இலங்கை பிரச்சனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கை பிரச்சனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 22 ஜூன், 2013

ராஜீவ் - ஜெயவர்த்தனே உடன்பாட்டைச் செயல்படுத்த இந்தியா தலையிட வேண்டும்....!

 பிரதமருக்கு சீத்தாராம் யெச்சூரி எம்.பி., கடிதம்                       
         இந்திய - இலங்கை ஒப்பந்தத்தைச் செயல்படுத்த இந்திய அரசு முன்வரவேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியலமைப்புக்குழு உறுப்பினரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சீத்தாராம் யெச்சூரி கடிதம் எழுதியுள்ளார்.அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
          ஊடகங்களில் வெளியிட்டிருப்பது போல் இலங்கையின் வடக்கு மாநில கவுன்சில் தேர்தலுக்கு முன் இலங்கை அரசியல் சட்டத்தின் 13-வது திருத்தத்தின் சில முக்கிய பகுதிகள் திட்டமிட்டே நீர்த்துப் போகும் வகையில் சில ஆலோசனைகளை இலங்கை அரசு முன் வைத்திருப்பதைக் கண்டு உங்கள் கவலையினை வெளியிட்டிருப்பது முற்றிலும் சரியானதே. 13-வது திருத்தத்தையும் அதற்கு மேலும் சென்று ஒரு அரசியல் தீர்வினை கொடுப்பதாக இந்திய அரசிடமும் சர்வதேச சமூகத்திடமும் இலங்கை அரசு கொடுத்த வாக்குறுதிகள் பற்றிய சந்தேகத்தினை தற்போது இலங்கை அரசால் முன்வைக்கப்படும் மாற்றங்கள் எழுப்புகின்றன.
           போர்ப் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கக்குழு தன்னுடைய பரிந்துரையாக வைத்திருந்த மாநிலங்களுக்கு அதிகாரப் பகிர்வினை அளிக்கும் அரசியல் தீர்வு என்ற நோக்கத்துக்கு தற்போது இலங்கை அரசு முன்வைக்கும் மாற்றங்கள் எந்த வகையிலும் பொருந்துவதாக இல்லை. இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நல்வாழ்வு குறித்தும் அங்கு வாழும் தமிழ் சமூகம் இலங்கையில் கண்ணியமான வாழ்வும், சம உரிமையும் பெற்று குடிமக்களாக வாழ வேண்டும் என்பதிலும் இந்தியாவில் ஆழ்ந்த அக்கறை உள்ளது. நீங்கள் தெரிவித்துள்ள கருத்தின் வழியே நின்று, எதிர்காலத்தில் சமத்துவம், நீதி, சுயமரியாதையுடன் இலங்கையில் உள்ள தமிழ் சமூகம் வாழ்வதற்கான உறுதிப்பாட்டினைப் பெற இந்திய அரசு தனது அரசியல் உறவினை செயலூக்கத்தோடு பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். 13-வது திருத்தம் என்பது வரலாற்று ரீதியாக ஏற்கனவே உருவான ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக உருவானது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இறையாண்மை மிக்க இந்த இரு நாடுகளும் அவர்களுக்கிடையேயான நல்லுறவை வலுப்படுத்திக்கொண்டே, அந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான ஊக்கமுடன் இந்திய அரசு செயல்படவேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------------------


Sri Lankan Tamil issue - Yechury's Letter to PM

Dear Dr. Manmohan Singhji,

It was a relief to hear your comments expressing dismay, as reported by the media, at the suggestion that the Government of Sri Lanka planned to dilute certain key provisions of the 13th Amendment to the Sri Lankan Constitution ahead of elections to the Northern Provincial Council.

It was noted that the proposed changes raised doubts about the commitments made by the Sri Lankan Government to India and the international community, including the United Nations, on a political settlement in Sri Lanka that would go beyond the 13th Amendment. The changes would also be incompatible with the recommendation of the Lessons Learnt and Reconciliation Commission (LLRC), set up by the Government of Sri Lanka, calling for a political settlement based on the devolution of power to the provinces.

There is deep concern in India about the welfare and well being of the Tamil community in Sri Lanka and hoping that the Sri Lankan Tamil community would lead a life of dignity, as equal citizens, in Sri Lanka.

I would urge you to ensure that the Government of India plays a proactive diplomatic role in discharging its commitment for a future for the Sri Lankan Tamil community marked by equality, justice and self-respect. Needless to add, this 13th Amendment was the consequence of the historic Rajiv-Jayawardene Accord. It is, thus, expected that India plays a role in the implementation of the provisions of the Accord, while strengthening the best of relations between our two sovereign countries.

With regards,

Yours sincerely

Sd/-

(Sitaram Yechury)
 

புதன், 5 ஜூன், 2013

இலங்கை : தேசிய இனப்பிரச்சனையும் மாறியுள்ள உலகச் சூழலும்....!

        

