அந்நிய நேரடி முதலீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அந்நிய நேரடி முதலீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 23 ஜனவரி, 2015

ஒபாமாவுக்கு இன்சூரன்ஸை படையல் வைக்கும் மோடி...!


 இன்று தீக்கதிர் நாளிதழில் பிரசுரிக்கப்பட்ட நான் எழுதிய கட்டுரை :-        

 இன்சூரன்ஸ் அவசர சட்டம் - அன்றும் இன்றும்           
           
                   1956 - ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ஆம் தேதி வியாழக்கிழமை மாலை - புதுடெல்லி அகில இந்திய வானொலியில் ஓர்  அறிவிப்பு வந்தவண்ணம் இருக்கிறது. ''இன்னும் சற்று நேரத்தில் நமது நாட்டின் நிதியமைச்சர் திரு.சி.டி.தேஷ்முக் வானொலியின் மூலம் மக்களிடம் உரையாற்றப்போகிறார். அவரது உரையை நாட்டின் அனைத்து வானொலி நிலையங்களும் அஞ்சல் செய்யும்'' என்ற அறிவிப்பு மட்டும் அவ்வப்போது  இடைவெளி விட்டு அறிவிக்கப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் எதைப்பற்றிப் பேசப்போகிறார் என்ற தகவல் அந்த அகில இந்திய வானொலி  நிலைய இயக்குனருக்குக்கூட தெரிவிக்கப்படவில்லை. இன்னும் சொல்லவேண்டுமென்றால், நேருவும்  தன் அமைச்சரவையில் உள்ள மற்ற அமைச்சர்களுக்கே கூட தேஷ்முக் எதைப்பற்றி பேசப்போகிறார் என்ற தகவலை  தெரிவிக்கவில்லை. ஆனால்  அறிவிப்பு மட்டும் வந்துகொண்டே இருக்கிறது. மக்களும் என்னவென்று புரியாமல் ஆவலாய் காத்திருக்கிறார்கள்.
              இரவு சரியாக 8.30 மணி - மத்திய நிதியமைச்சர் வானொலியில் பேசினார். மக்கள் எல்லோரது காதுகளும் வானொலியில் பொருந்தியிருக்கிறது. பேசத்தொடங்கிய நிதியமைச்சர் வானொலியை கேட்டுக்கொண்டிருந்த இந்திய மக்களின் காதுகளில் தேனைப் பாய்ச்சினார். ''இந்த நிமிடம் முதல் தனியார்வசமிருக்கின்ற இன்சூரன்ஸ் துறை அவசர சட்டத்தின் மூலம் தேசவுடைமை செய்யப்படுகிறது'' என்ற வரலாற்று சிறப்புமிக்க செய்தியை அறிவித்தார். அந்த நேரத்தை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் தங்களது கணக்கு வழக்குகளை முடித்து அலுவலகங்களை மூடும் வரையில் நேருவும், தேஷ்முக்கும் காத்திருந்தார்கள். அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டதை உறுதி செய்யப்பட்டபிறகே நிதியமைச்சர் வானொலியில் அறிவித்தார். அதற்காகவே அவர்கள் இரவு 8.30 மணி வரை  காத்திருக்கவேண்டியிருந்தது. நேரு இந்த அவசரசட்டத்தை பற்றிய அறிவிப்பை வெளியிடுவதில் அவசரம் காட்டாமல், மிகவும் புத்திசாலித்தனத்துடனும் நிதானத்துடனும் செயல்பட்டார். அனைத்து தனியார் இன்சூரன்ஸ் அலுவலகங்களும் தங்களது  கணக்கு வழக்குகளை முடித்துவிட்டு அலுவலகத்தை மூடியபிறகு, அவசர சட்டத்தின் அறிவிப்பு வானொலியில் வெளியிடப்பட்டது. அப்படி அறிவிப்பு வெளியானவுடன், அதுவரையில் இரகசியமாக தயார்நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மத்திய காவல்துறையினர் பூட்டப்பட்ட தனியார் இன்சூரன்ஸ் நிறுவன அலுவலகங்களை கைப்பற்றி சீல் வைத்துவிட்டார்கள். அதனால் அந்த நிறுவனங்கள் அதுவரை சேர்த்துவைத்திருந்த  சொத்துகளும், மக்களின் நிதியும் சேதாரம் இல்லாமல் காப்பாற்றப்பட்டன.  இந்த விஷயத்தில் நேரு மற்றும் தேஷ்முக் இருவரும் சேர்ந்து செயல்படுத்திய தந்திரம் பாராட்டுதற்குரியது.

ஏன் அந்த அவசர சட்டம்...?              

                 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி அன்று தேசம் சுதந்திரம் அடைந்தபிறகு சுதந்திர இந்தியாவில் 245 தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் டாட்டா, பிர்லா, கோயங்கா போன்ற அன்றைய பெருமுதலாளிகளால் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டன. இதில் பெரும்பாலான தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு  தரவேண்டிய உரிமங்களை சரியான முறையில் தருவதில்லை என்பது மட்டுமல்ல. குவிந்திருக்கும்  மக்களின்  சேமிப்பு நிதியை  ஒரு நாள் இரவோடு இரவாக சுருட்டிக்கொண்டு கம்பெனியையே  காலி செய்து ஊரைவிட்டே ஓடிவிடுவார்கள். மக்களை ஏமாற்றுவதும், அவர்கள் பணத்தை கொள்ளையடிப்பதும் தான் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி முதலாளிகளின் வேலையாக இருந்தது. அப்போது தான் 1907-ஆம் ஆண்டு அன்றைய கல்கத்தாவில் ரவீந்தரநாத் தாகூரினால் தொடங்கப்பட்ட ஹிந்துஸ்தான் கோ-ஆபரேடிவ் லைப் அஷ்யூரன்ஸ் சொசைட்டி என்ற இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை செய்துவந்த ஊழியர்கள் தோழர்.சரோஜ் சவுத்ரி போன்ற தலைவர்களின் தலைமையில் மற்ற இன்சூரன்ஸ் கம்பெனிகளில் பணிபுரிந்துவந்த ஊழியர்களையும் இணைத்து, 1951-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதியன்று அன்றைய பம்பாயில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் என்ற தொழிற்சங்கத்தை தொடங்கினார்கள். ஊதிய உயர்வு வேண்டும், போனஸ் வேண்டும், பதவி உயர்வு வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்து அந்த தொழிற்சங்கத்தை தொடங்கவில்லை. ''இன்றைக்கு நாட்டிலிருக்கும் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி முதலாளிகள் தனது வாடிக்கையாளர்களுக்கு சரியான முறையில் உரிமங்களை தருவதில்லை. மக்களின் சேமிப்பு நிதியை கொள்ளையடித்து சென்றுவிடுகிறார்கள். அதனால் தனியார்வசமிருக்கும் இன்சூரன்ஸ் துறை தேசவுடைமை செய்யப்படவேண்டும்'' என்றக் கோரிக்கையுடன் தான் அன்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தை தொடங்கினார்கள்.
              அதேப்போல் பாராளுமன்றத்திலும் அன்றைய ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியும் இதே கருத்தை வலியுறுத்தி இன்சூரன்ஸ் துறை தேசவுடைமை செய்யப்படவேண்டும் என்று போராடினார்கள். அதே நேரத்தில் இன்னொரு பக்கம் Dr.அம்பேத்கர் அவர்களும் இன்சூரன்ஸ் துறை தேசவுடைமையை வற்புறுத்தினார். அன்றைய பிரதமர் நேருவும் முதலாளிகளின் பக்கம் தான் என்பதால் இந்த கோரிக்கைகளையோ, போராட்டங்களையோ அவர் கருத்தில் கொள்ளவில்லை. ஆனால் 1955-ஆம் ஆண்டு இறுதி வாக்கில் நேரு இன்சூரன்ஸ் துறை தேசவுடைமைப் பற்றி யோசித்தார். ஆனால் தனியார் முதலாளிகள் மக்களின் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள். வாடிக்கையாளர்களை ஏமாற்றுகிறார்கள் என்றெல்லாம் அவர் சிந்திக்கவில்லை. மக்களுக்கு இன்சூரன்ஸ் சேமிப்பின் மீது ஏராளமான நம்பிக்கை இருக்கிறது. 245 தனியார் கம்பெனிகளிலும் நிறைய பேர் சேருகிறார்கள். அனைத்து கம்பெனிகளிலும் மக்களின் சேமிப்பு நிதி நிறைய குவிகிறது. இந்த 245 கம்பெனிகளும் ஒரே அரசுத்துறை நிறுவனமாக இருந்தால் குவியும் மக்களின் சேமிப்பு நிதியை அரசின் நலத்திட்டப் பணிகளுக்கு பயன்படுத்தலாமே என்ற நோக்கத்தோடு தான் நேரு தேசவுடைமையை  பற்றி யோசித்தார். கிராமப்புற மக்களுக்கும் இன்சூரன்ஸ் -இன் பலன்களை கொண்டு சேர்க்கலாம் என்பதும் தேசவுடைமைக்கான இன்னொரு காரணமாக நேரு யோசித்தார்.

வரலாற்று சிறப்புமிக்க நாள்                

               ஆனால் நேரு தனது யோசனையை தனது கேபினெட் கூட்டத்தை கூட்டி தெரிவிக்கவில்லை. காரணம் தனது மந்திரிகளும் முதலாளிகளின் பக்கம் தான் நிற்பார்கள். அதனால் தனது இந்த முயற்சியை தடுத்து நிறுத்திவிடுவார்கள் என்ற அச்சத்தில், அவரது நிதியமைச்சர் திரு.சி.டி.தேஷ்முக் அவர்களிடம் மட்டுமே தெரிவித்தார். திரு.தேஷ்முக் அவர்களும் இன்றைய நிதியமைச்சர்களை போலல்லாமல், தேசத்தின் மீதும், மக்களின் மீதும் அக்கறையுள்ள நிதியமைச்சர் என்பதால் நேருவின் யோசனையை வரவேற்றார். ஏற்றுக்கொண்டார். பிறகு தான் நேரு மற்றும் தேஷ்முக் இருவர் மட்டும் இந்த யோசனையை தங்களுக்குள் இரகசியமாக வைத்திருந்து,  முதலில் மக்களிடம் தெரிவித்துவிடவேண்டும். அப்போது தான் இந்த முயற்சியை யாராலும் தடுக்கமுடியாது என்று இருவருமாக முடிவெடுத்தார்கள். அந்த நாள் தான் 1956 - ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 - ஆம் தேதி என்பதை மக்களின் மீது அக்கறையுள்ள யாராலும் மறக்கமுடியாத நாள். ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள். இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளில் தான் தனியார்வசமிருந்த இன்சூரன்ஸ் துறை ''அவசர சட்டத்தின்'' மூலம் தேசவுடைமை செய்யப்பட்டது. அதன் பிறகு பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு அனைவரின் வரவேற்புடனும், பாராட்டுகளுடனும் நிறைவேற்றப்பட்டு, வெறும் ரூ.5 கோடி மத்திய அரசின் முதலீட்டுடன் ''இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம்'' அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி தொடங்கப்பட்டு, கடந்த 58 ஆண்டுகளாக  மக்கள் நலப்பணிகளையும், தேச நலப்பணிகளையும் மிகச் சிறப்பாக மக்களின் பாராட்டுகளோடும், திருப்தியோடும் செய்து ஒரு அரசு நிறுவனமாக திகழ்ந்துவருகிறது. அதன் ஊழியர்களும் எந்த நோக்கத்தோடு சங்கம் அமைத்துப் போராடினார்களோ அதில் சிதைவில்லாமல் அர்ப்பணிப்புணர்வுடன் சேவை கலந்து  பணியாற்றி வருகிறார்கள்.
              வெறும் 5 கோடியில் உருவான எல்.ஐ.சி இன்று ரூ.18,00,000 கோடி அளவிற்கு மக்கள் சொத்துகளை கோபுரமாய் குவித்திருக்கிறது. வங்கியில் ஆயுள் நிதியாக ரூ.16,00,000 கோடி அளவிற்கு சேமித்து வைத்திருக்கிறது. சென்ற ஆண்டு மட்டும் எல்.ஐ.சி மத்திய அரசிற்கு இலாபத்தில் பங்காக (டிவிடெண்ட்) ரூ.1629 கோடிகளை அள்ளிக்கொடுத்திருக்கிறது. இது மத்திய அரசின் 5 கோடி முதலீட்டிற்கானது. ரூ.1629 கோடி என்பது அரசின்  5 கோடி முதலீட்டிற்கு  32,000 சதவீதம் ஆகும். இதுவே ஒரு உலக சாதனையாகும். உலகில் எந்த நிறுவனமும் தன்னுடைய முதலீட்டாளருக்கு தனது இலாபத்தின் பங்காக இவ்வளவு சதவீதம் கொடுத்திருக்கிறார்களா தேடிப்பாருங்கள். அதுமட்டுமல்ல எல்.ஐ.சி கடந்த 58 ஆண்டுகளாக மத்திய அரசிற்கு ரூ.5 கோடிக்காக கொடுத்த மொத்த டிவிடெண்ட்  ரூ.12,500 கோடியை தாண்டும் என்பது மலைப்பானது. இவ்வளவு வளத்திற்கும், வளர்ச்சிக்கும்  எல்.ஐ.சி-யில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் முகவர்களின் அர்ப்பணிப்புணர்வுடனும் சேவை உணர்வுடனும் கூடிய  இலஞ்சமும், ஊழலும் இல்லாத அயராத பணிகளே மிக  முக்கிய காரணமாகும்.

