சுதந்திரதினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுதந்திரதினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 ஆகஸ்ட், 2012

தானாக கிடைத்ததல்ல சுதந்திரம்...!


          பள்ளி  வரலாற்றுப் பாடத்தில்  இந்திய சுதந்திர போராட்டத்தை பற்றிப் படிக்கும் போது ''கத்தியின்றி, ரத்தமின்றி, சத்தமின்றி, யுத்தமின்றி காந்தி நம் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தார்'' என்கிற வரியை எல்லா வகுப்பிலும் நாம் படித்திருப்போம். அதை படிக்கும் போது, ஏதோ காந்தி மட்டுமே  வெள்ளைக்காரனிடம் கெஞ்சிக்கேட்டு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தது போன்ற  ஒரு கருத்தை தான் படிக்கும் மாணவர்களிடம் ஏற்படுத்தும். இந்த நாட்டை ஆண்ட ஆட்சியாளர்கள் - குறிப்பாக காங்கிரஸ்காரர்கள் பள்ளிப் பாடப்புத்தகத்தை தங்கள் கட்சிப் பிரச்சாரத்திற்காகவே பயன்படுத்திக்கொண்டார்கள். அதனால் தான், இந்த தேசத்திற்கு கிடைத்த சுதந்திரத்திற்கும், அதற்காக நடத்தப்பட்ட போராட்டத்திற்கும் சொந்தக்காரர்களாக காங்கிரஸ்கட்சியையும், காந்தியையும் மட்டுமே காட்டுகின்றனர். அதுவும் வடநாட்டு காங்கிரஸ் தலைவர்களைத் தான் குறிப்பிட்டிருப்பார்கள். தென்னிந்தியத் தலைவர்களை - குறிப்பாக காமராஜர், திருப்பூர் குமரன், பாரதியார், வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, வாஞ்சிநாதன் போன்ற  தமிழகத்தலைவர்களை பற்றி ஒரு சிறு குறிப்புக்கூட காட்டியிருக்கமாட்டார்கள். 
                  நாம் வரலாற்றுப் பாடத்தில் படிப்பது போல் '' ஏதோ  கேட்டுப்பெற்றதல்ல சுதந்திரம்... தானாக வந்ததுமல்ல சுதந்திரம்...''
           ஜாலியன் வாலாபாக்கில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் உயிர்த்தியாகம் செய்து, ரத்தம் சிந்தி பெற்றச் சுதந்திரம் இது...
           பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், உத்தம்சிங் போன்ற இளைஞர்கள்  தூக்குமேடை   ஏறிப் பெற்றச் சுதந்திரம் இது...
           திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன் போன்ற  இளைஞர்களும் உயிர்த்தியாகம் செய்துப் பெற்றச் சுதந்திரம் இது. 
            பாரதி தன்  பாட்டுத்திறத்தாலே விடுதலைத்தீயை மூட்டி இந்திய மக்களிடையே எழுச்சியை உண்டாக்கி பெற்றச் சுதந்திரம் இது. வ. உ. சி மற்றும் சுப்பிரமணிய சிவா போன்றவர்கள் சிறைகொடுமைகளை அனுபவித்து, செக்கிழுத்துப் பெற்றச் சுதந்திரம் இது. 
           நேதாஜி மற்றும் கேப்டன் லட்சுமி போன்றவர்கள் இந்திய தேசியப் படை அமைத்து வெள்ளையனுக்கு எதிராகப்போராடிப் பெற்றச் சுதந்திரம் இது. 
            தோழர். ஜீவானந்தம், தோழர். ஹர்கிஷன்சிங் சுர்ஜித் போன்ற கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் போராடி, சிறைக்கொடுமைகளை அனுபவித்து, தலைமறைவு வாழ்க்கையை நடத்தி பெற்றுத் தந்த சுதந்திரம் இது. 
         1806 - ஆம் ஆண்டு தொடக்கி 1947 - ஆம் ஆண்டு வரை ஆயிரக்கணக்கான  ஆண்களும், பெண்களும், முஸ்லிம்களும், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களும் போராடி - ரத்தம் சிந்தி - உயிர்த்தியாகம் செய்து நமக்கு பெற்றுத் தந்த சுதந்திரம் இது. 
          அனால் கடைசி இந்தியன் வரை அந்த சுதந்திரம் பொய் சேர்ந்ததா என்று கேட்டால்... அது கேள்விக்குறிதான். 
          உண்மையான சுதந்திரம் என்பது, இந்த நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே சொன்னானே மாவீரன் பகத்சிங் அது தான்.                   
         ''பாலுக்கு அழும் குழந்தை, கல்விக்கு எங்கும் மாணவன், வேலை தேடும் இளைஞன், வறுமையில் வாடும் தாய் - இவர்கள் இல்லாத இந்தியாவே உண்மையான சுதந்திர இந்தியா'' 
இது தான் மாவீரன் பகத்சிங் கனவுகண்ட இந்தியா.
         அன்று வெள்ளையர் கையில் இருந்த இந்தியா... இன்று கொள்ளையர் கையில் சிக்கி மேலே சொன்ன அத்தனை பேரையும் கொண்ட ''வாடும் இந்தியா''வில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 
           இது மாறவேண்டுமென்றால், ''முப்பது கோடி ஜெனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடைமை'' வேண்டினானே பாரதி, அந்த பொதுவுடைமை இந்த தேசத்தில் மலரவேண்டும். அதுதான் இந்தியாவில் உண்மையான சுதந்திரத்தை மணக்கச் செய்யும். 
அதற்காக போராடுவோம்.... 
பெற்ற சுதந்திரம் பேணிக்காப்போம்... 
தேசத்தை காத்தல் செய்வோம்.