 கட்டுரையாளர் : தோழர்.டி.கே.ரங்கராஜன், எம்.பி.,        
                             மத்தியக்குழு உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி         
         இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாட்டை விமர்சித்து ‘ஜூனியர் விகடன்’ ஏட்டில் கழுகார் பதில்கள் பகுதியில் எழுதப்பட்டிருந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி எழுதிய விளக்கத்தை அந்த ஏடு வெளியிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட்டுகளின் சிந்தனைக்கு என்ற தலைப்பில் பத்திரிகையாளர் ப.திருமாவேலன் தொடர்ந்து 10 இதழ்கள் நீண்ட நெடிய கட்டுரைகளை எழுதித்தள்ளியுள்ளார். அந்தக் கட்டுரையில் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின் போன்ற தலைவர்களின் மேற்கோள்கள் பொருத்த மற்ற வகையில் எடுத்தாளப்பட்டிருந்தன.
         இவற்றைப் படித்தபோது, மாவோ கூறிய வார்த்தைகள் தான் நினைவுக்கு வந்தன. 1948-ல் மக்கள் சீனத்தில் மாவோ தலைமையில் ஆட்சியமைத்த கம்யூனிஸ்ட்டுகள் சுயநிர்ணய உரிமை குறித்த முந்தைய நிலைபாடுகளை பின்பற்றவில்லை. திபெத்தியர்களுக்கு தனிநாடு வேண்டும் என்ற தலாய்லாமாவின் கோரிக்கையை சீன கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. தலாய்லாமாவின் மடத்தைச் சேர்ந்த பஞ்சன்லாமா சீனாவுடன் திபெத் சேர்ந்து இருக்க வேண்டும் என்ற நிலைபாட்டை ஏற்று சீனாவிலேயே தங்கிவிட்டார். இந்தப் பின்னணியில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சில தோழர்கள் மார்க்ஸ், லெனின் உரைகளிலிருந்து மேற்கோள்காட்டி சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தினர். அதற்கு பதிலளித்த மாவோ இப்படிக்கூறினார்... “இப்போதும் கூட சிலர் மார்க்சிய லெனினிய அறிஞர்கள் உரையிலிருந்து சில மேற்கோள்களை எடுத்துச் சொல்லி அவைகளே அனைத்துத் தீங்குகளையும் எளிதாக தீர்க்க வல்லது என்று கருதுகின்றனர். அறியாமையில் உழலும் அத்தகையோர் தான் மார்க்சியம்-லெனியத்தை ஒரு வகையான சமயக்கோட்பாடாக கருதுகின்றனர். அவர்களிடம் மழுப்பல் எதுவுமில்லாமல் தெளிவாகச் சொல்லிவிட வேண்டும். உங்கள் கோட்பாடு எந்தப் பயனும் அற்றது. நம்முடைய கொள்கை வறட்டு சித்தாந்தமல்ல. செயலுக்கான வழிகாட்டி என மார்க்ஸ், லெனின் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் திரும்பத் திரும்ப வலியுறுத்தியுள்ளனர். அத்தகைய சிறப்புமிக்க மிக மிக முக்கியமான வழிகாட்டுதலை இந்த மனிதர்கள் மறந்துவிடுகிறார்கள்” சுய நிர்ணய உரிமை குறித்து மாமேதைகள் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரை மேற்கோள் காட்டும் அறிவு ஜீவிகள் மாவோ கூறியதை மறந்தும் கூறுவதில்லை. ஏனெனில் அவரது அணுகுமுறை தங்களது வாதத்திற்கு உதவாது என்பதை அவர்கள் நன்கறிவார்கள். நீங்கள் எந்தப்பக்கம் நிற்கிறீர்கள் என்ற கேள்வியோடு திருமாவேலனின் கட்டுரை நிறைவு பெற்றுள்ளது. மார்க்சிஸ்ட்டுகளைப் பொறுத்தவரை இலங்கையில் தொடர்ந்து இன்னலுக்கு உள்ளாகியுள்ள தமிழர்களின் பக்கம் நிற்கிறோம் என்று எங்களால் தைரியமாகச் சொல்ல முடியும். இலங்கையில் இனப்பிரச்சனை துவங்கியதிலிருந்து அந்த மக்களின் பக்கமே நின்று வந்துள்ளோம் என்று எங்களால் கூறமுடியும். ஆனால் தமிழீழம் மற்றும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரிப்பவர்கள் மட்டுமே இலங்கைத் தமிழர்கள் பக்கம் நிற்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் இலங்கை அரசின் ஆதரவாளர்கள், கைக்கூலிகள் என்று முத்திரை குத்துவது இங்கு சிலருக்கு பழக்கமாகிவிட்டது. இலங்கைத் தமிழர் பிரச்சனையில் எல்டிடிஇ இயக்கத்தின் அணுகுமுறை, சமரசமான தீர்வு ஏற்பட தடையாக இருந்ததை பல இயக்கங்கள் அப்போதும் விமர்சித்துள்ளன. இப்போதும் விமர்சிக்கின்றன.     
       எல்டிடிஇ வலுவாக இருந்த காலத்தில் அத்தகைய விமர்சனங்களை முன்வைத்த இலங்கையைச் சேர்ந்த தமிழர் தலைவர்கள், சகபோராளிக் குழுக்களை எவ்வாறு அணுகியது, எவ்வாறு கணக்குத் தீர்த்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்தியாவிலும் தமிழகத்திலும் தியாகத்தால் புடம்போட்டு வளர்க்கப்பட்ட இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு உபதேசம் செய்பவர்கள் அல்ல. விடுதலைப் போராட்ட காலம் துவங்கி இன்று வரை மக்களுக்காக தொடர்ந்து போராடி சித்ரவதைகளை, சிறைக்கூடங்களை இன்முகத்தோடு ஏற்றவர்கள் மார்க்சிஸ்ட்டுகள். இந்த நீண்ட நெடிய போராட்டத்தில் பலரை களப்பலியாக தந்த இயக்கம் இது. குன்னியூர் சாம்பசிவ அய்யர் எனும் நிலப்பிரபுவை எதிர்த்துப் போராடிய களப்பால் குப்பு எனும் மாவீரன் 31 வயதில் சிறையில் விஷம் கொடுத்து கொல்லப் பட்டார். வாட்டாகுடி இரணியன், சிவராமன், ஆறுமுகம், மலேயா தோழர்கள் எஸ்.ஏ. கணபதி, வீரசேனன் என நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து போராடியதால் சுட்டுக்கொல்லப்பட்ட தியாகிகளைக் கொண்ட இயக்கம் இது. வெண்மணியின் கண்மணிகள், பொன்மலையின் தியாகதீபங்கள் பூந்தாலங்குடி பக்கிரி, தியாகி வெங்கடாச்சலம், அன்னை லெட்சுமி, திண்டுக்கல் அக்னீஸ்மேரி, தூக்குமேடை தியாகி பாலு, மாரி, மணவாளன், தில்லைவனம், மதுரை ஐ.வி.சுப்பையா, பூந்தோட்டம் சுப்பையா, ராமசாமி இவர்களது வழியில் தியாகி லீலாவதி, சின்னியம்பாளையம் தியாகிகள், கோவை ஸ்டேன்ஸ் மில் தியாகிகள், ஆஷர்மில் பழனிச்சாமி, திருப்பூர் பழனிச்சாமி, இடுவாய் ரத்தினசாமி, நன்னிலம் நாவலன், பள்ளிப்பாளையம் வேலுச்சாமி என பல தோழர்கள் மக்கள் போராட்டங்களில் மரணத்தை பரிசாகப் பெற்றவர்கள். இந்தியாவிலும் தமிழகத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வழிநடத்திய, வழி நடத்துகிற தலைவர்கள் பலரும் சிறையையும் அடக்குமுறையையும் தங்களது வாழ்வின் ஒரு பகுதியாக கொண்டவர்கள். இலங்கைப் பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய கொள்கை வழி நின்று ஒரு முடிவை எடுத்துள்ளதால் கட்சி இன்றைக்கல்ல, தமிழகத்தில் கடுமையான இனவெறி அடிப்படையிலான முழக்கங்கள் எழுப்பப்பட்ட காலத்திலேயே அவதூறுகளை சந்தித்துள்ளது. ஆனால், இத்தகைய அவதூறுகளை பின்னுக்குத்தள்ளி இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வுகாண வேண்டும். அங்குள்ள தமிழ் மக்கள் தங்களது பாரம்பரிய வாழ்விடத்தில் அனைத்து உரிமைகளுடன் வாழவேண்டும் என்பதை தொடர்ந்து கூறி வந்துள்ளது. நாடாளுமன்றம், சட்டமன்றம், மக்கள் மன்றங்களில் தனது கருத்தை அழுத்தமாக எடுத்து வைத்துவந்துள்ளது. இலங்கையில் இறுதிப்போர் முடிவடைந்த நிலையில் தொடர்ச்சியாக பல்வேறு இயக்கங்களை நடத்தி வருகிறது. ஆனால், தனி ஈழம் என்ற யோசனையை மட்டுமே முன்வைக்கும் அறிவு ஜீவிகள் மற்றும் இயக்கங்கள் மார்க்சிஸ்ட் கட்சியை விமர்சிக்கின்றன. அதற்காக அவர்கள் மார்க்சியத்தையும் துணைக்கு அழைத்துக்கொள்கின்றன. அவர்களது மார்க்சிய ஈடுபாடு நம்மை புல்லரிக்க வைக்கிறது. இந்தியப் பிரச்சனையில் இவர்களில் பலர் மார்க்சீயத்தை நடைமுறைப்படுத்த முன்வருவதில்லை என்பதையும் இவர்கள் யார் பக்கம் நிற்கிறார்கள் என்பதையும் நாம் தெரிந்தே வைத்திருக்கிறோம். இலங்கைத் தமிழர் பிரச்சனை இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய துயரம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
             அரசியல் அதிகாரம், மொழி, கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் சிங்கள மேலாதிக்க ஆட்சியாளர்களால் தமிழ் மக்களுக்கு உரிமை மறுக்கப்பட்டது என்பதிலோ, 30 ஆண்டுகளுக்கும் மேல் அமைதியான வழியில் போராடியவர்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை ஏற்பட்டதற்கு சிங்கள மேலாதிக்கம்தான் காரணம் என்பதும் மறுக்கமுடியாத ஒன்று. ஆனால் நெடிய போராட்டத்தில் நிலைமைக்கேற்ப உத்திகளை வகுக்க வேண்டும் என்பது உலக போராட்ட அனுபவமாகும். சமரசம் என்ற சொல்லை கெட்ட சொல்லாக கருதக்கூடாது என்று மாவீரன் பகத்சிங் ஒரு முறை குறிப்பிட்டார். பல்வேறு நிர்பந்தங்கள் மற்றும் யதார்த்த நிலை காரணமாக சமரசத் தீர்வுக்கு இலங்கை ஆட்சியாளர்கள் நெருங்கி வந்த சமயங்களில் அது தட்டிவிடப்பட்டது யாரால் என்பதை மறைக்க முடியாது. 
