திங்கள், 11 ஏப்ரல், 2011

ஊழலை ஒழிக்க அவதாரம் எடுத்தவர்..

           இரண்டு வாரங்களுக்கு முன்பு சரியான தேர்தல் நேரம். அரசியல் கட்சிகளெல்லாம் கூட்டணி.. கட்சி வேட்பாளர்கள் போன்ற அறிவிப்பில் மும்முரமாக இருந்த நேரம்.. ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களில் - மீனுக்காக காத்திருக்கும் கொக்கு போல் ஒவ்வொரு தேர்தலிலும் காத்துக்கிடந்து ஏமாந்து போகும் காங்கிரஸ் கட்சி இந்த முறையும் மேற்குவங்கம் - கேரளா ஆகிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான  இடதுசாரி முன்னணி ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஏதாவது தில்லுமுல்லுகள் செய்து வெற்றிபெற முடியுமா  என்ற முனைப்புடன் தான் இந்த இரு மாநிலங்களிலும் களமிறங்கத் திட்டமிட்டது.  ஆனால்  மக்கள் வழக்கம் போல்  இடதுசாரிகள் பக்கமே இருப்பதால் காங்கிரஸ் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் எரிச்சலடையத் தொடங்கின. 
               இன்னொரு பக்கம்  கடந்த ஓராண்டு காலமாக  இரண்டாம் ஐக்கிய முற்போக்கு முன்னணி  அரசின்  ஊழல் விவகாரங்கள் அடுக்கடுக்காக
 விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தன. அதுவும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மெகா ஊழல்களாகவே அத்தனையும் இருந்தன. பல லட்சம் கோடிகளை சுருட்டுகிற வேலைகளை ஆட்சிலிருந்த அமைச்சர்களும் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்களும் செய்தார்கள். இந்திய மக்கள் திகைத்துப்போனார்கள். இப்படிப்பட்ட மெகா ஊழலை கண்டித்தும் ஊழல் குற்றங்களை புரிந்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் பாராளுமன்றத்திலும் வெளியிலும் போராட்டங்கள் நடத்தினர். ஆனால் ஊழலுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதவர்களைப்போல் மக்களை ஏமாற்றித்திரியும் பாரதீய ஜனதா கட்சியும் இந்த பிரச்சனையை தனது அரசியல் இலாபத்திற்காக கையிலெடுத்துக் கொண்டது.   இந்த விஷயத்தில் இடதுசாரிகள் பக்கம் மக்களின் பார்வை திரும்பிவிடக்கூடாது என்பதற்காக ஆட்சியாளர்களும் ஊடகங்களும் இடதுசாரி கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பா ஜ க -
வுக்கே முக்கியத்துவம் கொடுத்தனர் என்பதை நாடே அறியும்.
                    மற்றொருப்பக்கம் பாராளுமன்றத்திலும் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்திலும் ஊழலைப்பற்றி கேள்விகேட்டால் எனக்கு எதுவும் தெரியாது என்கிற பிரதமரின் தொடர்ச்சியான பதில்கள். இவற்றையெல்லாம் மக்கள் உற்று நோக்க ஆரம்பித்துவிட்டார்கள். முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டார்கள். குறிப்பாக புதிதாக ஓட்டுப்போடும் இளையத்தலைமுறையினரின் நம்பிக்கையை காங்கிரஸ் கட்சியும் ஆட்சியாளர்களும் இழக்க ஆரம்பித்தனர். 
( அதனால் தான் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ராகுல் காந்தியை முன்னிறுத்தினார்கள் என்பது அவர்களின் சோகக்கதை )
                 அதுமட்டுமல்லாது இந்திய மக்களின் குறிப்பாக இளையத்தலை- முறையினரின்  பார்வை என்பது - ஊழலுக்கெதிராக போராட்டங்கள் நடத்தும்.. கேரளா, மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களில்  இன்றுவரை பல ஆண்டுகளாய் ஊழல் குற்றச்சாட்டுகளே சொல்லமுடியாத அளவிற்கு ஆட்சி நடத்தும்  இடதுசாரிகள்  பக்கம்  பார்வை திரும்ப  ஆரம்பித்தது. 
              ஊழல் குற்றங்களில் ஈடுபடும் ஆட்சியாளர்களை விசாரித்து தண்டனை வழங்க லோக்  பால் என்கிற மக்கள் மன்றத்தை அமைக்க வகைசெய்யும் மசோதாவை பாராளுமன்றத்தில் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டம் தான் அது. ஒரு நல்ல காரணத்திற்காக நடத்தப்பட்ட போராட்டம் இது. பாராட்டவேண்டியது தான். பெருகிவரும் ஊழலுக்காக சாகும் வரை ஒரு தாத்தா உண்ணாவிரதம் இருப்பதை பார்த்த மக்களை  குறிப்பாக இளைஞர் -
களை சுலபமாக ஈர்க்க ஆரம்பித்தது. அன்ன ஹசாரேவை கமல்ஹாசன் நடித்த இந்தியன் தாத்தாவாகவே பார்கிறார்கள்.  இதே லோக் பால் மசோதாவிற்காக பல ஆண்டுகளாக முதலாவது - இரண்டாவது மன் மோகன் சிங் ஆட்சியிலும் இதற்கு முன்னாலிருந்த வாஜ்பாய் தலைமையிலான கூட்டணி ஆட்சியிலும் 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.   
               உண்ணாவிரதத்தின் பலனாக லோக்பால் அமைப்புக்கான உறுப்பினர்களை பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்திருக்கிறார். அந்த நபர்களை பார்க்கும் போது எங்கே ஊழல் ஒழியப் போகிறது என்ற சந்தேகம் தான் நமக்கு வருகிறது. மத்திய அமைச்சர்களாக இருக்கக்கூடிய  திருவாளர்கள்  வீரப்ப மொய்லி , பிரணாப் முக்கர்ஜி , ப.சிதம்பரம், கபில் சிபல் போன்றவர்களை உறுப்பினர்களாக வைத்துக்கொண்டு எங்கே ஊழலை ஒழிக்கப்போகிறார்கள். இது திருடர்கள் கையிலேயே சாவியை கொடுக்கும் கதை ஆகிவிடும். 
           இன்னும்  எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..
            



5 கருத்துகள்:

kumaresan சொன்னது…

சரியாகச் சொன்னீர்கள், அன்னா ஹசாரேயை ஒரு இந்தியன் தாத்தா அளவுக்கு பில்டப் கொடுத்து சித்தரிக்கிறார்கள் என்பதை. அரசியல் தளம் இல்லாத ஒரு பிரதமர், அரசியல் களம் வேண்டாம் எனக்கூறும் ஹசாரேக்களுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை நாம் இன்னும் விரிவாக மக்களிடையே கொண்டுசென்றாக வேண்டும்.

puduvairamji.blogspot.com சொன்னது…

உண்மைதான் தோழர்.. அன்னா ஹசாரேக்கு பின்னாலிருக்கும்
அரசியல் சூழ்ச்சியை இன்னும் ஆராயவேண்டி இருக்கு..

puduvairamji.blogspot.com சொன்னது…

மரியாதைக்குரிய தோழர் E. M. ஜோசப் அவர்களின் ஆலோசனைப்படி
மேலே ஏற்கனவே அன்னா ஹசாரே பற்றிய கருத்துக்களை நீக்கி வெளியிட்டிருக்கிறேன். அவர் மேலும் சில தகவல்களை அனுப்பியுள்ளார். அதை படித்துக்கொண்டிருகிறேன்.

superlinks சொன்னது…

வணக்கம்,
உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்கள்.

நன்றி !

பெயரில்லா சொன்னது…

என்னமோ அன்னா ஹசாரே வெகுஜனத் திரளைக் கூட்டி ஆதரவு தேடி விட்டார். நல்லது நடந்தால் நம் எல்லோருக்கும் நல்லது தான்... நடக்குமா????? இதன் நிகழ்தகவு 0.01% தான்... அப்படி ஒரு விமோசனம் கிட்டாதா என்ற ஏக்கம் உண்மையான குடிமகன் ஒவ்வொருவனுக்கும் உண்டு... காத்திருப்போம்...