டெல்லி சட்டமன்றத் தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டெல்லி சட்டமன்றத் தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 11 பிப்ரவரி, 2015

டெல்லி மக்களை நெஞ்சார பாராட்டவேண்டும்...!

                   
             ''மோடி அலை'' என்ற மாயையை மோதி உடைத்த ''மக்கள் அலையை'' பாராட்டியே ஆகவேண்டும். ஆம்... அண்மையில் நடந்து முடிந்த டெல்லி சட்டமன்றத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியையும், பாரதீய ஜனதாக் கட்சியையும் ஒரேயடியாய் தூக்கியெறிந்த டெல்லி மக்களை நன்றியுடன் வாயார - நெஞ்சார வாழ்த்துகிறேன்... பாராட்டுகிறேன். பொய்களை அள்ளித்தெளித்து - பெருமுதலாளிகளின் கோடிகளை அள்ளிக்கொடுத்து கடந்த பாராளுமன்றத்தேர்தலில் வெற்றிபெற்று, பின்னாளில் சில மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தல்களிலும் வெற்றிபெற்று திமிரோடும், ஆணவத்தோடும் மதவெறியை உயர்த்திப்பிடித்து நாட்டில் உலா வந்த பாரதீய ஜனதாக்கட்சியின் மீது டெல்லி மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்புணர்வும், பாராளுமன்றத்தில் இராட்சச பலத்தை வைத்துக்கொண்டு, அமெரிக்காவிற்கு ஆதரவாக - தேசத்திற்கு எதிராக - மக்களுக்கு எதிராக தான்தொன்றித்தன்மாக - அடாவடித்தனமாக - தருதலைத்தனமாக மத்திய மோடி ஆட்சியின் மீது டெல்லி மக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றமும் இந்த சட்டமன்றத்தேர்தலில் பிரதிபலித்திருப்பது தெளிவாகத்தெரிகிறது.
               உலகமே பார்த்துக்கொண்டிருக்கும் இந்த தலைநகர் தேர்தலில் தான் எப்படியாவது வெற்றிபெற்று உலகத்திற்கு காட்டவேண்டும் என்று துடிதுடித்து தேர்தல் வேலைகளை பார்த்தார். அதற்காக பத்திரிக்கைகளுக்கு பல கோடிகளை  செலவு செய்திருக்கிறார். ஆனால் அவை எதையும் டெல்லி மக்கள் கண்டுகொள்ளவில்லை என்பதும், மோடியின் பொய்யான வார்த்தை ஜாலங்களுக்கு மக்கள் செவி சாய்க்கவில்லை என்பதும் யாராலும் மறுக்கமுடியாத உண்மை. கடந்த பாராளுமன்றத்தேர்தலில் தான் காங்கிரஸ் கட்சி ஆட்சியின் நாசகரக்கொள்கைகளையும், மெகா ஊழல்களையும் நேரில் தங்கள் அருகிலேயே பார்த்து நொந்து போன டெல்லி மக்கள், காங்கிரஸ் கட்சியை தங்கள் தலையை சுற்றி தூக்கிஏறிந்தார்கள். 
                அதை கிழிப்பேன்... இதை கிழிப்பேன் என்று வார்த்தை ஜாலங்களை அள்ளித்தெளித்து, கோடிகளை அள்ளிக்கொடுத்து ஆட்சியிலமர்ந்த பாரதீய ஜனதாக்கட்சியோ கடந்த காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் போலவே கொஞ்சமும் வித்தியாசமில்லாமல், அதேப்பாதையில் அவர்களை விட வேகமாக - தாறுமாறாக பயணம் செய்ததை பார்த்து வெறுத்துப் போன டெல்லி மக்கள் - மதச்சார்பின்மையை குழித்தோண்டி புதைத்து, இந்துக்கள் அல்லாத மாற்று மதத்தினருக்கெதிரான மதவெறி சம்பவங்களை பார்த்து வெகுண்டு போன டெல்லி மக்கள் கடந்த பாராளுமன்றத்தேர்தலில் ஆளுங்கட்சியாக அமரவைத்த பாரதீய ஜனதக்கட்சியை, நடந்துமுடிந்த சட்டமன்றத்தேர்தலில் எதிர்கட்சியாகக்கூட அமரமுடியாமல் துடைப்பத்தால் அள்ளி குப்பைத்தொட்டியில் வீசி எறிந்துவிட்டார்கள்.
                  இதற்காக மீண்டும் மீண்டும் டெல்லி மக்களை வாயார பாராட்டலாம். நெஞ்சார வாழ்த்தலாம். இந்திய மக்களிடையே மாற்று சிந்தனையை விதைத்திருக்கிறார்கள். மீண்டுமொரு முறை வாழ்த்துகள்.....! 

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

முரண்பாடுகளுடன் டெல்லியில் ''ஆம் ஆத்மி கட்சி'' ஆட்சி...!


                       தலைநகர் டெல்லியில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், கடந்த காலங்களில் தொடர்ந்து ஆட்சியில் இருந்துவந்த காங்கிரஸ் கட்சி டெல்லி மாகலின் மிக கடுமையான கோபத்திற்கு பலியாகி போனது. மீண்டும் உயிர் பெற்று எழுந்திருப்பது என்பது அவர்களால் நினைத்துக்கூட  பார்க்கமுடியாது. காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் உட்பட பல முக்கிய  காங்கிரஸ் கட்சித் தலைவர்களெல்லாம் படுதோல்வி அடைந்து, 70 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் எட்டே தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்று மண்ணைக் கவ்வியது.  கடந்த ஐந்து ஆண்டுகால மகா ஊழல்கள், கடுமையான விலைவாசி உயர்வு என மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு சீர்கேடுகள் நிறைந்த   ஆட்சியினால் பாதிக்கப்பட்ட மக்கள் காங்கிரஸ் கட்சியை தூக்கி எறிந்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
           இன்னொரு பக்கம், மத்தியில் ஆட்சியை பிடிக்க அலைந்து கொண்டிருக்கும் பாரதீய ஜனதா கட்சி, டெல்லியில் பிரபலமான நபர் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து, முதலில் டெல்லியை பிடிக்கும் ஆசையில் அனைத்து 70 தொகுதிகளிலும் களத்தில் இறங்கியது. ஆனால் ஊழலை பொருத்தவரை பாரதீய ஜனதாக் கட்சியும் விதிவிலக்கல்ல. அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களும், ஆட்சி செய்த மாநிலங்களுமே மிகப்பெரிய சாட்சியாக நிற்கிறது என்பதாலும், மதவாதம் மற்றும்  சிறுபான்மையினருக்கு எதிரான போக்குகள் கொண்ட  ஒரு சீர்குலைவு சக்தியாக காட்சிதரும் பாரதீய ஜனதாக் கட்சிக்கும் ஆட்சியமைக்க முழு அளவிற்கான மெஜாரிட்டியை மக்கள் தாராமல் 30 தொகுதிகளை மட்டுமே கொடுத்தார்கள். அந்த முப்பது இடங்களில் பெற்ற வெற்றி கூட, காங்கிரஸ் கட்சியின் மீதான கோபத்தினால் மக்கள் அளித்த காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகள் தான் என்பதும் உண்மை.
          இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஊழல் எதிர்ப்பை மட்டுமே முழக்கமிட்டு தலைநகர் டெல்லியில், வெளிநாட்டுப் பணத்தை செலவு செய்து, கார்ப்போரேட் கம்பெனிகள் மற்றும் இந்திய - அந்நிய பெருமுதலாளிகளின் ஆதரவுடன் இரண்டு முறை உண்ணாவிரதமிருந்த ''ஊழலை ஒழிக்க ஆதாரம்'' எடுத்த அண்ணா ஹசாரே உடன் மேடையில் காட்சியளித்து, ஊடகங்களின் மூலம் மக்களின் மத்தியில் பிரபலமான கெஜ்ரிவால், ஹசாரேவை முந்திக்கொண்டு ''ஊழலை ஒழிக்கப்போகிறேன்'' என்று ''ஆம் ஆத்மி கட்சியை'' துவக்கி மக்களிடம் அறிமுகமே இல்லாத பலரையும் தேர்தல் களத்தில் இறக்கி 70 தொகுதிகளிலும் போட்டியிட்டார். உளவியல் ரீதியாக இந்திய மக்களை மிகவும் பாதித்த விஷயம் காங்கிரஸ் கட்சியும் பாரதீய ஜனதாக் கட்சியும் செய்த ஊழல் என்பது மட்டுமே மக்களின் மூளைகளில் பிரதானமாக ஆக்கிரமித்த ஒன்றாகிவிட்டது. ஊழலை மட்டுமே வைத்துக்கொண்டு மக்களை மூளைச் சலவை செய்து அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துவிடலாம் என்று கெஜ்ரிவால் கனவுகண்டு களத்தில் இறங்கினார். ஆனால்  28 இடங்களிலேயே வெற்றி பெற முடிந்தது. இவருக்கு கிடைத்ததும் காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகளே என்பதும் உண்மை.
          கெஜ்ரிவால் மிகவும் மிகவும் கெட்டிக்காரர். அனுபவமில்லாமலேயே மிகவும் தேர்ந்த அரசியல்வாதியை போல் நடந்துகொண்டிருக்கிறார். அண்ணா ஹசாரே ஏதோ  சிரமப்பட்டு உண்ணாவிரதமெல்லாம் இருந்து மக்கள் மத்தியில் ஒரு ''பரமாத்மா'' போல் காட்சி தந்து பிரபலமாகிக்கொண்டிருந்த கூழ்நிலையில், தான் ஒரு அரசியலில் குதித்து ஒரு கலக்கு கலக்கலாம் என்று ஹசாரே நினைத்துக்கொண்டிருக்கும் போதே அவரை முந்திக்கொண்டு ஊழல் எதிர்ப்பு கோஷத்தை யாரும் எதிர்பாராத விதமாக அரசியலில் தொபுக்கடீரென்று குதித்தார் இந்த குருவை மிஞ்சிய சிஷ்யன் கெஜ்ரிவால். ''வடை போச்சே'' என்று ஹசாரே கெஜ்ரிவாலை திட்டித்தீர்த்தார். சாபமிட்டார். தேர்தலில் கெஜ்ரிவாலுக்கு நான் ஆதரவு தரமாட்டேன் என்று சபதமிட்டார். சட்டமன்றத்தேர்தலில் கெஜ்ரிவால் 28 இடங்களே கிடைத்ததில் ஹசாரேக்கு மகிழ்ச்சி தான். நான் ஆதரவு கொடுத்திருந்தால் இன்னும் அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்திருப்பார் என்று ஹசாரே கர்ஜித்தார். இதிலே என்னன்னா.... விதைத்தவன் ஒருத்தன் அறுவடை செய்தவன் வேறோருத்தனா போய்ட்டான் என்பது தான் உண்மை. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பான்னு கெஜ்ரிவால்  சொல்லுவாரு போலிருக்கு. அந்த அளவிற்கு தேர்ந்துவிட்டார்.
         ஆனால் இந்த டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவின் மூலம் நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். சட்டமன்ற தேர்தலில் எந்த ஒரு கட்சியும் 36 இடங்களில் வெற்றி பெற்றால் தான் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கமுடியும். ஆனால் இந்த தேர்தலில் டெல்லி மக்கள் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மையை தராதது என்பதிலிருந்து நாம் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும். ''எங்களுக்கு எந்த ஒரு  கட்சியின் ஆட்சியும் வேண்டாம்'' என்று ''NOTA'' வை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
   # அப்படியிருக்க மக்களின் விருப்பத்திற்கு எதிராக கெஜ்ரிவால் ஆட்சியமைத்திருப்பது என்பதே ஒரு முரண்பாடு தான்.
              # அதுமட்டுமல்லாமல், ஊழல்கள் மலிந்த காங்கிரஸ் கட்சியே வேண்டாம் என்று தான் டெல்லி மக்கள் அக்கட்சியை தூக்கி எறிந்திருக்கிறார்கள். அப்படியிருக்கையில் மக்கள்
தூக்கி எறிந்த கட்சியின் ஆதரவோடு ஆட்சி அமைத்திருப்பது என்பது இன்னொரு முரண்பாடு.
          # காங்கிரஸ் கட்சி செய்த ஊழலைப்பார்த்து தான் ஊழலை ஒழிக்கபோறேன்னு கட்சியை ஆரம்பித்து மக்களிடம் ஒட்டு கேட்டு வந்தார். இப்போது அதே காங்கிரஸ் கட்சியோடு கைகொர்த்திருப்பது மற்றுமொரு முரண்பாடு.
          # யாருக்குமே தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலையில் எண்ணிக்கை மட்டுமே உண்மையான ஜனநாயகமாக கருதமுடியாது. ஜனநாயகத்தில் இதுவே ஒரு முரண்பாடு தான்.