         நேபாளத்தில் மாவோயிஸ்ட்டுகள் ஆயுதந்தாங்கிய போராட்டத்தை நடத்தினர். மறுபுறத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் போராடின. மாவோயிஸ்ட்டுகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பங்காற்றியது. உலகளவிலும் நேபாளத்திலும் ஏற்பட்ட மாற்றங்களை கருத்தில் கொண்ட மாவோயிஸ்ட்டுகள் ஜனநாயக பாதைக்கு திரும்பினர். இதன்மூலம் நேபாளத்தில் மன்னராட்சி முறை தூக்கியெறியப்பட்டு ஜனநாயக அரசியல் துவங்கியது. இந்தியாவின் அண்டை நாடான மியான்மரிலும் ராணுவ ஆட்சியை எதிர்த்து தொடர்ச்சியாக இயக்கம் நடந்து வருகிறது. மியான்மரின் வரலாற்றை, இப்போதைய போராட்டத்தை உற்றுக் கவனிப்பவர்கள் நிலைமைக்கேற்ப சமரசம் மற்றும் தொய்வற்ற ஜனநாயகப் பூர்வ போராட்டம் என்ற பாதையில் அந்நாட்டின் ஜனநாயக இயக்கம் பயனித்து வருவதை புரிந்துகொள்ள முடியும்.தமிழ் ஈழ வரலாறு, பண்டைய மன்னர்கள் பெருமை, சிங்களத்தை வென்ற பெருமைகள் என்று இப்போதும் பேசப்பட்டும், எழுதப்பட்டும் வருகிறது. ஆனால் பிரச்சனைக்குத் தீர்வு காண கடந்த காலம் குறித்த பெருமிதம் மட்டும் போதாது. மாறாக, அந்தநாட்டின் யதார்த்த, இப்போதைய பூகோள நிலைமையை மட்டுமல்ல, உலகளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அதன் பலாபலன்களையும் புரிந்துகொள்வது அவசியமாகும். குறிப்பாக ஏகாதிபத்தியத்தின் தன்மையையும் வளர்முக நாடுகளின் நிலைமையையும் கருத்தில் கொள்ளவேண்டும். அரசியல் போராட்டங்களில் வரலாறு ஒரு ஆயுதமாக பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. இது குறித்து பிரபல வரலாற்று அறிஞர் பேராசிரியர் எரிக்ஹோப்ஸ்பாம் தெரிவித்துள்ள கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது. “ஹெராயின் என்ற போதைப் பொருளுக்கு பொப்பி மலர் மூலப்பொருள்.
         அது போல தேசியவாத கருத்துக்கள், இனக் குழு சார்ந்த கருத்துக்கள் மற்றும் அடிப்படைவாதங்கள் ஆகியவற்றிற்கு வரலாறு ஒரு மூலப்பொருளாக அமைகிறது. இப்படிப்பட்ட கருத்துக்கு கடந்தகாலம் என்பது ஒரு அத்தியாவசியமான கூறு. இக்கருத்துக்கு பொருத்தமான கடந்தகாலம் இல்லையென்றால் அதனை வேண்டிய வகையில் ஆக்கிக்கொள்ள முடியும். எதையும் நியாயப்படுத்த கடந்த காலம் உதவுகிறது. மகிழ்ச்சியுடன் கொண்டாடு வதற்கு அதிகம் இல்லாத நிகழ்காலத்திற்கு ஒரு புகழ் பூத்த பின்னணியை கடந்தகாலம் வழங்குகிறது. ”அவர் மேலும் கூறுகிறார்,” வரலாறு எழுதும் தொழிலானது, அணு ஆய்வு பௌதீக இயல் போல அல்லாது யாருக்கும் தீங்கு விளைவிக்காத ஒரு தொழில் என நான் எண்ணிப்பார்த்தேன். ஆனால் இத் தொழில் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதை இப்போது உணர்கிறேன். பிரித் தானியாவில் ஐரிஷ் குடியரசுப் படையினர் ரசாயன உரத்தை வெடிகுண்டாக மாற்றுவதற்குப் பயன்படுத்திய தொழிற்சாலைகள் போல் எங்கள் படிப்பறைகள் வெடிகுண்டு தொழிற்சாலைகளாக மாறக் கூடியவை. இது எங்களைப்போன்ற வரலாறு எழுதுவோரை இருவகையில் பாதிக்கிறது. ஒன்று வரலாற்று உண்மை களை எடுத்துரைக்கும் பொறுப்பு எமக்கு இருப்பதை பொதுவாக உணர்ந்துகொள் வது, இரண்டாவதாக அரசியல் தத்துவ நோக்கங்களுக்காக வரலாற்றை தவறாக பயன்படுத்தப்படுவதை கண்டிக்கும் பொறுப்பு எமக்கு இருப்பதை உணர்ந்து கொள்வது ”இலங்கையில் துவங்கிய தமிழர் உரிமை போராட்டத்தின் வரலாற்றுப் பின்னணியை புரிந்துகொள்ளும் அதே நேரத்தில் கடந்தகால வரலாற்றின் வழியில் நின்று மட்டும் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். தற்போதுள்ள உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள மனித உரிமைகளின் அடிப்படையில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும். இரண்டாவது உலகப்போருக்குப் பின்பு விடுதலையடைந்த பல நாடுகளிலும் தீர்க்கப்படாத மொழிப்பிரச்சனை, இனப்பிரச்சனை, மதப்பிரச்சனைகள் உண்டு. இப்பிரச்சனைகள் தொடர வேண்டும் என் பதில் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள் குறியாக உள்ளன.தன்னுடைய நோக்கத்திற்காக இலங்கை அரசை அமெரிக்க ஏகாதிபத்தியம் பயன் படுத்திக் கொண்டது, பயன்படுத்திக் கொள்கிறது என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு உண்மை எல்டிடிஇ இயக்கத்தையும் அமெரிக்கா தன்னுடைய நோக்கத்திற்கு சில சமயங் களில் பயன்படுத்திக் கொண்டது என் பதும் பல்வேறு நாடுகளில் இத்தகைய அரசியல் விளையாட்டை ஏகாதிபத்தியம் நடத்தி வருகிறது என்பதும் உண்மை. சுதந்திர இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள்தான் இந்திய ஒருமைப் பாட்டை பாதுகாக்க உதவும் என்ற கருத்தை கம்யூனிஸ்ட்டுகள் அழுத்தமாக முன்வைத்தார்கள்.
           அப்போது இதற்கு மாற்றாக திராவிட நாடு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இன்றைக்கு தேசிய இனப்பிரச்சனைக்கு சுய நிர்ணய உரிமை ஒன்றே தீர்வு என்று சிலர் முன்வைப்பதைவிட பல மடங்கு வாதங்களை திராவிட இயக்கம் முன்வைத்தது. இதற்கு எதிரான கருத்துப்போராட்டத்தை கம்யூனிஸ்ட் இயக்கம் நடத்தியது. ஒன்று பட்ட கம்யூனிஸ்ட் கட்சி ஏடான ‘ஜன சக்தி’யில் வந்த கட்டுரைகளே இதற்கு சான்று. எதார்த்ததிற்கு பொருந்தாத இந்தக் கோரிக்கை என்ன ஆனது என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. சோவியத் ஒன்றியம் உருவான போது இதர சிறுபான்மை தேசிய இனங்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டிய தேவை ரஷ்யக் கம்யூனிஸ்டுகளுக்கு இருந்தது. பல்வேறு தேசிய இனங்கள் ஜார் ஆட் சியில் ஒடுக்கப்பட்டு வந்தன. ஆகவே தான் தோழர் லெனின் சோவியத் அர சியல் சட்டத்தின் பிரிவு 17ல் தேசிய குடியரசுகளுக்கு பிரிந்துபோகும் உரிமையை சேர்த்தார். சோவியத் ஒன்றியம் ஒன்றாக இருந்தவரை தேசிய இனங்கள் பிரிந்து போகவில்லை. ஆனால் சோவியத் ஒன்றியத்தில் சோசலிசத்திற்கு பின்னடைவு ஏற்பட்ட பின்னணியில் பல்வேறு நாடுகள் மீண்டும் பிரிந்து போயின. மார்க்சியம் என்பது வறட்டு சூத்திரம் அல்ல. அது ஒரு வளரும் விஞ்ஞானம். திட்டவட்டமான நிலைமைக்கேற்ப, திட்டமிட்ட பகுப்பாய்வை கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் மார்க்சியத்தின் அடிப்படைகளில் ஒன்று. இன்றைக்கு மாறியுள்ள உலக சூழ்நிலை மற்றும் ஒரு துருவ உலகை உருவாக்க முயற்சிக்கும் ஏகாதிபத்தியத்தின் திட்டம் ஆகிய வற்றை கருத்தில் கொண்டே மார்க்சிய இயக்கங்கள் தங்களது நிலைபாட்டை உருவாக்க முடியும். உலக வரலாற்றில் இயற்கையை புரிந்து கொள்ள நிக்கோலஸ், கோபர் நிக்கர்ஸ், கலிலியோ போன்றவர்கள் எடுத்த முயற் சிக்கு மேல் புதிய கண்டுபிடிப்புகளை ஐசக் நியூட்டன் கண்டுபிடித்தார். ஆனால் முன்னோர்களின் கண்டுபிடிப்பு களை நியூட்டன் நிராகரிக்கவில்லை. மாறாக 1678ல் ஐசக் நியூட்டன், ராபர்ட், ஹூக்குக் எழுதிய கடிதத்தில் எனக்கு முன்னோடியாக இருந்த பேரறிவாளர் களின் தோள்களின் மீது நின்றுதான் என் னால் முன்னோக்கி பார்க்க முடிகிறது’ என்று கூறியிருந்தார். மார்க்சியத்தின் அடிப்படை நிர்ணயிப் பின் நிலையில் நின்று மாறிவரும் உலக நிலைமையை பகுப்பாய்வு செய்து அதற் கேற்ப தீர்வு சொல்வதே மார்க்சியத்தை பொருத்தும் சரியான வழியாகும். தேசிய சுயநிர்ணய உரிமை குறித்து லெனினது வார்த்தைகளை வரிந்து வரிந்து மேற்கோள் காட்டும் நண்பர்கள் ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சி மற்றும் அபாயம் குறித்து அவர் எழுதிக்குவித் துள்ள கட்டுரைகளையும் படிப்பது நல்லது. தமிழகத்தில் உள்ள தமிழ்மக்களின் பிரச்சனைக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக போராடி வருகிறது. உத்தப்புர தீண்டாமை சுவர் இடிப்பு துவங்கி அருந்ததிய மக்களின் உள் ஒதுக்கீடு வரை, வாச்சாத்தி மலை வாழ் மக்களின் பிரச்சனை துவங்கி, ஆதி வாசி மக்கள் வனத்திலிருந்து வெளியேற் றப்படுவதை எதிர்ப்பது வரை, ஆலைத் தொழிலாளர் முதல் முறைசாராத் தொழிலாளர் பிரச்சனை வரை போராடுகிறது மார்க்சிஸ்ட் கட்சி. ஈழத்திற்கு குறைவான எந்தத் தீர்வையும் ஏற்க முடியாது என்று கூறும் சில கட்சிகள் தமிழகத்தில் நிலச் சீர்திருத்தத்தை சீர்குலைக்க மேற் கொண்ட முயற்சிகளை தமிழகம் அறியும். விவசாயத் தொழிலாளர்களின் மனைப்பட்டா துவங்கி, விவசாயத்தை பாதுகாப்பது வரை போராடுகிறது மார்க்சிஸ்ட் கட்சி. இலங்கைத் தமிழர்களுக்காக தாங்கள் மட்டுமே குரல் கொடுப்பதாக கூறும் சில கட்சிகள் தமிழகத்தில் பிரச்சனைகளே இல்லாததுபோல கண்டு கொள்ளாமல் இருப்பது அவர்களது வர்க்கப் பார்வையின் அடிப்படையிலேயே ஆகும்.
         இலங்கை பிரச்சனையில் இந்தியாவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி இயக்கங்கள் அகில இந்திய அளவில் ஒரே மாதிரி நிலையையே எடுத்துள்ளன. ஆனால் ஜூனியர் விகடன் கட்டுரையாளர் உட்பட சிலர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மட்டும் குறிவைத்து விமர்சனம் செய்கின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சிப்பவர்களுக்கு ஒரு அரசியல் நோக்கம் உள்ளது. ஆனால் அவர்களது அந்த நோக்கம் நிறைவேறாது.

