நேற்று உலகம் முழுதும் நவம்பர் 7 - புரட்சி தினம் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆனால் கேரள மக்களோ நேற்றைய இந்த தினத்தை மேலும் சிறப்புடையதாக மாற்றிவிட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணிக்கு உள்ளாட்சித்தேர்தல் வெற்றியை புரட்சிதினப்பரிசாக அளித்து சிறப்பு சேர்த்தனர். அதற்காக கேரள மக்களை நெஞ்சார பாராட்டவேண்டும்.
இடது ஜனநாயக முன்னணியிலுள்ள இடதுசாரிக்கட்சிகளை இந்த தேர்தலோடு ஒழித்துக்கட்ட வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதாக்கட்சியும் ஒருபுறம் மதவாத அமைப்புகளோடும், சாதிய அமைப்புகளோடும், மறுபுறம் தங்களுக்கு ஒத்து ஊதும் ஊடகங்களோடும் வெட்கமில்லாமல் ஒன்றாக கைகோர்த்து தேர்தல் களத்தில் இறங்கின.
அதுமட்டுமில்லாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கதையும், இடது ஜனநாயக முன்னணியின் கதையும் இந்த தேர்தலோடு முடிவுக்கு வந்துவிடுமென்று ஊடகங்கள் ''கிளி ஜோசியக் கணிப்புகளை'' கொஞ்சம் கூட தயக்கமில்லாமல் அள்ளி வீசின.
ஆனால் இடது ஜனநாயக முன்னணி கட்சிகளோ ''மக்களாகிய நாம் தோற்காமலிருக்க... இடது ஜனநாயக முன்னணிக்கு வாக்களியுங்கள்'' என்று கேரள மக்களிடம் விடுத்த வேண்டுகோளை தலைமேல் ஏற்று, ஊழல்வாத காங்கிரஸ் கட்சியையும், மதவாத பாரதீய ஜனதாக்கட்சியையும், சாதிய - மதவாத அமைப்புகளையும், உண்மையை உரைக்காத ஊடகங்களையும் தூக்கியெறிந்து கேரள மக்கள் தெளிவாக வாக்களித்திருக்கிறார்கள்.
ஆயிரக்கணக்கான தியாகிகளின் செங்குருதியில் சிவந்த கேரள மண்ணிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிகளை துடைத்தெறிவது என்பதும், எங்கள் மனதிலிருந்து தூக்கி எறிவது என்பதும் அவ்வளவு எளிதானகாரியமல்ல என்பதை கேரள மக்கள் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் தெளிவாக பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அதற்காக அவர்களை நெஞ்சார பாராட்டவேண்டும். வாழ்த்தவேண்டும்.
இந்த வெற்றி என்பது நேரம் அறிந்து இடதுசாரிக்கட்சிகளுக்கு கொடுத்தப்பரிசு.