இன்று புதிய அவசர சட்டம் ஏன்....?               

                 இன்றைக்கு இந்திய தேசத்தின் வளங்கொழிக்கும் பொதுத்துறை நிறுவனங்களில் எல்.ஐ.சி-யும் ஒன்று. வெறும் 5 கோடியில் எல்.ஐ.சி என்ற ஒரே இன்சூரன்ஸ் நிறுவனம் இத்தனை வளர்ச்சி பெற்றிருக்கிறது. மக்களின் பங்களிப்போடு கொழுத்து வளர்ந்த இந்திய இன்சூரன்ஸ் துறையை அப்படியே விழுங்கி அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது தனியார்மய - தாராளமய அகோரப்பசியை தீர்த்துக்கொள்ள நினைத்தது. அந்த அகோரப்பசிக்கு 1999 -ஆம் ஆண்டு அன்றைய பாரதீய ஜனதாக்கட்சி தலைமையிலான வாஜ்பாய் அரசு தீனிப் போட்டது. அரசிடம் மட்டுமிருந்த இன்சூரன்ஸ் துறை மீண்டும் தனியாருக்கு திறந்துவிடப்பட்டது. அதில் 26 சதவீதம் அளவிற்கு அந்நிய நேரடி முதலீடும் மனசாட்சியில்லாமல் அனுமதிக்கப்பட்டது. ஆனால் அது ''யானைப்பசிக்கு சோளப்பொறி'' போலானது.   அதனால் அமெரிக்காவின் அகோரப்பசி தீரவில்லை. 100 சதவீதத்தை நோக்கியே  அமெரிக்காவின் வெறிபிடித்த கோர நாக்கு நீண்டது. ஆனால் அன்று நேரு நிறைவேற்றிய அன்றைய சட்டம் ஒரேயடியாக 100 சதவீதம் என்பதை அனுமதிக்கவில்லை. 26, 49, 74 என்றளவில் படிப்படியாக தான் 100 சதவீதத்தை அடையமுடியும். எனவே தான் வாஜ்பாய் 26 சதவீதத்திற்கு பிள்ளையார் சுழிப்போட்டு, பிறகு 49 சதவீதத்திற்கு முயற்சி செய்தார். எல்.ஐ.சி ஊழியர்கள், இடதுசாரி கட்சிகள் போராட்டத்தின் காரணமாக அவரால் முடியவில்லை. பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான மன்மோகன் சிங் அரசும் 49 சதவீதத்திற்கு முயற்சி செய்தது. ஆனால் 2004-2009 ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு இடதுசாரி கட்சிகளின் ஆதரவோடு நடத்தப்பட்ட ஆட்சி என்பதால், 49 சதவீத அந்நிய நேரடி முதலீட்டு உயர்வை இடதுசாரிகள் தடுத்து நிறுத்தினார்கள். அந்த ஐந்து ஆண்டுகளில் எவ்வளவோ முயற்சி செய்தபோதும் மன்மோகன் சிங்கினால் 49 சதவீதத்தை எட்டமுடியவில்லை.
            இதனால் அமெரிக்காவிற்கு இடதுசாரிக்கட்சிகளின்  மீது எரிச்சலும் கோபமும்  உண்டாகியது. அமெரிக்கன் இன்சூரன்ஸ் கவுன்சில் எரிச்சலுடன், ''49 சதவீத உயர்வுக்கே இவ்வளவு காலத்தையும் நேரத்தையும் எடுத்துகொண்டால், 100 சதவீதத்தை எப்போது எட்டுவது'' என்று கேள்வி எழுப்பியது. அன்றைய தினம் இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக பணிபுரிந்து வந்த டேவிட் முல்போர்டு என்பவரும் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் மிகுந்த எரிச்சலுடன், ''இந்திய அரசு  இன்சூரன்ஸ் துறையில்  அந்நிய நேரடி முதலீட்டினை 49 சதவீதமாக உயர்த்தவில்லையென்றால்  அது அமெரிக்காவிற்கு செய்கிற துரோகம்'' என்று வெளிப்படையாக பேசினார். 2008-ஆம் ஆண்டு இறுதியில் மன்மோகன் சிங் அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் விளைவாக அவரது அரசுக்கு கொடுத்துவந்த ஆதரவினை இடதுசாரிகள் திரும்பப்பெற்றுக்கொண்டார்கள். எதை எடுத்தால் இடதுசாரிக்கட்சிகளுக்கு கோபத்தை தூண்டுமோ, அதே சமயத்தில் அமெரிக்காவிற்கு சந்தோஷத்தை வரவழைக்குமோ அதை மன்மோகன் சிங் கையில் எடுத்தார். ''இன்சூரன்ஸ் திருத்த மசோதா 2008'' என்ற இன்சூரன்ஸ் துறையில் 49 சதவீத அந்நிய நேரடி முதலீட்டினை அனுமதிக்கும் புதிய மசோதா ஒன்றை, பாராளுமன்றத்தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில் புத்திசாலித்தனமாக மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தோழர்.டி.கே.ரங்கராஜன் அவர்கள் எழுந்து சென்று மசோதாவை தாக்கல் செய்து படித்துக்கொண்டிருந்த அமைச்சரின் கையிலிருந்து பிடுங்கி கிழித்து எறிந்தார். அவர் ஒன்றும் எல்.ஐ.சி-யில் பணிபுரியும் ஊழியரோ அல்லது முகவரோ அல்ல. இந்த தேசத்து உழைப்பாளி மக்களின் சேமிப்பு நிதியை அந்நிய முதலாளிகள் கொள்ளை கொண்டுபோக சட்டத்தின்  மூலம் அரசே ஏற்பாடுகளை செய்கிறதே என்ற கோபம் அவரை அப்படி செய்யவைத்தது. பிறகு இடதுசாரிகளின் எதிர்ப்பின் காரணமாக அந்த மசோதா பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பட்டது. அப்போதைக்கு அந்த மசோதா நிறைவேற்றப்படாமல் இடதுசாரிக்கட்சிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.
            தனது அகோரப்பசி தீராதற்கு இடதுசாரிகளே காரணம் என அமெரிக்கா கருதியது. அதனால்  2009 -ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் தன்னுடைய திட்டங்களுக்கு இடையூறாக இருக்கக்கூடிய இடதுசாரிகளின் எண்ணிக்கையை குறைக்கவேண்டும் என்ற வெறித்தனத்துடன்   இந்திய பாராளுமன்றத்தேர்தலில் அமெரிக்கா திட்டமிட்டு தனது மூக்கை நுழைத்தது. அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ-வும், அமெரிக்க தூதர்களும் கைகோர்த்து காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் வேலை பார்த்தார்கள். பாராளுமன்றத்தில்  இடதுசாரிகளின் எண்ணிக்கை குறைந்து போனாலும், 2009-2014 ஆண்டுகளில் மன்மோகன் சிங் 49 சதவீதமாக  உயர்த்த முயற்சி செய்தபோதெல்லாம் இடதுசாரிகள் பாராளுமன்றத்தில் அரசின் செயலை எதிர்த்து போராடினார்கள். அதன் காரணமாக மன்மோகன் சிங்கினால் 49 சதவீதத்தை  நெருங்கக்கூட முடியவில்லை. அவரால்  மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. அதனால் அமெரிக்கா அவரை ''இயங்காத பிரதமர்'' என்று வசைபாடியது.
                     பிறகு தான் 2014- ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தல் வந்தது. தேர்தல் வேலைகளை இந்திய பெருமுதலாளிகள் தங்கள் கையில் எடுத்துக்கொண்டார்கள். தாங்கள் நினைப்பது போல் ''வேகமாக செயல்படக்கூடிய பிரதமர்''  யார் என்பதை முதலில் அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். பிறகு அதையே ஊடகங்களை பயன்படுத்தி மக்களின் மூளைகளிலும் திணித்தார்கள். பல கோடிகளை  செலவு செய்து தேர்தல் முடிவை  அவர்களுக்கு சாதகமாக நிறைவேற்றிக்கொண்டார்கள். இப்போது நரேந்திர மோடி என்ற ''சாகசக்காரர்'' தலைமையில் பாரதீய ஜனதாக்கட்சி பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சிக்கு வந்தது. பிரதமர் பதவியேற்றதும் மோடி தேர்தலின் போது ஓட்டுக்காக மக்களின் முன் வைத்த ''அஜெண்டாவை'' தூக்கி எறிந்தார். தேர்தலின் போது திரைக்குப்பின்னால் அமெரிக்கா, இந்திய பெருமுதலாளிகள், மதவெறிபிடித்த ஆர்.எஸ்.எஸ் போன்றவர்கள் தனக்கு கொடுத்த ''அஜெண்டாக்களை'' தூக்கிப்பிடித்தார். பதவியேற்றவுடனேயே இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவீதமாக பாராளுமன்ற முதல் கூட்டத்தொடரிலேயே உடனடியாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு தனது அமெரிக்க எஜமான விசுவாசத்தை காட்டிக்கொண்டார். ஆனால் பாராளுமன்றத்தின் உள்ளே இடதுசாரிக்கட்சிகள் நடத்திய போராட்டங்களின் காரணமாகவும், வெளியே எல்.ஐ.சி ஊழியர்கள் மற்றும் முகவர்கள் மக்களை இணைத்து நடத்திய போராட்டங்களின் காரணமாகவும் முதல் கூட்டத்தொடரில் மட்டுமல்ல, முடிந்துபோன குளிர்கால கூட்டத்தொடரில் கூட 49 சதவீத உயர்வுக்கான அந்த மசோதாவை மோடி தலைமையிலான அரசு நிறைவேற்றமுடியாமல் திணறிப்போனது.
                 அந்த மசோதா நிறைவேற்ற முடியாமல் போனதால், தனது ''தனது எஜமான விசுவாசத்தை'' காட்டமுடியாமல் மோடி ஏமாற்றமடைந்தார். அதுமட்டுமல்ல முன்னெப்போதும் இல்லாத வழக்கமாக, வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்திய குடியரசு தின விழாவின் ''சிறப்பு விருந்தினராக'' அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை நரேந்திரமோடி அழைத்திருக்கிறார். அப்படியாக இந்தியாவிற்கு வருகைபுரியும் ஒபாமாவிற்கு தனது சார்பில் அளிக்கப்படும் விருந்தில் ''49 சதவீத இன்சூரன்ஸ்'' என்ற ''கெடாவை'' வெட்டி விருந்தளித்து ஒபாமாவை குஷிப்படுத்த முடியவில்லையே என்ற ஏமாற்றம் பிரதமர் மோடியை வெறியாக்கியது. நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரிலும் இன்சூரன்ஸ் மசோதாவை நிறைவேற்றமுடியவில்லை. வரும் 26-ஆம் தேதிக்குள் வேறு கூட்டத்தொடருக்கும் வாய்ப்பில்லை. எனவே பிரதமர் மோடி ஒபாமா வருகைக்கு முன்பே இன்சூரன்ஸ் துறையை பலி கொடுக்க துணிந்தார். குளிர்கால கூட்டத்தொடர் முடிந்த அடுத்தநாளே ஜனநாயகத்தை குழித்தோண்டி புதைத்து குறுக்கு வழியில் செல்ல முடிவெடுத்தார். மந்திரிகளை கூட்டி இன்சூரன்ஸ் துறையில் 49 சதவீத அந்நிய நேரடி முதலீட்டு உயர்வை ''அவசர சட்டத்தின்'' மூலம் நடைமுறைப்படுத்தி ஒபாமாவிற்கு படையல் வைப்பது என்று முடிவெடுத்து அனுப்பப்பட்டு, சென்ற 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று இந்திய குடியரசு தலைவர் இன்சூரன்ஸ் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார். அப்போதும் கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர். சீத்தாராம் யெச்சூரி அவர்கள், அவசர சட்டத்தில் உள்ள அபாயத்தை எடுத்துரைத்து, நாட்டின் நலன் கருதி அதில் கையெழுத்திடவெண்டாம் என்று குடியரசுத்தலைவருக்கு ஆலோசனை வழங்கி கடிதம் அனுப்பினார். அதையும் மீறி குடியரசுத்தலைவர் கையெழுத்திட்டுவிட்டார். 
                 ''மக்கள் பணம் மக்களுக்கே'' என்ற அடிப்படையில் மக்களின் சேமிப்பு நிதியை பாதுகாத்து அவர்களுக்கே செலவிடப்படவேண்டும் என்று கருதி 1956-ஆம் ஆண்டு கொண்டுவந்த இன்சூரன்ஸ் அவசரசட்டம் எங்கே...? ''இந்திய மக்கள் பணம் அந்நியருக்கே'' என்று கூசாமல் எடுத்துக்கொடுக்க 2014-ஆம் ஆண்டில் கொண்டுவந்த இந்த அவசரசட்டம் எங்கே...? நீங்களே சிந்தியுங்கள். இன்றைய மோடி தலைமையிலான அரசு யாருக்காக ஆட்சி செய்கிறது...?                                     
நன்றி : தீக்கதிர் / 22.01.2015

வியாழன், 25 செப்டம்பர், 2014

அடேங்கப்பா...மோடி என்னமா பேசறாரு....?