சனி, 11 மே, 2013

இலங்கை - ஆழமான அரசியல் பிரச்சனைக்கு அதீத முழக்கங்கள் மட்டும் தீர்வாகாது....!

       
இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் திடீர் அக்கறை காட்டுபவர்களும், அக்கறையே காட்டாமல் ஒதுங்கி நிற்பவர்களும், உலகில் எந்த மூலையில் எது நடந்தாலும் நமக்கென்னன்னு தானுண்டு தன் குடும்பமுண்டு என்றிருப்பவர்களும் கண்டிப்பாக இந்த
பேட்டியை படிக்கவேண்டும்.
        இலங்கை தமிழர் பிரச்சனை 60 ஆண்டுகளாக தொடர்கிறது. அங்கு ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கத்தாலும் பிரச்னைக்கு தீர்வுகாண முடியவில்லை. 30 ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டுப் போரிலும் பல ஆயிரம் பேர் மடிந்துள்ளனர். இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அக்கறை எல்லா தரப்பிலும் உள்ளது. இந்த ஆழமான அரசியல் பிரச்சனைக்கு ''அதீத முழக்கங்கள்'' மட்டும் தீர்வாகாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச்செயலாளர் தோழர். ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
      ''செம்மலர்'' - மே மாத இதழுக்கு அவர் அளித்த விரிவான பேட்டியின் ஒரு பகுதி கீழே தரப்பட்டுள்ளது. 
**********************************************

