கழிப்பறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கழிப்பறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 20 நவம்பர், 2013

கழிப்பறை வசதியும் மனித உரிமையே - அதை கொடுக்கவேண்டியது அரசின் கடமையே...!

             

            நேற்றைய தினம் நவம்பர் 19 ''உலக கழிப்பறை தினமாக'' அனுசரிக்கப்பட்டது. இந்த நாளை ஐக்கிய நாடுகள் சபையினால் ஆட்சியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் கழிப்பறையின் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தவே பிரத்தியேகமாக நவம்பர் 19 - ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டு நடத்தப்பட்டது. திறந்தவெளிக் கழிப்பிடங்களினால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டையும், கழிப்பறையின் முக்கியத்துவத்தையும் மக்களுக்கு உணர்த்துவதற்கான ஒரு ஏற்பாடு தான் இந்த நாள். நம் நாட்டைப் பொருத்தவரை கழிப்பறை பிரச்சனை என்பது ஒரு ''தேசியப் பிரச்சனையாக'' இருக்கிறது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் கடந்தும்,  பல்வேறு பெருமைமிக்க அறிவியல் வளர்ச்சிகளை கண்டும்,  உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் நம் தேசத்தில் ''திறந்தவெளிக் கழிப்பிடம்''  என்பது ஒரு ''தேசிய அவமானம்'' தான் என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது. இன்றைக்கு இந்திய மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் சுமார் 62 கோடி பேர் கழிப்பறை வசதியில்லாமல் அவதிப்படுகிறார்கள் என்பது நாமெல்லாம் வெட்கப்படவேண்டிய விஷயமாகும். இதில் பெண்கள் சாலையோரங்களிலும், ரயில் பாதையோரங்களிலும், புதர்களின் மறைவிடங்களிலும் இருள் சூழ்ந்த நேரங்களில் அன்றாடம் மிகுந்த சிரமங்களுக்கிடையில் திறந்தவெளிக் கழிப்பிடங்களை பயன்படுத்தி கொடுமைக்கு உள்ளாகிறார்கள் என்பதை நினைக்கும் போது நமெக்கெல்லாம் தலைக்குனிவாய் இருக்கிறது. ஜவஹர்லால் நேரு முதல் மன்மோகன் சிங் வரை எத்தனையோ ஆட்சியாளர்களை நாம் பார்த்துவிட்டோம். அவர்கள் எல்லோரும் வந்தார்கள்... ஆண்டார்கள்... சென்றார்கள். ஆனால் ஒருவரும் இந்த கழிப்பறை பிரச்சனையைத் தீர்ப்பதற்கு எந்த திட்டமும் தீட்டவில்லை. சென்ற ஆண்டு மன்மோகன் சிங் அரசு இந்திய பெருமுதலாளிகளுக்கு 5இலட்சம் கோடி அளவிற்கு வரிச்சலுகைகளையும், மானியங்களையும் அளித்தார். அதில் ஒரு சிறு பகுதியை இந்த இல்லாதப்பட்ட ஜெனங்களுக்கு கழிப்பறைக் கட்ட செலவு செய்திருந்தால் நாட்டிலுள்ள அத்தனை வசதியற்ற மக்களும் கழிப்பறை பெற்றிருப்பார்கள். திறந்தவெளிக் கழிப்பிட கொடுமைகளிலிருந்து விடுபட்டிருப்பார்கள்.

கடந்த 1948-ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று ஐக்கிய நாடுகள் சபை ''மனித உரிமை பிரகடனம்'' ஒன்றை வெளியிட்டது. அதில் 30 ஷரத்துகள் உள்ளன. அவை அத்துனையும் என்ன சொல்கிறது என்றால், உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், கல்வி, மருத்துவம், சுகாதாரம், வேலைவாய்ப்பு - இவை அத்தனையும் உலகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமைகளாகும். இந்த உரிமைகள் அத்தனையையும் உலகத்திலுள்ள  நாடுகளின் ஆட்சியாளர்கள் தங்கள் நாட்டு மக்களுக்கு கட்டாயமாக அமைத்துத் தரவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்துகிறது. அதனால் தான் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 - ஆம் தேதி ''மனித உரிமை தினம்'' கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவிலும் அந்த நாளை கடைபிடிப்பதோடு சரி... அடிப்படை உரிமைகளை மக்களுக்கு அளித்து நடைமுறைப்படுத்தும் எண்ணம் எந்த அரசுக்கும் இல்லை என்பது தான் உண்மை. அதிலும் குறிப்பாக கழிப்பறை என்பது மனித உரிமை என்பதையும், அதை கட்டாயமாக அனைத்து மக்களுக்கும் அளிக்கவேண்டியது அரசின் கடமை என்பதையும் அரசும் மக்களும் உணரவேண்டும். அதுவரையில் திறந்தவெளிக் கழிப்பிட பழக்கத்தை - கொடுமையை ஒழிக்கமுடியாது. 
           

