அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 16 ஜூலை, 2011

அரசியல் எனக்கு பிடிக்கும்...!

அன்றாட வாழ்வில் அரசியல்
-அறிவுக்கடல்
         மாணவர்களுக்கு சொல்லித்தரப்பட வேண்டியது அன்றாட வாழ்வில் அறிவியல். எதற்காக என்றால் அன்றாடம் நம் வாழ்வில் நடக்கும் 
நிகழ்ச்சிகள் ஏன், எப்படி, எதனால் நடக்கின்றன என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக; அது புரிந்துவிட்டால் பிரச்சனைகளை சுலபமாகக் கையாள, எதிர்கொள்ள முடியும் என்பதற்காக. வெயிலில் விளையாடக் கூடாது என்று சொல்வதைவிட, வெயிலில் விளையாடுவதால் ஏற்படும் பிரச்சனைகளை அறிவி யல் பூர்வமாக விளக்கிவிட் டால் அவர்களே அதற்கு ஏற்ப மாற்றிக் கொள்வார்கள் அல்லவா? மாணவர்களுக்குப் புரிய அறிவியல்! நமக்கு? நமக்குப் புரிய வேண்டியவை பிரச்சனைகள்! நாம் எல்லாவற்றிலும் சரியாக இருந்துவிட்டால் நமக்கு பிரச்சனை இல்லாமல் இருக்கிறதா? தனிப்பட்ட பிரச்சனைகளை விடுங்கள்! விலைவாசி உயர்வு, மின்வெட்டு போன்று நம் அனைவருக்கும் ஏற்படும் பிரச்சனைகளின் பின்னணி?

         அரசியல் பேசலாமா, கூடாதா? “எனக்கு அரசியலே பிடிக்காது சார்!”, “அரசியலே சாக்கடை சார்!”. இதெல்லாம் நம்மில் பலர் பெருமையாகக் கூறிக் கொள்ளும் சொற்கள்! ஆனால், அடுத்தமாதம் நம் வீட்டு சமையற்கட்டுக்கு வரப் போகும் கேஸ் சிலிண்டரின் விலை என்ன என்பதை முடி வெடுக்கப் போவது அரசியல் தான்! நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நாம் சந் திக்கும் பிரச்சனைகளின் அடிப்படை அரசியலாக இருக்கும்போது பேசாமல் இருப்பது சரியா?

                 ஒரு மாணவன் அரசியல் பேசினால் கேட்கப்படுகிற கேள்வி “படிக்கிற காலத்தில் அரசியல் தேவையா?”, வேலைக்குப் போனபின் பேசினால் “அரசு ஊழியருக்கு அரசியல் கூடாது!” ஓய்வு பெற்றபின் பேசினால் “காலம் போன கடைசியில் அரசியல் தேவையா?”. பின் எப்போதுதான் அரசியல் பேசுவது? உண்மையில் அதே மாணவனின் கல்வியில் இருந்து மக்களின் பொதுவான தேவைகள் அனைத்தும் அரசியல் முடிவுகளுக்குட்பட்டே கிடைக்கின்றன.

             நோய் முதல் நாடித்தான் அது தணிக்க முடியும் என்பது வள்ளுவர் வாக்கு. அது தெரியாததால்தான், மின்வெட்டுக்கு மின்வாரிய ஊழியர்கள் மீது கோபம் வருகிறது. தவறான இடத்தில் கோபப்பட்டு நம் சக்தியை வீணாக்குகிறோமே தவிர, பிரச்சனைக்குத் தீர்வு கிடைப்பதில்லை. உண்மையில் சரியான இடத்தில் தீர்வு கேட்டுப் போராடுபவர்களோடு துணை நிற்காமல் பிரச்சனையுடனே வாழப் பழகிக் கொள்கிறோம். நம் பொதுவான பிரச்சனைகள் அனைத்திலும் தீர்மானிக்கும் சக்தியாக அரசியலே உள்ளபோது, அதைப் பற்றிப் பேசாமல் ‘அது தணிக்கும் வாய்’ நாட முடியாதே?

நன்றி : சங்கக் குரல்

வெள்ளி, 17 ஜூன், 2011

எடுத்துக்காட்டாய் ஒரு மாவட்டக் கலெக்டர் - பாராட்டுகிறோம்

         இன்றைக்கு அரசு அலுவலகத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர் வரை தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்காமல் தனியார்ப் பள்ளியில் தான் சேர்த்து பெருமைபடுகிறார்கள். இதில் அரசுப் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்களும் விதிவிலக்கல்ல. அவர்களுக்கே தங்கள் பணியில் - கற்பித்தலில் நம்பிக்கை இல்லை. ஆட்சியாளர்களும் அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்தவேண்டும் என்று அக்கறைக் காட்டுவதில்லை.    ஆனால் வசதியில்லாத, கிராமப்புறக் குழந்தைகள் வேறுவழியில்லாமல் அரசுப் பள்ளியில் தான் சேருகிறார்கள். காரணம் இலவசக் கல்வி மட்டுமல்ல. அவர்கள் அரசுப் பள்ளிக்குச் செல்வது என்பது இலவச மதிய உணவுக்காகத் தான் என்பது தான் உண்மையானக் காரணமாகும்.
                அப்படிப்பட்டப் பள்ளியில் தான் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஆர். ஆனந்தகுமார் தனது ஆறு வயது பெண் குழந்தை கோபிகாவை குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய  அரசு தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்திருக்கிறார் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாகும். அவர் அதோடு மட்டும் விடவில்லை. தன குழந்தைக்கு இலவச சீருடை வழங்க முடியுமா என்று அப்பள்ளி தலைமையாசிரியரிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவரோ, சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு மட்டுமே இலவச சீருடை வழங்க முடியும் என்று சொல்லி இருக்கிறார். அதைக் கேட்ட ஆட்சித்தலைவர், என் குழந்தையும் சத்துணவு சாப்பிடும். அதற்கான பட்டியலில் சேர்த்து பள்ளி சீருடை வழங்குங்கள் என்று தலைமையாசிரியரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார். 
                 இப்படிப்பட்ட  சம்பவம் தமிழ்நாட்டில் நடந்திருப்பது நமக்கு பெருமையாய் இருக்கிறது. அரசுப் பள்ளியின் மீது நம்பிக்கையை வைத்துள்ள மாவட்ட ஆட்சித்தலைவரையும், அவரது இந்த முடிவுக்கு அனுமதியளித்த அவரது மனைவியையும் கண்டிப்பாக பாராட்டவேண்டும்.