பொங்கல் வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொங்கல் வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 14 ஜனவரி, 2014

சமத்துவப் பொங்கல் வைப்போம்...!

                                                     மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
தமிழ்மாநிலச் செயலாளர் தோழர்.ஜி.ராமகிருஷ்ணன்
வாழ்த்துச் செய்தி...!


       தேசத்தின் இறையாண்மை, ஒற்றுமை, மதச்சார்பின்மையை பாதுகாத்து சமத்துவப் பொங்கல் வைக்க சபதமேற்போம்...!

                  
          தமிழ்ப்பெருங்குடி மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். 
          அனைவரது குடும்பத்திலும் இன்பம் பொங்கிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. “சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்” என்று வேளாண் தொழிலை சிறப்பித்துப் பேசினார் திருவள்ளுவர். உலகம் முழுவதும் அறுவடையின் துவக்கம் விழாவாக பல்வேறு வடிவங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்கள் அறுவடையின் துவக்கத்தை பொங்கல் திருநாளாகதை முதல்நாளை கொண்டாடி வருகின்றனர். பொங்கல் திருநாள் என்பது மானுடத்திற்கும், இயற்கைக்கும் இருக்கும் ஆனந்தமான உறவை சிறப்பிக்கும் திருநாளாக அமைந்துள்ளது.
          பழைய துன்பங்கள் தொலைந்து புதிய இன்பங்கள் வந்து சேரட்டும் என்ற தளராத நம்பிக்கையின் வெளிப்பாடாக இந்த விழா அமைந்துள்ளது. உலகின் ஆதி தொழில்களில் ஒன்று உழவு. ஆனால் இன்றைக்கு தாராளமயமாக்கல் யுகத்தில் உழவுத்தொழிலின் நிலையும் அதை கைக்கொள்ளும் உழவர்களின் நிலையும் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. மனிதர்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உணவுத்தேவையை உவப்போடு நிறைவேற்றும் உழவர்களின் வாழ்க்கை நாளுக்கு நாள் நலிந்தபடி உள்ளது.
                
மாநிலச்செயலாளர் வேண்டுகோளின்படி சமத்துவப் பொங்கல் வைத்ததில் பெருமை கொள்கிறோம்
           விவசாயிகள் விவசாயத்தைக் கைவிட்டு வேறு தொழிலுக்கு மாறவேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியது நாட்டு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குவதாக அமைந்தது. அவரது நோக்கம் கோடிக்கணக்கான விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களை விளை நிலத்திலிருந்து வெளியேற்றிவிட்டு அவற்றையெல்லாம் கார்ப்பரேட் முதலாளிகளின் கைகளுக்கு மாற்றித்தர வேண்டும் என்பது தான்.
                மெய்யான நிலச்சீர்திருத்தம், வேளாண் பொருட்களுக்கு கட்டுபடியான விலை, உரம் உள்ளிட்ட இடுபொருட்களின் மானியத்தை உயர்த்துதல் போன்ற கோரிக்கைகளுக்காக நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலமே விவசாயிகளை, விவசாயத்தை பாதுகாக்க முடியும். “நீரின்றி அமையாது உலகு” என்றார் வள்ளுவர். ஆனால் இன்றைக்கு தேசிய நீர்க்கொள்கை என்ற பெயரில் நீர்வளத்தையே பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கும் சதித்திட்டம் அரங்கேற்றப்படுகிறது.
         நீர் உள்ளிட்ட இயற்கையின் சீதனம் அனைத்தையும் பொதுவில் வைப்பதற்கான போரைத் தொடர்ந்திட வேண்டியுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை போதுமான அளவு பெய்யவில்லை. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மழை மற்றும் ஆற்றுப்பாசனத்தை நம்பி பயிர் செய்த விவசாயிகள் கை முதலையும் இழந்து தவிக்கின்றனர். வறட்சி குறித்து கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் கொடுக்க தமிழக அரசு முன்வரவேண்டும்.
          மத்திய அரசும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும். கரும்பு, நெல் உள்ளிட்ட அனைத்து விளை பொருட்களுக்கும் கட்டுபடியான விலைகிடைக்கவும் பயிர் இன்சூரன்ஸ் பாதுகாப்புத் திட்டம் குறைபாடின்றி நிறைவேறவும் அரசுகளை வலியுறுத்த வேண்டியுள்ளது. அனைத்துப்பகுதி மக்களுக்கும் உணவுப்பாதுகாப்பை வலியுறுத்துகிறபோது, பெரும் பகுதி மக்களை பலன் பெறுவதிலிருந்து தடுக்கும் குறைபாடு உள்ளதான ஒருசட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் உணவுப்பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கான போராட்டத்தைத் தொடர வேண்டியுள்ளது. பொது விநியோகமுறையை பாதுகாப்பது இதன் ஒரு பகுதியாகும்.
            காடு திருத்தி கழனியும், ஊரும் செய்ததெல்லாம் உழைக்கும் மக்களே. ஆனால் பெரும் பகுதிஉழைக்கும் மக்களை சாதியின் பெயரால் ஒதுக்கி வைத்தது நிலவுடைமைச் சமூகம்.அந்தக்கொடுமை இன்னமும் தொடர்கிறது. தமிழகத்தில் இன்னமும் கூட பல்வேறு இடங்களில், பல்வேறு வடிவங்களில் தீண்டாமைக் கொடுமை தொடர்கிறது. அனைத்துவித ஒடுக்குமுறைகளையும் முறியடித்து சமத்துவப் பொங்கல் வைக்க இந்நாளில் உறுதியேற்போம். “செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” என்பது தான் ஆதித்தமிழ்ச் சமூகத்தின் அகவாழ்க்கையாக இருந்துள்ளது.
                  ஆனால் இன்றைக்கு சாதியின் பெயரால் காதலைப் பிரிப்பதும், கவுரவக்கொலை செய்வதும் நிகழ்கால சமூகத்திற்கு பெரும் களங்கமாக உள்ளது. சமூகத்தில் சரிபாதியாக உள்ள பெண்கள் தொடர்ந்து சமூக ரீதியாகவும், பொருளியல் ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் ஒடுக்குமுறைக்கு ஆளாகின்றனர். காதலை கவுரவப்படுத்துகிற, பெண்களுக்கு அனைத்து நிலைகளிலும் சமஉரிமை தருகிற சமூகம் சமைத்திட தொடர்ந்து போராடுவோம். அரிசி, வெல்லம், நெய், பருப்பு என பல்வேறு பொருட்களின் சேர்க்கையில் தான் சுவையான பொங்கல் உருவாகிறது. கரும்பு, மஞ்சள், இஞ்சி, வாழை என பல்வகை விளைபொருட்கள் வீட்டுக்கு வந்து உழவுத் திருநாளுக்கு பெருமை சேர்க்கிறது.
            அதேபோன்று பல மொழி பேசுகிற, பல்வேறு இனங்களைச் சேர்ந்த, பல்வேறு மதங்களைப் பின்பற்றுகிற பன்முக நாடாக இந்தியா விளங்குவதுதான் பெரும் சிறப்பாகும். ஆனால் இந்த ஒற்றுமையைச் சீர்குலைத்து ஒற்றைப்பண்பாட்டைத் திணிக்க முயலும் மதவெறி சக்திகள் அதிகாரத்தைப் பிடிக்க அலைவதைப் பார்க்கிறோம். இதை முறியடித்து இந்தியாவில் பன்முகப் பண்பாட்டை, மதச்சார்பின்மையை பாதுகாக்கவும் போராட வேண்டியுள்ளது. தாராளமயமாக்கல் கொள்கையால் நாடு பெரும் இன்னலைச் சந்தித்து வருகிறது.
              இந்தக்கொள்கைதான் இந்திய விவசாயத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக எழுந்துள்ளது. தேசத்தின் இறையாண்மையை, ஒற்றுமையைப் பாதுகாத்து சமத்துவப் பொங்கல் வைக்க இந்த இனிய நாளில் சபதமேற்போம்.

திங்கள், 14 ஜனவரி, 2013

அநீதிக்கு எதிராக பொங்கிட உறுதியேற்போம்...!

        மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச்செய்தியில் கூறியுள்ளதாவது:-
         தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். “உழுவார் உலகத்தார்க்கு ஆணி” என்பது வள்ளுவர் வாய்மொழி. மனித குலத்தின் ஆதித் தொழில் உழவு. இயற்கையோடு இயைந்து வாழும் மனித குலத்தின் இயல்பான கொண்டாட்ட வெளிப்பாடே பொங்கல் திருநாளாகும். “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்றார் மகாகவி பாரதி. உழவையும் உழைப்பையும் வந்தனை செய்யும் விழாவாக பொங்கல் விழா விளங்குகிறது. கிழிந்த துணியாய் நைந்து கிடக்கிற வாழ்க்கையை வருகிற தைத்திருநாள் தைத்து செம்மைப்படுத்தும் என்று ஒவ்வொரு பொங்கல் திருநாளின் போதும் மக்கள் நம்பிக்கை கொள்கிறார்கள். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்க்கைக்கான போராட்டங்களை கைக்கொள்கிறார்கள். உலகுக்கே உணவு படைக்கும் உழவர்களின் வாழ்க்கை எவ்வாறு இருக்கிறது என்று இந்த நாளில் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. காவிரி பாசனப்பகுதி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயிர்கள் காய்ந்து போவதை பொறுத்துக் கொள்ளமுடியாமல் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியாலும் உழவர்கள் மாண்டு போகும் செய்தி வேதனையளிக்கிறது. இதுவரை விவசாயத்தைப் பற்றி மட்டுமே விவாதித்து வந்தோம். இனி மேல் விவசாயிகளைப் பாதுகாப்பது குறித்தும் விவாதிக்க வேண்டும் என்கிறார்       பிரபல வேளாண்விஞ்ஞானி  
எம்.எஸ்.சுவாமிநாதன். கட்டுப்படியாகாத தொழிலாக மாறிக் கொண்டிருப்பதால் உழவுத்தொழிலை விட்டு வெளியேறும் உழவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. உழவையும் உழவர்களையும் பாதுகாப்பதற்கான தொலைநோக்கு திட்டங்களை உருவாக்குவதோடு மட்டுமின்றி, இந்திய பாரம்பரிய உழவுக்கு உலை வைக்கும் கொள்கைகளை எதிர்த்து போராட வியூகம் வகுப்பதன் மூலமே உழவர் திருநாள் என்பது உண்மையில் அர்த்தம் பெறும். காவிரி பாசன விவசாயிகள் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துப் பகுதி விவசாயிகளும் வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். வாழ்விழந்து வழிதெரியாமல் தவிக்கும் விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்களைப் பாதுகாக்க உடனடி நிவாரணம் வழங் கவதும், நீண்ட கால தொலைநோக்கு திட்டங்களை உருவாக்குவதும் இன்றியமையாதது.
             மெய்யான நிலச் சீர்திருத்தம், பாசன பாதுகாப்பு, உரத்திற்கு மானியம், விதை உரிமையை பாதுகாத்தல் உள்ளிட்ட பல்நோக்கு திட்டமாக அது அமைந்திடல் வேண்டும். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்ற முடிவின் மூலம் வால்மார்ட் போன்ற பன்னாட்டு பகாசுர நிறுவனங்களுக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறது மத்திய ஐக்கிய முற்போக்கு கூட் டணி அரசு. இந்த முடிவு கோடிக்கணக்கான சில்லரை வர்த்தகர்களின் வாழ்வை மட்டுமின்றி, கோடானுகோடி விவசாயிகளின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து ரத்தம் சிந்தி போராடி பெற்ற விடுதலையை பாதுகாக்க வேண்டுமானால், கண்மூடித்தனமான அந்நிய மூதலீட்டு நுழைவை எதிர்த்து போராடுவது அவசியமாகும். உழவை மட்டுமின்றி, உணவின் தேவையையும் வலியுறுத்தும் உணர்வு மிக்க விழா பொங்கல். ஆனால், மத்திய ஆட்சியாளர்கள் வறுமைக்கோடு என்ற மோசடியான அளவீட்டின் மூலம் மக்களின் உணவுக்கான உரிமையையே பறிக்க முயல்கின்றனர். இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகள் தீயின் தீவிரத்தோடு போராடி வருகின்றன. ஒவ்வொரு இந்திய குடிமகனின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது காலத்தின் தேவையாகும். அதற்கு பொது விநியோக முறையை பாதுகாப்பதும், பலப்படுத்துவதும் அவசியமாகும்.    
               நிலவுடைமை சமூகத்தின் தீய விளைச்சலாக விளங்கும் சாதியம் தனது கோரமுகத்தை மேலும் மேலும் வெளிப்படுத்தி வருகிறது. நாடு விடுதலை பெற்று இத்துணை ஆண்டுகள் ஆனபின்னும் கூட தீண்டாமைக் கொடுமை தீரவில்லை என்பதையே தருமபுரி மாவட்டத்தில் நடந்த கோரத் தாக்குதல்கள் உணர்த்துகின்றன. அகம், புறம் என வாழ்வை பகுத்த தமிழர்கள் காதலையும் வீரத்தையும் பிரிக்க முடியாத பண்பாட்டு கூறுகளாக கொண்டிருந்தனர். அதிலும் அகவாழ்க்கையில் களவுநெறி என்ற பெயரில் காதல் வாழ்க்கை போற்றப்பட்டது. ஆனால் இன்றைக்கு சில சாதி அமைப்புகள் காதல் திருமணங்களே கூடாது என்று வெளிப்படையாக வெறிக்கூச்சல் போட்டு வருகின்றன. சாதிமறுப்பின் முதல் படியாக விளங்குகிற காதல் திருமணங்களை ஆதரிப்பதும், ஊக்குவிப்பதும் தமிழ் பண்பாட்டின் தவிர்க்க முடியாத கூறாகும்.
         தலைநகர் தில்லி துவங்கி தமிழகத்தின் கடைக்கோடி கிராமங்கள் வரை பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான தாக்குதல்கள் அதிர்ச்சி தரும் வகையில் அதிகரித்து வருகின்றன. பெண் விடுதலை இன்றி மண் விடுதலை அர்த்தம் பெறாது. அனைத்து நிலைகளிலும் பெண்கள் விடுதலை பெற, ஒடுக்குமுறைகளை உடைத்தெறிய போராட வேண்டியுள்ளது. தமிழகத்தில் அனைத்து நிலைகளிலும் தமிழ் தலைமையேற்பதை உறுதி செய்ய வேண்டும். மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் உள்ளிட்ட மொழிகள் மாறுவது ஜனநாயகத்தின் வேரை மேலும் பலப்படுத்தும். பல்வேறு பொருட்களின் கூட்டுச் சேர்க்கையால் எவ்வாறு பொங்கல் இனிக்கிறதோ அவ்வாறு பன்முகப் பண்பாட்டால் நம்முடைய இந்தியத் திருநாடு நிமிர்ந்து நிற்கிறது. மக்கள் ஒற்றுமையை, மதச்சார்பின்மையை கெடுக்க முயலும் குறுகிய நோக்கம் கொண்ட மதவெறி சக்திகளை முறியடிக்க வேண்டும். அநீதிக்கு எதிராக, அக்கிரமத்திற்கெதிராக - மக்கள் வாழ்வை நாசம் செய்யும் தீய கொள்கைகளுக்கு எதிராக பொங்கிட இந்த பொங்கல் நாளில் உறுதியேற்போம். எத்தகைய சோதனைகளை சந்தித்தாலும் துயர் அகலும் என்ற நம்பிக்கையுடன் உழவர் திருநாளாம் பொங்கல் விழாவை கொண்டாடிட வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.
நன்றி :

