விஸ்வரூபம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விஸ்வரூபம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 18 பிப்ரவரி, 2013

விஸ்வரூபம் : கமல்ஹாசன் எங்கள ஏமாத்திட்டாருங்க சார்...!

           நேற்று ஞாயிற்றுக்கிழமை மதிய வேளை கட்சி கிளைக்கூட்டம் முடித்துவிட்டு, வெளியே வீதியோரமாய் தோழர்களோடு பேசிக்கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று யாரோ இரண்டு ''குடிமகன்கள்'' எங்களை நெருங்கி வந்தனர். அவர்கள் குடித்திருந்தாலும் நிதானமாகத்தான் இருந்தார்கள். வந்தவர்கள் எங்களிடம், '' சார்... கமல்ஹாசன் எங்கள ஏமாத்திட்டாருங்க சார்...அதைப் பத்தியும் நீங்க பேசுங்க சார்..."  என்று கொஞ்சம் கோபமும்,
ஏமாற்றமும் கலந்து கூறினார்கள். ''என்னாப்பா...  என்ன ஆச்சு...?"  என்று கேட்டோம். ''சார்... விசுவரூபம் ஒரு தமிழ்ப் படம்ன்னு கமல்ஹாசன் சொன்னார் சார்... ஆனா அது இங்கிலீஷ் படம் சார்... எங்களுக்கு ஒண்ணுமே புரியல சார்... பாதியிலேயே எழுந்து வந்துட்டோம் சார்... கமல்ஹாசன் எங்கள ஏமாத்திட்டாரு சார்... இதப் பத்தியும் நீங்க பேசுங்க சார்..." என்று அந்த இருவரில் ஒருத்தர் கோபமாகவே சொன்னார். இதைக் கேட்டதும் எங்களுக்கு சிரிக்கிறதா, அழுகிறதா என்றே தெரியவில்லை. ''இதுக்கெல்லாம் வந்துடுங்க...பெட்ரோல் விலை ஏறிப்போச்சி... போராட வாங்கன்னு கூப்பிட்டா வராதீங்க... '' என்று எங்களோடு இருந்த ஒரு தோழர் அவர்களிடம் கடுமையாக கடிந்து கொண்டார். ஆனால் அவர்களைப் பார்த்து எனக்கு கோபமே வரவில்லை. ஏனென்றால், அவர்களைப் பொருத்தவரை இதுவும் ஒரு பிரச்சனை தான். தமிழ் என்று வெளியே போஸ்டரில் போட்டிருப்பதை நம்பி உள்ளேப் போய் பார்த்தால், தமிழைத் தவிர வேறு மொழியில் இருந்தால் ஏமாற்றமாக தானே இருக்கும். டிக்கெட் காசை திரும்பக்கேட்டால் கூடத் தவறில்லை தான்.
       கலை - இலக்கியம் என்பது சாதாரண பாமரனையும் சென்றடைய வேண்டும். கலை - இலக்கியம் என்பது மக்களுக்காகவே. அந்த கலையும் இலக்கியமும் மக்களின் புரிதலுக்கு அந்நியப்பட்டுப்போனால் மக்கள் அவைகளை விட்டு விலகிச் சென்றுவிடுவார்கள் என்பதற்கு மேலே சொன்ன அந்த இருவரே சாட்சி என்பதை புரிந்து கொள்ளவேண்டும். கலைஞர்கள்  தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகிற ஒரு களமாக திரைப்படம் இருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட திறமைசாலிகளும், அறிவுஜீவிகளும் திரைப்படம் எடுப்பதற்கு முன்பு, திரைக்கு முன்னால்  உட்கார்ந்து கொண்டு  திரைப்படம் பார்க்கும் பாமரனை நினைத்துப் பார்த்து திரைப்படம் எடுக்கவேண்டும். இல்லையென்றால், அப்படிப்பட்ட கலைஞர்கள்  மக்களிடமிருந்து அந்நியப்பட்டுப்போவார்கள். சாதாரண பாமரனை நினைத்துப் திரைப்படம் எடுத்ததால் தான் எம்ஜியார்  இன்று வரை மக்களின் மனதில் நிற்கின்றார்.
        நடிகர் கமல்ஹாசன் பன்முகத்தன்மை வாய்ந்த ஒரு மகா கலைஞன் தான். அதில் மாற்றுக் கருத்து என்பதே இல்லை. அந்த திறமைகள் எல்லாம் பாமர மக்கள் புரிந்துகொள்ளும் படி இருத்தல் அவசியம். திரைப்படம் என்பது மக்கள் மொழியிலேயே இருந்தால் தான் அது வெற்றிபெறும்.

உறுத்தலும், மறுத்தலும்....

              நான் விஸ்வரூபம் படம் பார்த்தபோது எனக்கு விளங்கின இரண்டு விஷயங்கள். ஒன்று கடவுள் மறுத்தல் சம்பந்தமான வசனம். இன்னொன்று அமெரிக்க விசுவாச வசன உறுத்தல். வழக்கமாக கமல்ஹாசன் படத்தில் இடம்பெறும் கடவுள் மறுப்பு சம்பந்தமான வசனம் இதிலேயும் வருகிறது. அமெரிக்க போலீஸ் கமலையும், அவரது மனைவியையும் கைது செய்து விசாரணை நடத்துவார்கள். கமலின் மனைவி விசாரணையை பொறுத்துக்கொள்ள முடியாமல் சம்ஸ்கிருத மந்திரம் சொல்லுவார். என்னை திட்டுகிறாயா என்று அந்த பெண் போலீஸ் கேட்க, இல்லை கடவுளை கும்பிடுகிறேன்னு கதாநாயகி சொல்லுவார். அவர் எங்க கடவுளுக்கு நான்கு கைகள் இருக்கும் என்று சொல்லும் போது, அந்த பெண் போலீஸ் ''நாலு கை இருந்த எப்படி சிலுவையில் அறைவார்கள்'' என்று கேட்பார். அதற்கு அவர் ''இல்ல நாங்க கடல்ல போட்டுடுவோம்'' என்று சொல்லுவார். இந்த காட்சியின் போது மக்கள் ஒரு சலனமே இல்லாமல் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.காரணம் அது ஆங்கில வசனம் என்பதால்.
             ஒரு காட்சியில் ''அமெரிக்ககாரன் பெண்களையும் குழந்தைகளையும் கொல்லமாட்டான்'' என்று வரும். கமலுக்கு ஏன் இந்த அமெரிக்க விசுவாசம்...? இந்த வசனம் அவரை அறியாமல் வந்திருக்கமுடியாது. எதற்காக இப்படி வசனத்தை திணிக்கவேண்டும் என்பது தான் திரைப்படத்தை பார்க்கும் போது ஒரு உறுத்தலான விஷயமாக பட்டது.
        மேலே சொன்ன  இரண்டும் விஸ்வரூபம் படத்தைப் பார்த்து என்னால் புரிந்துகொள்ள முடிந்த இரண்டு காட்சிகளும் வசனங்களும் மனதில் நின்றவைகள்.  

வியாழன், 31 ஜனவரி, 2013

கமல்ஹாசனின் சிந்தனையில் ஏனிந்த மாற்றம்...?

