தேசவுடைமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேசவுடைமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 1 செப்டம்பர், 2012

எல். ஐ. சி - வேர்களும் விழுதுகளும் தாங்கிய ஆலமரம் - வீழாமல் காப்போம்....!

            சுதந்திர இந்தியாவில் தனியாரிடமிருந்த இன்சூரன்ஸ் துறை,  1956 - ஆம் ஆண்டு ஜனவரி 19 - ஆம் தேதியன்று அவசர சட்டத்தின் மூலம் தேசவுடைமை செய்யப்பட்டு, அதே ஆண்டு செப்டம்பர் 1 - ஆம் தேதியன்று லைப் இன்சூரன்ஸ் கார்ப்பொரேஷன் ஆப் இந்தியா என்ற பொதுத்துறை நிறுவனம் வெறும் ஐந்து கோடி மதிப்புள்ள விதையை விதைத்து தொடங்கப்பட்டது. எல். ஐ. சி. நிறுவனம் தொடங்கப்பட்ட போது அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு இரண்டு முக்கியமான தகவல்களை சொன்னார். ஒன்று... எல். ஐ. சி மூலம் கிராமப்புற மக்களுக்கு... சமூகத்தில் பின்தங்கிய - பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு காப்பீடு தரமுடியும் என்றும், இரண்டு.... எல். ஐ. சி. - யில் சேருகிற நிதியை மத்திய அரசின் தேச நலப்பணிகளுக்கு - அரசின் திட்டங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும்  நேரு கூறினார்.
          அன்றையிலிருந்து இன்று வரை -  கடந்த   56  ஆண்டுகளில் 1.5 இலட்சம் ஊழியர்கள் என்ற வேர்களையும், 14 இலட்சம் முகவர்கள்  விழுதுகளையும்  கொண்ட  ஆலமரமாய் பரந்து விரிந்து வளர்ந்திருக்கிறது. இது வரை நூற்றுக்கணக்கான திட்டங்களை பலன் தரும் கனிகளாக காய்த்து கோடிக்கணக்கான மக்களுக்கு பலன் தந்திருக்கிறது. இந்த ஆலமரத்தில் கோடிக்கணக்கான பாலிசிதாரர்கள் பறவைகளாய்  வந்து தங்கி பலனடைந்து இருக்கிறார்கள். இன்றைக்கு 34 கோடி பாலிசிதாரர்களை கொண்ட மிகப்பெரிய நிறுவனம் எல். ஐ. சி. என்று சொன்னால்  அது மிகையாகாது.
          5 கோடி என்ற சிறு விதை தான் இன்றைக்கு 14 இலட்சம் கோடி  சொத்தாக உயர்ந்திருக்கிறது என்பது அனைவரையும் ஆச்சரியப்படவைக்கிது. இன்னொரு பக்கம் 
எல். ஐ. சி. - யின் ஆயுள் நிதி என்பது 13 இலட்சம் கோடியை எட்டியுள்ளது. மத்திய அரசின் அந்த 5 கோடி முதலீட்டிற்கு கடந்த 56 ஆண்டுகளில்  - எல். ஐ. சி மத்திய  அரசிற்கு இலாபத்தில் பங்காக - டிவிடெண்டாக ரூ. 11,000 கோடிக்கும் மேல் கொடுத்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக டிவிடெண்டாக மட்டும் அரசுக்குக் கொடுத்தது  என்பது 22,000 சதவீதம் ஆகும். இவைகளெல்லாம் எல். ஐ. சி - யின் வியத்தகு வளர்ச்சிகளில் மிக சிலவே. 
              இன்று எல். ஐ. சி. என்பது கற்பக விருச்சமாக காமதேனுவாக காட்சியளிக்கிறது. இப்படிப்பட்ட ஒரு நிதி நிறுவனம்,   தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் உதவிகரமானாக செயல்படுவது என்பது இந்திய - பன்னாட்டு முதலாளிகளுக்கு ஒரு  உறுத்தலாக இருந்து வருகிறது என்பது மட்டுமல்லாமல்  அந்த முதலாளிகள் அதை அப்படியே விழுங்கி ஏப்பம் விடுவதற்கும் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். 
             சுதந்திர இந்தியாவில் தனியாரின் வசமிருந்த காப்பீட்டுத் துறையை தேசவுடைமை செய்யவேண்டும் என்ற கோரிக்கையோடு தொடங்கப்பட்ட அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்,  தேசவுடைமை செய்யப்பட்ட எல். ஐ. சி தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமாகவே இயங்க, உழைப்பாளி மக்களின் நிதி காப்பாற்றப்பட கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து இன்று வரை போராடிவருகிறது. 
 '' தேச நலனில்... மக்கள் பணியில்... பாலிசிதாரர்கள் சேவையில்....
மீண்டும்  நாங்கள் எங்களை அர்ப்பணிக்கிறோம்...''    
பொதுத்துறை எல். ஐ. சி - யை காப்போம்....   
முகவத் தோழர்களை பாதுகாப்போம்....