உணவகங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உணவகங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 29 ஜூலை, 2014

மருத்துவக்கல்லூரியையே ஆக்கிரமித்த ''குப்பை உணவுகள்''

                       நேற்று எங்கள் செல்ல மூத்த மகள் ஹரிணி பாண்டிச்சேரி மருத்துவக்கல்லூரியில் முதலாண்டு மருத்துவப்படிப்பில் சேர்த்துவிட்டு, அப்படியே கல்லூரியின் சுற்றுச்சூழல்களையும், மகளோடு கூடப் படிக்கும் மற்ற பிள்ளைகளையும் பார்க்கலாமென்று நானும், என் மனைவியும் எங்கள் மகளோடு கல்லூரிக்கு சென்றோம். எங்கள் மகளை முதலாண்டு வகுப்பறையில் விட்டுவிட்டு நாங்கள் இருவரும் அந்தக் கல்லூரியின் வளாகத்தை சுற்றிவந்தோம். அப்பப்பா... ஏகப்பட்ட மரங்கள் அந்தப் பகுதியே குளிர்ச்சியாக தான் இருந்தது. வாகனங்கள் நிறுத்துமிடத்தில் ஏராளமான கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. நாங்களும் காரில் தான் சென்றோம். ஆனால் கார் எங்களுடையது இல்லை. எங்கள் வீட்டில் குடியிருக்கும் இஸ்லாமியக் குடும்பத்தை சேர்ந்தது. வீட்டிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதால் இரு சக்கரவாகனத்தில் செல்லவேண்டாம், எங்கள் காரை தருகிறோம், மூவரும் காரில் சென்று வாருங்கள் என்று எங்களை அனுப்பிவைத்தார். நாங்களும் பெருமையாக காரில் சென்று இறங்கினோம். இந்த நேரத்தில் அவர்களுக்கு நன்றி சொல்லணும். 
              அப்படியாக சுற்றிப்பார்க்கும் போது ''காண்டீன்'' என்று எழுதப்பட்ட இரண்டு உணவகங்களும், பலவகையான உணவுப்பொருட்களின் பாக்கெட்டுகளை தோரணமாக தொங்கவிடப்பட்ட பெட்டிக்கடையும், ப்ரு காபி கடையும் என பன்னாட்டு உணவுப்பொருட்கள் மட்டுமே கொண்ட உணவகங்கள் தான் அங்கு இருக்கின்றன என்பதைப் பார்க்கும் போது  ஆச்சரியமாகவும் இருந்தது. அதை விட அதிர்ச்சியாகவும் இருந்தது. இந்த ''குப்பை உணவுகள்''  ஒரு மருத்துவக்கல்லூரிக்குள் நுழைந்தது எப்படி...? அல்லது  அனுமதிக்கப்பட்டது எப்படி...? என்று தான் புரியவில்லை. அந்த  குர்குரே, சார்லி, லேஸ், பெப்சி, கோகா கோலா, பிஸ்கட் வகைகள், சாக்லேட் வகைகள், கேக் வகைகள், ஐஸ் க்ரீம் என அனைத்துவகையான ''குப்பை உணவுகள்'' தான் ஆக்கிரமித்திருக்கின்றன. இன்றைக்கு கல்லூரி மாணவர்களின் நாகரீகமே இது மாதிரியான ''குப்பை உணவுகளை'' சாப்பிடுவது தான். அந்த நாகரீகத்தை தான் அங்கிருக்கின்ற உணவகங்கள் காப்பாற்றுகின்றன...! காசாக்குகின்றன...! அங்குள்ள மாணவர்கள் கோக் பாட்டிலோடு அலைவதைப் பார்க்கும் போது, யார் வீட்டு புள்ளைங்களோ இப்படி குடிச்சிக்கிட்டு அலையுதேன்னு நமக்கு கோபம் தான் வருகிறது.
               ஆனால் இவைகளையெல்லாம் பார்க்கும் போது இன்னொரு பாகம் ஆச்சரியத்தை தான் வரவழைத்தது. ''குப்பை உணவுகளை'' சாப்பிடாதீர்கள் என்று அறிவுறுத்துகின்ற மருத்துவர்களை உருவாக்கும் மருத்துவக்கல்லூரியில் இதுபோன்ற பொருட்களின் விற்பனை எப்படி அனுமதிக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட உணவுப்பொருட்களை சாப்பிடுவதால் உண்டாகும்  நோய்களை பற்றி அறிவுப்பூர்வமாகவும், அறிவியல்பூர்வகாவும்  சொல்லித்தரப்போகும் மருத்துவக்கல்லூரியிலேயே மாணவர்களிடமே   அந்த உணவை விற்பனை செய்வது என்பது முறையாகும் என்று தான் தெரியவில்லை.
            அத்தகைய ''குப்பை உணவுகளை'' சாப்பிடுவதால், உடல் பருமன் நோய், மன அழற்சி நோய், இதய நோய், சர்க்கரை நோய், வயிற்றுப்புண் போன்ற நோய்கள் அவர்கள் அழைக்காமலேயே வந்துவிடும். நோய்கள் வராமல் தடுப்பது பற்றியும், வந்த நோய்க்கு மருத்துவம் பார்ப்பது பற்றியும் படிக்கிற மாணவர்களுக்கே நோய்களை உண்டுபண்ணுகிற ''குப்பை உணவுகளை'' விற்பனை செய்வது என்பது சரியாகுமா...? முறையாகுமா...?

செவ்வாய், 22 ஜூலை, 2014

சாதாரண மக்களிடமிருந்து அந்நியப்படும் இந்திய இரயில் நிலையங்கள்...!