அ. குமரேசன்
பத்திரிகையாளர்  
 
    உறுதிப்படுத்திக்கொள்ள முடியாத ஒரு தகவல் இப்படிக் கூறுகிறது: ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமம் தொடர்பான வணிக பேரம் படியாததால், அது வேறு நிறுவனத்திற்குக் கைமாறியதால் ஏற்பட்ட ''ஆத்திரம்'' தான் தடையாகத் தொடங்கி தாக்குதல்களாகத் தொடர்கிறது.
             இது உண்மையெனில், தங்களது நியாயமான கவலையையும் கோபத்தையும் இப்படி வர்த்தகம் சார்ந்த, உள்நோக்க அரசியலுக்குப் பயன்படுத்துகிற ஆட்சிபீடத்தை வன்மையாகக் கண்டிக்க இஸ்லாமிய அமைப்புகள் முன்வர வேண்டும். இதற்கு உடன்படமாட்டோம் என்று அறிவிக்க வேண்டும்.
            ‘விஸ்வரூபம்’ எதிர்ப்பு இங்கே இஸ்லாமிய மக்களுக்கு எதிராகப் பகை வளர்க்கத் துடிப்போருக்கும் சாதகமாகியிருக்கிறது. நாளை இது, பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்த சிலரது வெறித்தனம் பற்றிய திரைப்படம் ஒன்று வருமானால் அதற்கு எதிராக சூலாயுதம் தூக்க முகாந்திரம் அமைத்துக் கொடுக்கும். ‘ஆதிபகவன்’ என்ற பெயரே இந்துக்களைப் புண்படுத்துவதாகக்கூறி கிளம்பிவிட்டார்கள் என்பதைக் காணத் தவறக்கூடாது. ஏற்கெனவே ‘வாட்டர்,’ ‘ஃபயர்’ போன்ற படங்களின் மீதும், எம்.எப். உசேன் போன்ற கலைஞர்கள் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் நினைவுகூரப்பட வேண்டியவை.
              அடிப்படையில், ஒரு திரைப்டம் சரியானதா தவறானதா என்பதை மக்கள் பார்த்து முடிவு செய்கிற உரிமையை மதத்தின் பெயரால் தட்டிப்பறிப்பது ஜனநாயக விரோதம்.
         உறுதிப்படுத்திக்கொள்ள முடியாத இன்னொரு தகவல் இப்படிக் கூறுகிறது: திமுக தலைவர் முன்னிலையில் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் புகழ்பாடும் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தபோது, அதில் பேசிய கமல்ஹாசன், ''வேட்டி கட்டிய தமிழர் பிரதமராக வரவேண்டும்'' என்று கூறினாராம். அப்புறம் கலைஞர் பேசும்போது, சேலை கட்டிய தமிழரை விட வேட்டி கட்டிய தமிழர் பிரதமராவது நல்லது தான் என்ற விருப்பம் வெளிப்பட்டதாக விரிவாக்கம் செய்து தனது சொல்லாளுமையைக் காட்டியிருக்கிறார். ஆட்சியாளர்களின் ஆத்திரத்துக்கு இதுதான் அடிப்படைக் காரணம் என்கிறார்கள்.
             இது உண்மையெனில் இதுவும் கண்டனத்திற்கு உரியதே. 
ஆனால் கமல் சிந்தனை பற்றிய சில கேள்விகள் எழுகின்றன....!
 பெண் பிரதமராகக்கூடாது என்ற பொருளில் கமல் அப்படிப் பேசவில்லை, வட மாநிலங்களின் குர்தா, பஞ்சகட்சக்காரர்களுக்கு பதிலாக தமிழ்நாட்டின் வேட்டிக்காரர் பிரதமராக வர வேண்டும் என்ற கோணத்தில் தான் அவர் அப்படிப் பேசியதாகவே எடுத்துக்கொள்வோம். ஆனால், மக்களைக் கைவிட்டு பெருமுதலாளிகளுக்கு சேவையாற்றும் பொருளாதாரக் கொள்கைகளின் பிடிவாதப் பிரதிநிதியான ப. சிதம்பரம் போன்றவர்கள் வேட்டி கட்டிய தமிழர்கள் என்பதால் பிரதமராக வேண்டும் என்பது என்ன அரசியல் முதிர்ச்சியோ?
             தாக்குதல்களை எதிர்கொண்டு, தங்களது சம்பாத்தியத்தின் ஒரு கணிசமான பகுதியை ‘விஸ்வரூபம்’ பார்க்கச் செலவிடுகிற உழைப்பாளி தமிழர்களை வேட்டி கட்டிய பொருளாதார அடியாட்களிடம் பிடித்துக்கொடுக்கிற வேலை கமலுக்கு எதற்கு? ‘சேலை... வேட்டி...’ என்பது வெறும் அரசியல் நையாண்டி மட்டுமல்ல. சரியான நடவடிக்கை எடுக்காத ஆண்களைப் பார்த்து ‘வேட்டியை அவிழ்த்துவிட்டு சேலையைக் கட்டிக்கொள்’ என்று கேலியாய் அல்லது கோபமாய்ச் சொல்கிற பழக்கம் இங்கு உண்டு. பிடிக்காத செயலைச் செய்கிற தலைவர்கள், அதிகாரிகள் போன்றோருக்கு சேலை, வளையல் என்று அனுப்பி வைக்கப்படுவதுண்டு. பெண்ணை இழிவுபடுத்துகிற இந்தப் பண்பாட்டு ஒடுக்குமுறையோடு கமல் தன்னை அடையாளப்படு
த்திக்கொள்ளலாமா?
      எப்படிப்பார்த்தாலும் கமலின் பேச்சை ஆதரிக்க முடியவில்லை. அதற்காக மக்களின் திரைப்படத் தேர்வு உரிமையைத் தடுக்கிற அராஜக அரசியலையும் அனுமதிப்பதற்கில்லை.
       