          

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

பிரதமரே செய்யும் நில அபகரிப்பு - மக்கள் எங்கே செல்வார்கள் ?

              
                   இந்திய பிரதமர் மன்மோகன் சிங்  தொடர்ந்து எட்டாவது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றுகிறாராமா..!  இதற்கு முன் நேருவும், இந்திரா காந்தியும் தான் அதிக முறையாக கொடி ஏற்றியிருக்கிறார்களாமா..! அதிக முறை கொடியேற்றிய பிரதமர்களில் இவரு மூன்றாவது காங்கிரஸ் பிரதமராமாமாமா...! பத்திரிகைகள் மன்மோகன் சிங்கைப் பற்றி ஒரே பெருமை பீற்றல்.. பிதற்றல்.. தாங்க முடியல..
                             அன்றைய தினம் நேரு, இந்திரா காந்தி போன்றவர்கள் தேசியக்கொடியை ஏற்றிவிட்டு நம் மக்களுக்காக நம் மக்களிடம் உரையாற்றுவார்கள். மன்மோகன் சிங்கோ நம்  தேசக்கொடியை ஏற்றிவிட்டு அமெரிக்க   முதலாளிகளுக்காக கண்ணாடிக் கூண்டிலிருந்து நம்  மக்களிடம்  மக்களிடம் உரையாற்றுவார்.   அப்படியே தான் இருக்கட்டும்.. இந்த எட்டு ஆண்டுகளில் அவர் என்ன தான் சாதித்தார். சொல்லமுடியுமா..? சொல்லமுடியும்.. பல்வேறு சட்டங்கள் மூலம் அமெரிக்க முதலாளிகளுக்கும்,  இந்திய பன்னாட்டு முதலாளிகளுக்கும் தைரியமாக இந்த தேசத்தையே  கூறு போட்டு விற்றவர்.. இன்றும் விற்பவர்.
                   நேற்றைய தினம் செங்கோட்டையில் அவர் பேசியது என்ன தெரியுமா..? ''புதிய தொழிற்சாலைகளை நிறுவவும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை ஏற்படுத்தவும் நகர்ப்புறங்களை விரிவுபடுத்தவும் அனைத்து தரப்பாரிடமும் கருத்தொற்றுமை ஏற்படுவது அவசியம். தொழிற்சாலைகளை நிறுவவும் அடித்தளக் கட்டமைப்புகளை உருவாக்கவும் நகர்ப்புறங்களை விரிவாக்கவும் நிலங்கள் தேவைப்படுகின்றன. அந்த இடங்கள் விவசாயிகளுக்கும் ஏழைகளுக்கும் சொந்தமானதாக இருக்கும்போது அவர்களுடைய வாழ்வாதாரங்களைப் பறிக்காமல், அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுவிடாமல் செயல்பட வேண்டியது அரசின் கடமையாகிறது. அதற்காகவே விவசாயிகள், நிலத்தைச் சார்ந்துள்ள நிலமற்ற விவசாயக்கூலிகள், கிராமப்புற மக்கள், பழங்குடிகள் போன்றோரின் நலன்களைக் காக்கும் வகையில் அனைத்து தரப்பாரிடமும் ஆலோசனைகள் பெற்று புதிய சட்டம் இயற்றப்படவிருக்கிறது'' இதை படிக்கும் போது ஏதோ நல்லவரைப்போல - மக்கள் மீது அக்கறையுள்ளவர் போல நமக்கு தோன்றும்.
                  மக்கள் நிலங்களை அபகரிக்கும் இந்த புதிய சட்டம் எதற்கு. ஏற்கனவே அரசின் தவறானக் கொள்கையினால் விவசாயத்தில் வருமானம் இல்லாமல், கந்து வட்டிக்கு கடன் வாங்கி, திருப்பித் தரமுடியாமல் இந்த நாட்டில் தினம் ஐம்பது விவசாயிகள் நொந்து போய் தற்கோலை செய்து கொண்டு சாகிறாகள். அவர்களைப் பற்றிய அக்கறை இந்த பிரதமருக்கு இல்லை.. விவசாயம் வீழ்ச்சியடைந்து  விட்டதால், வேலை இழந்த விவசாயக் கூலித் தொழிலாளர்கள் இன்றைய