             
 
                 நாங்கள்  பல ஆண்டு  இடைவெளிக்குப் பிறகு  சென்ற மே மாதம் எங்கள் குடும்பத்துடன் வடநாடு சுற்றுப்பயணம் சென்றோம். பத்து நாள் பயணம் அனைத்தும் இரயில் பயணம். என் குழந்தைகளுக்கு இவ்வளவு நீண்ட இரயில் பயணம் என்பது இது தான் முதல் முறை. தமிழகத்தின் தலைநகரிலிருந்து இந்திய தலைநகரம் வரை பயணம் செய்தோம். சென்னையில் இரயில் ஏறி வழியில் ஆக்ரா, அமிர்தசரஸ், ஜெய்ப்பூர் போன்ற பேரு நகரங்களுக்கு சென்று சுற்றிவிட்டு கடைசியாக புதுடெல்லி சென்று விட்டு நேராக சென்னை திரும்பினோம். 
           மேலே சொன்ன  சென்னை, ஆக்ரா, அமிர்தசரஸ், ஜெய்ப்பூர், புதுடெல்லி ஆகிய பெருநகர இரயில் நிலையங்களில் நுழையும்  போதெல்லாம் அந்த ரயில் நிலையங்கள் மனதிற்கு ஏதோ அந்நியமாகப்பட்டது. நம் நாட்டில் தான் நாம் இருக்கிறோம் என்ற உணர்வை என் மனதிற்குள் நானாகவே வரவழைத்துக்கொள்ள வேண்டியதாயிருந்தது. இந்திய இரயில் நிலையத்திற்கே உரித்தான எந்தவிதமான அடையாளங்களும் இல்லாமல் போனதே அதற்கு காரணம். விமானநிலையத்திற்குள் நுழைந்துவிட்டோமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. படோடமான கண்ணைப்பறிக்கும் அமர்க்களமான விளக்குகள் கொண்ட பல்வேறு கடைகள் கண்களில் பட்டன. 
         ஆனால் இரயில் நிலைய நடைமேடையில் இட்லி, தோசை, உப்புமா, வடை, பட்ஜி, வாழைப்பழம் போன்றவற்றை சுமந்து நிற்கும் தள்ளுவண்டிகளை பார்க்கமுடியவில்லை. டீ  - காப்பி தூக்குகளை தூக்கிக்கொண்டு டீ...டீ...டீ... என்று கூவிக்கொண்டு அங்குமிங்கும் அலைந்துகொண்டிருப்பவர்களையும், கூடையில் கடலை பயிரை சுமந்துகொண்டு விற்பவர்களையும் காணமுடியவில்லை. அதுமட்டுமல்ல நடைமேடையின் ஓரமாக ஐ.ஆர்.சி.டி.சி என்ற பொதுத்துறை நிறுவனம் நடத்தும் உணவகத்தை தேடினேன்.... தேடினேன்.... இரயில் நிலைய எல்லைக்கே போய் தேடினேன். அதுவும் என் கண்களில் தென்படவில்லை. ஆக்ரா இரயில் நிலையத்தில் முன்பெல்லாம் பாரம்பரியமாக மண் பாண்டத்தில் டீ விற்பார்கள். இன்று அந்த பாரம்பரியம் கூட மறைந்தே போய்விட்டது.
    அவைகளெல்லாம் எங்கே போனது....? இன்று அதற்கு பதிலாக வேறென்ன வந்திருக்கிறது...?
             அவைகளெல்லாம் உலகமய - தனியார் மய சூறைக்காற்றில் அடித்து சென்றுவிட்டன என்பது சிறிது நேரம் கழித்து தான் எனக்கு புலப்பட்டது.
          இன்றைக்கு அழகழகான சிறுசிறு கடைகள். அந்தக் கடைகளில் லேஸ் சிப்ஸ், குர்குரே, பெப்சி, கொக்கோகோலா, மிரிண்டா, ஸ்லைஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் ''குப்பை'' உணவுகள் தான் கிடைக்கிறது. மெக்டோனால்ட்ஸ், புட்கோர்ட் என பன்னாட்டு உணவகங்கள் கண்ணைப்பறிக்கும் வகையில் நம்மை சாப்பிட வரவேற்கின்றன. அங்கே எல்லாமே பீசா, பர்கர், நூடுல்ஸ், சிக்கன் வகைகள், ஐஸ் கிரீம் என விலை உயர்ந்த உணவுப்பொருட்கள் தான் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு ஒரு காப்பி 80 ரூபாய், ஒரு டீ  20 ரூபாய் என கண்டபடி விற்றால் அதை குடிக்கும் ஆசை எப்படி வரும்...? நமக்கு ஒத்து வராத உணவுவகைகள் என்பதால் குழந்தைகள் உட்பட நாங்கள் உணவுக்காக தவித்துப்போனோம். இதை தான் இனி நீ சாப்பிடவேண்டும் என்பதை உலகமயம் நமக்கு சொல்கிறது என்பதை இந்திய இரயில் நிலையங்கள் மூலம் புரிந்துகொண்டேன்.
                 நமக்கே இப்படி என்றால், படிப்பறிவு இல்லாதவர்கள், வசதியில்லாத மக்கள் உணவுக்கு என்ன செய்வார்கள் என்று  தான் புரியவில்லை. அப்படிப்பட்ட மக்களையே இந்த இடங்களில் காணமுடியவில்லை. இன்றைக்கு இந்திய இரயில் நிலையங்களெல்லாம் சாதாரண மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கிறது என்பது தான் உண்மை.