கேள்வி: 
தனி ஈழம் தீர்வாகாது என்று 80-களில் மார்க்சிஸ்ட் கட்சி கூறியது சரியாக இருக்கலாம். ஆனால் இன்றும் அதையே கூறுவது சரியல்ல என்று ஒரு வார இதழில் கேள்வி-பதில் பகுதியில் குறிப்பிட்டுள்ளார்கள். ஒன்றுபட்ட இலங்கைக்குள் நல்லது ஒன்றுமே நடக்காத போது தனி ஈழம்தான் தீர்வு என்று கோருவது எப்படித் தவறாகும்? எல்லோரும் ஒரு வழியில் போனால் மார்க்சிஸ்ட் கட்சி மட்டும் இப்பிரச்சனையில் ஏன் தனி வழியில் போகிறது? என்றெல்லாம் விமர்சனங்கள் வருகின்றன அல்லவா? 
ஜி.ஆர்: 
எங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்கள், அள்ளி வீசப்படும் அவதூறுகள் என எல்லாவற்றையும் நாங்கள் அறிந்துதான் இருக்கிறோம். விமர்சனங்களைப் பரிசீலிப்பதும் அவதூறுகளைப் புறந்தள்ளுவதும் தான் சரியான அணுகுமுறை. தனி வழியில் போகும் ஆசையில் எழுந்ததல்ல மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு. விருப்பு வெறுப்புகளுக்கும் முன் முடிவுகளுக்கும் அப்பாற்பட்டு புறநிலை யதார்த்தங்களின் அடிப்படையில் வரலாற்றுப் பின்னணியில் தான் மார்க்சிஸ்ட்டுகள் முடிவு எடுக்கிறார்கள். தவிர, உங்கள் கேள்வியில் குறிப்பிடுவது போல, தனி ஈழம் என்னும் கோரிக்கையின் பின்னால் எல்லோரும் இருப்பதாகச் சொல்வதும் சரியல்ல.. அதை விளக்கமாகப் பார்க்க வேண்டும். இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதுதான் நம் முடைய அடிப்படையான நோக்கம். தனி நாடு கேட்டால் நல்லதை விடத் தீங்குதான் தமிழர்களுக்கு வந்து சேரும் என்பதுதான் தொடர்ந்து எமது புரிதலாகவும் நிலைபாடாகவும் இருக்கிறது. தமிழகத்தில் இருப்பவர்களை விடுங்கள். இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் எல்லோருமே தனி ஈழம் கேட்கவில்லை என்பதை இந்த நேரத்திலாவது - இவ்வளவு அழிவுக்குப் பிறகாவது - நிதானத்துடன் நாம் பார்க்க வேண்டும். நடைமுறையில் சாத்தியமில்லாத முழக்கம் அது. இலங்கை அரசின் மீது ஒரு அரசியல் நெருக்கடியும் அழுத்தமும் உருவாக்குவதற்கான உத்தியாகவே (PRESSURE TACTICS) தனி நாடு கோரிக்கையை ஆரம்பத்தில் முன்வைத்தார்கள். அதன் மூலம் தமிழ் மக்களுக்கான சம உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வைப் பெற முடியும் என்றுதான் அவர்கள் நம்பினார்கள்.
      தமிழ் மக்கள் மூன்று பிரிவாக இலங்கையில் இருக்கிறார்கள். யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்குப் பகுதியிலும் கிழக்கு மாகாணத்திலும் வாழும் பூர்வீகத்தமிழர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் ஒரு பிரிவு. மலையகத்தமிழர் என்றழைக்கப்படும் தோட்டத் தொழிலாளிகளான இரண்டாவது பிரிவினர். தமிழ் முஸ்லிம்கள் மூன்றாம் பிரிவினர். மலையகத்தமிழர்களும் தமிழ் முஸ்லிம்களும் தனி ஈழம் கேட்கவில்லை. தென்னிலங்கையில் கொழும்பிலும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் 2 லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களும் தனி நாடு கேட்கவில்லை. கொழும்பின் முன்னணி வியாபார வர்க்கத்தின் பகுதியாக தமிழர்கள் கணிசமாக அங்கே வாழ்கிறார்கள். 1947-ல் பாகிஸ்தான் தனி நாடாக பிரிந்தபோது நிகழ்ந்ததைப்போல லட்சக்கணக்கான மக்களின் இடப்பெயர்வையும், துயரத்தையும் தனிநாடு கோரிக்கை தமிழர்களுக்குக் கொண்டுவரும். தமிழ் முஸ்லிம்கள் நீண்ட நெடுங்காலமாக சிங்களர் பெரும்பான்மையாக உள்ள கட்சிகள், அமைப்புகளோடுதான் நெருக்கமாக இருந்து வருகின்றனர். புலிகளோடு நீண்டகாலப் பகைச் சூழல்தான் அவர்களுக்கு இருந்துள்ளது. சமீபத்தில் சென்னையில் எங்களைச் சந்தித்த இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஒருவர் கூறியதை இங்கே எடுத்துரைக்க வேண்டும். சமீபத்தில் நடந்து முடிந்த கிழக்கு மாகாணத் தேர்தலில் தமிழர்களுக்கு பெரும்பான்மை கிட்டவில்லை. தமிழ் முஸ்லிம்களிடம் நாம் கூட்டணி அமைக்கலாம். முதல்வர் பதவியை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என்று ஒரு திட்டத்தை முன்வைத்தோம். ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை. சிங்களர்களுடன்தான் கூட்டு வைத்து அமைச்சரவை அமைத்துள்ளனர் என்று கூறினார். புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியிலிருந்து 48 மணி நேரத்தில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் வெளியேற வேண்டும் என புலிகள் உத்தரவிட்டு விரட்டியடித்த கொடுமை முஸ்லிம் மக்கள் மனங்களில் ஆறாவடுவாக இன்றும் உள்ளது. இலங்கையின் ஆளும் அரசு தமிழர்களுக்கு தீமையைத் தவிர வேறு ஏதும் செய்ய வில்லையே என்கிற வெறுப்பிலிருந்து அந்தக் கடைசிக்குச் சென்று தனி ஈழம்தான் தீர்வு என்று கோருவது நடைமுறையில் அவர்களுக்கு நன்மை பயக்காது. கால தாமதம் ஏற்பட்டாலும் சர்வதேச மற்றும் இந் திய அளவில் நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தியும் இலங்கையின் உள்நாட்டிலுள்ள ஜன நாயக சக்திகளின் முன்னெடுப்பிலும் ஓர் நிரந்தர அரசியல் தீர்வைக் காண வேண்டும். இன்றைய உடனடித் தேவைகளுக்கான முழக்கங்களை எழுப்புவதே சரியாக இருக்கும். தமிழர் வாழும் பகுதியிலிருந்து ராணுவத்தை விலக்குதல், தமிழ்ப்பகுதிகளைச் சிங்களமயமாக்கும் முயற்சிகளை நிறுத்துதல், போரினால் சொல்லவொண்ணாத் துயருக்கு ஆளாகியிருக்கும் தமிழ் மக்களுக்கு சமாதானமும் அவர்களின் மனக்காயங்களுக்கு ஆறுதலும் தரும் விதமான அணுகு முறையும் மீள் குடியமர்வுக்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் உடனடியாகச் செய்யப்பட வேண்டும். புலிகள் என்கிற சந்தேகத்தின் பேரில் பிடித்துச்செல்லப்பட்ட அல்லது காணாமல் போன பத்தாயிரத்துக்கும் மேற் பட்ட இளைஞர்கள், யுவதிகள் வீடு திரும்ப வேண்டும். ஓர் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையைத் துவக்கி தமிழர்களுக்கு சம அந்தஸ்தும் சம உரிமையும் கூடிய மாநில சுயாட்சியுடன் காவல்துறை மற்றும் இதர நிர்வாக உரிமைகளுடன் கூடிய தமிழ் மாநிலம் அமைக்கப்பட வேண்டும். இது போல அம்மக்கள் என்ன தேவையில் இப்போது இருக்கிறார்களோ அதற்கான முழக்கங்களை எழுப்ப வேண்டும். அதுதான் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.
           சின்னச்சின்ன இரண்டு நாடுகளாக (ஏற்கனவே அது சின்ன நாடுதான்) இலங்கை பிரிவது என்பது ஏகாதிபத்தியம் நுழைவதற்கான பாதையை அகலத்திறப்பதாகும். அது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மட்டுமல்ல. இந்தப் பிராந்தியத்துக்கே ஆபத்து.

கேள்வி: 
இலங்கையை நட்பு நாடென்று மதிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்னும் கோரிக்கை பற்றி..
ஜி.ஆர் : 
நட்பு நாடு இல்லை என்று முடிவு செய்தால் தூதரகங்களை மூட வேண்டும்.பேச்சுவார்த்தைக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச வாய்ப்பும் இல்லாமல் போய் விடும். அங்கே தமிழ் மக்களுக்கு என்ன நடந்தாலும் நமக்கு தகவல் கிடைப்பதில் துவங்கி தலையிடுவதுவரை சிக்கலாகுமல்லவா?

கேள்வி : 
பொருளாதாரத்தடை விதிப்பது இலங்கை அரசை நிர்ப்பந்திக்க உதவுமல்லவா?
ஜி.ஆர் : 
நாம் பொருளாதாரத் தடை என்றால் இலங்கை மேலும் மேலும் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளைச் சார்ந்து நிற்கும் நிலைக்குத் தள்ளப்படும். பொருளாதாரத்தடை பெரிதும் ஏழை எளிய மக்களைத்தான் பாதிக்கும். இராக்கிலும், கியூபாவிலும் நமக்குக் கிடைத்திருக்கும் அனுபவம் அதுதானே. தவிரவும் இலங்கையிலிருந்து நமக்கு இறக்குமதியை விட ஏற்றுமதிதான் அதிகம். அதிலும் குறிப்பாக தமிழகத்திலிருந்துதான் ஏற்றுமதி அதிகம். (நான் கொழும்பில் உள்ள ஒரு துணிக்கடைக் குச் சென்ற போது அந்த வியாபாரி சொன்னது ‘நாங்க சென்னை பாண்டி பஜாரிலிருந்து தான் இந்தத் துணிகளையெல்லாம் வாங்கி வருகிறோம். வேணுமானா வாங்கிக்கிங்க..) இலங்கையில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் கணிசமாகப் பொருள் முதலீடு செய்துள்ளன என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். இலங்கை அரசை நிர்ப்பந்திக்க அரசியல் ரீதியான உபாயங்களைக் கையாள வேண்டும்.

