புதன், 1 ஜனவரி, 2014

ஏகாதிபத்திய எதிர்ப்பு மேலும் வலுப்படவேண்டும்...!

 கட்டுரையாளர் : தோழர். சீத்தாராம் யெச்சூரி     
                                தலைமைக் குழு உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி                   
        முதலாளித்துவப் பொருளாதாரம், 2008ல் உலகப் பொருளாதாரத்தைப் பீடித்த நெருக்கடியிலிருந்து மீண்டுவிட பகீரதப்பிரயத்தனம் செய்தபோதிலும், அது தன்னுடைய நெருக்கடியிலிருந்து மீளமுடியாமல் 2013லும் தொடர்ந்து தள்ளாடிக்கொண்டும், தடுமாறிக்கொண்டும் தான் இருந்தது. சோசலிச சீனத்தைத் தவிர, இந்தியா உட்பட பொருளாதார ரீதியாக வளர்ந்து வந்த மற்ற அனைத்து நாடுகளும் 2008-ல் நெருக்கடிக்குத் தாக்குப்பிடித்த போதிலும், பின்னர் தொடர்ந்து அதனைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தள்ளாடத் தொடங்கிவிட்டன. உலகப் பொருளாதார நெருக்கடி 2013-ல் ஐந்தாவது கட்டத்திற்குள் நுழைந்திருக்கிறது.
               இந்நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக அது மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையும் புதிய நெருக்கடிக்கான விதைகளையே விதைத்துள்ளது. எவ்விதக் கட்டுப்பாடுமில்லாது இருந்து வந்த ஏகாதிபத்திய உலக மயம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குஉலகில் சமத்துவமின்மையை உருவாக்கியதாலும், உலகில் பெரும்பான்மையான மக்களின் வாங்கும் சக்தியையும் வீழ்ச்சியுற வைத்ததாலும், பொருளாதார வளர்ச்சியில் நெருக்கடி யை ஏற்படுத்தியது. இதிலிருந்து எப்படியாவது மீள வேண்டும் என்பதற்காக அது “மலிவான’’ அல்லது “எளிய’’ தவணைகளில் கடன்களை அளித்தது. இது உலகில் உற்பத்தி வளர்ச்சிக்குப் பாய்ச்சலை ஏற்படுத்தும் என்றும், அதன் மூலம் மக்களின் ஒட்டுமொத்த தேவைகளையும் தாங்கிப் பிடித்திடலாம் என்றும் முதலாளித்துவம் நம்பியது. ஆனால் கடன் வாங்கியவர்களில் பெரும்பாலானவர்கள் கடனைத் திருப்பிக் கட்ட முடியாத நிலை ஏற்பட்டதால், 2008 பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரித்து பல பன்னாட்டு நிதிநிறுவனங்கள் திவாலாகும் நிலை ஏற்பட்டது. இந்நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக முதலாளித்துவ நாடுகளில் ஆட்சி புரிந்த அரசுகள் முதலாளிகளுக்கு முழுமையான அளவில் நிதியை வாரி வழங்கின. அவ்வாறு செய்ததன் மூலம் கார்ப்பரேட்டுகளின் திவால் நிலைமைகள் அரசின் திவால் நிலைமைகளாக மாறின.