வியாழன், 7 ஜூன், 2012

அலுவாலியாவுக்கு கக்கூஸ் கட்ட 35 இலட்சமா...? என்னாங்கடா டேய்...?



















            புதுடெல்லியில் உள்ள திட்டக்கமிஷன் அலுவலகத்தில்  திட்டக்கமிஷன் துணைத்தலைவர் உள்ளிட்ட பத்து உயர் அதிகாரிகள் மட்டும் பயன்படுத்தும் கழிவறையை புதுப்பித்துக் கட்டுவதற்கு ஆன செலவு எவ்வளவு தெரியுமா..? வெறும் 35 இலட்சமாங்க...! ஆச்சரியமாக இல்லை..? சுபாஷ் அகர்வால் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த தகவலை பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
             நம் நாட்டில் 75 சதவீத மக்கள் கழிப்பறை கட்ட வசதியில்லாமல் திறந்தவெளியை பயன்படுத்துகிறார்கள். நிறைய அரசு பள்ளிகளில் பெண்குழந்தைகள் பயன்படுத்துவதற்கு கழிப்பிடமில்லாமல் பகல் நேரத்திலேயே திறந்தவெளியை பயன்படுத்தும் அவலம் இந்த நாட்டில் இதுவரை தீர்க்கப்படாமல் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு நாள் வருமானமாக 28 ரூபாய்க்கு மேல் ஒரு ரூபாய் அதிகம் வாங்கினால் கூட அவன் வறுமைக் கோட்டிற்கு மேலே வந்துவிட்டதாக சொல்லிய திட்டக்கமிஷன் துணைத்தலைவரும், பொருளாதார ''மாமேதையும்'' - ஆன மாண்டேக் சிங் அலுவாலியா தான் பயன்படுத்தும் கழிவறையை சீர் செய்வதற்கு 35 இலட்சம் ருபாய் அரசுப் பணத்தை செலவு செய்திருக்கிறார். அதுமட்டுமல்ல, '' இதில் என்ன தவறு இருக்கிறது'' என்று தான் செய்த இந்த செயலை நியாயப்படுத்துகிறார். 
           அதுவும் நாட்டின் பொருளாதாரம் என்பது நெருக்கடியில் தத்தளித்துக்கொண்டிருக்கும் இன்றைய  சூழ்நிலையில்,    அரசு பணத்தை சிக்கனமாக செலவு செய்து, பொருளாதாரத்தை   சீர்ப்படுத்த வேண்டிய இடத்திலேயே இப்படி ஊதாரித்தனமாக செலவு செய்வது என்பது கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல ஏற்றுக்கொள்ள முடியாதது. நாட்டின் பொருளாதாரத்தை சீர்ப்படுத்தவே பெட்ரோல் விலை உயரத்தப்படுகிறது. அரசின் இந்த கடுமையான நடவடிக்கைகளை மக்கள் கசப்பு மருந்தாக ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டுமென்றும், அதேப்போல் சிக்கன நடவடிக்கை என்ற பேரில்,  அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்   வெளிநாடு செல்வதை குறைத்துக் கொள்வது, நட்சத்திர ஓட்டல் விருந்துகளை தவிர்த்துக்கொள்வது போன்ற தங்களைத் தாங்களே கடுமையான நடவடிக்கைகளுக்கு உட்படுத்திக் கொள்வது போன்ற நாடாகத்தை தான் மத்திய ஆட்சியாளர்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால்  அதற்கு மாறாக, நாட்டு மக்களின் பார்வையில் படாத இது போன்ற  பல  இடங்களில்  ஊதாரித்தனமாகவும், தான்தோன்றித்தனமாகவும் தான் மக்கள் பணத்தை வாரி இறைத்து செலவு செய்கிறார்கள் என்பது தான் உண்மை.     