கேள்வி : 
போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என் பதை மார்க்சிஸ்ட் கட்சி ஏன் ஏற்கவில்லை. உள்ளக விசாரணை என்ற பேரில் கொலை யாளியையே நீதிபதியாக்குவது எந்த வகையில் நியாயமாகும்?
ஜி.ஆர் : 
 சர்வதேச விசாரணை என்ற பேரில் அமெரிக்க ஏகாதிபத்தியம் உள்ளே நுழைந்துவிடக்கூடாது என்பதுதான் நமது கவலை. அதன் பொருள் விசாரணையை ராஜ பக்ஷேயின் கையில் ஒப்படைத்துவிட வேண்டும் என்பதல்ல. ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலுடன் கலந்து பேசி (அப்படி ஒரு குறிப்பு இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்திலும் இருக்கிறது) சுயேச்சையான, சர்வதேச நம்பகத்தன்மை கொண்ட இலங் கைக்கு வெளியில் உள்ள சர்வதேச மதிப்புடைய நீதிமான்களையும் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும். இலங்கையிலுள்ள தமிழர்களிலிருந்தும் கூட அத்தகைய மதிப்புமிக்க நீதிமான்கள் விசாரணைக் குழுவில் சேர்க்கப்பட வேண்டும். இத்தகைய சுயேச்சையான விசாரணையை ஏற்றிட இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும். விசாரணைக்குழு முற்றிலும் வெளியிலிருந்து என்று தீர்மானம் வந்தால் இப்போது ஐ.நா.மனித உரிமைக் கவுன்சிலில் இத்தீர்மானத்தை ஆதரித்த நாடுகளும் கூட ஆதரித்திருக்காது என்பது தான் அமெரிக்கப் பிரதிநிதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் கூறிய பதில் (அவரே இதை எம்மிடம் கூறினார்). அவரவர் நாட்டுப் பிரச்சனைகளோடு பொருத்தித்தான் அவர்கள் இதைப் பார்ப்பார்கள். இத்தகைய சர்வதேச அரசியல் சூழலையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்கா சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் இலங்கைக்கு எதிரான ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தது தமிழர்கள் பால் அவர்கள் கொண்ட அக்கறையால் அல்ல. உலகத்திலேயே மனித உரிமை மீறலில் இலங்கை உள்ளிட்ட வேறு எந்த நாட்டையும் விட அமெரிக்காவே முதலிடத்தில் உள்ளது என்பதை லேசில் மறந்துவிட முடியாது. இலங்கையை தன் நலன்களுக்கு ஏற்ப அடிபணியச்செய்ய அமெரிக்கா இதன் மூலம் முயல்கிறது. திரிகோணமலையில் அமெரிக்க ராணுவ மையம் மற்றும் வர்த்தகத் தேவைகள் என அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் வேறு பலவும் நிச்சயமாக இருக்கிறது.

கேள்வி: 
நடந்து முடிந்துள்ளது இனப் படுகொலை என்று அறிவிக்க வேண்டும் என திமுக,அதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் கேட்கின்றன.மார்க்சிஸ்ட் கட்சி அப்படி கோரவில்லை அல்லவா?
ஜி.ஆர் : 
முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டதால் அது இனப்படுகொலைதான் என்கிற உணர்வு ஏற்பட்டுள்ளது. அது எல்லோருடைய மனங்களையும் உறைய வைத்துள்ள கொடுமை. ஆனால் சர்வதேச அளவில் என்ன புரிதல் இருக்கிறதெனில் ஆயுதமற்ற மக்களின் மீது ஆயுதத் தாக்குதல் தொடுத்து அழிப்பது இனப்படுகொலை என்கிறார்கள். இங்கே ஆயுதபாணிகளான இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் நடந்த போரில் அப்பாவித்தமிழர்கள் இரு தரப்பாலும் கொல்லப்பட்டுள்ளனர் என்றே ஐ.நா. பொதுச் செயலாளர் நியமித்த மூவர் குழு குறிப்பிடுகிறது. ஆகவே மனித உரிமை மீறல்களும் போர்க்குற்றங்களும் கடுமையான அளவுக்கு நடந்துள்ள போர் என்று கணிக்கிறார்கள். இனப்படுகொலை என்று குறிக்கவில்லை. இலங்கையின் பிற பகுதிகளில் வாழும் தமிழர்கள் தாக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள். உரிய, நம்பகமான விசாரணையும் போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதும் தேவை என்றுதான் மார்க்சிஸ்ட் கட்சி கோருகிறது.

கேள்வி: 
கியூபா, சீனா உள்ளிட்ட கம்யூனிஸ்ட் நாடுகள் இலங்கை அரசை ஆதரிக்கும் நிலை சரியா?
ஜி.ஆர் :
சோசலிச நாடுகள் எடுக்கும் நிலைபாட்டை நாம் ஆதரிக்க வேண்டும் என்றோ அங்கீகரிக்க வேண்டும் என்றோ நாம் கூறவில்லை. நாம் மாறுபடலாம். அவர்கள் ஒரு அரசு என்கிற முறையில் அரசுக்கு அரசு உறவு என்பதை சர்வதேச அரசியல் சூழலின் அடிப்படையில் பார்க்கிறார்கள். கம்யூனிஸ்ட் அகிலத்தைக் கலைக்கும் போது தோழர் ஸ்டாலின் கூறியதை நினைவில் கொள்ள வேண்டும். இறையாண்மைமிக்க ஒரு நாட்டின் அரசு என்ற வகையில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் உள்ள ஒரு சோசலிச நாடு கம்யூனிஸ்ட்டுகளை ஒடுக்கும் ஓர் அரசுடன் கூட நட்பு பாராட்ட வேண்டிய சூழல் வரும். அதை அந்நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் அந்த உறவை ஏற்க வேண்டும் என்கிற அவசியமில்லை என்றார். இலங்கை அரசை குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டும் என்பதே நமது நிலைபாடு.

கேள்வி : இலங்கைத்தமிழர் பிரச்சனைக் காக மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றுமே செய்ய வில்லை என்று ஒரு சாரார் கூறுகிறார்கள்..
ஜி.ஆர்: கிளிநொச்சியிலிருந்து விடுதலைப்புலிகள் பின் வாங்க நேர்ந்த சமயத்திலேயே 2009 பிப்ரவரியிலேயே மதுரையிலிருந்து தோழர் பிரகாஷ் காரத் வேண்டுகோள் விடுத்தார். “யுத்தத்தை நிறுத்த உடனடியாக இந்திய அரசும் ஐ.நா. சபையும் தலையிட வேண்டும். விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் பேச்சுவார்த்தை மூலம் ஓர் அரசியல் தீர்வுகாண முயலவேண்டும். யுத்தம் ஒரு போதும் தீர்வாகாது. அப்பாவி மக்கள் எக்காரணம் கொண்டும் பலியாகிவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டும்” என்றார். புலிகளை நாங்கள் ஆதரிக்காதபோதும் அன்று அவர்களோடு பேசுங்கள் என்றுதான் சொன்னோம். ஆனால் இந்திய அரசோ ஐ.நா.சபையோ தலையிடாததால் மனிதப் பேரழிவு நிகழ்ந்தது. ஆர்ப்பாட்டங்கள், மனிதச் சங்கிலிகள், தில்லி சென்று தர்ணா என தமிழகத்தில் எல்லாக்கட்சிகளும் செய்த போராட்டங்களை விடவும் மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றும் குறைவாக இருந்துவிடவில்லை. புலிகளை யும் தனி ஈழத்தையும் நாங்கள் ஒருபோதும் ஆதரிக்காததால் (பல கட்சிகள் அவ்வப்போது பல்டிகள் அடித்ததுபோல அடிக்காமல்) தமிழக மீடியாக்களும் எங்கள் போராட்டங்களை வெளியிடவில்லை. தமிழக மீடியாக்களில் கணிசமான பகுதியினர் தனி ஈழ ஆதரவு நிலைபாட்டை எடுத்ததும் புலிகளை அளவுக்கு மீறி விமர்சனமின்றி முன்னிறுத்தியதும் நடந்தது. தமிழக எல்லைக்குள் மட்டும் இயங்கும் அரசியல் கட்சிகளும் மீடியாக்களும் அவரவர் நலன் சார்ந்து இலங்கைப் பிரச்சனையைப் பயன்படுத்திக்கொள்வது தொடர்ந்து நடக்கிறது. அங்கு வாடும் தமிழ் மக்களின் நலன்களை விட இவர்களின் சொந்த அரசியல்/வர்த்தக நலன்கள் பிரதானமாக இருக்கின்றன. இது மிகப்பெரிய சோகம்தான். இப்போதும் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு யுத்தம் தீர்வாகாது என்பதும் தனி ஈழம் தீர்வாகாது என்பதும்தான் எங்கள் நிலைபாடு.1987 ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தம் ஒரு நல்ல ஒப்பந்தம்தான் .அதை ஒன்றுமில்லாமல் செய்ய இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும் கூட்டாக செயல்பட்டார்கள். இந்திய அமைதி காக்கும் படையை இலங்கை மண்ணை விட்டு வெளியேற்ற புலிகளும் இலங்கை அரசும் கைகோர்த்தது வரலாறு. தனி ஈழத்துக்குக் குறைவான கோரிக்கையை யார் வைத்தாலும் அவர் சிங்களரோ தமிழரோ அவர்கள் கொல்லப்பட்டார்கள். கதிர்காமர், அமிர்தலிங்கம், நீலம் திருச்செல்வம் எனக் கொல்லப்பட்ட தமிழர் தலைவர்கள் எத்தனை பேர்? அங்கே தனி ஈழம் தீர்வல்ல என்றால் கொல்லப்பட் டார்கள்.இங்கே தனி ஈழம் தீர்வல்ல என்று சொன்னால் இனத் துரோகி என முத்திரை குத்துவார்கள். இரண்டும் ஒரே அரசியலின் இரு வடிவங்கள் தாம். வரலாற்றை சுயபரிசீலனை செய்ய இப்போதாவது நாம் முன்வர வேண்டாமா? சமாதான முயற்சிகள் எல்லா வற்றையும் சீர்குலைத்ததில் புலிகளுக்குப் பங்கில்லையா? புலிகள் போரில் கொல்லப்பட்டுவிட்டதால்-களப்பலி ஆகிவிட்டதால்- அவர்களின் பாதை விமர்சனத்துக்குள்ளாக்கப்படாமல் விடப்பட வேண்டுமா? அது எதிர்காலத்துக்குப் பயன்படுமா? எங்கள் உறுதியான ஊசலாட்டமில்லாத நிலைபாடு காரணமாக - அது சிலருக்கு உவப்பாக இல்லை என்பதால்- எங்கள் போராட்டங்கள் பேசப்படவில்லை என்பது தான் உண்மை.