                         ''மேக் இன் இந்தியா'' என்ற முழக்கமிட்டு ஆண் சிங்கம் ஒன்று நடந்து வருவது போல் ஒரு சின்னத்தை உருவாக்கி நரேந்திரமோடி தன்னை ஒரு சிங்கமாக உலக முதலாளிகளுக்கு இன்று புதுடெல்லியில் விழா ஒன்றில் எடுத்துக்காட்டியிருக்கிறார்.  இதன் மூலம் ''அந்நிய முதலாளிகளே... இந்தியாவிற்கு வாருங்கள்... இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்.... இந்திய பொருட்கள் உலகெங்கும் விற்கட்டும்...'' என்று உலக முதலாளிகளுக்கு அழைப்புவிடுத்துள்ளார். இந்த விழாவில் மோடி என்னமா பேசினாரு தெரியுமா...? அடேங்கப்பா... இவர் பேசுவதற்கு எழுதிகொடுத்த அந்த மனுஷன் என்னமா யோசிச்சிருப்பான்.... அந்த பேச்சை கேட்கும்போதே மெய்சிலிர்க்குது. அந்த விழாவில் மோடி அப்படி என்ன பேசினாரு...? FDI-க்கு ஒரு புது அர்த்தம் சொன்னாரு பாருங்க. ஆஹா... என்னமா கருத்தா பேசினாரு. உண்மையாவே உலகத்துல யாரும் இவர் போல் இவ்வளவு அறிவாளியாக பேசியிருக்கமுடியாதுங்க. எப்படி மோடியால மட்டும் இப்படியெல்லாம் அறிவா சிந்திக்க முடியுது என்று நினைச்சி நினைச்சி புல்லரிச்சி போனேன்னா பாத்துக்கொங்குளேன். 
               அப்படி என்ன மோடி FDI -ஐ பத்தி பேசினார்னு தானே கேட்கறீங்க...? ''FDI'' - அப்படின்னா நாம்ப இதுவரைக்கும் என்ன அர்த்தத்தை புரிஞ்சிகிட்டு இருந்தோம்னா...? ''Foreign Direct Investment - அந்நிய நேரடி முதலீடு'' என்று தானே நாம்  இதுவரையில் நெனைச்சிகிட்டிருந்தோம். ஆனால் மோடி இதை வேறு மாதிரி சிந்திக்கிறார். அந்த விழாவில் அவர் என்ன சொல்கிறார்ன்னா, FDI என்றால், ''First Develop India'' வாம். ''இந்தியாவை முதலில் முன்னேற்று'' என்று புதுபுது அர்த்தங்களாக உதிர்த்து தனது தேசபக்தியை உலகத்திற்கு உயர்த்தி காட்டினாரு பாருங்க... தாங்கல... இப்படி அவர் பேசியதற்கு என்ன அர்த்தம் என்றால், FDI-ஐ எதிர்ப்பவர்களே.... FDI-ன்னா நீங்க நினைக்கிற மாதிரி அந்நிய நேரடி முதலீடு கிடையாது. அந்நிய நேரடி முதலீட்டினை ஏற்றுக்கொன்று நாட்டை முதலில் முன்னேற்று என்று அர்த்தம். நீங்க FDI-ஐ ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், இந்தியாவை முன்னேற்றுவதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று பொருள் என்பது போல பேசியிருக்கிறார். ''FDI மூலம் இந்தியாவை முன்னேற்ற துடித்துக்கொண்டிருக்கிறார் மோடி... அதை இவர்கள் எதிர்க்கிறார்கள்... அப்படின்னா FDI-ஐ எதிர்ப்பவர்கள் நமக்கும் வேண்டாதவர்கள்''  என்று மக்களை FDI-ஐ எதிர்ப்பவர்களுக்கு எதிராக திருப்பிவிடுவதற்காக மோடி செய்த தந்திரம் தான் இது. இப்படியெல்லாம் பேசி யாரை எமாற்றப்பார்க்கிறார் மிஸ்டர் மோடி....? தன்னை நம்பி வாக்களித்த இந்திய மக்களையா...? என்பது தான் எனது கேள்வி.

திங்கள், 14 ஜூலை, 2014

சூதாட்டக் களமாகும் தேசம்...!


 கட்டுரையாளர் : வெங்கடேஷ் ஆத்ரேயா, பொருளாதார நிபுணர்                   
       
               ஊடகங்களின் அர்த்தமற்ற ஆரவாரங்களுடன் மோடி அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  மோடி அரசின் பட்ஜெட் இந்திய பொருளாதாரத்தை இன்னும் வலுவாக பன்னாட்டு நிதி மூலதனத்தின் வலைக்குள் சிக்க வைக்கும் முயற்சியாகும். பாதுகாப்புத்துறையில் அந்நிய நேரடி மூலதனத்தின் பங்கின் வரம்பை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்தும்,  காப்பீட்டு துறையிலும் இந்த காரியத்தை செய்யும், இவ்விரு துறைகளும் நாட்டின் தற்சார்பிற்கு மிக கேந்திரமான துறைகள். இதில் பாதிப்பங்கு அன்னியமூலதனத்தின் கையில் தரப்படுவது என்பது நாட்டின் இறையாண்மையைக் காவு கொடுப்பதாகும். அது மட்டுமின்றி, இப்படிசெய்வதற்கு எந்தப் பொருளாதார காரணமும் கிடையாது.
          பாதுகாப்பு துறையில் அந்நிய முதலீட்டின் வரம்பை உயர்த்தினால், பல ராணுவ தளவாடங்களை இந்தியாவிற்குள்ளேயே உற்பத்தி செய்ய பன்னாட்டு மூலதனம் வரும் என்ற பொய்யான வாதம் முன்வைக்கப்படுகிறது. அப்படி வரும் என்ற எந்த உத்தரவாதமும் கிடையாது. மேலும் அப்படியே வந்தாலும், தொழில்நுட்பங்களை இந்தியாவிற்கு அவை கொடுக்கும் என்றஉத்தரவாதமும் கிடையாது. இவ்விரண்டு நடவடிக்கைகளையும் தேசப்பற்று உள்ளஅனைவரும் எதிர்க்க முன்வரவேண்டும்.

வங்கிகள் நாசமாகும்                               

           மற்றொரு அபாயகரமான முன்மொழிவு ஒன்று பட்ஜெட்டில் உள்ளது. பொதுத்துறை வங்கிகளின் மொத்த மூலதன அஸ்திவாரத்தை உயர்த்திட, அரசு இந்த வங்கிகளுக்குள் கூடுதல் மூலதனம் செலுத்தி இப்பணியை செய்ய தயாராக இல்லை. மாறாக, புதிய பங்குகள் சிறு முதலீட்டாளர்களுக்கு விற்கப்படும் என்றும் அதன் மூலம் பொதுத்துறை வங்கிகளின் மூலதன அஸ்திவாரம் பலப்படுத்தப்படும் என்றும் பட்ஜெட் கூறுகிறது. முதலில், பன்னாட்டு நிதியம் முன்மொழியும் பாசில் நெறிமுறைகள் அடிப்படையில் பொதுத்துறை வங்கிகளின் மூலதன அடித்தளம் அமைய வேண்டுமா என்பதே சர்ச்சைக்கு உரிய பிரச்சனை. ஏனெனில், பொதுத்துறை வங்கிகளாக இருப்பதால் இவை வாடிக்கைதாரர்களின் முழு நம்பிக்கையை பெற்றுள்ளன.
            கடந்த காலங்களில், இந்தியன் வங்கி போன்ற வங்கி களைப்பற்றி தனியார் வங்கி ஆதரவாளர்களும் ஊடகங்களும் பெரும் பீதியைக் கிளப்பிவிட்ட போதும்மக்கள் தொடர்ந்து தங்கள் சேமிப்புகளை பொதுத்துறை வங்கிகளில் தான் கொண்டுசேர்த்தனர். கடனை திருப்பித்தராமல் மோசடி செய்யும் சில பெருமுதலாளிகளுக்கு பொதுத்துறை வங்கிகள் அரசு நிர்ப்பந்தத்தில் கடன் தரும் நடவடிக்கையால் சில வங்கிகளுக்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது உண்மை என்றாலும் கூட, பொதுத்துறை வங்கிகள் இன்றும் பொதுமக்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாகவே உள்ளன. அப்படியே இந்த வங்கிகளின் மூலதன அடித்தளத்தை உயர்த்த வேண்டும் என்று கருதினால் அதை அரசே மூலதனம் அளித்து செய்ய வேண்டும். சாதாரண மக்கள் பொதுத்துறை வங்கிகளின் பெயரில் விற்கப்பட உள்ள பங்குகளை வாங்கியதன் மூலம் அவர்கள் நேரடி பொதுத்துறை வங்கி உரிமையாளர்களாக ஆகிவிடுகிறார்கள் என்ற கவர்ச்சிகரமான ஆனால் தவறானவாதத்தை நிதி அமைச்சர் முன்வைத்துள்ளார்.
             உண்மையில் இவ்வாறு பொது மக்கள் வாங்கும் பங்குகள் அவர்கள் கையில்நிலைத்து நிற்காது. அவர்கள் விற்கும் பங்குகளை பெருமுதலாளிகள் வாங்கி காலப்போக்கில் பொதுத்துறை வங்கிகளில் அவர்களின் செல்வாக்கு ஓங்கும். பொதுத்துறை வங்கிகள் படிப்படியாக தனியார்மயமாக்கப்படும். இதுதான் அரசின் உண்மையான நோக்கமும் கூட. எனவே இதுவும் கடுமையாக எதிர்க்கப்படவேண்டிய அம்சம் ஆகும்.

வெற்று அறிவிப்புகள்                    

          நிதி அமைச்சரின் பட்ஜெட் உரையில் ஏராளமான அறிவிப்புகள் உள்ளன. இவைபட்ஜெட்டில் இடம் பெறாது. எடுத்துக்காட்டாக, வேளாண் துறைக்கு வங்கிகள் மூலம் எட்டு லட்சம் கோடி ரூபாய் கடன்அளிக்கப்படும் என்பது வெறும் அறிவிப்பு தான். இது அரசின் வரவு-செலவு-தொடர்பான விஷயம் அல்ல. மேலும் இப்படி கடன்கொடுத்தே ஆக வேண்டும் என்று நிர்ப்பந்திக்கும் அதிகாரம் அரசுக்கு கிடையாது. செலவு மேலாண்மை ஆணையம் ஒன்றுஅறிவிக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாடு பற்றி தெளிவு எதுவும் இல்லை. இப்படி ஏராளமான ஆனால் பட்ஜெட்டில் இடம்பெறாத பெரிதும் சிறிதுமான அறிவிப்புகளை பட்ஜெட் உரையில் அமைச்சர் அள்ளி வீசிஉள்ளார்.
          அவை அனைத்தையும் பற்றி இப்பொழுது சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இந்த அறிவிப்புகளை அமலாக்கும் பொழுதுதான் அவற்றின் விளைவுகள் புலப்படும். எனினும் அவற்றில் பல அபாயகரமானவை என்பதும் உண்மை. எடுத்துக்காட்டாக நம் நாட்டு பங்குச் சந்தைகளில் சூதாட பெரும் பன்னாட்டு நிறுவன முதலீட்டாளர்களுக்கு சில வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. வரிவிகிதங்கள் நிலையாக இருக்கும், மாற்றப்படமாட்டாது என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. வரிவிதிப்புகள் முன்தேதியிட்டு மாற்றப்படாது என்ற வாக்குறுதி வோடபோன் போன்ற கம்பெனிகளை குஷிப்படுத்தும் விளைவை கொண்டது. (ஆனால் நாம் உள்நாட்டில் ரயில்பயணம் மேற்கொள்ளும்பொழுது மட்டும் டிக்கட் வாங்கிய தேதியில் ஒரு விலை, அது பின்னர் மாற்றப்பட்டு ரயிலில் நாம் ஏறியவுடன் கூடுதல் கட்டணம் தரும் நிலை என்பது தொடர்கிறது!) 

