சுப்பராவ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுப்பராவ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

அட பாவிகளா.... ஏழைகள் அதிகம் சாப்பிடுவதால் விலைவாசி உயர்கிறதாம்....!

         

          நாடு இப்போது செழிப்பாக இருக்கிறதாம். கிராமப்புற ஏழை மக்கள் தற்போது பால், கறி, முட்டை, காய்கறிகள் என சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிட துவங்கி விட்டர்களாம். கிராமப்புற ஏழை மக்களுக்கு வருமானம் பெருகிவிட்டது தான் காரணமாம். இவர்களுக்கு வருமானம் அதிகமாக போனதால் தடபுடலாக சாப்பிடுவதால் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துவிட்டதாம். இதனால் நாட்டில் உணவு பணவீக்கமும் அதிரித்து வருகிறதாம்.
          இப்படியாக பொன்மொழியை உதிர்த்தவர் வேறு யாரும் இல்லை. இந்திய நாட்டின் பொருளாதாரத்தை தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் ''பொருளாதார மேதைகளான'' மன்மோகன் சிங், ப. சிதம்பரம், மாண்டேக் சிங் அலுவாலியா வகையறாக்களின்  வரிசையில் வரக்கூடிய பாரத ரிசர்வ் வங்கியின் கவர்னராக பொறுப்பில் இருக்கும் சுப்பாராவின் பொறுப்பில்லாத பேச்சு தான் இது. அதுவும் கர்நாடக மாநில வணிகர்களிடம் (பெடரேஷன் ஆப் கர்நாடகா சேம்பர் ஆப் காமர்ஸ்) பேசியிருக்கிறார். இதை கேட்கும் போது முன்பு ஒரு முறை அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், ''இந்தியர்கள் அதிகம் சாப்பிடுகிறார்கள். அதனால் தான் உலகளவில் உணவுப்பொருட்களின் விலை உயருகிறது'' என்று உளறியது நினைவுக்கு வருகிறது.
        கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறவிருக்கின்ற இந்த சூழ்நிலையில் சுப்பராவ் அங்கு சென்று இவ்வாறு பேசியதை பார்த்தால், ரிசர்வ் வங்கியின் கவர்னரே காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது.
       இன்னொன்று, உணவுப்பொருட்களின் விலை உயர்வுக்கான உண்மைக் காரணமான ஆன்-லைன் வர்த்தகம் மற்றும் முன்பேர வர்த்தகம் என்பதை மறைத்து விட்டு, இது போல் பொறுப்பில்லாமல் பேசுவதால், ஏற்கனவே விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிப்படைந்துள்ள மக்களை கிராமப்புற  மக்களுக்கு எதிராக திசைத் திருப்பிவிடுகிறார் என்று தான் பொருளாகும்.
       இன்றைக்கு கிராமங்களில் வேலைவாய்ப்பும் இல்லாமல் வருமானமும் இல்லாமல் நகரத்தை நோக்கி படையெடுக்கும்  கிராமப்புற மக்கள், நகரத்திலும் சரியான வருமானமில்லாமல் கறியையும் , முட்டையையும் எங்கிருந்து வாங்குவார்கள். அவர்கள் சாதாரணமாக முன்பெல்லாம் ஒரு ரூபாய்க்கு வாங்கின முட்டையெல்லாம் ஆன் - லைன் வர்த்தகத்தால் இன்றைக்கு ஐந்து ரூபாய்க்கு எப்படி வாங்கி சாப்பிடுவார்கள்.
          பால், கறி, முட்டை, காய்கறிகள் போன்ற சத்தான உணவுப்பொருட்களை தடபுடலாக சாப்பிடும் இந்திய ஏழை மக்கள் என்று சுப்பாராவ் வகையறாக்கள்,  ஏழை மக்கள் என்று அம்பானி, டாட்டா, பிர்லா, நாராயணமூர்த்தி, கலாநிதி மாறன் போன்றவர்களா என்பதும் புரியவில்லை.
        மொத்தத்தில் விலைவாசி உயர்வின் உண்மைக் காரணத்தை மறைத்து ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பது மட்டும் புரிகிறது.
        இவர்கள் நாட்டில் மழை பெய்ததா என்று கூட தெரியாமல், அரண்மனையில் அமர்ந்துகொண்டு ''அமைச்சரே மாதம் மும்மாரி பொழிந்ததா'' என்று அமைச்சரைக் கேட்டு தெரிந்துகொள்ளும் அரண்மனைவாசிகள். இவர்களுக்கு நாட்டில் நடப்பது ஒன்றுமே தெரியாது. இவர்களை குளிர்சாதனம் பொருத்தப்பட்ட அறையைவிட்டு, காரை விட்டு வெளியே இழுத்துவந்து இந்திய கிராமங்களில் விடுங்கள். நடந்தே அந்த கிராமங்களை சுற்றிப்பார்க்கட்டும். அப்போது தான் கிராமப்புற ஏழை மக்கள்  வகைவகையாய் சாப்பிடுகிறார்களா... அல்லது செத்து மடிகிறார்களா... என்பது புரியும்.