திங்கள், 3 அக்டோபர், 2011

இந்தியாவில் கழிப்பறையை விட கைப்பேசிகள் அதிகம் - கவலைப்படாத மத்திய அரசு

சுகாதார வசதி பற்றாக்குறை : யுனிசெப் மதிப்பீடு


                இந்தியாவில் திறந்தவெளியில் 63.8 கோடி பேர் மலம் கழிக்கிறார்கள். அதனால்  சுகாதார வசதி என்பது இந்தியாவில் பற்றாக்குறையாக இருக்கிறது என்று அண்மையில் யுனிசெப் (UNICEF) நிறுவனம் உலகளவில் மதிப்பீடு செய்ததில் இந்தியாவைப் பற்றி இவ்வளவு அழகாக குறிப்பிடுகிறது.
                 இந்தியாவில் போதிய சுகாதார வசதி இல்லாததால் 63.8 கோடி மக்கள் திறந்தவெளிப் பகுதிகளில் மலம் கழிக்கிறார்கள் என யுனிசெப் அமைப்பு மதிப்பிட்டுள்ளது. அப்படியென்றால், இந்தியாவில் அத்தனை கோடிப்  பேருக்கும் கழிப்பிடவசதி கிடையாது என்பது தான் அதற்கு பொருள் ஆகும்.
                உலக அளவில் உலகளவில் திறந்தவெளியில் மலம் கழிப்பவர்களில்,  58 சதவீதம் பேர் இந்திய மக்கள் என்பதை கேட்கும் போது நாமெல்லாம் வேதனைப்படவேண்டும். சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகள் கழிந்த பின்னும் 
மக்களுக்கு கழிப்பறை வசதி செய்துத்தராத ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.  கடந்த 64 ஆண்டுகளாக எத்தனை முறை மத்திய - மாநில அரசுகளின் பட்ஜெட்டுகளை இந்த நாட்டு மக்கள் பார்த்திருக்கிறார்கள். இதுவரை பதினோரு ஐந்தாண்டு திட்டங்களை பார்த்துவிட்டு, இதோ பன்னிரெண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் தொடக்கத்தை பார்க்கப் போகிறார்கள். மத்திய திட்டக்குழுவில் இதுவரையில் எத்தனை தலைவர்களையும், துணைத் தலைவர்களையும் இந்த நாடு பார்த்திருக்கிறது. 
ஆனால் இதுவரையில் எந்த அரசும் அதைப் பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை.
                  யுனிசெப்பின் 2008ம் ஆண்டு மதிப்பீட்டின் படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 54 சதவீதம் பேர் திறந்த வெளிகளில் மலம் கழிக்கிறார்கள். அப்படியென்றால் 50 சதவீதத்திற்கும் மேலான மக்கள் என்பது தானே இதற்கு பொருள்.  என்ன தான் பொருளாதார முன்னேற்றம் பற்றி பிரதமரும் மற்றவர்களும் பீற்றிக்கொண்டாலும், இத்தனை கோடி மக்கள் கழிப்பறையே இல்லாமல் இருக்கும் போது நாடு பொருளாதாரத்தில் முன்னேறி என்ன பயன்..? அல்லது இத்தனை கோடி மக்கள் கழிப்பறைக்கே வசதியில்லாத போது யாருடையப் பொருளாதாரம் தான் முன்னேறுகிறது என்பது தான் நமது கேள்வி..?
                அனால் பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளும், உரிய சுகாதார வசதி இல்லாத நாடுகள் பட்டியலில் அடுத்தடுத்து வருகின்றன. இருப்பினும் இந்தியாவைக் காட்டிலும் இந்த நாடுகளில் அந்த நாட்டின் ஆட்சியாளர்கள் தன் மக்களுக்கு தேவையான சுகாதார வசதிகளை  செய்து கொடுக்கின்றனர் என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.
                    இந்தியாவில் 50 சதவீதத்திற்கும் மேலானவர்களுக்கு கழிப்பறை இல்லாதது என்பது   மிகவும் வெட்கக் கேடானது என மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வெட்கமில்லாமல் கூறியிருக்கிறார். 12வது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் இந்தப் பிரச்சனை சரி செய்யப்பட்டு, 2017ம் ஆண்டில் இந்தியாவில் திறந்த வெளியில் மலம் கழிக்கும் நிலையைத் தவிர்ப்போம் என்றும் உறுதியளித்திருக்கிறார் என்பதை இந்திய மக்கள் வரும் ஆறு ஆண்டுகளில் மறந்துவிடக்கூடாது.