தேக்கம் தொடரும்                      

                  பட்ஜெட் முன்வைத்துள்ள வரவு- செலவு கணக்குகள் மற்றும் முன்மொழிவுகளுக்குள் செல்வோம். அவற்றை எடைபோட, முதலில் எத்தகைய பொருளாதாரச்சூழலை நாடு சந்திக்கிறது என்பதைக் காண வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பொருளாதார வளர்ச்சி விகிதம் ஐந்து சதவிகிதத்திற்கும் கீழே உள்ளது. அதிலும், தொழில்துறை தேக்க நிலையில் உள்ளது. வேளாண் துறை ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது, ஆனால் மொத்தத்தில் அதன் வளர்ச்சி விகிதம் குறைவாகவே உள்ளது. விவசாயிகளின் தற்கொலைகள் தொடர்கின்றன. பன்னாட்டுப் பொருளாதாரம் நெருக்கடியில் தொடர்கிறது.
           இந்த சூழலில், பொருளாதார வளர்ச்சியை உயர்த்த கிராக்கியை அதிகப்படுத்தும் வகையில் அரசு கூடுதல் திட்ட ஒதுக்கீடு செய்வதும் உள்நாட்டு சந்தையை வேகமாக வளர்க்கும் முயற்சியில் ஈடுபடுவதும் தேவை. ஆனால் பட்ஜெட் அப்படி எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. கடந்த 2013-14ஆம் ஆண்டில் மொத்த திட்ட ஒதுக்கீடு பட்ஜெட் கணக்குப்படி 5,55,322 கோடிரூபாயாக இருந்தது. 2014-15க்கு 575 ஆயிரம் கோடி என்ற அளவிற்குத்தான் உயர்ந்துள்ளது. இந்த பட்ஜெட்டில் பெருமளவு உயர்வு இல்லை. ஆனால் விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டால் இது உண்மை அளவில் சென்ற ஆண்டை விட குறைவு ஆகும். அரசின் மொத்த செலவும் பட்ஜெட் கணக்கில் ஒப்பிடுகையில் பதினாறு லட்சத்து 65 ஆயிரம் கோடியில் இருந்து பதினேழு ஆயிரத்து 95 கோடியாகத்தான் உயர்ந்துள்ளது. இதுவும் தேக்க நிலை தான்.
          எனவே வளர்ச்சியை அரசு மூலம் ஊக்குவிக்கும் முயற்சி பட்ஜெட்டில் இல்லை. துறைவாரியான திட்ட ஒதுக்கீடுகளும் இதையே காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, ஊரக வளர்ச்சி துறையில் திட்டஒதுக்கீடு கடந்த ஆண்டு பட்ஜெட் கணக்கின்படி 80,194கோடி ரூபாய்.இந்த ஆண்டு 83,793 கோடி. உண்மை அளவில் குறைந்துள்ளது. மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு கடந்த ஆண்டு 65,869கோடி. இந்த ஆண்டு 68,728கோடி. உண்மை அளவில் சரிவு. ஆரோக்கியம் மற்றும் குடும்பநலம் அமைச்சகம் சென்ற ஆண்டு 32745கோடி இந்த ஆண்டு 34225கோடி. எந்த முன்னேற்றமும் இல்லை, சரிவு தான். இந்த உதாரணங்கள் போதுமானவை. ஆக, முக்கிய துறைகளான, ஊரக வளர்ச்சி, மனித வள மேம்பாடு, ஆரோக்கியம் போன்றஅமைச்சக திட்ட ஒதுக்கீடுகள் உண்மை அளவில் குறைந்துள்ளன.

செல்வந்தவர்களுக்கு மகிழ்ச்சி                       

              அதே சமயம், இந்த பட்ஜெட்டில் வரி விதிப்பு நடவடிக்கைகள் குறைவு. செல்வந்தர்கள் மீது எந்த வரி விதிப்பும் புதிதாகஇல்லை என்பது மட்டுமல்ல. அவர்களிடம் வருமான வரித் துறை நெளிவுசுளிவாக நடந்துகொள்ளும் என்றும் ஆங்காங்கு பட்ஜெட் உரையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. சம்பளம் பெரும் மத்தியதர பகுதியினருக்கு தரப்பட்டுள்ள வருமான வரி சலுகை என்பது இந்தப்பகுதியினர் மத்தியில் ஆளும் கட்சியின் செல்வாக்கை வலுப்படுத்தும் நடவடிக்கையே தவிர, இதனால் ஏற்படும் பணப்பயன் விலைவாசி உயர்வில் காணாமல் போய்விடும் என்பது தான் உண்மை. மேலும், இந்த பட்ஜெட் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க ஏதும் செய்யாத நிலையில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவும் வாய்ப்பில்லை.
            மொத்தமாக 22 ஆயிரம் கோடி ரூபாய் வருமான வரி சலுகைகளால் அரசுக்கு இழப்பாக இருக்கும் இந்த நிதி ஆண்டில் என்று பட்ஜெட் உரையில் சொல்லப்பட்டுள்ளது. மறுபுறம் மறைமுக வரிகள் மூலம் 7 ஆயிரம் கோடி கூடுதல் வரி வருமானம் கிட்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஏறத்தாழ 19 லட்சம் வரவு செலவு செய்யும் பட்ஜெட்டில் இந்த வரி முன்மொழிவுகளின் தாக்கம் குறைவு என்று தான் சொல்ல வேண்டும். எனினும், ரயில் கட்டண உயர்வு, தொடர்ந்து எரிபொருள் விலைகள் உயர்த்தப்படுவது போன்றவை விலைவாசி உயர்வை ஊக்குவிக்கும் என்பதும் பட்ஜெட்டும் அதே பாதையில் பயணிக்கிறது என்பதும் உண்மையே.
            சென்ற ஆண்டு பட்ஜெட்டில் உரம், உணவு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட மானியங்களுக்கு செலவிடப்பட்ட தொகை 2,55,516 கோடி. இந்த ஆண்டில் மானியங்களுக்கான ஒதுக்கீடு மிகவும் சொற்பமான அளவில் 5142 கோடி மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் நாம் கடுமையான விலை உயர்வை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது தான். அதுவும் இராக் நிலைமைகளை கணக்கில் கொண்டால் எரிபொருள் விலைகள் பன்னாட்டு சந்தையில் உயரும் என்பது திண்ணம். மானிய ஒதுக்கீடு உண்மை அளவில் குறைக்கப்பட்டுள்ள நிலையில், தனிநபர் வருமான வரி விகித குறைப்பால் களித்திருப்போருக்கு கடும் அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது என்பது தான்.

‘சுதேசி’ முழக்கம் வெறும் வேஷம்                

              செல்வந்தர்கள் மீதும் இந்நாட்டு, பன்னாட்டு பெரும் கம்பனிகள் மீதும் வரி விதித்து வளம் திரட்ட மறுக்கும் மத்திய பா ஜ க அரசு, பற்றாக்குறை கட்டுக்குள் இருக்கும் என்று கூறுவது எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை. அதீதமான பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று அரசு அனுமானிக்கிறது. இது யதார்த்தத்திற்குப் புறம்பானது. உண்மையில் நடக்கப்போவது என்னவென்றால் ஒதுக்கீடுகளை குறைப்பதன் மூலமும் மானியங்களை மேலும் வெட்டுவதன் மூலமும். செலவுகள் மேலும்வெட்டப்படும். மறுபுறம் பொதுத்துறை சொத்துக்கள் அடிமாட்டு விலைக்கு விற்கப்படும்.
            தேசிய ஜனநாயக கூட்டணிதான் முதலில் பொதுத்துறை சொத்துக்களை விற்பதற்கு ஒரு அமைச்சகத்தையே உருவாக்கி அதன் அமைச்சராக அருண் ஷோரியை நியமித்து அழகு பார்த்தது. மீண்டும், காங்கிரசை விஞ்சும் வகையில் பொதுத்துறை சொத்துக்களை பன்னாட்டு பெரும் கம்பனிகளுக்கு விற்று தனது ‘சுதேசி’ முழக்கம் வெறும் வேஷம் என்பதை பாஜக நிரூபிக்க முனைகிறது என்பது இந்த பட்ஜெட் சொல்லும் முக்கிய செய்தி. இந்த பட்ஜெட்டில் மட்டும் நாற்பத்தி மூவாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக பொதுத்துறை பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் என்பதுதான்.
           இது ஒரு துவக்கமே.நல்ல நாட்கள் வந்து விட்டன. யாருக்கு என்பதுதான் கேள்வி. ஏற்கெனவே காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நல்ல நாட்களை அனுபவித்த இந்நாட்டு, பன்னாட்டு பெரு முதலாளிகளுக்கு இன்னும் கூட நல்ல நாட்கள் வரவுள்ளன, மோடி அரசு தனது முதல் பட்ஜெட் மூலம் தனது எஜமான விசுவாசத்தை காட்டுகிறது பாஜக அரசும் கட்சியும். அதில் உலாவரும் போலி சுதேசிகளும் தற்சமயம் தற்காலிகமாக தலைமறைவாக உள்ளனர் போலும்!
நன்றி : தீக்கதிர்                         

புதன், 19 மார்ச், 2014

மு.க.ஸ்டாலின் விழுங்கிய சூடம்...!



கட்டுரையாளர் : க.சுவாமிநாதன்                             

              தூத்துக்குடியில் தேர்தல் பிரச்சாரம் செய்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் “சில்லரை வியாபாரத்தில் அந்நிய முதலீட்டை என்றுமே தி.மு.க ஆதரித்ததில்லை” என்று ஓங்கி அடித்துள்ளார்.
                இவர் போகிற ஊரில் எல்லாம் இனிமேல் ஒரு சூடத்தை ஏற்றிவைத்து கையால் அடித்து சத்தியம் செய்வார் போலிருக்கிறது. ஒரு படத்தில் வடிவேல் வாய்க்குள் சூடத்தை ஒருவர் தட்டிவிட்டவுடன் வெந்துபோய் காதுகளில் எல்லாம் புகைவரும். அதுபோன்றுதான் ஸ்டாலினின் நகைச்சுவைக்கும் தூத்துக்குடி சில்லரை வியாபாரிகள் சிரித்திருப்பார்கள்.
சில்லரை வியாபாரத்தில் அந்நிய முதலீட்டிற்கு முதலில் பி.ஜே.பி யோடு கைகோர்த்து ரோடு போட்டவர்களே தி.மு.க காரர்கள்தான். முரசொலி மாறன் மத்திய வர்த்தக அமைச்சராக வாஜ்பாய் ஆட்சியில் இருந்தபோது மத்திய அமைச்சரவையில் சில்லரை வணிகத்தில் 100 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிப்பதற்கான குறிப்பை மாறன் முன்வைத்து அது ஏற்றுக் கொள்ளவும்பட்டது.
     ஆனால் இடதுசாரிகள் மற்றும் சிறுவணிகர்களின் கடும் எதிர்ப்பால் அமலாக்கப்படவில்லை. அப்போது பி.ஜே.பியின் மூத்த அமைச்சர் “ பெப்சி , கொக்க கோலா வந்தாலும் பெட்டிக்கடை சர்பத் காணாமலா போய்விட்டது? “என்று கேலி பேசினார். இப்படி பி.ஜே.பி வால்மார்டிற்கு வால்பிடித்தபோது சேர்ந்து ஒரு கை கொடுத்தது திமுக.
             மதவாத சக்திகள் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்குத்தான் காங்கிரசுக்கு ஆதரவாக சில்லரை வணிகப் பிரச்சனையில் நாடாளுமன்றத்தில் கைதூக்கியதாக தூத்துக்குடியில் ஸ்டாலின் விளக்கம் கொடுத்துள்ளார். ஸ்டாலின் அவர்களே! நீங்கள் 1999-2004 காலத்தில் மதவாதத்திற்கு ஒரு கை.. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டிற்கு இன்னொரு கை.. என்று தூக்கியதற்கு என்ன விளக்கம் தரப் போகிறீர்கள்?இடதுசாரிகள் ஆதரவோடு மத்திய ஆட்சி இருந்தபோது ஒரு தடவையாவது இடதுசாரிகள் அந்நிய முதலீடு, தனியார்மயம் போன்ற பிரச்சனைகளில் சமரசம் செய்ததுண்டா? சோதனை வந்த காலத்தில் யார் உறுதியாக அவர்கள் பக்கம் நின்றார்கள் என்பது சிறு வியாபாரிகளுக்கு தெரியும்.
                 மு.க.ஸ்டாலின் அவர்களே! ஊருக்கு ஏற்றாற்போல் எழுதிவைத்து பொய் சொல்லும் உங்களைப் பார்த்து சிறுவியாபாரிகள் சிரிக்கிறார்கள். தொண்டையில் உள்ள சூடத்தை வெளியே துப்பிவிடுங்கள். சுட்டுவிடப்போகிறது.
நன்றி :  


சனி, 1 மார்ச், 2014

மாறுகிறது மோடியின் குரல்...!


ஆக்கம் :
தோழர். க.சுவாமிநாதன், பொருளியல் அரங்கம்,          
               நாற்காலியில் உட்கார்ந்த பிறகு குரல் மாறுவது அரசியல் வாடிக்கை. ஆனால் நாற்காலிக் கனவிலேயே மோடியின் குரல் மாறியுள்ளது. 
             புதுதில்லியில் அகில இந்திய வணிகர் கருத்தரங்கில் உரையாற்றிய போது, “வியாபாரத்தில் பன்னாட்டுச் சவால்கள் வருவது பற்றி நாம் அச்சப்பட வேண்டாம். அவற்றையெல்லாம் வாய்ப்புகளாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் 10 அடிகள் முன்னேறினால், நாம் 15 அடி போக வேண்டும். ஓடக்கூடாது... சந்திக்க வேண்டும்.” வணிகர்கள் மாநாட்டில் உட்கார்ந்து கொண்டு ''பன்னாட்டு மூலதனத்தை தவறாக நினைக்காதீர்கள்'' என்று தரப்படும் சிக்னல் இது. 
           ''இதைத்தானே இவ்வளவு நாளா நானும் சொன்னேன்'' என்று மன்மோகன் சிங் சொல்லலாம். மாறுகிறது மோடியின் குரல். வணிகர்கள் உஷார்....!  

நன்றி :
 

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

திருச்சி மாநாடு - திமுகவின் இரட்டை வேடம்....!

                                                                                                                                                         
          அண்மையில் திருச்சியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற திமுகவின் 10-ஆவது மாநாட்டில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு பல்வேறு நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு தேர்தலுக்கு முன்னோட்டம் பார்க்கப்பட்டது. அந்த மாநாட்டில் பல தரப்பட்ட மக்களை திருப்திப்படுத்தும் பொருட்டு - அவர்களின் ஓட்டுக்கு குறிவைத்து வகை வகையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் ஒன்று சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி சம்பந்தப்பட்டது. இப்போது தான் சில்லறை வர்த்தகத்தைப்பற்றிய அறிவிப்பு வந்தது போலவும், அதனால் பாதிக்கப்படும் வணிகர்கள் மீது அக்கறை காட்டுவது போலவும்  ஒரு நாடகத்தை அரங்கேற்றியதை பார்த்து தமிழக வணிகர்களே எரிச்சலடைந்தார்கள். அப்படி என்ன சொல்கிறது அந்த தீர்மானம் என்றால், ''சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டினை அனுமதிக்கக்கூடாது'' என்கிறது. 
             திமுகழகம் சென்ற காலங்களில் காங்கிரஸ் கட்சியுடன் ஆட்சியில் ஒட்டிக்கொண்டிருந்த போது, சில்லறை வர்த்தகத்தில் அன்னியநேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற முடிவெடுக்கும் போது மந்திரிசபைக் கூட்டத்தில் அதை எதிர்த்து கொஞ்சம் கூட வாயை திறக்காமல் தலையாட்டிவிட்டு, பிறகு பாராளுமன்ற இருஅவைகளிலும் அதைப்பற்றிய விவாதம் நடந்தபோது அந்நிய நேரடி முதலீட்டிற்கு ஆதரவாக வாக்களித்ததை கருணாநிதி வேண்டுமானால் தேர்தலுக்காக மறந்தது போல் நடிக்கலாம். ஆனால் மக்கள் மறக்கவில்லை. பாதிப்புக்குள்ளான வணிகர்கள் மறக்கவில்லை என்பது தான் உண்மை.
             ஆட்சியில் இருக்கும் போது ஒரு நிலை. இறங்கியதும் ஓட்டுக்காக ஒரு நிலை. திமுகவின் இரட்டை வேடத்தை மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். இனியும் ஏமாறமாட்டார்கள்.

வெள்ளி, 27 டிசம்பர், 2013

தேசத்தைக் காக்கும் எல். ஐ. சி - யை பாதுகாப்போம்...!

           






             நாடு முழுதும் உள்ள எல்.ஐ.சி கிளைகளில் கடந்த ஒரு மாத காலமாகவே ஒரே பரபரப்பாக இருப்பதை காணலாம். முகவர்கள் எல்லோரும் தேனீக்களைப் போல சுறுசுறுப்பாய் - பம்பரமாய் சுழன்று வேலை செய்கிறார்கள். ஏனென்றால் எல்.ஐ.சி -யின் பிரபலமான 50 வகையான திட்டங்களை எல்லாம் வரும் டிசம்பர் மாதம் 31 - ஆம் தேதியன்று முடிவுக்குக் கொண்டுவருகிறார்கள். காலகாலமாக பல ஆண்டுகளாக மக்களுக்கு பல்வேறு வகையான பலன்களை அள்ளித்தந்துகொண்டிருந்த அத்தனை திட்டங்களையும் ஒழித்துக்கட்டிவிட்டு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களை வாழவைப்பதற்காக மத்திய அரசு போடும் சதி திட்டமாகும். மத்திய அரசின் இந்த மோசடியான நடவடிக்கையை கண்டித்தும், 
                  இன்சூரன்ஸ் துறையில் தற்போது அனுமதிக்கப்படும் அந்நிய நேரடி முதலீடு 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்தும் மத்திய அரசின் செயலைக் கண்டித்தும், 
               எல்.ஐ.சி திருத்த மசோதா - 2009 என்ற திருத்த மசோதாவை கடந்த ஆண்டு நிறைவேற்றியதன் மூலம், ஆண்டு உபரித்தொகையில் 90 சதவீதமாக பாலிசிதாரர்களுக்கு போனசாக கொடுக்கப்பட்டதை 85 சதவீதமாக குறைத்ததை கண்டித்தும், 
            01.04.2012 முதல் பிரிமியம் என்பது காப்புத்தொகையில் 10 சதவீதம் மேல் இருத்தல் கூடாது என்றும், அப்படி அதிகமானால் அவர் வாங்கும் பலன்களுக்கு வருமான வரி வசூல் செய்யப்படுவதை கண்டித்து, 
             எல்லாவற்றிற்கும் மேலாக எதிர்வரும் 2014 ஜனவரி 1 - லிலிருந்து மக்கள் சேமிப்பான பிரிமியத்திற்கு சேவை வரி வசூலிப்பதை கண்டித்தும், 
             இன்று மாலை புதுச்சேரி அண்ணா சாலையில் LICAOI - எல்.ஐ.சி முகவர்கள் சங்கம்       சார்பில் ''எல்.ஐ.சி-யை பாதுகாப்போம்'' என்ற முழக்கத்துடன் சுமார் 750 மீட்டர் நீள ''மனித சங்கிலி போராட்டம்'' நடத்தப்பட்டது. 
           போராட்டத்தை  சாகத்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் - பெரியவர் திருமிகு.ம.இலெ.தங்கப்பா அவர்கள் தொடங்கிவைத்தார்.
          நாளை சேலத்தில் நடைபெற உள்ள இரண்டாவது தமிழ் மாநில மாநாட்டில் சேர்ப்பிக்கவிருக்கும் ''ஏகாதிபத்திய எதிர்ப்பு ஜோதியை'' புதுச்சேரியின் மூத்த தொழிற்சங்கத்தலைவர் தோழர்.சி.எச்.பாலமோகனன் எடுத்துக் கொடுத்தார். முடிவில் மெழுகுவத்தி ஏந்தி ''எல்.ஐ.சி-யை பாதுகாப்போம்'' என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது.
              இந்தப் போராட்டத்தில் முகவர்கள், வளர்ச்சி அதிகாரிகள், மத்திய - மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், சி.ஐ.டி யு. தோழர்கள், மருந்து விற்பனை பிரதிநிதிகள், மாதர் சங்க- வாலிபர் சங்க- மாணர்வர்கள் சங்க தோழர்கள், பாலிசிதாரர்கள் மற்றும் பொதுமக்கள் போன்றோர் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு : திரைப்பட கலைஞர் கமல்ஹாசன் எதிர்ப்பு!


வாலில் தீ....   

   ஆற்றுப் படுகையில் யாரோ முன் தோண்டி வைத்திருந்த ஊற்றுப் பள்ளத்தை ஒரு கடுங்கோடை மாலையில் தாகத்துடன் பார்த்தபடி நிற்கின்றேன், குப்புறப்படுத்துத் தோண்டி வைத்த குழியில் ஆசையாய் மேலும் ஐந்து கையளவு மண்ணைக் கோதி எடுக்கிறேன். மூன்றாம் கோதலில் என் புறங்கையில் சற்றே ஈரம், ஆறு, ஏழு, எட்டு, நீர் எட்டிப் பார்க்கிறது. நாவறண்ட என் முகத்தை பிம்பமாய்ப் பிடித்துக் காட்டி விட்டு தாகம் தணிக்கிறது. மூக்கில் ஒட்டிய ஈர மணலையும் முன் சட்டையில் ஒட்டிய காய்ந்த மணலையும் தட்டி விட்டு எழுகிறேன் கனவு கலைகிறது - அத்தனையும் கனவுதான். 
             பரமக்குடிக்கார ஆள் என் நினைவில் தற்போது இது நடக்க வாய்ப்பில்லை. பரமக்குடி கடக்கும் ஆற்றுப் படுகைக்கே மூடு விழா நடத்தத் துவங்கி பல மாமாங்கங்கள்  ஆகிவிட்டன. கரையோர வீடுகள் கள்ளழகர் போல் தம் களம் விட்டிரங்கி ஆற்றுப்படுகையில் புது மனைகள் புகுந்து தம் கழிவுகளை ஆற்றுப்படுகையில் கலக்க விட்டு ஓரிரு மாமாங்கங்கள் ஆகிவிட்டன. பன்றிகள் போல் மனிதர்கள் நாமும் சர்வாஹாரிகள் (omnivore) தான் எனினும் கழிவு பொருட்களையும் களை பொருட்களையும் நாம் நித உணவுகளாக்கிக் கொண்டு, திட உணவுகளை மெதுவாய் அப்புறப்படுத்தி வருகிறோம்.
                மேற்சொன்னவற்றிற்கும் வால் மார்ட் (Wall Mart) இந்தியாவிற்குள் நுழைவதற்கும் என்ன சம்பந்தம் என்று யாரும் கேட்டால் விவரம் சொல்ல நிறைய இந்தியர்கள் ஆதாரங்களோடு கடும் வாதம் புரியக் காத்திருக்கிறார்கள். தமிழகத்தின் நுழைவாயிலை தற்காலிகமாகத் தமிழக முதல்வர் தாழிட்டு வைத்திருக்கிறர். அதற்கு என் போன்ற ஆட்களின் தற்காலிகமான நன்றி தமிழக முதல்வருக்கு உரித்தாகும். இந்த வைராக்கியத்தை அவர் கடைப் பிடித்தால் எங்கள் நன்றி என்றென்றும் உண்டு. எதிர் காலச் சந்ததிகளின் விவரமறிந்த நன்றியும் கூட. 
            என்ன செய்து விடப் போகிறது இந்த வால் மார்ட் (Wall Mart)... இப்படிப் பதறுகிறீர்கள்...? என்று கேட்டால்; வால் மார்ட் (Wall Mart) என்ற அமெரிக்க பல் பொருளங்காடி கிராமவாசிகளையும் வாடிக்கையாளர்களாக்கிக் கொண்டு, அவர்களே அறியாமல் அவர்கள் பிடரியில் கையை வைத்துத் தள்ளிக் கொண்டு போய் தம் கல்லாவில் காசு போட வைக்கும். ஊற்று நீரை பாட்டிலில் நிரப்பி விற்கும். பதனி பருக ஆசை என்று என் போன்ற பழைய ஆட்களுக்கும் பாட்டிலில் அடைத்து விற்றாலும் விற்கும் வால் மார்ட் (Wall Mart) சொல்லமுடியாது. மீனுக்கு வாலும் பாம்புக்குத் தலையும் காட்டி மயக்கும் விளாங்குத்தனம் உள்ள அமெரிக்க வியாபாரக் குழுமங்கள் கிராம உத்யோக பவனின் காதியுக்திகளையும் அனுமதியின்றி அபகரித்துத் தனதாக்கிக் கொள்ளும். பனம்பழமும் கிழங்கும் என்னவென்றே தெரியாத இந்தியப் பிள்ளைகள் பிட்சாவே தன் பாரம்பரிய உணவு என மயங்கும். மயங்கட்டுமே, இதில் என்ன கெட்டுப் போகிறது? எனச் சிலர் கேட்கலாம்.
                யோசித்துப் பார்த்தால் ஒன்றும் கெட்டுப் போகாதுதான் .கம்யூனிசமோ ஜனநாயகமோ செத்தாலும் பனைமரம் உயிரோடு நிற்கும். ரோம் ராஜ்யம் துளிர்த்தெழும். பல்லாயிரம் வருடங்களுக்கும் முன்னால் மஹாவீரரின் முந்தைய  தீர்த்தங்கரர்களுக்கும் பல்லாயிரம் ஆண்டுகளுட்கு முன்னால் இந்நாட்டை வளமாக்கிய மண்ணும் மரமும் சரியாது சாயாது. ஆளெல்லாம் மடிந்து சில நூறு வருடங்களில் மீண்டும் உயிர்த்தெழுந்து தோப்புகள் சூழும். ஆற்றுப்படுகையில் இன்றைய வீடுகள் நிர்மூலமாகி மண்ணோடு கலந்து புதிய கரடு முரடான ஆற்றுப்படுகையாகும். இதெல்லாம் முன் வீடுகளும் மனிதர்களும் இருந்த இடம் என்று நினைவு கூற ஒரு மனம்கூட மிஞ்சாது.
நாம் அழிவோம்... உலகழியாது. நாம் உலகத்தின் அச்சாணியல்ல.
சுழலும் அச்சக்கரத்தின் சரித்திரப் புத்தகத்தின் நடுவில் ஒரு சிறிய வாக்கியத்தின் கடைசியில் வரும் முற்றுப் புள்ளி.

நன்றி : ஆனந்த விகடன்

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

மன்மோகன் அரசே...! முடிவுகளை வாபஸ் பெறுக - இல்லையேல் வெளியேறுக...!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 
பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் எச்சரிக்கை...!
    நாசகர அறிவிப்புகள் மூலமாக நாட்டு மக்கள் மீது கொடிய யுத்தத்தைத் தொடுத்துள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராக  சென்ற செப்டம்பர் 20 - ஆம் தேதி  வியாழனன்று நாடு முழுவதும் முழு அடைப்பு - பொது வேலைநிறுத்தம் உள்ளிட்ட கொந்தளிப்புமிக்கப் போராட்டம் நடைபெற்றது.
            இந்தப் பின்னணியில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
            சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது மற்றும் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட தேசவிரோத முடிவுகளை திரும்பப்பெறவில்லை என்றால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இனியும் ஆட்சி அதிகாரத்தில் நீடிப்பதற்கு எவ்வித உரிமையும் இல்லை.
          மன்மோகன் சிங் அரசு மக்கள் விரோத அறிவிப்புகளை திரும்பப்பெறவில்லை என்றால், இனியும் ஆட்சி அதிகாரத்தில் நீடிப்பதற்கு உரிமை இல்லை.  அனைத்து பிரச்சனைகளிலுமே ஒட்டுமொத்த அரசியல் அரங்கிலும் அரசுக்கு எவ்வித ஆதரவும் இல்லாத நிலையில், தனது சொந்த கூட்டணிக்கட்சிகளிடமிருந்தே ஆதரவு இல்லாத நிலையில் அரசு நீடிப்பது சரியல்ல.
               அரசு தனது முடிவுகளை கைவிட வலியுறுத்தி இடதுசாரிக்கட்சிகளும், சமாஜ்வாதி, தெலுங்குதேசம், பிஜூ ஜனதா தளம் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுமாக மொத்தம் 8 கட்சிகள் கூட்டாக சென்ற செப்டம்பர் 20 - ஆம் தேதி  வியாழனன்று நாடு தழுவிய முழு அடைப்பு மற்றும் பொதுவேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்து வெற்றிகரமாக நடந்தேறின. இந்தப்போராட்டத்திற்கு நாடு முழுவதுமுள்ள வணிகர் அமைப்புகள்
மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து அமைப்புகள் பேராதரவு தெரிவித்து கலந்துகொண்டு போராட்டத்தை வெற்றிபெற செய்தன என்று கூறினார்.
                இந்தப்பிரச்சனையில் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன என்றும், அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், இதற்காக சிறப்பு நாடாளுமன்றத் தொடர் நடத்தப்பட வேண்டுமென்றும் பாஜக கோரியிருப்பதையும்  சுட்டிக்காட்டினார்.
              ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து விலகுவதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்ததைத் தொடர்ந்து அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றபோதிலும், வெள்ளிக்கிழமை திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பதவி விலகிய பின்னர் புதிய நிலைமைகள் உருவாகலாம் என்றும், எனவே, இப்போதே முடிவுகளுக்கு வரவேண்டாம் என்றும் பிரகாஷ் காரத் குறிப்பிட்டார். அத்தகைய நிலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது முடிவினை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.
              இரண்டாவது முறையாக ஆட் சிப்பொறுப்பிற்கு வந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, கடந்தாண்டு நவம்பர் மாதம் முதலே சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது எனக்குறிப்பிட்ட பிரகாஷ் காரத், கடுமையான எதிர்ப்பு தொடர்வதன் காரணமாகவே அந்த நடவடிக்கையை மேற்கொள்ளாமல் இருந்தது என்றும், அதனால்தான் ஒரு பொதுக்கருத்தை உருவாக்குவதற்கு முனைந்தது என்றும் குறிப்பிட்டார்.
             “ஆனால், நாடு முழுவதும் நிலவுகிற எதிர்ப்பில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இன்னும் சொல்லப் போனால், சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு எதிராக மேலும் பல கட்சிகள் அணிவகுத்துள்ளன. இதன் பொருள் என்ன வென்றால், இன்றைய நிலவரப்படி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை எண்ணிக்கைக் கொண்ட கட்சிகள், சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டிற்கு எதிராக நிற்கின்றன என்பதே. எனவே தனது முடிவை மேலும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல இந்த அரசாங்கத்திற்கு எந்த அதிகாரமுமில்லை; எந்த உரிமையும் இல்லை” என்றும் பிரகாஷ் காரத் விவரித்தார்.
            2009 - ஆம் ஆண்டில் வர்த்தகத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படக்கூடாது என ஏகமனதாக பரிந்துரை செய்தது என்பதை சுட்டிக்காட்டிய அவர், அச்சமயத்தில் ஒரு காங்கிரஸ் உறுப்பினர் கூட இந்தப் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும் என்றும் நினைவுகூர்ந்தார்.
            தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அறிக்கையில், இதுதொடர்பாக ஒரு வார்த்தைகூட நாட்டு மக்களுக்கு தெரிவிக்கவில்லை; அதுமட்டுமல்ல, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதால் ஏற்படும் பாதகமான விளைவுகள் குறித்து கவனிக்க வேண்டும் என, பிரதமருக்கு காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியாகாந்தியே கூட கடிதம் எழுதினார் என்பதையும் இப்போது எண்ணிப்பார்க்க வேண்டும் என்றும் பிரகாஷ் காரத் சுட்டிக்காட்டினார்.
                     “இவையனைத்தும் நடந்துள்ள போதிலும், தனது முடிவில் பிடிவாதமாக இருக்கிறார் பிரதமர்... தனது குணநலன்களுக்கு உண்மையாக அவர் நடந்துகொள்கிறார்; அமெரிக்க நாட்டிற்கு தான் அளித்த உறுதி மொழிக்கு உண்மையாக அவர் நடந்துகொள்கிறார்; சொந்த நாட்டு மக்களது நலன்களைவிட அமெரிக்காவின் நலனே அவருக்கு முக்கியமாக இருக்கிறது” என்று சாடிய பிரகாஷ் காரத், 
         “அமெரிக்காவின் ராட்சத சில்லரை வர்த்தக நிறுவனமான வால்மார்ட்டை இந்தியாவிற்குள் கொண்டுவருவதற்கு 2005 -ஆம் ஆண்டிலிருந்தே இந்தப்பிரதமர் முயற்சித்து வருகிறார்; அந்த நாள் முதலே நாங்கள் அதனை உறுதியாக எதிர்த்து வருகிறோம்” என்றும் குறிப்பிட்டார்.
              அரசு அறிவித்துள்ள ஒரு முடிவுக்குக்கூட இந்திய நாட்டின் அரசியல் அரங்கில் ஆதரவு இல்லை என்பதையும் காரத் சுட்டிக்காட்டினார்.
              ''மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை இத்தகைய நாசகர நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தை மேலும் மேலும் தீவிரப்படுத்துவோம். 2005 - ஆம் ஆண்டிலிருந்து 2009 - ஆம் ஆண்டு வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதலாவது அரசை நாங்கள் வெளியிலிருந்து ஆதரித்தோம். அப்போது இந்த முடிவை மேற்கொள்வதற்கு இந்த அரசு துணியவில்லை. இன்றைக்கும் கூட, நான் சவால் விடுத்துச் சொல்கிறேன், மேற்குவங்கத்திலும் கேரளத்திலும் எங்களைக் கடுமையாக எதிர்க்கிற கட்சிகளாம் மம்தா பானர்ஜியும், காங்கிரசும் அந்தக் குறிப்பிட்ட மாநிலங்களில் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு ஆதரவான நிலைபாட்டை ஒருபோதும் எடுக்க முடியாது. இதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பலம். இதுதான் இடதுசாரிக்கட்சிகளின் பலம். இது தான் இந்தப்பிரச்சனையில் இடது சாரிக்கட்சிகள் மக்களின் கருத்தை ஒன்றுதிரட்டியிருப்பதன் பலம்” என்று பிரகாஷ் காரத் பெருமிதத்துடன் கூறினார்.

புதன், 25 ஜூலை, 2012

இதை இந்தியர்கள் அனைவரும் கட்டாயம் படிக்கவேண்டும்...!


சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு - ''இந்தியாவின்   துயரம்''  

          சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை பள்ளிப் பாடப்புத்தகங்களில் ''சீனாவின் துயரம்'' என்று ஒரு பாடம் படித்திருப்போம். அது என்னவென்றால், சீன நாட்டின் இரண்டாவது பெரிய நதி ''மஞ்சள் ஆறு'' என்பது 2500 ஆண்டுகளுக்கும் மேலாக வெள்ளம் சீறிப் பாய்ந்துவரும் நதி ஆகும். அதானால் அந்த நதி பாயும் பகுதிகளில் மக்கள்  வாழ்க்கை நடத்துவதற்கும்,   விவசாயம், வியாபாரம், கால்நடைகள் வளர்ப்பு போன்றவற்றிற்கும் மிகவும் சிரமப்பட்டார்கள். அவர்களின் வாழ்வாதாரம் என்பதே சிரமத்திற்கு உள்ளாகியது. கேள்விக்குறியானது. இந்த இயற்கையின் சீற்றத்திற்கு எதிராக மக்கள் ஒரு வாழ்க்கைப் போராட்டத்தையே நடத்தினார்கள். அதனால் தான் இந்த மஞ்சள் ஆற்றினை ''அன்று'' சீன மக்களும், வரலாற்று ஆசிரியர்களும் ''சீனாவின் துயரம்'' என்று குறிப்பிட்டனர். 
              ஆனால் ''இன்று'' அதே மஞ்சள் ஆற்றினைப் பற்றியோ - சீனாவின் துயரம் என்பது பற்றியோ நாம் பாடப் புத்தகத்தில் பார்க்க முடிகிறதா...? ''துயரம்'' என்பதையே சீனர்கள்  அழித்துவிட்டார்கள். சீன சோஷலிச அரசு இயற்கையின் சீற்றத்தை தனது  கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது தான் அதற்கு காரணம். சீன நாட்டின் ஆட்சியாளர்கள், அந்த இயற்கையின் சீற்றத்தை - பாய்ந்து வரும் வெள்ள நீரை திசை மாற்றிவிட்டார்கள். மஞ்சள் ஆற்றின் பாதையை மூன்றாகப் பிரித்து மற்றப் பகுதிகளில் ஓடும் சிறிய ஆறுகளோடு இணைத்துவிட்டனர். மேலும் அந்த வெள்ள  நீரை பெரிய பெரிய குழாய்கள் மூலமும், வாய்க்கால்கள் மூலமும்  தண்ணீர் பற்றாக்குறையுள்ள மற்ற பகுதிகளுக்கு திருப்பிவிட்டனர்.  ( ஆனால் வீராணம் குழாய்கள் போல் ஊழல்கள் நடக்கவில்லை ) அப்படியாக அனுப்பப்பட்ட தண்ணீர் வயல்களில் பாய்ந்தது. அதனால் அந்தப் பகுதிகளில் விவசாயம் செழித்து வருகிறது. அதனால் ''சீனாவின் துயரம்'' நீங்கி இன்று சீன மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள். இது போன்ற நாடு சார்ந்த - மக்கள் சார்ந்த சாதனைகள் ஒரு சோசலிச நாட்டில் தான் நாம் பார்க்கமுடியும்.
            இதே நம்ப நாடாக இருந்தால் நம் ஆட்சியாளர்கள்  அந்த ஆற்றையே பெப்சி - கோகாகோலாவிற்கு இந்நேரம் விற்றிருப்பார்கள் 
                 உலகத்திலேயே இந்தியா அமெரிக்க ஏகாதிபத்தியம்  கொள்ளையடிக்க ஏற்ற இரண்டாவது மிகப்பெரிய வளம் கொழிக்கும் சந்தை  எது என்று கேட்டால் அது இந்தியா தான். முதலாவது பெரிய சந்தை சீனா. ஆனால் சீனா ஒரு சோஷலிச நாடு என்பதால் அந்த நாட்டில் கடுமையான சட்டங்கள் இருப்பதால்  கொள்ளையடிப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. அங்கே அரசு நிர்ணயிக்கிற விலையில் தான் பொருட்களை விற்றாக வேண்டும். இலாப நோக்கில் அதிக விலைக்கு விற்றால் சீன ஆட்சியாளர்களே  அந்த பலசரக்கு கடையை மூடி திருப்பியனுப்பி வைத்து விடுவார்கள். அங்கே எங்குமே மக்களை ஏமாற்றும் கொள்ளைகளுக்கு அனுமதி கிடையாது. அதேப்போல் அங்கே வேலை செய்யும் சீன தொழிலாளர்களுக்கு கடுமையான தொழிலாளர் சட்டம் பாதுகாப்பாக இருக்கிறது. அதனால் இந்தியாவைப் போல் அங்கே உள்ள தொழிலாளர்களுக்கு குறைந்த சம்பளத்தை கொடுத்து அவர்களை மணிக்கணக்காக வேலை வாங்கி  பிழிந்தெடுக்க முடியாது. அதுமட்டுமல்லாது, சீனாவில் அந்நிய நேரடி  முதலீட்டிலும் கடுமையான சட்டம் உள்ளது. அங்கே அந்நிய நேரடி முதலீடு என்ற பெயரில் கொஞ்சப் பணத்தை முதலீடாகப்  போட்டு, அதனால் வரும் இலாபத்தை உடனே தங்கள் நாட்டிற்கு அள்ளிக்கொண்டு சென்றுவிட  முடியாது. அந்நிய நேரடி முதலீட்டில் கிடைத்த இலாபத்தை மீண்டும் சீனாவிலேயே தான் முதலீடு செய்யவேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. இப்படியாக தங்கள் தேசப் பொருளாதாரத்தின் மீது அக்கறை கொண்டுள்ள சீனா தொழிலாளர்கள் சட்டம், பொருட்கள் விலை நிர்ணயச் சட்டம், அந்நிய நேரடி முதலீட்டுச் சட்டம் போன்ற சட்டங்களை தன்னகத்தே கொண்டுள்ளதால், அங்கே கொள்ளை இலாபத்திற்கு வாய்ப்பும், வழியும் இல்லாததால், அடுத்து அமெரிக்காவின் கண்ணை உறுத்துகிற நாடு இந்தியா தான்.
           இந்தியாவும் இதற்கு முன்பு, கடுமையான சட்டங்களை கொண்ட நாடாகத் தான் இருந்தது. ஆனால், இந்த தேசத்தின் பாதுகாப்பாக - பொருளாதாரத்தின் பாதுகாப்பாக - தொழிலாளர்களின் பாதுகாப்பாக  இருந்த இந்த சட்டங்களை எல்லாம், நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியும், பின்பு வந்த வாஜ்பாய் தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சியின் ஆட்சியும், தற்போது பொறுப்பிலிருக்கும் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சியையும் நீர்க்கச் செய்துவிட்டன. சட்டங்களெல்லாம் வெறும் சட்டங்களாகவே இருக்கின்றன. ஆனால் அந்த சட்டங்கள் எல்லாம் இந்தியாவில் முதலீடு செய்யும் அந்நிய முதலாளிகளுக்கு மட்டும் பாதுகாப்பாகவே இருக்கின்றன.
              நம் நாட்டில் அப்படியாக வளம் கொழிக்கும் துறைகளில் ஒன்று தான் சில்லறை வர்த்தகத்துறை என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இது இந்திய பொருளாதாரத்தின் உறுதியான பொருளாதாரத் தூண்களில் ஒன்றாகவே விளங்குகின்றது என்றால் அது மிகையாகாது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14% பங்களிப்புடனும், மொத்த தொழிலாளர்களில் 7% பேர்களையும் ஓங்கி வளர்ந்த மிகப்பரிய சந்தை இது தான். அதனால் தான் உலக அளவில் உள்ள  பிரம்மாண்டமான முப்பது சந்தைகளில் இரண்டாவது பெரிய ஈர்க்கத்தக்க சந்தை இந்தியா தான் என்று எ.டி.கர்னி நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது
              இந்தியாவின் மொத்த வர்த்தகத்தில் 98% அமைப்புசாரா வடிவத்திலும்,   2%  அமைப்பு சார்ந்த வர்த்தகமாகவும் நடைபெறுகின்றன.  நம் நாட்டில் சில்லறை வர்த்தகம் என்பது  ஆண்டொன்றுக்கு 40% வேகத்தில் வளர்ச்சிபெற்று வருகிறது. இதில் உணவுப்பொருள் விற்பனை மட்டுமே 63% ஆகும். இப்போது 28 பில்லியன் டாலர்களில் இருக்கும் அதன் வணிகம் 2020ல் 260 பில்லியன் டாலர்களாக அதிரிக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. இந்த விஷயம் தான் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு உறுத்தலாக இருக்கிறது.
          இந்தியாவில் அமைப்பு சார்ந்த வர்த்தகப் பிரிவில்  5,00,000 பேர் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர். அமைப்புசாராப் பிரிவில் 4 கோடிக்கும் அதிகமானோர்  வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர். இந்தியாவில் 1.25 கோடிக்கு மேல்  சில்லறை விற்பனை கடைகள் உள்ளன, இவற்றில் 4% மட்டுமே 500 சதுர அடிக்கு மேல் உள்ளவையாகும். மற்றவை எல்லாம் சிறு சிறு விற்பனைக்கடைகளாகும். இந்த அமைப்புசாரா சில்லரைவணிகத்தில் மட்டுமே ஆண்டுக்கு ரூ.7,35,000 கோடிக்கு மேல் விற்பனையாகிறது என்பதைப் பார்க்கும் போது அமெரிக்க ஓநாய்க்கு நாக்கில் எச்சில் ஊருகிறது.
             இந்நிலைலையில், மத்திய அரசின் தாராளமயக் கொள்கையின் விளைவால், அந்நிய சில்லரை வர்த்தக  நிறுவனங்கள் இந்தியச் சில்லறை வர்த்தகத்தைக் கைப்பற்றும் நோக்குடன்
இந்தியாவுக்குள் நுழையத் துடிக்கின்றன. இந்திய ஆட்சியாளர்களும் இரத்தினக் கம்பளம் போட்டு வரவேற்கின்றனர்.
               சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி  முதலீட்டால் நுகர்வோருக்கு 5-10% விலைகள் குறையும் என்றும்,  சில்லறை விற்பனை நிலையங்களிலும் பொருள் போக்குவரத்துத் துறையிலும் ஏராளமானவர்களுக்கு வேலை கிடைக்கும் என்றும்,  விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கு 10-30% கூடுதல் விலை கிடைக்கும் என்றெல்லாம் ஆட்சியாளர்கள் அடுக்கடுக்காக கூறி நம் நாவில் தேனைத் தடவுகிறார்கள். 
                     ஆனால் காலகாலமாக - பரம்பரைப்பரம்பரையாக - குடும்பம் குடும்பமாக சில்லறை வர்த்தகம் செய்பவர்களும், இந்த வர்த்தகத்திற்கு பொருட்களை உற்பத்தி செய்து வழங்கி வரும் இந்திய சிறு உற்பத்தியாளர்களும், இந்திய விவசாயப் பொருள் உற்பத்தியாளர்களும், இந்த சில்லறை வர்த்தகத்தை சுற்றி வியாபாரம் செய்கின்ற பெட்டிக்கடை வியாபாரிகளும், இந்த சிலரை  வர்த்தக நிறுவனங்களில் வேலைசெய்யும் ஆண்களும் - பெண்களும், சுமைத்தூக்கும் தொழிலாளர்களும் - கூலித்தொழிலாளர்களும் - தட்டு வண்டி முதல் லாரி வரை ஓட்டும் தொழிலாளர்களும், சிறு தொழிற்சாலைகளில்  வேலைசெய்யும் தொழிலாளர்களும், விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கக்கூடிய வியாசாயக்கூலித் தொழிலாளர்களும் - என இந்த தேசத்தை சார்ந்த பலகோடி மக்களின் வாழ்வாதாரம் என்பது இந்த சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி நுழைந்தால் கேள்விக்குறியாகிவிடும் என்பது தான் உண்மை. வருமானம் இல்லாமல் இவர்களும் இவர்கள் வீட்டுக் குழந்தைகளும் பட்டினிக் கிடந்து சாகவேண்டியது தான். இதை நிறைவேற்றத் தான்  தான் இலாப வெறிப்பிடித்து அலையும் ஏகாதிபத்தியமும், ஆட்சியாளர்களும், பெருமுதலாளிகளும் துடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
            வால்மார்ட் மட்டுமல்லாமல்  ஸ்வீடனின் எச் & எம், ஐகியா, ஜப்பானின் உனிக்டோ, பிரிட்டனின் டாப்ஷாப், அமெரிக்காவின் ஆப்பிள், போலோ. அபெர்க்ரோம்பீ, பெஸ்ட் பை போன்றவை இந்தியாவில் நுழைந்து கொள்ளையடிக்கக்  காத்திருக்கும் சில்லறை வர்த்தக சங்கிலித் தொடர் நிறுவனங்களில் முக்கியமானவை. 

           இவ்வளவு நடந்துகொண்டிருக்கிறது இந்திய மக்கள் என்ன செய்யப்போகிறார்கள்...? என்பது தான் நமது கேள்வி.                                  

சனி, 26 நவம்பர், 2011

''WALMART SUPER MARKET '' வந்தா நம்ம கஷ்டமெல்லாம் தீர்ந்து போயுடுமுங்க...!

நல்ல காலம் 
பொறக்கப்போவுது...                    
நல்ல காலம் 
பொறக்கப்போவுது... 

                  சில்லறை வர்த்தகத்துல அந்நிய நேரடி முதலீடு வந்தா நம்ம கஷ்டமெல்லாம் தீர்ந்து போயுடும்னு பாராளுமன்றத்துல மந்திரிங்கல்லாம் சொல்லுறாங்க. 
               ஒரு மந்திரி சொல்லுறாரு... ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமாம். நல்ல விஷயம்தானுங்கள... 
                    அப்புறம் இன்னொரு மந்திரி சொல்லுறாரு... சில்லறை வர்த்தகத்துல அந்நிய நேரடி முதலீடு வந்தாக்கா... அந்த பணவீக்கம் குறைந்து போயுடுங்கலாம்... இதுவும் நல்ல விஷயம்தானுங்கள...
                    அப்புறம் இன்னொருத்தர் சொல்லுறாரு... ''வால் மார்ட்'' சூப்பர் மார்கெட் வந்துடுச்சினா... குறைவான விலைக்கு பொருட்களெல்லாம் கிடைக்குமாம்... அப்புறம் என்னங்க நமக்கு கஷ்டம்...  இதை ஏங்க நாம எதிர்க்கணும்...?
                மேலே பாத்தீங்களா எவ்வளவோ பெரிய சூப்பர் மார்கெட்... சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் மாதிரி இருக்குல்ல... சூப்பருங்க...
50,000 முதல் 75,000   சதுர மீட்டர் வரை பரப்பளவு உள்ள மெகா சுப்பர் மார்கெட்டுங்க இது.. இதுல கெடைக்காத பொருட்களே இல்லைங்கலாம்... அம்புட்டு பொருட்களும் கிடைக்குமாம். ஒரு லட்சம் நம் வீட்டுக்குத் தேவையான ஒரு லட்சம் பொருட்கள் இங்கே கிடைக்குமாம்.
 



























