மானியம் வெட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மானியம் வெட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 8 நவம்பர், 2015

சமையல் எரிவாயு மானியத்திற்கும் வைக்கப்போறான் ஆப்பு...!


               ''உங்களுக்கு சொந்தவீடு இருக்கா...? சொந்தமா கார் வெச்சிருக்கீங்களா...? இருசக்கர வாகனம் வேற இருக்கா...? அப்ப எதுக்குங்க  கேசுக்கான மானியம் உங்களுக்கு...? சமையல் எரிவாயுக்கான முழுத்தொகையையும் கொடுத்து வாங்கிக்கவேண்டியது தானே...? ஏழைங்க வீட்டில அடுப்பெரிய வசதிப்படைச்சவங்க கேசுக்கான மானியத்தை விட்டுக்கொடுக்கக்கூடாதா...?'' 
           இதை நான் சொல்லலீங்க...! ஓட்டுப்போட்டுப் பாத்தீங்களே... உட்காரவெச்சி பாத்தீங்களே... நம்ம பிரதமரு மோடி தாங்க இப்படி சொல்றாரு...! அவரு என்னா பண்ணுவாரு பாவம்... ரேடியோவில சொன்னாரு... தொலைக்காட்சியில சொன்னாரு... மொபைல் போன்ல சொன்னாரு... ஜீரோவ அமுக்க சொன்னாரு... நீங்க எதையாவது கேட்டீங்களா...? அவரு சொன்னப் பேச்சை கேட்டீங்களா...? இல்லையே...! 
              பாத்தாரு... இவிங்கெல்லாம் இப்படி சொன்னா கேட்கமாட்டாங்க... மயிலே... மயிலேன்னா... இறகு போடாது... வெச்சாரு ஒரு ஆப்பு...! ஓட்டு போட்டவங்க... பாடதவங்க... சாமி கும்புடுறவங்க... கும்புடாதவ்ங்க... மாட்டு மூத்திரத்தை குடிக்கிறவங்க... மாட்டிறைச்சி சாப்புடுறவங்க... யாரையும் விட்டுவைக்கல... பாரபட்சம் இல்லாம மோடி இந்திய மக்கள் எல்லாருக்கும் வெச்சாரு ஆப்பு...! இவரு சொன்ன பேச்சை  கேட்டு 42 இலட்சம் வசதிபடைச்சவங்க   எங்களுக்கு மானியம் வேணாமுன்னு சொல்லிப்பூட்டாங்களாம். எவ்வளவு சொல்லியும்  இவரு பேச்சைக்கேட்காத மிச்சமிருக்கிற வசதி படைச்சவங்களுக்கெல்லாம் அவராவே மானியத்தை புடுங்கிவிட்டுடுவாராம். 
            யாரு அந்த வசதி படைச்சவங்கன்னா...? கடனை வாங்கி வீட்டைக்கட்டி... கடனுல  வாங்கின காரை பெட்ரோல் போடமுடியாம வீட்டு வாசலில நிறுத்திவெச்சிபுட்டு... இருசக்கர வாகனத்தை ஓட்டிகிட்டு, கடனுக்கும்  சாப்பாட்டுக்கும்  அல்லாடிகிட்டு இருக்கிற அந்த வசதி படைச்சவங்ககிட்ட இருந்து தான் மோடி மானியத்தை ஒரேயடியா புடுங்கப்போறாரு.  
           குறிப்பிட்ட அளவிற்கு அதிகமாக வருமானம் உள்ளவர்களுக்கு மானிய விலையில் சமையல் சிலிண்டர் வழங்கத் தேவையில்லையாம்.
                     அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் மானியம் ரத்தாகுமாம். 
          அப்போது தான் அம்பானி, அதானி, டாடா, பிர்லா போன்ற நலிவடைந்தவர்களுக்கு மேலும்  உதவ முடியுமாம்.
             இப்படியெல்லாம் ஆப்பு வைக்க மோடி தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறாராம்.
            ஒரு விஷயத்தை நீங்க மறந்திருப்பீங்க...!
             இதே மாதிரியான ஒரு திட்டத்தை முந்திய காங்கிரஸ் கட்சி தலைமையிலான  ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும்   முன்வைத்தது. ஆனால் அன்று இடதுசாரிக்கட்சிகள் பலத்த  எதிர்ப்பை காட்டியதால்  அந்த திட்டம் அப்போதே  கைவிடப்பட்டது என்பதை உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
            ஆனால் இன்றைக்கு நிலைமை வேறுமாதிரியாக இருக்கிறது. பாராளுமன்றத்தில் இடதுசாரிக்கட்சிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள சூழ்நிலையில், தனி பெரும்பான்மையுடன் ராட்சச பலத்துடன் உள்ள மோடி தலைமையிலான பாரதீய ஜனதாக்கட்சி  அரசு இந்த திட்டத்தை அமல்படுத்தியே தீருவோம் என்று  குறியாக உள்ளது.
            அதன் பிறகு மக்கள் கேஸ் சிலிண்டர் போல் வெடிப்பார்களா...? அல்லது புஸ்வானம் போல் புஸ்ஸ்ஸ்னு போயிடுவாங்களான்னு பார்ப்போம்.

சனி, 18 ஆகஸ்ட், 2012

பொருளாதார மேதாவிகளே....! மானியம் வெட்டினால் மக்கள் வெடித்துவிடுவார்கள்...!

        

























                 ''அடிக்க அடிக்க தாங்குராங்களே.... ரொம்ப நல்லவங்க''ன்னு மக்களை பற்றிய எண்ணம் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசுக்கு இருக்கிறது. காய்கறி விலை ஏறினாலும் கண்டுக்க மாட்றாங்க... ஏத்துக்கிறாங்க. மளிகை  சாமான்களின் விலை ஏறினாலும் கண்டுக்க மாட்றாங்க... ஏத்துக்கிறாங்க. பெட்ரோல் - டீஸல் விலை ஏற்றினாலும் கண்டுக்க மாட்றாங்க... ஏத்துக்கிறாங்க. பணவீக்கம் ஏறினாலும் மக்களுக்கு கவலையில்லை. ரூபாயின் மதிப்புக் குறைந்தாலும் மக்களுக்கு கவலையில்லை. எல்லாவற்றையும் ஏத்துக்கிறாங்க. ரொம்ப நல்லவிங்களா இருக்காங்க... கோபமேமேமேமே....  வரமாட்டேங்குது... எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாங்க... எனவே மக்களுக்கு இன்னொரு அடிக்கொடுப்பதற்கு மத்திய அரசு தாயாராகிவிட்டார்கள். அது என்ன தெரியுமா...? சமையல் எரிவாயுக்கு இதுவரை மத்திய அரசு கொடுத்து வந்த மானியத்தை வெட்டுவது என்கிற மத்திய அரசின் நீண்ட கால ஆசையை - கனவை நிறைவேற்றலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள்.
             நாம் இதுவரை நம் வீடுகளில்  பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை சுமார் 400 ரூபாயாகும். நாம் ஓராண்டுக்கு சராசரியாக சுமார் 12 சிலிண்டர்களை  வாங்கிப் பயன்படுத்துகிறோம்.  நாம் பயன்படுத்தும் அத்தனை சிலிண்டருக்கும்  மத்திய அரசு ஒரு சிலிண்டருக்கு சுமார் 400 ரூபாய் வீதம் மானியம் வழங்குகிறது. ஒரு எரிவாயு சிலிண்டரின் மொத்த விலை சுமார் 800 ரூபாயாகும்.   அதனால் மத்திய அரசுக்கு சில ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறதாம். இதுபோல் பொது மக்கள் பயன்படுத்தும் எரிவாயுக்கும், பெட்ரோல் - டீஸல் - மண்ணெண்ணைக்கும், உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கும் கோடிக்கணக்கான ரூபாய்களை பொது மக்களுக்கு அள்ளி அள்ளித்தருவதால் மத்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறதாம். அதுமட்டுமல்ல, பொருளாதாரமும் வளர்ச்சியடையவே சிரமமாக இருக்கிறதாம். 
          அதனால் கசாப்புக்கடையில் ஆட்டை வெட்டுவது போல, நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் தொடங்கி, வாஜ்பாய் தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி ஆட்சி மற்றும் தற்போதைய மன்மோகன்  சிங் ஆட்சி வரை உரம், பூச்சி மருந்து, மண்ணெண்ணெய், டீஸல், பெட்ரோல், சமையல் எரிவாயு போன்றவற்றின்  மீதான மானியங்களை படிப்படியாக வெட்டப்பட்டு வந்தன. 
               இந்த சூழ்நிலையில் தான், ''பொருளாதார மேதாவிகள்'' அடங்கிய பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு அரசுக்கு நீண்ட நாட்களாக சொல்லப்பட்ட ஒரு பரிந்துரையை கொடுத்துள்ளது.  இந்தியாவில் சுமார் 29% குடும்பத்தினர் ஒரு ஆண்டுக்கு 4 எரிவாயு  சிலிண்டர்களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்று  ஒரு புள்ளி விவரம் சொல்லுகிறதாம். அதனால் இதனை அடிப்படையாக வைத்து இனி அனைத்து குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 4 எரிவாயு சிலிண்டர்களுக்கு மட்டும் மானிய விலையை அரசு வழங்கலாம் என்று பிரதமரின்  ''பொருளாதார மேதாவிகளின் குழு''     அதிமேதாவித்தனமாக ஆலோசனை வழங்கியிருக்கிறது. 
              அதன்படி, ஒரு குடும்பத்துக்கு ஒரு ஆண்டுக்கு குறைந்தது 12 எரிவாயு சிலிண்டர்கள் தேவைப்படுகிறது என்றால்,  அந்த குடும்பங்கள் முதல் 4 சிலிண்டர்களை  மட்டும் 400 ரூபாய் கொடுத்தும், அடுத்து வரும் மீதம் உள்ள 8 சிலிண்டர்களை 800 ரூபாய் கொடுத்தும் வாங்க  வேண்டிய கட்டாயம் ஏற்படும். இப்போது 4 சிலிண்டருக்கு மட்டும் கொடுக்கப்போகும் மானியத்திற்குக் கூட அற்ப ஆயுள் தான். இதை நாம் அனுமதித்தால், எதிர்காலத்தில் எரிவாயுவிற்கு கொடுக்கப்படும் மானியம் முழுமையாக  வெட்டப்படும் அபாயம் ஏற்படும் 
             இப்படியாக 4 எரிவாயு சிலிண்டர்களுக்கு மட்டும் அரசு மானியம் வழங்கினால், சமையல் எரிவாயு  சிலிண்டர் விநியோகத்துக்கு மட்டும் மத்திய  அரசு வழங்குகிற மானியத்தின் அளவு என்பது ரூ.18 ஆயிரம் கோடியாகக் குறையும் என்றும், அதனால் பல இலட்சம் கோடி ரூபாய் மிச்சமாகும் என்றும் அந்த பொருளாதார மேதாவிகள் கூசாமல்   சுட்டிக்காட்டுகின்றார்கள்.   சென்ற பட்ஜெட்டில் இந்தியாவில் மிக சொற்பமான எண்ணிக்கையில் உள்ள பெருமுதலாளிகளுக்கு 5,00,000 கோடி ரூபாய் மானியமாகவும், வரிச்சலுகையாகவும் கொடுத்த போது  பல்லை இளித்துக்கொண்டு வேடிக்கைப்பார்த்த இந்த மேதாவிகள் தான், மக்களுக்கு கொடுக்கப்படும் மானியத்தால் பொருளாதார வளர்ச்சி ஏற்படாது என்று வாய்க்கூசாமல் பேசுகிறார்கள். 
               சமீபத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட ஒரு சுவையான - பரப்பரப்பான தகவல் என்ன தெரியுமா...?               நமது நாட்டின்  குடியரசு துணைத்தலைவர் 
திரு. ஹமீது அன்சாரி, சென்ற ஆண்டில்  மட்டும், 176 சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தியிருக்கிறார் என்ற சூடான தகவல் கிடைத்திருக்கிறது. அப்படியென்றால் மாதமொன்றுக்கு     சராசரியாக 14 சிலிண்டர்களை பயன்படுத்தும்  இவருக்கு மட்டும் பதவியில்  உள்ள போதும், பதவியை விட்டு சென்ற பின்னும் மானியம் வழக்கப்படும்  என்பது இந்திய போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் தான் நடைபெறும். 

ஞாயிறு, 6 நவம்பர், 2011

''மண்ணு'' மோகன் சிங்கின் திமிர்பிடித்த பேச்சைக் கேட்டு கோபம் வரவில்லையா..?

               பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் நகரில் நடைபெற்ற ஜி - 20 உச்சிமாநாடு சென்ற வெள்ளியன்று முடிவடைந்தது. இம்மாநாட்டின் நிறைவுக்குப் பின் பிரதமர் ''மண்ணு'' மோகன் சிங்கு பத்திரிக்கையாளர்களிடம் உதிர்த்த வார்த்தைகளை கேட்டால் நமக்கெல்லாம் கோபம் பொங்கி வரும். எப்படி  ஒரு நாட்டின் பிரதமர் அந்த நாட்டின் மக்களுக்கு எதிராக இவ்வளவு தைரியமாக பேசுகிறார் என்ற கேள்வி தான் எழுகிறது.  வெளிநாட்டில் தானே பேசுகிறோம் என்ற தைரியமா அவருக்கு...?                                                
            அப்படி  என்ன பேசிவிட்டார் அவர்...?
            பொதுமக்கள் பயன்படுத்தும் எரிபொருள்களுக்கு இனியும் மானியம் வழங்கிக்கொண்டிருக்க முடியாதாம். மக்கள் தமது வாய்ப்புகளுக்கு மேல் வாழ்வதற்கு ஆசைப்படக்கூடாதாம். அரசு மக்களுக்கு மானியம் வழங்குவதற்கு பணம் என்ன மரத்திலா காய்க்கிறது..? என்று பிரதமர் ''மண்ணு'' மோகன் பேசியிருப்பது என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
               அதுமட்டுமல்ல இன்னும் என்னன்ன பேசியிருக்காருன்னு பாருங்க...!  பொதுமக்கள் பயன்படுத்தும் எரிபொருட்களுக்கு இனியும் மானியம் வழங்க முடியாது என்பது மட்டுமல்ல... பெட்ரோலின் விலையை எப்படி தனியார் எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக்  கொள்கிறார்களோ அதேப்போல் இனி டீசல், சமையல் கேஸ் போன்ற மற்ற எரிபொருள்களின் விலையையும் தனியார் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்வார்கள் அல்லது தன் விருப்பத்துக்கு அவ்வப்போது உயர்த்திக்கொள்வார்கள் என்று நா கூசாமல் - மக்கள் கொதித்தெழுவார்கள் என்ற அச்சமில்லாமல் இந்த நாட்டின் பிரதமர் பேசுகின்றார் என்றால்.. பெட்ரோல் விலையை உயர்த்தியதை நியாயப்படுத்தியது மட்டுமின்றி டீசல் - சமையல் கேஸ் போன்ற மற்ற எரிபொருட்களின் விலைகளையும் தங்குதடையின்றி தாறுமாறாக உயர்த்தவேண்டும் என்று இந்த நாட்டின் பிரதமர் பேசுகின்றார் என்றால்... இவர் யாருக்காக ஆட்சி செய்கிறார் என்றே தெரியவில்லை. 
        பெருமுதலாளிக்கும், பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கும் மானியங்களையும் வரிச்சலுகைகளையும் வாரிவாரி கொடுத்துவிட்டு சாதாரண - ஏழை - எளிய மக்களுக்கு மட்டும் மானியங்களை வெட்டவேண்டும் என்று இந்த நாட்டின் பிரதமர் துடிக்கின்றார் என்றால் இவர் யாருக்காக வேலை செய்கிறார் என்று தெரியவில்லை..
              இந்திய மக்களே..! இதைக்கேட்டுமா உங்களுக்கு கோபம் வரவில்லை....? கோபம் கொள்ளுங்கள்.. கோபப்பட்டால் தான் மனிதன்.. அநியாயங்களை கண்டு கோபப்படுங்கள். இந்த தேசம் கொள்ளைகொண்டு போகிறது...!