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

விஸ்வரூபம் - தணிக்கை குழு உறுப்பினர் ஹசன் முகம்மது ஜின்னா விளக்கம்...!

       
















     
          ''விஸ்வரூபம்'' படத்துக்கு தணிக்கை குழு சான்றிதழ் அளித்தது பற்றி இஸ்லாமிய அமைப்புகளினால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கு தணிக்கை குழு உறுப்பினராக இருக்கக்கூடிய திரு.  ஹசன் முகம்மது ஜின்னா விளக்கம் அளித்துள்ளார்.
( தி.மு.க.வைச் சேர்ந்த இவர் கடந்த சட்டசபை தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டவர். தேர்தல் பிரசாரத்தின் போது  ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோரையும் சந்தித்து வாழ்த்து பெற்றவர்.  விஸ்வரூபம் சர்ச்சையி்ல் இவரையும் இழுத்துள்ளனர் )

ஜின்னா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
         தணிக்கைத் துறையில் பல மதங்களைச் சார்ந்தவர்களுக்கும் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. எந்த மதத்தின் உணர்வையும் புண்படுத்தப்படுவதையும் தணிக்கைத்துறை விதிகள் அனுமதிப்பதில்லை. அதே நேரத்தில், படத்தைத் தணிக்கை செய்யும் உறுப்பினர்களும் தங்கள் சொந்த மதத்தின் கண்ணோட்டத்தில் தணிக்கை முறையைக் கையாள்வதில்லை.
             வழிகாட்டும் முறைகள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், சமுதாயத்தின் அமைதியைக் குலைக்கக்கூடிய வகையிலோ, உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலோ, வக்கிரம் மற்றும் ஆபாசம் நிறைந்ததாகவோ காட்சிகள் இருப்பின் அவை நீக்கப்படுகின்றன.
           விஸ்வரூபம் படத்தைப் பொறுத்தவரை, தமிழில் அது தணிக்கை செய்யப்படுவதற்கு முன்பே இந்தி மொழியில் அப்படம் தணிக்கை செய்யப்பட்டது. அதன்பிறகே, தமிழ்ப் பதிப்பு மற்றும் தெலுங்கு தணிக்கை செய்யப்பட்டது. இந்தியிலும், தெலுங்கிலும் தணிக்கை செய்யப்பட்டபோதும் அந்தந்த மொழியறிந்த இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர்.
            ஒரு படம், வேறு மொழியில் ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்டிருந்தால் அதில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்பது ஒரு நெறிமுறையாகும்.
               அதே நேரத்தில், சம்பந்தப்பட்ட மொழியில் உள்ள வசனம் மற்றும் பாடல் வரிகளின் தன்மை, காட்சியமைப்புகளால் அந்த மொழி பேசும் பகுதியில் ஏற்படக்கூடிய தாக்கம் ஆகியவை கவனத்தில் எடுத்து கொள்ளப்படவேண்டும் என்பதும் வழிகாட்டு நெறி முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
            அதனடிப்படையிலேயே ஒவ்வொரு படமும் தணிக்கைக்குள்ளாகிறது. படத்தை தணிக்கை செய்த உறுப்பினர்களில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த நான் இடம் பெற்றிருந்தேன் என்பது எந்தளவுக்கு உண்மையோ, அதேஅளவுக்கு ஒரு படத்திற்கானத் தணிக்கை முறைகளில் அதில் பங்குபெறும் மற்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை முடிவே இறுதியானதாகும் என்பதும் உண்மை.
             தணிக்கைத் துறை உறுப்பினர், அவருடைய கருத்தைத்தான் பதிவு செய்ய முடியுமே தவிர, பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவின் அடிப்படையிலேயே சான்றிதழ் வழங்கப்படும். தலிபான், அல்கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகளை இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சகோதரர்களும் ஏற்பதில்லை. அவற்றுடன் இந்திய முஸ்லிம்களை இணைக்காதீர்கள் என்பதே இங்குள்ளவர்களின் நிலைப்பாடும் வேண்டுகோளுமாகும்.
                 இத்தகைய தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் பற்றிய காட்சிகளுடன் ஆங்கிலத்தில் ஹாலிவுட் படங்கள் பல வெளிவந்துள்ளன. வந்துகொண்டும் இருக்கின்றன. அவற்றுக்கு இந்தியா உள்பட பல நாடுகளிலும் தணிக்கைச் சான்றிதழ் அளிக்கப்பட்டு திரையிடப்பட்டு வருகின்றன.
        நான் என் கடமையிலிருந்து ஒருபோதும் தவறியதில்லை, எந்தவகையிலும் இஸ்லாத்திற்கு      எதிரானதாகவோ, அமைதியையும் அன்பையும் விரும்பும் இஸ்லாமிய சகோதரர்களைத் தவறான வகையில் சித்தரிக்கும் விதத்திலோ உள்ள காட்சிகளை மட்டுமல்ல, இந்து மதம், கிறிஸ்தவ மதம் உள்பட எந்தவொரு மதம் அல்லது ஒரு சமுதாயம், மொழி, இனம் பற்றிய தவறான உள்நோக்கம் கொண்ட சித்தரிப்புகள் இருக்குமானால் என் எதிர்ப்பு பலமாகவே வெளிப்படும்.
          அதை நான் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன். தணிக்கைத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையிலேயே என் கருத்தையும் முடிவுகளையும் தெரிவிக்கிறேன்.
            நான் ஏற்கனவே கூறியது போல, இறுதி முடிவு என்பது, படத்தைப் பார்க்கும் தணிக்கைத்துறை உறுப்பினர்களின் பெரும்பான்மையான கருத்துகளின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகிறது.
                 தற்போதைய நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது. அதுவரை பொறுத்திருக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது.

இவ்வாறு ஜின்னா கூறியுள்ளார்.

விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் கமல்ஹாசன்....!

      இலஞ்சம் வாங்குகிற அரசு அதிகாரிகளைப் பற்றிப்  படம் எடுத்தா, அதிகாரிங்க கோச்சிப்பாங்க..
     அதிகமா துட்டு வாங்குகிற டாக்டரைப் பற்றிப்  படம் எடுத்தா, டாக்டருங்க கோச்சிப்பாங்க..
                போலீஸ்காரர்களைப் பற்றிப் படம் எடுத்தா போலீஸ்காரங்க கோச்சிப்பாங்க...
                வக்கீலைப் பற்றிப் படம் எடுத்தா வக்கீலுங்க கோச்சிப்பாங்க...
          படத்தை DTH - ல திரையிடப்போகிறேன் சொன்னா தியேட்டர்காரங்க கோச்சிப்பாங்க...
            முஸ்லீம்  தீவிரவாதத்தைப் பற்றிப் படம் எடுத்தா ஜவஹிருல்லா கோச்சிப்பாரு...
            இந்து தீவிரவாதத்தைப் பற்றிப் படம் எடுத்தா இராமகோபாலன் கோச்சிப்பாரு...
           அமெரிக்க அட்டூழியங்களைப் பற்றிப் படம் எடுத்தா ஒபாமா கோச்சிப்பாரு..
          'இவிங்க' ஆட்சியில இருக்கும் போது 'அவருடைய' கூட்டத்தில கலந்துகிட்டா 'இவிங்க' கோச்சிப்பாங்க...
     'அவரு' ஆட்சியில இருக்கும் போது 'இவிங்க' கூட்டத்துல கலந்துகிட்டா 'அவரு' கோச்சிப்பாரு...
          அதுக்கு படம் எடுக்கிறதையே நிறுத்தி விடலாமே... 
அப்படித்தான் கமல்ஹாசனின் விஸ்வரூபம் ஒரு குறைப்பிரசவமாக போய்விட்டது.           
        ஆரம்பத்திலேயே DTH - இல் திரையிடுவதற்கு கமல்ஹாசன் முடிவெடுத்த போதே திரையரங்கு உரிமையாளர்கள் முரண்டு பிடித்தார்கள். பிறகு கமல்ஹாசன் தனது முடிவை மாற்றிக்கொண்டு திரையரங்கில் திரையிட முடிவெடுத்து தேதியும் குறித்தாகிவிட்டது. இவைகள் எல்லாமே இந்திய திரைப்பட தணிக்கை வாரியம் தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கிய பின்னரே நடக்கும் விஷயங்கள் ஆகும். தணிக்கைக் குழுவே எந்தவிதமான ஆட்சேபனையும் தெரிவிக்காமல் சான்றிதழ் வழங்கி பச்சைக்கொடி காட்டிய பின்னர், ஒரு மாநில அரசு எப்படி இஸ்லாமிய அமைப்பைக் காரணம் காட்டி படத்தை முடக்கி வைக்கமுடியும். அதுவும் அரசியல் சாசனத்திற்கு உட்பட்ட மத்திய அரசின் நிறுவனம் ஒன்று சட்டத்தின் அடிப்படையில் படத்தை தணிக்கை செய்து திரையிட அனுமதியளித்தப் பிறகு அதை ஒரு மாநில அரசு தடை செய்வது என்பது சட்டவிரோதமானது.
            திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதியளித்த பிறகு, அந்த படத்தை திரையிடலாமா என்று யாரிடமும் உத்தரவு கேட்கவேண்டிய அவசியமில்லை. ஆனால் கமல்ஹாசன் இஸ்லாமிய அமைப்பினர் கேட்டுக்கொண்ட போது, பிடிவாதம் பிடிக்காமல் 100 பேர் அடங்கிய இஸ்லாமிய அமைப்பினர்களுக்கு படம் திரையிடுவதற்கு முன்பே தனியாக போட்டுக் காண்பித்தது என்பது கமல்ஹாசனின் பெருந்தன்மையையும், நேர்மையையும் காட்டுகின்றது. நல்ல வேளை ஒபாமா கோச்சிப்பாருன்னு அவருகிட்டேயும் உத்தரவு வாங்கனும்னு யாரும் சொல்லவில்லை. ரசிகர்கள் தான் திரைப்படத்தை பார்த்து சரியா தவறா என்பதை முடிவு செய்யவேண்டுமே தவிர, குறிப்பிட்ட 100 பேர்கள் அல்ல. அவர்கள் சொல்லுவது போல தமிழக அரசும் படத்தை தடை செய்தது என்பதும் ஜனநாயகம் அல்ல. இந்த விஷயத்தில் ஏதோ ''அரசியல் நெடி'' அடிப்பது போல் தெரிகிறது. ''நாரத வேலையை'' செய்தவர் சக்கர நாற்காலியில் நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டிருப்பது நமக்கு தெரிகிறது.
           தீவிரவாதத்தைப் பற்றிய மாற்றுக்கருத்து யாருக்கும் இருக்க முடியாது. அது இந்துமத தீவிரவாதமானாலும், கிருத்துவமத தீவிரவாதமானாலும், இஸ்லாமிய தீவிரவாதமானாலும் அவைகள் அத்தனையும் எதிர்க்கவேண்டியவையே. எந்த மத தீவிரவாதத்தையும் அனுமதிக்க முடியாது. மனித இனத்தையே அழிக்கக்கூடிய - மனிதநேயத்தையே அழிக்கக்கூடிய தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட  வேண்டிய இந்த மதவாத அமைப்பினர் தீவிரவாதத்தை பற்றி திரைப்படத்தில் காட்டினால் அதை எதிர்ப்பது ஏன் ...? தீவிரவாதத்தினாலேயே  அழிக்கமுடியாத மதத்தை ஒரு திரைப்படத்தின் மூலம் அழித்துவிட முடியுமா...?
          திரைப்படம் என்பது ஒரு கற்பனை உலகம் தான். அது பலத்தரப்பட்ட தொழிலாளர்களை கொண்ட ஒரு கனவு தொழிற்சாலை. திரைப்படங்களை  ஒரு பொழுதுபோக்கு அம்சங்களாக மட்டுமே பார்க்கவேண்டும். அது ஒரு கலை. அதற்கு மதமோ... சாதியோ கிடையாது என்பதை சாதிய, மதவாத அமைப்பினர் புரிந்துகொள்ளவேண்டும்.
         இப்படியே போச்சினா.... படம் ஷூட்டிங் நடக்கும் போதே ஜவஹிருல்லாவையும், இராமகோபாலனையும் கூடவே வைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்பார்கள்.            

ஞாயிறு, 9 டிசம்பர், 2012

சின்னத்திரையில் விஸ்வரூபம் - அதீத துணிச்சலில் கமல்ஹாசன்...!


           நடிகர் கமல்ஹாசன் தயாரித்து எழுதி இயக்கிய திரைப்படமான ''விஸ்வரூபம்'' இந்திய திரைப்பட வரலாற்றிலேயே முதல் முறையாக வித்தியாசமான முறையில் திரையிடப்படுகிறது. வழக்கமாக ஒரு திரைப்படம் என்பது பெரிய திரையில் திரையிடப்பட்டு பிறகு தான் சின்னத்திரையில் திரையிடப்படும். ஆனால் இம்முறை ''இந்திய தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக'' என்று சொல்வதற்கு பதிலாக  ''இந்திய திரைப்பட வரலாற்றிலேயே முதல் முறையாக'' என்று தான் விளம்பரப்படுத்த வேண்டும். இதுவரையில் யாரும் - எந்த திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனரும், பெரிய நடிகரும் செய்யத் துணியாததை, நடிகர் கமல்ஹாசன் துணிந்து முயற்சி செய்திருக்கிறார்.
   # இதன் மூலம், திரையரங்கையே மறந்து போனவர்கள், திரையரங்கிற்கே செல்லமுடியாதவர்கள், குடும்பத்துடன் சென்றால் அதிக செலவாகுமென்பதால் திரையரங்கம் செல்லத் தயங்கியவர்கள் உட்பட பல பேர் சேர்ந்து குடும்பத்துடன், நண்பர்களுடன் உலகம் முழுதும் ஒரே நேரத்தில் வீட்டிலிருந்தபடியே திரைப்படம் பார்க்கும் வாய்ப்பை கமல்ஹாசன் கொடுத்திருக்கிறார்.
    # மேலும் வழக்கமாக புதிய படமென்றால் அரசின் ஒப்புதலுடன் திரையரங்கு உரிமையாளர்கள் திரையரங்கம் முழுமைக்கும் வித்தியாசமில்லாமல் - மனசாட்சியில்லாமல் டிக்கெட்டுக்கு மிக அதிகமான பணத்தை வசூல் பண்ணுவார்கள். கமல்ஹாசனின் இந்த திரைப்படம் சின்னத்திரைக்குப் பிறகு தான் பெரிய திரைக்கு செல்வதால் அந்த கொள்ளை என்பது தடுக்கப்படும்.
         # அதுமட்டுமல்ல, இதே திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்படம் திரையிட்டு முதல் இரண்டு வாரங்களுக்கு டிக்கெட்டை கவுண்டரில் கொடுப்பதற்கு பதிலாக ''பிளாக்கில்''  ஒரு டிக்கெட் ஆயிரம் ரூபாய் வரையில் கள்ளத்தனமாக விற்பதன் மூலம் அடிக்கப்படும் ''மெகா கொள்ளை'' என்பதும் இதன் மூலம் ஒழிக்கப்படும்.
         # ஒரே திரைப்படத்தை ஊரிலுள்ள அத்தனை திரையரங்குகளிலும் திரையிட்டு மூன்றே நாளில் திரைப்பட உரிமையாளர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் கோடிக்கணக்கில் கொள்ளை இலாபம் அடித்துவிடுவார்கள்.
     # இப்படி சின்னத்திரையில் திரையிடப்படுவதால் ''திருட்டு விசிடி-க்கு'' முற்றுபுள்ளி வைக்கப்படும். கொள்ளை இலாபம் அடிக்கும் திருட்டு விசிடி கும்பல் ஒழிக்கப்பட்டு விடும்.
         மேலே குறிப்பிட்டது போன்ற பல நல்ல பலன்கள் பொது மக்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும், சினிமா துறைக்கும்  கிடைக்கின்றன என்பதை யாராலும் மறுக்கமுடியாது. பொது மக்களும், சினிமா ரசிகர்களும் இதை கண்டிப்பாக வரவேற்பார்கள்.
         இத்தனை நாட்களாக கொள்ளை இலாபத்தையே பார்த்துக்கொண்டிருந்த திரையரங்கு உரிமையாளர்களுக்கு தான் கமல்ஹாசனின் இந்த அறிவிப்பு பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. திரைப்படத்துறையில் அல்லது திரைப்பட வர்த்தகத்தில் இதுவும் ஒரு பரிணாம வளர்ச்சி தான் என்பதை திரையரங்கு உரிமையாளர்கள் உட்பட அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல, தன்னுடைய படம் எங்கு திரையிடப்பட வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை திரைப்பட உரிமையாளருக்கு உண்டு என்பதையும் நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
         இதனால் திரையரங்குகள் பாதிக்கப்படுமா என்றால்... நிச்சயம் பாதிக்கப்படும். எதிர்காலத்தில் திரைப்பட உரிமையாளர்கள் அனைவரும் கமல்ஹாசனை பின்பற்றினால், திரையரங்குகள் நிச்சயம் மூடவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். பரிணாம வளர்ச்சியில் ஏற்படும் இது போன்ற மாற்றங்களை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
         ஆரம்பக்காலத்தில் மக்களின் பொழுதுபோக்கு என்பது ''தெருக்கூத்து'' என்பது தான். அதன் பரிணாம வளர்ச்சியாக ''மேடை நாடகங்கள்'' வந்த பிறகு தெருக்கூத்து என்பது அழிந்து போனது. பிறகு மேடை நாடகத்தின் பரிணாம வளர்ச்சியாக ''சினிமா'' வந்த பிறகு மேடை நாடகங்கள் அழிந்து போனது. இப்போது சினிமாவில் கூட தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பழைய தொழில்நுட்ப முறைகள் மறைந்து போய்விட்டன. புதிய தொழிநுட்பக் கலைகளை கற்றுக்கொள்ள முடியாதவர்கள் காணாமல் போய்விட்டார்கள். ஒரு காலத்தில் திரைப்பட விளம்பர பேனர்களையும் போஸ்டர்களையும் ஓவியர்கள் தங்களின் கைவண்ணத்தில் வரைந்து கொடுத்தார்கள். ஆனால் இன்றைக்கு கம்ப்யூட்டர்  பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் விளம்பரங்களை செய்வதால் ஓவியர்கள் வேலைவாய்ப்பின்றி அழிந்துபோனார்கள்.  இவைகளை எல்லாம் திரையரங்கு உரிமையாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையா...?
        அதுமட்டுமல்ல தொலைக்காட்சி பெட்டிகளும், பல்வேறு சீரியல்களும் வந்த பிறகு பாதிக்கும் மேற்பட்ட திரையரங்குகள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டனவே. எஞ்சியிருப்பது கொஞ்சம் தானே.
        அதனால் கமல்ஹாசனின் துணிச்சலான இந்த செயலினைப் பாராட்டி அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். கமல்ஹாசனைப் பொறுத்தவரையில் இது ஒரு ''அக்னிப்பரிட்சை'' - ''அமிலப் பரிசோதனை''. எதையும் துணிச்சலுடன் வித்தியாசமாக செய்யும் கமல்ஹாசன் இம்முறை ''விஸ்வரூபம்'' எடுத்திருக்கிறார். அவரை நெஞ்சார பாராட்டுவோம்.