சனி, 12 ஏப்ரல், 2014

மனைவியைக் கைவிட்டு மறைத்த மோடி...!

          
                 பிரதமர் கனவில் மிதக்கும் நரேந்திர மோடி தன் மனைவியைக் கைவிட்டு மறைத்தது மட்டுமல்லாது,   45 ஆண்டுகளாக வாழ்வாதார உதவி கூட செய்யாமல் தவிக்கவிட்ட கொடுமை - இதை தேர்தல் ஆணையம் செவ்வனே வேடிக்கைப் பார்க்குமா...? அல்லது மோடி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்குமா...? என்பது தான் இன்று நாட்டிலுள்ள நடுநிலையாளர்களின் - பொதுமக்களின் கேள்வியாக இருக்கிறது.
               பிரதமர் கனவோடு வலம் வரும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் நரேந்திர மோடி, தனக்கு திருமணமான தகவலை கடந்த தேர்தல்களில் மறைத்தது மட்டுமின்றி, மனைவியின் பெயரை குறிப்பிடாமல் இருந்தது பற்றி அரசியல் அரங்கில் கடும் கண்டனக்குரல் எழுந்துள்ளது.
           அதுமட்டுமின்றி தற்போது வரை மனைவியோடு சேர்ந்து வாழாமல் அவரை கைவிட்டது மட்டுமின்றி, அவருக்கு வாழ்வாதார உதவி கூட கொடுக்காமல் கொடுமைப்படுத்தியிருப்பதும் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. மோடிக்கு தற்போது 62 வயதாகிறது. 45 ஆண்டுகளுக்கு முன்பே, ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரச்சாரகர் ஆகும் பொருட்டு மோடி தனது மனைவியை கைவிட்டுச் சென்றுவிட்டார். 1968-ஆம் ஆண்டிலேயே  மோடியின் சொந்த ஊரான வத்நகருக்கு அருகில் உள்ள பிரம்மன்வாடா என்ற கிராமத்தைச் சேர்ந்த யசோதாபென் என்ற பெண்ணுக்கும் மோடிக்கும் திருமணம் நடந்திருக்கிறது.
         திருமணம் நடந்த போது யசோதா பென்  13 வயது மட்டுமே நிரம்பிய சிறுமி ஆவார். மோடிக்கு வயது 17. இதன் பின்னர் யசோதாபென்னை நிராதரவாக விட்டுவிட்டு மோடி சென்று விட்டார். இதுவரையிலும் அப்பெண்ணுக்கு எந்தவிதமான வாழ்வாதார உதவியும் மோடி செய்யவில்லை.
           இத்தனைஆண்டுகளாக யசோதா பென், தனது சொந்த கிராமத்தில் தனது மூத்த சகோதரரால் நடத்தப்படும் ஒரு சிறிய மளிகைக்கடையில் வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

   வெளிச்சத்திற்கு வந்த திருமணம் : 

              இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு குஜராத்தின் வதோதரா தொகுதியில் போட்டியிடுவதற்காக நரேந்திர மோடி வேட்புமனுத்தாக்கல் செய்தார். அந்த வேட்புமனுவில் மனைவி என்ற இடத்தில் யசோதா பென்னின் பெயரை நிரப்பி அளித்துள்ளார். இதைத்தொடர்ந்தே மோடியின் திருமணமும், அவர் தனது மனைவியை கைவிட்டு வந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது. ஆனால் இதற்கு முன்பு நடந்த தேர்தல்களில் நரேந்திர மோடி திருமணமானவர் என்றோ, மனைவியின் பெயரையோ குறிப்பிடவில்லை. எனவே இது தற்போது சட்டரீதியான பிரச்சனையாக மாறியுள்ளது. தேர்தல் ஆணையம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி ஒருபுறம் புகார் பதிவு செய்துள்ளது.
           தேர்தல் ஆவணங்களில் தனது கடந்த கால வாழ்க்கை குறித்த உண்மைகளை நரேந்திர மோடி திட்டமிட்டு மறைத்துள்ளார் என தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ள புகாரில் கேள்வி எழுப்பியிருப்பதாக காங்கிரசின் மூத்த தலைவர் கபில்சிபல் தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளியன்று தெரிவித்தார்.

  தேசிய மகளிர் ஆணையம் கேள்வி : 

           மோடியின் திருமணம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. அதன் உறுப்பினர் நிர்மலா சமந்த் கூறும்போது, ‘‘இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. நரேந்திரமோடியின் மனைவி தனது சொத்துரிமை பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் இழந்துள்ளார். ஆனால் மோடி பெண்கள் உரிமைகளுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார். தனது வேட்பு மனுவில் அவர் தனது சொத்து விவரங்கள், குடும்ப உறுப்பினர்கள் பற்றிய தகவல்களை தெரிவித்துள்ளார்.
              ஆனால் முதல் முறையாக தனதுமனைவியின் பெயரை குறிப்பிட வேண்டிய தேவை என்ன? இதற்கு முந்தைய தேர்தல்களில் மனைவியின் பெயரை குறிப்பிடும்படி அவரிடம் தேர்தல் ஆணையம் கட்டாயப்படுத்த வில்லையா? இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்“ என்றார்.

 பிருந்தா காரத் : 

                       இந்த விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், கடும் விமர்சனம் செய்துள்ளார்.
        யசோதா பென்னுடனான தனது திருமணத்தையே மறைத்து பொய் கூறிய மோடியை இந்த நாடு நம்புகிறதா....? என்று ‘சிபிஐ(எம்) ஸ்பீக்’ என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ள பிருந்தா காரத், தன்னை நம்பி திருமணம் செய்து கொண்டபெண்ணை ஏமாற்றி கைவிட்டது மட்டுமல்ல, இத்தனை ஆண்டுகாலமாக அப்பெண்ணுக்கு வாழ்வாதார உதவியைக்கூட மோடி அளிக்கவில்லை என்பது இந்த நாட்டின் பெண்களுக்கு ஏற்பட்ட அவமானம் என்றும் எழுதியுள்ளார்.
           ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும் என்று மோடி கூறியதன் உண்மை அர்த்தம் என்ன என்றும் பிருந்தா காரத் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜி.ராமகிருஷ்ணன் :

                இந்நிலையில், மனைவியின் பெயரையே மறைத்த மோடி போன்ற பொய்யரிடமா இந்த நாட்டை ஒப்படைக்கப்போகிறோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
        தானிக்கோட்டகம் கிராமத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், “3 முறை குஜராத் சட்டமன்றத்திற்குப் போட்டியிட்டு வெற்றிபெற்ற மோடி தேர்தல் விண்ணப்பத்தில் எல்லாம் திருமணம் ஆகாதவர் என்றே பொய் சொல்லியிருக்கிறார். தற்போது ஏதோ பயம் வந்து, திருமணம் ஆகிவிட்டது மனைவி இருக்கிறார் என்று உண்மையைச் சொல்லியிருக்கிறார். 13 வயதுடைய பெண்ணைத் தனது 17 வயதில் மணந்ததாகச் சொல்கிறார். இந்தத் திருமணமே சட்டப்படி செல்லாதே. இவர் மோடியா? மோசடிப் பேர்வழியா? இப்படிப்பட்ட பொய்யரிடம்- மதவெறி பிடித்த மோசடிக்காரரிடம் இந்த தேசத்தை ஒப்படைக்கலாமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இப்படிப்பட்ட மோடியை முன்னிறுத்தும் பாஜகவிற்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள கட்சிகள் பல்லக்குத் தூக்குவதையும் அவர் கடுமையாக சாடினார்.

கருத்துகள் இல்லை: