ப. சிதம்பரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ப. சிதம்பரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 ஏப்ரல், 2013

முதல்ல இவரை மக்கள் எம்.பி ஆக்குறாங்களான்னு பார்ப்போம்....!


         சிவகங்கை சீமான் சிதம்பரம் தனக்கு பிரதமர் ஆகும் எண்ணமில்லை. அதற்கு ஆசைப்படவில்லை என்று ஒரு கூட்டத்தில் இவராகவே தன்னிச்சையாக பேசி தன்னுடைய ஆசையையும், விருப்பத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆசைப்படட்டும் வேண்டாம்ன்னு சொல்லவில்லை. இவரு பிரதமரா ஆவது இருக்கட்டும். முதல்ல இவரு எம்.பி ஆவாரான்னே சந்தேகமா இருக்கு. 2009 - ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலிலேயே சிவகங்கை மக்கள் இவருக்கு தண்ணி காட்டிட்டாங்க. இந்த முறை சிவகங்கை என்றில்லை. ஏன் தமிழ்நாடு  மட்டுமல்ல... இந்தியாவில் எந்த மூலையில் இவர் நின்றாலும் நிச்சயம் தோற்கடிக்கப்படுவார். அதுமட்டுமல்ல மக்கள் இவரை துரத்தி துரத்தி அடிப்பார்கள். மக்களுக்கு இவரு அவ்வளவு ''நல்லது'' செய்திருக்கிறார்.

வியாழன், 31 ஜனவரி, 2013

கமல்ஹாசனின் சிந்தனையில் ஏனிந்த மாற்றம்...?

அ. குமரேசன்
பத்திரிகையாளர்  
 
    உறுதிப்படுத்திக்கொள்ள முடியாத ஒரு தகவல் இப்படிக் கூறுகிறது: ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமம் தொடர்பான வணிக பேரம் படியாததால், அது வேறு நிறுவனத்திற்குக் கைமாறியதால் ஏற்பட்ட ''ஆத்திரம்'' தான் தடையாகத் தொடங்கி தாக்குதல்களாகத் தொடர்கிறது.
             இது உண்மையெனில், தங்களது நியாயமான கவலையையும் கோபத்தையும் இப்படி வர்த்தகம் சார்ந்த, உள்நோக்க அரசியலுக்குப் பயன்படுத்துகிற ஆட்சிபீடத்தை வன்மையாகக் கண்டிக்க இஸ்லாமிய அமைப்புகள் முன்வர வேண்டும். இதற்கு உடன்படமாட்டோம் என்று அறிவிக்க வேண்டும்.
            ‘விஸ்வரூபம்’ எதிர்ப்பு இங்கே இஸ்லாமிய மக்களுக்கு எதிராகப் பகை வளர்க்கத் துடிப்போருக்கும் சாதகமாகியிருக்கிறது. நாளை இது, பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்த சிலரது வெறித்தனம் பற்றிய திரைப்படம் ஒன்று வருமானால் அதற்கு எதிராக சூலாயுதம் தூக்க முகாந்திரம் அமைத்துக் கொடுக்கும். ‘ஆதிபகவன்’ என்ற பெயரே இந்துக்களைப் புண்படுத்துவதாகக்கூறி கிளம்பிவிட்டார்கள் என்பதைக் காணத் தவறக்கூடாது. ஏற்கெனவே ‘வாட்டர்,’ ‘ஃபயர்’ போன்ற படங்களின் மீதும், எம்.எப். உசேன் போன்ற கலைஞர்கள் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் நினைவுகூரப்பட வேண்டியவை.
              அடிப்படையில், ஒரு திரைப்டம் சரியானதா தவறானதா என்பதை மக்கள் பார்த்து முடிவு செய்கிற உரிமையை மதத்தின் பெயரால் தட்டிப்பறிப்பது ஜனநாயக விரோதம்.
         உறுதிப்படுத்திக்கொள்ள முடியாத இன்னொரு தகவல் இப்படிக் கூறுகிறது: திமுக தலைவர் முன்னிலையில் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் புகழ்பாடும் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தபோது, அதில் பேசிய கமல்ஹாசன், ''வேட்டி கட்டிய தமிழர் பிரதமராக வரவேண்டும்'' என்று கூறினாராம். அப்புறம் கலைஞர் பேசும்போது, சேலை கட்டிய தமிழரை விட வேட்டி கட்டிய தமிழர் பிரதமராவது நல்லது தான் என்ற விருப்பம் வெளிப்பட்டதாக விரிவாக்கம் செய்து தனது சொல்லாளுமையைக் காட்டியிருக்கிறார். ஆட்சியாளர்களின் ஆத்திரத்துக்கு இதுதான் அடிப்படைக் காரணம் என்கிறார்கள்.
             இது உண்மையெனில் இதுவும் கண்டனத்திற்கு உரியதே. 
ஆனால் கமல் சிந்தனை பற்றிய சில கேள்விகள் எழுகின்றன....!
 பெண் பிரதமராகக்கூடாது என்ற பொருளில் கமல் அப்படிப் பேசவில்லை, வட மாநிலங்களின் குர்தா, பஞ்சகட்சக்காரர்களுக்கு பதிலாக தமிழ்நாட்டின் வேட்டிக்காரர் பிரதமராக வர வேண்டும் என்ற கோணத்தில் தான் அவர் அப்படிப் பேசியதாகவே எடுத்துக்கொள்வோம். ஆனால், மக்களைக் கைவிட்டு பெருமுதலாளிகளுக்கு சேவையாற்றும் பொருளாதாரக் கொள்கைகளின் பிடிவாதப் பிரதிநிதியான ப. சிதம்பரம் போன்றவர்கள் வேட்டி கட்டிய தமிழர்கள் என்பதால் பிரதமராக வேண்டும் என்பது என்ன அரசியல் முதிர்ச்சியோ?
             தாக்குதல்களை எதிர்கொண்டு, தங்களது சம்பாத்தியத்தின் ஒரு கணிசமான பகுதியை ‘விஸ்வரூபம்’ பார்க்கச் செலவிடுகிற உழைப்பாளி தமிழர்களை வேட்டி கட்டிய பொருளாதார அடியாட்களிடம் பிடித்துக்கொடுக்கிற வேலை கமலுக்கு எதற்கு? ‘சேலை... வேட்டி...’ என்பது வெறும் அரசியல் நையாண்டி மட்டுமல்ல. சரியான நடவடிக்கை எடுக்காத ஆண்களைப் பார்த்து ‘வேட்டியை அவிழ்த்துவிட்டு சேலையைக் கட்டிக்கொள்’ என்று கேலியாய் அல்லது கோபமாய்ச் சொல்கிற பழக்கம் இங்கு உண்டு. பிடிக்காத செயலைச் செய்கிற தலைவர்கள், அதிகாரிகள் போன்றோருக்கு சேலை, வளையல் என்று அனுப்பி வைக்கப்படுவதுண்டு. பெண்ணை இழிவுபடுத்துகிற இந்தப் பண்பாட்டு ஒடுக்குமுறையோடு கமல் தன்னை அடையாளப்படு
த்திக்கொள்ளலாமா?
      எப்படிப்பார்த்தாலும் கமலின் பேச்சை ஆதரிக்க முடியவில்லை. அதற்காக மக்களின் திரைப்படத் தேர்வு உரிமையைத் தடுக்கிற அராஜக அரசியலையும் அனுமதிப்பதற்கில்லை.
       

சனி, 1 அக்டோபர், 2011

என்னாங்கடா டேய்.... கிண்டலா பண்றீங்க..?

                மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஒவ்வொரு மாதமும் புதுதில்லியில் சம்பிரதாயமாக செய்தியாளர்களை சந்தித்து தனது துறை சார்ந்த விபரங்களைப் பகிர்ந்து கொள்வது வழக்கமாய் வைத்துள்ளார்.  தனது துறையின் செயல்பாடு, எதிர்காலத் திட்டம் குறித்து விளக்கம் அளிக்க செய்தியாளர்கள் கூட்டத்தை சிதம்பரம் கூட்டினாலும் அவரது துறை சாராத கேள்விகளை அவரிடம் செய்தியாளர்கள் எப்போதும் கேட்காமல் விடுவதில்லை.
                   இதேப்போல் நேற்றும் - வெள்ளிக்கிழமையும் வழக்கம்போல் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.  2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சிக்கியிருக்கும்   சூழல்நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதனால் இந்தச் சந்திப்பின் போது பெரும்பாலும் 2ஜி சார்ந்த கேள்விகளையே செய்தியாளர்கள் எழுப்பினார்கள்.
                 2ஜி சம்பந்தப்பட்ட அத்தனை கேள்விகளுக்கும், '' எனக்கு ஞாபகம் இல்லை''.. ''எனக்கு ஞாபக மறதி உண்டு''.. போன்ற பதில்களையே அவர் திரும்பத் திரும்ப சளைக்காமல் பதில் சொல்லியிருக்கிறார். குற்றவாளிகள் தான் செய்த தவறுகளை மறைப்பதற்காக சொல்லப்படும் வார்த்தைகள் தான் இவைகள் என்பதை நாம் மறுப்பதற்கில்லை. ஊழல் செய்து மாட்டிக்கொண்ட ஒரு அமைச்சர் இப்படி பேசுவது என்பது நாட்டு மக்கள் அனைவரையும் ''கேனைப்பசங்கன்னு'' நெனைச்சி கொழுப்பாக பேசியதாகத் தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். 
                     இதற்கு முன்பு கூட, காமன்வெல்த் விளையாட்டில் பல ஆயிரம் கோடிகளை சுருட்டி திஹார் சிறையிலிருக்கும் சுரேஷ் கல்மாடி கூட செய்த குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல் ''எனக்கு மறதி நோய் இருக்கிறது'' என்று மத்திய புலனாய்வுத் துறையிடம் கூசாமல் பொய் சொன்னதையும் இங்கே பொருத்திப் பார்க்கவேண்டியிக்கிறது.
                 அதுமட்டுமல்ல, ஒரு மந்திரி, ''எனக்கு ஞாபக மறதி இருக்கிறது'' என்று சொன்னால் அவர் எப்படி தொடர்ந்து மந்திரியாக நீடிக்கமுடியும்..?  என்பது தான் மக்களின் கேள்வியாகும்.
                 சிதம்பரத்திற்கு இப்படி ஞாபக மறதி உண்டென்றால், மன்மோகன் சிங்கையும், சோனியாவையும் அல்லவா எதிர்காலத்தில் மறந்துவிடுவார்.
              ஞாபக மறதி என்று சொல்லி, செய்த குற்றத்திற்காக தண்டனைப் பெறாமல் தப்பிக்க முடியாது மிஸ்டர் சிதம்பரம்...!

சனி, 24 செப்டம்பர், 2011

சிதம்பரத்தின் யோக்கியதை இப்போதாவது புரியட்டும்..!

                சமீபத்தில் தான்  உயர் நீதிமன்றத்தில் குண்டுவெடித்து ஓய்ந்து தலைநகரம் அமைதியாகி  இருக்கிறது. அதற்குள் இன்னொரு குண்டு வெடித்திருக்கிறது. நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பிரதமருக்கு எழுதிய கடிதம் வெளியாகியிருக்கிறது. யோக்கியன் சிதம்பரத்தின் வேஷம் கலைந்திருக்கிறது. ''சிதம்பர ரகசியம்'' இப்போது தான் மக்களுக்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது.
                 சென்ற ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசின் நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தால்  2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த ஊழலைத் தடுத்திருக்க முடியும் என்று கடந்த மார்ச் 2011-ல் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தற்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கடிதம் எழுதியிருப்பது வெளிவந்திருக்கிறது. நிதி அமைச்சக அதிகாரி ஒருவரின் கடிதத்தில் அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் நடவடிக்கை குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரத்தின் விலை மற்றும் ஒதுக்கீடு தொடர்பாக நிதி அமைச்சகத்தில் துணை இயக்குநராக உள்ள டாக்டர் பி.ஜி.எஸ்.ராவ் என்பவர் பிரதமர் அலுவலக இணை இயக்குநர் வினி மகாஜனுக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். பிரணாப் முகர்ஜி இந்த 11 பக்க கடிதத்தை ஆய்வுசெய்து ஒப்புதல் அளித்துள்ளார். இந்த கடிதம் குறித்து சமூக ஆர்வலர் விவேக் கார்க் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம்  மூலம் கேள்வி கேட்டு தகவல் பெற்றிருக்கிறார். இந்த கடிதத்தில் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் , 2ஜி உரிமங்களை ரத்து செய்ய தொலைத்தொடர்புத் துறையை நிர்பந்தம் செய்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யாமல் அ.  ராசாவின் முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார் என அந்த கடிதத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அலைக்கற்றை உரிமங்களுக்காக 2001ல் விதிக்கப்பட்ட நுழைவுக் கட்டணமே 2008 டிசம்பர் 31 வரை அமலில் இருந்துள்ளது என அந்த கடிதம் குறிப்பிடுகிறது. இந்த கடிதம் குறித்து தகவல் பெற்ற விவேக் கார்க் கூறுகையில் நிதி அமைச்சகம் மற்றும் இதர அமைச்சகங்களின் தொடர்பு இல்லாமல் இவ்வளவு பெரிய ஊழல் நடக்க சாத்தியமில்லை. ஆர்டிஐ மூலம் பிரதமர் அலுவலகத்திடம் இருந்து பெற்ற ஆவணம் இதை வெளிப்படுத்தியுள்ளது. சிதம்பரத்துக்கும் வேறு சிலருக்கும் இந்த ஊழலில் தொடர்புள்ளதை இந்த கடிதம் தெளிவாகக் குறிப்பிடுகிறது என கார்க் தெரிவித்தார்.
                இன்னொரு பக்கம், 2ஜி ஊழல் வழக்கில் ப.சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். உடனே மத்திய அரசு பதறுகிறது. லட்சுமணக் கோட்டை தாண்டக்கூடாது என உச்சநீதிமன்றத்தையே மிரட்டும் வகையில் மத்திய அரசு வாதிடுகிறது. ஏன் இந்த பதற்றம்..? ஏன் இந்த மிரட்டல்..? மடியில் கனம் இல்லையென்றால் வழியில் பயம் எதற்கு?. ஊழலில் பங்கு இல்லை என்றால் வழக்கை சந்திக்கலாமே!.
                  யார் லட்சுமணக்கோட்டை தாண்டியது..? மக்களிடம் வாக்குகளை வாங்கி அமைச்சர்களானவர்கள் தானே  மக்கள் பணத்தை பாதுகாக்க வேண்டும். அதை விட்டுவிட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரும் இணைந்து கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டது எந்தக் கோட்டிற்கு உட்பட்டது ?. ஊழல் மலிந்தும், சிபிஐ அதனை ஒழுங்காக விசாரிக்காமல் விடுவதும், பரவலான தீமை, சீர்கேடுகளுக்கு காரணமாக இருக்கிறது என மீண்டும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது.
       இவ்வளவு தகவல்கள் கிடைத்தப்பின்னும்,  2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் பங்கு குறித்து மத்திய புலனாய்வுத் துறை விசாரிக்காமல்  அவரை பாதுகாத்து வருவது மட்டுமல்லாமல், சிதம்பரத்தின் நேர்மை மீது முழு நம்பிக்கை வைத்திருப்பதாக  பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருப்பது என்பது மக்களுக்கு பலத்த சந்தேகத்தை வரவழைக்கிறது.
               எனவே 2ஜி ஊழலில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் விசாரித்து, உண்மையை கண்டறிவதன் மூலமே 2ஜி வழக்கின் ஆழத்தை கண்டறிய முடியும். அதன் மூலம் நீதியை நிலைநாட்ட முடியும். உள்துறை அமைச்சரானாலும் சட்டத்திற்கு உட்பட்டவரே. ஆக சிதம்பரம் தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
             ஊழல் புகாரில் சிக்கி குற்றம் சாட்டப்பட்டுள்ள ப. சிதம்பரம் நேர்மையான முறையில் பதவி விலகி, மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு உட்படவேண்டும். இதற்கான நடவடிக்கைகளை பிரதமர் மன்மோகன் சிங் எடுக்கவேண்டும் என்பது தான் மக்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.
              நாட்டின் முதலாவது நிதியமைச்சராக இருந்த ஆர்.கே.சண்முகம் செட்டியாரும், பின்னர் நிதியமைச்சராக இருந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரியும், தங்கள் மீது ஊழல் புகார்கள் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டவுடன் தாமதிக்காமல், தங்கள் பதவிகளைவிட்டு விலகி, விசாரணையை எதிர்கொண்டனர் என்பது இந்த நாட்டின் கடந்த கால வரலாறு. அந்த இரு தமிழர்களும் காட்டிய நேர்மையான பாதையை ப.சிதம்பரம் பின்பற்ற வேண்டும் என்பது தான் நம்முடைய இன்றைய எதிர்ப்பார்ப்பு. நடக்குமா...?