                 இதனை அடுத்து, அரசாங்கங்கள் தங்கள் திவால்தன்மையைச் சரிக்கட்டுவதற்காக, தாங்கள் சமூகநலத்திட்டங்களுக்காக ஒதுக்கி வைத்த தொகைகளையும், தொழிலாளர்களின் ஊதியங்களையும் வெட்டிக் குறைத்தன, புதிதாக எவரையும் வேலைக்கு எடுக்கவில்லை, ஊழியர்களின் வேலை நேரங்களையும் அதிகரித்தன. ஓய்வூதியம் மற்றும் இதர உதவித் திட்டங்களையும் தயவு தாட்சண்யமின்றி வெட்டியுள்ளன. இவ்வாறு இவை மேற்கொண்ட நடவடிக்கைகள் உலகப் பொருளாதார நெருக்கடியில் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. அதாவது இவற்றின் விளைவாக மக்களின் வாங்கும் சக்தி மிகவும் குறுகியதால், அது பொருளாதார நிலைமை மேலும் சுருங்குவதற்கு இட்டுச் சென்றுள்ளது. நாம் 2014-ல் அடி எடுத்து வைக்கக்கூடிய இன்றைய நிலையில், உலகப் பொருளாதாரம் இந்நெருக்கடி வலைக்குள் சுற்றி வளைக்கப்பட்டு மேலும் ஆழமாகச் சிக்கும் நிலைக்கு அநேகமாகத் தள்ளப்படலாம். முதலாளித்துவ அமைப்புக் குள்ளேயே மேற்கொள்ளப்படும் எந்தவித சீர்திருத்தமும் மக்களுக்கு நிவாரணத்தை வழங்கிட முடியாது என்பதை இது மேலும் உறுதிப்படுத்தி இருக்கிறது. முதலாளித்துவத்திற்கு அரசியல் மாற்றாக விளங்கக் கூடியமாற்று சமூக - பொருளாதார அமைப்பு முறை தான் இந்நெருக்கடியிலிருந்து மக்களைக் காப்பாற்றி அவர்களுக்கு நிவாரணத்தை அளித்திட முடியும்.
                எனவே 2014ஆம் ஆண்டில் உலகின் பல நாடுகளில் மக்கள் தங்கள் சமூக மாற்றத்திற்கான போராட்டங்களை வலுவாக முன்னெடுத்துச் செல்வார்கள் என்பது திண்ணம். பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக இவ்வாறு மக்கள் உலகம் முழுதும் சக்தி மிக்க போராட்டங்களை நடத்தினார்கள். குறிப்பாக, ஐரோப்பிய நாட்டு மக்கள், அதிலும் குறிப்பாக கிரீஸ், போர்ச்சுக்கல், ஸ்பெயின், இத்தாலி நாட்டு மக்கள் வீரம் செறிந்த போராட்டங்கள் பலவற்றை நடத்தியதைப் பார்த்தோம். மக்கள் மத்தியில் இவ்வாறு கோபாவேசம் மிகவும் ஆக்ரோஷமாக வளர்ந்தோங்கி இருந்ததன் காரணமாக, அந்நாடுகளில் நடைபெற்ற தேர்தல்களில் ஆளும் அரசாங்கங்கள் பல மண்ணைக் கவ்வின. இவ்வாறு மக்கள் மத்தியில் கோபம் இருந்த போதிலும், உலகம் முழுதும் அரசியலில் வலதுசாரிப்பக்கம் சாய்மானம் நிகழ்ந்திருப்பதும் நடந்திருக்கிறது. எனினும், அதே சமயத்தில் ஜப்பான், போர்ச்சுக்கல், செக் குடியரசு, சிலி போன்ற நாடுகளில் நடைபெற்ற தேர்தல்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதாயம் அடைந்துள்ளதையும் பார்க்க முடிகிறது.
