இந்திய பாராளுமன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்திய பாராளுமன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 13 மே, 2012

ஜனநாயகத்தின் குரலை ஓங்கி ஒலித்த மக்கள் மாமன்றத்தின் மணிவிழா...!


         1952 - ஆம் ஆண்டு மே மாதம் 13  - ஆம் தேதி அன்று  இந்திய அரசியல் வரலாற்றில்  நடந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை  பொன்னேழுத்துக்களால் எழுதப்படவேண்டும் என்பதை யாரும் மறுக்கமுடியாது.  ஆம்... அன்று தான் இந்திய பாராளுமன்றக் கட்டிடத்தில் முதல் மாநிலங்களவை தொடங்கிவைக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, 1950 - இல் நடைமுறைக்கு வந்த அரசியலமைப்புச் சட்டத்தின் படி நடத்தப்பட்ட தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட  முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமைக்குரிய டாக்டர். ராஜேந்திர பிரசாத் குடியரசுத் தலைவராக பதவி எற்றுக்கொண்டதும் இதே நாளில் தான் என்பதும்,தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது மக்களவை உருவானதும் இதே 
நாளில் தான் என்பதும்   குறிப்பிடத்தக்கது.
             இந்திய பாராளுமன்ற ஜனநாயகம் என்பது தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு 
பதவியேற்ற முதல் நிகழ்ச்சி அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இன்று தான் அரங்கேறியது. அன்றும் இன்றும் இந்த நாள் நம் தேசத்தின் திருநாள்.

டாக்டர். ராஜேந்திர பிரசாத் 1952 - ஆம் ஆண்டு மே மாதம் 13 - ஆம் இந்திய பாராளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் இந்திய குடியரசுத் தலைவராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதஞ்சலி சாஸ்திரி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.




பதவியேற்புக்குப் பின்பாராளுமன்றத்திலிருந்து 
குடியரசுத்தலைவர் மாளிகைக்கு செல்கிறார்.


               அன்றையிலிருந்து இன்று வரை கடந்த அறுபது ஆண்டுகாலமாய் இரு அவைகளும் 
கொண்ட பாராளுமன்றம் பல்வேறு நிகழ்ச்சிகளை நிகழ்த்திக் காட்டியுள்ளது என்று  சொல்லலாம். அது மக்களுக்கு தேவையா அல்லது தேசத்திற்கு உகந்ததா என்றெல்லாம் 
சீர்தூக்கிப் பார்க்கப்பட்டதா என்று கேட்டால் வெறும் கேள்விக்குறித் தான் மிஞ்சும். 
ஆட்சியாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் பலம் வாய்ந்தவர்கள் என்பதால் 
சுயநலத்துடன் தங்கள் இஷ்டப்படி பாராளுமன்றத்தில் சட்டங்களை இயற்றுவதும் அதை   
நடைமுறைப்படுத்துவதுவுமாகத்    தான் இன்றுவரை இருக்கிறார்கள்.  எப்போதெல்லாம் மக்களுக்கெதிராக அல்லது தேசத்திற்கெதிராக மத்திய அரசு செயல்படுகிறதோ அப்போதெல்லாம் மிகசொற்ப எண்ணிக்கையிலேயே இருக்கும் 
இடதுசாரிகள் மட்டும் தான் பாராளுமன்றத்தில்  எரிமலையாய் வெடித்து எழுவார்கள் என்பதை இந்த நாடு பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது. கடந்த அறுபது ஆண்டுகாலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாராளுமன்றத்தில் இன்று
வரை இரு அவைகளிலுமே பாராளுமன்றக்கூட்டம் நடைபெறும்  அனைத்து நாட்களிலும்   அனைத்துக்  கூட்டங்களிலும் நூறு சதவீதம்  பங்கேற்பவர்கள் இடதுசாரிகள் தான் என்பதை அந்த பாராளுமன்றத் தூண்களும், கூட்டம் நடைபெறும் மண்டபங்களும் கண்டிப்பாக எடுத்துச்  சொல்லும். இந்த நாட்டில் பாராளுமன்ற ஜனநாயகத்தை - மக்கள் ஜனநாயகத்தை மதிக்கக்கூடியவர்கள் இடதுசாரிகள் மட்டுமே என்பதை நாம் 
மறந்துவிடக்கூடாது.
             ஆட்சியாளர்களின் சரியான பணிகளை  பாராட்டவேண்டிய சமங்களில் பாராட்டியும்,
 அவர்களின் தவறான போக்குகளை இடித்துரைக்க வேண்டிய சமயங்களில் இடித்துரைத்தும் 
பாராளுமன்றத்தில் பாரபச்சமில்லாமல் நடந்து கொள்வதில் அவர்களுக்கு நிகர் அவர்களே 
என்று சொன்னால் அது மிகையாகாது. இன்றைக்கு ஆட்சியாளர்களால் பாராளுமன்ற 
ஜனநாயகம் என்பதே மதிக்கப்படாமல்,பாராளுமன்றம் என்பது ஒரு சம்பிரதாய 
சடங்குகள் நடக்குமிடமாக மாறிவருகிற  சூழ்நிலையில்,   பாராளுமன்ற ஜனநாயகத்தை 
மதித்து, அதன் நடவடிக்கைகளில் அக்கறையையும் நம்பிக்கையையும் வைத்து இன்றுவரை  மக்கள் மாமன்றத்தின் உண்மையான பொருளை உணர்ந்தவர்கள் இடதுசாரிகள்  தான் என்பதை உணர்ந்து  இந்த நல்ல நாளில் நாடு இடதுசாரிகளுக்கு செவ்வணக்கம் செலுத்தவேண்டும்.       