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்...!

                    நம் நாட்டு உழவையும், தொழிலையும் நாசப்படுத்த நம் நாட்டிற்குள்ளே வரும்  பன்னாட்டு நிறுவனங்களை விரட்டியடிப்போம். வருமானம் இல்லாமல் போனதால் தன் மானம் காக்க உயிரை மாய்த்துக்கொள்ளும் விவசாயிகளையும், தொழிலாளர்களையும் வாழவைப்போம். 
 
            நம் நாட்டில் அழிந்து கொண்டிருக்கும் உழவும், தொழிலும் உயரவேண்டும். இந்த தேசத்தைக்காக்கும் ராணுவம் என்பது கிராமப்புறங்களிலும்,  தொழிற்சாலைகளிலும்  தான் இருக்கின்றன. அரிவாளும், சுத்தியலும் தான் இவர்களின் ஆயுதம். துப்பாக்கிகளும் பீரங்கிகளும் ஏந்திய ராணுவம் தேவையில்லை. அரிவாளும் சுத்தியலும் ஏந்திய ராணுவம் தான் நமக்குத் தேவை. அது அதான் சிறந்த ராணுவம். உழவும் தொழிலும் வளர்ந்தால் தான் அது வல்லரசு. அது தான் நல்லரசு.


                      உழுபவர்களுக்கு நிலத்தையும்,                      
                      உழைப்பவர்களுக்கு நாட்டையும் கொடுப்போம்.               
                      அப்போது தான் நாடும் உயரும். நாமும்  உயர்வோம்.               
                      பொங்கல் திருநாளில் உறுதி ஏற்போம்...                 
                      புரட்சிகர பொங்கல் நல்வாழ்த்துகள்...