கேள்வி : இப்போது இலங்கைப் பிரச்சனையைப் பொறுத்தவரை செய்ய வேண்டியது என்ன?
ஜி.ஆர் : இன்னும் தமிழகத்தில் இனவாத உணர்வைத்தூண்டிக்கொண்டிருப்பது இலங்கையில் சிக்கலில் இருக்கும் தமிழ் மக்களுக்கு மேலும் தீங்கு விளைவிக்கும் என்பதை உணர வேண்டும். திருச்சியில் பயணியாக வந்த பௌத்ததுறவி தாக்கப்பட்டதற்கு கொழும்பில் தமிழர்கள் கடையடைப்புச் செய்து கண்டனம் செய்தார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. தமிழ் நாட்டுக் கட்சிகளும் அமைப்புகளும் தம் அரசியலுக்காக அல்லாமல் உண்மையிலேயே இலங்கைத் தமிழர்களுக்கு இப்போது என்ன தேவையோ அதற்கான முழக்கங்களை முன்வைத்து இந்திய அரசை நிர்ப்பந்திக்க வேண்டும். அதீதமான கோரிக்கைகளைக் கைவிட்டு யதார்த்த நிலைமைக்கேற்ப குறைந்த பட்ச செயல்திட்டத்தோடு பேச வேண்டும்.

கேள்வி: இலங்கைக்குள் எந்த மாற்றமும் நடக்காமல் நமக்கு எப்படி நம்பிக்கை வரும்? இந்திய அரசு போல ஒரு ஏற்பாடு இலங்கையில் இல்லையே? அங்கு ஜனாதிபதி பதவி அதீத அதிகாரத்துடன் இருக்கிறதே?
ஜி.ஆர் : ஆம். உண்மைதான் ஆனாலும் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி மக்களைச் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் அங்கு இருக்கத்தானே செய்கிறது. இன்றைய அடக்குமுறைச் சூழலில் சிங்கள மக்கள் மத்தியில் உள்ள ஜனநாயக எண்ணம் கொண்டவர்களும் பேசத் தயங்குகிற நிலை உள்ளது. ஆனால் உயர்கல்வியைத் தனியார் மயமாக்கும் சட்டத்தை சமீபத்தில் இலங்கை அரசு கொண்டு வந்த போது தமிழ் மாணவர்களும் சிங்கள மாணவர்களும் ஒன்றுபட்டுப் போராடி அச்சட்டத்தை திரும்பப்பெற வைத்துள்ளனர். சிங்கள மீடியாக்களும் ஆளும் கட்சியும் சிங்களப் பேரினவாதத்தைத் தூண்டிக் கொண்டே இருக்கும் இன்றைய இலங்கை நிலையைக் கணக்கில் கொண்டு இங்கு நாம் இயங்க வேண்டும். அதீத முழக்கங்களால் நாம் அங்குள்ள தமிழர்களை திசை திருப்பக் கூடாது. பொருளாதார ரீதியாக இலங்கை அர சின் கொள்கைகளால் கடுமையான நெருக் கடிக்கு ஆளாகியுள்ள சிங்கள, தமிழ், தமிழ் முஸ்லிம், மலையகத் தமிழ் மக்கள் அனை வரும் ஒன்றிணைந்து போராடுவது தவிர்க்க முடியாது. கால அவகாசம் எடுக்கலாம். இக்கூட்டில்தான் தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வும் பிறக்கும்.

வியாழன், 26 ஏப்ரல், 2012

கருணாநிதியின் விபரீதக் கோரிக்கை..!

