பகத்சிங் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பகத்சிங் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 1 ஜனவரி, 2013

பாரதி - பகத் சிங் கனவு கண்ட இந்தியாவை படைப்போம்....!



















            முதலில் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். 2012 - ஆம் ஆண்டில் பல்வேறு நல்ல நல்ல நிகழ்வுகளையும், பல்வேறு கசப்பான நிகழ்வுகளையும் கடந்து இன்று 2013 - ஆம் ஆண்டிற்குள் நுழைந்திருக்கிறோம். இன்னிக்கு நிறைய பேரு தீர்மானம் போட்டுருப்பாங்களே...? இன்னியிலிருந்து நான் சிகரெட்டையே தொடவே மாட்டேன்னு ஒருத்தரூ முடிவெடுப்பார். இன்னொருத்தரு இன்னியிலிருந்து நான் தண்ணியே அடிக்கவே மாட்டேன்பா அப்படின்னு முடிவெடுப்பார். உடம்புக்கு ஆகாதுன்னு தானே இது போன்ற தீர்மானமெல்லாம் போடுறாங்க. உடம்புக்கு ஆகாதுன்னா உடனே விட்டுவிட வேண்டியது தானே அந்த சனியனை. அதுக்காக ஒரு நாள் பாத்து, தீர்மானம் போட்டு தான் விடுனுமாக்கும். ஆரம்பிக்கும் போது தீர்மானமா போட்டீங்க. இப்படி சில பேரு கூவிக்கிட்டு திரிவாங்கே.
             புத்தாண்டில் நாம் எடுக்க வேண்டிய தீர்மானம் இதுவல்ல. நாம் முடிவு செய்யவேண்டியது இதுவல்ல. வரும் புத்தாண்டில் நாம் என்ன செய்யவேண்டும். இந்த புத்தாண்டின் பலன் என்ன தெரியுமா...? நான் சொல்லுறேன் கேளுங்க..! ''வருமானம் கூடாது. வருமானத்திற்கு அதிகமா செலவு ஆகும். பணம் விரையமாகும். சேமிப்பு இருக்காது. பணவீக்கம் இன்னும் அதிகமாகும்.  வீட்டு தேவைகளை சமாளிக்க கடன் வாங்க வேண்டி வரும். கடன் தொல்லை தாங்கமுடியாது. அதனால கணவன் மனைவிக்குள்ள சண்டைவரும்.  புள்ளைங்க படிப்பில் கவனம் செலுத்தமாட்டாங்க. சினிமா, வெளியூர் பயணம் குறைந்து போகும்''  இந்த புத்தாண்டு பலன் எந்த ''ராசிக்காரங்களுக்கு'' என்றால், இந்தியாவிலுள்ள அனைத்து ''ஜீவராசிகளுக்கும்'' இது தான் இந்த புத்தாண்டின் பலன்  என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். பிச்சைக்காரர்கள் மேலும் பிச்சைக்காரங்களா போயிட்டு இருப்பாங்க. ஆனா அவிங்க கிட்ட பேங்க் பாஸ் புத்தகம் இருக்கும், பான் கார்டு இருக்கும், ஏ . டி . எம். கார்டு இருக்கும். பசி இருக்கும். பணம் இருக்காது.
           இதெல்லாம் எதோ ஜோசியம் சொல்லுகிறேன்னு நினைக்காதீங்க. மன்மோகன் சிங் - ப.சிதம்பரம் வகையறாக்கள் செய்யப்போகிற சித்து விளையாட்டுகள் ஏராளமா இருக்கு. அந்த சித்து விளையாட்டுகள் தான் மக்களை இந்தப் பாடுபடுத்தப்போகுது.
         இது தான் உண்மையான சுதந்திர இந்தியாவா...? ஒரு பக்கம் பணக்காரர்கள் பெரும்பணக்காரர்களாக வளர்ச்சியடைகிறார்கள். அவர்களுக்கே ஏகப்பட்ட சலுகைகளை ஆட்சியாளர்கள் கொட்டிகொடுக்கிறார்கள். இன்னொரு பக்கம் வேலையின்மை, வேலையிழப்பு, வருமானம் வெட்டு, விலைவாசி உயர்வு, பணவீக்கம் போன்றவற்றால் ஆட்சியாளர்களே  கோடிக்கணக்கான சாதாரண, நடுத்தர மற்றும் ஏழை மக்களை வாட்டிவதைக்கிறார்கள். ஒளிரும் இந்தியாவாகவும், ஒழியும் இந்தியாவாகவும் சுதந்திர இந்தியா இரண்டுப்பட்டு கிடக்கிறதே. இந்த பாகுபாடுகளை ஒழிக்க அல்லவா இன்றைய இளைஞர்கள் தீர்மானம் போடவேண்டும்.
          இதற்காகத்தானே இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே ''சுதந்திர இந்தியா'' எப்படி இருக்கவேண்டும் என்று பாரதியும், பகத்சிங்கும் ஆகிய இரண்டு இளைஞர்கள்  கனவு கண்டார்கள். ''பாலுக்கு அழும் குழந்தை, கல்விக்கு ஏங்கும் மாணவன், வேலை தேடும் இளைஞன், வறுமையில் வாடும் தாய் - இவர்கள் இல்லாத இந்தியாவே உண்மையான சுதந்திர இந்தியா'' என்று கனவு கண்டவன் மாவீரன் பகத்சிங் என்பதை மறந்து விடக்கூடாது. எல்லோரும் எல்லாமும் பெற்ற சுதந்திர இந்தியாவிற்காக தீர்மானம் போடவேண்டும். அதற்காக சபதம் ஏற்கவேண்டும்.
          தேச விடுதலை என்பது ஒரு பகுதியினருக்கு மட்டுமல்ல.
          ''பறையருக்கும் இங்கு தீயர்
                   புலையருக்கும் விடுதலை
           பரவரோடு குறவருக்கும்
                  மறவருக்கும் விடுதலை''  
 
என்று அனைவருக்குமான விடுதலையை வேண்டினான் பாரதி.
          ''ஏழை யென்றும்  அடிமை யென்றும்
                   எவனும் இல்லை ஜாதியில்
           இழிவுகொண்ட மனிதரென்பது
          இந்தியாவில் இல்லையே''
 
என்று சமூக நீதி தவறாத இந்தியாவிற்காக கனவு கண்டான் பாரதி. இந்த சமூக மாற்றங்களுக்காக இன்றைய இளைஞர்கள்   தீர்மானம் போடவேண்டும். அதற்காக சபதம் ஏற்கவேண்டும்.
                  கடந்த பத்து நாட்களாக நாடு பூராவிலும் இருந்து இளைஞர் கூட்டம் '' மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்'' வீறுகொண்டு எழுந்தார்கள். நாட்டில் எது நடந்தாலும் அதை கண்டுகொள்ளாது, கைகளில் லேப்டாப்பும், மொபைல் போனும் வைத்துக்கொண்டு, நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி, நிற்க நேரமில்லாமல் பறக்கும் இந்த இளைஞர் கூட்டம் டெல்லி மாணவி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொல்லப்பட்ட போது வெகுண்டெழுந்தார்கள். எங்கிருந்து வந்தது இவ்வளவு கோபம். தன்  வீட்டு சகோதரிக்கு நேர்ந்தது போல் வீறுகொண்டு எழுந்ததை பார்க்கும் போது பாரதி சொன்ன ''ரௌத்திரம் பழகு'' என்கிற அக்னி வரி தான் நினைவுக்கு வந்தது. இதேப்போல் எதிர் காலத்தில் பெண்களை மதித்தல் வேண்டும் என்பதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் தீர்மானம் போட்டிட வேண்டும். அதற்காக சபதம் ஏற்றிட வேண்டும்.
''மனதி லுறிதி வேண்டும்
   வாக்கினி  லேனிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
   நெருங்கின பொருள் கைப்பட  வேண்டும் ;
கனவு மெய்பட வேண்டும்,
   கைவசமாவது விரைவில்  வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
   தரணியிலே பெருமை வேண்டும்;
கண் திறந்திட வேண்டும்;
   காரியத்தி லுறிதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
   பெரியகடவுள் காக்க வேண்டும்;
மண் பயுனுற வேண்டும்,
   வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்;''  
 
என்ற பாரதியின் எழுச்சி வரிகளை உறுதி ஏற்றிடவேண்டும். இதைத் தான் நாடும், நாமும் எதிர்ப்பார்க்கிறோம்.  

புதன், 15 ஆகஸ்ட், 2012

தானாக கிடைத்ததல்ல சுதந்திரம்...!


          பள்ளி  வரலாற்றுப் பாடத்தில்  இந்திய சுதந்திர போராட்டத்தை பற்றிப் படிக்கும் போது ''கத்தியின்றி, ரத்தமின்றி, சத்தமின்றி, யுத்தமின்றி காந்தி நம் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தார்'' என்கிற வரியை எல்லா வகுப்பிலும் நாம் படித்திருப்போம். அதை படிக்கும் போது, ஏதோ காந்தி மட்டுமே  வெள்ளைக்காரனிடம் கெஞ்சிக்கேட்டு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தது போன்ற  ஒரு கருத்தை தான் படிக்கும் மாணவர்களிடம் ஏற்படுத்தும். இந்த நாட்டை ஆண்ட ஆட்சியாளர்கள் - குறிப்பாக காங்கிரஸ்காரர்கள் பள்ளிப் பாடப்புத்தகத்தை தங்கள் கட்சிப் பிரச்சாரத்திற்காகவே பயன்படுத்திக்கொண்டார்கள். அதனால் தான், இந்த தேசத்திற்கு கிடைத்த சுதந்திரத்திற்கும், அதற்காக நடத்தப்பட்ட போராட்டத்திற்கும் சொந்தக்காரர்களாக காங்கிரஸ்கட்சியையும், காந்தியையும் மட்டுமே காட்டுகின்றனர். அதுவும் வடநாட்டு காங்கிரஸ் தலைவர்களைத் தான் குறிப்பிட்டிருப்பார்கள். தென்னிந்தியத் தலைவர்களை - குறிப்பாக காமராஜர், திருப்பூர் குமரன், பாரதியார், வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, வாஞ்சிநாதன் போன்ற  தமிழகத்தலைவர்களை பற்றி ஒரு சிறு குறிப்புக்கூட காட்டியிருக்கமாட்டார்கள். 
                  நாம் வரலாற்றுப் பாடத்தில் படிப்பது போல் '' ஏதோ  கேட்டுப்பெற்றதல்ல சுதந்திரம்... தானாக வந்ததுமல்ல சுதந்திரம்...''
           ஜாலியன் வாலாபாக்கில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் உயிர்த்தியாகம் செய்து, ரத்தம் சிந்தி பெற்றச் சுதந்திரம் இது...
           பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், உத்தம்சிங் போன்ற இளைஞர்கள்  தூக்குமேடை   ஏறிப் பெற்றச் சுதந்திரம் இது...
           திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன் போன்ற  இளைஞர்களும் உயிர்த்தியாகம் செய்துப் பெற்றச் சுதந்திரம் இது. 
            பாரதி தன்  பாட்டுத்திறத்தாலே விடுதலைத்தீயை மூட்டி இந்திய மக்களிடையே எழுச்சியை உண்டாக்கி பெற்றச் சுதந்திரம் இது. வ. உ. சி மற்றும் சுப்பிரமணிய சிவா போன்றவர்கள் சிறைகொடுமைகளை அனுபவித்து, செக்கிழுத்துப் பெற்றச் சுதந்திரம் இது. 
           நேதாஜி மற்றும் கேப்டன் லட்சுமி போன்றவர்கள் இந்திய தேசியப் படை அமைத்து வெள்ளையனுக்கு எதிராகப்போராடிப் பெற்றச் சுதந்திரம் இது. 
            தோழர். ஜீவானந்தம், தோழர். ஹர்கிஷன்சிங் சுர்ஜித் போன்ற கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் போராடி, சிறைக்கொடுமைகளை அனுபவித்து, தலைமறைவு வாழ்க்கையை நடத்தி பெற்றுத் தந்த சுதந்திரம் இது. 
         1806 - ஆம் ஆண்டு தொடக்கி 1947 - ஆம் ஆண்டு வரை ஆயிரக்கணக்கான  ஆண்களும், பெண்களும், முஸ்லிம்களும், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களும் போராடி - ரத்தம் சிந்தி - உயிர்த்தியாகம் செய்து நமக்கு பெற்றுத் தந்த சுதந்திரம் இது. 
          அனால் கடைசி இந்தியன் வரை அந்த சுதந்திரம் பொய் சேர்ந்ததா என்று கேட்டால்... அது கேள்விக்குறிதான். 
          உண்மையான சுதந்திரம் என்பது, இந்த நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே சொன்னானே மாவீரன் பகத்சிங் அது தான்.                   
         ''பாலுக்கு அழும் குழந்தை, கல்விக்கு எங்கும் மாணவன், வேலை தேடும் இளைஞன், வறுமையில் வாடும் தாய் - இவர்கள் இல்லாத இந்தியாவே உண்மையான சுதந்திர இந்தியா'' 
இது தான் மாவீரன் பகத்சிங் கனவுகண்ட இந்தியா.
         அன்று வெள்ளையர் கையில் இருந்த இந்தியா... இன்று கொள்ளையர் கையில் சிக்கி மேலே சொன்ன அத்தனை பேரையும் கொண்ட ''வாடும் இந்தியா''வில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 
           இது மாறவேண்டுமென்றால், ''முப்பது கோடி ஜெனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடைமை'' வேண்டினானே பாரதி, அந்த பொதுவுடைமை இந்த தேசத்தில் மலரவேண்டும். அதுதான் இந்தியாவில் உண்மையான சுதந்திரத்தை மணக்கச் செய்யும். 
அதற்காக போராடுவோம்.... 
பெற்ற சுதந்திரம் பேணிக்காப்போம்... 
தேசத்தை காத்தல் செய்வோம்.

          

வெள்ளி, 23 மார்ச், 2012

காந்தி நினைத்திருந்தால் பகத்சிங்கை காப்பாற்றியிருக்கலாம்... ஆனால்...!

மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!      


       அன்றைக்கும் இன்றைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு காந்தி மட்டுமே முகமூடியாக தேவைப்பட்டார். காந்திக்கு இணையாக வேறு ஒரு தலைவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையே காந்தியும் விரும்பினார். சுதந்திரப்போராட்ட காலத்தில், தனக்கு நிகராகவோ அல்லது தன்னை விட அதிகமாகவோ வேறு ஒரு தலைவர் வளர்வதை காந்தி விரும்பமாட்டார். அதனால் தான் பகத்சிங், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர் அம்பேத்கர் போன்ற தேசத்தலைவர்களை விலக்கியே வைத்திருந்தார். இவர்களெல்லாம் வன்முறையாளர்கள் போலவும், அகிம்சைக்கு எதிரானவர்கள் போலவும் சித்தரித்துக்காட்டுவார்.  
                  இப்படித்தான் இந்த தேசத்தின் விடுதலையை போராட்டத்தின் மூலமாகவும், புரட்சியின் மூலமாகவும் தான் பெறமுடியும் என்று பிரிட்டிஷாருடன் சினங்கொண்டு போராடிய பகத்சிங் என்ற மாவீரனை இழந்துவிட்டோம். காந்தி நினைத்திருந்தால் அன்றைக்கிருந்த பிரிட்டிஷ் அரசுடன் பேசி பகத்சிங்கை தூக்குமேடையிலிருந்து காப்பாற்றியிருக்க முடியும். அதைத்தான் அன்றைக்கு நாட்டில் பலரும் எதிர்ப்பார்த்தார்கள். இன்னும் சொல்லப்போனால் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பல தலைவர்களும் தொண்டர்களுமே எதிர்ப்பார்த்தார்கள். 
                  இதை புரிந்துகொண்ட காந்தி, 1931 - ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கராச்சியில் நடைபெறவிருக்கும்   காங்கிரஸ் மாநாட்டிலும் இந்த பிரச்சனை எதிரொலிக்கும் என்று எதிர்ப்பார்த்தார். மாநாட்டில் கலந்துகொள்பவர்கள் பகத்சிங்கை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்றுங்கள் என்று தன்னை நிர்பந்தம் செய்வார்கள் என்று முன் கூட்டியே அறிந்துகொண்டார். அப்படி நடக்கும் பட்சத்தில் அவர்கள் கட்டளைப்படி,  தான் பிரிட்டிஷ் அரசிடம் பேசி பகத்சிங்கை  தூக்கு தண்டனையிலிருந்து  காப்பாற்ற வேண்டி வரும் என்பதை உணர்ந்தார். அப்படியெல்லாம் ஒன்றும் நடந்துவிடக்கூடாது என்பதில் காந்தி தீவிரம் காட்டினார்.  
            அதனால்  அன்றைய பிரிட்டிஷ் வைஸ்ராய் இர்வினை ( Irwin) சந்தித்து, கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு முன் பகத்சிங்கை தூக்கில் போடும்படி   கேட்டுக்கொண்டவர் தான் ''மகாத்மா'' என்று சொல்லக்கூடிய காந்தி என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. அதனால் தான் பிரிட்டிஷ் அரசாங்கம் கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பே   பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்றவர்களை தூக்கிலிட முடிவு செய்து, 1931  மார்ச் மாதம் 24  - ஆம் தேதியை தூக்கிடும் தேதியாக அறிவித்தது. 
              ஆனால் அந்த 24 - ஆம் தேதிவரைக் கூட காத்திருக்க முடியாமல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அவர்களை தூக்கிலிடுவதற்கு துடித்தார்கள். அதனால் 23 - ஆம் தேதியே இரவு 7.04 மணிக்கே வழக்கத்திற்கு மாறாக - மரபுக்கு மாறாக மூவரையும் தூக்கிலிட்டார்கள். 
வழக்கமாக தூக்கு தண்டனை என்பது விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாகவே நிறைவேற்றுவது தான் மரபு. ஆனால் அந்த மரபைக்கூட அன்றைய ஆட்சியாளர்கள் மீறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 24  - ஆம் தேதி விடியற்காலை தூக்கிலிட வேண்டியவர்களை 23 - ஆம் தேதி இரவே அவசர அவசரமாக தூக்கிலிட்டனர். பகத்சிங்கை கொல்வதில் காந்தியை விட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இன்னும் ஒரு மடங்கு  வேகம் காட்டினர்.
                 லாகூர் சிறையிலிருந்த பகத்சிங்கை தூக்கிலிடுவதற்கு தயார்படுத்துவதற்காக சிறைக்காவலர்கள் முன் கூட்டியே 23 - ஆம் தேதி மாலையே அழைத்தார்கள். மறுநாள் தான் தூக்கு தண்டனை என்று அறிந்திருந்த பகத்சிங், முன்கூட்டியே முதல் நாளே தூக்கிலிடப் போகிறார்கள் என்பதை அறிந்திருக்கவில்லை. அதனால் காவலர்கள் அழைத்த போது, '' நான் இங்கே ஒரு போராளியுடன் உரையாடிக்கொண்டிருக்கிறேன். அதனால் தொந்தரவு செய்யாதீர்கள்'' என்று சிறைக்குள்ளிருந்து குரல் கொடுக்கிறார். வேறு யாரோ போராளி சிறைக்குள்ளே புகுந்து இருவரும் ஏதோ திட்டம் தீட்டுகிறார்களோ என்று காவலர்கள் பயந்துவிட்டனர். சிறிது நேரம் கழித்து அவரே வெளியே வருகிறார். உள்ளே பார்த்தால் அவரோடு வேறு யாரும் இல்லை. ஆனால் அவர் கையில் ஒரு புத்தகம் இருந்தது.  மாமேதை லெனின் எழுதிய '' அரசும் புரட்சியும் '' ( STATE AND REVOLUTION ) என்ற புத்தகம் தான் அது. அதுவரையில் அந்த புத்தகத்தை படித்துக்கொண்டிருந்ததால், நான் ஒரு போராளியுடன் உரையாடிக்கொண்டிருக்கிறேன்  என்று சொன்னார். 
               அந்த புத்தகத்தை காவலர்கள் வாங்கிப்பார்த்த போது, அந்த புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் '' இந்த புத்தகத்தை இந்திய மக்கள் அனைவரும் படிக்கவேண்டும் '' என்று எழுதி கையெழுத்திட்டிருந்தார். இது தான் இந்திய மக்களுக்கு அவர் கடைசியாக விடுத்த வேண்டுகோள்......   இன்னும் எழுதுகிறேன்....

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமா..?

                ''ஆடுவோமே - பள்ளு பாடுவோமே; ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று '' - என்று பாரதி கனவு கண்டான். இந்த தேசம் சுதந்திரம் பெறுவதற்கு முன்பே நமக்கு  ஆனந்த சுதந்திரம் கிடைத்து விட்டாதாய் நம்பிக்கையுடன் எழுதப்பட்ட கவிதை வரிகள் இவை. அவர் இப்போது உயிருடன் இருந்தால் இந்த நாடு  போகிற போக்கைப் பார்த்து நொந்து போயிருப்பார்.
                நமக்கு சுதந்திரம்  கிடைத்திருக்கிறதா என்றால்.. கிடைத்திருக்கிறது. ஆனந்த சுதந்திரம் கிடைத்திருக்கிறதா என்றால்.. இல்லை என்பது தான் உண்மை. ஆனந்த சுதந்திரம் என்றால் என்ன ? மாவீரன் பகத்சிங் வார்த்தைகள் தான் இதற்கு உண்மையான பதிலாக இருக்க முடியும்.  
''பாலுக்கு அழும் குழந்தை; கல்விக்கு ஏங்கும் மாணவன்;
வேலை தேடும் இளைஞன்; வறுமையில் வாடும் தாய்;                                  இவர்கள் இல்லாத இந்தியாவே உண்மையான சுதந்திர இந்தியா''                உண்மையான ஆனந்த சுதந்திரம் என்பது உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், மருத்துவம் - இவை எல்லாமும் எல்லோரும் பெற்றால் தான் உண்மையான சுதந்திர இந்தியா ஆகும். ஆனால் மேலே சொன்ன அத்தனையையும் நம்மிடமிருந்து பறித்துக்கொள்ளும் ஆட்சியாளர்கள் கையில் தான் இந்த   நாடு சிக்கித் தவிக்கிறது என்பது தான் வேதனைக்குரிய விஷயமாகும். 
                ''பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளைகொண்டு போகவோ; நாங்கள் சாகவோ'' என்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சுரண்டலை  எதிர்த்து சீறினானே பாரதி. அதே நிலைமை தான் இன்றும். தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற பெயரில் நம் நாட்டின் செல்வங்கள்  - சொத்துக்கள்  - வளங்கள்  அனைத்தும்  இன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல்வாதிகளால், அவர்களுக்குத் துணைபோகும் அதிகாரிகளால், இந்திய - அமெரிக்க பெருமுதலாளிகளால், அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் சுரண்டப்படுகிறது - கொள்ளையடிக்கப்படுகிறது. அதனால் இந்தியா இரண்டு இந்தியாவாக பிரிந்து கிடக்கிறது.


தொலைந்து போன பொருளாதார விடுதலை..  
         
ஒன்று : வளமான இந்தியா ( Shining India )  மற்றொன்று : வாடும் இந்தியா ( Suffering India )     என்றவாறு இந்திய ஆட்சியாளர்களே பிரித்து வைத்திருக்கிறார்கள். ''வளமான இந்தியாவில்'' ஆட்சியாளர்களின் சலுகைகளை பெற்றும், மக்களை சுரண்டியும்  வளமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள். இவர்களுக்காகத் தான் ஆட்சியாளர்கள் ஆட்சி நடத்துகிறார்கள். இங்கே உள்ள பணக்காரர்கள் பல லட்சம் கோடிகளை சுருட்டி மேலும் மேலும் பணக்காரர்களாகின்றனர். அதே சமயத்தில் ''வாடும் இந்தியாவில்'' வாழும் மக்கள் பொருளாதாரத்தில் ஆட்சியாளர்களால் பின்னோக்கித்  தள்ளப்பட்டு  ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாகவே வறுமையில் வாடுகிறார்கள். இவர்கள் அரசால் திணிக்கப்படும் வரிச் சுமைகள், அரசு நடவடிக்கை எடுக்காததால் உயர்ந்து கொண்டேப்போகும் விலைவாசி, அதிகாரத்திலிருப்பவர்கள் - ஆட்சியாளர்கள் செய்யும் சுரண்டல்கள் இவைகளால் இந்த மக்களின் பொருளாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய மக்கள் தொகையில் 95 சதவிதத்தினர்களான இவர்களைப் பற்றிய அக்கறை என்பது ஆட்சியாளர்களுக்கு இல்லை. ஊழல் என்பது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தலை விரித்தாடுகிறது. மக்களுக்கு சேரவேண்டிய நிதியை ஊழல் செய்து சொத்து சேர்க்கிறார்கள். இங்கே ஊழல் என்பது அறிவிக்கப்படாமலே தேச உடைமை செய்யப்பட்டிருக்கிறது.

கனவாகிகொண்டேப் போகும் சமூக விடுதலை..

              சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகள் ஆகியும் இந்தியாவில் சமூக விடுதலை என்பது ஒரு தொலைதூரக் கனவாகவே - ஒரு எட்டாக் கனியாகவே உள்ளது. தீண்டாமைக் கொடுமை என்பதும் நம் நாட்டில் பல இடங்களில் இப்போதும்  கொழுந்து விட்டு எரிந்து கொண்டுதான் இருக்கிறது. அரசின் திட்டங்கள் ஒடுக்கப்பட்ட பகுதியில் வாழும் கடைசி மனிதன் வரை போய்   சேர்வதில்லை என்பது தான் உண்மை. இன்றைக்கு அரசுத் துறைகளும், அரசு சார்ந்த துறைகளும்  தனியார்மயமாவதால், போராடிப்பெற்ற இடஒதுக்கீடு  என்ற உரிமை மெல்ல மறைந்து கல்வியிலும்  வேலைவாய்ப்பிலும்  இடஒதுக்கீடு என்பதே காணாமல் போய்கொண்டிருக்கிறது. அவர்களைப் பற்றி ஆட்சியாளர்களும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
             ஆனந்த சுதந்திரம் என்பது வெறும் அரசியல் சுதந்திரம்  மட்டுமன்று, அதனுடன் பொருளாதார சுதந்திரமும்,   சமூக சுதந்திரமும் சேர்ந்ததே. மூன்றும் சேர்ந்த ஆனந்த சுதந்திரம் பெற்றால் தான் பகத்சிங் சொன்னது போல்..
''பாலுக்கு அழும் குழந்தை; கல்விக்கு ஏங்கும் மாணவன்;
வேலை தேடும் இளைஞன்; வறுமையில் வாடும் தாய்;                                  இவர்கள் இல்லாத இந்தியாவே உண்மையான சுதந்திர இந்தியா''