                 ஏகாதிபத்தியம் தனக்கேற்பட்ட நெருக்கடியின் சுமைகளை மூன்றாம் உலக நாடுகளின் மீது ஏற்ற மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிராக அந்நாடுகளில் நடைபெற்ற போராட்டங்களும் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. குறிப்பாக இலத்தீன் அமெரிக்க நாடுகளில் நடைபெற்ற போராட்டங்களைக் கூறிடலாம். இந்நாடுகளில் அமைந்துள்ள முற்போக்கான ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் நவீன தாராளமய எதிர்ப்பு அரசாங்கங்கள், இந்தியா போன்ற நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தங்களை எவ்விதக் கூச்ச நாச்சமுமின்றித் தழுவிக் கொண்ட மூன்றாம் உலக நாடுகளைப் போல் அல்லாமல், மக்களுக்கு நிவாரணம் அளித்திட மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்கின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியமானது, வெனிசுலாவில் சாவேஸ் மரணத்திற்குப் பின் அத்துணைக்கண்டத்திலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அணுகுமுறை கைவிடப்படலாம் என்று கனவு கண்டுகொண்டிருந்தது. அதிலும் குறிப்பாக சாவேஸுக்குப் பின் பொறுப்புக்கு வந்த மதுரோ மார்ச்சில் நடைபெற்ற தேர்தலில் மிகக் குறுகிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அமெரிக்க ஏகாதிபத்தியம் இதில் மிக நம்பிக்கையுடன் இருந்தது. ஆயினும், டிசம்பரில் நடைபெற்ற நகராட்சிகளுக்கான தேர்தல்களில் சாவேஸின் சோசலிஸ்ட் கட்சி மகத்தான வெற்றி பெற்று, மக்கள் தொடர்ந்து ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் மனோபாவத்துடனேயே இருப்பதை உறுதிப்படுத்தினார்கள். முதலாளித்துவத்திற்கு மாற்று நவீன தாராளமயம் அல்ல, மாறாக சோசலிசம்தான் என்பதை உலகுக்குப் பறைசாற்றும் வண்ணம், இலத்தீன் அமெரிக்க நாடுகளில் நடைபெற்று வரும் முற்போக்கான நடவடிக்கைகள் தொடர்கின்றன.
.               இவ்வாறு, நவீன தாராளமய ஏகாதிபத்தியம் விளைவித்துள்ள துன்ப துயரங்களுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் உத்வேகத்தை அளிக்கும் மாமருந்தாக, இலத்தீன் அமெரிக்க நாடுகளின் முற்போக்கு நடவடிக்கைகளில் 2014-ஆம் ஆண்டு திகழும் என்பதும் திண்ணம். இத்தகைய சூழ்நிலைகளில், அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னுடைய உலகளாவிய மேலாதிக்கத்தை ஒருமுனைப்படுத்துவதற்காக, உலகைத் தன்னுடைய ஒரு துருவ உலகாக உருவாக்கிட மேற்கொண்டிடும் முயற்சிகள், அதற்கு அவ்வளவு எளிதானவைகளாக இல்லாமல் மிகவும் கடினமாகிவிட்டன. அது, இந்தத் தடவை சிரியாவிற்கு எதிராக மற்றொரு ஏகாதிபத்திய ராணுவ ஆக்கிரமிப்பைக் கட்டவிழ்த்துவிட முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், இதில் ஐ.நா.வை ஈடுபடுத்த அமெரிக்க மேற்கொண்ட முயற்சிகளை ரஷ்யாவும் சீனாவும் தங்கள் ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி வெற்றிகரமாகத் தகர்த்துவிட்டன. இராக்கில் ராணுவ ஆக்கிரமிப்பை மேற்கொண்டது போலவே ஈரானிலும் மேற்கொள்ள மெரிக்காவிற்கு நமைச்சல் எடுத்தபோதிலும், அதனால் அதில் வெற்றிபெற முடியவில்லை.
