செவ்வாய் கிரகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய் கிரகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

''மங்கல்யான்'' - இந்தியாவிற்கு பெருமையளிக்கும் சாதனை...!

         
 
            ''மங்கல்யான்'' - இந்திய விண்களம் நேற்று முன் தினம் செவ்வாய் கிரகத்தை நெருங்கியது. செவ்வாயும் நாம் தொட்டுவிடும் தூரம் தான் என்பதை நமது விஞ்ஞானிகள் நிருபித்துக்காட்டியிருக்கிறார்கள். சிவப்பு கிரகத்தை வெற்றிகரமாக எட்டிப்பிடித்த நான்காது நாடாக இந்தியா பெருமையடைகிறது. இதற்கு முன்னர் சோவியத் யூனியன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகவாண்மை போன்ற நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேருகிறது. ஆனால் மேலே சொன்ன மூன்று நாடுகளுமே செவ்வாயை நோக்கிய தங்களது முதல் மற்றும் அடுத்தடுத்த பயணங்களில் தங்களது இலக்கை எட்டமுடியாமல் தோல்வியடைந்து தொடர் முயற்சிக்குப் பின்னரே வெற்றியடைந்தன. ஆனால் நமது நாடு மட்டுமே தனது முதல் முயற்சியிலேயே தனது இலக்கை சர்வசாதாரணமாக எட்டிப்பிடித்து சாதனைப்படைத்து விண்வெளி வரலாற்றில் முத்திரைப்படைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல நமக்கு முன்னரே ஜப்பான், சீனா போன்ற முன்னேறிய நாடுகளெல்லாம் செவ்வாயை நோக்கிய தங்களது முயற்சியில் இலக்கை அடையமுடியாமல் தொல்வியடைந்திருகின்றன என்பது நமக்கு மேலும் பெருமை சேர்க்கும் செய்தியாகும். 
                மேலும் இந்த மங்கல்யான் விண்கலத்தை வடிவமைத்து விண்ணில் செலுத்த, இஸ்ரோ நிறுவனம் செய்த செலவுகளை கணக்கிட்டால், மற்ற நாடுகள் இதற்காக செய்த செலவுகளை காட்டிலும் மிக மிக குறைவு என்பது மட்டுமல்ல. நம் நாட்டில் உத்திரபிரதேசத்தில் அன்றைய முதலமைச்சர் மாயாவதி தனக்காக சிலை செய்து வைத்த செலவை காட்டிலும், குஜராத் மாநிலத்தில் இன்றைய பிரதமர் நரேந்திரமோடியின் ''கனவு திட்டமான'' வல்லபாய் பட்டேல் சிலை வைக்க ஆகும் செலவை காட்டிலும்  மங்கல்யானுக்கு ஆன செலவு என்பது மிகவும் குறைவு  என்பதும் குறிப்பிடத்தக்கது. மங்கல்யான் பூமியிலிருந்து 68கோடி கிலோமீட்டர் தூரத்தில் உள்ள செவ்வாய் கிரக சுற்றுப்பாதையை சென்றடைய இஸ்ரோ செய்த செலவு ரூ.450 கோடி மட்டுமே. அனால் மாயாவதி சிலைக்கு ஆன செலவோ ரூ.685 கோடி என்பதும், பட்டேல் சிலைக்கு ஆகும் செலவோ ரூ.2600 கோடி என்பதும் கவனிக்கத்தக்கது.  
               உலகமே வியக்கும் வகையில் சிறப்புப்பெற்ற இந்த மாபெரும் வெற்றிக்குப்பின்னால் இஸ்ரோவில் பணிபுரியும் பல இந்திய விஞ்ஞானிகளின் அறிவும்,  ஆற்றலும், திறமையும், உழைப்பும் உள்ளன என்பதை யாராலும் மறுக்கமுடியாது. ஆண் மற்றும் பெண் விஞ்ஞானிகள் என இருபாலரும் இணைந்தே இந்த வெற்றிக்கு பாடுபட்டிருக்கின்றனர். ஆனால் ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் எப்போதும் போல் இஸ்ரோவின் இந்த வெற்றிக்குப் பின்னால் ஆண்கள் மட்டுமே இருப்பது போல் காட்டுகின்றன. வழக்கம் போல் இங்கேயும் பெண்களின் அறிவும், ஆற்றலும், திறமையும், உழைப்பும் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன என்பது தான் வருத்தமான விஷயமாக இருக்கின்றன. மங்கல்யான் வெற்றிக்குப் பின்னால் பல பெண்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரோவில் பணிபுரியும் மொத்தமுள்ள விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களில்  இருபது  சதவீதத்திற்கும் அதிகமானவர்கள்   பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே சுமார் 14,246 பெண்களின் பங்களிப்பும் மங்கல்யான் வெற்றியில் இருக்கிறது என்பதும்  நமக்கு மேலும் பெருமை சேர்க்கும் விஷயமாகும். மங்கல்யான் வெற்றிகரமாக செவ்வாயின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டவுடன் அந்த வெற்றிக்கு பங்களித்த அங்கே கூடியிருந்த பெண்களும் தங்களுக்குள் கைத்தட்டி, கைக்கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். அவர்களையும் இந்த நேரத்தில் நாம் நெஞ்சார பாராட்டவேண்டும்... வாழ்த்தவேண்டும்.

வெள்ளி, 8 நவம்பர், 2013

மங்கள்யான் - செவ்வாயும் நமக்கு தொட்டுவிடும் தூரம் தான்....!

