மருத்துவக்கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருத்துவக்கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 29 ஜூலை, 2014

மருத்துவக்கல்லூரியையே ஆக்கிரமித்த ''குப்பை உணவுகள்''

                       நேற்று எங்கள் செல்ல மூத்த மகள் ஹரிணி பாண்டிச்சேரி மருத்துவக்கல்லூரியில் முதலாண்டு மருத்துவப்படிப்பில் சேர்த்துவிட்டு, அப்படியே கல்லூரியின் சுற்றுச்சூழல்களையும், மகளோடு கூடப் படிக்கும் மற்ற பிள்ளைகளையும் பார்க்கலாமென்று நானும், என் மனைவியும் எங்கள் மகளோடு கல்லூரிக்கு சென்றோம். எங்கள் மகளை முதலாண்டு வகுப்பறையில் விட்டுவிட்டு நாங்கள் இருவரும் அந்தக் கல்லூரியின் வளாகத்தை சுற்றிவந்தோம். அப்பப்பா... ஏகப்பட்ட மரங்கள் அந்தப் பகுதியே குளிர்ச்சியாக தான் இருந்தது. வாகனங்கள் நிறுத்துமிடத்தில் ஏராளமான கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. நாங்களும் காரில் தான் சென்றோம். ஆனால் கார் எங்களுடையது இல்லை. எங்கள் வீட்டில் குடியிருக்கும் இஸ்லாமியக் குடும்பத்தை சேர்ந்தது. வீட்டிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதால் இரு சக்கரவாகனத்தில் செல்லவேண்டாம், எங்கள் காரை தருகிறோம், மூவரும் காரில் சென்று வாருங்கள் என்று எங்களை அனுப்பிவைத்தார். நாங்களும் பெருமையாக காரில் சென்று இறங்கினோம். இந்த நேரத்தில் அவர்களுக்கு நன்றி சொல்லணும். 
              அப்படியாக சுற்றிப்பார்க்கும் போது ''காண்டீன்'' என்று எழுதப்பட்ட இரண்டு உணவகங்களும், பலவகையான உணவுப்பொருட்களின் பாக்கெட்டுகளை தோரணமாக தொங்கவிடப்பட்ட பெட்டிக்கடையும், ப்ரு காபி கடையும் என பன்னாட்டு உணவுப்பொருட்கள் மட்டுமே கொண்ட உணவகங்கள் தான் அங்கு இருக்கின்றன என்பதைப் பார்க்கும் போது  ஆச்சரியமாகவும் இருந்தது. அதை விட அதிர்ச்சியாகவும் இருந்தது. இந்த ''குப்பை உணவுகள்''  ஒரு மருத்துவக்கல்லூரிக்குள் நுழைந்தது எப்படி...? அல்லது  அனுமதிக்கப்பட்டது எப்படி...? என்று தான் புரியவில்லை. அந்த  குர்குரே, சார்லி, லேஸ், பெப்சி, கோகா கோலா, பிஸ்கட் வகைகள், சாக்லேட் வகைகள், கேக் வகைகள், ஐஸ் க்ரீம் என அனைத்துவகையான ''குப்பை உணவுகள்'' தான் ஆக்கிரமித்திருக்கின்றன. இன்றைக்கு கல்லூரி மாணவர்களின் நாகரீகமே இது மாதிரியான ''குப்பை உணவுகளை'' சாப்பிடுவது தான். அந்த நாகரீகத்தை தான் அங்கிருக்கின்ற உணவகங்கள் காப்பாற்றுகின்றன...! காசாக்குகின்றன...! அங்குள்ள மாணவர்கள் கோக் பாட்டிலோடு அலைவதைப் பார்க்கும் போது, யார் வீட்டு புள்ளைங்களோ இப்படி குடிச்சிக்கிட்டு அலையுதேன்னு நமக்கு கோபம் தான் வருகிறது.
               ஆனால் இவைகளையெல்லாம் பார்க்கும் போது இன்னொரு பாகம் ஆச்சரியத்தை தான் வரவழைத்தது. ''குப்பை உணவுகளை'' சாப்பிடாதீர்கள் என்று அறிவுறுத்துகின்ற மருத்துவர்களை உருவாக்கும் மருத்துவக்கல்லூரியில் இதுபோன்ற பொருட்களின் விற்பனை எப்படி அனுமதிக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட உணவுப்பொருட்களை சாப்பிடுவதால் உண்டாகும்  நோய்களை பற்றி அறிவுப்பூர்வமாகவும், அறிவியல்பூர்வகாவும்  சொல்லித்தரப்போகும் மருத்துவக்கல்லூரியிலேயே மாணவர்களிடமே   அந்த உணவை விற்பனை செய்வது என்பது முறையாகும் என்று தான் தெரியவில்லை.
            அத்தகைய ''குப்பை உணவுகளை'' சாப்பிடுவதால், உடல் பருமன் நோய், மன அழற்சி நோய், இதய நோய், சர்க்கரை நோய், வயிற்றுப்புண் போன்ற நோய்கள் அவர்கள் அழைக்காமலேயே வந்துவிடும். நோய்கள் வராமல் தடுப்பது பற்றியும், வந்த நோய்க்கு மருத்துவம் பார்ப்பது பற்றியும் படிக்கிற மாணவர்களுக்கே நோய்களை உண்டுபண்ணுகிற ''குப்பை உணவுகளை'' விற்பனை செய்வது என்பது சரியாகுமா...? முறையாகுமா...?