தினம் கட்டுமான தொழில் செய்யவும், இரவு நேரங்களில் சாலைகளை பெருக்கும்   துப்புரவுப்  பணி செய்யவும்  கிராமப்புறங்களிலிருந்து நகர்புறங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றிய சிந்தனை துளிக் கூட இந்த பிரதமருக்கு இல்லை.. ஆனால் விவசாயிகள், நிலமற்ற விவசாய கூலித் தொழிலாளர்கள், கிராமப்புற மக்கள், மலை வாழ் பழங்குடி இன மக்கள் - என இவர்கள் வயிற்றில் அடித்து விட்டு,  அமெரிக்க பன்னாட்டுக் கம்பெனிகள் தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு அவர்களின்  நிலங்களை அபகரிப்பது - அதற்கொரு சட்டம் போடுவது நியாயம் தானா..? 
                          நகர்புற விரிவாக்கம் என்ற பெயரில் பன்னாட்டு கம்பனிகளின் விமானப் போக்குவரத்துக்கு விமான நிலையம் அமைப்பதற்கும், ''வால்மார்ட் '' என்கிற அமெரிக்க சூப்பர் மார்க்கெட் -ஐ நம் நாட்டில் தொடங்கவும், (  சில்லறை வர்த்தகத்தில் நூறு சதவீத அந்நிய நேரடி முதலீட்டினை  மன்மோகன்  அரசு  அனுமதிக்கிறது. அதனால் நம் நாட்டில் பரம்பரை பரம்பரையாக  மளிகைக்கடை, காய்கறிக்கடை, மீன் கடை, துணிக்கடை வைத்திருந்து வியாபாரம் செய்பவர்கள் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு போகவேண்டியது தான் )  தொழிற்சாலைகள் என்ற பெயரில் அமெரிக்க பன்னாட்டு கம்பெனிகளின் தொழிற்சாலைகளை - அதுவும் அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட கெமிக்கல் தொழிற்சாலைகளை இங்கே அமைப்பதற்கு இலவசமாய் நிலத்தைக் கொடுத்து - மின்சாரம் மற்றும் தண்ணீர் போன்றவற்றை 24 மணிநேரமும்   இலவசமாய் விநியோகம் செய்து ( அதன் மூலம் மக்களுக்கு ஐந்து மணிநேர மின்வெட்டு - அதை பற்றியும் பிரதமருக்கு கவலை இல்லை என்பது வேறு விஷயம் ) அரசுக்கு வரவேண்டிய வரிகளிலும் அவர்களுக்கு விலக்களித்து - சிறப்புப் பொருளாதார மண்டலம்  என்ற பெயரில் தொழிற்சாலைகள் தொடங்குவதற்கும் தான்  இன்றைக்கு  இந்திய பிரதமர் இந்திய மக்களிடமிருந்து சட்டப்பூர்வமாக செய்யப்போகும்  நில அபகரிப்பு என்பதை தான் நேற்று சுதந்திர தின  விழாவில் அவர்  பேசினார்  என்பதை  அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு பெயர் தான் '' நாட்டின் வளர்ச்சி - முன்னேற்றம்'' என்கிறார் பிரதமர். ஆனால் இந்த  சட்டத்தால்  யாருக்கு வளர்ச்சி..? யாருக்கு முன்னேற்றம்..? என்பது நம்முடைய கேள்வி ஆகும்..
                 எனவே அமெரிக்க முதலாளிகளுக்காக அரசு எடுக்கும் இந்த நடவடிக்கைகளுக்கு கருத்தொற்றுமை அடிப்படையில் அனைத்து தரப்பாரிடமிருந்தும் ஆதரவும் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது என்று கேட்டுக்கொண்டு இந்திய மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.   
                    எச்சரிக்கை : நாம் கொஞ்சம் ஏமாந்தா வேட்டியையும் உருவிக்கொள்வார் நம் பிரதமர் ஜாக்கிரதை.