                  அமெரிக்க ஏகாதிபத்தியம் இப்பிராந்தியத்தில் பதற்றம் இல்லாதவாறு அமையக்கூடிய விதத்தில், ஈரானுடன் ஒருவிதமான ஒப்பந்தத்தை செய்துகொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், அமெரிக்க ஏகாதிபத்தியம், மேற்கு ஆசியா மற்றும் வட ஆப்பிரிக்காவில் உள்ள சுதந்திர நாடுகளின் உள்விவகாரங்களில் தன்னுடைய கிரிமினல்தனமான தலையீடுகளைத் தொடர்கிறது. ``அரபு வசந்தம்’’ போன்று மெய்யான ஜனநாயகங்களுக்காக இந்நாடுகளில் இயக்கங்கள் நடைபெற்றபோதிலும், இந்நாடுகள் பலநெருக்கடிக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன. எகிப்தில் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், முஸ்லீம் கட்சியின் செல்வாக்கின் கீழ் அடிப்படைவாதத்தை மேம்படுத்த முயன்றதால், அதற்கு எதிராக ராணுவம் தலையிட வேண்டியிருந்தது. அமெரிக்காவால் தூண்டப்பட்ட சிரியா மீதான உள்நாட்டு யுத்தம் லெபனான் போன்ற அண்டை நாடுகளுக்கும் பரவிக் கொண்டிருக்கிறது.
                       அமெரிக்க ஆக்கிரமிப்பின் விளைவாக, இராக்கில் பல்வேறு குழுக்கள் சண்டையிட்டுக் கொள்வதன்மூலம் பெரும்பான்மையான அப்பாவி மக்கள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். அதேபோன்று துனீசியா, லிபியா ஆகிய நாடுகளிலும் கிளர்ச்சிகள் நீடிக்கின்றன. சூடான் இரு நாடுகளாகப் பிரிந்திருக்கிறது. சோமாலியாவில் மிகவும் பயங்கரமானமுறையில் மோதல் தொடர்கிறது. இவ்வாறு அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னுடைய மேலாதிக்கத்தை விரிவாக்கிடுவதற்காக அனைத்து நாடுகளிலும் தலையிட்டுக் கொண்டிருப்பது தொடர்கிறது. அமெரிக்காவின் இத்தகைய மேலாதிக்க முயற்சிகளை புவிவெப்பமயமாதல் மற்றும் உலக வர்த்தக அமைப்பின்கீழ் விவசாயம் தொடர்பான ஒப்பந்தம் ஆகியவை குறித்த சர்வதேச பேச்சுவார்த்தைகளின்போதும் பார்க்க முடிகிறது. சமீபத்தில் முதலாவது நிகழ்ச்சிநிரல் தொடர்பாக வார்சாவிலும், இரண்டாவது நிகழ்ச்சிநிரல் தொடர்பாக பாலியிலும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, வளர்ந்த (முதலாளித்துவ) நாடுகள் பொருளாதாரத்தில் மீட்சி அடைவதற்கு சாதகமான நிலைமைகளை உருவாக்கக்கூடிய விதத்தில் வளர்முக நாடுகளை மிரட்டிப் பணியவைத்திடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதைப் பார்த்தோம்.
                 துரதிர்ஷ்டவசமாக, இத்தகைய ஏகாதிபத்தியவாதிகளின் முயற்சிகளை எதிர்த்து நின்று வளர்முக நாடுகளின் பக்கம் அணிகோர்த்து நிற்பதற்குப் பதிலாக, அவர்களுடன் இணைந்து நின்று வளர்முக நாடுகளின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, இந்தியா ஏகாதிபத்தியத்தின் இத்தகைய நிர்ப்பந்தங்களுக்கு அடி பணிந்து போவது என்பது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் அமெரிக்காவால் இந்தியத் தூதரக அதிகாரி ஒருவர் மிகவும் முரட்டுத்தனமாக நடத்தப்பட்டிருக்கும் நிகழ்ச்சியிலிருந்தாவது, இந்தியாவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எடுபிடியாகக் குறைத்திருப்பவர்கள் தங்கள் கண்களைத் திறந்துகொள்ள முன்வர வேண்டும். ஏகாதிபத்தியத்தின் அடிவருடியாக இந்தியாவை மாற்றியுள்ள இந்திய அரசாங்கத்தின் கொள்கையை மாற்றி அமைத்திட அரசாங்கத்தின் மீது வலுவான முறையில் நிர்ப்பந்தத்தை அளித்திட, 2014-ஆம்ஆண்டில், நாட்டு மக்கள் முன்வர வேண்டும்.