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

புதிய மருத்துவமனை - மருத்துவக்கல்லூரிக்கு Dr. முத்துலட்சுமி ரெட்டி பெயரிடுங்கள்..

                 தற்போது ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டிடத்திற்கு விடிவுக்காலம் வந்தாச்சு. தமிழகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் - குறிப்பாக ஏழை- எளிய மக்கள் அனைவரும் பல்வேறு நோய்களுக்கும் தரமான உயரிய சிகிச்சையினை இலவசமாக பெரும் வகையில் பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்கிற தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத் தக்கதே. இந்த மருத்துவமனை மூலம் ஏழை  - எளிய மக்களுக்கு இலவசமாய் மருத்துவம் கிடைப்பது மட்டுமல்லாது, மருத்துவம்  பயின்ற, மருத்துவம்  சார்ந்த கல்வி பயின்ற - வேலை தேடும் இளைஞர்கள்  ஆயிரக்கணக்கானோருக்கு    வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
    
தமிழக அரசுக்கு அன்பான ஆலோசனை :
                    அந்த புதியக் கட்டிடத்தில் உருவாகும் புதிய மருத்துவமனைக்கும் மருத்துவக்கல்லூரிக்கும் டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களின் பெயரை வைத்தால் மிகப் பொருத்தமாக இருக்கும். டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் பல பெருமைகளைச் சேர்த்த முதல் இந்தியப் பெண்மணி என்பதில் நமக்கெல்லாம் பெருமை சேர்க்கும் விஷயமாகும். அவரது வாழ்க்கை  வரலாறே இன்றையத் தலைமுறையினருக்கு  - குறிப்பாக பெண்களுக்கு ஒரு வழிகாட்டுதலாக இருக்கும். 
                     அவர் தன் மாணவப் பருவத்திலிருந்தே பல்வேறு முற்போக்கான செயல்களைச் செய்திருக்கிறார். இவர் அதுவரை ஆண்கள் மட்டுமே படித்து வந்த மருத்துவக்கல்லூரியில் இந்தியாவிலேயே  மருத்துவம் பயில சேர்ந்த முதல் பெண்மணி இவர் தான் என்பது மெய்சிலிர்ப்பாய் இருக்கிறது. அதுவரையில் இந்தியாவில் மருத்துவப் படிப்பென்றால் ஆண்கள் மட்டுமே சேர்ந்து படிக்கும் ஒருதலைப் பட்சமான சமூகத்தின் பழக்கத்தை தான் மருத்துவம் பயின்று  உடைத்தெறிந்தார். இந்தியாவிலேயே மருத்துவம் பயின்ற முதல் பெண்மணியும் இவர் தான்.
                           அது மட்டுமல்ல, பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரும் இவர் தான் என்பது பெண்களுக்கெல்லாம் பெருமை சேர்க்கும் விஷயமாகும். தமிழக மேலவையின் முதல் பெண் துணைத் தலைவர்  என்கிறப் பெருமையும் இவரையே சாரும். இந்த காலத்தில் தான் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் பெண்குழந்தைகளுக்கு இலவச கல்வி திட்டத்தைக் கொண்டுவந்தார் என்பதும் ஒரு மறக்க முடியாத வரலாறு ஆகும். சென்னையில் உள்ள அடையாறு புற்று நோய் மருத்துவமனையினை தொடங்கி வைத்து நடத்தியவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் என்பது பலருக்கும் தெரியாத செய்தியாகும். பெண்ணுரிமை - பெண்விடுதலை ஆகியவற்றிற்கு ஓயாமல் போராடிய முற்போக்காளர். சுதந்திர போராட்ட வீரர்களான சரோஜினி நாயுடு அம்மையார், டாக்டர். அன்னி பெசன்ட் அம்மையார், காந்தி மற்றும் தந்தை பெரியார் போன்ற தலைவர்களோடு தொடர்பு வைத்திருந்தார். தந்தை பெரியார் அவர்களோடு இருந்த நட்பு தான் தேவதாசி முறை ஒழிப்புக்கு வழிகாட்டியது.
                          இப்படியாக பல்வேறு  பெருமைகளையும் திறமைகளையும் கொண்ட முத்துலட்சுமி ரெட்டி  அம்மையார் அவர்களின் 125 - ஆவது பிறந்தநாளை ( 30 ஜூலை 1886 ) கொண்டாடும் இந்த  நேரத்தில் அவரது பெயரை புதிய மருத்துவக்கல்லூரிக்கும், மருத்துவமனைக்கும் சூட்டுவது என்பது பொருத்தமாக இருக்கும். அவரது வாழ்க்கையே இன்றைய பெண் குழந்தைகளுக்கு வழிகாட்டுதலாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.