            
            இங்கே கிடைக்காத பொருட்களே இல்லைங்க... அன்றாட உணவு தயாரிப்புகளுக்கு தேவையான...சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் முதல் அனைத்து வகை மளிகை சாமான்கள்...  காய்கறி வகைகள்... பழ வகைகள்... ஆடு, மாடு, பன்றி, கோழி இறைச்சி வகைகள்... மீன் வகைகள்... கொறித்து சாப்பிடுவதற்கு தின்பண்டங்கள்... பாணி பூரி... பிசா வகைகள்...  டீ, காபி... குளிர் பானங்கள், ஐஸ் கிரீம்... இப்படி எல்லாம் ஒரே குடையின் கீழ் கிடைக்கும்.  
             எல்லா வகை மருந்துப்பொருட்களும் அங்கெ கிடைக்கும்... டாக்டர்களும் உள்ளே இருப்பார்கள்... மற்றும் திருமணம் ஆகி புதுக்குடித்தனம் நடத்த வீட்டுக்குத் தேவையான அத்துணை பொருட்களும்... பீரோ, கட்டில், கிரைண்டர், மிக்சி, வாஷிங் மிஷின், பிரிட்ஜி, மேசை, நாற்காலி, பாத்திரங்கள், செல்போன், டி.வி., அழகு சாதனப்பொருட்கள், பரிசுப் பொருட்கள்... என அப்பப்பா... இப்படி பல வகைகள் அங்கெ கொட்டிக்கிடக்குமுங்க ...
               பசி ஆறுவதற்கு டிபன் கடை கூட உள்ளே இருக்கும்... மயங்கி கிடப்பதற்கு மதுபானக்கடைகளும், பார்களும் அங்கே மிதந்து வரவேற்கும்.
            இவை எல்லாவற்றையும் வாங்கிவிட்டு பில் போடுவதற்கு ''அனாவசியமாக'' கியூவில் நிற்கவேண்டாம்.  ஏ.டி.எம். மிஷின் போல ஆங்காங்கே பில் போடுகிற மிஷின் வைக்கப்பட்டிருக்கும். நாமே பில் போட்டு பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு வரவேண்டியது தான். இங்கே போயி பொருட்களை வாங்கினா... காசையும் மிச்சப்படுத்தலாமாம்... நேரத்தையும் மிச்சப்படுத்தலாமாம்... இது ரொம்ப நல்லா இருக்கு இல்ல...
              
                 நீங்களும்,  உங்க வீட்டு அம்மணியும்  காலையில எழுந்து பிரஷ் பண்ணிட்டு... உங்க காரை எடுத்துகிட்டு வால்மார்ட் போனிங்கன்னா... அங்க சர்வீஸ் ஸ்டேஷன் -இல் காரை விட்டுட்டு... அங்கேயே முடிவெட்டுற கடை இருக்கும்... அங்கே முடி வெட்டிகிட்டு... பக்கத்துலேயே ''மசாஜ்'' பண்ணி... ''பாத்'' பண்ணி விடுவாங்க.... அதெல்லாம் முடிச்சிகிட்டு... அங்கேயே ''ரெடிமேடு டிரஸ்'' எல்லாம் விற்பாங்க... அதை வாங்கி போட்டுக்கிட்டு...  
                 நல்லவேளையா அங்கேயே அம்மணிக்கு ''பியூட்டி பார்லர்'' இருக்கும்... அங்கே போய் அழகு படுத்திக்கொள்ளலாம்... பிறகு அங்கேயே டிபன் முடிச்சிட்டு ... அப்புறமா வீட்டுக்குத் தேவையான மளிகை சாமான்கள், காய்கறிகள், பழங்கள், ஸ்நாக்ஸ், மட்டன், சிக்கன், பிஷ், குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள்... இப்படியாக எல்லாத்தையும் வாங்கிட்டு... இடையில டீ..காப்பி சாப்பிட்டிட்டு, இப்படியே ஷாப்பிங் பண்ணிட்டே இருந்தீங்கன்னா...''லஞ்ச் டைம்'' வந்துடும்... அதுக்கும் கவலைப்பட வேண்டாம்... அங்கேயே ''ஹோட்டல்...''  சாரி ''ரெஸ்டாரென்ட்'' இருக்கும்... அங்கே சாப்டுட்டு... மீண்டும் ''ஷாப்பிங்'' பண்ணிட்டு...    
                அதுக்குள்ளே மாலை நேரம் வந்துடும்... அப்போது சாப்பிடவேண்டிய ''ஸ்நாக்ஸ், டீ, காப்பி'' எல்லாம் சாப்பிடுட்டு... மீண்டும் ஷாப்பிங் செய்து டி.வி. விளம்பரத்தில் பார்த்த விடுபட்ட  பொருட்களையும் தேடி அலசி பார்த்து வாங்கிட்டு... நீங்க வாங்கினப் பொருட்களையெல்லாம் கையிலயோ.. தலையிலேயோ தூக்கிகிட்டு அலையவேண்டாம்.. அங்கேயே ''ட்ராலி'' நிறைய இருக்கும்... அம்புட்டு பொருளையும் அதுக்குள்ளேயே அடுக்கிக்கலாம்...
                    அதுக்குள்ளயே..  இரவும்  வந்துடும்... அப்படியே சுத்தி நோட்டம் விட்டீங்கன்னா... கவர்ச்சியா லைட்டெல்லாம் போட்டு ''பார்'' உங்களை வரவேற்கும்... அங்கே போகாம வீட்டுக்கு போயிட்டா நமக்கும் மரியாதை கிடையாது... அந்த ''பாருக்கும்'' மரியாதை கிடையாது... அரசாங்கம் நடத்துற  ஒயின் ஷாப்பை விட... பார் - ஐ விட இது சூப்பரா இருக்கும்... நைட்டு படுத்தா தூக்கம் வர்றதுக்கு இங்க போயி கொஞ்சம் ஊத்திகிட்டு... அங்கேயே ''டின்னர்'' - ஐயும்  முடிச்சிகிட்டு... நீங்க காலைல சர்வீஸ் ஸ்டேஷன் -ல உங்க காரை விட்டீங்கள ஞாபகம் இருக்கா... அது இப்போ சர்வீஸ் எல்லாம் முடிஞ்சி புதுப்பொலிவுடன்  ''கார் பார்கிங்''- ல உங்களுக்காக ''வெயிட்'' பண்ணும்...  
            நீங்க வீட்டுக்கு கிளம்பரத்துக்கு  முன்னாடி, காலையிலிருந்து இரவு வரை வாங்கின அத்துணை பொருட்களின் ''பில்''லையும் செட்டில் செய்யணும்... உங்க ''பர்ஸ்''-ல இருக்கிற ''கிரடிட் கார்டை''யோ... ''ஏ. டி. எம்  கார்டை''யோ கொடுத்தீங்கன்னா... நீங்க கஷ்டப்பட்டு சம்பாரித்த பணத்தையெல்லாம் உறிஞ்சி எடுத்துக்கொள்வார்கள்... அல்லது கையில பணத்தை வெச்சிருந்தீங்கன்னா... உங்க பர்சையும், பாக்கெட்டையும் காலிப் பண்ணிட்டு  தான் உங்கள வெளியே விடுவாங்க...   பிறகு நீங்க சந்தோஷமா உங்க காரை எடுத்துக்கொண்டு அங்கேயே பெட்ரோலும் போட்டுக்கிட்டு, பிறகு  உங்க வீட்டுக்குப் போயி படுத்து தூங்கிட வேண்டியது தான்...
             இது ரொம்ப நல்லா இருக்கு இல்ல...
             இப்போ நாம் இவ்வளவு பொருட்களையும் வாங்கணும்னா... நாலு நாட்கள் ஆகும்... மாளிகைக்கு ஒரு இடம் போகணும்... காய் - பழத்துக்கு ஒரு இடம் போகணும்... துணி - மணிங்க வாங்கணும்னா ஒரு இடத்துக்கு போகணும்... மீன் வாங்கணும்னா ஒரு இடத்துக்கு போகணும்... ஹோட்டலுக்கு ஒரு இடம் போகணும்... காரை ஒரு இடத்துல விட்டுட்டு காலு வலிக்க நடக்கணும்... இந்த கஷ்டமெல்லாம் இந்த ''வால்மார்ட்'' - ல  கிடையாதுங்க...  
            இங்கு விலைகளும், வெளியில நாம் வாங்குற விலையை விட இங்கு மிக குறைவுங்கலாம்... காசும் மிச்சம்... நேரமும் மிச்சமுங்க...
               அது மட்டுமில்லைங்க... அமெரிக்க வால்மார்ட் - ல  துப்பாக்கி, கைத்துப்பாக்கி, வெடிமருந்து போன்றவைகளும் விக்கிறாங்களாம்... ஹை... ஜாலி நம் வீட்டுக் குழந்தைங்களும் இனி துப்பாக்கி எல்லாம் வெச்சுகிட்டு விளையாடுவாங்க...
                      இந்தியாவுல இந்த வால் மார்ட் சூப்பர் மார்கெட்ட.. இந்திய பெருமுதலாளி மிட்டலுக்கு சொந்தமான பாரதி நிறுவனத்தோடு சேர்ந்து நடத்தப்போறாங்கலாம் ... அந்த சூப்பர் மார்கெட்டுக்கு இந்தியாவுல என்ன பேரு  வெச்சிருக்காங்க தெரியுமா...? ''பெஸ்ட் பிரைஸ் - BEST PRICE''.
     இந்த பெயரை திட்டமிட்டு தான் வெச்சிருக்காங்களாம்... ''பெஸ்ட் பிரைஸ்'' என்றால் வெளியில் உள்ள விலையை விட இங்கே விலை   குறைவாக இருக்கும் என்று அர்த்தமாம்... இந்த பெயரை ஏன் வெச்சாங்கன்னா... அதுக்குப் பின்னாடியும் ஒரு மிகப்பெரிய சூழ்ச்சி இருக்கு...
              பாராளுமன்றத்திலேயும், வெளியிலேயும் இடதுசாரிகளும் மற்றவர்களும்... சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிப்பதை எதிர்த்தும், வால்மார்ட்டை எதிர்த்தும் போராட்டம் நடத்துகிறார்கள் அல்லவா...?  அப்படின்னா என்ன அர்த்தம்... வால்மார்ட் நடத்துற ''பெஸ்ட் பிரைஸ்'' கடையையும் எதிர்க்கிறார்கள்  என்று தானே அர்த்தம்.... இந்தியாவுல பெஸ்ட் பிரைஸ் கடைகளெல்லாம் மக்களுக்கு பொருட்களெல்லாம் விலை மலிவா கொடுக்குற கடைகள்... நமக்கெல்லாம் நல்லது செய்யற கடைகள்  என்கிற எண்ணத்தை மக்களுக்கு உண்டுபண்ணிவிடுவதால்... அந்த கடைகளெல்லாம் இந்தியாவிற்கு   வேண்டாம் என்று இடதுசாரிகள் சொன்னால் - போராடினால், இடதுசாரிகள் - கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்க    தங்களுக்கு  வேண்டாதவர்களாக மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக - மக்களை கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக திருப்புவதற்காகவே    பெருமுதலாளிகள் இந்த பெயரை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றால் அதன் சூழ்ச்சியை புரிந்துகொள்ளுங்கள்...                  அதுமட்டுமல்ல... இப்படி விலை குறைவாக இருக்கிறது என்ற காரணத்தால் நாமெல்லோரும் நிச்சயமாக அங்கே தான் பொருட்களை வாங்குவோம்... அப்படி வாங்கும் போது, பரம்பரை பரம்பரையாக - குடும்பம் குடும்பமாக சில்லறை வர்த்தகத்தில் ஈடுப்பட்டிருப்போரின் கடைகள் என்னவாகும்... மக்கள் வருகை இல்லாவிட்டால், பொருட்களின் வியாபாரம் நடக்காவிட்டால் அவர்கள் தங்கள் கடைகளை இழுத்து மூடவேண்டியது தான்.... அப்படி மூடினால் இந்தியாவில் சில்லறை வர்த்தகம் செய்யும் ஏழு கோடி குடும்பங்கள் பாதிக்கப்படும்... சில்லறை வர்த்தகம் என்றால் சிறு சிறு முதலாளிகள் மட்டுமல்ல... அதில் வேலை செய்பவர்கள், விற்பனையாளர்கள், மற்ற பணியாளர்கள், சுமை தூக்குபவர்கள், மாட்டு வண்டி - ரிக்சா - மூன்று சக்கர வண்டி - ஆட்டோ தொழிலாளர்கள் இப்படியாக பல கோடி பேர் வேலை இழப்பார்கள்... அதைப்பற்றி நமக்கென்னங்க கவலை... அப்படின்னு நாம் வழக்கம் போல் இருந்துவிடலாம்....
                ஆனால்... இந்த கடைகளெல்லாம் மூடப்பட்ட பின், இந்த ''பெஸ்ட் பிரைஸ்'' கடையில விக்கிற பொருட்களின் விலைகள் எல்லாம் நான்கு மடங்கு - ஐந்து மடங்காக தாறுமாறாக உயர்ந்துவிடும். அது எவ்வளவு விலையானாலும், நாம் உண்டு உயிர்வாழ்வதற்கு  அவ்வளவு விலைகளையும் கொடுத்து தான் வாங்கவேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுவிடுவோம் என்பதை மறந்து விடாதீர்கள். 
             இந்திய மக்களே... தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்... ''வால்மார்ட்'' நமக்கு தேவையா...?  ''பெஸ்ட் பிரைஸ்'' நமக்கு தேவையா...? சில்லறை வியாபாரிகளும், தொழிலாளர்களும், பொதுமக்களும் வாழ்வாதாரத்தை இழக்கக்கூடிய ''அந்நிய நேரடி முதலீடு'' நமக்கு தேவையா..? சிந்தித்துப் பாருங்கள்...! செயல்படுங்கள்..!