                 ஏகாதிபத்தியம் தன்னுடைய நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்காக, நம் நாட்டைச் சுற்றிலும் உள்ள அண்டை நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு மிகவும் ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கக்கூடிய இன்றைய சூழ்நிலையில் இது மிகவும் முக்கியமாகும். சமீபத்திய தேர்தல்களுக்குப்பின் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்றதன்மை, வங்க தேசத்தில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள சமயத்தில் அடிப்படைவாத சக்திகள் உருவாக்கியுள்ள உள்நாட்டுப் பதற்ற நிலைமை, இந்தியாவிற்கு உண்மையான ஆபத்தாக இருக்கக்கூடிய விதத்தில் பாகிஸ்தானுக்குள் ஆப்கானிஸ்தானுடைய தலிபான் பயங்கரவாதம் பொங்கி வழிந்துகொண்டிருப்பது, மாலத்தீவில் உள்ள அரசியல் ஸ்திரமற்றதன்மை, இலங்கையில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே தொடரும் இனப் பதற்ற நிலைமை - இவை அனைத்துமே அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னுடைய மேலாதிக்க முயற்சிகளை பிரயோகிப்பதற்கு வளமான சூழ்நிலைகளாகும். இந்நிலையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலையை உறுதியுடன் எடுக்கக்கூடிய விதத்தில் 2014-ஆம் ஆண்டில் இந்தியா வலுப்படுத்தப்பட வேண்டும்.
                  மக்கள் போராட்டங்களை வலுப்படுத்துவதன் மூலம் மட்டுமே இந்திய அரசை இந்நிலைக்குப் பணிய வைக்க முடியும். எனவே, 2014-ஆம் ஆண்டு இந்திய மக்களைப் பொறுத்தவரை, நாட்டு மக்களில் பெரும்பான்மையானவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்திட வலுவான முறையில் மக்களைத் திரட்டுவதற்கான ஆண்டாகும். அதே சமயத்தில், சர்வதேச வளர்ச்சிப் போக்குகளின் எதிர்மறை அம்சங்கள் நம் நாட்டின் மீது விழாத விதத்தில், மிகவும் உறுதியான முறையில் நவீன தாராளமய எதிர்ப்பு/ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலையினைப் பின்பற்றி, நாட்டைப் பாதுகாத்திடவும் வேண்டும். இதனை அடையக் கூடியவிதத்தில் வளர்முக நாடுகளுடன் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்திட வேண்டும். 2013-ஆம் ஆண்டு, உலகம் முழுதும் உள்ள மக்களின் விடுதலைக்காகவும், மனித குலத்தின் பொன்னான மார்க்கத்துக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மாபெரும் மனிதரான நெல்சன் மாண்டேலாவின் மரணத்துடன் முடிந்திருக்கிறது.
                இன ஒடுக்கல் முறையிலிருந்து விடுதலை பெறுவதற்காகத் தென்ஆப்பிரிக்க மக்கள் நடத்திய போராட்டத்திற்குத் தலைமை தாங்கியபோது அவர் விடுத்த எழுச்சிமிகு அறைகூவல்: “உலகம் முழுதும் உள்ள மனிதகுலம் முழுமையாக அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெறும் வரை - போராட்டம் தொடரும்.’’ முற்போக்கு உலகத்துடன் நாமும் இணைந்து நின்று அவருக்கு அஞ்சலி செலுத்தியபோது, அவர் விடுத்துச்சென்றுள்ள அறைகூவலை முன்னெடுத்துச் செல்வதற்கான நம் தீர்மானத்தை இரட்டிப்பாக்கிக் கொள்வோம், 2014ல் மக்கள் போராட்டங்களை வலுப்படுத்திடுவோம்.

தமிழில்: ச.வீரமணி  
நன்றி :
 

கருத்துகள் இல்லை: