவாதம் தெறிக்கும் பிரச்சாரங்களும், அமித்ஷாவின் அனல் கக்கும் பேச்சுகளும் எதைக் காட்டுகின்றன...? பாஜகவின் குணம் மாறவே மாறாது என்பதைத்தான் வெளிப்படுத்துகின்றன.
நன்றி : தி `ஹிந்து’, தமிழில் : சாரி

சனி, 29 மார்ச், 2014

வாரணாசியில் மோடி - பின்னணி என்ன...?


  கட்டுரையாளர் :  பிரகாஷ் காரத்                    
                                பொதுச்செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி                                   
       மக்களவைத்தேர்தலில் நரேந்திர மோடி வாரணாசியிலிருந்து போட்டியிடுகிறார். அச்சுறுத்தலுடன் கூடிய அரசியல் செய்தியை தருவதாகவே இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. தீவிரமான இந்துத்துவா கொள்கையே தேர்தல் பிரச்சாரத்தின் உள்ளடக்கமாக இருக்கும் என்ற சமிக்ஞையை பாஜக-வும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் தருகின்றன. வாரணாசியிலிருந்து மோடி போட்டியிடுவதன் நோக்கம் பற்றி அதிகாரப்பூர்வமாக பாஜக எதுவும் கூறாத போதும், வாரணாசியிலிருந்து மோடி போட்டியிடுவதால் மக்களவைத்தேர்தல்களில் உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப்பகுதியிலும், அதனை ஒட்டியுள்ள பீகார் மாநிலத்தின் பகுதிகளிலும் அக்கட்சிக்கு பலன் கிடைத்திடும் என ஊடகத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், உண்மையான காரணம் மூடி மறைக்கப்படுகிறது.
                20 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி மதவாத இந்துத்துவாவின் அதிர்ஷ்ட நாயகனாக எல்.கே.அத்வானி முன்னிறுத்தப்பட்டாரோ, அதுபோல தற்போது அதனுடைய புதிய அதிர்ஷ்ட நாயகனாக மோடி முன்னிறுத்தப்படுகிறார். வாரணாசியிலிருந்து மோடி போட்டியிடுவது என்பது, அந்த புனிதமான நகரத்தின் ஆன்மீகத் தன்மை குறித்தும், அங்கு எவ்வாறு இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களின் பொருளாதாரம் பின்னிப் பிணைந்திருக்கிறது - இஸ்லாமிய நெசவாளர்களால் தயாரிக்கப்பட்ட பனாரஸ் பட்டுப் புடவைகள் இந்து வர்த்தகர்களால் வியாபாரம் செய்யப்படுகிறது, பிரபல ஷெனாய் கலைஞரான பிஸ்மில்லாகான் மதநல்லிணக்கத்தின் அடையாளமாக இருந்தார் -என்றெல்லாம் கார்ப்பரேட் ஊடகத்தை தேனொழுகப் பேச வைத்துள்ளது. இத்தகையதொரு சூழலை முன்னெடுத்துச் சொல்கிற வாரிசுதாரராக பரம்பரை சொத்தை அடைபவராக மோடியை முன்னிறுத்தும் முயற்சியே இது ஆகும்.

மோடி - இந்துத்துவாவின் அதிர்ஷ்ட நாயகன்              

              உண்மையில் சொல்லப்போனால், நிச்சயமாக அப்படி எதுவுமில்லை. இரண்டாவதாக குஜராத்தின் மற்றொரு இடத்திலிருந்து போட்டியிடுவதுடன், வாரணாசியிலிருந்தும் மோடி தேர்தலில் போட்டியிடுவது என்பதில் மிகவும் அச்சுறுத்தக்கூடிய மற்றும் கூடுதல் அபாயகரமான சங்கேத குறியீடும் அடங்கியுள்ளது. மதவாதத்தின் வரலாறும், வன்முறையை தூண்டுவதற்கான அதன் அடாவடியான முயற்சிகளும், உத்தரப்பிரதேசம் மதரீதியாகப் பிளவுபட்டபோது அதில் முக்கிய இலக்காக வாரணாசி இருந்தது என்பதெல்லாம் வேண்டுமென்றே மேலோட்டமாகப் பார்க்கப்படுகிறது அல்லது பார்வையிலிருந்து மறைக்கப்படுகிறது. 23 ஆண்டுகளுக்கு முன்பு, 10-ஆவது மக்களவைக்கான தேர்தல் நடைபெற்றபொழுது, 1991ம் ஆண்டில் என்ன நடந்தது என்பதனை திரும்பிப் பார்த்திட வேண்டும்.
                1990ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆர்எஸ்எஸ்-சும் பாஜக-வும் சேர்ந்து அத்வானியின் ரதயாத்திரையை துவக்கின. அக்டோபர் மாதத்தில் அத்வானியின் ரதயாத்திரை நிறுத்தப்பட்டு, அவர் பீகாரில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து நாட்டின் பல பகுதிகளில் வெடித்த மத மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஆர்எஸ்எஸ்-விஎச்பி தலைமையில் நடத்தப்பட்ட ராமர் கோவில் இயக்கத்தின் இலக்காக இருந்த பாபர் மசூதி அமைந்துள்ள அயோத்தி, உத்தரப்பிரதேசத்தில் கலவரத்தின் மையப்புள்ளியாக இருந்தது. அயோத்தியில் பாபர் மசூதி, வாரணாசியில் க்யான்வாபி மசூதி மற்றும் மதுராவில் ஈத்கா ஆகிய மூன்று இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ள இடங்கள் இந்துக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென விஷ்வ இந்து பரிஷத் கூக்குரல் எழுப்பியது. அயோத்தியில் ராமர் கோவில், காசியில் சிவன் கோவில் மற்றும் மதுராவில் கிருஷ்ணர் கோவில் ஆகியன கட்டப்பட்டுள்ளன. 

வாரணாசி - வகுப்புவாத வன்முறைக்கான இலக்கு                   

                இவ்வாறாக, வாரணாசி நகரம் இந்துத்துவா வகுப்புவாத சக்திகளின் முக்கிய இலக்கானது. அதுவரை வாரணாசி நகரமானது வகுப்புவாத சக்திகளின் செல்வாக்கிற்கு அப்பாற்பட்டதாக இருந்தது. வாரணாசி நகரத்திலும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளிலும் மதச்சார்பற்ற அரசியல் சக்திகளே செல்வாக்கினைப் பெற்றிருந்தன. எனினும், ராமஜென்மபூமி இயக்கத்தின் ஒரு பகுதியாக ஆர்எஸ்எஸ் அமைப்பு தனது ஷிலபூஜன் யாத்திரையை துவங்கிய பின்பு இந்நிலைமை மாறிப் போனது. 1989ல் இந்நகரத்தில் முதன்முறையாக மதமோதல் ஏற்பட்டது. நவம்பர் 1991ல் அடுத்த கட்ட மதக்கல வரம் நடைபெற்றது. நவம்பர் 8ம் தேதி நடை பெற்ற சம்பவத்தில் ஒரு மதத்தினைச் சார்ந்தமக்கள் கொல்லப்பட்டனர், இதற்கு பழி வாங்கும் விதமாக நவம்பர் 13 அன்று மீண்டும் படுகொலைகள் நிகழ்ந்தன.
              இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியான மதன்புராவில் காவல் துறை நுழைந்து, அங்கு வசித்து வந்த பிரபல மருத்துவரான டாக்டர் அனீஸ் என்பவரை வெளியே இழுத்து வந்து அவரை அடித்துநொறுக்கியது. பின்னர் காவல் துறையின் பாதுகாப்பில் இருந்தபோது அவர் உயிரிழந்தார். இந்தவன்முறை சம்பவத்தின்போது கிட்டத்தட்ட 50 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதியன்று பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நடைபெற்றதற்கு பிறகு வந்த ஆண்டில் இந்நகரத்தில் மக்கள் மதரீதியாக பிளவுபடுவது உச்சகட்டத்தினை எட்டியது. விஎச்பி மற்றும் பஜ்ரங்தள் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் பாபர்மசூதி இடிப்பு சம்பவம் நடைபெற்றதனையடுத்து தொடர்ச்சியாக வன்முறையில் ஈடுபட்டனர். “ஹர ஹர மகாதேவ”, “அல்லாஹு அக்பர்” ஆகிய முழக் கங்களின் பின் இரு மதத்தை சார்ந்தவர்களும் அணிதிரள்வது அதிகரித்தது. வாரணாசி நகரமானது இந்துத்துவா சக்திகளின் கொத்தளமாக மாறிப்போனது.

களத்தில் சிபிஎம்            

                 அடுத்து வந்த அனைத்து மக்களவைத் தேர்தல்களிலும், வாரணாசி தொகுதியில் பாஜக வெற்றி பெற்றது. 2004ம் ஆண்டு மட்டும் காங்கிரஸ் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மதரீதியான பிளவு மக்கள் மத்தியிலே அதி கரித்து வந்த பின்னணியில் 1991, 1996 மற்றும் 1998 ஆகிய ஆண்டுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலில் பாஜகவிற்கு எதிராக போட்டியிட்டது. 1991ல் ஜனதா தள கட்சியின் ஆதரவுடனும், பின்னர் சமாஜ்வாதி கட்சியின் ஆதரவுடனும் தேர்தலில் போட்டியிட்டு, நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் இரண்டாவது இடத்தைப் பெற்றது. அனைத்து சந்தர்ப்பங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது வாரணாசி தொகுதியின் கிராமப்புற பகுதிகளில் கணிசமான வாக்குகளைப் பெற்றது. அதே நேரத்தில் நகர்ப்புற பகுதிகளில் பாஜக பெரும்பாலான வாக்கு களைப் பெற்றது.
                    1996 மற்றும் 1998-99 ஆகிய கால கட்டத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜகபெற்ற செல்வாக்கினை அதனால் தக்க வைத்துக் கொள்ள இயலவில்லை. 2004 மற்றும் 2009 மக்களவைத் தேர்தல்களில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் 80 தொகுதிகளில் வெறும்10ல் மட்டுமே பாஜகவால் வெற்றி பெற முடிந் தது. இழந்த செல்வாக்கினை மீண்டும் பெறு வது என்பது பாஜகவிற்கும், அதன் பிரதம மந்திரி வேட்பாளாரான நரேந்திர மோடிக்கும் மிக முக்கியமான ஒன்றாகும். 16வது மக்களவைக்கான தேர்தல்களை மனதில் கொண்டு, ஆர்எஸ்எஸ்-பாஜகஆகியன உத்தரப்பிரதேசத்தில் மதரீதியான பிளவை உண்டாக்குகிற சூழலை ஏற்படுத் திடுவதுடன், திட்டமிட்டு மதரீதியிலான பதற்றத்தை உருவாக்கிடவும் நீண்ட காலதிட்டத்தை செயல்படுத்தின. மோடியின் முக் கிய தளபதியான அமித் ஷா உத்தரப்பிரதேச மாநில பாஜகவின் பொறுப்பாளராக ஆக்கப்பட்டார். 

உத்தரப்பிரதேசத்தில் மதமோதலுக்கான வரைபடம்                

                    2012 பிப்ரவரியில் நடைபெற்ற தேர்தல்களில் சமாஜ்வாதி கட்சி அபார வெற்றி பெற்று அரசினை அமைத்த பிறகு இந்த வரைபடம் செயல்படுத்தப்பட துவங்கப்பட்டது. சமாஜ்வாதி கட்சி இஸ்லாமியர்களுக்கு ஆதரவான கட்சி என்கிற மிக மோசமான மதரீதியிலான பொய்ப்பிரச்சாரத்தை ஆர்எஸ்எஸ்சும் அதன் பரிவாரங்களும் முழுமூச்சாக கட்டவிழ்த்து விட்டன. பசுக்கள் இஸ்லாமியர்களால் உணவுக்காக கொல்லப்படுவதாகவும், இஸ்லாமிய இளைஞர்கள் இந்துப் பெண்களை ஆசை காட்டி ஏமாற்றுவதாகவும் மற்றும் இதர மதஉணர்வை தூண்டக் கூடிய பிரச்சனைகள் திட்டமிட்டு எழுப்பப்பட்டன.
                  கோசிகலன்பகுதியில் முதல் முறையாக மதமோதல் நடைபெற்றபோது, சிறுபான்மை இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலில் கிராமப்புற பகுதிகளைச் சார்ந்த மக்கள் ஈடுபடுத்தப்பட்டது கவலையளிப்பதாக இருந்தது. அடுத்து வந்த இரண்டாண்டு காலத்தில், பிரதாப்கர், பரேய்லி, சஹரன்பூர், பைசாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாநிலம் முழுவதிலும் அதிக எண்ணிக்கையிலான மதமோதல் நிகழ்வுகள் அரங்கேறின. பைசாபாத்தின் நகர்ப்புற பகுதியில் மோதல் நிகழ்வுகள் நடைபெற்ற பிறகு, அம்மாவட்டத்தின் இதர கிராமப்புற பகுதிகளிலும் மோதல்களை தூண்டிவிடுவதற்கான முயற்சிகளும் அதே சமயத்தில் மேற்கொள்ளப்பட்டன. இறுதியாக செப்டம்பர் 2013ல் முசாபர்நகர் மதக்கலவரம் நடைபெற்றது.
                பல நூறாண்டுகளாக ஜாட் பிரிவு மக்களும் இஸ்லாமியர்களும் ஒன்றாக வசித்து வந்த கிராமங்களில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள், கிராமப்புற மக்களை மதரீதியாக அணிதிரட்டுவதில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் வெற்றி பெற்றுள்ளதையே வெளிப்படுத்தின. அதுவரை உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற மதமோதல் நிகழ்வுகள் எல்லாம் நகர்ப்புற பகுதிகளையே மையமாகக் கொண்டு நடைபெற்று வந்தன. 2011 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற மதரீதியிலான வன்முறைகள் என்பன, 1990 களின் துவக்க ஆண்டுகளில் நடைபெற்ற அதிர்ச்சியில் உறையச் செய்த மதமோதல் நிகழ்வுகளுக்குப் பிறகு மாநிலம் முழுவதிலுமாக முதன்முறையாக நடைபெற்ற மோதல் நிகழ்வாகும். இப்படித்தான் மோடியின் நுழைவிற்கான சூழல் ஏற்படுத்தப்பட்டது. 2013ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதியன்று மோடிவாரணாசியில் பேரணி ஒன்றை நடத்தினார். கூட்டமேடையின் பின்னணியில் சிவபெருமானின் மிகப்பெரிய உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது.
          சோமநாதரின் மண்ணிலிருந்து பாபா விஷ்வநாத்தின் பூமிக்கு வந்திருப்பதாக அக்கூட்டத்தில் மோடி பேசினார். சோமநாத்திலிருந்துதான் மோடி தனது ரதயாத்திரையைத் துவக்கினார். “ஹர ஹர மகாதேவ்” என்கிற மதரீதியான மந்திரத்தைப் போல் “ஹர ஹர மோடி” என்ற மந்திரத்தை பாஜக தொண்டர்கள் உச்சாடனம் செய்தனர். இவர்களது இந்த நடவடிக்கையானது, அந்நகரத்தில் வசித்துவரும் இஸ்லாமியர்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு 1992ல் இந்துத்துவா வெறியர்கள் உச்சாடனம் செய்த முழக்கங்களை நினைவுபடுத்துவதாக இருந்தது. 