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

மக்கள் பிரச்சனைகளை பேசாமல் பாராளுமன்ற நேரத்தை வீணடிக்கும் போக்கு கண்டிக்கத் தக்கது..!

                  நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று முன் தினம் வியாழக்கிழமை முடிவடைந்தது. இல்லை.. இல்லை.. முடித்துக்கொள்ளப்பட்டது.  நாடாளுமன்றம் நடைபெற்ற மொத்தம் 26 அலுவல் நாள்களில் பாதிக்கும் மேற்பட்ட நாள்கள் பாரதீய ஜனதா கட்சி திட்டமிட்டு செய்த கலாட்டாவினால்  இருஅவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன என்பது தான் இந்த மழைக்காலக் கூட்டத்தொடரின் சிறப்பம்சமாகும். இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகளே முடங்கிப்போயின என்பது தான் நாம் வேதனையோடு கவனிக்கவேண்டியுள்ளது. நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் செய்ததில் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் சம பங்கு உண்டுஎன்பதை யாராலும் மறுக்க முடியாது. நாடாளுமன்றம் நடத்துவதற்கு ஒரு நாளைக்கு சுமார் ரூ. 2 கோடிக்கும் மேல் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை முடக்குவதால் மக்களின் வரிப்பணமான அத்தனை கோடிகளும் வீண் விரயமாகிவிடும்.
                    நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தே,  அண்ணா ஹசாரே உண்ணாவிரதம், குஜராத் லோக் ஆயுக்த தலைவர் நியமனம், நாடாளுமன்றத்தில் வாக்களிக்க பணம் அளித்தது ஆகிய விவகாரங்களால் இரு அவைகளும் இறுதி நாள் வரை அடிக்கடி ஒத்தி வைக்கப்பட்டன என்பதை இந்த நாடே உற்று நோக்கியது. நாடாளுமன்ற அலுவல்கள் முடங்கியது குறித்து, இது போன்ற போக்கைக் கண்டித்து   மக்களவைத் தலைவர் மீரா குமாரும், மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரியும் கவலை தெரிவித்தனர். 
                     பாரதீய ஜனதாக் கட்சியை பொறுத்தவரை நாடாளுமன்ற ஜனநாயக முறையிலேயே  நம் பிக்கை இல்லாதவர்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பின் அறிவுரைப்படி அதிபர் ஆட்சி முறை கொண்டுவர வேண்டும் என்று விரும்புபவர்கள். நாடாளுமன்றம் நடத்தமுடியவில்லை என்று மக்களின் ஒரு  கருத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே  ஏதாவது ஒரு பிரச்சனையை கையில் எடுத்து ரகளை செய்து அவையை முடக்குவதில் ஆனந்தம் காண்கிறார்கள் பாரதீய ஜனதாக் கட்சியினர்.
                         காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டாளிக் கட்சிகளோ   நாடாளுமன்றம் சுமூகமாக நடந்தால் பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கிறது   என்பதால் பாரதீய ஜனதாக் கட்சியினர் செய்யும் ரகளைகளை ரசித்துக்கொண்டு அவை முடக்குவதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
                இன்றைக்கு நாட்டு மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் கடுமையான விலைவாசி உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு, காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதாக்  கட்சிகள்   சம்பந்தப்பட்ட ஊழல்கள், பயங்கரவாத தாக்குதல்கள், வேளாண்துறை வீழ்ச்சி என பல்வேறு பிரச்சனைகளை பற்றிக் கவலைப்படாமலும்   விவாதிக்கப்படாமலும் பாரதீய  ஜனதாக் கட்சியின் சொந்த இலாபத்திற்காக ரகளைகள் செய்து இரு அவைகளும் முடக்கப்பட்டன. 
                  அன்னா ஹசாரே போன்றவர்கள் ஊழலுக்கு எதிராக மட்டுமின்றி, நாடாளுமன்றம் என்ற அமைப்புக்கே எதிராக குரல் கொடுக்கின்றனர். ஹசாரே உண்ணாவிரதத்தின்போது பலரும் நாடாளுமன்றத்தின் மீது புழுதி வாரி தூற்றினர். சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உண்டு என்பதை கூட இவர்கள் மறுதலிக்க முயல்கின்றனர். இது ஆபத்தான போக்காகும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
                   பாஜகவின் ரகளையும், காங்கிரசின் அலட்சியமும் ஹசாரே குழுவினர் போன்றவர்களுக்கே ஊக்கம் அளிக்கும் என்பதையும்,  நாடாளுமன்ற அமைப்பு முறை குறித்து மக்களிடம் அதிருப்தி ஏற்படவும் வழிவகுக்கும் என்பதையும் யாரும் மறந்துவிடக் கூடாது.