மு. க. அழகிரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மு. க. அழகிரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 15 மார்ச், 2014

பாவம் அழகிரிக்கு பொழுது போகலையாமா...!

                
          2009 - ஆம் ஆண்டு ''அஞ்சாநெஞ்சன்'' அழகிரிக்கும், 2014 - ஆம் ஆண்டு ''அமுங்கிய மூஞ்சன்'' அழகிரிக்கும் என்னமா வித்தியாசம் தெரியுது. சென்ற 2009 தேர்தலில் இந்த அஞ்சா நெஞ்சனின் ஆட்டமென்ன...! ஆர்ப்பாட்டமென்ன...! 2009 நாடாளுமன்றத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் தோழர்.மோகன் அவர்களுக்குக்காக பிரச்சாரம் செய்யும் போது இவர் காட்டிய  மிரட்டல்கள் தான் என்ன...! அய்யய்யோ தாங்க முடியலடா சாமி.  ஆனால் இப்போது 2014 தேர்தலில் இவைகளெல்லாம் எங்கே போனது....? ''ஆடி அடங்கும் வாழ்க்கையாடா...'' என்றல்லவா அஞ்சாநெஞ்சன் ஆடிப்போயிருக்கிறார். 
      அண்மையில்  தன் தந்தையாலேயே ''குடும்பத்திலிருந்தும் குடும்பக்கட்சியிலிருந்தும் துரத்தியடிக்கப்பட்ட பின், தன்னையே சுற்றிக்கொண்டிருந்த தொண்டர்களும், குண்டர்களும் இவரை விட்டு ஓடிவிட ''யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க...'' என்று தனிமையில் பாடிக்கொண்டிருந்தார். அப்படியும் பொழுது போகல.  இவரும்  யார் வீட்டிற்கும் போகவும் முடியல. யாரும் இவரை சேர்த்துக்கொள்ளவும் மாட்றாங்க. என்ன பண்ணுவாரு பாவம்  பொழுதும் போகமாட்டேங்குது. ''பழைய நெனப்புடா பேராண்டி'' என்று தனக்கு தெரிந்த பழைய நண்பர்களை  சந்திக்க கிளம்பிவிட்டார்.
           தன் அப்பாவின் எதிரியான வைகோ, பிரதமர் பதவியிலிருந்து  இறங்கப்போகும் மன்மோகன் சிங், ஆட்சிக் கனவில் மிதக்கும் பிஜேபி தலைவர் ராஜ்நாத் சிங், திரைப்பட நடிகர் ரஜினி காந்த் என இத்தனை பேரையும் கடந்த ஒரு வார காலமாக இந்த அஞ்சாநெஞ்சன் சந்தித்திருக்கிறார். இது என்ன வேண்டுதலா..? இப்படி உங்க அப்பாவுக்கு சம்பந்தமே இல்லாதவங்க எல்லோரையும் சந்திக்கிறீங்களே...? என்று கேட்டாக்கா. பொழுது போகமாட்டேங்குதாமா... இப்படி யாரையாச்சும் சந்தித்து பேசினாக்கா மனசில பாரம் குறையுதாமா...! பாவம் அஞ்சாநெஞ்சன் பொழப்பு இப்படி ஆயிடுச்சி....!  

வெள்ளி, 14 டிசம்பர், 2012

அழகிரி அண்ணே...யோக்கியன் வர்றான் சொம்ப எடுத்து உள்ளே வை...!



             பல கோடி ரூபாய் கிரானைட் கல் ஊழல் செய்து குற்றம் சாட்டப்பட்ட திமுகவின் தலைவர் கருணாநிதியின் பேரனும், மத்திய அமைச்சர் மு. க. அழகிரியின் தவப்புதல்வனுமான துரை தயாநிதி பலமாதங்களாக தலைமறைவாகி சித்து விளையாட்டு விளையாடினார். தமிழக போலிஸ் துறையும் வலைவீசித் தேடியது. அவர்களுக்கும் துரை தயாநிதி ஓடி ஒளிந்த இடம் தெரியவில்லை. இதற்கிடையில் சட்டத்தின் ஓட்டையை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார்கள். பையனுக்கு ஜாமீன் கிடைத்ததில் அப்பாருக்கு ரொம்பத்தான் சந்தோசம்.
     அப்பாவே இன்று குற்றம் சாட்டப்பட்ட தன்  தவப்புதல்வனை, முதல் முதல் எல்.கே.ஜி சேர்க்க வருகிற அப்பா போல் சந்தோஷமாகவும் பெருமையாகவும் பெருமிதத்துடனும் சிரித்துக்கொண்டே நீதிமன்றத்திற்கு அழைத்து வந்ததைப் பார்த்தால், ''2012 - ஆம் ஆண்டின் மிகச் சிறந்த அப்பா'' என்ற பரிசு கொடுக்கலாம்.
             அதுமட்டுமா, தன்  தவப்புதல்வனுக்கு ''நற்சான்றிதழ்'' வழங்கியிருக்கிறார். அப்படி என்ன சொல்லியிருக்கிறார் என்றால், ''துரை தயாநிதி மீது  தவறு இருப்பதாக எனக்குத் தெரிந்தால், அவரை உடனே நீதிமன்றத்தில் சரண் அடையும்படி நானே சொல்லியிருப்பேன்'' இது தானுங்க மு.க.அழகிரி உதிர்த்த பொன்மொழிகள்.