                    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கடந்த கால அரசியல் வாழ்க்கையை ஆராய்ந்து அலசிப் பார்த்தால், தனது ''சொந்த'' கட்சியிலேயே தன்னுடைய செல்வாக்கு குறைந்தாலோ அல்லது தமிழக அரசியலில் தன்னுடை செல்வாக்கு குறைவது போல் தெரிந்தாலோ அல்லது தான் பங்குவகிக்கும் மத்திய அரசில் தனது செல்வாக்கு குறைவது போல் உணர்ந்தாலோ உடனே கருணாநிதி மக்களை கவருவது போல் அதிரடியாக ஏதாவது ஒரு அறிக்கையை வெளியிடுவார் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.  இதன் மூலம் அனைத்து மட்டத்திலும் சரிந்து வரும் தனது செல்வாக்கை உயர்த்திக்கொள்ள முயற்சி செய்வார் என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது. இதைத் தான் கடந்த காலங்களில் கருணாநிதியின் அரசியல் வாழ்க்கையாக  தமிழகம்  பார்த்து வருகிறது.
               அண்மைக் காலங்களில் கருணாநிதி தன் சொந்த வாழ்க்கையிலும் சரி, அரசியல்  வாழ்க்கையிலும் சரி ஏகப்பட்ட சோதனைகள் சந்தித்து வருகிறார் என்பதை நாம் அறிவோம். சமீபத்தில் நடைபெற்ற சங்கரன்கோயில் தொகுதி இடைத்தேர்தலில் இவரது கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி - டெபாசிட்டே கிடைக்காத நிலைமை,  இன்னொரு பக்கம் கட்சிக்குள்ளேயே தன் இரு பிள்ளைகளின் அதிகாரப்போட்டி,  கட்சியின் தலைமையை நோக்கி இவரது மகன் ஸ்டாலின் வளருவதை விரும்பாத கட்சியின் மூத்தத் தலைவர்கள் இவருக்கு எதிராகவே திரும்பியிருக்கும் நிலைமை - இப்படி அடுக்கடுக்கான சோதனைகள் - சோதனை மேல் சோதனைகள் அவரது செல்வாக்கின் சரிவைத் தான் காட்டுகின்றன.
              இந்த சூழ்நிலையில் தான் சமீபத்தில் ஒரு புயலைக் கிளப்பினார். இலங்கையில் ''தமிழீழம்'' என்ற தனிநாடு உருவாவதற்கு ஐநா சபை இலங்கையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்  என்றும், ஐநா சபையால்  இது போன்று வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டு தான் தெற்கு சூடான் போன்ற நாடுகள் உருவாக்கப்பட்டது என்கிற ''விபரீத'' கோரிக்கையை வைத்தார். இலங்கை தமிழர்கள் மீது எதோ அக்கறை இருப்பது போல் காட்டிக்கொள்ள இப்படியொரு நாடகத்தை அரங்கேற்ற நினைத்தார்.   இந்த கோரிக்கை என்பது ஏற்கனவே வைகோ, திருமாவளவன், சீமான், நெடுமாறன் போன்றவர்கள்,  இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கையின் போதே எழுப்பப்பட்டு ஓய்ந்து போன கோரிக்கை தான் இது. கூர் மழுங்கிய இந்த கத்தியை இப்போது கருணாநிதி  தன் கையில் எடுத்துக் கொண்டு கூர் சீவி வெறும் காற்றில் சுழற்றி தன் செல்வாக்கினை உயர்த்திக் கொள்ளலாம் திட்டம் போட்டு களத்தில் இறங்கினார்.
               இவரது இந்த கோரிக்கைக்கு இலங்கையில் அதன் ஆட்சியாளர்களிடமிருந்தே எதிர்ப்பு குரல் வந்தது. அவர்கள் பேச்சிலும் விபரீதங்கள் இருந்தன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இந்தியாவில் வேண்டுமானால் கருணாநிதி,  தமிழ்நாடு மற்றும் காஷ்மீர் போன்ற பகுதிகளை இந்தியாவிலிருந்து பிரித்து தனிநாடு கேட்கட்டும் என்று அவர்கள் பதிலுக்கு விஷத்தை கக்கியிருக்கிறார்கள். இது இப்படியான விபரீதங்களில் தான் போய் முடியும்.
             தன் சொந்த நாட்டின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் எதிராகவே கருத்து சொல்லவோ அல்லது செயல்படவோ கூடாது என்கிற போது பக்கத்து நாட்டின் இறையாண்மைக்கு எதிராக கருத்து சொல்வது என்பது நியாயமாகாது. அது மட்டுமல்ல, இலங்கையில் அல்லல்படும் தமிழர்களுக்கு இதுவே தீர்வாகாது. ஐநா வாக்கெடுப்பு நடத்துவது ஒருபுறம் இருக்கட்டும். இலங்கைத் தமிழர்களுக்கு என்ன வேண்டும் என்பதை கருணாநிதி முதலில் புரிந்து கொள்ளட்டும். இலங்கை தமிழர்களை நேரில் சந்தித்து அவர்கள் எதிர்ப்பார்க்கும் தீர்வு என்ன என்பதை கேட்டறிந்து அதற்கேற்றார் போல் கருணாநிதி போராடியிருந்தால் வரவேற்றிருக்கலாம்.
                       ஆனால் அவர் அதை செய்யவில்லையே. இலங்கைக்கு சென்று தமிழர்களை சந்தித்து அவர்கள் நிலைப் பற்றியும், அவர்களது எதிர்ப்பார்ப்புகளையும் நேரில் சென்று தெரிந்து வர மத்திய அரசு மிகப்பெரிய வாய்ப்பைக் கொடுத்தும் அதை கருணாநிதி நழுவவிட்டது  என்பது தமிழர்களாலேயே ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களின் தேவை என்ன என்பதை தெரிந்துகொள்ளாமலேயே, அவர்களுக்கெதிரான - ஒரு நாட்டின் இறையாண்மைக்கு எதிரான கோரிக்கையை வைப்பது என்பது விபரீதமானது மட்டுமல்ல அவரது செல்வாக்கை எந்த விதத்திலும் உதவாது.     

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

நாங்கள் கேட்பது தனிநாடு அல்ல.. சுயாட்சி மாநிலம் தான்..

                 சென்ற ஜூலை 30 அன்று சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டஇலங்கை தமிழர் சம உரிமை - அரசியல் தீர்வு சிறப்பு மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர். பிரகாஷ் காரத் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களும் மார்க்சிஸ்ட் கட்சியின் அழைப்பை ஏற்று அம்மாநாட்டில் கலந்துகொண்டார். அப்போது இலங்கை நிலவரம் குறித்து அவர் பேசிய உருக்கமான பேச்சிலிருந்து நம் நெஞ்சை வலிக்கச் செய்யும்  சில முக்கியமான வரிகள் இதோ இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது..
               இலங்கையில் தமிழினம் அழிக்கப்படுவதையும், அவர்களின் பண்பாடு சிதைக்கப்படுவதையும், உரிமைகள் நசுக்கப்படுவதையும் சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளப்போகிறதா? இந்தியா ஏற்கப்போகிறதா? ஜனநாயகத்தை விரும்புவோர் ஏற்கப்போகிறார்களா? என்ற கேள்வியை இந்த மாநாட்டின் மூலம் முன் வைக்கிறோம். நாங்கள் தமிழ் ஈழம் கேட்கவில்லை, தனி நாடு கேட்கவில்லை, ஆயிரக்கணக்கானவர்களை இழந்த பிறகும், வாழ்வுரிமைகளை பறித்த பிறகும், சிங்கள மக்களோடு இணைந்து வாழவே நாங்கள் விரும்பு கிறோம். ஆனால், அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. தமிழ் மக்கள் தங்களுக்கான உரிமையைத்தான் கேட்கிறார்கள். தாங்கள் வாழும் பகுதியை எப்படி மேம்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் தீர்மானித்துக் கொள்கிறோம் என்றுதான் அவர்கள் சொல்கிறார்கள். எங்களின் மொழியை, எங்களின் வாழ்வை, எங்களின் பண்பாட்டை எப்படி வளர்க்க முடியும் என்பது எங்களுக்குத் தெரியும் என்றுதான் கூறுகிறார்கள். 1987ஆம் ஆண்டு ஏற்பட்ட இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின்படி, இலங்கை அரசியல் சட்டத்தில் 13வது திருத்தம் கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டது. இதுவரை அது நடை பெறவில்லை. அடுத்தடுத்து 5 முறை செய்யப்பட்ட வேறு திருத்தங்களால் அந்த ஒப்பந்தமும் நீர்த்துப்போய்விட்டது.
                 இந்த நிலையில் இந்தியாவும், சீனாவும் இலங்கை அரசுக்கு மாறிமாறி ஆதரவு தருகின்றன. இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு உள்ள அரசியல் நிர்பந்தமும், பொருளாதார நிர்பந்தமும் எங்களுக்குப் புரிகிறது. ஆனால், இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் ஆதரவாக இருப்பவர்கள் தமிழர்கள் மட்டும்தான் என்பதை இந்திய அரசு உணர வேண்டும். இப்போதும் இந்தியாவைத்தான் நாங்கள் நம்பியிருக்கிறோம். மாநிலங்களின் ஒன்றியம் என்ற சமஷ்டி முறையை அமல்படுத்தி வடகிழக்கு மாகாணங்களுக்கு சுயாட்சி உரிமை அளிக்க வேண்டும் என்றுதான் கோருகிறோம். இதற்காக சர்வ கட்சிக் குழு ஒன்றையும், நிபுணர் குழு ஒன்றையும் இலங்கை அரசு நியமித்தது. அந்தக் குழுக்கள் அளித்த பரிந்துரை நல்லதாகவே இருந்தது. இதனடிப்படையில் பேச்சு வார்த்தையை துவக்கலாம் என்று கூறியபோது, மீண்டும் நாடாளுமன்ற குழு ஒன்றை அமைப்பதாக இலங்கை அரசு அறிவித்துவிட்டது. இது பிரச்சனைக்கு தீர்வுகாணாமல் தாமதப்படுத்தும் யுக்தியே தவிர வேறில்லை.
           இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்கு இந்திய அரசு தீர்வுகாண வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் நம்பிக்கையோடு முன்வைக்கிறோம். ஏனென்றால் தில்லிவரை இந்தக் கோரிக்கையை ஒலிக்கச்செய்யும் வலுவான இயக்கம் இது என்பது எங்களின் கருத்தாகும்.
              இவ்வாறு இலங்கைத் தமிழர்களின் இப்போதைய நிலை என்பது யுத்தக் காலத்தை விட மோசமாக உள்ளதை உருக்கமாக பேசி முடித்தார். அவர் பேசி முடித்தவுடன் தோழர். பிரகாஷ் காரத் வரும் ஆகஸ்ட் 9 - ஆம் தேதி புதுடெல்லியில் பாராளுமன்றத்தின் முன்பும், தமிழகம் முழுவதிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அந்த மாநாட்டு மேடையிலேயே அறிவித்தார்.