மிகப்பெரிய யுத்தம்                   

                    வாரணாசியில் இருந்து பாஜகவின் வேட்பாளரான மோடி தேர்தலில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது, உத்தரப்பிரதேசத்தில் அரங்கேற்றிட வேண்டிய நாடகத்திற்கு சங்பரிவார் எழுதிய கதை வசனத்தின் ஒரு பகுதியே ஆகும். இது பீகாருக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவர்களது இந்துத்துவா நிகழ்ச்சி நிரலானது உத்தரப்பிரதேச மாநில மக்களை கடந்த 15 ஆண்டுகளாக உற்சாகப்படுத்திடவில்லை என்பது உண்மை யாகும். இந்த உண்மையின் பின்னணியில், இந்துத்துவா நிகழ்ச்சி நிரல் குறித்து வெளிப்படையான பிரச்சாரம் எதுவும் இருக்காது என்றபோதும், அதே அரசியல் ரீதியிலான செய்தி ஒளிவுமறைவாகவும், இரகசியமாகவும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. ராமர் கோவிலுக்கான தீவிரமான இந்துத்துவா பிரச்சாரம் முன்னெடுத்துச் செல்லப்பட்டபோது பார்க்கப்பட்ட பழைய முகங்கள் எல்லாம் இன்று இவர்களுக்கிடையேயான சண்டை சச்சரவுகளில் பின்னுக்குப் போயுள்ளனர். மீண்டும் பாஜகவில் இணைந்துள்ள கல்யாண் சிங் தனது மகனை வேட் பாளராக நிறுத்தியுள்ளார்.
              உமா பாரதியும், சாக்ஷி மஹராஜூம் கூட இம்மாநிலத்திலிருந்து தேர்தல்களில் போட்டியிடுகின்றனர். “இந்து தேசியவாதி” என தன்னைத் தானே பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் மோடிதான் இந்த யுத்தத்தினை நடத்திட இவர்களால் தேர்வு செய்யப்பட்ட நபர் ஆவார். எனவே, இது ஏதோ வாரணாசியில் மோடிக்கு எதிராக நடைபெறும் போராட்டம் மட்டுமல்ல. இந்திய நாட்டின் மிகப்பெரிய மாநிலத்திலும், நாடு முழுவதிலும் மீண்டும் தங்களது ஆதிக்கத்தை ஏற்படுத்திட முயலும் ஒட்டுமொத்த இந்துத்துவா சக்திகளுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டமாகும். வாரணாசி தொகுதியில் போட்டியிடும் மோடிக்கு எதிராக பல்வேறு கட்சிகள் தங்களது வேட்பாளர்களை களத்தில் இறக்கிடும். இதில் சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ் மற்றும் முக்தர் அன்சாரியின் குவாமி ஏக்தா தள் ஆகிய கட்சிகளும் அடங்கும். 2009ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளாராகப் போட்டியிட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்த அன்சாரி, மாபியா கும்பலை நடத்தி வருபவர். தற்போது இவர் சிறையில் இருக்கிறார். இத்தகையதொரு சூழலில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.
             இந்தத் தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது வேட்பாளரின் பெயரை ஒரு மாதத்திற்கு முன்பே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. ஒரு வலுவான பொதுவான காங்கிரசல்லாத மதச்சார்பற்ற வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்திடுவதற்கான இசைவு ஏற்பட்டிருக்குமேயானால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது தேர்தல் களத்திலிருந்து தனது வேட்பாளரை திரும்பப் பெற்றிருக்கும். அத்தகையதொரு கூட்டு மேடை என்பது இல்லாத சூழலில், வாரணாசி தொகுதியில் இடதுசாரிக்கட்சியின் போட்டியிடுவதும், ஆர்எஸ்எஸ்-பாஜகவின் சதித்திட்டத்தை அம்பலப்படுத்திடு வதற்கான அரசியல் பிரச்சாரத்தை வலுவான முறையில் நடத்திடுவதும் அவசியமாகும்.
தமிழில் : எம்.கிரிஜா