          
            இந்தியாவின் நீண்ட நாளைய கனவை நமது விஞ்ஞானிகள் நனவாக்கியிருக்கிறார்கள். நாம் முன்பு விண்ணைத் தொட்டோம். பின் நிலவைத் தொட்டோம். இப்போது செவ்வாயும் நமக்கு தொட்டுவிடும் தூரம் தான். விண்வெளி ஆராய்ச்சியில் ரஷியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளுடன் போட்டிப்போடும் அளவிற்கு இந்தியாவும் வளர்ந்திருக்கிறது என்பதில் நமக்கெல்லாம் பெருமையளிக்கிறது.

             நேற்று முன் தினம் இந்தியா செவ்வாய் கிரகத்தை நோக்கி அனுப்பிய ''மங்கள்யான்'' செயற்கைக்கோள் என்பது இந்திய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல் என்றே சொல்லவேண்டும். இதற்காக பாடுபட்ட ''இஸ்ரோவில்'' பணிபுரியும்   நம் இந்திய விஞ்ஞானிகள் அனைவரையும் நெஞ்சாரப் பாராட்டவேண்டும். அவர்களின் கூரிய விஞ்ஞான அறிவையும், அயராத உழைப்பையும், திறம்பட்ட கூட்டுமுயற்சியையும் கண்டிப்பாக பாராட்டியாகவேண்டும்.
             இந்தியாவின் சொந்த முயற்சியால் செவ்வாய் கிரகத்திற்கு ''மங்கள்யான்'' செயற்கைக்கோளை உலக நாடுகள் அனைத்தும் வியந்துபோயின. உலக அரங்கில் இந்தியா உயர்ந்து நிற்க, உலகம் முழுதும் நம்மை அண்ணார்ந்து பார்க்கின்றனர். மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை அடைய இன்னும் பத்து மாதங்கள் ஆகும் என சொல்லப்படுகிறது. ஆனால் மங்கள்யான் செவ்வாயின் மேற்பரப்பில் இறங்கப்போவதில்லை என்றும்,  அதன் சுற்றுப்பாதையில் மிதந்தபடி செவ்வாய் கிரகத்தை பற்றி இதுவரை அறியப்படாத  தகவல்களை மங்கள்யான் சேகரித்து அனுப்பும் என்றும் சொல்லப்படுகிறது.
              மங்கள்யானுடன் லைமன் ஆல்பா போட்டோமீட்டர் உள்பட 5 உபகரணங்கள் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் ஒன்று மீத்தேன் வாயு இருப்பைக் கண்டறியும் என்றும், செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் இருப்பதைக் கண்டறிவதுதான் மங்கள்யானின் முக்கிய நோக்கமாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். மங்கள்யான் மீத்தேன் இருப்பை உறுதிசெய்தால், பின் அங்கு மனிதர்கள் வாழக்கூடிய சூழலையும் ஆய்வு செய்வதும் மங்கள்யான் திட்டத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.
           இந்த திட்டத்தில் இரண்டு கேள்விகள் நமக்கு எழுகின்றன.
           ஒன்று... செவ்வாய் கிரகத்திற்கு மங்கல்யானை அனுப்பியதால், தனிப்பட்டமுறையில் இந்திய மக்களுக்கு என்ன பயன் விளையும்....? என்ற மிகமுக்கியமான கேள்வி எழுகிறது. இஸ்ரோவின் தலைவர் ராதாகிருஷ்ணன்,  "இது ஒரு தேசியப் பெருமிதம்" என்று கருத்து சொல்கிறார். ஆனால் இன்னொரு பக்கம் அதன் முன்னாள் தலைவர்  ஜி.மாதவன் நாயர்,  "இந்தத் திட்டம் நாட்டுக்கு வீண் செலவு" என்று வேறுவிதமாக கருத்து சொல்கிறார். ஆனால் அந்த இரண்டு பேருடைய கருத்துக்களும் சரியானதே. ஏற்புடையதே.
            விண்வெளி ஆராய்ச்சிக்கு நம் நாடு செய்யும் செலவு என்பது மற்றைய நாடுகளோடு ஒப்பிட்டுப்பார்க்கும் போது மிக மிக குறைவே. எனவே ரூ.450 கோடி செலவு செய்து அனுப்பப்பட்ட மங்கள்யான் ஒரு தேசியப் பெருமிதம் தான். இந்திய விஞ்ஞானிகள் மெச்சத்தகுந்த அறிவியல் ஆற்றல் படைத்தவர்கள். இது போன்ற அறிவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சிகளை ஊக்குவித்தால் தான், நம் நாட்டிலிருக்கும் அறிவியல் ஆற்றல் படைத்த இளம் விஞ்ஞானிகள் வாய்ப்பை தேடி வேறு நாட்டிற்கு படைஎடுக்கமாட்டார்கள். என்றாலும், இந்தியா போன்ற வளரும் நாட்டின் இன்றைய சூழ்நிலையில் - தீர்க்கப்படாத மக்களின் பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் போது இந்த திட்டம் ஒரு வீண் செலவோ என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. இந்தியாவிலேயே அனைத்து மக்களுக்கும்  சுகாதாரமான குடிநீர் கிடைக்காமல், 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் உண்ண உணவில்லாமலும், தங்க இடமில்லாமலும், மின்சார வசதியில்லாமலும், கழிப்பறை வசதி இல்லாமலும் வாழமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கையில், செவ்வாயில் மனிதன் வாழமுடியுமா என்ற ஆராய்ச்சி நமக்கெல்லாம் நகைக்கும்படித்தான் இருக்கிறது. இந்தியாவிலேயே நிம்மதியா வாழமுடியலையாம். இதுல செவ்வாயில போயி என்னத்த வாழறது என்ற இரண்டாவது கேள்வியும் நமக்குள் எழுகிறது.